Quantcast
Channel: யுவகிருஷ்ணா
Viewing all articles
Browse latest Browse all 406

the female thing

$
0
0
சமீபத்தில் அடுத்தடுத்து காணக்கிடைத்த நான்கு திரைப்படங்களுக்கும் ஒரு யதேச்சையான ஒற்றுமை அமைந்திருந்தது. அவற்றில் ஒன்று தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் வெளியான திரைப்படம். ஒன்று மலையாளம். மற்ற இரண்டும் இந்தி. ஆக, ஒரே நேரத்தில் தேசம் முழுக்க பரவலான, உற்று நோக்கினால் மட்டுமே உணர்ந்துக்கொள்ளக் கூடிய ஒரு மாய அலை அடித்துக் கொண்டிருக்கிறது.

நான்கு படங்களுக்கான ஒற்றுமை என்னவென்றால், ஒவ்வொன்றுமே தனித்துவக் குணம் கொண்ட நான்கு பெண்களை பிரதான கதாபாத்திரமாக கொண்டவை. இப்பெண்கள் யாரும் ‘so called பெண்ணியம்’ பேசவில்லை. அதே நேரம் ஆண்களுக்கு சவால் கொடுக்கக்கூடிய செயல்வேகமும், மனவோட்டமும் கொண்டவர்கள். அவர்களது கதாபாத்திர அமைப்பு ‘ஆணுக்கு பெண் சமம்’ என்கிற பெண்ணிய அடிப்படை சிந்தனையை, பிரச்சாரப் பாணியாக இல்லாமல், கருத்தியல்ரீதியாக ஆண்களை வலுச்சண்டைக்கு இழுக்காமல் (ஒருவேளை நான்கு படங்களின் இயக்குனரும் ஆண் என்பதால் இருக்கலாம்) இயல்பான காட்சிகளால் வெளிப்படுத்துகிறது.

ஓம் சாந்தி ஓசண்ணா (மலையாளம்) நஸ்ரியா, ஆஹா கல்யாணம் (தமிழ் & தெலுங்கு) வாணிகபூர், ஹசீ தோ பாஸீ (இந்தி) பரினீத்தி சோப்ரா, ஹைவே (இந்தி) அலியாபாட் என்று நால்வருமே குறிப்பிட்டுப் பேசக்கூடிய - ஆண் மொக்கைகளின் - தேவதைகள். இப்படங்களில் இவர்கள் ஏற்றிருக்கும் பாத்திரங்கள், பொதுவான பார்வையில் ‘டிபிக்கல் ஃபார்வேர்ட் இண்டியன் விமன்’ என்கிற சமகால சமூக கருத்தாக்கத்தின் குறியீடுகள்.
நஸ்ரியாவின் பூஜா பாத்திரம் ஆறேழு ஆண்டுகால அவளது வாழ்க்கையை விவரிக்கிறது. ஓம் சாந்தி ஓசண்ணா திரைப்படமே நாயகியின் கதையாடலாக அவளது குரலில் பார்வையாளனுக்கு விவரிக்கப்படுகிறது. பள்ளி மாணவியான பூஜா, தங்கள் சமூக வழக்கம் ஒன்றை காண நேர்கிறது. அதிகளவில் வரதட்சணை கொடுத்து, கல்யாண மார்க்கெட்டில் கொழுத்த மாப்பிள்ளையை பிடிக்கும் அந்த வழக்கத்தில் அவளுக்கு உடன்பாடில்லை. சிறுவயதிலிருந்தே நன்கு படித்த பெற்றோரால் சுதந்திரம் கொடுத்து வளர்க்கப்படும் ஒரே பெண். ஆண் மாதிரி முரட்டுத்தனமாக உடையணிவதும், நடந்துக் கொள்வதும் அவளுக்கு பிடித்த விஷயங்கள். பள்ளிப் பருவத்திலேயே பைக் வாங்கி, பயங்கர ஸ்பீடாக ஓட்டுபவள். தன்னுடைய வாழ்க்கைத்துணையை தானே தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வருகிறாள். சா பூ த்ரீ போட்டு அவள் தேர்ந்தெடுப்பது ஒரு கம்யூனிஸ்ட்டை. துரத்தி, துரத்தி அவனை காதலித்தாலும் தன்னுடைய சுயமரியாதையை எங்கும் விட்டுக் கொடுக்காமல் எப்படி இறுதியில் வெற்றி காண்கிறாள் என்பதுதான் கதை. படம் முழுக்கவே ஆண்களை ஜாலியாக கலாய்க்கும் அவளுடைய கமெண்டுகளால் நிறைந்திருக்கிறது. ஆண்கள் எவ்வளவு அபத்தமானவர்கள் என்பதை அடிக்கடி அழுத்திச் சொல்கிறாள். படம் முடியும்போது அவள் சொல்வதுதான் ஹைலைட். “இந்த ஆம்பளைப் பசங்களுக்கு ஒரு கெட்டப் பழக்கம். தனக்கு பொண்ணு பொறந்தா, தன்னோட முதல் காதலியோட பேரைதான் வைப்பானுங்க”. அவள் இந்த வசனத்தை பார்வையாளர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவளுடைய கணவன் தன் குழந்தையை பெயர் சொல்லி (முதல் காதலியின் பெயர்) தூக்கிக் கொஞ்சுகிறான். அவனை பூஜா கேவலமாகப் பார்ப்பதோடு படம் முடிகிறது.
வாணிகபூரின் ஸ்ருதி கேரக்டர் ஒரு லட்சியப்பெண்ணின் வாழ்க்கையை காமெடியாகவும், நெகிழ்ச்சியாகவும் சொல்ல முற்படுகிறது. கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே எதிர்காலம் என்னவென்பதை தீர்மானமாக திட்டம் தீட்டி வைத்திருக்கிறாள். அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு காலக்கட்டத்தையும் அவளே முன்பு திட்டமிட்ட ‘ப்ளூப்ரிண்ட்’ வடிவாகவே நடைபெறவேண்டும் என்கிற எண்ணம் கொண்டவள். படித்து முடித்ததுமே பிசினஸ். அந்த பிசினஸுக்கான பயிற்சியை படிக்கும் காலத்திலேயே எடுத்துக் கொண்டவள். ஐந்து ஆண்டுகள் தொழில் செய்துவிட்டு, வெற்றிகரமான தொழில்முனைவோராக ஆனபின்னர், அப்பா அம்மா சுட்டிக் காட்டும் ஆட்டுக்கு மாலையை போட்டு வெட்டுவது என்பதுதான் அவள் திட்டம். எதிர்பாராமல் இந்த திட்டத்துக்குள் குறுக்கீடாக ஒருவன் வருகிறான். அவனை காமெடியனாக பார்ப்பதா, காதலனாக பார்ப்பதா என்று அவளுக்கு குழப்பம். தன்னுடைய லட்சியத்துக்கு இவனால் பாதிப்பில்லை என்று அடையாளம் காணும்போது, அவனோடேயே வாழ்க்கையை தொடரலாம் என்கிற முடிவுக்கு வருகிறாள். இவளது ‘ஃபைனான்ஸோடு, ரொமான்ஸ் மிக்ஸ் ஆகக்கூடாது’ என்கிற தத்துவத்தால் குழம்பிப்போன அவனோ எதிர்மறையாக ரியாக்ட் செய்கிறான். இவளால் அவனை விலக்கவும் முடியவில்லை. சேர்த்துக் கொள்ளவும் முடியவில்லை. இறுதியில் தன்னுடைய மனதை அவனிடம் திறந்துக் காட்டி அவனை காமெடி காதலனாக ஏற்றுக் கொள்கிறாள். தன்னுடைய ஆரம்பகால எதிர்காலத் திட்டங்களை வெற்றிகரமாக தொடரவும் செய்கிறாள்.
பரினீத்தி சோப்ராவின் மீட்டா ஒரு ரோலர் கோஸ்டர் கேரக்டர். அவள் ஒரு பார்ன் இண்டெலிஜெண்ட். ஐஐடி கெமிக்கல் என்ஜினியர். புதுத்தொழில் தொடங்க அப்பாவிடம் லம்பாக முதலீடு கேட்கிறாள். அவர் தயங்கவே, பெரும் பணத்தோடு வீட்டை விட்டு சீனாவுக்கு ஓடிவிடுகிறாள். இதன் காரணமாக அவளுடைய அப்பாவுக்கு மாரடைப்பு வருகிறது. ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையில் மீண்டும் ஊருக்கு வருகிறாள். சீனாவில் சில முதலீட்டாளர்களிடம் இவளது அப்பாவை மாதிரி ‘போர்ஜரி’ கையெழுத்து இட்டு பல கோடிகளுக்கு கடனாளி ஆகியிருக்கிறாள். குறிப்பிட்ட தினங்களுக்குள் அந்த பணத்தை திரும்பத் தராவிட்டால் பெரும் பிரச்சினைக்கு இவளுடைய அப்பா ஆளாகுவார். இங்கே மீட்டாவின் அக்காவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. மீட்டாவின் மீள்வருகையால் தன்னுடைய திருமணம் பாதிக்கப்படலாம் என்று அவளுடைய அக்கா, தன்னை கட்டிக்கொள்ளப் போகும் மாப்பிள்ளையிடம் சொல்லி இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமல் பார்த்துக்கொள்ளச் சொல்கிறாள். மீட்டாவும், அவளுடைய வருங்கால அக்காள் கணவருக்குமான இந்த ஏழு நாட்கள்தான் கதை. சுட்டிப்பெண்ணாக, கிறுக்காக, போதைக்கு அடிமையானவளாக அவனுக்கு அறிமுகமாகும் மீட்டா, எவ்வளவு பெரிய புத்திசாலி என்பதை ஒரு தருணத்தில் அவன் உணர்கிறான். அவளுடைய பிரச்சினைகளை தீர்க்க சம்மதிக்கிறான். அவனும் மீட்டாவை ஒத்த மனோபாவம் கொண்டவன்தான் என்பதால், இந்த ஏழு நாட்களில் இருவருக்குள்ளும் அவர்கள் அறியாமலேயே ‘காதல்’ பற்றிக் கொள்கிறது. குடும்பத்தின் நன்மைக்காக காதலை துறக்க மீட்டா முடிவெடுக்கிறாள். மீட்டாவை இழக்க அவனுக்கு சம்மதமில்லை. இந்த முரணை பாசிட்டிவ்வான முறையில் களையும் உணர்ச்சிகரமான க்ளைமேக்ஸோடு படம் முடிகிறது.
அலியாபட்டின் வீராத்ரிபாதி கொஞ்சம் டார்க்கான லைஃப் பேக்கிரவுண்ட் கொண்ட பெண் பாத்திரம். பெரும் செல்வந்தரின் மகளான இவர், மறுநாள் திருமணம் எனும் நிலையில் தன்னுடைய வருங்கால கணவனோடு ஜாலி ரைட் போகும்போது யதேச்சையாக ஒரு கும்பலால் தேவையே இல்லாமல் கடத்தப்படுகிறாள். இவளது செல்வாக்கான குடும்பப் பின்னணியை பிற்பாடு உணர்ந்த கும்பல் அச்சப்படுகிறது. காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க இவளது கடத்தலுக்கு காரணமானவன் வேறு வேறு இடங்களுக்கு இவளை அழைத்துச் செல்கிறான். சில நாட்களிலேயே கடத்தப்பட்டவளுக்கும், கடத்தியவனுக்கும் பரஸ்பர உள்ளப் பரிமாற்றம் நடக்கிறது. அவளுடைய சிறுவயது அனுபவங்கள், ஒரு குழந்தைக்குரிய அடிப்படை சுதந்திரத்தை அளிக்கவில்லை என்பதை அவன் உணர்கிறான். சொந்தக்காரராலேயே பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டவள் அவள். அதைகூட வெளியே சொல்லமுடியாத கட்டாயம் அவளது குடும்ப கவுரவத்துக்கு இருக்கிறது. பெரும் பணக்காரக் குடும்பத்தில் கூண்டுக்கிளியாக அடைந்துக் கிடந்தவள், இந்த கடத்தல்காரனுடனான இலக்கற்ற பயணத்தில் தன்னுடைய சுதந்திர உணர்வை உணர்கிறாள். ஒரு கட்டத்தில் இவளை திரும்பிப் போகச் சொல்கிறான் கடத்தல்காரன். வீட்டுக்கு திரும்பிச் செல்வது தன்னுடைய சுதந்திரத்தை பறிக்குமென்று இவள் மறுக்கிறாள். ‘ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்’ எழவுதான். ஒரு மலை வாசஸ்தலத்தில் இவர்கள் தங்கியிருக்கும்போது, பின்தொடர்ந்து வரும் போலிஸாரால் அவன் என்கவுண்டர் செய்யப்படுகிறான். பழைய வாழ்க்கையை தொடர விருப்பமில்லை என்று குடும்பத்தாரிடம் மறுத்துவிட்டு, அதே மலைவாசஸ்தலத்தில் அவனுடைய நினைவுகளோடு வாழ்க்கையை தொடங்குகிறாள் வீரா.

நான்கு படங்களுமே இந்திய மேல்தட்டு வர்க்கத்துப் பெண்களின் பிரச்சினைகளை, எதிர்கொள்ளும் நெருக்கடிகளை பேசுபவை. இவை வர்க்கத்தைவிட அவர்களது பாலினத்தை முதன்மைப்படுத்தியிருக்கின்றன என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுக்க பரவலாக ஒரே மாதிரியாக, ஒரே காலக்கட்டத்தில் வெவ்வேறு இயக்குனர்கள் சிந்தித்திருப்பது யதேச்சையான ஒற்றுமையாகதான் இருக்கக்கூடும். அல்லது மல்ட்டிப்ளக்ஸ் வசூல் (வாங்கும் சக்தி பெண்களுக்கு அதிகரித்திருக்கும் நிலையின் பொருட்டு) அவர்களை இப்படி சிந்திக்க வைத்திருக்கிறதா என்றும் நாம் ஆராய வேண்டும்.

தமிழில் இம்மாதிரி பெண்களின் உணர்வுகளை பேசும் படங்களுக்கு பெரிய பாரம்பரியம் உண்டு. ஸ்ரீதரில் தொடங்கி பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் என்று ஏராளமான இயக்குனர்கள் ஏற்கனவே இங்கு வலுவாக பேசியிருக்கிறார்கள். அந்த கண்ணி எங்கே அறுந்தது என்று நாம் தேடவேண்டும். கதாநாயகி என்பவர் வெறுமனே கதாநாயகனால் காதலிக்கப்படவும், ஃபாரின் லொக்கேஷனில் குத்தாட்டம் போடவும், மேக்கப் பூசிக்கொண்ட பார்பி பொம்மையாகவும் மட்டுமே பெரும்பாலான திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் போக்கினை இளைய தலைமுறை இயக்குனர்கள் மாற்றுகின்ற போக்கு உருவாக வேண்டும். இந்நான்கு படங்களுமே வணிகரீதியாக வெற்றி கண்டவைதான். குறைந்தபட்சம் வணிகத்தேவைக்காவது நாம் இந்த மாற்றத்தை உருவாக்கியாக வேண்டும்.

Viewing all articles
Browse latest Browse all 406

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>