Quantcast
Channel: யுவகிருஷ்ணா
Viewing all articles
Browse latest Browse all 406

அதிகாரத்துக்கு அலாரம்!

$
0
0
‘ஆம் ஆத்மி’ மீது இப்போது வரை எனக்கு பெரிய நம்பிக்கை எதுவும் வந்துவிடவில்லை. அன்னாஹசாரே அளவுக்கு இல்லையென்றாலும் கேஜ்ரிவாலும் எனக்கு சொல்லிக்கொள்ளக் கூடியவகையில் எண்டெர்டெயினராகதான் தெரிகிறார். அதிலும் தினகரனில் கேஜ்ரிவால் குறித்த செய்திகளை போடும்போதெல்லாம் குளிருக்கு அவர் தலைக்கு மப்ளர் சுற்றிய படத்தை மட்டுமே பயன்படுத்துவதை பார்க்கும்போதெல்லாம் குபீர் சிரிப்பு வருகிறது.

ஆனால், கேஜ்ரிவாலை இந்தியாவில் கோடிக்கணக்கானவர்கள் நம்புகிறார்கள். வேறு வழியில்லாமல் ‘நமோ’ கோஷமிட்டுக் கொண்டிருந்தவர்கள், இப்போது குல்லாவுக்கு சலாம் போட ஆரம்பித்திருக்கிறார்கள். கேஜ்ரிவாலின் படத்தை அட்டையில் போட்டால் பத்திரிகை விற்கிறது. இதெல்லாம் எவ்வளவு நாளைக்கு என்று தெரியவில்லை.

ஆனால், கேஜ்ரிவால் டில்லியில் போலிசாருக்கு எதிராக நடத்திய ‘தர்ணா’ அவர்மீது எனக்கு பெரிய மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இராணுவமும், காவல்துறையும் இந்தியா மாதிரியான ஜனநாயக நாட்டின் அடிப்படைப் பண்புக்கு சவால் விடும் அதிகார கூலிகளாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது காவல்துறையின் அராஜக நடவடிக்கைகளை எதிர்கொண்ட கட்சிகள் கூட, அதிகாரத்துக்கு வந்ததுமே அத்துறையின் அத்துமீறல்களை கண்டுகொள்ளாமலோ, அல்லது மேலும் கூடுதலாக ஆட்டம் போடவே அனுமதிக்கிறார்கள் என்பதுதான் வரலாறு. எடுத்துக்காட்டுக்கு திமுகவை எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவிலேயே காவல்துறையால் படுமோசமாக வேட்டையாடப்பட்டவர்கள் என்று எடுத்துக்கொண்டால் கம்யூனிஸ்டுகளுக்கு அடுத்து திமுகவினர்தான். இந்தியெதிர்ப்புப் போராட்டம், எமர்ஜென்ஸி, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம், ஜெயலலிதாவின் 91-96, 2001-06 காலக்கட்டங்களில் சராசரி திமுககாரனில் தொடங்கி திமுக தலைவர் வரை மிக மோசமாக மனிதநேயம் சற்றுமின்றி தமிழ்நாடு காவல்துறையால் நடத்தப்பட்டிருக்கிறார்கள். ஐந்து முறை ஆட்சிக்கு வந்த கலைஞரே கூட இத்துறைக்கு கடிவாளம் போடநினைத்ததில்லை என்பதுதான் அரசியல்முரண்.

அன்னா ஹசாரேவின் போராட்டங்களின் போது காவல்துறையின் அடக்குமுறைகளை நேரடியாக சந்தித்தவர் கேஜ்ரிவால். அரசுத்துறை அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்தின் போதும் இத்துறை எப்படிப்பட்ட அதிகாரபோதையில் இயங்குகிறது என்பதை நேரடியாகவே அறிந்திருப்பார்.

தொடர்கதையாகி விட்ட டெல்லியின் பாலியல் குற்றங்களை தடுக்கத் தவறியதாக டெல்லி காவல்துறையை எண்ணுகிறார். சட்ட அமைச்சரே களமிறங்கி சிலரை சுட்டிக் காட்டியும் டெல்லி காவல்துறை கையை கட்டி வேடிக்கை பார்க்கும் நிலையில், கேஜ்ரிவால் தன்னுடைய இமேஜை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தர்ணாவில் குதித்தது இந்திய சரித்திரத்தின் குறிப்பிடத்தக்க சம்பவமாக எண்ணத் தோன்றுகிறது. முதன்முறையாக ஓர் ஆட்சியாளர் இந்த அதிகாரப் பூனைகளுக்கு மணி கட்ட நினைக்கிறார். அதிகாரத்துக்கு எதிராக அலாரம் அடித்திருக்கிறார். அதிகார ருசி கண்டுவிட்ட காங்கிரஸும், பாஜகவும் பதறுவது இதனால்தான். மீடியாவும் சட்டென்று கேஜ்ரிவாலை விமர்சித்து தலையங்கங்களும், கிண்டலான செய்திகளும் எழுதிக் குவிக்கிறது.

கேஜ்ரிவாலின் இந்த நடவடிக்கையை அறம், ஆட்சியியல், லொட்டு லொசுக்கு காரணங்களை காட்டி ஆயிரம் நொட்டு சொல்லலாம். விளம்பரத்துக்கு செய்கிறார் என்று சுலபமாக விமர்சித்துவிட்டு போகலாம். அதிகாரத்துக்கு வந்த ஒருவர் அதிகாரத்துக்கு எதிராக போராடுகிறார் என்கிறவகையில் இவ்விவகாரத்தில் கேஜ்ரிவாலை ஆதரிப்பதே சாமானிய மனிதர்களுக்கான நல்ல சாய்ஸ். இராணுவம், காவல்துறை போன்றவை ஆட்சிக்கு வருபவர்களுக்கு வாலாட்டும் வகையில் இல்லாமல் சுதந்திரமாக செயல்படவும், நேர்மையான நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரவும் படவேண்டும். ஜனநாயக நாட்டில் வசிக்கும் சராசரி குடிமகன் மிலிட்டரிக்காரரையும், போலிஸ்காரரையும் கண்டு அச்சப்படும் நிலை மாறவேண்டும். குறிப்பிட்ட இப்பிரச்சினை தொடர்பான கேஜ்ரிவாலின் போராட்டம் முழுவெற்றியை அடையாவிட்டாலும், பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. மனித உரிமை அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதே நாட்டுக்கு நல்லது.

Viewing all articles
Browse latest Browse all 406

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>