’அந்திமழை’ என்பது வெறும் பெயரோ, பத்திரிகையோ, இணையத்தளமோ மட்டுமல்ல. அது ஓர் இயக்கம்.
கால் நூற்றாண்டுக்கு முன்பாக கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் இணைந்து ‘அந்திமழை’ என்கிற பெயரில் கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினார்கள். கல்லூரிப் படிப்பு முடித்ததுமே அந்த பேட்ச், தன்னுடைய கல்லூரிக்கால செயல்பாடுகளை சராசரி வாழ்வின் அழுத்தம் காரணமாக கைவிடுவதுதான் இயல்பானது. ‘அந்திமழை’க்கு அந்த அவலம் நிகழாமல் பார்த்துக் கொண்டார்கள். அடுத்து வந்த கல்லூரித் தலைமுறைகளுக்கு அப்படியே அந்திமழை கடத்தப்பட்டு கையெழுத்துப் பத்திரிகையிலிருந்து அச்சுப் பத்திரிகையாக பரிணாமம் பெற்றது. வெகுஜனத் தளத்தில் இயங்கும் இதழ்களுக்கும், சிற்றிதழ்களுக்கும், இடைநிலை இதழ்களுக்கும் சவால் விடும் வண்ணமாக ஒரு கல்லூரிப் பத்திரிகையான அந்திமழை செயல்பட்டது. இளங்கோவன், அசோகன், கவுதமன், குமரகுருபரன் என்று ஏராளமான இதழாளர்களை அந்திமழை பிரசவித்தது.
’முடிவில்லாத கனவு’ என்று அந்திமழையை ஒரு வரியில் வர்ணிக்கலாம்.
அந்திமழையின் தொடக்கமான இளங்கோவனுக்கு அதை வெகுஜனத் தளத்தில் பரவலாக கொண்டுவரவேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. ஓரளவுக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை பெற்றவுடன் அதை இணையத்தளம் ஆக்கினார். தம்பிகள் தோள் கொடுத்தனர். இணையத்தளத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு அதை அச்சிதழாக தரமேற்றியது. தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக, பின் தொடரும் நிழலாகவே இன்றுவரை அந்தகால மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அந்திமழையை ஆராதிக்கிறார்கள்.
இத்தகைய பிரசித்தி பெற்ற அந்திமழையின் ஒரு துளிதான் குமரகுருபரன். விகடன் மாணவப் பத்திரிகையாளராக தேர்வாகி, வெர்டினரி டாக்டர் என்கிற சமூகத்தின் கவுரமான அந்தஸ்தை உதறி முழுநேரப் பத்திரிகையாளர் ஆனார். வார இதழ், தினசரி, தொலைக்காட்சி, இணையத்தளம் என்று ஊடகத்தின் அத்தனை பரிமாணங்களிலும் போதுமான அனுபவம் பெற்றார்.
இளங்கோவன் அழைத்து, “ஏதாவது அந்திமழைக்கு எழுதேன்” என்று கட்டளையிட்டவுடன் அவர் எழுதிய தொடர்தான் “இன்னொருவனின் கனவு”. சினிமாவின் காதலரான குமரகுருபரன் சினிமாவைப் பற்றி எழுதுவது ஆச்சரியமல்ல. ஆனால் நமக்கு ஆச்சரியம் தருவது அவர் எழுத எடுத்துக்கொண்ட களம்தான். சினிமா என்றாலே விமர்சனம் எழுதுவார்கள். கலைஞர்களை பற்றிய ஃப்ரொபைல் கட்டுரையோ, பேட்டியோ எழுதுவார்கள். குமரகுருபரன் தன்னுடைய கனவுத் திரைப்படங்கள் எப்படி உருவானது என்கிற ரிஷிமூலத்தை தேடிப் பயணித்து எழுதியிருக்கிறார்.
சினிமா ஏன் ஒரு பார்வையாளனை வசீகரிக்கிறது?
அதை தன்னுடைய கனவின் நீட்சியாக கருதுகிறான். கனவு கருப்பு வெள்ளைதான். அதற்கு டி.டி.எஸ்., க்யூப் மாதிரி நவீன தொழில்நுட்பக் கட்டமைப்பு இல்லை. ஆனால் வெள்ளித்திரையில் வண்ணங்களை வாரியிறைத்து, துல்லியமான ஒலியோடு காட்டும் ஆச்சரியமான அறிவியல் சாதனத்தை தன்னுடைய வாழ்வுக்கு நெருக்கமான விஷயமாக மனிதன் கருதுவது இயல்பானதுதான். பார்வையாளனுக்கு இப்படியான கனவு என்றால், படைப்பாளிக்கு அது வேறு மாதிரியான கனவு. அவனுக்கு லட்சியம், கனவு, இத்யாதி இத்யாதியெல்லாம் சினிமாதான். பார்வையாளன், படைப்பாளி மற்றும் விமர்சகன் என்று சினிமாவின் நுகர்வோரை சுலபமான மூன்று பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். புதியதாக நான்காம் பிரிவு ஒன்றை உருவாக்க முயல்கிறார் குமரகுருபரன். அதாவது இந்த தொடர்ச்சியை எட்ட நின்று பார்த்து, என்ன நடந்தது என்பதை அழகாக ‘ரிப்போர்ட்டிங்’ செய்யும் வேலையை ‘இன்னொருவனின் கனவு’ மூலமாக சாத்தியமாக்கி இருக்கிறார்.
அந்திமழை பதிப்பகத்தின் (போன் : 9443224834, 43514540) வெளியீடாக ‘இன்னொருவனின் கனவு’ கவர்ச்சிகரமான பேக்கேஜிங்கில் 320 பக்க நூலாகியிருக்கிறது. விலை ரூ.220/-
நூலுக்கு ஜெயமோகன் எழுதியிருக்கும் அணிந்துரை ‘மீறல்களின் கனவு’ அட்டகாசமான அறிமுகத்தை தருகிறது (எனக்குள் எப்போது ஒரு ஜெயமோகன் வாசகன் உருவானான் என்று கடுப்போடு தேடிக்கொண்டே இருக்கிறேன்). நிழலுலகம் குறித்த திரைப்படங்கள் பற்றிய பார்வையை நறுக்காக தருகிறார் ஜெமோ. நிஜமான நிழலுகத்தை சினிமாவில் சித்தரிக்கவே முடியாது என்று ஆதாரங்களோடு வாதிடுகிறார். ஜெயமோகன் கொடுக்கும் அணிந்துரையின் துள்ளலான சுவாரஸ்யம், அவர் குமரகுருபரனின் நூலை வாசித்து சிலாகித்திருப்பதின் தொடர்ச்சியாக கிடைத்திருக்கும் பொக்கிஷம்.
சினிமா குறித்த நூல் என்பதால் சினிமா ஆர்வலர்களுக்கானது என்று தனியாக ‘இடஒதுக்கீடு’ செய்திட வேண்டாம். புனைவு தரும் கேளிக்கையையும், தீவிர சிந்தனைகளையும், நுண்ணுனர்வுகளையும் கலந்து மிக்ஸராக ‘இன்னொருவனின் கனவு’ கொடுக்கிறது. இந்நூலுக்காக நீங்கள் செலவழிக்கும் பணத்தைவிட, கூடுதலான விஷயங்களை நிச்சயம் கண்டடைவீர்கள் என்று மட்டும் உறுதி கூறுகிறேன். மிக நேர்த்தியாக எழுதப்பட்ட இந்த புத்தகம்தான் குமரகுருபரனின் முதல் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் சென்னை புத்தகக் காட்சியில் அந்திமழை ஸ்டாலில் இந்நூல் கிடைக்கிறது.
வாழ்த்துகள் குமரகுருபன் சார். அடுத்த ஆண்டு சினிமா நூலுக்கான தேசிய விருதை மீண்டும் தமிழில் நாம் பெறக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.
கால் நூற்றாண்டுக்கு முன்பாக கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் இணைந்து ‘அந்திமழை’ என்கிற பெயரில் கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினார்கள். கல்லூரிப் படிப்பு முடித்ததுமே அந்த பேட்ச், தன்னுடைய கல்லூரிக்கால செயல்பாடுகளை சராசரி வாழ்வின் அழுத்தம் காரணமாக கைவிடுவதுதான் இயல்பானது. ‘அந்திமழை’க்கு அந்த அவலம் நிகழாமல் பார்த்துக் கொண்டார்கள். அடுத்து வந்த கல்லூரித் தலைமுறைகளுக்கு அப்படியே அந்திமழை கடத்தப்பட்டு கையெழுத்துப் பத்திரிகையிலிருந்து அச்சுப் பத்திரிகையாக பரிணாமம் பெற்றது. வெகுஜனத் தளத்தில் இயங்கும் இதழ்களுக்கும், சிற்றிதழ்களுக்கும், இடைநிலை இதழ்களுக்கும் சவால் விடும் வண்ணமாக ஒரு கல்லூரிப் பத்திரிகையான அந்திமழை செயல்பட்டது. இளங்கோவன், அசோகன், கவுதமன், குமரகுருபரன் என்று ஏராளமான இதழாளர்களை அந்திமழை பிரசவித்தது.
’முடிவில்லாத கனவு’ என்று அந்திமழையை ஒரு வரியில் வர்ணிக்கலாம்.
அந்திமழையின் தொடக்கமான இளங்கோவனுக்கு அதை வெகுஜனத் தளத்தில் பரவலாக கொண்டுவரவேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. ஓரளவுக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை பெற்றவுடன் அதை இணையத்தளம் ஆக்கினார். தம்பிகள் தோள் கொடுத்தனர். இணையத்தளத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு அதை அச்சிதழாக தரமேற்றியது. தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக, பின் தொடரும் நிழலாகவே இன்றுவரை அந்தகால மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அந்திமழையை ஆராதிக்கிறார்கள்.
இத்தகைய பிரசித்தி பெற்ற அந்திமழையின் ஒரு துளிதான் குமரகுருபரன். விகடன் மாணவப் பத்திரிகையாளராக தேர்வாகி, வெர்டினரி டாக்டர் என்கிற சமூகத்தின் கவுரமான அந்தஸ்தை உதறி முழுநேரப் பத்திரிகையாளர் ஆனார். வார இதழ், தினசரி, தொலைக்காட்சி, இணையத்தளம் என்று ஊடகத்தின் அத்தனை பரிமாணங்களிலும் போதுமான அனுபவம் பெற்றார்.
இளங்கோவன் அழைத்து, “ஏதாவது அந்திமழைக்கு எழுதேன்” என்று கட்டளையிட்டவுடன் அவர் எழுதிய தொடர்தான் “இன்னொருவனின் கனவு”. சினிமாவின் காதலரான குமரகுருபரன் சினிமாவைப் பற்றி எழுதுவது ஆச்சரியமல்ல. ஆனால் நமக்கு ஆச்சரியம் தருவது அவர் எழுத எடுத்துக்கொண்ட களம்தான். சினிமா என்றாலே விமர்சனம் எழுதுவார்கள். கலைஞர்களை பற்றிய ஃப்ரொபைல் கட்டுரையோ, பேட்டியோ எழுதுவார்கள். குமரகுருபரன் தன்னுடைய கனவுத் திரைப்படங்கள் எப்படி உருவானது என்கிற ரிஷிமூலத்தை தேடிப் பயணித்து எழுதியிருக்கிறார்.
சினிமா ஏன் ஒரு பார்வையாளனை வசீகரிக்கிறது?
அதை தன்னுடைய கனவின் நீட்சியாக கருதுகிறான். கனவு கருப்பு வெள்ளைதான். அதற்கு டி.டி.எஸ்., க்யூப் மாதிரி நவீன தொழில்நுட்பக் கட்டமைப்பு இல்லை. ஆனால் வெள்ளித்திரையில் வண்ணங்களை வாரியிறைத்து, துல்லியமான ஒலியோடு காட்டும் ஆச்சரியமான அறிவியல் சாதனத்தை தன்னுடைய வாழ்வுக்கு நெருக்கமான விஷயமாக மனிதன் கருதுவது இயல்பானதுதான். பார்வையாளனுக்கு இப்படியான கனவு என்றால், படைப்பாளிக்கு அது வேறு மாதிரியான கனவு. அவனுக்கு லட்சியம், கனவு, இத்யாதி இத்யாதியெல்லாம் சினிமாதான். பார்வையாளன், படைப்பாளி மற்றும் விமர்சகன் என்று சினிமாவின் நுகர்வோரை சுலபமான மூன்று பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். புதியதாக நான்காம் பிரிவு ஒன்றை உருவாக்க முயல்கிறார் குமரகுருபரன். அதாவது இந்த தொடர்ச்சியை எட்ட நின்று பார்த்து, என்ன நடந்தது என்பதை அழகாக ‘ரிப்போர்ட்டிங்’ செய்யும் வேலையை ‘இன்னொருவனின் கனவு’ மூலமாக சாத்தியமாக்கி இருக்கிறார்.
அந்திமழை பதிப்பகத்தின் (போன் : 9443224834, 43514540) வெளியீடாக ‘இன்னொருவனின் கனவு’ கவர்ச்சிகரமான பேக்கேஜிங்கில் 320 பக்க நூலாகியிருக்கிறது. விலை ரூ.220/-
நூலுக்கு ஜெயமோகன் எழுதியிருக்கும் அணிந்துரை ‘மீறல்களின் கனவு’ அட்டகாசமான அறிமுகத்தை தருகிறது (எனக்குள் எப்போது ஒரு ஜெயமோகன் வாசகன் உருவானான் என்று கடுப்போடு தேடிக்கொண்டே இருக்கிறேன்). நிழலுலகம் குறித்த திரைப்படங்கள் பற்றிய பார்வையை நறுக்காக தருகிறார் ஜெமோ. நிஜமான நிழலுகத்தை சினிமாவில் சித்தரிக்கவே முடியாது என்று ஆதாரங்களோடு வாதிடுகிறார். ஜெயமோகன் கொடுக்கும் அணிந்துரையின் துள்ளலான சுவாரஸ்யம், அவர் குமரகுருபரனின் நூலை வாசித்து சிலாகித்திருப்பதின் தொடர்ச்சியாக கிடைத்திருக்கும் பொக்கிஷம்.
சினிமா குறித்த நூல் என்பதால் சினிமா ஆர்வலர்களுக்கானது என்று தனியாக ‘இடஒதுக்கீடு’ செய்திட வேண்டாம். புனைவு தரும் கேளிக்கையையும், தீவிர சிந்தனைகளையும், நுண்ணுனர்வுகளையும் கலந்து மிக்ஸராக ‘இன்னொருவனின் கனவு’ கொடுக்கிறது. இந்நூலுக்காக நீங்கள் செலவழிக்கும் பணத்தைவிட, கூடுதலான விஷயங்களை நிச்சயம் கண்டடைவீர்கள் என்று மட்டும் உறுதி கூறுகிறேன். மிக நேர்த்தியாக எழுதப்பட்ட இந்த புத்தகம்தான் குமரகுருபரனின் முதல் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் சென்னை புத்தகக் காட்சியில் அந்திமழை ஸ்டாலில் இந்நூல் கிடைக்கிறது.
வாழ்த்துகள் குமரகுருபன் சார். அடுத்த ஆண்டு சினிமா நூலுக்கான தேசிய விருதை மீண்டும் தமிழில் நாம் பெறக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.