Quantcast
Channel: யுவகிருஷ்ணா
Viewing all 406 articles
Browse latest View live

நடிகைகளின் கதை (U)

$
0
0
‘நடிகைகளின் கதை’ என்கிற தலைப்பில் தொடர் எழுத வேண்டும் என்று ‘தினகரன் வசந்தம்’ இதழுக்காக கேட்டதுமே சந்தோஷத்தில் விசிலடிக்க ஆரம்பித்தேன். ஏனெனில் அந்த டைட்டிலுக்கு வெகுஜன இதழ்களிலும், வாசகர்கள் மத்தியிலும் இருக்கும் மவுசு அத்தகையது.

புகுந்து விளையாடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் குயிலைப் பிடித்து கூண்டில் அடைத்து கூவச்சொன்ன கதையாக சில நிபந்தனைகளை விதித்தார்கள். அவற்றில் முக்கியமானது நடிகைகள் என்பதால் எங்குமே கொஞ்சம் ‘அப்படி இப்படி’ என்று எல்லை மீறி எழுதிவிடக்கூடாது என்பதுதான். ஒவ்வொரு நடிகையின் வாழ்க்கையிலும் நாம் உணரவேண்டிய படிப்பினை ஒன்றாவது இருக்கும். அதை ஹைலைட் செய்துக் காட்ட வேண்டியதே தொடரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்கள்.

அசைவத் தலைப்பில் சைவத்தொடரை அசுவாரஸ்யமாகதான் ஆரம்பித்தேன். தொடரின் நான்காவது வாரம் வந்த ஒரு போன்கால் நினைவுகூறத்தக்கது. அரசியல் கட்சியொன்றின் மாநிலப் பொறுப்பில் இருந்தவர் பேசினார். ‘மம்தா மோகன்தாஸ் பற்றி எழுதியிருக்கீங்க. அவங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் எங்க இயக்கம் செய்யும்’. அட, நாம எதிர்ப்பார்க்காத ஏரியாவிலிருந்தெல்லாம் ரெஸ்பான்ஸ் வருதே என்று குஷியானேன். பற்றிக்கொண்டது உற்சாக நெருப்பு. அந்த உற்சாகத்தின் அளவு, நாற்பது வாரங்களுக்கு நீண்டது.

இத்தொடரில் மறக்க முடியாத அத்தியாயம் ஸ்ரீவித்யாவைப் பற்றி எழுதியது. ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்ததுமே லேசாக மூளைக்குள் பல்பு அடித்தது. எனவே அப்படம் வெளிவருவதற்கு முன்பே ஸ்ரீவித்யாவின் கதையை வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவிட வேண்டும் என்கிற அக்கறையில் எழுதி வெளியிட்டோம். பரவலான பாராட்டுகளை பெற்ற அத்தியாயம் அது.

இந்திய நடிகைகள், தமிழ் நடிகைகள் என்கிற குறுகிய எல்லை அமைத்துக் கொள்ளாமல் உலகளவில் ஏதோ ஒரு காரணத்துக்காக பேசப்படுகிற நடிகைகள் என்று பலரையும் அறிமுகம் செய்தோம். இப்போது நூலாக்குவதற்காக மொத்தமாக வாசிக்கும்போதுதான் தெரிகிறது, கிட்டத்தட்ட எல்லா நடிகைகளின் கதையையுமே ஏதோ ஒரு சரடு இணைக்கிறது என்று.

தொடராக எழுதத் தொடங்கியதிலிருந்தே வாசகர்களிடமிருந்து கடிதங்கள் வந்துக் கொண்டே இருக்கும். ‘சில்க்கின் கதையை எப்போது எழுதுவீர்கள்?’. எங்களுக்கும் எழுத ஆசைதான். ஆனால் எழுதக்கூடாது என்று விடாப்பிடியாக ஒரு லட்சுமணரேகையை எங்களுக்கு முன்பாக வரைந்துக் கொண்டோம். ஏனெனில் சில்க்கின் கதையை அறியாத தமிழரே இருக்க முடியாது. பல்வேறு கட்டுரைகளாகவும், புத்தகங்களாகவும் வந்த கதை அவருடையது. அதுவுமில்லாமல் ‘நடிகைகளின் கதை’யில் சில்க் என்பது க்ளிஷேவான விஷயமாக இருக்கும் என்கிற தயக்கமும் இருந்தது. எனினும் சில்க்கை தவிர்க்க முடியுமா என்ன. ஃபிலிம்பேர் இதழில் (1984 டிசம்பர்) தன் திரையுலக வாழ்வின் உச்சத்தில் இருந்தபோது சில்க் கொடுத்திருந்த நேர்காணலை அப்படியே தமிழாக்கம் செய்து கடைசி அத்தியாயமாக கொடுத்தோம். அரிதான அந்த பேட்டி சில்க்கின் ஆளுமையை வாசகர்கள் யூகித்துக்கொள்ள வழிவகுக்கும்.

இந்நூல் அச்சுக்கு செல்ல தயாராகும் நேரத்தில் இன்னொரு இனிய திருப்பம். ஷகிலா, ‘தினகரன் வெள்ளிமலர்’ இதழுக்காக நேர்காணல் தர ஒப்புக்கொண்டார். ‘ஷகிலா பேசுகிறேன்’ என்கிற தலைப்பில் வெளியான அந்த நேர்காணல், திரைக்குப் பின்னான ஷகிலாவை அச்சு அசலாக வாசகர்களிடம் கொண்டு சேர்த்தது. ஷகிலா குறித்த பல கற்பிதங்களை உடைத்திருக்கும் அந்த பேட்டியையே இந்நூலின் முதல் அத்தியாயமாக சேர்த்திருக்கிறோம்.

இந்த நூலின் தலைப்பில் வேண்டுமானால் ‘கதை’ இருக்கலாம். ஆனால் இங்கே விவரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் நூறு சதம் நிஜம்.

- ‘நடிகைகளின் கதை’ நூலின் முன்னுரை

வண்ணத்திரையில் நான் கண்ட முதல் நாயகியான ஸ்ரீதேவிக்கு இந்நூல் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

பக்கங்கள் : 192  விலை : ரூ.150/-
வெளியீடு : சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை - 600 004. போன் : 42209191 Extn : 21125
Email : kalbooks@dinakaran.com

நாஞ்சில் சம்பத்!

$
0
0
‘நெல்லை எங்களுக்கு எல்லை. குமரி எங்களுக்கு தொல்லை’ என்பது கலைஞரின் ஃபேமஸான பஞ்ச் டயலாக். நாஞ்சில் நாட்டில் என்றுமே திமுக கொஞ்சம் வீக்குதான். மொழி, இன உணர்வு மாநிலம் முழுக்க கொழுந்துவிட்டு எரிந்தாலும் காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக என்று நாஞ்சில் நாடு மட்டும் தேசியநீரோட்டத்தில் டெல்லிரூட்டில்தான் என்றுமே பயணிக்கும்.

‘அண்ணா’, ‘தென்னகம்’ பத்திரிகைகளில் ‘ஆற்றல்மிகு அடலேறே!’ என்று அதிமுக தொண்டர்களை விளித்து நாஞ்சில் கி.மனோகரன் எழுதும் கடிதங்கள் எழுபதுகளில் திமுக தலைவர்களின் பி.பி.யை இஷ்டத்துக்கும் ஏற்றும். திமுகவில் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டபோது அவர் எழுதிய ‘கருவின் குற்றம்’ கவிதை ஏற்படுத்திய அதிர்வுகள் கொஞ்சநஞ்சமல்ல.

நாஞ்சில் சம்பத்தைப் பொறுத்தவரை மனோகரன் அளவுக்கு பெரிய தலைவர் எல்லாம் அல்ல. திமுகவில் இருந்தவரை தீப்பொறி ரேஞ்சைவிட குறைந்த நிலையில் இருந்த பேச்சாளர்தான். மதிமுகவில் இருந்த தலைவர்கள் ஒவ்வொருவராக தாய்வீட்டுக்கு படையெடுக்க இவரது கேரியர் கிராப் கொஞ்சம் கொஞ்சமாக அக்கட்சியில் ஏறத் தொடங்கியது. குறிப்பாக தொண்ணூறுகளின் இறுதியில் சம்பத்துக்கென்று கட்சி அபிமானங்களை தாண்டி நிறைய ரசிகர்கள் உருவானார்கள்.

பரங்கிமலை ஒன்றியம் என்றுமே பேச்சாளர்களின் கோட்டை. 67 மற்றும் 72 தேர்தல்களில் எம்.ஜி.ஆர் நின்று வென்ற தொகுதி பரங்கிமலை என்பதால் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே இது கவுரவப் பிரச்சினையான இடம். மாவீரன் மிசா ஆபிரகாம் இருந்தவரை அதிமுகவினரை திமுகவினர் ஓட ஓட விரட்டிய களம். பிரசித்தி பெற்ற செங்கை மாவட்டத்தின் கிழக்கு எல்லை.

மதிமுக உருவானபோது மதுராந்தகம் ஆறுமுகம், பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன் என்று கழக செயல்வீரர்கள் பலரும் மதிமுகவுக்கு இடம்பெயர்ந்ததால் சென்னையின் சுற்றுப்புற வட்டாரத்திலேயே மதிமுக கொடி சொல்லிக் கொள்ளும்படி இந்த ஏரியாவில்தான் பறந்தது. 2000ஆம் ஆண்டு பிறந்தநாளில் மிகச்சரியாக இரவு 12.00 மணிக்கு வைகோ ‘மில்லெனியம் புத்தாண்டு வாழ்த்துகள்’ சொன்னதே மடிப்பாக்கம் கூட்ரோடு பொதுக்கூட்டத்தில்தான்.

பரங்கிமலை ரயில்நிலையம் அருகிலிருந்த திடல் (மதி தியேட்டர் எதிரே) ரொம்ப ஃபேமஸ். தமிழக அரசியலில் கோலோச்சிய அத்தனை தலைவர்களுமே ஒருமுறையாவது அங்கே பொதுக்கூட்டத்தில் பேசியிருப்பார்கள். குறிப்பாக வெற்றிகொண்டானுக்கு அது ஹோம்கிரவுண்டு மாதிரி. தென்சென்னை தொகுதி எம்.பி.யாக இருந்த வைஜயந்திமாலா ஏற்பாட்டின் பேரில் அங்கே சுரங்கப்பாதை பணிகள் தொடங்கிய காலத்தில் இந்த திடல் பறிபோனது.

இதன் பின்னர் ஆயில்மில் பஸ்நிலையம் அருகே சர்ச்சுக்கு பக்கத்திலிருந்த காலிமனையில்தான் கட்சி பொதுக்கூட்டங்கள் அதிகளவில் நடக்கும் (இப்போது அங்கே பெட்ரோல் பங்க் இருக்கிறது). கட்சி வேறுபாடில்லாமல் நூற்றுக்கணக்கான பேச்சாளர்களின் பேச்சை இங்கே நடந்த பொதுக்கூட்டங்களில்தான் செவிமடுத்திருக்கிறேன். கடந்த பதினைந்து ஆண்டுகளில் பறிபோன பொதுக்கூட்ட திடல்களை பற்றி தனியாக ஓர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இங்கே இந்து முன்னணி கூட்டமும் நடக்கும். அடுத்த வாரமே ஆராதனைப் பெருவிழாவும் நடக்கும். காளிமுத்து வந்து பேசுகிறார் என்றால் அடுத்த வாரமே துரைமுருகன் வருவார். இப்படி ஏட்டிக்கு போட்டியாக தொண்டர்களின் –- ரசிகர்களின் என்டெர்டெயின்மெண்டுக்கு கட்சிகள் நல்ல தீனி போட்டு வந்தன.

நாஞ்சில் சம்பத்தின் பேச்சை முதன்முதலாக இங்குதான் கேட்டேன். அனேகமாக 2002 ஆக இருக்கலாம். சில நாட்கள் முன்புதான் நாகர்கோயிலில் இருந்த அவரது பாரம்பரிய வீட்டை ஆக்கிரமிப்பு என்றுகூறி அதிமுக அரசு இடித்துத் தள்ளியிருந்தது. அன்றைக்கு நாஞ்சில், மேடையில் நடத்திக் காட்டியது ஒரு துன்பவியல் நாடகத்தின் உருக்கமான காட்சிகள். கருப்புத்துண்டை திடீரென்று இழுத்துப் பிடித்து வாள் மாதிரி உயரத் தூக்கிக் காட்டுவார். சட்டென்று அதே துண்டையெடுத்து வாய்பொத்தி கதறி கதறி அழுவார். வைகோவின் டிரேட்மார்க்கான ‘கிரேக்கத்திலே கலிங்கத்திலே’ பேச்சை அப்படியே இமிடேட் செய்தார். சங்கத்தமிழ் தண்ணி பட்ட பாடு. மாற்றுக் கட்சியின் எந்தத் தலைவருக்குமே மரியாதையில்லை. ‘அவன், அவள்’தான். அவருடைய பேச்சை முதன்முதலாக கேட்டதுமே தோன்றியது. “இவரிடம் சரக்கு சுத்தமாக இல்லை. ஆனால் கேட்பவர்களை கவரக்கூடிய ஈர்ப்பு இருக்கிறது”.

பின்னர் சில முறை மதிமுக தலைமையகமான தாயகத்தில் சந்தித்திருக்கிறேன். “இவங்களுக்கு டீ கொண்டாந்து கொடுப்பா” என்பதைகூட மேடையில் பேசும் பாவத்தில் உணர்ச்சிபூர்வமாகதான் சொல்லுவார்.

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் நடந்தபோது வைகோவின் கலிங்கப்பட்டி வீட்டுக்குச் சென்றிருந்தோம். வைகோ வீட்டுக்குள் ஓய்வில் இருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்த தொண்டர்களை சம்பத்தான் உபசரித்துக் கொண்டிருந்தார். அவரிடம் பேச முயன்றபோது, “சாயங்காலம் சங்கரன்கோயில் பஸ் ஸ்டேண்ட் கிட்டே பேசறேன். அங்கே வந்துருப்பா” என்றார்.

பஸ்ஸ்டேண்ட் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் நல்ல கூட்டம். உணர்ச்சிபூர்வமாக நெசவாளர்களின் துயரை பண்டைய கிரேக்கக் காலத்திலிருந்தே அடுக்கிக்கொண்டு வருகிறார். நெசவாளர்கள் நிறைந்த சங்கரன்கோயிலில் நன்கு எடுப்பட்ட பேச்சு அது. அப்போது திடீரென்று திமுக கொடி கட்டிய ஆட்டோ ஒன்று அந்தப் பக்கமாக போகிறது. மைக்கில் ‘சங்கரன்கோயில் பஸ் நிலையம் அருகே பிரச்சார பீரங்கி குஷ்பு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார். அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர்’ என்று ஆட்டோவில் கட்டப்பட்ட ஹாரனில் அறிவிப்பு. கூட்டம் சலசலத்தது.

பேசிக்கொண்டிருந்த நாஞ்சில் அப்படியே பேச்சை நிறுத்துகிறார். கூட்டத்தைப் பார்க்கிறார். “எவனெல்லாம் அவளைப் பார்க்கணும்னு நெனைக்கிறீயோ, அத்தனை பேரும் அப்படியே போயிடு. இங்கே உட்காராதே. எனக்கு அருவருப்பா இருக்கு”. பாதி கூட்டம் அப்படியே அம்பேல்.

“மேக்கப் போட்ட ஒரு நடிகை வார்றான்னா, அப்படியே போறீங்களேய்யா. ஒண்ணரை லட்சம் பேரு செத்திருக்கான். இன்னும் நீ சினிமா பார்த்துட்டு, வடநாட்டு நடிகைகளை வாயைப் பிளந்து ரசிச்சிக்கிட்டு இருக்கே. இந்த நாடு உருப்படுமா. தமிழினம் வாழுமா. நமக்கெல்லாம் எதுக்குய்யா கொள்கை, புடலங்காய். பேசாம நாமள்லாம் அந்த நடிகை நடத்துற கட்சியிலேயே போயி சேர்ந்துடலாம்”

கொஞ்ச நாட்களிலேயே சம்பத், அதிமுகவுக்கு போய்விட்டார்.

நண்பேண்டா!

$
0
0

ஜேன் கோம். பிரையன் ஆக்டன்.

இந்த இரண்டு பெயர்களையும் மறந்து விடாதீர்கள்.

ஏனெனில், இவர்கள்தான் ‘வாட்ஸப்’ புரட்சியை உருவாக்கிய தொழில்நுட்ப வல்லுனர்கள்.

கோமுக்கு இப்போது வயது முப்பத்தொன்பது. ஆக்டனின் வயது நாற்பத்தி மூன்று. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் ஆசை ஆசையாக இவர்களிடமிருந்துதான் ‘வாட்ஸப்’ உரிமையை காசு கொடுத்து வாங்கியது.

விலை எவ்வளவு கொடுத்திருப்பார்கள்?

குன்ஸாக சொல்லுங்களேன் பார்ப்போம்.

பத்து லட்சம்? ஐம்பது லட்சம்? ஒரு கோடி? பத்து கோடி? நூறு கோடி?

தலைசுற்றி மயங்கி விடாதீர்கள்.

வாட்ஸப்பை ஃபேஸ்புக் வாங்கியது ஜஸ்ட் ஒரு லட்சத்து இருபது ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து. எண்ணால் எப்படி எழுதுவது, எத்தனை பூச்சியம் போடுவது என்றெல்லாம் அப்புறமாக யோசியுங்கள்.

யார் இவர்கள்?

ஜேன் கோம், உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர். அந்நாட்டின் வறுமை இவரை அமெரிக்காவை நோக்கி துரத்தியது. பதினாறு வயதில் கலிஃபோர்னியா மாகாணத்தின் மவுண்டெயின் வியூ என்கிற இடத்துக்கு வந்து செட்டில் ஆனார். அவரும், அவருடைய அம்மாவும் அரசாங்கம் தரும் இலவச உணவுக்காக மணிக்கணக்கில் கியூவில் நின்றவர்கள்.

பத்தொன்பது வயதில் கோமுக்கு என்று சொந்தமாக ஒரு கம்யூட்டர் கிடைத்தது. கூடவே இணைய இணைப்பும். எந்நேரமும் கம்ப்யூட்டரும் கையுமாக உட்கார்ந்திருவர் ‘ஹேக்கிங்’ தொழில்நுட்பங்களில் கில்லாடி ஆனார். உலகெங்குமிருக்கும் பிரபலமான ஹேக்கிங் குழுக்களின் இணைந்து கலக்க ஆரம்பித்தார். பெரிய நிறுவனங்கள் பலவும் ஹேக்கிங் தொடர்பான உதவிகளுக்கு இவரை நாட ஆரம்பித்தார்கள் (ஹேக்கிங் என்பது தீய காரணங்களுக்காக மட்டுமல்ல, சில சமயங்களில் நல்ல விஷயத்துக்கும் தேவைப்படும்).

எர்னஸ்ட் & யங் என்கிற நிறுவனத்துக்கு மென்பொருள் பாதுகாப்பு சோதனைப் பணியாளராக பணிபுரிந்துகொண்டே கல்லூரியில் சேர்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார்.

யாஹூ நிறுவனத்தின் இணை நிறுவனரான டேவிட் ஃபைல் தங்களோடு வந்து இணையுமாறு இவரை நல்ல சம்பளத்துக்கு அழைக்க, கல்லூரியை பாதியிலேயே விட்டு விட்டு ‘யாஹூ’வில் இணைந்தார்.

பிரையன் ஆக்டன் அமெரிக்கர். ஃப்ளோரிடா மாகாணத்தில் வளர்ந்தவர். ஸ்டேண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டரில் பட்டம் பெற்றவர். ‘ஆப்பிள்’ நிறுவனத்தில் சாஃப்ட்வேர் என்ஜினியராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். 1996ல் ‘யாஹூ’ நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

நட்பு மலர்ந்தது
அப்போது எர்னஸ்ட் & யங் நிறுவனத்தில் மென்பொருள் பாதுகாப்பு சோதனையாளராகப் பணியாற்றிய ஜேன் கோம் அடிக்கடி யாஹூவுக்கு பணி தொடர்பாக வரவேண்டி இருந்தது. கோமுடைய புத்திக்கூர்மையும், நேர்மையும் ஆக்டனை கவர்ந்தது.

சில மாதங்கள் கழித்து கோம், யாஹூவில் இணைந்தார். ஏற்கனவே இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மரியாதை, இணைந்து பணியாற்றிய போது நெருங்கிய நட்பாக மலர்ந்தது. பணி நேரத்திலும் சரி, பணி தாண்டிய நேரங்களிலும் சரி இரட்டையர்களாக ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

2007ஆம் ஆண்டு இருவரும் ஒன்றாகவே பணியை விட்டார்கள். தென்னமெரிக்காவுக்கு பயணித்தார்கள்.

வாட்ஸப் பிறந்தது

‘ஃபேஸ்புக்’ பிரபலமாகத் தொடங்கியது. இருவரும் இணைந்து வேலைக்கு விண்ணப்பித்தார்கள். ஆனால், ஏனோ இவர்களை பணிக்கு சேர்த்துக் கொள்ள ஃபேஸ்புக் மறுத்தது. யாஹூவில் சம்பாதித்து சேர்த்த கையிருப்பு இருவரிடமுமே கரையத் தொடங்கியிருந்தது.

ஜனவரி 2009. நண்பர் ஒருவரது வீட்டில் கோம் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார். ஆக்டனுக்கும் மற்ற நண்பர்களுக்கும் ஏதாவது மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தார். மொபைல் போனில் இருந்த மெசேஜ் அப்ளிகேஷனுக்கு சில போதாமைகள் இருந்ததாக அவருக்கு பட்டது. ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்.சுக்கும் காசு செலவழிக்க வேண்டியிருக்கிறது. மெயில் செக் செய்ய பயன்படுத்தும் இண்டர்நெட் கனெக்‌ஷன் மூலமாகவே கூடுதல் காசு செலவில்லாமல் மெசேஜ் அனுப்பக்கூடிய வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று சட்டென ஓர் ஐடியா பளிச்சிட்டது.

ஆக்டனிடம் பேசினார். சில டெவலப்பர்களை கலந்தாலோசித்தார்கள். தான் புதியதாக உருவாக்க இருக்கும் அப்ளிகேஷனுக்கு ‘வாட்ஸப்’ என்று கோம்தான் பெயரிட்டார். பேச்சை நீட்டிக்க அடிக்கடி மெசேஜில் ‘அப்புறம் என்ன?’ (what’s up?) என்று கேட்போம் இல்லையா? அதையே தன் நிறுவனத்துக்கும் பெயராக வைத்து, கலிஃபோர்னியாவில் தன்னுடைய பிறந்தநாளான பிப்ரவரி 24, 2009 அன்று வாட்ஸப் இன்கார்ப்பரேஷனை ஜேன் கோம் தொடங்கினார்.

பொறுமை தந்த வெற்றி

ஆரம்பத்தில் ‘வாட்ஸப்’ அடிக்கடி சொதப்பியது. பயனாளர்களும் பெரிய ஆதரவு காட்டவில்லை. ஏற்கனவே மொபைல் போன்களில் மெசேஜ் ஆப்ஷன் இருக்க, புதுசாக இன்னொரு கந்தாயம் எதற்கு என்று நினைத்தார்கள்.

“இது வேலைக்கு ஆகாது. சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, எங்காவது வேலைக்கு போய்விடப் போகிறேன்” என்று கோம் சொன்னபோது, ஆக்டன் கோபத்துடன் மறுத்தார். “எனக்கென்னவோ இந்த ‘வாட்ஸப்’ எதையோ பெரியதாக சாதிக்கப் போகிறது என்று தோன்றுகிறது. ஒரு சில மாதங்கள் பொறுமையாக இரு” என்றார். நண்பனின் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? இத்தனைக்கும் அப்போது ஆக்டன் வேலை இல்லாமல் சும்மாதான் இருந்தார். ட்விட்டரில் வேலைக்கு சேர முயன்று, அவர்களும் சேர்த்துக் கொள்ள வில்லை.

தன்னுடைய வாட்ஸப்புக்கு பெரிய வரவேற்பு இல்லையென்றாலும் (வருமானமும் இல்லை), அதில் இருக்கும் குறைகளை அவ்வப்போது களைந்து கடமையே கண்ணாக அப்டேட் செய்துக் கொண்டிருந்தார் கோம். என்ன மாயமென்று தெரியவில்லை. திடீரென்று ஆப்பிள் பயனாளிகள் ஏகப்பட்ட பேர் வாட்ஸப்பை டவுன்லோடு செய்ய ஆரம்பித்தார்கள். இரவும், பகலுமாக வாட்ஸப்பில் கடலை போட ஆரம்பித்தார்கள். சட்டென்று சில நாட்களிலேயே சுமார் இரண்டரை லட்சம் பேர் வாட்ஸப் பயனாளிகள் ஆனார்கள்.

“நாம பெருசா பண்ணலாம் பாஸ்” என்று ஆக்டனையும் தன்னோடு வாட்ஸப் நிறுவனத்தில் அக்டோபர் 2009 வாக்கில் இணைத்துக் கொண்டார். முன்னாள் யாஹூ நண்பர்கள் சிலரிடம் பேசி ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடு திரட்டி பிசினஸை கொஞ்சம் பெருசாக்கினார்கள். ஆப்பிளைத் தொடர்ந்து பிளாக்பெர்ரி போன்களுக்கும் வாட்ஸப் வசதியை நீட்டிக்க, ஆக்டன் முன்பு சொன்னமாதிரி நிஜமாகவே வாட்ஸப் பெரியதாக சாதிக்கத் தொடங்கியது.

இன்று?

கடந்த ஆறு வருடங்களில் வாட்ஸப் அடைந்திருக்கும் வளர்ச்சி யாருமே யூகித்தறிய முடியாதது. பெரிய முதலீட்டு நிறுவனங்கள் பல்லாயிரம் கோடியை இதில் முதலீடு செய்திருக்கின்றன. ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸப்பை எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார்கள் என்பதை மேலேயே சொல்லியிருக்கிறோம்.

நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக ஃபேஸ்புக்குக்கு கைமாற்றி விட்டுவிட்டாலும் இன்னமும் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஜேன் கோமும், பிரையன் ஆக்டனும்தான். கோம், வாட்ஸப்பின் மென்பொருள் தரத்தை பார்த்துக் கொள்கிறார். ஆக்டன், பிசினஸ் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொள்கிறார். இருவரது உணர்வுப்பூர்வமான நட்புதான் வாட்ஸப்பை இந்த உயரத்துக்கு வளர்த்திருக்கிறது.

வெற்றிக்கு காரணம்?

பொதுவாக இணையத்தள பயன்பாடு என்றாலே எரிச்சலூட்டும் விளம்பரங்கள்தான் பெருந்தொல்லை. நிம்மதியாக ஒரு யூட்யூப் வீடியோவை கூட பார்த்துத் தொலைக்க முடியாமல், அதற்கு முன்பாக ஒரு இருபது நொடி விளம்பரத்தை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. செய்திகளை வாசிக்கும்போது குறுக்கிடும் விளம்பர அட்டைகளை க்ளோஸ் செய்து, க்ளோஸ் செய்தே சோர்ந்து விடுகிறோம்.

வாட்ஸப் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தன்னுடைய டேபிளில் பிரையன் ஆக்டன் எழுதி வைத்திருக்கும் மந்திரச்சொல்தான் வாட்ஸப்பின் வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள்.

“No Ads! No Games! No Gimmicks!”

நட்பு பரிமாறிக் கொள்ளும் சாளரமான வாட்ஸப்பில் வேறெந்த குறுக்கீடுகளும் எக்காலத்திலும் இருக்கக்கூடாது என்பதில் நண்பர்கள் இருவரும் உறுதியாக இருக்கிறார்கள். நட்பின் அருமையை அவர்களைவிட வேறு யார் அதிகமாக அறிய முடியும்?

எதிர்காலம்?

“சிலிகான் பள்ளத்தாக்கில் எங்கள் வாட்ஸப் நிறுவனத்தை போல நீங்கள் வேறெந்த நிறுவனத்தையும் பார்க்க முடியாது. பெரியதாக மிகப்பெரியதாக வளரவேண்டும் என்று நினைப்பதைவிட எங்களது அவ்வப்போதைய வெற்றியை தக்கவைத்துக் கொள்ளவே நாங்கள் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறோம். கிடைத்த வெற்றியை தக்கவைத்துக் கொண்டால், அதுவே நம்மை மிகப்பெரிய வெற்றியை நோக்கி கொண்டுச் செல்லும். எங்கள் தயாரிப்பை முன்னிலைப்படுத்தி, எங்களை பின்னணியில் மறைத்துக் கொள்கிறோம். இதைத்தவிர எங்களுக்கு வேறெந்த பிசினஸ் சீக்ரட்டும் இல்லை” என்கிறார் ஆக்டன்.

வாட்ஸப், குழந்தையும் பயன்படுத்தும் வண்ணம் எளிதாக இருக்கிறது. பாதுகாப்பானது. வேகமானது. மற்ற சமூகவலைத்தளங்களைப் போல நேரத்தை விழுங்குவதில்லை. நாமறிந்த நம்முடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களோடு மட்டும் கருத்துகளை பரிமாறிக் கொள்ளவோ, குறிப்பிட்ட விஷயங்களுக்காக தனிக்குழு அமைத்து விவாதிக்கவோ உதவுகிறது. தகவல் பரிமாற்றம் இன்று இதன் அளவுக்கு எளிமையாகவும், வேகமாகவும் வேறு எந்த வடிவிலும் இல்லை.

ஆனால்-

யாருக்கு தெரியும்? ஆறு ஆண்டுகளுக்கு முன்பு யாராவது வாட்ஸப்பை நூறு கோடி பேர் பயன்படுத்தப் போகிறார்கள் என்று கணித்திருக்க முடியுமா? அதுபோல நாளை வேறொரு அப்ளிகேஷன் வரலாம். அது வாட்ஸப்பை வெற்றிக் கொள்ளவும் செய்யலாம்.

எனினும், அது அவ்வளவு எளிதல்ல. இந்த இரு நண்பர்களை தாண்டி ஓடவிரும்புபவர்கள் இவர்களை விட இரு மடங்கு வேகமாக ஓடவேண்டும். இன்றைய தேதியில் அதற்கு வாய்ப்பில்லை.

(நன்றி : வாட்ஸப் ஸ்பெஷல் - தமிழ் முரசு நாளிதழுடன் இணைப்பு)

குடும்பங்களின் வெற்றி!

$
0
0
ஒரு திரைப்படத்தின் ஒரே ஒரு காட்சியிலாவது உங்களை அறியாமல், கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டால் போதும். அந்த படம் நிச்சயம் மெகாஹிட். இரண்டாம் நபருக்கு தெரியாமல் நீங்கள் கர்ச்சீப்பை எடுத்து கண்ணைத் துடைத்துக் கொண்டது எந்தெந்த படங்களைப் பார்த்தபோது என்று யோசித்துப் பாருங்கள். இந்த உண்மை புரியும். ‘நேனு சைலஜா’ (தெலுங்கு) குறைந்தபட்சம் ஒரு காட்சியிலாவது இப்படி உலுக்கியெடுக்கிறது.

ராம் பொத்தினேனிக்கு இப்போது வயது இருபத்தெட்டுதான். ஆனால் ஹீரோவாகி பத்தாவது ஆண்டு. முதல் படமான ‘தேவதாசு’, பத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஐநூறு நாட்களுக்கும் மேலாக ஓடி மகத்தான சாதனை புரிந்தது. பதினெட்டு வயதிலேயே ஒரு ஹீரோவுக்கு இத்தகைய வெற்றி என்பது தெலுங்கு சினிமாவில் மட்டும்தான் சாத்தியம். இதே மாதிரி சாதித்த இன்னொருவர் ஜூனியர் என்.டி.ஆர்., தெலுங்கில் இதுமாதிரி ஏராளமான சாதனைகள் உண்டு. உலகிலேயே அதிக ஹிட் ரேட் கொண்ட ஹீரோ அங்குதான் இருக்கிறார். ‘விக்டரி ஸ்டார்’ வெங்கடேஷ். அவர் நடித்த முதல் 50 படங்களில் 45 படங்கள் நூறுநாள் ஓடியவை.
ராம் எத்தகைய ஹீரோ என்று வரையறுப்பது கொஞ்சம் கடினம். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். கொஞ்சம் சிகப்பாக இருக்கிறாரே தவிர்த்து, நம்மூர் விமல் மாதிரிதான் சராசரித் தோற்றம். அதிக உயரமில்லை. கொஞ்சம் reduce to fit மாதிரிதான் இருப்பார். அதனாலோ என்னவோ சீமாந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் இரண்டாம் அடுக்கு நகர இளைஞர்கள், தங்களை சினிமாவில் பிரதிநிதித்துவப்படுத்தும் நாயகனாக இவரை கொண்டாடுகிறார்கள். ஒரு படம் மெகாஹிட் என்றால் அடுத்த படம் அட்டர் ப்ளாப் என்பதுதான் ராமுடைய பத்தாண்டு கேரியர் கிராப். இத்தகைய சிக்கலான சினிமா வாழ்க்கை என்றாலும் இதற்குள்ளேயே ‘ரெடி’, ‘காண்டிரேகா’ என்று தெலுங்கு இண்டஸ்ட்ரி பாக்ஸ் ஆபிஸையே சுக்குநூறாக்கிய இரண்டு ப்ளாக்பஸ்டர் மூவிகள் இவரது ஃபிலிமோகிராபியில் உண்டு.

ஓக்கே. லெட் அஸ் கம் டூ ‘நேனு சைலஜா’

சமீபமாக அடுத்தடுத்து ப்ளாப்களையே கொடுத்துவந்த ராம், தன்னுடைய ஆக்‌ஷன் இமேஜை (!) கைவிட்டு, ‘காதலுக்கு மரியாதை’ விஜய் கணக்காக காதல், குடும்பம், சென்டிமெண்ட் என்று களமிறங்கி இருக்கும் இந்தப் படம் 2016ன் முதல்நாளில் வெளிவந்து வசூல் சுனாமியை ஏற்படுத்தியிருக்கிறது. விமர்சகர்கள், தெலுங்கில் எடுக்கப்பட்ட ‘தில்வாலே துலானியா லே ஜாயங்கே’ என்று கொண்டாடுகிறார்கள். தமிழ், இந்தி மொழிகளுக்கு ரீமேக் உரிமை வாங்க போட்டாபோட்டி நடக்கிறதாம்.

தமிழில் முதல் படம் வெளிவருவதற்கு முன்பே பரபரப்பாக புக் ஆனவர் கீர்த்தி சுரேஷ். ஆனால், ‘இது என்ன மாயம்’ வெளியானபிறகு என்ன மாயமோ தெரியவில்லை. கீர்த்தியின் கீர்த்தி அதலபாதாளத்துக்கு போய்விட்டது. இதுபோல கோலிவுட்டில் மவுசு இழந்த ஹீரோயின்களுக்கு ‘வந்தாரை வாழவைக்கும் வடுகதேசம்’தான் வேடந்தாங்கல். கீர்த்தி, தெலுங்கில் அறிமுகமாகியிருக்கும் இந்த முதல்படமே ப்ளாக் பஸ்டர் ஹிட். அங்கு இன்னும் நான்கைந்து ஹிட்டுகளை அவர் கொடுத்தபிறகு, பல கோடிகளை கொடுத்து மீண்டும் கோலிவுட்டுக்கு கூப்பிடுவோம். ஸ்ரேயா, நயன்தாரா, தமன்னா, இலியானா என்று இந்த வரலாறுக்குதான் சமீபகாலத்திலேயே எவ்வளவு எடுத்துக்காட்டுகள்?
வழக்கமான, மிக சாதாரணமான காதல் கதைதான். அதில் எந்த சந்தேகமுமில்லை. குழந்தைப் பருவத்திலேயே ராமுக்கு கீர்த்தி மீது ஈர்ப்பு. ராமின் அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றல் ஆகிறது. வளர்ந்து பெரியவர்கள் ஆனபிறகு சந்திக்கிறார்கள். ராம், கீர்த்தியிடம் காதலை வெளிப்படுத்துகிறான். ‘ஐ லவ் யூ. பட், ஐ ஆம் நாட் இன் லவ் வித் யூ’ என்று வித்தியாசமாக குழப்புகிறார் அவர்.

குழம்பிப் போன ராமுக்கு, தற்செயலாக கீர்த்தியினுடைய குடும்பப் பின்புலம் தெரியவருகிறது. ஒரு மாதிரி வடகொரியா கணக்காக இரும்புக்கோட்டையாக இருக்கும் அவர்களது குடும்பத்தை இளகவைக்கிறார். கீர்த்தியை கைப்பிடிக்கிறார். தட்ஸ் ஆல்.

இந்த சாதாரண ரொமான்ஸ் ஃபேமிலி டிராமாவில் இயக்குநர் அடுக்கியிருக்கும் காட்சித் தோரணங்கள்தான் சம்திங் ஸ்பெஷல். சின்ன சின்ன ஃப்ரேமை கூட விடாமல் ஒவ்வொரு பிக்ஸெலாக செதுக்கித் தள்ளியிருக்கும் ரிச் மேக்கிங். ஒவ்வொரு காட்சியுமே புத்திசாலித்தனமான ஐடியாவால், நறுக்கான வசனங்களால் ‘அட’ போடவைக்கிறது.

“நல்லா இருக்குங்கிறது வேற. நமக்கு பிடிச்சிருக்குங்கிறது வேற” – இதுமாதிரி எளிமையான, ஆனால் சுரீர் வசனங்கள்.
படத்தின் க்ளைமேக்ஸுக்கு சற்று முன்பாக ஒட்டுமொத்தப் படத்தின் சுமையையும் ஒரே காட்சியில் தங்கள் தோள்களுக்கு மாற்றிக் கொள்கிறார்கள் சத்யராஜும், ரோகிணியும். “பொண்ணுக்கு கல்யாணமானா பெத்தவங்களை விட்டுட்டு புகுந்த வீட்டுக்குப் போகணும்னு எவன்யா எழுதினான்? சத்தியமா சொல்றேன், அவன் பொண்ணு பெத்தவனா இருக்கமாட்டான்!” என்று சத்யராஜ் உருகும்போதும், “எல்லோரையும் மாதிரி என் புருஷனும் என்கூட நடந்துக்கணும்னுதான் ஆசை. ஆனா, அவரு என் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனா இருக்கணுங்கிறதுக்காக எவ்வளவோ இழந்திருக்காரு. அப்பா கிட்டே அவருக்கு கிடைக்காத கவுரவம், அவரோட பிள்ளைங்க கிட்டே கிடைச்சா போதும்” என்று ரோகிணி ஈரமான கண்களோடு பேசும்போதும் அதுவரை சிரித்து கும்மாளமாக படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள். இவ்வளவு திறமையான இந்த கலைஞர்களை வைத்து தமிழில் இன்னமும் அம்மி கொத்திக் கொண்டிருக்கிறோமே என்கிற வேதனைதான் நமக்கு ஏற்படுகிறது.

படம் முடியும்போது, இப்படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களின் சாயலையும் நம் உறவுகளில் தேடி ஒப்பிட்டு மகிழ்கிறோம். இரத்தமும் சதையுமான நம் ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் நெருக்கமான கதையை சொல்லியிருப்பதாலேயே ‘நேனு சைலஜா’ எவரெஸ்ட் ஹிட்டை எட்டியிருக்கிறது. இது, நம் இந்திய குடும்பமுறை பாரம்பரியமாக தொடரும் வெற்றிகரமான வாழ்வியலை அடையாளப்படுத்தும் மகத்தான வெற்றியும் கூட.

குரங்கு கையில் பூமாலை... கூவம் நம் கைகளில்!!

$
0
0

வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புபவர்கள் ஏதேனும் பாலங்களை கடக்கும்போதே மூக்கைப் பொத்திக்கொண்டு முணுமுணுப்பார்கள். “அங்கெல்லாம் ஆறு என்னம்மா ஓடுது தெரியுமா? நம்மூர்லேயும் கெடக்குதே கூவம் கழுதை...” அவர் வாயிலிருந்து அடுத்த அரை மணி நேரத்துக்கு கூவத்துக்கு அர்ச்சனை நடக்கும்.

பாவம். ஆறு என்ன செய்யும். ஆற்றை அசிங்கப்படுத்திய நம்மை அல்லவா நாமே காறித்துப்பிக் கொள்ள வேண்டும்?

கூவத்தை குடித்தார்கள்

நம்புங்கள்.

எல்லா நதிகளையுமே போலவே கூவமும் புனிதமான நதிதான். நதியென்றாலே புனிதம்தான். கூவம் ஆற்றின் நீரை நம் முன்னோர் குடித்திருக்கிறார்கள். குளித்திருக்கிறார்கள். வேளாண்மை செய்திருக்கிறார்கள். இந்நதியின் காரணமாக நாகரிகம் வளர்ந்திருக்கிறது. நகரங்கள் பிறந்திருக்கின்றன.

வள்ளல் பச்சையப்பா முதலியாரை தெரியும் இல்லையா? புகழ்பெற்ற சென்னை பச்சையப்பா கல்லூரி இவர் பேரில்தான் அமைந்திருக்கிறது. அந்த பச்சையப்பா முதலியார், கூவம் கரையோரம் அமைந்திருந்த கோமளீஸ்வரம்பேட்டையில்தான் (இன்றைய சிந்தாதிரிப்பேட்டை பகுதி) வசித்தார். அவர் காலத்தில் செல்வந்தர்கள் கூவம் கரையில்தான் பங்களா கட்டி வசித்தார்கள். கூவம் நதி கொடையாக தந்த குளிர்ந்த காற்றையும், அதன் கரைகளில் வளர்ந்த காட்டுச்செடி மலர்களின் சுகந்தத்தையும் அனுபவித்து வாழ்ந்தார்கள். பச்சையப்பா முதலியார் தினமும் காலையில் கூவத்தில் குளித்து சுத்தபத்தமாக கோமளீஸ்வரன் கோயிலுக்கு போய் இறைவனை வணங்கிவிட்டுதான் தன் அலுவல்களை தொடங்குவாராம். இதெல்லாம் ஏதோ கி.மு.வில் நடந்த நிகழ்ச்சிகள் அல்ல. வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவைதான்.

வெள்ளையர்களை கவர்ந்த ஆறு

கூவம் நதி கடலில் சேரும் பகுதி ஓர் இயற்கை ஆச்சரியம். அதில் கவரப்பட்டதால்தான் கிழக்கிந்திய கம்பெனியின் பிரான்சிஸ் டே, சரக்குக் கப்பல்களை நிறுத்த இதைவிட வாகான இடம் கிடைக்காது என்று கருதி, அப்பகுதியின் வடக்கில் இருந்த பகுதிகளை விலைக்கு வாங்கி வணிக மையம் அமைத்தார். அப்பகுதியில் செயற்கை துறைமுகம் உருவாக்கப்பட்டு, அதைச்சுற்றி குடியிருப்புகள் உருவானது. கோட்டை எழுப்பப்பட்டது. நகரம் உருவானது. அவ்வகையில் மதறாஸ் (சென்னை) உருவானதற்கு கூவமும் ஒருவகையில் காரணம்.

இந்தியா, வெள்ளையர்களின் ஆளுகைக்கு உட்படவும் மறைமுகமான காரணமாக இந்நதியே இருந்திருக்கிறது எனும்போது, வரலாற்றில் எத்தகைய மகத்தான இடத்தை நாம் கூவத்துக்கு கொடுத்திருக்க வேண்டும்.

கூவம் ரூட் மேப்

கூவம் என்கிற பெயர் ‘கூபம்’ என்கிற பழந்தமிழ் சொல்லில் இருந்து மருவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கூபம் என்றால் ஆழமான குளம் என்று பொருள். அக்காலத்தில் நீரியல் அறிவு கொண்ட வல்லுநர்களை ‘கூவாளன்’ என்றே அழைத்திருக்கிறார்கள்.

சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் கூவம் கிராமம்தான் இந்த ஆறு உருவாகும் இடம். அங்கிருந்து சிறு ஓடையாக ஓடி, ஐந்து கி.மீ தூரத்தில் இருக்கும் சட்டறை என்கிற கிராமத்தில் நதியாக உருவெடுக்கிறது. திருவள்ளூர், பூந்தமல்லி நகரங்களை ஒட்டி சுமார் 60 கி.மீ பாய்ந்து, சென்னைக்குள் கோயம்பேடு அருகில் நுழைகிறது. அரும்பாக்கம், சூளைமேடு, சேத்துப்பட்டு, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டையை எட்டுகிறது. அங்கே இரண்டாக பிரிந்து சென்னைக்குள் ஒரு தீவினை உருவாக்குகிறது. பிரிந்த நதி மீண்டும் நேப்பியர் பாலம் அருகே இணைந்து, முகத்துவாரம் வாயிலாக வங்கக்கடலில் கலக்கிறது.

ஆவடிக்கு அருகில் பருத்திப்பட்டு அணைக்கட்டு வரை சராசரி ஆறாகவே இருக்கிறது கூவம். ஆக்கிரமிப்புகள், மணல் சுரண்டல் என்று எல்லா ஆறுகளுக்கும் நேரும் அவலம் கூவத்துக்கும் நேர்கிறது. இன்னமும் நிலத்தடி நீர் ஆதாரத்துக்கும், விவசாயத்துக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் கூவத்தை நம்பி பல கிராமங்கள் இருக்கின்றன.
சென்னை மாநகருக்குள் நுழைவதற்கு முன்பாகவே தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளின் கழிவுநீர் அப்படியே விடப்பட்டு நம் பாவங்களை சிலுவையாக சுமந்து சாக்கடையாக கடனே என்றுதான் கடலுக்கு போய் சேர்கிறது. நகருக்குள் நரம்பாக செல்லக்கூடிய சுமார் 20 கி.மீ. தூரம்தான் கூவத்துக்கு நரகம். ஆற்றுநீர் கருப்பாக, துர்வாசனையோடு வேண்டாத விருந்தாளியாகதான் நகருக்குள் நகர்கிறது.

எப்போது மாசுபட்டது?

வெள்ளையரிடமிருந்து நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ஓன்றிரண்டு ஆண்டுகளில் நடந்த ஆய்வில், சென்னை மாநகருக்குள் கூவம் நதியில் சுமார் ஐம்பது வகை மீன் இனங்கள் வாழ்ந்ததாக தெரியவருகிறது. பழைய புகைப்படங்களை காணும்போது மீனவர்கள் மீன்பிடித்தொழிலை கூவம் ஆற்றில் செய்து வந்தது உறுதியாகிறது.

ஆனால் -

அடுத்த பத்தாண்டு காலத்துக்குள்ளேயே கூவத்தில் உயிர்வாழும் மீன் இனங்களின் எண்ணிக்கை வெறும் இருபதாகி இருக்கிறது. இன்று நீர்வாழ் உயிரினங்கள் வசிக்க லாயக்கற்ற ஆறு அது.

வெள்ளையர் நம்மை சுரண்டியிருந்தாலும், நம்மூர் ஆற்றின் மீது அவர்கள் அக்கறையாகதான் இருந்திருக்கிறார்கள். இந்நதியின் கரைகளில்தான் பெரும் மாளிகைகளை எழுப்பி, முக்கிய அதிகாரிகளையும், ஆளுநர்களையும் தங்க வைத்தனர். கூவத்தை கொன்ற பெருமை நம்மையே சாரும். 1960களின் தொடக்கத்திலேயே கூவம், முழுமையான சாக்கடையாக மாறிவிட்டது.

அண்ணாவின் கனவு

1967ல் அண்ணா ஆட்சி பொறுப்பேற்றபோது, ஒரு கோடியே பதினெட்டு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கூவம் நதியை சீரமைக்க ஒரு திட்டம் தீட்டினார். அப்போது, “லண்டன் மாநகருக்கு தேம்ஸ் நதியை போல சென்னைக்கு கூவம் பெருமை சேர்ப்பதாய் அமைய வேண்டும்” என்று தன்னுடைய கனவினை வெளிப்படுத்தினார்.
அண்ணாவுக்கு பிறகு முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி கூவத்தில் படகுகளை விட்டு சுற்றுலாவை ஈர்க்க முயற்சித்தார். கடையேழு வள்ளல்கள் பெயரில் படகுத் துறைகளையும் கட்டினார். இன்றும் பாழடைந்த நிலையில் இருக்கும் அந்த படகுத்துறைகளை கூவம் கரைகளில் காணலாம்.

அதன் பின்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்நதியை சீர்படுத்தி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர ஏராளமான முயற்சிகள் எடுக்கப்பட்டு பல கோடி ரூபாய்க்கு திட்டங்களாக திட்டங்கள் தீட்டப்பட்டன. குறிப்பாக சென்னை மாநகர மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, திமுக அரசு 2000ஆம் ஆண்டு ரூ.720 கோடி மதிப்பீட்டில் ஒரு திட்டத்தை அறிவித்தபோது கூவம் மணக்கும் என்றே உறுதியாக எண்ணப்பட்டது.

ஆனால், சாபக்கேடு கூவத்துக்கா அல்லது சென்னை மக்களுக்கா என்று தெரியவில்லை. ஆட்சி மாற்றத்தால் அந்த திட்டம் அம்பேல் ஆனது. அதன் பிறகும் அவ்வப்போது அறிவிப்புகள் வெளிவந்தாலும் மக்களும், கூவமும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. இன்றுவரை அண்ணாவின் கனவு நிறைவேறவில்லை.

பொறுத்த கூவம் பொங்கியது

இயற்கையை மனிதன் என்னதான் நாசப்படுத்தினாலும், அது ஒரு கட்டம் வரைதான் பொறுக்கும். பின்னர் தன்னையே ஒரு உலுக்கு உலுக்கி மனித நாசங்களை உதிர்க்கும். தன்னுடைய நாற்றத்தை தானே சகிக்க முடியாமலோ என்னவோ, சமீபத்திய பெருமழையில் கூவம் நம் பாவங்களை மொத்தமாக கழுவிக் கொண்டது. கால்வாய்கள் வழியாக வந்த வெள்ளநீர் நிரம்பி, சாக்கடைகளை ஒட்டுமொத்தமாக கடலுக்குள் கொண்டுச் சென்று கொட்டி தன்னைதானே அந்த ஆறு புதுப்பித்துக் கொண்டது. தெளிவான நீரோட்டம் இயல்பாக அமைந்தது.

ஆனால் அந்த சுத்தத்தின் ஆயுள் ஒரு மாதம் கூட முழுமையாக நீடிக்கவில்லை. மீண்டும் பழைய நிலைக்கே நீரின் நிறம் கருப்பாக மாறிக் கொண்டிருக்கிறது. துர்நாற்றம் வீச ஆரம்பித்திருக்கிறது.

என்ன செய்யப் போகிறோம்?
நம் பயன்பாட்டுக்கு இயற்கை அளித்த கொடையான நீர்நிலைகளை கூவம் மாதிரி விஷமாக்கிவிட்டு குடிப்பதற்கு, குளிப்பதற்கு, விவசாயத்துக்கு, இதர பயன்பாடுகளுக்கு எல்லாம் லாயக்கற்றதாக செய்துவிட்டு இமயமலை பனியை உருக்கி பயன்படுத்தப் போகிறோமா?
நதி ஓடுவது மனித சமூகம் உருவாக்கும் கழிவுகளை சுமப்பதற்கல்ல. நதியோரங்கள் தொழிற்பேட்டைகளோ அல்லது வேறு பயன்பாட்டுகளுக்கோ ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் அல்ல. இதை நாம் மறந்ததால்தான் இன்று குடிநீருக்கு அவதிப்படுகிறோம். எதிர்காலத்தில் மூச்சுவிடவும் சிரமப்படுவோம்.

நதிகள் இணைப்பைவிட, நதிநீர் சீரமைப்புதான் இப்போது அவசிய அவசரபணி. நாம் இப்போது தொடங்காவிட்டால் வேறு எப்போதுதான் செய்யப் போகிறோம்?



சிங்கப்பூர் வழிகாட்டுகிறது!

சென்னையில் கூவம் மாதிரிதான் சிங்கப்பூரிலும் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது.

1819ல் சிங்கப்பூர் ஒரு நகரமாக உருவானதிலிருந்தே, அந்நகரின் வணிக நடவடிக்கைகளின் முதுகெலும்பாக சிங்கப்பூர் ஆறு இருந்து வந்தது. வேகமான நகரமயமாக்கல் அந்நதியையும் சாக்கடை ஆக்கியது. நம்மூர் கூவத்துக்கு என்ன நடந்ததோ, அதுவே அங்கும் நடந்தது.

1970களில் உலகமெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கத் தொடங்கிய சிங்கப்பூருக்கு நடுவே மாபெரும் சாக்கடை ஓடிக்கொண்டிருந்தது அரசுக்கு தர்மசங்கடத்தை கொடுத்தது. தவளைகள் கூட வாழ லாயக்கற்ற கருப்பான நீர் துர்நாற்றத்தோடு சீறிக்கொண்டிருக்க, சிங்கப்பூரில் கலை அழகை காண உலகின் கடைக்கோடியில் இருந்து வந்தவர்கள் எல்லாம் மூக்கைப் பிடித்துக் கொண்டார்கள்.

சகித்துக்கொள்ள முடியாத இந்த காட்சிக்கு ஒரு முடிவுகாண சிங்கப்பூர் அரசு முடிவெடுத்தது. செத்துப்போன நதிக்கு உயிர் கொடுக்க திட்டம் தீட்டியது.

1977ல் ‘ஆக்‌ஷன் ப்ளான்’ அமலுக்கு வந்தது.

· ஆற்றை ஒட்டி அமைந்திருந்த பதினாறாயிரம் குடும்பங்கள், அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டார்கள்.

· போலவே ஆற்றின் கரைகளில் அமைந்து, நதிநீரை மாசுபடுத்திக் கொண்டிருந்த சுமார் மூன்றாயிரம் தொழில் நிலையங்கள், நகரின் வேறு இடத்தில் அமைக்கப்பட்ட இண்டஸ்ட்ரியில் எஸ்டேட்டுகளுக்கு இடம்பெயர்ந்தன.

· ஆற்றோரத்தில் இறைச்சி தேவைக்காக அமைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பன்றி மற்றும் வாத்து பண்ணைகளை வேறு இடங்களுக்கு கொண்டுச் சென்றார்கள்.

· மாசு கட்டுப்பாட்டு அமைப்புகள் ‘ஓவர்டைம்’ வேலை பார்த்து நதியில் யாரெல்லாம் அசுத்தங்களை கலக்குகிறார்களோ, அவர்களது வயிறு கலங்கும் வண்ணம் எச்சரிக்கை நோட்டீஸ்களை கத்தை கத்தையாக வழங்கினார்கள். கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் கட்டமைப்புகளை கட்டாயமாக நிறுவ வகை செய்தார்கள்.

· இவையெல்லாம் முடிந்ததும் நதியை தூர்வாறத் தொடங்கினார்கள். பல்லாண்டுக் கணக்கில் சேர்ந்த மாசுகளை அகற்றினார்கள். நதியோரங்களில் பூங்காக்களை அமைத்தார்கள். மரக்கன்றுகள் நட்டார்கள். வாக்கிங் போக வசதியாக பாதைகள் உருவாக்கப்பட்டன. கரையோரத்தில் இருந்து ஆற்றை ரசிக்க வசதியாக மேற்கூரைகள் அமைக்கப்பட்ட பார்வையிடங்கள் உருவாகின.

· சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் இந்த பணியை முன்னெடுத்தது. இதன் தலைமையில் அரசின் எல்லா பிரிவுகளுமே அவை அவை செய்யமுடிந்த பணிகளை செய்தது. அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பெரிய தொழில் நிறுவனங்கள், சிவில் அமைப்புகளும் பங்கெடுத்துக் கொண்டன.
அவ்வளவுதான். 1987ல் சிங்கப்பூர் நதி மீண்டும் உயிர்பெற்றது. வெறும் பத்தாண்டுகளில் சிங்கப்பூர் அரசு, தன் மக்களோடு இணைந்து செய்திருக்கும் இந்த சாதனை ஒரு மகத்தான வரலாறு. நதிகளை சாகடித்துக் கொண்டிருக்கும் மற்ற வளரும் நாடுகளுக்கு முன்னுதாரணமான பாடம்.

திட்டமிட்டோம். முடித்துவிட்டோம். என்றெல்லாம் சிங்கப்பூர் அரசு கழண்டுக்கொள்ளவில்லை. மீண்டும் உயிர்ப்பித்த ஆற்றை, அதே உயிரோட்டத்தோடு ஓடவைக்க என்னென்ன கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டுமோ, அத்தனையையும் செய்து அவை முறையாக இயங்கக்கூடிய ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது.

நதியில் கழிவை கலப்பது என்பது நகரமயமாக்கல் கலாச்சாரத்தில் தவிர்க்க முடியாத செயல்பாடுதான். ஆனால் கலக்கப்படும் கழிவு அதிகபட்சம் எவ்வளவு மாசு கொண்டதாக இருக்கலாம் என்று தரக்கட்டுப்பாடு விதித்திருக்கிறது அந்த அரசு. கழிவுநீர் கலக்கப்படும் முகத்துவாரங்களில் இவற்றை கண்காணிக்க அமைப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. கண்காணிப்பையும் மீறி ஆற்றில் சேரும் குப்பைக் கூளங்கள் அப்போதே அகற்றப்படவும் ஆட்கள் எந்நேரமும் தயாராக இருக்கிறார்கள். ஆற்றை அழகாக வைத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நிரந்தரமாக அரசு மக்களிடையே நிகழ்த்தி வருகிறது.

ஆற்றை மாசுபடுத்துவது சட்டரீதியான குற்றம் என்கிற நிலையை கண்டிப்போடு அமல்படுத்துகிறது சிங்கப்பூர். தொழில் நிலையங்களில் அடிக்கடி சோதனை நிகழ்த்தப்பட்டு அவர்களது கழிவுகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறதா, ஆற்றில் கலந்துவிடும் நீர் அரசு விதித்திருக்கும் தரக்கட்டுப்பாட்டு அளவுக்குள் இருக்கிறதா என்றெல்லாம் ‘நேர்மையாக’ சோதனை செய்கிறார்கள் அதிகாரிகள்.

கூவத்தை தேம்ஸ் ஆக்க நாம் என்னவெல்லாம் செய்யவேண்டுமோ, அதையெல்லாம் சிங்கப்பூர் செய்துக் காட்டியிருக்கிறது. அட்சரசுத்தமாக அதை நாம் பின்தொடர்ந்தால் மட்டுமே போதும்.

சில ஆயிரம் கோடிகள் செலவழிக்க வேண்டும். செலவழிப்போம். மனித நாகரிகத்தை தோற்றுவித்த நதிகளுக்கு அதைகூட செய்யாவிட்டால் எப்படி?

(நன்றி : தினகரன் 09-01-2016)

குடும்பம் + குற்றம் + செக்ஸ் = டோலிவுட் கோங்குரா

$
0
0
குழம்பிப் போயிருக்கிறார்கள் தெலுங்கர்கள். தொண்ணூறுகளின் இறுதியிலும், இரண்டாயிரங்களின் துவக்கத்திலும் தமிழர்கள் சந்தித்த அதே சூழல்தான்.

நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளில் இருந்து எழுபதுகளிலேயே தமிழர்கள் வெளிவரத் தொடங்கிவிட்டோம். நில சீர்த்திருத்தம் போன்ற அரசின் முன்னெடுப்புகளும் அந்த சமூக மாற்றத்தை விரைவுப்படுத்தியது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் இந்தியாவை ஆக்கிரமித்த உலகமயமாக்கலுக்கு தன்னை வேகமாக தயார்படுத்திக் கொண்ட முதல் இந்திய மாநிலம் தமிழகம் என்பதற்கு அதுவும் ஒரு காரணம். மைசூர் அரசுடனான நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் காலாவதியாகி காவிரி பிரச்சினை தலையெடுக்கத் தொடங்கியவுடனேயே தமிழக அரசு விழித்துக் கொண்டு தன்னை நகர்ப்புற கலாச்சாரத்துக்கு தகவமைத்துக் கொள்ள தயாராகி விட்டது. எனவேதான் இங்கே பண்ணையார்களும், நாட்டாமைகளும், ஜமீன்களும் மவுசு இழந்துப் போனார்கள்.

ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் டெல்லி, மும்பை, கொல்கத்தா என்று வேலைரீதியாக தமிழ் பார்ப்பனர்கள் பறக்க, அவர்களை பின்தொடர ஆரம்பித்தார்கள் மற்ற தமிழர்கள். உலகமயமாக்கலின் காரணமாக பணித்திறமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோது அதே பார்ப்பனர்களின் வாரிசுகள் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு இடம்பெயர, நெல்லுக்கு பாயும் தண்ணீருக்கு பாய்ந்ததை போல பார்ப்பனரல்லாத மற்ற சாதியினரில் கல்வித்தகுதி பெற்ற என்ஜினியர்களும், சி.ஏ.க்களும், எம்.பி.ஏ.க்களுக்கும் அயல்நாடுகளில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சமூகம் கணிசமாக சம்பாதிக்க ஆரம்பித்தது. இன்று என்.ஆர்.ஐ. தமிழர்களை குறிவைத்து செயல்படக்கூடிய ஏராளமான வணிகங்களில் (என்.ஜி.ஓ.தான் ஆகப்பெரிய வணிகம்) சினிமாவுக்கே பிரதான இடம். ஓவர்சீஸில் காசு பார்க்கலாம் என்று எண்பதுகளின் இறுதியில் கமல் சொன்னபோதும், என்.ஆர்.ஐ.களின் முதலீட்டில் பெரிய படங்களை எடுக்க முடியும் என்றுகூறி ‘மருதநாயகம்’ முயற்சித்தபோதும், “இதெல்லாம் வேலைக்கு ஆவுறதில்ல....” என்று மஞ்சப்பையை கக்கத்தில் வைத்துக் கொண்டு கேலியாக சிரித்த சினிமாக்காரர்கள் இன்று ‘ஓவர்சீஸே சரணம்’ என்று காலில் விழுகிறார்கள். கமல் சொன்னது நம்மூர்காரர்களுக்கு புரியவில்லை. ஆனால் பாலிவுட்காரர்கள் விழித்துக்கொண்டு இருபது வருடங்களாக பணத்தை அறுவடை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓக்கே. லெட் அஸ் கமிங் டூ த கோர் பாயிண்ட்...

சிகப்பு கோலோச்சிய பூமியாக இருந்தாலும் ஆண்டான் – அடிமை ஜமீன் கலாச்சாரத்தில் இருந்து இன்றைய தேதி வரை முழுமையாக வெளிவர முடியாமல் அவதிப்படுகிறது தெலுங்குதேசம். நகர்ப்புற பிரதேசங்கள் சீமாந்திராவாகவும், சிறுநகரம் மற்றும் கிராமங்கள் பெரும்பாலும் அடங்கிய மாநிலமாக தெலுங்கானாவும் உருவாகிய பிறகு எல்லா வணிகமுமே அப்பகுதியில் எம்மாதிரியான யுக்திகளை செயல்படுத்தி தம்மை வளர்த்துக் கொள்வது என்கிற குழப்பத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவின் சாஃப்ட்வேர் அபிமானத்தால் அங்கே கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் வெயிட்டாக உருவாகியிருக்கும் என்.ஆர்.ஐ தெலுங்கு சமூகம், நாம் முன்பு எதிர்கொண்டு, இப்போது சமாளித்துக் கொண்டிருக்கும் கலாச்சாரரீதியான இரண்டுங்கெட்டான் குழப்பத்தில் நீடிக்கிறது.

இந்த பிரச்சினைகளை எல்லாம் மிக எளிமையாக முதன்முதலாக அங்கே கடந்திருப்பவர்கள் சினிமாக்காரர்கள்தான். உலகிலேயே வேறெந்த பிரதேசத்திலும் தெலுங்கர்கள் அளவுக்கு சினிமாவை கொண்டாடுபவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே.

பொங்கலுக்கு தமிழில் நான்கு படங்களை வெளியிட்டு அவற்றில் ஒன்று ஹிட் ஆகி, இன்னொன்று ஜஸ்ட் பாஸ் ஆகி, மற்ற இரண்டு படங்கள் அட்டர் ப்ளாப் ஆகியிருக்கின்றன. அதே நேரம் தெலுங்கிலும் மகரசங்கராந்திக்கு நான்கு படங்கள்தான் வெளியாகி இருக்கின்றன. நான்குமே லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. அவற்றில் ஒன்று சூப்பர்ஹிட். மற்றொன்று ப்ளாக்பஸ்டர் ஹிட். இவற்றில் மூன்று படங்கள் சென்னையில் வெளியாகியிருக்கின்றன. ஜூனியர் என்.டி.ஆர் படத்துக்கும், நாகார்ஜூனா படத்துக்கும் கூடிய கூட்டம் ரஜினி முருகனைவிட அதிகம். மூன்று படங்களுமே சென்னை கேசினோ திரையரங்கில் ஓடுகிறது. சர்வானந்த் நடித்த ‘எக்ஸ்பிரஸ் ராஜா’ மட்டும் நாளைதான் வெளியாகிறது.

இன்னமும் தமிழ் சினிமாவுக்கு கைவராத வெற்றி சூத்திரத்தை தெலுங்கில் கண்டறிந்து விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. படத்துக்கு பூஜை போட்ட அன்றே, இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வசூல் என்னவென்று கணித்து திட்டமிட்டு செலவுகளை வரையறை செய்து பக்காவாக துட்டு பண்ணுகிறார்கள். இந்த திட்டமிடலிலேயே படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், மார்க்கெட்டிங் எல்லாமே மிக துல்லியமாக அடையாளம் காணப்பட்டு விடுகிறது.
ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘நானாக்கு பிரேமத்தோ’ (அப்பாவுக்கு அன்புடன்), ஐரோப்பிய என்.ஆர்.ஐ குடும்பங்களின் தொழில்போட்டியை களமாக கொண்ட படம். உள்ளூரிலும் அந்த சரக்கை விற்கவேண்டுமே? எனவே உள்ளடக்கம் பக்கா லோக்கல். ஜூ.என்.டி.ஆரின் அப்பா ஒரு காலத்தில் பெரும் தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபதி. ஜெகபதி ராஜூவின் துரோகத்தால் சரிகிறார்.

மகன் வளர்ந்து, அப்பாவை ஏமாற்றியவனை அதலபாதாளத்துக்கு தள்ளுகிறான் என்கிற 70ஸ் கதைதான். போனஸாக வில்லனின் மகளை காதல் வலையில் வீழ்த்துகிறார் ஹீரோ. ‘தனி ஒருவன்’ பாணியில் கேட் vs மவுஸ் விளையாட்டு திரைக்கதையில் சுவாரஸ்யத்தின் உச்சியை எட்டுகிறது. இயக்குநர் சுகுமாரின் ட்ரீட்மெண்ட், இப்படத்தை தொழில்நுட்ப அடிப்படையில் சர்வதேச தரத்துக்கு கொண்டுச் சென்றிருக்கிறது. தரை டிக்கெட் ஹாலிவுட் கமர்ஷியல் மாதிரியான அதிவேக திரைக்கதை, அதிரடி ஸ்டண்ட், தெலுங்குக்கே உரித்தான கலர் காஸ்ட்யூம் டூயட்டுகள், குத்துப்பாட்டு என்று மிக்ஸிங் பக்காவாக இருப்பதால் உள்ளூரில் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் அமோக வசூல்.

நாகார்ஜூனாவின் ‘சொக்கடே சின்னி நாயனா’, இதுவரையிலான ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாக்களின் ஸ்பெசிமென் சாம்பிள். நாகார்ஜூனா என்கிற ஹீரோவுக்கு ஆன்ஸ்க்ரீனில் இருக்கும் ஆக்‌ஷன் + ரொமான்ஸ் இமேஜையும், ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கும் ஆஃப் ஸ்க்ரீன் ப்ளேபாய் இமேஜையும் (தென்னிந்தியாவின் ஹாட்டஸ்ட் ஸ்டார் அமலாவை கடும்போட்டியில் தட்டிக் கொண்டு போனவர் ஆயிற்றே?) அப்படியே புத்திசாலித்தனமாக காசாக்கியிருக்கிறார் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணா.

படத்தின் கதை ரொம்பவும் சிம்பிள்தான்.
அமெரிக்காவிலிருந்து ராமும், சீதாவும் சொந்த ஊருக்கு வருகிறார்கள். வந்த காரணம், விவாகரத்து வாங்குவது. மாமியார் ரம்யா கிருஷ்ணன் மருமகளிடம் காரணம் கேட்கிறார். மனைவியை கவனிக்காமல் எப்போதும் மருத்துவத்தொழிலையே கட்டி அழுதுக் கொண்டிருக்கிறான் ராம். கல்யாணமாகி மூன்று ஆண்டுகளில் மூணே மூன்று முறை மட்டுமே தம்பதிகளுக்குள் ‘அது’ நடந்திருக்கிறது. ஒரு நாளைக்கே மூன்று முறை ‘அது’ செய்யக்கூடிய தன் கணவனுக்கு இப்படி ஒரு பிள்ளையா என்று ரம்யாகிருஷ்ணனுக்கு கொதிப்பு ஏற்படுகிறது. இறந்துவிட்ட தன் கணவன் பங்காரம் (அதுவும் நாகார்ஜூனாதான்) போட்டோவுக்கு முன்பாக நின்று, “யோவ் பங்காரம், என்னை இப்படி தனியா தவிக்கவிட்டுட்டு போயிட்டே, உன் புள்ளைய கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினா, இப்படி வாழ்க்கையை கெடுத்துக்கிட்டு வந்து நிக்கிறான்” என்று புலம்புகிறார்.

எமலோகத்தில் எமகன்னிகளோடு ஜல்ஸா புரிந்துக் கொண்டிருக்கும் பங்காரம், மகனின் பிரச்சினையை (!) சரிசெய்ய பூலோகத்துக்கு விரைகிறார். அவரை மனைவி ரம்யாகிருஷ்ணன் மட்டும்தான் பார்க்க முடியும். பேசமுடியும். வந்தது வந்துவிட்டோம், ஒருமுறை மனைவியோடு ஜாலியாக இருந்துவிடலாம் என்று முயற்சிக்கும் செத்துப்போன பங்காரத்துக்கு அதற்கெல்லாம் அலவ்ட் இல்லை என்கிற எமலோக விதியை எமன் சுட்டிக் காட்டுகிறார்.
எப்படியாவது மகன் ராமை முறுக்கேற்றி மகளோடு சேரவைக்க, அப்பா பங்காரம் சிட்டுக்குருவித்தனமாக சிந்தித்து சில ஐடியாக்களை செயல்படுத்துகிறார். இதே காலக்கட்டத்தில்தான் அவருக்கு தெரியவருகிறது, தான் இறந்தது விபத்தால் அல்ல சதியால் என்பது. மகனை மருமகளோடு நான்காவது முறையாக வெற்றிகரமாக சேரவைக்கிறார். அவர்களுக்கு இடையேயான பிரச்சினைகளை களைந்து ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பையும் காதலையும் புரியவைக்கிறார். தன்னை வீழ்த்திய வில்லன்களையும் மகன் மூலமே பழிவாங்குகிறார்.

அவ்வளவுதான் கதை. இதை தமிழில் எடுத்தால் பெரியார் பிறந்த பகுத்தறிவு மண்ணில் எடுபடாது. ஆனால் புராண மயக்கத்தில் கிறுகிறுத்துப் போயிருக்கும் ஆந்திராவுக்கு அல்வா மாதிரி சப்ஜெக்ட். எமனை காட்டி எத்தனையோ முறை கல்லா கட்டியும், ஒவ்வொரு முறையும் முந்தைய வசூல்சாதனையை முறியடித்துக் கொண்டே போகிறார்கள்.

சக்கைப்போடு போடும் மேற்கண்ட இரண்டு படங்களிலுமே குடும்பம், குற்றம், செக்ஸ் ஆகியவைதான் கச்சா. எதை எதை எந்தெந்த அளவுக்கு கலக்க வேண்டும் என்பதை படத்தின் பட்ஜெட், ஹீரோ முதலான விஷயங்கள் தீர்மானித்திருக்கின்றன. ஆனால், சொல்லி அடித்திருக்கும் சிக்ஸர்கள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இதை போல நமக்கே நமக்கான ஃபார்முலாவை நாம் எப்போதுதான் கண்டறியப் போகிறோம்?

நாம் சமூகம் குறித்த புரிதலில் கொஞ்சம் தெளிவாகி விட்டோம். அவர்கள் சினிமா எடுப்பதில் பயங்கர தெளிவாக இருக்கிறார்கள். அப்படியே உல்டா.

அதிருக்கட்டும். பாலகிருஷ்ணா நடித்த ‘டிக்டேட்டர்?’
இரண்டரை மணி நேரம் பாட்டு, ஃபைட்டு, பஞ்ச் டயலாக், டேன்ஸ் என்று பக்கா என்டெர்டெயின்மெண்ட். பாலைய்யாவை பார்த்து சிரிப்பு, அநீதியை உணர்ந்து ஆக்ரோஷம், ஹீரோயின் அஞ்சலியை நினைத்து காமம் உள்ளிட்ட நவரச உணர்வுகளையும் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஏற்படுத்துகிறார்கள். தியேட்டரை விட்டு வெளியே வந்ததுமே மூளை பிளாங்க் ஆகி ஒருமாதிரி போதிமரத்து ஞானம் (ஃபுல் அடித்த போதை என்றும் சொல்லலாம்) கிடைக்கிறது. படம் சம்பந்தப்பட்ட அத்தனை விவரங்களுமே மறந்துவிடுகின்றன. அடுத்த காட்சிக்கு க்யூவில் நிற்பவன் கேட்கிறான். “மூவி பாக உந்தியா அண்ணா?”. சட்டென்று பாலையா ஸ்டைலில் தொடை தட்டி, கண்கள் சிவந்து, விருட்டென்று ஒரு கையை உயர்த்தி அனிச்சையாக அவனை எச்சரிக்கும் தொனியில் உரத்த குரலில் சொல்கிறோம் “சூப்பருக்கா உந்திரா....”

விசாரணையின் மறுபக்கம்!

$
0
0
‘விசாரணை’ திரைப்படம் வெளியான அன்று ஒரு தொலைக்காட்சியில் இயக்குநர் வெற்றிமாறனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

“இந்தப் படம் போலிஸ்காரர்களை ரொம்ப மோசமாக சித்தரிக்கிறதே? ‘விசாரணை’யை பார்ப்பவர்கள் போலிஸ் என்றாலே இப்படிதான் என்று நினைத்துவிட மாட்டார்களா?”

வெற்றிமாறன் இதற்கு புத்திசாலித்தனமான பதில் ஒன்றினை சொன்னார்.

“போலிஸ்னாலே இப்படிதான்னு நான் சொல்லலை. பூ அல்லது தலைன்னு எந்த விஷயத்துக்குமே ரெண்டு பக்கம் இருக்கும். நான் ஒரு பக்கத்தை மட்டும்தான் இந்தப் படத்துலே காட்டியிருக்கேன். இன்னொரு பக்கத்தை வேற யாராவது காட்டுவாங்க”
தெரிந்தேதான் இந்த பதிலை சொன்னாரா என்று தெரியவில்லை. ‘விசாரணை’ வெளியான அதே நாளில்தான் மலையாளத்தில் ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’ வெளியானது. போலிஸ் விசாரணையால் பாதிக்கப்படுபவர்களின் பார்வையில் நம் ‘விசாரணை’ விரிந்தது என்றால், மலையாளத்தில் போலிஸ் பார்வையில் விரிந்திருக்கிறது. இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பேச ஏராளமான விஷயங்கள் இருக்கிறது.

நம்மூரில் வெற்றிமாறன் எப்படியோ, அதுபோலதான் கேரளாவில் இயக்குநர் ஆப்ரிட் ஷைன். அவரது பெயரை சொன்னால் இங்கே யாருக்கும் உடனே தெரியாது. ஆனால், அவர் எடுத்த படம் ரொம்ப பிரபலம். ‘1983’. ‘பொல்லாதவன்’ நமக்கு எப்படி ஒரு ப்ரெஷ்ஷான ஜானரை கொடுத்ததோ, அதுபோலவே ‘1983’ மலையாளத்தில் நிகழ்ந்த புதிய முயற்சி. அதே இயக்குநரின் இரண்டாவது படம்தான் ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’. முதல்பட ஹீரோவையே இரண்டாம் படத்துக்கும் புத்திசாலித்தனமாக வளைத்துப் போட்டுவிட்டார். ‘1983’ பெற்ற அபாரமான வணிக வெற்றி, நிவீன்பாலியை படம் தயாரிக்கவும் உந்தித் தள்ளியது. ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’வின் ஹீரோவும், தயாரிப்பாளரும் அவர்தான்.

‘விசாரணையை’ பற்றி இங்கே ஏகப்பட்ட விசாரணை நடந்துவிட்டது. எனவே, நேராக ‘ஆக்‌ஷன் ஹீரோ’வுக்கு போய்விடலாம்.

பி.எச்.டி முடித்து ஏதோ காலேஜில் லெக்சரராக வேலை பார்த்துக் கொண்டிருந்த பிஜூவுக்கு போலிஸ் வேலை மீது காதல். எஸ்.ஐ. எக்ஸாம் எழுதி தேர்வாகி, எர்ணாகுளம் டவுன் ஸ்டேஷனுக்கு பணிபுரிய வருகிறார்.

பிஜூவின் ஒரு மாதகால போலிஸ் ஸ்டேஷன் வாழ்க்கைதான் ஒட்டுமொத்த படமுமே. இந்தப் படத்தில் கதை கிடையாது. வில்லன் கிடையாது. காட்சிகள் மட்டும்தான். அந்த காட்சிகளை ஒன்றுக்கு ஒன்று தொடர்பு படுத்தும் சுவாரஸ்யமான திரைக்கதை, வசனங்கள் மூலமாக இல்லாத கதையை இருப்பதாக பார்வையாளனை நம்பவைக்கிறார் இயக்குநர்.

போலிஸ் படம் என்றாலே ஹீரோ தீர்க்கவேண்டிய பிரதான பிரச்சினை ஒன்று இருக்கும். அந்த பிரச்சினையை தீர்க்கவிடாமல் தடுக்கும் வில்லனை அழித்து ஒழித்து சுபம் என்பதுதான் உலகம் முழுக்கவே இருக்கும் டெம்ப்ளேட். மசாலாத்தனமாக ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’ என்று டைட்டில் வைத்துவிட்டு, ஆப்ரிட் ஷைன் நமக்கு காட்டியிருப்பது மாற்றுப்படம். ஒரு சாதாரண எஸ்.ஐ.யின் கேரியரில் அவன் சந்திக்கக்கூடிய வழக்குகளை எப்படி சமாளிக்கிறான் என்பதுதான் படத்தின் ஒருவரி. தன்னுடைய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை ஒருவரும் மீறக்கூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறான்.

குடித்துவிட்டு பொது இடத்தில் எல்லோருக்கும் ‘தரிசனம்’ காட்டும் குடிகாரனில் தொடங்கி, மாநிலமே வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் கிரிமினல் வரை பிஜூ டீல் செய்கிறான். அவன் விசாரணை செய்யும் ஒவ்வொரு வழக்குமே ஒரு சிறுகதை. ‘சடக்’கென்று தொடங்கி ‘படக்’கென்று முடிகிறது. சில கதைகளின் உருக்கம் நெஞ்சை தொடுகிறது. லாக்கப்பில் ஒருபுறம் கிரிமினல்களை போட்டு மிதித்துக்கொண்டே போனில் மறுபுறம் தனக்கு நிச்சயமான பெண்ணோடு காதல் கடலை போடுகிறான் பிஜூ. படத்தில் அட்மாஸ்பியருக்கு வரும் பாத்திரங்களை கூட அவ்வளவு சிறப்பாக எப்படி நடிக்க வைக்க முடிந்தது இயக்குநருக்கு என்கிற ஆச்சரியம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

‘ஆக்‌ஷன் ஹீரோ’ என்கிற அதிரடியாக டைட்டில் வைத்து இருந்தாலும், ‘சிங்கம்’ ரேஞ்சுக்கு ரவுண்டுகட்டி விளையாட அவ்வளவு வாய்ப்புகள் இருந்தும், வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் இல்லை. க்ளைமேக்ஸில் இதற்கு சமாதானம் சொல்லுகிறார் இயக்குநர். “பிஜூ ஒன்றும் சூப்பர் ஹ்யூமன் இல்லை. நம்மை மாதிரி வெறும் மனுஷன்தான்”

‘நேரம்’, ‘தட்டத்தின் மறையத்து’, ‘1983’, ‘ஓம் சாந்தி ஓசண்ணா’, ‘பெங்களூர் டேஸ்’, ‘ஒரு வடக்கன் செல்ஃபீ’, ‘பிரேமம்’ என்று சகட்டுமேனிக்கு ஹிட்டுகள் கொடுத்துவரும் நிவின்பாலி ஒரு மோகன் என்றுதான் இத்தனை நாட்களும் நினைத்திருந்தேன். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் இன்னொரு கமல் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்.

வெள்ளத்தை தடுத்த வெனிஸ் நகரமே!

$
0
0
தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுகவினர் 26,000த்துக்கும் மேற்பட்ட மனுக்களை அளித்திருக்கின்றனர். இதில் கிட்டத்தட்ட 8,000 மனுக்கள் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரும் விருப்பமனுக்கள்.

உலக வரலாற்றிலேயே எந்த கட்சியோடும் ஒப்பிட முடியாத வித்தியாசமான கட்சியான அதிமுகவில் விருப்பமனு போட்டவர்களுக்கு, ‘நேர்காணல்’ என்றொரு சம்பிரதாயம் நடக்கும். ஆனால், ஏற்கனவே வேட்பாளர்களை ‘அம்மா’ தேர்வு செய்துவிட்டிருப்பார் (அந்தப் பட்டியலைதான் கையில் எடுத்துக்கொண்டு ஊர் ஊராகப் போய் சசிகலா சாமி கும்பிட்டுவிட்டு வருவதாக சொல்கிறார்கள்). இருந்தாலும் ஒப்புக்குச் சப்பாணியாக, ஊருக்கு ஒப்பேற்ற அதிமுக தேர்தல் குழுவினர் நடத்தும் நேர்காணல் எப்படியிருக்கும் என்றொரு ஜாலி கற்பனை. ஓவர் டூ லாயிட்ஸ் ரோடு அதிமுக தலைமைக் கழகம்...
நேர்காணலுக்கு வந்தவர் :புரட்சித்தலைவி வாழ்க. பொன்மனச்செல்வி வாழ்க. தங்கத்தாரகை வாழ்க. ஆதிபராசக்தி வாழ்க. அகிலாண்டேஸ்வரி வாழ்க. அகிலம் காக்கும் அன்னிபெசண்ட் அம்மையார் வாழ்க. அன்னை தெரசா வாழ்க. அம்மா வாழ்க.


ஓ.பன்னீர்செல்வம் (இடைமறித்து) :கேட்குற எனக்கே மூச்சு வாங்குது. சொல்லுற நீங்க பூஸ்ட் அடிச்சாமாதிரி தெம்பா இருக்கீங்க. கண்டினியூ யுவர் கபடி கபடி.

நே.கா. வந்தவர் :கழகத்தின் நிரந்தப் பொதுச்செயலாளர் வாழ்க. தமிழகத்தின் நிரந்தர முதல்வர் வாழ்க. நாளைய பாரத பிரதமர் வாழ்க. நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் வாழ்க. உலகத் தலைவி வாழ்க. அண்டசராசரங்களை ஆளும் தைரியலட்சுமி வாழ்க.

நத்தம் விஸ்வநாதன் :போதுங்க... போதுங்க... பொதுஅறிவு உங்களுக்கு பிரமாதமா இருக்கு. ஆனா சட்டசபைக்கு போறதுக்கு வேற சில தகுதிகள் வேணுமே?

நே.கா. வந்தவர் :எங்க ஊர்லே இஞ்ச் இடுக்கு பாக்கியில்லாமே எல்லா இடத்துலேயும் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கேனுங்க. ரோட்டுலே நடந்தாகூட அம்மா ஸ்டிக்கரை மிதிச்சமாதிரி ஆயிடுமோன்னு பயந்துக்கிட்டு மக்களெல்லாம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறாங்க.

தப்பித்தவறி மிதிச்சிட்டா காலை எடுத்துடுவோமில்லே? அவ்வளவு ஏனுங்க. ஜனங்க முதுகுலே கூட ஏப்ரல் ஃபூல் முத்திரை அடிக்கிற மாதிரி அம்மா படத்தை பெருசா ஒட்டிட்டேனுங்க. பிய்க்கவே முடியாதபடி அமெரிக்கன் டெக்னாலஜி பசை போட்டு ஒட்டிட்டேன். என் முதுகை கூட பாருங்க.

(சட்டையை கழற்றி திரும்புகிறார். 20 இன்ச் விட்டத்துக்கு ரவுண்டாக ஒட்டப்பட்டிருக்கும் அம்மா ஸ்டிக்கர் பளபளப்பாக பர்மணெண்ட் பேஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது)

ஓ.பன்னீர்செல்வம் :வெரி இண்டரெஸ்டிங். சட்டைய மாட்டிக்குங்க. அப்புறம்?

நே.கா. வந்தவர் :செம்பரம்பாக்கத்துலே வெள்ளம் வந்தப்போ கூட எங்க ஊருக்குள்ளே பொட்டுத்தண்ணி வராம இருந்ததுக்கு காரணம், ஊரை சுத்தி பாதுகாப்பா இடைவெளியே இல்லாம சீனப்பெருஞ்சுவர் கணக்கா நான் வெச்ச அம்மா பேனருங்க தானுங்க. வெள்ளத்தை தடுத்ததாலே மக்களெல்லாம் அம்மாவை மனசார பாராட்டினாங்க. ‘நானும் வெள்ளத்தை தடுத்த வெனிஸ் நகரமே!’ன்னு அதுக்கும் ஒரு பேனர் வெச்சேன்.

வளர்மதி (உணர்ச்சிவசப்பட்டு) : சுனாமியே எங்க அம்மா கட்டவுட்டை பார்த்துட்டு சுருட்டிக்கிட்டு போயிடிச்சி. செம்பரம்பாக்கம் வெள்ளம் எங்கம்மாவுக்கு எம்மாத்திரம்?

(சட்டென்று ஒரு கற்பூரத்தை கையில் ஏற்றி அப்படியே வாயில் போட்டு பபிள்கம் மாதிரி மெல்ல ஆரம்பிக்கிறார் வளர்மதி. நேர்காணல் எடுக்கும் அத்தனை அதிமுக தலைவர்களும் பேச்சு மூச்சின்றி பயபக்தியோடு எழுந்து கன்னத்தில் போட்டுக் கொண்டு அமர்கிறார்கள்)

மதுசூதனன் :தியரி டெஸ்டுலே நீ டபுள் ஓக்கேப்பா. பிராக்டிக்கலா எப்படின்னு தெரியணுமே?

(நேர்காணலுக்கு வந்தவர் சட்டென்று எழுந்து நிற்கிறார். நாற்பத்தைந்து டிகிரி முதுகு வளைத்து, அந்நிலையிலேயே கையை மேலே தூக்கி, இராணுவ வேகத்தில் கும்புடு போட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் செய்கிறார். சட்டென்று யாரும் எதிர்பாரா வண்ணம் எகிப்து பிரமிடுகளில் பதம் செய்யப்பட்ட மம்மி கணக்காக உடம்பை விரைப்பாக்கி தூண் போல நிற்கிறார். இரண்டே நொடிகளில் அனாயசமாக அப்படியே தொம்மென்று தரையில் விழுந்து நமஸ்கரிக்கிறார். ஹெலிகாஃப்டர் பறப்பதை போல மிமிக்ரி செய்துக்கொண்டே, கோபுரதரிசனம் பார்க்கும் பக்தனை போல வானத்தை பார்த்து கச்சிதமான கும்பிடு போடுகிறார். சட்டென்று நாற்காலியில் அமர்ந்து தனக்கு முன்பாக இருக்கும் மேஜையை ‘கிங்காங்’ பாணியில் படபடவென்று தட்டுகிறார். அறைக்குள் சடக்கென்று சட்டசபை அட்மாஸ்பியர் தோன்றுகிறது. தேர்வுக்குழுவினர் அத்தனை பேரும் இந்த வித்தைகளை கண்டு பிரமை பிடித்த நிலையில் படபடவென்று கை தட்டுகிறார்கள்)

கோகுல இந்திரா :தேர்தல் பிரச்சாரத்துலே என்ன பேசுவீங்க?

நே.கா. வந்தவர் :இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த புரட்சித்தலைவி அம்மாவுக்கு ஓட்டு போடுவீங்களா? இல்லேன்னா இரண்டாம் உலகப் போர் நடத்தி மக்களை கொன்ற ஸ்டாலினுக்கு ஓட்டு போடுவீங்களான்னு ஜனங்களை கேட்பேன்.

கோகுல இந்திரா :இரண்டாம் உலகப்போரா? அதை நடத்தினது ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஆச்சே?

வளர்மதி :இருந்துட்டு போவட்டுமே. அவர் பேரும் ஸ்டாலின்தானே? அதுக்கும் கருணாநிதிதான் பொறுப்பேத்துக்கணும்.

நத்தம் விஸ்வநாதன் :நீங்க செஞ்ச மக்கள் பணிகளில் வேறெதாவது குறிப்பா சொல்ல முடியுமா?

நே.கா. வந்தவர் :அம்மா பேனரை கிழிப்பேன்னு டிராஃபிக் முனுசாமின்னு ஒரு கிழவரு வந்தாரு. அவரை ஓட ஓட விரட்டி ரத்தம் தெறிக்க அடிச்சி துரத்துனேன். அதே பேனரை போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்குன்னு எடுத்துட்ட இன்ஸ்பெக்டரை போனில் கூப்பிட்டு கழுவி கழுவி ஊத்தினேன். அம்மாவை பொய்வழக்குலே பெங்களூர் ஜெயில்லே கருணாநிதி வெச்சப்போ அதை கண்டிச்சி நீளமா தாடி வளர்த்தேன். அம்மா ரிலீஸ் ஆனப்போ மொட்டை அடிச்சி காது குத்திக்கிட்டேன். கூணாளம்மன் கோயிலுக்கு கூழ் ஊத்தினேன். தீச்சட்டி ஏந்தினேன். தீ மிதிச்சேன். மண்சோறு சாப்பிட்டேன். காவடி தூக்கினேன்...

ஓ. பன்னீர் செல்வம் :ஆஹா... ஆஹா... பக்தா உன் பக்தியை மெச்சினோம். நீ எம்.எல்.ஏ பதவிக்கு மட்டுமில்லே. அமைச்சர் பதவிக்கே லாயக்கான ஆளுதான். அம்மா கிட்டே அப்படியே சொல்லிடறோம். அம்மா நல்ல முடிவா எடுத்து கடுதாசி போடுவாங்க. காத்திருங்க.

(புரட்சித்தலைவி வாழ்க. பொன்மனச்செல்வி வாழ்க. தங்கத்தாரகை வாழ்க. ஆதிபராசக்தி வாழ்க என்று மீண்டும் கோஷமிட்டுக் கொண்டே கிளம்புகிறார் நேர்காணலுக்கு வந்தவர்)

(நன்றி : தினகரன் தேர்தல் களம்)

நூத்தி பத்து... அம்மா.. அம்மா...!

$
0
0
அதிமுகவினரின் அம்மாவுக்கு பிறந்தநாள் இன்று. காவடி தூக்குவது, பால்குடம் சுமப்பது, தீச்சட்டி ஏந்துவது, வேப்பிலை ஆடை உடுத்துவது, நாக்கில் வேல் குத்திக் கொள்வது, நெருப்பு மிதிப்பது, அங்கபிரதட்சணம் செய்வது என்று ஆயிரத்தெட்டு பகுத்தறிவு வழிமுறைகளில் இந்நன்னாள் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இருந்தாலும் தமிழனுக்கு கொண்டாட்டம் என்றால் தமிழ் கலாசார செயல்பாடாக பாரம்பரியமாக நடைபெறுவது பட்டிமன்றம்தான். அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பயா டிவி’யில் நடைபெறும் கற்பனை காமெடி பட்டிமன்றம் வாசகர்களுக்காக லைவ்வாக...
பட்டிமன்றத் தலைப்பு, ‘டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியின் சாதனையாக விஞ்சி நிற்பது தமிழகமெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களா? அல்லது உலகமே வியந்து போற்றும் நூத்திப்பத்து அறிவிப்புகளா?’

நடுவராக சபாநாயகர் தனபால். ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன், சரத்குமார் ஆகியோர் வாதிடுகிறார்கள்.

தனபால் :அம்மா என்றாலே சாதனைதான். அம்மா என்றாலும் மூன்றெழுத்து. சாதனை என்றாலும் மூன்றெழுத்து (பலத்த கைத்தட்டல்). இருந்தாலும் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் ஐ.நா.சபையே வியக்கும் வண்ணம் அவரது சாதனைகள் ஸ்டிக்கராக உலகம் முழுக்க ஒட்டப்பட்டிருக்கின்றன. அதிக ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்சி என்று கின்னஸ் புத்தகமே பாராட்டுகிறது. அதுபோல அமெரிக்க அதிபர் மாளிகையிலே கூட அம்மாவின் நூத்திப் பத்து அறிவிப்புகளை பிட்டு அடித்து அதே மாதிரியான அறிவிப்புகளை ஒபாமா வெளியிட ஆலோசனைகள் நடைபெறுகின்றன. இப்படி பிரபஞ்சமே பாராட்டும் புரட்சித்தலைவி அவர்களின் முத்தாய்ப்பான இந்த இரண்டு சாதனைகளில் எது பெரிய சாதனை என்று வாதிட நம் பேச்சாளர்கள் துப்பாக்கியிலிருந்து பாயும் தோட்டா கணக்காக தயாராக இருக்கிறார்கள்.

முட்டையும் முட்டையும் மோதிக்கொண்டால் ஆஃப் பாயில். மொட்டையும் மொட்டையும் மோதிக்கொண்டால்? இவர்கள் முட்டையா அல்லது திருப்பதி மொட்டையா என்பது கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்.

(பலமான கைத்தட்டல்)

சரத்குமார் பேசவருகிறார். பின்னணியில் ‘நாட்டாமை பாதம் பட்டா...’ பாடல் ஒலிக்கிறது.

சரத்குமார் :மாண்புமிகு நடுவர் அவர்களே. நான் ஸ்டிக்கர் அல்ல. கருவேப்பிலை. எனவே நூத்தி பத்துக்காக பேசுகிறேன். அகில இந்திய சமத்துவக் கட்சி, அதிமுகவுக்காக அதிமுகவினரை விட அதிகம் குனிந்த கட்சி. அப்படியிருக்க ஆட்சியின் முடிவில் எங்களுக்கு தரப்பட்டிருக்கும் பரிசு 110 அல்ல 111 (மூன்று விரல்களை நாமம் போல போட்டு காட்டுகிறார்) என்பதை நடுவருக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ஆகவே 110 அறிவிப்பில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு ரெண்டு சீட்டு கொடுக்கப்படுமேயானால்...”

தனபால் :வரம்பு மீறி பேசுகிறீர்கள். உங்களுக்கு பேசக் கொடுத்த நேரம் முடிந்துவிட்டது. உட்காருங்கள்.

வளர்மதி :சரத்குமார் எங்களைவிட புரட்சித்தலைவி அம்மாவுக்கு விசுவாசமாக இருந்ததாக குறிப்பிடுவது நித்தமும் அம்மாவின் காலில் விழுந்து சேவித்து எழும் எங்களையெல்லாம் கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறது.

(ஆவேசமாக)

செவுரு இருக்கிறது. ஸ்டிக்கர் ஒட்டுகிறது. உனக்கேன் ஸ்பெஷலாக அறிவிக்க வேண்டும் நூத்தி பத்து? எங்களை போல நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டாயா? பசை தடவினாயா? பஞ்சர் ஒட்டினாயா? எவரோ கொடுத்த வெள்ள நிவாரணப் பொருட்களுக்கு எல்லாம் எம் ரத்தத்தின் ரத்தங்கள் ஸ்டிக்கர் ஒட்டி உரிமை கொண்டாடியபோது கூடமாட உட்கார்ந்து ஒட்டாமல் எங்கே போயிருந்தாய்? டெபாசிட் இல்லாதவரே... நீ என்ன எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளரா? வார்டு கவுன்சிலரா? நீ ஏன் கேட்கிறாய் 110 அறிவிப்பு? ஓட்டு இல்லாத ஓடப்பரே, அம்மாவின் காலில் விழுந்து எழுந்து மக்களிடம் ஓட்டு கேட்கும் அதிமுக மறவர் கூட்டம் உன் அசமகவினரின் அஞ்சாறு ஓட்டுகளையும் எங்கள் ஓட்டுகளாக தேர்தலில் குத்திவிடும். ஜாக்கிரதை.

(விசில் சப்தம் விண்ணைப் பிளக்கிறது. கரவொலி காதை கிழிக்கிறது. நடுவர் தனபாலே தனக்கு முன்னிருக்கும் பெஞ்சை தட்டி ஒலி எழுப்புகிறார்)

சரத்குமார் :நான் என்ன சொல்ல வந்தேன் என்றால்..?

தனபால் :நீங்கள் என்ன சொல்லுவது? அம்மா சொல்லுவார் உங்களைப் பற்றி. வரம்புமீறி பேசுகிறீர்கள். நீங்கள் பேசியதை நான் நீக்குகிறேன். ஒழுங்காக பட்டிமன்ற மாண்பை கடைப்பிடிக்கும் வகையில் வெளிநடப்பு செய்யுங்கள். இல்லையேல் காவலர்களை வைத்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியே எறிந்து தமிழர்களின் மானத்தை காப்பேன்.

நத்தம் விஸ்வநாதன் :சரத்குமார் வீட்டின் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு, மிச்சமாகும் மின்சாரம் ஏழைபாழைகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுமென புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கினங்க அறிவிக்கிறேன். இதனால் ஏழு கோடி ஏழைகள் பயன்பெறுவார்கள். அம்மா வாழ்க. புரட்சித்தலைவி வாழ்வாங்கு வாழ்க. தங்கத்தலைவி நீடுழி வாழ்க.

ஓ.பன்னீர் செல்வம் :சரத்குமாரை அழைத்ததற்கு பதிலாக மாஃபா பாண்டியராஜனையோ, செ.கு.தமிழரசனையோ பேச அழைத்திருக்கலாம். தேர்தலில் சீட்டு கொடுக்காவிட்டாலும் விசுவாசத்தில் நம்மையும் மிஞ்சி, நம்மைவிட மிகசிறப்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழ்பாடும் தகுதி பெற்றவர்கள் அவர்கள்தான்.

நத்தம் விஸ்வநாதன் :இதை நான் வழிமொழிகிறேன். அம்மா வாழ்க. ஸ்டிக்கர் வாழ்க. பேனர் வாழ்க. வெள்ள நிவாரணம் வாழ்க. மின்தடை வாழ்க.

தனபால் : பட்டிமன்றம் மிக அருமையாக நடக்கிறது. மக்களுக்கு பயன் தரக்கூடிய இதுபோன்ற விவாதங்கள் அம்மாவை பற்றி பேசும்போதுதான் அர்த்தம் பெறுகிறது. ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே’ என்று கவிஞன் சும்மாவா பாடினான்?

வளர்மதி : ஆலுமா டோலுமா ஸ்டிக்கர் ஒட்டுனா போதும்மா

ஓ.பன்னீர்செல்வம் :டேரா டேரா டேரா பைட்டா ஸ்டிக்கர் இருக்கு. பிட்டு பிட்டா ஒட்ட ஒட்ட ஏறும் கிறுக்கு. நூத்தி பத்து. அம்மா... அம்மா.. நூத்தி பத்து. அம்மா.. அம்மா.. லெட் அஸ் கெட் எ நூத்தி பத்து.. அம்மா... அம்மா.... ( ‘செல்ஃபீ புள்ள’ ராகத்தில் டேபிளை தட்டியபடியே பாடுகிறார்)

தனபால் :அடடா.. அடடா.. சும்மா அள்ளுதே. தீர்ப்பு சொல்ல வேண்டிய நேரம் வந்துடிச்சி..

(திடீரென்று எங்கிருந்தோ பாய்ந்து வருகிறார் நாஞ்சில் சம்பத்)

நாஞ்சில் : அப்படியெல்லாம் சட்டுபுட்டுன்னு தீர்ப்பு கீர்ப்பு சொல்லிடக்கூடாது. அம்மா வரட்டும். காத்திருப்போம்.

(செம்பரம்பாக்கம் வெள்ளம் வந்தபோது, அம்மா வரட்டும் என்று நாடே காத்திருந்ததை போல பட்டிமன்ற அவை மொத்தமும் அப்படியே காத்திருக்கிறது)

நன்றி : தினகரன் தேர்தல் களம்

என்னப்பா இப்படி பின்னுறீங்களேப்பா...

$
0
0
வெகுஜன மனநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் திமுகவுக்கு நிகர் திமுகதான்.

1950களின் மத்தியில் அக்கட்சி தேர்தல் பாதைக்கு திரும்பியபோதே, மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியிருந்த சினிமாவை நன்கு பயன்படுத்திக் கொண்டது. அக்கட்சியின் நிறுவனர் அண்ணாவில் தொடங்கி, இளம் தலைவர்களாக உருவெடுத்துக் கொண்டிருந்த கருணாநிதி, கண்ணதாசன் போன்றவர்கள் படங்களின் வசனங்களிலும், பாடல்களிலும் மறைமுகமாக திமுகவின் கருத்துகளை மக்களிடையே பிரபலப்படுத்தினர்.

அக்கட்சி சார்பு நடிகர்களாக இருந்த எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர் போன்றவர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் திமுக அடையாளங்களை காட்ட தவறியதில்லை.

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எழுத்தறிவு பரவலாக கிடைக்கத் தொடங்கிய காலத்தில் ஏராளமான பத்திரிகைகள் நடத்தியும், பிரசுரங்கள் வெளியிட்டும் தங்கள் கொள்கைகளை பிரசாரம் செய்தார்கள். பிற்பாடு தொலைக்காட்சிக்கு மக்கள் மத்தியில் மவுசு ஏற்பட்டபோதும் அதையும் தனக்கு சாதகமான ஊடகமாக மாற்றிக்கொள்ளவும் திமுக தவறவில்லை.

இதுபோன்ற மக்கள் தொடர்பு பணிகள் ஏற்படுத்திய தாக்கத்தை தேர்தல் நேரத்தில் விளம்பரங்கள் மூலமாக தங்களுக்கு ஆதரவான அலையாக மாற்றுவது திமுக பாணி.

அரசியல் மேடைகளில் நல்ல தமிழை கொண்டு வந்த சாதனைக்கு சொந்தக்காரர்களான திமுகவினர், தேர்தல் விளம்பரங்களிலும் ‘நச்’சென்று நடுமண்டைக்கு ஏறும் விதமாகவும் வண்ணமயமான வாசகங்களை உருவாக்குவதில் வல்லவர்கள்.

‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்பதில் தொடங்கி, ‘தொடரட்டும் இந்த பொற்காலம்’ வரையிலுமான அவர்களது விளம்பரத் தொடர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பிரபலம்.

‘நாடு நலம்பெற.. நல்லாட்சி மலர..’ என்கிற ஒருவரி வாசகமே 89ல் திமுகவுக்கு பெருவாரியான வரவேற்பை மக்களிடையே பெற்றுத் தந்து, அக்கட்சியின் பதிமூன்று ஆண்டுகால வனவாசத்தை முடிவுக்கு கொண்டுவந்தது என்பது இங்கே நினைவுகூறத்தக்கது.

‘ஊழல் பெருச்சாளிகளுக்கா உங்கள் ஓட்டு?’ என்கிற 96 தேர்தல் வாசகம், ஜெயலலிதாவை அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே மண்ணை கவ்வ வைத்தது. ‘சசிகலாபுரமா சமத்துவபுரமா?’ என்றெல்லாம் திமுக விளம்பரங்கள் மக்களை நோக்கி கேட்ட கேள்வி போயஸ் தோட்டத்தை நடுநடுங்க வைத்தது.

பொதுவாக இதுபோன்ற விளம்பரங்களில் திமுக இரண்டு வழிமுறைகளையே பின்பற்றுகிறது.

அக்கட்சி ஆட்சியிலிருந்து சந்திக்கும் தேர்தல்களின் போது தன்னுடைய சாதனைகளை முன்வைத்து விளம்பரங்கள் செய்யும்.

எதிர்க்கட்சியாக இருந்து தேர்தலை சந்திக்கும்போது, ஆளுங்கட்சியின் தவறுகளை பாமர மக்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் எளிமையாக அம்பலப்படுத்தும்.

இந்த மரபு, விளம்பரங்களுக்கு மட்டுமல்ல. அக்கட்சியின் பிரசார மேடைகளுக்கும் பொருந்தும்.

மற்ற சில்லறை விஷயங்களில் கவனத்தை சிதறவிடாமல், இந்த இரண்டு உத்திகளையே தொடர்ச்சியாக தேவைக்கேற்ப பயன்படுத்துவதால்தான் உலகிலேயே அறுபது ஆண்டுகளை கடந்தும் உயிரோட்டமாக இருக்கும் ஒரே பிராந்திய இயக்கமாக திமுக இருக்கிறது.

எண்பது ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்துப் பத்திரிகையில் தொடங்கிய திமுக தலைவர் கருணாநிதியின் ஊடகப்பணி, இன்றைய ஃபேஸ்புக் காலம் வரை ஏராளமான வடிவங்களை கடந்து வளர்ந்திருக்கிறது. கருணாநிதி ஒவ்வொரு முறை அப்டேட் ஆகும்போதும் கூடவே அவரது கட்சியும் தன்னை டெக்னாலஜிக்கு ஏற்ப அப்டேட் செய்துக் கொள்கிறது.

இதற்கு உதாரணம்தான் திமுக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து வெளியிட்டு வரும் பரபரப்பான விளம்பரங்கள்.

திமுகவின் பொருளாளர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களில் தமிழகம் எங்கும் 234 தொகுதிகளிலும் நடத்திய ‘நமக்கு நாமே’ பயணம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அந்த பயணத்தின் போது அவர் ஒவ்வொரு ஊரிலும் முழங்கிய வாசகம் ‘முடியட்டும் விடியட்டும்’. அதிமுக ஆட்சி முடியட்டும், திமுக ஆட்சி விடியட்டும் என்கிற பொருளில் கூறப்பட்ட இந்த வாசகத்தின் தொடர்ச்சியாக சமீபநாட்களாக ஊடகங்களில் பளிச்சிடும் விளம்பரங்கள், மக்களிடையே பேசப்படும் விவாதமாக உருவெடுத்திருக்கிறது. தொலைக்காட்சிகளில் இந்த விளம்பரத்தை மையப்படுத்தி சிறப்பு விவாதம் நடத்தும் அளவுக்கு வெளியான முதல் நாளே பூகம்பத்தை உருவாக்கியிருக்கிறது.

விளம்பரத்துறையில் teaser ad என கூறப்படும் சீண்டல் விளம்பரங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. திமுகவின் சமீப விளம்பரங்களும் ‘என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா?’ என்கிற புகழ்பெற்ற வாசகத்தை தாங்கி வருவது அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்திருக்கிறது.

ஆளும் அதிமுக, அரசு செலவிலேயே நலத்திட்டங்கள் அறிவிப்புக்கான விளம்பரங்கள் என்கிற சாக்கில் பல கோடி ரூபாய்க்கு தேர்தல் பிரசார விளம்பரங்களாக தந்துவரும் நிலையில், அதை எதிர்க்கட்சியான திமுக எதிர்கொண்டிருக்கும் இந்த நூதன பாணி இந்தியாவெங்கும் பேசப்படும் பொருளாகி உள்ளது.

கடந்த 23ஆம் தேதி இந்த விளம்பரத் தொடரின் முதல் விளம்பரம் வெளியிடப்பட்ட அன்றே, ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் 6 லட்சம் முறை இந்த விளம்பரம் விவாதிக்கப்பட்டு வைரலாக மாறியது. இன்றும் பரவி வருகிறது. போலவே ஃபேஸ்புக், கூகிள் பிளஸ் போன்ற தளங்களிலும் இப்போது திமுக விளம்பரங்கள் குறித்துதான் பேச்சு. அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகும் விளம்பரம் ஒன்று சமூகவலைத்தள ஊடகங்களில் இந்தளவுக்கு முதன்மையான பேசுபொருளாக மாறியிருப்பது இதுவே முதன்முறை.

வருடாவருடம் அதிமுகவினர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று விதவிதமாக போஸ்டர் ஒட்டி, விளம்பரங்கள் கொடுத்து அசத்துவார்கள்.

இந்த ஆண்டு அதிமுகவினரின் அந்த வழக்கமான கோலாகலம் பிசுபிசுத்துப் போனதற்கு திமுகவின் இந்த புதிய விளம்பரத் தொடரே காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

ஏற்கனவே இணையதளங்களில் செயல்படும் திமுக ஆதரவாளர்களுக்கு, அக்கட்சி பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வரும் நிலையில் இந்த புதிய ‘என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா’ வைரல் அவர்களை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. இதே விளம்பர வாசகங்களை கொஞ்சம் முன்னே பின்னே மாற்றி, அதிமுக அரசை வெறுப்பேற்றி மீம்ஸ் உருவாக்கி வருகிறார்கள்.

பாரம்பரியமான அச்சு ஊடக விளம்பரங்களில் திமுக கலக்கினாலும், இக்கால இளைஞர்களை ஈர்க்கும் டிஜிட்டல் ஊடகங்களிலும் முழு முனைப்பாக பிரசாரம் செய்து வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் தொடங்கி கட்சியின் ஊராட்சி கிளை நிர்வாகிகள் வரை அத்தனை பேரும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகிறார்கள் (இன்னமும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக சமூகவலைத்தளங்களுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

இதற்காக தேர்தல் வரை திமுக 24 X 7 மணி நேரமும் உழைக்கக்கூடியவர்களை நியமித்திருக்கிறது. தொழிற்முறையிலான சில ஏஜென்ஸிகளையும் ஒப்பந்தம் செய்திருக்கிறது என்று தெரிகிறது.

அந்தவகையில் திமுக தலைவர் போன் மூலம் பிரசாரம் செய்யும் ‘மிஸ்ட் கால்’ முறை பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. இதுவரை முப்பது லட்சம் பேர், மிஸ்ட்கால் முறையில் கருணாநிதியின் குரலை ஆர்வத்தோடு கேட்டிருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட அளவிலான திமுகவினர், மாவட்டம் தோறும் பிரத்யேக வாட்ஸப் குழுமங்களை உருவாக்கி அதில் அதிமுக அரசின் சொதப்பல்களை பிரசாரம் செய்யும் பணியும் ஜரூராக நடந்து வருகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, திமுகவால் 2016 தேர்தல் கலர்ஃபுல்லாக களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இதற்காக திமுக நிறைய செலவழித்திருப்பதாக ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. “இந்த விளம்பரம் மக்களிடையே ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை ஒப்பிட்டால், திமுக செலவழித்திருக்கும் தொகை மிக சொற்பமே” என்று JWT என்கிற விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த விளம்பர ஆய்வாளர் சொல்கிறார்.

திமுகவின் இந்த விளம்பர சுனாமியை அதிமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்கிற ஆவல் அனைத்து மட்டங்களிலும் உருவாகி இருக்கிறது. திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் நேரடி போட்டி என்கிற மனப்பான்மை உறுதியாக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள்நல கூட்டணி, பாமக போன்ற மாற்று அணிகளின் பிரசாரம் சுத்தமாக கலகலத்துப் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவின் சாதகங்களை சொல்லி ஓட்டு கேட்காமல், அதிமுகவின் பாதகங்களை மட்டுமே சுட்டிக் காட்டுவது தார்மீகமான விளம்பரமுறைதானா என்றொரு கேள்வியை சமூகவலைதளங்களில் சிலர் எழுப்பி வருகின்றனர்.

“நாங்க இப்போதைக்கு ஒட்டியிருக்கிறது போஸ்டர்தான். அதுக்குள்ளே விமர்சனம் எழுதிட்டா எப்படி? இன்னும் டீசர் வரணும். டிரைலர் வரணும். ஆடியோ ரிலீஸ் அது இதுன்னு நிறைய இருக்கு. அதுக்கப்புறம்தான் படம். முதல்லே படம் ரிலீஸ் ஆகட்டும். நிச்சயமா பட்டையைக் கிளப்பும். அதைப் பார்த்துட்டு இந்த தார்மீகம், அறம் பற்றியெல்லாம் எழுதுங்க. விமர்சனங்களை வரவேற்கிறோம்” என்று ஜாலியாக இதற்கு பதில் சொல்லுகிறார் திமுக இளைஞரணி பிரமுகர் ஒருவர்.

(இந்த கட்டுரையின் எடிட் செய்யப்பட்ட வடிவம் இன்றைய ‘தினகரன்’ நாளிதழில் பிரசுரமாகியிருக்கிறது)

மிஸ்டர் ராங்!

$
0
0
தமிழக அரசியல் வரலாற்றில் சரியான சந்தர்ப்பத்தில் தவறான முடிவுகளை மட்டுமே எடுக்கக் கூடியவர் என்று மற்ற கட்சியினரால் தொடர்ச்சியாக கிண்டலடிக்கப்படுபவர் மதிமுக பொதுச்செயலர் வைகோ.

1993ல் திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக என்கிற கட்சியை உருவாக்கினார். 1996ல் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜனதாதளம் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்தித்தது. வைகோவே கூட விளாத்திகுளம் தொகுதியில் தோல்வி அடைந்தார். சிவகாசி பாராளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட்ட அவர் அங்கும் மூன்றாவது இடம் பெற்று படுதோல்வி அடைந்தார். 177 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுகவால் ஒரே ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. “காட்டாற்று வெள்ளத்தில் சந்தனமரங்களும் அடித்துச் செல்வது இயல்புதான்” என்று தன்னுடைய படுதோல்வியை இலக்கியத்தரமாக விமர்சித்து ஆறுதலடைந்தார்.

96 தேர்தலில் மிகக்கடுமையாக அதிமுகவையும், ஜெயலலிதாவையும் விமர்சித்த வைகோ, அடுத்த இரண்டே ஆண்டுகளில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி கண்டார். 1998 பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, “அதிமுகவும், மதிமுகவும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்” என்று அவர் உருகியதை கண்டு மதிமுக தொண்டர்களே முகம் சுளித்தார்கள்.

ஜெயலலிதாவால் ஓராண்டிலேயே வாஜ்பாய் அரசு கவிழ்ந்துவிட 1999ல் மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தல். இம்முறை, எந்த கட்சியிலிருந்து பிரிந்தாரோ அதே திமுகவுடன் மதிமுக கூட்டணி. இந்த முடிவு கட்சிசாரா வாக்காளர்கள் மத்தியில் மதிமுகவின் நம்பகத்தன்மையை முற்றிலுமாக குலைத்தது. கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று முழங்கிய வைகோ அடுத்தடுத்து அதே கட்சிகளோடு வெற்றிக்காக கூட்டணி அமைத்தது அவரது தலைமைப் பண்பையே கேலிக்குரியதாகவும் ஆக்கியது.

அடுத்து வந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் வைகோ எடுத்த முடிவு அவரது அரசியல் தற்கொலை முயற்சியாக பார்க்கப்படுகிறது. இரண்டு சீட்டுக்காக சண்டை போட்டு திமுக கூட்டணியிலிருந்து விலகிப்போய் தனித்து நின்றது மதிமுக. மீண்டும் திமுக, அதிமுக இரு கட்சிகளையும் மிக கடுமையாக விமர்சித்த வைகோ, இனி எந்த காலத்திலும் இந்த கட்சிகளோடு கூட்டணி கிடையாது என்றார். 211 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, டெபாசிட்டையே விரல்விட்டு எண்ணக்கூடிய தொகுதிகளில்தான் திரும்பப் பெற்றது.

1998ல் தேசியளவில் பாஜகவோடு மதிமுகவுக்கு ஏற்பட்ட கூட்டணிக்கு வைகோ மிகவும் விசுவாசமாக இருந்தார். பாஜக அரசு பொடா சட்டம் கொண்டுவந்தபோது அதை ஆதரிக்கவும் செய்தார். 2001ல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த அதிமுக, பாஜகவுக்காக வைகோ ஆதரித்த அதே பொடா சட்டத்தை பயன்படுத்தி அவரையே சிறையில் தள்ளியது. அந்த சந்தர்ப்பத்தில் வைகோவை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக கோரியது. அக்கட்சியின் தலைவர் கருணாநிதியே, வேலூர் சிறையில் இருந்த வைகோவை நேரில் இருமுறை பார்த்து ஆறுதலும் சொன்னார்.

இதையடுத்து பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி, திமுக இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணிக்கு 2004 பாராளுமன்றத் தேர்தலுக்கு வந்தது மதிமுக. “தந்தையைப் பிரிந்து தனிக்குடித்தனம் போன தனயன் திரும்பி வந்திருக்கிறேன்” என்று உணர்ச்சிகரமாகப் பேசினார் வைகோ. ஒரு வார இதழுக்கு அவர் கொடுத்த பேட்டியில், “என் வாழ்வில் நான் தலைவராக ஏற்றுக்கொண்ட ஒரே மனிதர் கலைஞர்தான். அவரால்தான் வார்க்கப்பட்டேன். வளர்க்கப்பட்டேன். காலம் எங்களை காயப்படுத்தியது. அதே காலம்தான் எங்கள் காயங்களுக்கு களிம்பும் தடவியது. சிறையிலிருந்த என்னைப் பார்க்க அன்பு மேலோங்க வந்தார் தலைவர் கலைஞர். அவர் என்னை வந்துப் பார்த்ததால் என் மனச்சுமை குறைந்துப் போனது. அரசியலில் எதுவும் நேரலாம். ஆனால் இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்க மாட்டேன். காலம் எனக்குக் கற்றுக் கொடுத்த பக்குவம் இது” என்று நெகிழ்ச்சியோடு சொன்னார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் வந்தபோது வைகோவின் வழக்கப்படி அப்படியே ‘யூ டர்ன்’ அடித்தார். கேட்ட தொகுதிகளை திமுக தரவில்லை என்றுகூறி, அதிமுக கூட்டணிக்கு தாவினார். சிறையில் இருந்து வெளியே வந்தபோது, “பாசிச வெறி பிடித்த ஜெயலலிதா ஆட்சியை தூக்கியெறிவோம்” என்று அவர் முழங்கிய கோஷத்துக்கு மாறாக, மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அவர் அமைத்த கூட்டணி, அரசியலில் வைகோ மீதான நம்பகத்தன்மையை ஒட்டுமொத்தமாகவே குலைத்தது. அவரை பொடாவில் உள்ளே வைத்து சித்திரவதை செய்த ஜெயலலிதாவை, ‘அன்பு சகோதரி’ என்று விளித்ததை, வைகோவின் தாயாரே எதிர்த்தார் என்று அப்போது பத்திரிகைகள் எழுதின. 2006ல் வைகோ இடம்பெற்றிருந்த அதிமுக கூட்டணி தோல்வியடைந்து, திமுக ஆட்சிக்கு வந்தது.

2009 நாடாளுமன்றத் தேர்தலில்தான் முதன்முறையாக தான் இடம்பெற்ற கூட்டணியிலேயே இரண்டாம் முறையாகவும் வைகோ தொடர்ந்தார். ஆனால், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வைகோவே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அடுத்து வந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் கேட்ட தொகுதிகளை அதிமுக கொடுக்கவில்லை என்றுகூறி வித்தியாசமான ஒரு முடிவுக்கு வந்தார் வைகோ. “ஜெயலலிதா துரோகம் செய்துவிட்டார்” என்று கூறிய அவர், தேர்தலிலும் போட்டியிடாமல், அதிமுகவுக்கு எதிர்க்கட்சியான திமுகவுக்கு ஆதரவளிக்காமல் தேர்தலையே ஒட்டுமொத்தமாக புறக்கணித்தார்.

அடுத்துவந்த 2014 பாராளுமன்றத் தேர்தலில் பத்தாண்டுகள் கழித்து மீண்டும் பாஜகவோடு சேர்ந்தார். நாடு முழுக்க மோடி அலை வீசியபோதும் கூட, ஏழு இடங்களில் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட வெல்ல முடியவில்லை. வழக்கம்போல விருதுநகரில் வைகோவே தோல்வியை தழுவினார்.

இப்போது 2016 தேர்தலில் இதுவரை தான் கூட்டணி கண்ட திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக அத்தனை கட்சிகளும் மாற்று இயக்கம் என்றுகூறி ‘மக்கள் நல கூட்டணி’யில் இணைந்திருக்கிறார். பெரிய கட்சிகளின் கூட்டணி சுனாமியில் மக்கள் நல கூட்டணி தேர்தல் வரை தாங்குமா என்கிற சந்தேகத்தை அரசியல் ஆய்வாளர்கள் எழுப்பி வருகிறார்கள். ஒருவேளை மக்கள் நல கூட்டணி சிதையுமேயானால், வழக்கம்போல தனித்துவிடப் படுவது வைகோவாகதான் இருப்பார்.

கடந்தகால வைகோவின் செயல்பாடுகளால் வெறுத்துப்போய் மதிமுகவில் இருந்து மீண்டும் தாய்க்கழகமான திமுகவுக்கே அவரோடு வந்தவர்கள் போய்விட்டார்கள். என்ன செய்வது? வைகோ உப்பு விற்க போனால் மழை அடிக்கிறது, மாவு விற்க போனால் காற்றடிக்கிறது. இந்த அளவுக்கு அதிர்ஷ்டமே கொஞ்சமும் இல்லாத தலைவர் இந்திய அரசியலிலேயே வேறு யாரும் இல்லை என்று கிண்டலாக சமூகவலைத் தளங்களில் இவரை விமர்சிக்கிறார்கள் நெட்டிஸன்கள்.

(நன்றி : தினகரன் தேர்தல் களம்)

என்ன சொல்கிறது கூட்டணி வரலாறு?

$
0
0
பலமான கூட்டணியே வெற்றிக்கு அடித்தளம்
என்பதை நிரூபித்துள்ளது 1967 முதல் நடந்த தேர்தல்கள்...
தமிழகத்தில் 1952ல் நடந்த முதல் தேர்தல் மட்டுமே பலமுனை தேர்தலாக அமைந்திருந்தது. சென்னை மாகாணமாக இருந்தபோது சட்டமன்றத்தில் இருந்த இருக்கைகளின் எண்ணிக்கை 375. இதில் 367 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 152 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 131 தொகுதிகளில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் 62 தொகுதிகளை வென்று பலமான எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. கிஸான் மஸ்தூர் பிரஜா, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, கிரிஷிகார் லோக், சோஷலிஸ்ட் கட்சி உள்ளிட்டவை இரட்டை எண்ணிக்கையில் வென்றிருந்தன. இந்த தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. ஆட்சியமைக்க போதிய மெஜாரிட்டி இல்லாத நிலையில் ‘ஆட்சியில் பங்கு’ ஆசை காட்டி, சில கட்சிகளை உள்ளே வாரி போட்டுக் கொண்டு, ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. முதல் தேர்தலிலேயே ‘குதிரை பேரம்’ தமிழகத்துக்கு அறிமுகமாகி விட்டது.

1957ல் நடந்த இரண்டாவது தேர்தலில் காங்கிரஸுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை. மொழிவாரிப் பிரிவினையின் காரணமாக சென்னை மாகாணத்தில் இம்முறை 206 இடங்களே இருந்தன. காமராஜர் தலைமையில் தேர்தலை சந்தித்த அந்த கட்சி 204 தொகுதிகளில் போட்டியிட்டு, 151 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிக்கு மொத்தமாகவே 4 எம்.எல்.ஏ.க்கள்தான் இருந்தார்கள். மாநில கட்சி அங்கீகாரம் இல்லாத நிலையில் சுயேச்சையாக போட்டியிட்ட திமுகவினர், 15 இடங்களில் வென்றனர்.

1962 தேர்தல்தான் முதன்முறையாக தமிழகத்தில் நடந்த இருமுனை தேர்தல். அத்தனை தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் 139 இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றது. இத்தனைக்கும் அக்கட்சியில் இருந்து ராஜாஜி பிரிந்துபோய் சுதந்திரா கட்சியை நிறுவி போட்டியிட்டார். இம்முறை காங்கிரஸுக்கு பலத்த போட்டியை கொடுத்த கட்சி திமுக. 143 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 50 இடங்களை வென்று பலமான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தது.

திமுக முதன்முதலாக ஆட்சியைப் பிடித்த 1967 தேர்தல்தான், இன்றைய கூட்டணி கலாசாரத்துக்கு வித்திட்ட தேர்தல். தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்திருந்த காங்கிரஸை வீழ்த்த புதிய உத்தி ஒன்றினை கைக்கொண்டார் அண்ணா. சுதந்திரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர், ம.பொ.சி.யின் தமிழரசு கழகம், முஸ்லீம்லீக், பிரஜா சோஷலிஸ்ட், பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகளை இணைத்து திமுக தலைமையில் மெகா கூட்டணியாக உருவாக்கினார். இந்த ஒற்றுமைக்கு தேர்தல் முடிவுகளில் நல்ல பலன் கிடைத்தது. 174 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 137 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்தது. 232 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு 51 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. மேலும் அக்கட்சியின் தலைவர்கள் காமராஜர், பக்தவத்சலம், பூவராகன், கக்கன் உள்ளிட்டோர் அவரவர் போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வியை தழுவுமளவுக்கு இந்த கூட்டணியின் வீரியம் இருந்தது.

1971ல் நடந்த தேர்தலை ஒருமுனை தேர்தல் என்றே சொல்லலாம். 1962ல் காமராஜர் பெற்ற வெற்றியை போன்றே கலைஞரும் வென்றார். காங்கிரஸ் பிளவுபட்ட நிலையில் ஸ்தாபன காங்கிரஸ் என்கிற பெயரில் காமராஜர் இயங்கினார். முந்தைய தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த சுதந்திரா கட்சி அவரை ஆதரித்தது. திமுக கூட்டணியில் இம்முறை சுதந்திராவுக்கு பதிலாக இந்திரா காங்கிரஸ் இணைந்தது. எனினும் தொகுதி எதுவும் அக்கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனித்து போட்டியிட, அந்த இடத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் வந்து சேர்ந்தது. இம்முறையும் திமுக கூட்டணியே அபார வெற்றியை பெற்றது. தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே மகத்தான சாதனையாக ஒரு தனிக்கட்சி வென்ற அதிக இடங்கள் (184 எம்.எல்.ஏ.க்கள்) என்கிற இன்றுவரை உடைக்க முடியாத சாதனையை திமுக படைத்தது. எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்தாபன காங்கிரஸ் - சுதந்திரா கூட்டணிக்கு 19 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

எம்.ஜி.ஆர் ஆட்சி அமைத்த 1977 தேர்தல் நான்கு முனை தேர்தலாக அமைந்தது. இத்தேர்தலில் நெருக்கடி நிலையை எதிர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நெருக்கடி நிலையை ஆதரித்த அதிமுகவோடு அமைத்த கூட்டணிதான் தமிழகத்தின் முதல் பச்சை சந்தர்ப்பவாத கூட்டணி என்று அரசியல் ஆய்வாளர்களால் இன்றுவரை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ‘சர்க்காரியா கமிஷன், திமுக தலைவர்களை ஊழல் புகார்களுக்காக விசாரித்துக் கொண்டிருப்பதால் திமுக கூட்டணியில் இருக்க முடியாது’ என்கிற சப்பைக் கட்டை மா.கம்யூ தலைவர்கள் முன்வைத்தார்கள். ஆனால் இந்த தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதே திமுகவோடுதான் கூட்டணி அமைத்து மா.கம்யூ போட்டியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சர்க்காரியா கமிஷன், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே விசாரணை நடத்திக் கொண்டுதான் இருந்தது. இந்த தேர்தலில் கிட்டத்தட்ட தனித்தே போட்டியிட்டது திமுக. காங்கிரஸ் –- இந்திய கம்யூனிஸ்ட் ஒரு அணி, அதிமுக -– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு அணி, மத்தியில் ஆட்சியிலிருந்த ஜனதா கட்சி தனி என்று நடந்த நான்குமுனை போட்டியில் அதிமுக 130 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது.

1980 தேர்தலில் திமுக - இ.காங்கிரஸ் கூட்டணி உருவானது. காங்கிரஸ் 114 தொகுதிகளிலும், திமுக 112 தொகுதிகளிலும் ஏனைய சிறு கட்சிகளுக்கு மீதி தொகுதிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன. இக்கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தலுக்கு பிறகு எந்த கட்சி ஆட்சி, யார் முதல்வர் என்பதை தீர்மானிப்போம் என்று கூறப்பட்ட தெளிவில்லாத அறிவிப்புக்கு வாக்காளர்களிடையே வரவேற்பில்லை. மாறாக அதிமுகவோ இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், குமரி ஆனந்தனின் காமராஜர் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ், பழ.நெடுமாறனின் காமராஜர் காங்கிரஸ் என்று பலமான கட்சிகளை கூட்டணிக்கு வைத்திருந்தாலும் 168 தொகுதிகளில் போட்டியிட்டது. ஜனதா கட்சி இந்த தேர்தலிலும் தனித்து களம் கண்டதால் மும்முனை போட்டியே நடந்தது. அதிமுக கூட்டணியில் யார் முதல்வர் என்கிற தெளிவு இருந்ததால், அக்கூட்டணிக்கே வெற்றி கிடைத்தது. 129 தொகுதிகளில் அக்கட்சி வென்றது.

எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி அமெரிக்காவில் இருந்தபடியே 1984 தேர்தலை சந்தித்தார். இடைப்பட்ட காலத்தில் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸோடு, மாநில ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு உறவு மலர்ந்திருந்தது. அதிமுக –- இ.காங்கிரஸ் கூட்டணி பலமான கூட்டணியாக தேர்தலை சந்தித்தது. இந்த கூட்டணியை எதிர்த்து திமுக, மா.கம்யூ, இ.கம்யூ, ஜனதா, தமிழ்நாடு பார்வர்ட் பிளாக், காமராஜ் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை பலமாக அணி திரண்டன. இருப்பினும் இந்திரா காந்தி கொலை, எம்.ஜி.ஆர் உடல்நலமின்மை போன்றவற்றால் ஏற்பட்ட அனுதாப அலைக்கு முன்பு திமுக கூட்டணியால் சமாளிக்க முடியவில்லை. திமுக - அதிமுக கட்சிகளுக்கு மாற்று என்று முதன்முறையாக ‘ஊழல் ஒழிப்புக் கூட்டணி’, அதிமுகவில் இருந்து பிரிந்திருந்த எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் இந்த தேர்தலில் களமிறங்கி காணாமல் போனது. இதே காரணத்தை சொல்லி இப்போதைய தேர்தலில் களமிறங்கி இருக்கும் மக்கள்நல கூட்டணிக்கு இதுவே முதல் முன்னுதாரணம் என்று சொல்லலாம்.

1989 தேர்தலில் திமுக, மா.கம்யூ, ஜனதாதளம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு அணி. இரண்டாக அதிமுக பிளவு பட்டிருந்தது. ஜெயலலிதா பிரிவு அதிமுகவோடு இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி. வி.என்.ஜானகி பிரிவு அதிமுகவோடு, சிவாஜிகணேசன் ஆரம்பித்த கட்சியான தமிழக முன்னேற்ற முன்னணி கூட்டணி. காங்கிரஸ் இம்முறை இரு திராவிடக் கட்சிகளோடு இணையாமல் தனி அணியாக நின்றது. அவ்வகையில் நான்கு முனை போட்டியாக நடந்த இத்தேர்தலில் 146 இடங்களில் வென்று திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

1991 தேர்தலில் அதிமுக மீண்டும் ஒன்றுபட்டது. அக்கட்சியோடு கூட்டணி வைத்த காங்கிரஸின் தலைவர் ராஜீவ்காந்தி, ஸ்ரீபெரும்புதூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் குண்டுவைத்து கொல்லப்பட்டார். திமுக கூட்டணியில் மா.கம்யூ, இ.கம்யூ, பார்வர்ட் பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், எஸ்.திருநாவுக்கரசின் அண்ணா புரட்சித்தலைவர் திமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்து சந்தித்த முதல் தேர்தல் இதுதான். ராஜீவ் கொலை அனுதாப அலை வீசியதால் 168 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, 164 தொகுதிகளில் வென்று எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளை வாரி சுருட்டியது.

1996ல் வித்தியாசமான களம். அதிமுக பலவந்தமாக காங்கிரஸோடு கூட்டணி வைக்க முயல, அக்கட்சி உடைந்து தமிழ்மாநில காங்கிரஸ் என்கிற புதிய கட்சி மூப்பனார் தலைமையில் உதயமானது. இக்கட்சி திமுக கூட்டணியில் இணைந்தது. திமுக, தமாகா, இ.கம்யூ, பார்வர்ட் பிளாக் ஆகியவை பலமான கூட்டணியை அமைத்தன. திமுகவில் இருந்து பிரிந்து வைகோ மதிமுகவை தொடங்கியிருந்தார். திமுக - அதிமுகவுக்கு மாற்று என்று முழங்கிய அவரோடு மா.கம்யூ கூட்டணி கண்டது. இவர்களோடு ஜனதாதளமும் சேர்ந்துக் கொண்டது. முதலில் திமுக கூட்டணியோடு, பிற்பாடு மதிமுக கூட்டணியோடு பேசி உடன்பாடு காண முடியாத பாமக தனித்து நின்றது. நான்கு முனை தேர்தலாக நடந்ததில் எதிர்க்கட்சிகள் அத்தனையையும் முறியடித்து பிரும்மாண்ட வெற்றியை ருசித்தது திமுக. அக்கட்சி போட்டியிட்ட 182 இடங்களில் 173 தொகுதிகளை வென்றது. ஜெயலலிதா, வைகோ போன்ற தலைவர்கள், அப்போது அதிமுக அமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவரும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளிலேயே தோல்வியடைந்தனர். பாஜக, தமிழக சட்டமன்றத்தில் முதன்முறையாக தன்னுடைய கணக்கை துவக்கிய தேர்தல் இதுதான். மதிமுகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுயேச்சையாக வென்றார். பிற்பாடு ‘புதிய தமிழகம்’ கட்சியை உருவாக்கினார்.

2001ல் நடந்த முந்தைய தேர்தலை போன்ற பலமான கூட்டணியை திமுகவால் ஏற்படுத்த முடியவில்லை. மதிமுக கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டு தனித்துப் போய் நின்றது. பாஜக, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், முன்னாள் அமைச்சர் கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சி, தமாகாவில் இருந்து பிரிந்து புதுக்கட்சி கண்ட ப.சிதம்பரத்தின் தமாகா ஜனநாயகப் பேரவை, கு.ப.கிருஷ்ணனின் தமிழர் பூமி என்று இக்கூட்டணி வலுவில்லாததாக அமைந்தது. மாறாக அதிமுகவோ காங்கிரஸ், தமாகா, பாமக, இ.கம்யூ, மா.கம்யூ என்று பலமான கூட்டணியை அமைத்து வென்றது. 141 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட அதிமுக, 132 இடங்களில் வென்றது.

2006ல் முதன்முறையாக தேமுதிக தனித்து களமிறங்கியது. இரு கட்சிகளுக்கும் மாற்று என்று விஜயகாந்த் முழங்கினார். திமுக, காங்கிரஸ், பாமக, இ.கம்யூ, மா.கம்யூ என்று பலம் வாய்ந்த கூட்டணி. இந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக, கடைசி நேரத்தில் போயஸ் தோட்டத்துக்கு போய் பொக்கே கொடுத்து அதிமுக கூட்டணியில் இணைந்தது. விடுதலை சிறுத்தைகளும் அதிமுக அணியில் சேர்ந்தார்கள். பாஜக தனித்து தேர்தலை சந்தித்தது. கடுமையான பொட்டியில் 132 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட திமுக 96 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. 1952க்கு பிறகு தமிழகத்தில் மெஜாரிட்டி இல்லாத ஆட்சியை கூட்டணிக் கட்சிகளின் உதவியோடு அமைத்தது.

2011ல் அதிமுகவோடு தேமுதிக, மா.கம்யூ, இ.கம்யூ கட்சிகள் கூட்டணி அமைத்தன. கடைசிநேர தொகுதிப் பங்கீடு பிரச்சினையில் ஒற்றை இலக்க சீட்டுகள்தான் கொடுக்கிறார்கள் என வெறுத்துப்போய் இக்கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறினாலும், அதிமுகவுக்கு சங்கடம் கொடுக்கக்கூடாது என்று தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தது. திமுகவோடு காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன. பாஜக தனித்துவிடப்பட்டது. அதிமுக - திமுக கூட்டணி சமபலத்தோடு மோதுவது போன்ற தோற்றம் தெரிந்தாலும், தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் அதிமுகவை மீண்டும் அரியணையில் ஏற்றியது.

இதோ 2016 தேர்தல் வந்துவிட்டது. திமுக, காங்கிரஸ், முஸ்லீம்லீக் கூட்டணி உறுதிப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் சில கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்று தெரிகிறது. கண்ணுக்கு தெரிந்த தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை என்று இதுவரை முழங்கிக் கொண்டிருந்த ஜெயலலிதா, அதிமுக கூட்டணிக்கு தயார் என்று சமீபமாக சிக்னல் காட்டியும் பலமான கட்சிகள் எதுவும் அவரோடு சேர விருப்பமாக இல்லை. முந்தைய தேர்தல்களில் திமுக - அதிமுகவோடு மாறி மாறி கூட்டணி அமைத்து எப்படியோ சட்டமன்றத்தில் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த கட்சிகள், இப்போது இரு கட்சிகளுக்கும் மாற்று என்று களமிறங்கி இருக்கின்றன. இரு கட்சிகளுடனான கடந்தகால தேர்தல் உறவுகளே, அவர்களுக்கு மக்களிடையே நம்பகத்தன்மையை உருவாக்கவில்லை.

1967ல் தொடங்கி பார்த்தோமானால், தேர்தலில் பல பிரச்சினைகள் எதிரொலித்தாலும் கூட பலமான கூட்டணிதான் ஆட்சியை தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது என்பது வரலாறு. இந்த தேர்தலிலும் அதே போக்கு தொடருமா என்பது இன்னும் இரண்டு மாதங்களில் தெரிந்துவிடும்.

(நன்றி : தினகரன்)

மறுபக்கத்தையும் பேசுவோம்

$
0
0
கண்டனம் தெரிவிக்காதது ஆணவக்கொலைகளை ஆதரிப்பதாகாது. பெயரிலாவது திராவிடத்தை கொண்டிருப்பவர்கள் சாதிவெறியை எந்நாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அதிமுக ஆளும் கட்சி. திமுக ஆண்ட ஆளப்போகும் கட்சி. ஒரு சம்பவம் நடந்ததுமே அதன் முழுப்பின்னணியும் தெரியாமல், அடுத்தக்கட்ட எதிர்வினைகளை கண்காணிக்காமல் உடனடியாக கண்டிப்பதோ, ஆதரிப்பதோ நடைமுறை சாத்தியமில்லை என்பதை கடந்தகால அனுபவங்கள் இவர்களுக்கு பாடம் கற்பித்திருக்கின்றன. ப்ளாஷ் நியூஸ் கணக்காக இவற்றை கண்டிக்க வேண்டிய அல்லது ஏதோ ஒரு கருத்தை உடனடியாக தெரிவித்து டி.ஆர்.பி. ஏற்றிக்கொள்ள வேண்டிய தேவை ஊடகங்களுக்கு இருப்பதை போல இந்த கட்சிகளுக்கு இல்லை. அவற்றை டெபாசிட் கூட வாங்க வாய்ப்பில்லாத நிலையில் இருக்கும் மநகூ போன்றவர்கள்தான், நாம் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவதை போல செய்யமுடியும். ஒருவேளை திமுக, அதிமுகவுக்கு நிகரான செல்வாக்குக்கு மதிமுகவோ, விடுதலை சிறுத்தைகளோ உயர்ந்தாலும்கூட இதுபோன்ற சூழல்களில் இன்ஸ்டண்ட் கருத்து தெரிவிக்க முடியாது என்பதுதான் கள அரசியல்.

உடுமலை ஆணவக்கொலை குறித்து அதிமுகவின் நிலை என்னவென்பதை மாஃபா பாண்டியராஜனோ, சி.ஆர்.சரஸ்வதியோ டிவி விவாதங்களில் “எல்லாத்தையும் அம்மா பார்த்துப்பாங்க” என்று விளக்கமளிப்பார்கள்.

திமுகவை பொறுத்தவரை மத்தளம் கதைதான். கருணாநிதி மதத்தை, சாதியை எதிர்க்கிறாரே... இவர்களது ஓட்டெல்லாம் தனக்கு வேண்டாமென்று வெளிப்படையாக அறிவிப்பாரா என்று வருடம் முழுக்க சவால் விட்டுக்கொண்டே இருப்பார்கள். சாதியக்கலவரமோ, மதக்கலவரமோ, ஆணவப்படுகொலைகளோ நடக்கும் சந்தர்ப்பத்தில் திமுகவை குறிப்பிட்ட மதத்தோடு, சாதியோடு தொடர்பு படுத்திப் பேசுவார்கள். கொடுமை என்னவென்றால் கோயமுத்தூர் குண்டுவெடிப்பின் போது திமுகவை இந்துமத வெறி பிடித்த கட்சி என்றுகூட கூறினார்கள். ஆனால் எச்.ராஜாக்களோ திமுகவின் இந்துமத எதிர்ப்புக்காக அக்கட்சியின் தலைவர்களை தூக்கிலிட்டால்கூட மகிழ்வார்கள்.

சாதியை ஒழிக்க வேண்டுமானால் அகமணமுறையை அழிக்க வேண்டும் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். சமூக மாற்றத்தை சட்டம் கொண்டு செய்வது கடினம். அப்படி செய்வதாக இருந்தால் சுயசாதி திருமணத்தை இந்திய அரசியல் சட்டத்திலேயே தடை செய்திருப்பார் அம்பேத்கர்.

பெரியார் பாணி பிரச்சாரம் ஒன்றே ஒரே வழி. இனப்பெருக்கம் செய்ய ஓர் ஆண், ஒரு பெண் தேவை. இவர்கள் இணைந்து குழந்தை பெற்றால் குடும்பம். பத்து பதினைந்து குடும்பங்கள் இணைந்தால் சமூகம். பல சமூகங்கள் இணைவதுதான் இனம். பல இனங்கள் இணைந்துதான் இந்திய தேசியம். இதில் மதத்துக்கோ, சாதிக்கோ மருந்துக்கும் இடமில்லை என்பதை அறிவியல்பூர்வமாக மக்களை நம்பவைப்பதே நடைமுறை சாத்தியமான வழி. நாளையே இது நடக்குமென்று எதிர்ப்பார்ப்பது மூடத்தனம். இரண்டாயிரம் வருட மூடநம்பிக்கைகளை ஒழிக்க இருநூறு ஆண்டுகளாவது தேவை.

மதத்துக்கும், சாதிக்கும் இடமில்லாத சீர்த்திருத்த திருமணங்களை நாம் சட்டரீதியாக அங்கீகரித்தே இன்னும் ஐம்பது ஆண்டுகள் கூட ஆகவில்லை.

அதேநேரம்-

காதல் பற்றிய புரிதலையும் சமூகத்துக்கு ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. உடல்ரீதியாக.. சட்டரீதியாக பெண்ணுக்கு பதினெட்டு வயதும், ஆணுக்கு இருபத்தோரு வயதும் வந்துவிட்டாலே திருமணம் செய்துக் கொள்ளலாம் என்பதே மகா அபத்தம். திருமணம் செய்துக் கொண்டவர்களுக்காவது இந்த உண்மை தெரியவேண்டும். பாலியல் தேவை என்பது தம் அடிப்பதோ, டீ குடிப்பதோ போன்ற மிகசாதாரணமான அன்றாடத் தேவைகளில் ஒன்றுதான். திருமணம் என்பது அதற்கு மட்டுமேயான தீர்வல்ல. காதலிக்க காசு தேவையில்லை. ஆனால் கல்யாணம் கட்டிக்கொண்டு குடும்பம் நடத்த வலுவான பொருளாதார அடித்தளம் அவசியம். பொருளாதாரரீதியாக வலுவடையாத நிலையில் இருக்கும் இருவர் அகமணரீதியாகவோ அல்லது கலப்புமண முறையிலோ இணைவது என்பது இருவருக்குள்ளும் ஏகப்பட்ட முரண்களை உருவாக்கி இறுதியாக விவாகரத்தை நோக்கிதான் செல்லும். உயிருக்கு உயிராக காதலித்தவர்கள் ஒருவரை ஒருவர் உயிருக்கும் அதிகமாக வெறுக்கக்கூடிய நிலை ஏற்படுவது சற்றும் சகிக்க இயலாதது. இம்மாதிரி வலுவற்ற திருமண பந்தங்கள் உருவாவது உருப்படியான குடும்பங்களை உருவாக்காது. உருப்படாத குடும்பங்கள், இலட்சிய சமூகத்தின் அங்கங்களாக மாறாது.

சாதி-மத எதிர்ப்புப் பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்கள், காதலை ஆதரிப்பவர்கள் சரியான துணையை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்களையும் செய்ய வேண்டும். கண்டதும் காதல் என்பதெல்லாம் வெறும் ஃபேண்டஸி. காதலர்கள் சினிமாவுக்கோ, தீம்பார்க்குக்கோ போகும்போதெல்லாம் காசு பிரச்சினையில்லை. கல்யாணம் செய்து கர்ப்பமானபிறகு மாதாமாதம் செக்கப்புக்கு போகும்போது டாக்டருக்கு கொடுக்க காசு இல்லையென்றால் வாழ்க்கையே நரகமாகிவிடும்.

அடுத்து, காதலிப்பவர்கள் கல்யாணத்துக்கு பெற்றோரை எப்படி கன்வின்ஸ் செய்வது என்பதையும் காதலிப்பதற்கு முன்பாகவே திட்டமிட வேண்டும். ‘ஓடிப்போதல்’ என்பது சம்பந்தப்பட்ட காதலன், காதலியோடு முடிந்துப் போய்விடுவதில்லை. ஒரு குடும்பம், அவர்களது சொந்தபந்தங்கள் உள்ளிட்டவர்களை பாதிக்கக்கூடிய முடிவு இது. நகர்ப்புறங்களில் பரவாயில்லை. கிராமப்புறங்களில் ஓடிப்போன ஒரு பெண்ணின் குடும்பம் தொடர்ச்சியாக அந்த ஊரில் வாழமுடியாது என்பதே நிலை. உண்மைதானே?

படிக்கும் காலத்தில் காதல் சரிதானா? இப்போது கவுசல்யாவுக்கு பிறந்த குடும்பத்தின் ஆதரவு இல்லை. புகுந்த குடும்பத்துக்கு ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமோ, கடமையோ இல்லை. படிப்பு தடைபடும். இந்த ஆணவக் கொலையை ஒரு வாரத்துக்கு கண்டித்து ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு, கட்டுரை எழுதிவிட்டு கவுசல்யாவை நாம் (அதாவது சமூகம்) மறந்துவிடப் போகிறோம். கவுசல்யாவின் எதிர்காலம் என்ன?

முற்போக்காக இருப்பதே பிற்போக்காக ஆகிவிடக்கூடிய அவலம் நேர்ந்துவிடக்கூடாது. ஆணவக்கொலைகள் நடக்கும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதோடு நம் கடமை முடிந்துவிடுவதில்லை. அது தொடர்பான மற்ற ஹைப்பர்லிங்க் இஷ்யூக்களையும் சேர்த்து பேசியாக வேண்டும். பேசுவோம்.

க்ளீனா பேசிடுவோம்!

$
0
0
நகரமயமாதல்தான் நாகரிகம் என்று நவீன உலகம் கருதுகிறது. வானுயர்ந்த கட்டிடங்கள், இருளை பகலாக்கும் ஒளிவிளக்குகள், குப்பை கூளம் கண்ணில் தென்படாத சீரான வீதிகள், வீடுகள், விடுதிகள், அரங்கங்கள் என்று நம்முடைய சுற்றுப்புறம் குறித்த கனவு நனவாகும் நூற்றாண்டு இது. இதெல்லாம் வெளிப்பார்வைக்குதான். உண்மையில் நாகரிகத்தின் பெயரால் நாட்டையே பிரும்மாண்டமான குப்பைத் தொட்டியாக நாம் மாற்றிக் கொண்டிருப்பதின் பின்னணியை இந்த நூல் அலசுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி ‘ஸ்வச் பாரத்’ என்கிற கோஷத்தை திட்டமாக முன்வைத்த பிரதமர் மோடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா மொத்தத்தையும் சுத்தப்படுத்தி காந்தியின் கனவினை நினைவாக்குவோம் என்று சபதம் மேற்கொண்டார். ‘சுத்தம் செய்வோம், வாருங்கள்’ என்று பிரதமர் மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பது, வெறும் கவர்ச்சி அரசியல் கோஷமல்ல, தீவிரமான சமகால பிரச்சினை. பல்வேறு துறையினை சேர்ந்த ஏராளமான பிரபலங்களும் இந்தப் பணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அந்த காலக்கட்டத்தில்தான் தினகரன் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர், ‘தினகரன் வசந்தம்’ இதழில் வாரந்தோறும் இந்த கட்டுரைகளை தொடராக கொண்டுவர திட்டமிட்டார். சுத்தம் செய்வது என்பதே வெறுமனே தெருவை பெருக்கித் தள்ளுவது என்று புரிந்துகொள்ளப்படக் கூடாது என்கிற அக்கறை அவருக்கு இருந்தது. எனவேதான் இத்தொடரில் என்னவெல்லாம் இடம்பெற வேண்டும் என்று யோசித்தார். அவ்வகையில் இந்த நூலின் ஆசிரியராக அவரையே குறிப்பிடலாம். எழுதியது மட்டுமே நான்.

‘Yes, we can’ என்கிற தலைப்பில் ‘தினகரன் வசந்தம்’ இதழில் இத்தொடர் வந்தபோது வாசகர்களிடையே இருந்து வந்த பாராட்டுக் கடிதங்களுக்கும், தொலைபேசி அழைப்புகளுக்கும் அளவேயில்லை. வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை ஆனதுமே காலையில் கைப்பேசியை எடுத்து குறுஞ்செய்திகளை பார்ப்பேன். ‘நக்கீரன்’ வாரமிருமுறை இதழின் இணையாசிரியர் கோவி.லெனின் இத்தொடர் குறித்த தன்னுடைய கருத்தினை முப்பத்தைந்து வாரங்களும் அனுப்பிக்கொண்டே இருந்தார். சக பத்திரிகையாளர்களும் காணும்போதெல்லாம் இத்தொடர் குறித்து பாசிட்டிவ்வாகவே பேசுவார்கள். இம்மாதிரியான ஊக்குவிப்புகள் இல்லாமல் இருந்திருந்தால் உற்சாகமாக என்னால் எழுத முடிந்திருக்கும் என தோணவில்லை.

ஆறுகள் மாசடைவது, மின்குப்பை பிரச்சினை, குட்கா ஆபத்து, பொது இடங்களை அசுத்தப்படுத்துவது, பிளாஸ்டிக் தொல்லை, காற்று மாசு, ஒலி மாசு, ஒளி மாசு, வாகனப்புகை, வாசனைத் திரவியங்களால் விளையும் விபரீதம், ப்ளெக்ஸ் பேனர்கள் ஏற்படுத்தும் சூழலியல் சீர்கேடு, இண்டோர் பொல்யூஷன் என்று சுத்தத்தை சாக்காக வைத்து இந்நூல் எத்தனையோ அவசியமான விஷயங்களை விவாதிக்கிறது.

புற சுத்தத்தை மட்டுமின்றி அக சுத்தத்தையும் வலியுறுத்துகிறது என்பதே மற்ற சுற்றுச்சூழல் தொடர்பான நூல்களிலிருந்து இந்நூலை வேறுபடுத்திக் காட்டக்கூடிய அம்சம். மொழிப்பிரச்சினை, சாதி, நுகர்வுக் கலாச்சாரம், அடிமைப்படுத்தும் இணையம் என்று பல்வேறு சமகால பிரச்சினைகளும் பேசப்பட்டிருக்கின்றன.

இன்னும் பேச வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருந்தாலும், இவ்வளவு விஷயங்களையும் முப்பத்தைந்தே அத்தியாயங்களில் அடக்க முடிந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் ஆச்சரியமாகதான் இருக்கிறது.

நூலை சிறப்பான முறையில் வெளிகொண்டு வரும் சூரியன் பதிப்பகத்தாருக்கு நன்றியை தவிர வேறென்ன சொல்ல முடியும்?

- ’கங்கையில் இருந்து கூவம் வரை’ நூலின் முன்னுரை

‘தினகரன் வசந்தம்’ சீஃப் எடிட்டர் கே.என்.சிவராமனுக்கு நூல் சமர்ப்பிக்கப்படுகிறது. முகப்பு அட்டை : ஓவியர் ராஜா


பக்கங்கள் : 152 விலை : ரூ.120/-
வெளியீடு : சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை - 600 004. போன் : 42209191 Extn : 21125
Email : kalbooks@dinakaran.com

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்

$
0
0
மூத்தப் பத்திரிகையாளர்கள் பலரும் திமுகவைவிட அதிமுகதான் பெரிய கட்சி என்று டிவி விவாதங்களிலும், அச்சில் கட்டுரை எழுதுகிறபோதும் சொல்லுகிறார்கள். அவ்வாறு சொல்வதற்கான ஆதாரமாக திமுகவைவிட அதிமுகவே அதிக வாக்குகள் வாங்குவதாக தேர்தலில் வாங்கும் வாக்குகளின் புள்ளிவிவரங்களை சொல்கிறார்கள். மூத்தப் பத்திரிகையாளர்கள் என்பதால் அவர்கள் அப்படிதான் சொல்லியாக வேண்டும். முன்பு எம்.ஜி.ஆர் தொடர்ச்சியாக வென்றுக் கொண்டிருந்தபோது, உடன்பிறப்புகளுக்கு கலைஞர் இதுமாதிரி புள்ளிவிவரக் கணக்குகளை சொல்லிக் கொண்டிருந்தபோது கிண்டலடித்தவர்கள்தான் இவர்கள்.

மூத்தப் பத்திரிகையாளர்களுக்கு ‘தொழில்’ சொல்லிக் கொடுக்குமளவுக்கு நமக்கு அனுபவம் இல்லையென்றாலும், ஒண்ணும் ரெண்டும் கூட்டினா மூணு என்று கணக்கு போடுமளவுக்கு கணிதவியல் அறிவு இருப்பதால் ஒரு சின்ன திருத்தத்தை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

வாக்கு சதவிகிதம் என்பது ஒரு கட்சி ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் எவ்வளவு வாக்குகள் வாங்கியிருக்கிறது என்பதை வைத்து சொல்லப்படும் புள்ளிவிவரம். பத்தே பத்து தொகுதியில் போட்டியிட்டு பத்திலும் ஒரு கட்சி வென்றிருந்தாலும்கூட 234 தொகுதிகளுக்கும் சேர்த்துதான் அக்கட்சியின் வாக்குசதவிகிதம் கணக்கிடப்படும். கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும் அக்கட்சிக்கு வாக்குகள் இருக்கும் என்பதை தயைகூர்ந்து மூத்தப் பத்திரிகையாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகளுக்கு விழுந்த வாக்குகளில் திமுக வாக்குகளும் உண்டு. மாறாக அங்கே திமுகவே இல்லை என்று பொருளல்ல. எனினும் ‘உதயசூரியன்’ நிற்காத தொகுதிகளில் விழுந்த திமுக வாக்குகள், அக்கட்சியின் வாக்குவங்கிக் கணக்கில் வராது.

கடந்த 2011 தேர்தலில் திமுக வாங்கியது 22.4 சதவிகிதம். இது அக்கட்சி போட்டியிட்ட 119 தொகுதிகளின் வாக்குகளில் கிடைத்த சதவிகிதம் மட்டுமே. மீதியிருக்கும் 115 தொகுதிகளிலும் அக்கட்சி நின்றிருந்தால், இந்த சதவிகிதத்தில் மேலும் ஒரு 8 சதவிகித அளவுக்காவது கூடுதலாக கிடைத்திருக்கலாம் என்பதை குமாரசாமியை தவிர வேறு யார் வேண்டுமானாலும் ஒப்புக் கொள்வார்கள். திமுகவைவிட கூடுதலாக கிட்டத்தட்ட 50 தொகுதிகளில் நின்ற அதிமுகவுக்கு 38 சதவிகிதம் கிடைத்தது. ஒருவேளை அதிமுக 234ல் நின்றிருந்தாலும் கூடுதலாக 3 அல்லது 4 சதவிகிதம் கிடைத்திருக்கலாம்.

2006ஆம் ஆண்டு தேர்தலை எடுத்துக் கொண்டால்கூட வாக்கு சதவிகிதத்தில் அதிமுகவே திமுகவைவிட 6% கூடுதலாக இருந்தது. ஆனாலும், திமுகதான் ஆட்சி அமைத்தது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. ஏனெனில் திமுக வெறும் 132 இடங்களிலும், அதிமுக 188 இடங்களிலும் போட்டியிட்டிருந்தன.

கடந்த சில தேர்தல்களாக திமுக 150க்கும் குறைவான இடங்களில்தான் போட்டியிடுகிறது. அதிமுக, 150க்கு குறைவதில்லை (2001 விதிவிலக்கு). அதிமுக அதிக இடங்களில் போட்டியிடுவதால் கூடுதல் சதவிகிதத்தை காட்ட முடிகிறது. திமுக குறைவான இடங்களில் போட்டியிடுவதால் அதிமுகவைவிட குறைவாக வாக்குகள் வாங்குவதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அவ்வளவே.

எனவே, மூத்தப் பத்திரிகையாளர்கள் முன்வைக்கும் வாக்குவங்கி கணக்கு என்பது அதிமுகவுக்கு ஆதரவாக ஏதேனும் பாயிண்டை முன்வைக்க வேண்டுமே என்கிற ஆர்வத்தில் சொல்லப்படுவதுதானே தவிர, கள நிலவரமோ உண்மையோ அல்ல.

குறைவான வாக்குகள் வாங்கிய கட்சி ஆட்சியே அமைக்க முடிகிறது (2006), அதிக வாக்குகள் பெற்ற கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்துகூட பெற முடியாத நிலைமை (2011) ஏற்படுகிறது என்றால், ஒருவகையில் அது நம்முடைய ஜனநாயக முறையின் பலகீனம். அதாவது ஒரே ஒரு வாக்கில் தோல்வியடைந்த வேட்பாளருக்கு விழுந்த வாக்குகள் கூட நம் ஜனநாயக அமைப்பில் கிட்டத்தட்ட செல்லாத வாக்குகளுக்கு ஒப்பாகும். லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் விழும் அந்த வாக்குகளுக்கு எப்படி மதிப்பு சேர்ப்பது?
அரசியல் வல்லுநர்கள் முன்வைக்கும் தீர்வு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் (proportional representation). இம்முறை ஒருவேளை நம் தேர்தல் ஜனநாயக அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்படுமேயானால் இந்த கூட்டணிக் குழப்பங்களோ, லெட்டர்பேடு கட்சிகளுக்கான தேவைகளோ களையப்படும் வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் முறைகேடுகள் குறையும். நிஜமான மக்கள் செல்வாக்கு கொண்டவர்கள் சட்டசபை, நாடாளுமன்றத்துக்குள் கட்சிகளின் ஆதரவின்றியே நுழையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். கொள்கை சார்ந்த அரசியலுக்கான தேவை கூடுதலாகும்.

திமுக, தேர்தல் அரசியலில் ஈடுபட்ட காலத்திலிருந்தே அரை நூற்றாண்டுக்கும் மேலாக இம்முறையை வலியுறுத்தி வருகிறது. இந்த சிந்தனையை இந்திய அரசியலில் தோற்றுவித்து, பெரும் விவாதமாக மாற்றியவர் பேரறிஞர் அண்ணா.

இங்கிலாந்து காலனியிலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் தவிர்த்து, ஜனநாயகம் நடைமுறையில் இருக்கும் மற்ற பெரும்பாலான நாடுகளில் இந்த முறைதான் அமலில் இருக்கிறது. ஒரு கட்சி தேர்தலில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கோ / சட்டமன்றத்துக்கோ அக்கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது தீர்மானிக்கப்படுவதே இம்முறை.

ஏன் இந்த முறை இந்திய ஜனநாயகத்துக்கு தேவை?

உதாரணத்துக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலை எடுத்துக் கொள்ளலாம். தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒட்டுமொத்தமாக 3.3 சதவிகிதம் வாக்குகளை பெற்றது. அதே அளவிலான வாக்குகளைதான் அதிமுகவும் பெற்றிருக்கிறது. ஆனால், அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 37. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9. இந்த இரு கட்சிகளையும் விட அதிகமாக 4.1 சதவிகிதம் வாக்குகளை பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் பிரதிநிதி யாருமே பாராளுமன்றத்தில் இல்லை.

அதுபோலவே பிஜூ ஜனதாதளம் பெற்றிருக்கும் வாக்கு சதவிகிதம் 1.70. திமுகவும் அதே வாக்கு சதவிகிதத்தைதான் பெற்றது. ஆனால் பிஜூ ஜனதாதளத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20. திமுகவுக்கு பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் கூட இல்லை.

ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகள் பெறக்கூடிய வாக்குகளையும் இடங்களையும் இதுபோல புள்ளிவிவர அடிப்படையில் ஆராய்ந்தோமானால் நம் ஜனநாயகம் எத்தகைய விசித்திரமான வடிவத்தில் இருக்கிறது என்பது புரியும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, தன்னுடைய ஜனநாயகத்தை மேலும் செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் நிறைய சீர்த்திருத்தங்களை மேற்கொண்டாக வேண்டும். விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறித்த விவாதங்களை பொதுத்தளங்களிலும், ஊடகங்களிலும் விவாதித்து அதன் சாதக பாதகங்களை வல்லுநர்கள் ஆலோசிக்க வேண்டும்.

டிவி விவாதம்

$
0
0
இந்த தேர்தலின் ஸ்பெஷல் காமெடியே டிவிக்களில் நடைபெறும் விவாதங்கள்தான். மிக சீரியஸான பாவனையில் நடத்தப்படும் இந்த காமெடிஷோக்களில் குறிப்பாக அரசியல் விமர்சகர், சமூக ஆர்வலர் என்று பட்டங்கள் கொடுக்கப்பட்டு விவாதிக்கும் தேங்காய்மூடி பாகவதர்கள்தான் ஸ்பெஷலோ ஸ்பெஷல். ஒன்றுமே இல்லாத சப்பை மேட்டரை, அவர்களுடைய உள்மன விருப்பங்களை ஏதோ பெரிய வரலாற்றுப் பின்னணியோடு அரசியல் ஆய்வுகளை நடத்தி முடித்த பாவனையில் சிறுபத்திரிகை மொழி ஸ்டைலில் ஜாங்கிரி பிழிகிறார்கள். உரித்துப் பார்த்தால் ஒன்றும் தேறாது.

டிவி விவாதங்கள் எப்படி நடைபெறுகிறது என்று உதாரணத்துக்கு ஒரு சாம்பிள் ஸ்னாப்.

தங்கராஜ் போண்டா (நெறியாளர்) : நீங்க சொல்லுங்க. மக்கள்நலக் கூட்டணியோடு தேமுதிக சேர்ந்திருக்கு. பழம் விழுந்திருப்பது பாலிலா அல்லது பாமாயிலிலா?

பெருமாள் சனி : இது நிச்சயமா அதிமுகவுக்குதான் சாதகம். நாம இங்கே நடத்த வேண்டிய விவாதமே அதிமுக எப்படி ஜெயிக்கும், திமுக எப்படி தோக்கும்னுதான். இதுலே பார்த்தீங்கன்னா கேப்டன் ரெண்டு விஷயத்தை தெளிவுப் படுத்தியிருக்காரு. அதைதான் யாருமே சொல்ல மாட்டேங்கிறாங்க. ஒண்ணு, அவரு மக்கள்நலக் கூட்டணியோடுதான் கூட்டு சேர்ந்து போட்டியிடறேங்கிறதை தெளிவா சொல்லியிருக்காரு. இதை ஏன் யாரும் பேசமாட்டாங்கறாங்கன்னு எனக்கு தெரியலை. இன்னொண்ணு திமுக கூட்டணியில் அவர் இல்லேங்கிறதை ரொம்ப தெளிவா சொல்லியிருக்காரு. அவர் சொன்னதை அப்படிதான் புரிஞ்சுக்க முடியும். அதிமுகதான் ஜெயிக்கும். 1967லேயும் அப்படிதான் நடந்தது.

போண்டா : சமந்த் சார், அதிமுகதான் ஜெயிக்கும்னு அவரு சொல்லுறாரு. நீங்க என்ன சொல்றீங்க?

சமந்த் சி. லட்சுமணன் : அவரு சொல்றதை அப்படியே ஏத்துக்க முடியாது. ஏன்னா பொலிடிக்கல் சினாரியோ ரொம்ப மாறியிருக்கு. நான் என்ன நினைக்கிறேன்னா அதிமுகதான் எலெக்‌ஷனில் ஜெயிக்கப் போவுது. பார்லிமெண்டில் பிஜேபி ஜெயிச்சது. ஆனால் தமிழ்நாட்டில் பிஜேபி சொல்லிக்கறமாதிரி இல்லை என்பதால் திமுக தோற்கணும்னா அதிமுகதான் ஜெயிக்கணும். அப்படிதான் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் பேசுது. மக்கள் இந்த அடிப்படையில்தான் ஓட்டளிக்கப் போறாங்க. அமெரிக்காவிலும் அப்படிதான் நடக்கப் போவுது. ஐரோப்பாவிலே கூட....

போண்டா : நீங்க வேற விவாதத்துக்கு போறீங்க. அதிமுக ஜெயிக்கும் என்று பெருமாள் சனி சொல்கிறார். அவரை மறுத்து அதிமுகதான் ஜெயிக்கும் என்று சமந்த் சி.லட்சுமணன் சொல்கிறார். இப்படி இருவேறு கருத்துகள் இந்த விவாதத்தில் முன்வைக்கப்படுகிறது. யார் ஜெயிப்பார்கள் என்று சின்ன விளம்பர இடைவேளைக்கு பிறகு பார்ப்போம்.

(விளம்பரம் ஒளி-ஒலிபரப்பாகிறது : அதிமுக அமோக வெற்றி. தத்தி டிவியின் மாபெரும் கருத்துக் கணிப்பு. நாளை இரவு 7.30 மணிக்கு காணத்தவறாதீர்கள்)

போண்டா : மக்கள்நலக் கூட்டணியின் முடிவு திமுகவுக்கு பாதிப்பா, அதிமுகவுக்கு அனுகூலமா என்கிற இந்த விவாதத்தில் புது விருந்தினர் சேர்ந்திருக்காங்க. மக்கள், அதிமுக வெற்றி பெறும், அதிமுக அமோக வெற்றி பெறும்னு இருவேறு கருத்துகளை சொல்லிக் குழப்பறாங்க. பேனு ஜேம்ஸ், நீங்க இதை ஒத்துக்கறீங்களா?

பேனு ஜேம்ஸ் : அப்படி சொல்ல முடியாது. நாம முக்கியமா பார்க்க வேண்டிய விஷயம் இங்கே ஒண்ணு இருக்கு. டெல்லியிலே கேஜ்ரிவால் வின் பண்ணியிருக்காரு. அதுமாதிரி இங்கே விஜயகாந்த் வின் பண்ண மாட்டாரு என்பதால் அதிமுகவுக்கு எட்ஜ் இருக்கு. ஆனா காஷ்மீர் எலெக்‌ஷன் ரிசல்ட்ஸை நாம இங்கே கம்பேர் பண்ணி பார்க்கணும். அப்புறம் வெஸ்ட் பெங்கால்லே என்ன நடந்ததுன்னு பார்த்தோம்னாதான் எப்படி இங்கே ஏடிஎம்கே நிச்சயமா வின் பண்ண போகுதுங்கிறதை விளக்கமா சொல்ல முடியும்.

போண்டா : விவாதத்தையே வேற பரிமாணத்துக்கு கொண்டு போயிருக்கீங்க. பத்திரிகையாளர் பணி சார், நீங்க சொல்லுங்க. உங்க அனுபவம் என்ன சொல்லுது?

பணி : இவங்க மூணு பேரு சொல்றதையும் அப்படியே ஏத்துக்க முடியாது. அப்படியே நிராகரிக்கவும் முடியாது. கேப்டன் நிச்சயமா கருணாநிதியை தோக்கடிச்சிருக்காரு. ஆனா கேப்டன் ஜெயிக்கலே. ஜெயலலிதா, கருணாநிதியை 2011, 14னு ரெண்டு எலெக்‌ஷனில் ஜெயிச்சிருக்காங்க. 2016ம் அப்படிதான் இருக்கும்னு கெஸ் பண்ண முடியுது. பட், இன்னும் நிறைய டைம் இருக்கு. அந்த டைமெல்லாம் முடிஞ்சப்பவும் ஏடிஎம்கேதான் ஜெயிக்கும்னு யூகிக்கிறது ஒண்ணும் பெரிய பெட் இல்லை.

போண்டா : நிகழ்ச்சியை முடிக்க வேண்டிய நேரம் வந்துடிச்சி. கடைசியா ஒரு வரியிலே உங்க இறுதிக்கருத்தை சொல்லுங்க.

பெருமாள் சனி : ஏடிஎம்கே ஜெயிக்கும்

பேனு ஜேம்ஸ் (ஆவேசமாக) : இதை நான் மறுக்கறேன். அதிமுக வெற்றி பெறும்.

சமந்த் சி.லட்சுமணன் : நோ, நோ. என் பொலிட்டிக்கல் எக்ஸ்பீரியன்ஸை வெச்சு சொல்றேன். இவங்க ரெண்டு பேரும் சொல்றது தப்பு. ஏடிஎம்கே ஆட்சியமைக்கும்னுதான் மக்கள் நினைக்கறாங்க. நானும் நம்பறேன்.

பணி : மூணு பேரும் மூணுவிதமா பேசுறாங்க. மக்கள் பேசுறதைதான் பத்திரிகையாளன் பேசமுடியும். அதிமுக வெல்லும். ஆனா இப்பவே நான் இதை கமிட் பண்ணிக்க விரும்பலை.

போண்டா : நாலு பேரும் நாலு வெவ்வேறு கருத்துகளை சொல்லியிருக்காங்க. மக்கள் என்ன கருத்தை சொல்லுறாங்கன்னு மே 19 வரைக்கும் காத்திருப்போம். நன்றி!

ஷேவிங்!

$
0
0
கோடை உக்கிரம் சற்று முன்னதாகவே ஆரம்பித்து விட்டது. இப்போதே அக்னி வந்துவிட்டதோ என்று அஞ்சக்கூடிய அளவுக்கு கதிரவன் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறான். சந்தேகமே இல்லை. இது சூரியனின் வருடம்.

ஃபுல் மேக்கப் போட்டு அலுவலகத்துக்கு கிளம்பும் பெண்களின் சாயம் பாதியிலேயே கலைகிறது. எதிர் பிளேடு போட்டு ஷேவ் செய்த ஆண்களுக்கு தாடை தீயாய் எரிகிறது. ஆக, கோடையால் இருபாலருமே பாதிக்கப்படுவதால் ஆண்-பெண் சமத்துவம் இயற்கையின் இயல்பு என்பதும் புரிகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஷேவிங்கில் அவ்வளவு ஆர்வம் இருந்தது கிடையாது. தாடியும், மீசையும் சொல்லிக் கொள்ளும்படி வளரவில்லை என்பதும் ஒரு காரணம். வாரத்துக்கு ஒருமுறை ஞாயிற்றுக்கிழமையில் நேரம் கிடைத்தால் பிளேடால் ஒரு இழுப்பு இழுத்துவிட்டுக் கொள்வதுண்டு. அதுவும்கூட “ஷேவிங் பண்ணுடா. சீக்கு புடிச்ச மாதிரி இருக்கே!” என்று அப்பாவோ, அம்மாவோ கவனித்து சொன்னால்தான்.

என்னுடையது பிரபுதேவா தலைமுறை. எனவே, சைட் அடிப்பதற்கு க்ளீன்ஷேவெல்லாம் அவசியமானதாக இல்லை. பிற்பாடு அப்பாஸ், மாதவன் ஆகியோர் எழுச்சி அடைந்தபிறகே இது அத்தியாவசியமான தகுதியாக மாறியது.

முன்பு விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்துக் கொண்டிருந்தபோது அதுபாட்டுக்கும் தான்தோன்றித்தனமாக வளரும் தாடி, added valueவாக இருந்தது. வேலை செய்ய சோம்பேறித்தனமாக இருந்தால் தாடியை வருடிக்கொண்டு வானத்தைப் பார்த்து தம் அடித்துக் கொண்டிருக்கலாம். மேலதிகாரிகள், ‘அவன் திங்க் பண்ணுறான்’ என்று நினைத்துக் கொள்வார்கள். அம்மாதிரி ஒருமுறை தாடி வளர்த்தபோது எதிர்ப்பட்ட நிறைய பேர் “சலாம் அலைக்கும் பாய்” என்று சொல்ல, மதமாற்றத்துக்கு தயார் இல்லாத நான் தாடியை வழித்தேன்.

‘புதிய தலைமுறை’யில் சேர்ந்த பிறகுதான் தோற்றம் குறித்து ரொம்ப கவலைப்பட வேண்டியதாயிற்று. ஷேவ் செய்யாத முகம், ‘இன்’ செய்யப்படாத சட்டை, செருப்புக் காலோடு ஓர் ஆர்.ஜே.வை பேட்டி எடுக்கப் போயிருந்தோம். எங்களுடைய தோற்றமே அவருக்கு அலர்ஜி ஆகிவிட்டது. பேச்சிலேயே தீண்டாமையை கடைப்பிடித்தார் (obviously அவர் அந்த சாதிதான்). கசப்பான அந்த அனுபவத்துக்கு பிறகே, இனிமேல் கொஞ்சம் டீசண்டாக தோன்ற வேண்டும் என்கிற அக்கறை பிறந்தது.

எங்கள் ஆசிரியர் மாலன், எப்போதும் பளிச்சென்று இருப்பார். அவருடைய முகத்தில் 0.5 மிமீ அளவுக்கு தாடி வளர்ந்தால் கூட அதிசயம்தான். திங்கள் டூ வெள்ளி ஃபார்மல்ஸ் உடையில்தான் இருப்பார். வீக்கெண்டில் ஆபிஸுக்கு வந்தால் மட்டும் டீஷர்ட் அணிவார். ஏதாவது விழாவில் கலந்துக் கொள்கிறார் என்றாலும், அந்த விழாவின் தன்மைக்கேற்ப கோட்சூட்டோ அல்லது ஜிப்பா (இலக்கிய நிகழ்வுகள்) மாதிரியோ அணிவார்.

‘பளிச்’ தோற்றத்துக்காக அவரை ஃபாலோ செய்ய ஆரம்பித்தேன். இப்போதெல்லாம் கம்பல்ஸரி ஃபார்மல்ஸ்தான். பேண்டில் டக்-இன் செய்த சட்டை, தினமும் இல்லாவிட்டாலும் ஒருநாள் விட்டு ஒருநாள் ஷேவிங், பாலிஷ் செய்த ஷூ என்று ஒருமாதிரி ஆபிஸ் கோயிங் ரோபோ மாதிரியான தோற்றத்தில் இருக்கிறேன். எப்போதாவது மின்தடை காரணமாக அயர்ன் செய்ய முடியாவிட்டால் மட்டும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து ஒருமாதிரி செமி ஃபார்மலில் சமாளித்துக் கொள்கிறேன். இப்போது சந்தித்து பேசுபவர்கள் (அந்த ஆர்ஜே மாதிரியில்லாமல்) கொஞ்சம் மரியாதையோடுதான் நடத்துகிறார்கள்.

ஒரே தொந்தரவு ஷேவிங்தான். விருப்பமே இல்லாமல் செய்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. நமக்கு கடை ஷேவிங் செட் ஆகாது. செல்ஃப் ஷேவிங்தான் திருப்தி. முன்பெல்லாம் ஒரு பிளேடில் சைடுக்கு ஒரு முறை என்று நாலு முறை ஷேவ் செய்துக் கொண்டிருந்தேன். இப்போது தோல் கொஞ்சம் தடித்து விட்டது. முகத்தில் வளரும் மயிறும் தடியாக ஸ்டாப்ளர் பின் கனத்துக்கு வளருகிறது. ஒரு பிளேடில் இரண்டு ஷேவுக்கு மேல் இழுக்க ஆரம்பித்தால் ரத்தம் துளிர்க்கிறது. அதுவும் ஷேவ் செய்து முடித்தபிறகு கொஞ்சூண்டு சொரசொரப்பு தட்டுப்பட்டாலும் சோப்பு போடாமல் குளித்தது மாதிரி அன்ஈஸியாக இருக்கும். எனவே எதிர்ஷேவ் பார்ட்டி நான். எரிச்சலைத் தணிக்க ஆஃப்டர் ஷேவ் லோஷனுக்கு வேறு பெரிய பட்ஜெட் அழுதுத் தொலைக்க வேண்டியிருக்கிறது (ஓல்டு ஸ்பைஸ் ஆச்சே?).

ஏசி காரில் அலுவலகம் செல்பவர்களுக்கும்தான் டெய்லி ஷேவிங் செட்டாகும் போல. ஒவ்வொரு நாளும் தரமணி சிக்னலில் என் பைக் பத்து நிமிடம் நிற்கும்போது, முகம் முழுக்க அனலில் வேகுகிறது. இந்த எரிச்சலில் அட்ரினல் எக்ஸ்ட்ராவாக சுரந்து, டென்ஷன் கூடி பி.பி. வேறு இஷ்டத்துக்கும் எகிறுகிறது. இதனால் அப்படியே சுகர், ஹார்ட் அட்டாட், கிட்னி ஃபெய்லியர் என்று இந்த சாதாரண ஷேவிங் எழவால், பரம்பரை குடிவெறியனுக்கு வரவேண்டிய ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா எழவு நோய்கள், டீடோடலரான எனக்கு வந்து சேருமோ என்றும் அச்சம் ஏற்படுகிறது.

சரி. நாலு நாளைக்கு ஷேவிங்கே வேண்டாமென்றால் 80% வெள்ளையாக தாடி முளைத்து இளமைக்கு வேட்டு வைக்கிறது. இந்த பாழாய்ப்போன மயிறு தலையில் வளர்ந்துத் தொலைந்தாலாவது, ஓரளவுக்கு வழுக்கைப் பிரச்சினையை அட்ஜஸ்ட் செய்யலாம். மாறாக தலையில் எவ்வளவுக்கு எவ்வளவு முடி கொட்டிக் கொண்டிருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அடர்த்தியாக முகத்தில் வளர்ந்துத் தொலைக்கிறது.

பெண்களுக்குதான் நிறைய உடல்ரீதியான இஷ்யூக்கள் உண்டு என்பதைபோல பொதுப்புத்தியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆண்களுக்கு தினமும் இந்த ஷேவிங் பிரச்சினையே பெரும் பிரச்சினைதான். உள்ளாடைரீதியான பிரச்சினைகளை எல்லாம் பேச ஆரம்பித்தால் இராமாயணமே எழுதலாம். இதையெல்லாம் புலம்பிக்கொண்டா இருக்கிறோம்?

அந்த காலத்தில் முற்றும் துறந்து முனிவனாக போனவனெல்லாம் ஷேவிங் செய்ய சோம்பேறித்தனப் பட்டுதான் இமயமலைக்கு போயிருப்பான் என்று நினைக்கிறேன்.

டிஜிட்டல் ராஜா!

$
0
0
 சினிமா படங்களின் டைட்டிலை உற்றுக் கவனிப்பவர் என்றால் உங்களுக்கு ஜி.பாலாஜி என்கிற பெயர் பரிச்சயமானதுதான். ‘டிஜிட்டல் சினிமா டிசைனர்’ என்கிற டைட்டிலுக்கு கீழே இவரது பெயர் இருக்கும்.

‘லிங்கா’, ‘ரஜினி முருகன்’, ‘கதகளி’, ‘ஓ காதல் கண்மணி’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘நண்பேண்டா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தமிழ்ப்படம்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘வழக்கு எண் 18/9’, ‘வல்லினம்’, ‘ஹரிதாஸ்’, ‘தங்க மீன்கள்’, ‘பத்து எண்றதுக்குள்ளே’, ‘ஆரஞ்ச் மிட்டாய்’ என்று ஏராளமான படங்களுக்கு இவர்தான் டிஜிட்டல் சினிமா டிசைனர். இப்போது ‘இது நம்ம ஆளு’, ‘வெற்றிவேல்’, தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் ’பிரம்மோத்சவம்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அலுவலகத்திற்கு நேர் பின்னால் இருக்கும் அவரது ஸ்டுடியோவில் சந்தித்தோம். தமிழ் சினிமாவின் டிஜிட்டல் வரலாற்றை விவரித்தார்.
“நான் ரொம்ப செண்டிமெண்டாதான் இந்த ரூமை வாடகைக்கு எடுத்து இங்கே உட்கார்ந்து வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். இந்த அறைக்கு இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமான இடம் உண்டு. எண்பதுகளோட இறுதியிலே ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ புகழ் நவோதயா ஸ்டுடியோஸ் இதே அறையில்தான் ஆசியாவின் முதல் டிஜிட்டல் ஏவிட் எடிட்டிங் ஸ்டுடியோவை அமைச்சாங்க.

டிவியில் ‘பைபிள் கதைகள்’னு தொடர் எடுக்குறதுக்காக இந்த டெக்னாலஜியை பல லட்ச ரூபாய் செலவில் கொண்டுவந்தாங்க. அப்போ அது சக்சஸ் ஆகலை. அந்த தொடரும் ஏதோ சில காரணங்களால் சில வாரங்களிலேயே நின்னுடிச்சி.

அப்போ கமல் சார் நவோதயாவில் ‘சாணக்யன்’ மலையாளப் பட்த்தில் நடிச்சிருந்தார். எப்பவுமே டெக்னாலஜியில் அப்டேட்டா இருக்கணும்னு நெனைக்கிற அவர், ஏவிட் எடிட்டிங் பற்றி ரொம்ப ஆர்வமா விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டாரு. இந்திய சினிமாவில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்திய ரியல் மீடியா நிறுவனத்தினரும் கமல் சாருக்கு நண்பர்கள்தான். அவங்களும் அடிக்கடி டிஜிட்டலில் என்னென்ன அப்டேட்ஸ்னு சார் கிட்டே சொல்லிக்கிட்டே இருப்பாங்க.
அப்படிதான் முதன்முதலா ‘மகாநதி’ படத்தை கம்ப்ளீட்டா டிஜிட்டல் எடிட்டிங்கில் செஞ்சாங்க. ஃபிலிமில் ஷூட் பண்ணி அதை அப்படியே ஸ்கேன் பண்ணி கம்ப்யூட்டருக்கு கொண்டுவந்து - டெலிசினின்னு சொல்லுவாங்களே, அது இதுதான் - எடிட் பண்ணி மறுபடியும் பிலிமுக்கு டிரான்ஸ்பர் பண்ணனும்னு காதை சுத்தி மூக்கைத் தொடுற கடினமான வேலைதான். ஃபிலிம் புரொஜெக்‌ஷனில் டப்பிங் பேசியிருப்பாங்க. அது டிஜிட்டலில் sync ஆகாது. லிப் மூவ்மெண்ட் ஏடாகூடமா போகும். அதனாலேயே திரும்பத் திரும்ப நாலைஞ்சி முறையெல்லாம் அந்தப் படத்துக்கு டப்பிங் பேசிக்கிட்டே இருக்க வேண்டியிருந்தது.

‘என்னப்பா இது’ன்னு நிறைய பேர் சலிச்சிக்கிட்டாங்க. ‘நாம ஒரு புது டெக்னாலஜியை அறிமுகப்படுத்தறோம். அதோட நிறைகுறைகளை முதன்முதலா எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுறது நாமதான். அதனாலே சில சிரமங்கள் இருக்கதான் செய்யணும். அதுக்காக நம்ம கடமையிலிருந்து பின்வாங்கிட கூடாது’ன்னு கமல்சார்தான் சமாதானப்படுத்தினாராம். இந்தியாவில் கம்ப்யூட்டர் என்பதையே ரொம்ப பேர் கண்ணால கூட பார்த்திருந்திருக்க முடியாத சூழலில், இருபத்து மூணு வருஷம் முன்னாடி ஒரு தமிழ்ப் படம் முழுக்க டிஜிட்டல் எடிட்டிங்கில் உருவான கதை இதுதான்.

முதல்லே டிஜிட்டல் எடிட்டிங் - அதைத் தொடர்ந்து டிஜிட்டல் சவுண்டு (டால்பி, டிடிஎஸ் முதலியன) - விஷூவல் எஃபெக்ட்ஸ் & ஆப்டிகல்ஸ் - டிஜிட்டல் கலர் கரெக்‌ஷன் - இப்போ டிஜிட்டல் புரொடக்‌ஷன். சினிமா டிஜிட்டலில் கடந்து வந்திருக்கும் பாதையின் வரிசை இதுதான்...’’ என்கிறார் பாலாஜி.
இதுலே டிஜிட்டல் சினிமா டிசைனரோட வேலை என்ன?

பிலிம் இருக்குறப்போ லேப் என்ன வேலை செஞ்சதோ அதுமாதிரி வேலைன்னு குத்துமதிப்பா புரிஞ்சுக்கங்க. முன்னாடியெல்லாம் ஷூட் பண்ணி, அதை லேபுக்கு கொண்டு போய் கழுவி, டப்பிங் சேர்த்து, ரீரெக்கார்டிங் பண்ணி, எடிட்டிங்குக்கு அனுப்பி, பிரிண்டு போட்டு... இதெல்லாம் ஃபிலிமில் நிறைய பேரு பண்ணிக்கிட்டு இருந்தாங்க இல்லையா?

இந்த வேலையை எல்லாம் கம்ப்யூட்டர் துணையோட நான் ஒருத்தன் மட்டுமே செய்யுறேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்றன்றைக்கு ஷூட் பண்ணுற விஷூவல்களை டிஜிட்டலா எல்டிஓங்கிற டேப்பில் ரெக்கார்ட் பண்ணி பேக்கப் எடுத்து வெச்சுப்பேன்.

எடிட்டிங், டப்பிங், ரீரெக்கார்டிங், வீ.எஃப்.எக்ஸ்-னு எதுக்கு தேவைப்பட்டாலும் தேவைப்படுற நேரத்துலே இந்த டேட்டாவை கொடுக்குறது. அப்பப்போ அதுலே அப்டேட் ஆகுற வேல்யூஸையும் சேர்த்து வெச்சுக்குறது. கடைசியா ஒரு படம் தியேட்டருக்கு போகிற நிலை வரைக்கும் என்னோட வேலை இருந்துக்கிட்டே இருக்கும்.

ஒட்டுமொத்தமா சொல்லணும்னா ஒரு பெரிய நிறுவனத்துக்கு பேக் (BACK) ஆபிஸில் இருந்து என்னவெல்லாம் செஞ்சுக் கொடுப்பாங்களோ, அதுமாதிரி சினிமாவுக்கு நான் பேக் ஆபிஸுன்னு சொல்லலாம். நான் ஒர்க் பண்ணுற படங்களுக்கு கலர் கரெக்‌ஷனும் நானே செஞ்சிக் கொடுத்துடறேன். சிம்பிளா சொல்லணும்னா போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்கு நாங்க ரொம்ப முக்கியம்.
இந்த மாதிரி டிஜிட்டல் பேக்கப் (Back Up) ஒரு சினிமாவுக்கு ரொம்ப முக்கியமா?

ஆமாம். ஒரு தயாரிப்பாளர், தான் எடுத்த மொத்தப் படத்தையும் அவரோட கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கில் எல்லா வேலையையும் முடிச்சி காப்பி பண்ணி வெச்சிருந்தாரு. போன டிசம்பருலே வெள்ளம் வந்தது இல்லையா? அந்த வெள்ளத்துலே அவருடைய வீடு மூழ்கி, கம்ப்யூட்டர் முழுக்க நனைஞ்சிடிச்சி. அந்த ஹார்ட் டிஸ்கை இப்போ எங்கிட்டே கொண்டுவந்து ஏதாவது பண்ணி படத்தை எடுக்க முடியுமான்னு கேட்குறார். இதுக்குதான் நாங்க வேணுங்கிறது. ஒவ்வொரு படத்தையும் நாலைஞ்சு காப்பி பேக்கப் எடுத்து வேற வேற லொக்கேஷனில் பாதுகாப்போம். எந்த சூழலிலும் படக்குழுவினரோட உழைப்பு வீணா விழலுக்கு இறைச்சா நீரா ஆகவே ஆகாது.

சர்வதேச அளவிலேயே ஒரு படம் எடுக்கப்படறப்போ அப்பப்போ முறையான பேக்கப் செஞ்சு வச்சுக்கணும்னு ஒரு ரூல் இருக்கு. அப்போதான் இன்சூரன்ஸே பண்ண முடியும்.

இந்த ஃபீல்டுக்கு எப்படி வந்தீங்க?

அம்மா, சிவாஜி ரசிகை. எப்பவும் சிவாஜி படங்களை பார்த்துக்கிட்டே இருப்பாங்க. அவங்களோட சேர்ந்து பார்த்து, பார்த்து எனக்கு சினிமா மேலே ஆர்வம் வந்தது. ஆனா, சினிமாவில் என்னவா ஆகணும்னு ஐடியாவே இல்லை. தொண்ணூறுகளில் ‘ஜூராசிக் பார்க்’, ‘டைட்டானிக்’ மாதிரி படங்களை பார்த்துட்டு, அனிமேஷன் துறையில் வேலை பார்க்கலாம்னு ஆசைப்பட்டேன். அனிமேஷன் கத்துக்கிட்டு வேலை தேடினேன்.

நண்பர் ஒருவர் மூலமா ‘சேது’ படத்தோட எடிட்டர் ரகுபாபு சாரோட அறிமுகம் கிடைச்சுது. அவர் கிட்டே அசிஸ்டெண்ட் எடிட்டரா சேர்ந்தேன். நான் வேலை பார்த்த முதல் படம் ‘கும்மாளம்’. நாலஞ்சி வருஷம் அவர்கிட்டே வேலை பார்த்துட்டு, ஏவிட் எடிட்டிங்குக்காக ஏவிஎம்மில் ஒரு ஸ்டுடியோ போட்டோம்.

ஏவிட் சாஃப்ட்வேர் விலையே 30 லட்சரூபாய் இருந்தது. அவங்க ஒரு லட்ச ரூபாய் விலையிலே ஒரு சாஃப்ட்வேர் கொண்டுவந்தாங்க. அதை இன்ஸ்டால் பண்ணிட்டு லேப்டாப் மூலமா ஷூட்டிங் ஸ்பாட்டுலேயே எடிட்டிங் பண்ணலாம்னு சான்ஸ் கேட்டு அலைஞ்சோம். அப்போலாம் ஃபிலிம் எடிட்டிங்குக்குதான் மவுசு இருந்தது. ஏவிட்டுன்னாலே இங்கே நிறைய பேருக்கு அலர்ஜி.

ஆனா, மலையாளப்பட தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ஏவிட் அல்வா மாதிரி. ஒரு நாப்பது, நாப்பத்தஞ்சி படம் அவங்களுக்கு பண்ணிக் கொடுத்தோம். கொஞ்சம் கொஞ்சமா சினிமாவோட தேவைகள் கம்ப்யூட்டரை சார்ந்து அமைய ஆரம்பிச்சது. இத்துறையிலே கம்ப்யூட்டர் கத்துக்காதவங்க பல நூறு பேர் வேலை இழக்க ஆரம்பிச்சாங்க.

2004-05 காலக்கட்டத்தில் டிஜிட்டல் கேமிராவால் ஷூட் பண்ணுற கல்ச்சர் வந்தது. ரெட் கேமிராவோட வரவு, திடீர்னு நம்ம சினிமாவோட குவாலிட்டியை பல படிகள் முன்னாடி கொண்டுப் போச்சி. எடிட்டிங், ரெக்கார்டிங் உள்ளிட்ட போஸ்ட்புரொடக்‌ஷன் வேலைகள் எல்லாம் ஜெட் வேகத்தில், கூடுதல் தரத்தில் உருவாக ஆரம்பிச்சிது.

2006ல் ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரில் ‘பேரழகன்’ படத்தை க்யூப் மூலமா டிஜிட்டல் புரொஜெக்டரில் காமிச்சாங்க. அதை பார்த்ததுமே இனிமே சினிமாவோட எதிர்காலம் டிஜிட்டலில்தான் இருக்குன்னு புரிஞ்சது.

சினிமாவுக்கு டிஜிட்டலா என்னென்ன வேலைகளை பார்க்க முடியுமோ, அதையெல்லாம் நாமதான் பார்க்கணும்னு முடிவெடுத்தேன். இப்போ நான் தனியா செய்யுற வேலைகளை பெரிய நிறுவனங்கள் (பெரும்பாலும் முன்னாள் லேப்கள்) செஞ்சுக் கொடுக்குது. ஆனா, தனிப்பட்ட முறையில் முழுப் பொறுப்பும் எடுத்துக்கிட்டு வேலை பார்க்கிறதுன்னா இந்தியாவிலேயே விரல்விட்டு எண்ணக்கூடிய ஆட்கள்தான் இருக்காங்க. அதில் நானும் ஒருவன்.
இந்த டிஜிட்டல் புரொஜெக்‌ஷன் பத்தி கொஞ்சம் சொல்லுங்க..?

ஒரு டிஜிட்டல் புரொஜெக்டரோடு, ஒரு கம்ப்யூட்டர் சர்வர் இணைந்திருக்கும். முன்னாடி மாதிரி ஃபிலிம் ஓட்டுற பிசினஸே கிடையாது. ஹார்ட் டிஸ்கில் காப்பி பண்ண படத்தை சர்வரில் அப்லோட் பண்ணிட்டா, அப்படியே ஓட்டலாம்.

க்யூப், யூஎஃப்ஓ, பிஎக்ஸ்டி, ஸ்கிராபிள், சோனின்னு நிறைய நிறுவனங்கள் இந்த டிஜிட்டல் தொழிலில் இருக்காங்க. ஹாலிவுட்டின் தரம் என்பது 2கே டிஜிட்டல். ஆனா, நாம ரொம்ப நாளாவே 1கே சினிமாவில்தான் இருந்திருக்கோம். இதை டிஜிட்டல் சினிமான்னு சொல்லாம, ஈ-சினிமான்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. இப்போ நாமளும் 2கே-வுக்கு வேகமா மாறிக்கிட்டிருக்கோம்.

க்யூப்பில் ஒரு படம் 200 ஜிபி அளவுக்கு இருக்கும். ஆனா, யூஎஃப்ஓ டெக்னாலஜியில் 20ஜிபி லெவலுக்குதான் இருக்கும். நிறைய பேர் சேட்டிலைட்டில் இருந்து நேரடி ஒளிபரப்புன்னு நெனைச்சுக்கிட்டிருக்காங்க.

அப்படியில்லை. சர்வரில்தான் இருந்துதான் புரொஜெக்டர் மூலமா ஸ்க்ரீனுக்கு சினிமா வருது. ரியல்மீடியா ஆளுங்களாம் நேரடியாவே தியேட்டருக்கு போய்தான் படத்தை சர்வரில் சேர்த்துட்டு வர்றாங்க. யூஎஃஓ பைல் கொஞ்சம் சிறுசுங்கிறதாலே, நெட்டிலேயே அனுப்ப முடியும்.

அப்போவெல்லாம் ‘பொட்டி வந்துடிச்சி’ன்னு ஃபிலிம் ரோல் தியேட்டருக்கு வர்றதையே பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகறப்ப ஊர்வலமா கொண்டு வந்து கொண்டாடுவாங்க. இப்போ KDMனு சொல்லுவாங்க.. Key delivering message.. அதுதான் பொட்டியை ரீப்ளேஸ் பண்ணியிருக்கு.

சில KB அளவு மட்டுமே இருக்குற இந்த XML ஃபைல்தான் இன்று சினிமாவின் தலையெழுத்தையே நிர்ணயிக்குது. அந்த ஃபைலை ஓபன் பண்ணாதான் சர்வரில் encrypt செய்யப்பட்டு save ஆகியிருக்கிற படம், decrypt ஆகி புரொஜெக்டருக்கு வரும்.

ஆக்சுவலா, இது ரொம்ப ரொம்ப டெக்னிக்கலா எக்ஸ்ப்ளெயின் பண்ண வேண்டிய விஷயம். எல்லாருக்கும் புரியணுமேன்னு கொஞ்சம் மேலோட்டமா சொல்லுறேன்.
டிஜிட்டலுக்கு அடுத்து சினிமாவின் வடிவம் என்னவாக மாறும்?

டெக்னாலஜியை ஜோஸியம் மாதிரியெல்லாம் கணிக்க முடியாது. உண்மையை சொல்லணும்னா சினிமா இப்போ தியேட்டரை விட்டு வீட்டுக்கு போயிக்கிட்டிருக்கு. செல்போனில் கூட சினிமாவை டவுன்லோடு பண்ணி பார்த்துக்கிட்டிருக்காங்க. இதுக்கும் டிஜிட்டல்தான் காரணம்.

இன்னமும் சினிமா ஒரு கலை, கதை சொல்லும் ஊடகம்னுலாம் கதை விட்டுக்கிட்டு இருந்தோம்னா வேலைக்கு ஆகாது. நம்ம டிவி சீரியல்களிலேயே பக்கம் பக்கமா கதை சொல்லிக்கிட்டிருக்காங்க.

அதனால தியேட்டரில் பார்த்தாதான் வேலைக்கு ஆகும் என்கிற மாதிரி படம் எடுக்கணும். சொல்லுற கதைக்கு நல்ல டெக்னிக்கல் சப்போர்ட் இருக்கணும். படம் பார்க்குறவன் ‘அட’ போடணும். சினிமாங்கிறது தியேட்டருக்கான ஊடகம் என்கிற மதிப்பை நாம ஏற்படுத்தாமல் போனால், இந்த தொழிலுக்கான மவுசு குறைய ஆரம்பிச்சிடும். அப்புறம் வீக்கெண்டில் மட்டும்தான் தியேட்டரில் படம் ஓடும்.

நம்ம படைப்பாளிகளுக்கு நெருக்கடி கொடுக்குற சவாலான சூழல்தான். ஆனா, ஹாலிவுட்டில் இந்த சவாலை வெற்றிகரமா கடந்திருக்கிற மாதிரி நாமளும் கடப்போம் என்கிற நம்பிக்கை இருக்கு.

(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)

கலைஞரின் சாதி!

$
0
0
சிறுவயதிலிருந்தே அந்த சலூனில்தான் சிகையலங்காரம். அங்கே காந்தி கண்ணாடியும், குல்லாவும் போட்ட ஒரு மனிதரின் கருப்புவெள்ளை புகைப்படம் பிரேம் போட்டு மாட்டப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் அந்த மனிதர் சலூன் உரிமையாளரான மோகன் அண்ணாவின் தாத்தா என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பிற்பாடு கொஞ்சம் வாசிக்க ஆரம்பித்தபிறகுதான் அவரை அறிந்துக் கொண்டேன்.

ஒருமுறை முடிவெட்டிக் கொண்டிருந்தபோது அண்ணனிடம் கேட்டேன். “அண்ணே, அந்த போட்டோலே இருக்குறது யாரு?”

“தியாகி விஸ்வநாததாஸ். எங்க ஜாதித்தலைவரு”

“ஓஹோ. அவர் என்ன பண்ணாரு?”

“அதெல்லாம் தெரியாது. சுதந்திரப் போராட்ட தியாகின்னு மட்டும்தான் தெரியும். எல்லா ஜாதிக்கும் ஒரு தலைவர் போட்டோ வேணுமில்லே? அதனாலே இவரை செலக்ட் பண்ணிக்கிட்டோம்”

விஸ்வநாததாஸ், சங்கரதாஸ் சாமிகளிடம் சீடர். காந்தியடிகளின் தொண்டர். முப்பது முறை சிறை சென்றவர். நாடகமேடையில் முருகனாக தோன்றினாலும் கதர்தான் உடுத்துவார். புராண நாடகங்களிலும் சுதந்திரப் போராட்ட கீதங்களை பாடி வெள்ளையர் அரசால் அடக்குமுறைகளுக்கு ஆளானவர். நாடு சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே காலமானவர் என்று எனக்குத் தெரிந்ததையெல்லாம் அவரிடம் சொன்னேன்.

“எங்க ஜாதித்தலைவரை பத்தி, எனக்குத் தெரிஞ்சதைவிட உனக்கு நிறைய தெரிஞ்சிருக்கு” என்றார்.

“இப்பவே ரொம்ப ஃபேமஸான தலைவர் இருக்காரே அண்ணே? திமுககாரரான நீங்க எதுக்கு காங்கிரஸ் தலைவரை முன்னிறுத்தறீங்க?”

“கலைஞரைதானே சொல்லுறே? அவர்தான் என் படத்தை ஜாதி போஸ்டர்லே போடக்கூடாதுன்னு சொல்லிட்டாரே? ஜாதின்னு சொல்லி அவரை யாரும் போய் பார்க்கவும் முடியாது. கட்சி மட்டும்தான் அவருக்கு கணக்கு” என்றார்.

இதுதான் கலைஞர். கலைஞரை சாதிவெறியர் என்று இன்று இணையங்களில் அர்ச்சிப்பவர்கள் அவரை என்றாவது அவருடைய சொந்த சாதி சங்க கூட்டங்களில் கண்டதுண்டா? கலைஞரின் சாதிக்காரன் என்று சொல்லி யாரேனும் யாரையேனும் அதிகாரம் செய்ததுண்டா? அரசியல் / அரசு பதவிகளில் தன்னுடைய சாதிக்காரர்களுக்கு கலைஞர் முக்கியத்துவம் தந்தார் என்று நாக்கு மேல் பல்லை போட்டு பேசமுடியுமா?

சாதியை கடப்பது சாமானிய சாதி மறுப்பாளனின் பெருங்கனவு. தந்தை பெரியாரின் குடும்பத்திலேயே கூட முழுமையாக நடைமுறைக்கு வராத இந்த சாதனையை தன் குடும்பத்தில் முழுக்க நிகழ்த்திக் காட்டியவர் கலைஞர் ஒருவர்தான். உயர்சாதியான பார்ப்பனரில் தொடங்கி, கடைநிலையில் இருக்கும் தாழ்த்தப்பட்டோர் வரை கலைஞரின் குடும்பத்தில் உண்டு. சாதியெதிர்ப்பு/மறுப்பு பேசுபவர்கள், இந்தியாவில் வேறு எந்தத் தலைவனின் குடும்பமாவது இப்படி சமத்துவபுரமாக மாறியது என்று உதாரணம் காட்ட முடியுமா? சாதிய அடையாளத்திலிருந்து வெகுதூரத்துக்கு வந்துவிட்ட கலைஞரைதான் இன்னமும் அவர் பிறந்த சாதி துரத்திக் கொண்டே இருக்கிறது என்பதே வேதனை.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஜூனியர் விகடன்’ ஏடு, ஒரு கட்டுரை எழுதியது. “ராஜராஜ சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவை பட்டுவேட்டி, பட்டுசட்டை அணிந்து கொண்டாடினார் கருணாநிதி” என்று காரசாரமாக விமர்சித்தது. வாசித்த சூத்திரமகாஜனங்களும் பதறிப்போய், “ஒரு சூத்திரனுக்கு இப்படியொரு வாழ்வா?” என்று மனம் வெதும்பினார்கள்.

ஜூ.வி. இதழ் அக்கட்டுரையில் ‘வேண்டுமென்றே’ மறைத்த செய்தி ஒன்றுண்டு. கலைஞர், பட்டுவேட்டி பட்டுசட்டை அலங்காரத்தில் கலந்துக்கொண்ட நிகழ்வு தஞ்சையில் நடந்த நாட்டிய நிகழ்ச்சி. பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் கலைஞர்கள் ஆடிய நிகழ்ச்சி. கரைவேட்டியை தவிர வேறு உடையை நாடாத கலைஞர், அன்று ஏன் பட்டினை தேர்ந்தெடுத்தார் என்கிற ரகசியம் அவரது சமூகத்தாருக்குதான் தெரியும். ஆயிரம் ஆண்டு சாதிய இழிவை துடைத்தெறிந்துவிட்டோம் என்பதன் அடையாளமாகதான் அன்று கலைஞர் பட்டு வேட்டி, சட்டையில் ஜொலித்தார்.

எதற்கு பூசி மெழுகிக் கொண்டிருக்க வேண்டும்? கிராமங்களில் இன்றும் சாதாரணமாக ‘அம்பட்டன் கருணாநிதி’ என்றுதான் கலைஞர் வெறுப்பாளர்கள் அருவருப்போடு விளிக்கிறார்கள். கழகத்தை ‘அம்பட்டன் கட்சி’ என்றுதான் ஐம்பது ஆண்டுகளாக விமர்சிக்கிறார்கள். இதில் ஒளிவுமறைவு ஏதுமில்லை. முப்பதாண்டுகளுக்கும் மேலாக கழகத்துக்காக / கலைஞருக்காக பாடுபட்ட அண்ணன் வைகோவுக்கும், அவர்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விட்டதே என்பதுதான் ஆதங்கம். “வைகோவின் பேச்சை கண்டிக்கிறோம்” என்று கூறிவிட்டு, கூடவே ‘ஆனால்’, ‘அதே நேரம்’ போடும் அறிவுஜீவிகளும் இதே ரகம்தான். இடதுசாரிகளை சொல்லவே தேவையில்லை. அவர்கள் சாதி சங்கம் நடத்தப் போகலாம்.

‘திமுக, ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது; கலைஞர் முதல்வர் ஆகக்கூடாது’ என்கிற பலரது உள்மன விருப்பத்துக்கு கலைஞர் பிறந்த சாதியும் காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை. சாதிய ஒடுக்குமுறைகளை கண்டிப்பதில் எவரையும்விட அதிக கடமை கொண்டவர்களான தலித்துகளே இதற்கு துணைபோகக்கூடிய விசித்திரமான சமூகமுரணைதான் எப்படி புரிந்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

நிறைந்த ஒளியில்

$
0
0
 சினிமாவுக்கு மட்டுமல்ல. நூல்களுக்கும் நெகட்டிவ்வாக ‘டைட்டில்’ வைக்கக்கூடாது. நிறைவான சமாச்சாரங்கள் அடங்கிய இந்த நூலுக்கு போய் ஏன் ‘குறைந்த’ டைட்டில் என்று தெரியவில்லை. இலக்கியம் என்பது மாதிரியெல்லாம் பம்மாத்து செய்யாமல், வெகுசுவாரஸ்யமாக - அதேநேரம் சிந்தனையைத் தூண்டும் வகையிலான நேர்மையான பத்தி எழுத்து பிரபுகாளிதாஸ் எழுதியிருக்கும் ‘குறைந்த ஒளியில்’.

சாருவின் சிஷ்யன். ஆனால், குருவே சந்தோஷப்படக்கூடிய அளவுக்கு எழுத்து நுட்பத்தில் அவரையும் தாண்டிச் செல்கிறார். 2000ங்களின் தொடக்கத்தில் விகடன் டாட் காமில் சாரு எழுதிய ‘கோணல் பக்கங்கள்’ பகுதியின் லேட்டஸ்ட் வெர்ஷன் மாதிரியிருக்கிறது. நூல் முழுக்கவே எந்த வகைப்பாட்டிலும் அடங்காத deconstructionதான்.

தூங்குவதற்கு முன்பு ஒரு நாற்பது, ஐம்பது பக்கங்கள் வாசிக்க வேண்டும் என்று விரதம். நேற்று இரவு இந்த நூலை வாசிக்கத் தொடங்கியவுடன் தூக்கத்தையே மறந்துவிட்டு, முழுக்க வாசித்த பின்புதான் வைத்தேன். ப்ரீத்திக்கு நான் கேரண்டி என்பது மாதிரி ‘குறைந்த ஒளியில்’ தரக்கூடிய வாசிப்பின்பத்துக்கு நான் கேரண்டி.

நூலில் என்ன என்னவெல்லாம் இருக்கிறது என்று பட்டியல் போட்டு, நீங்கள் படம் பார்க்கும் முன்பாகவே, நாம் பார்த்துவிட்ட படத்தின் கதையை காட்சிவாரியாக சொல்ல வரவில்லை.  ஒரே ஒரு சாம்பிள் மட்டும்.

பிரபு, ஒரு அப்பார்ட்மெண்டில் தங்கியிருக்கிறார். பக்கத்தில் ஒரு வீடு. மாடியில் ஆள் அரவமே இல்லை. ஆனால், இரவுகளில் தொடர்ந்து இளையராஜா பாட்டு கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் நிஜமாகவே பாட்டுதான் கேட்கிறதா அல்லது அது தன்னுடைய மனப்பிராந்தியா என்று குழம்புகிறார்.

ஒருநாள் பிரபுவின் மகன் அமைதியாக உட்கார்ந்திருக்கிறான். என்னடா என்று இவர் கேட்கிறார். பக்கத்துலேருந்து பாட்டு கேட்குதுப்பா என்கிறான் அவன். எந்த சத்தமுமில்லாமல் அமைதியாக இருந்தது என்கிறார் இவர்.

உலகத்தரமான சிறுகதையாக வந்திருக்க வேண்டிய விஷயத்தை, ஒரு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸாக முடித்துக் கொண்டிருக்கிறாரே என்று பிரபு மீது கோபம்தான் வருகிறது.

இப்படிதான் நூல் முழுக்கவே பிரபுவின் ரகளையான அனுபவங்களும், அபிப்ராயங்களும். Pulp என்பதை ஓரிடத்தில் குப்பை என்கிறார் பிரபு. ஆனால், இந்த நூலையும் pulp வகையில்தான் சேர்க்க வேண்டியிருக்கிறது. Pulpதான் எழுத்தில் மிகச்சிறந்தது, எழுதுவதற்கும் கடினமானது, ஆனால் வாசிப்பதற்கு இலகுவானது என்பது நம் அபிப்ராயம்.

பொதுவாக இதுபோல இணையத் தளங்களில் எழுதியவற்றை தொகுக்கும்போது பக்கத்துக்கு பக்கம் ஒருமாதிரியான தொடர்ச்சியில்லாத தன்மை வெளிப்படும். ஆனால், இந்நூல் முழுக்க திட்டமிட்டு ஒரே அமர்வில் எழுதியதைப் போன்ற கச்சிதமான எடிட்டிங்.

நூல் விமர்சனம் எனும்போது ஏதேனும் குறையை சொல்லியே ஆகவேண்டும். ‘குறைந்த ஒளியின்’ புத்தகத்துடைய பெரிய குறையே ‘நான்’தான். நூல் முழுக்க எத்தனை ‘நான்’கள் என்று கேட்டு வாசகர்களுக்கு போட்டிவைத்து, பரிசு கொடுக்கலாம். முன்பு ஒரு சினிமாவில் எத்தனை முறை ரகுவரன் ‘ஐ நோ’ சொல்லுகிறார் என்று இப்படிதான் போட்டி வைத்தார்கள்.

வெகுஜன எழுத்தில் இந்த தன்னிலைப் பிரச்சினையை சுலபமாக கடப்பார்கள். “வண்ணத்திரை சார்பாக ‘நாம்’ நமீதாவை சந்தித்தபோது, ‘வா மச்சான், இப்போதான் வழி தெரிஞ்சுதா?’ என்று பிரும்மாண்டமான தன் நெஞ்சை நிமிர்த்தி அமர்க்களமான வரவேற்பைக் கொடுத்தார்” என்று தன்னிலையை பன்மையாக்கி, ‘நான்’ என்கிற அகங்காரத்தின் காரத்தை குறைப்பார்கள். சில வாரங்கள் கட்டுரைகளை ‘நான்’ அடிப்படையில் வடிவமைத்து, ரொம்ப மொக்கையாக இருக்கிறது என்று ஆனந்தவிகடனே யூ டர்ன் அடித்த சம்பவம்கூட நடந்தது. ஒன்றுமில்லை. ‘நான்’ என்பதை வாசிக்கும்போது எழுதியவனுக்கு கொம்பு முளைத்திருக்கிறதோ என்கிற எண்ணத்தை வாசகனுக்கு ஏற்படுத்தும். அதுதான் பிரச்சினை. இவர் Made in Charu Vasagar Vattam என்பதால் ‘நான்’ ‘நான்’ என்று ஏலம் போட்டிருக்கிறார். அடுத்தடுத்த நூல்களில் கொஞ்சம் தவிர்க்கலாம்.

முதல் நூல் என்பது ஓர் ஆசிட் டெஸ்ட். தன்னுடைய இலகுவான மொழிவன்மையாலும், அனுபவங்கள் தந்த content பலத்தாலும் அதை அசால்டாக கடந்திருக்கிறார் பிரபு காளிதாஸ்.
நூல் : குறைந்த ஒளியில்
எழுதியவர் : பிரபு காளிதாஸ்
விலை : ரூ.120
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
Viewing all 406 articles
Browse latest View live


Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>