Quantcast
Channel: யுவகிருஷ்ணா
Viewing all articles
Browse latest Browse all 406

மோடிக்கு இங்கே யார் வாக்களிக்கப் போகிறார்கள்?

$
0
0
நாடு தழுவிய அளவில் மோடி அலை வீசுவதாக ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இதுவரை இந்தியத் தேர்தல்களில் ‘அலை’ என்பது பிரச்சினைகளையோ, சாதனைகளையோ, வேதனைகளையோ முன்வைத்து அடித்ததுண்டு. தனிநபர் ஒருவரை முன்வைத்து தேர்தலில் அலை எழுதுவது என்பது அரிதிலும் அரிதானது. அதிலும் நாடு தழுவிய அளவில் தலைவர் ஒருவருக்கு ஆதரவான அலை வீசுகிறது என்பது அபத்தத்திலும் அபத்தமானது.

இந்துத்துவா கோலோச்சும் உ.பி.,யில் மோடி அலை வீசுகிறது (வீசியதா என்பதை மே16தான் உறுதி செய்யவேண்டும்; கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட பாஜகவுக்கு அங்கே 3வது இடம்தான்) என்று சொன்னால் நம்பலாம். மோடி ஆளும் குஜராத்தில், பாஜக செல்வாக்குள்ள ராஜஸ்தான், ம.பி., கோவா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் அப்படியான அலை இருப்பதாக சொன்னால் கூட ஓக்கே. தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாதிரி மாநிலங்களிலும் மோடி சுனாமி தாக்குகிறது என்று இவர்கள் பில்டப் கொடுத்துக் கொண்டிருப்பதை நினைத்தால் வாயால் கூட சிரிக்க முடியவில்லை. மிசோரம், நாகலாந்தில் எல்லாம் போய் மோடிக்கு ஓட்டு என்று தாமரையை நீட்டினால் வேலைக்கு ஆகுமா?

குறிப்பாக தமிழ்நாட்டில் இண்டு இடுக்கெல்லாம் மோடிக்கு வாக்குகள் விழ இருப்பதாக இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே பதிவாகும் வாக்குகளில் குறைந்தபட்சம் அறுபது சதவிகித வாக்குகளை திமுக-அதிமுக இரண்டும் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக அறுவடை செய்துவருகிறது. இரு கட்சிகளுமே நாலில் ஒரு ஓட்டை (படுதோல்வி அடைந்த தேர்தல்களிலும்கூட) தன்னுடைய வாக்கு வங்கியாக நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. இந்தியாவில் வேறெங்காவது இதுமாதிரியான வாக்கு வங்கியை கட்சிகள் உருவாக்கி வைத்திருக்கின்றனவா என்று தெரியவில்லை. காமராஜர் காலத்திலிருந்து கண்ணை மூடிக்கொண்டு காங்கிரஸுக்கு பரம்பரையாக விழும் சொற்ப ஓட்டுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இடதுசாரிகளுக்கும் இதேமாதிரி பரம்பரை வாக்கு வங்கி உண்டு.

தேர்தலுக்கு தேர்தல் இடம் மாறும் உதிரிக்கட்சிகளான மதிமுக, பாமக, தேமுதிக போன்றவற்றை ஒரே கூட்டணியில் சேர்த்துவிட்டதால் பாஜக கூட்டணி இங்கே முதலிடத்துக்கு வந்துவிட முடியாது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு உண்டு. ஏதேனும் வலுவான கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிடும்போது கன்னியாகுமரியில் மட்டும் வெல்லக்கூடிய வாய்ப்புண்டு. தொண்ணூற்றியெட்டு குண்டுவெடிப்பை தொடர்ந்து கோயமுத்தூரிலும் ஓரளவுக்கு காலூன்றியிருக்கிறார்கள். இவை தவிர்த்து தமிழ்நாட்டில் வேறெங்கும் தனியாக நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது. இப்போது உதிரிகளின் கூட்டணியில் நிற்பதால் சில இடங்களில் அக்கட்சிக்கு டெபாசிட் கிடைக்கலாம் அவ்வளவே. அதுவும் கூட விஜயகாந்துக்கு, பாமகவுக்கு, வைகோவுக்கு என்று விழப்போகும் வாக்குகள்தான். மோடிக்கு என்றில்லை. தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமான ராஜீவுக்கே கூட இங்கே வாக்கு விழுந்ததில்லை. 84லும், 89லும் அதிமுகவோடு கூட்டணியில் இருந்ததால்தான் இங்கே காங்கிரஸ் பெரும்பான்மையான தொகுதிகளை வென்றதே தவிர, குறிப்பாக ராஜீவுக்கு தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை.

பஸ்களிலும், ரயில்களிலும், கல்லூரிகளிலும், இதர இடங்களிலும் மோடி வந்தால் நல்லது என்று பேசக்கூடிய ஆட்கள்கூட ஓட்டு என்று வந்தால் திமுக அல்லது அதிமுக கூட்டணியைதான் ஆதரிக்கப் போகிறார்கள். மாநிலக் கட்சிகளுக்கே முன்னுரிமை என்பது தமிழனின் அரசியல். தேசியப் பிரச்சினைகளை ஆவிபறக்க விவாதிப்பார்கள். அது வெறும் விவாதத்துக்கான கச்சா மட்டுமே.

முதல்முறை வாக்காளர்கள் கிட்டத்தட்ட முக்கால் கோடி பேர் தமிழகத்தில் வாக்களிக்கப் போகிறார்கள். அவர்கள் அப்படியே மோடிக்கு குத்து குத்துவென்று குத்தப் போகிறார்கள் என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த முதல் தலைமுறை வாக்காளர்களை டெஸ்ட் ட்யூப் பேபிகள் போல ‘சிறப்பு அடைமொழி’ கொடுத்து குறிப்பிடுவது ஏமாற்று வேலை. பதினெட்டு வயதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள்ளான வாக்காளர்கள் யாருமே திமுக/அதிமுக மற்றும் மாநிலக் கட்சிகளில் இல்லை என்பது போன்ற மாயையை உருவாக்குவது ஏமாற்றுவேலை. இவர்களும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்தான். திமுக/அதிமுக குடும்பங்களில் பிறந்தவர்கள்தான். பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று தமிழகத் தலைவர்களின் ஆதரவாளர்கள்தான். பிரம்மன் சொர்க்கத்தில் படைத்து நேரடியாக ஓட்டுரிமை வாங்கிக்கொண்டு குதித்தவர்கள் அல்ல. திமுக / அதிமுக கட்சிகளில் இளைஞர் அணி என்பது அக்கட்சிகளின் வலுவான அமைப்புகளாக இருக்கிறது என்பதை ஊடகங்கள் மறைக்க விரும்புகிறார்களா அல்லது மறக்க விரும்புகிறார்களா என்று தெரியவில்லை.

நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும் பாஜகவை ஆதரிப்பார்கள் என்கிற மோடி ஆதரவாளர்களின் எதிர்ப்பார்ப்பு கடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலிலேயே ஆட்டம் கண்டுவிட்டது. டெல்லியிலேயே அப்படிதான் என்றால், தமிழகத்தில் இவர்களிடம் தாமரையின் டவுசர் சுத்தமாக கழண்டுவிடும். உண்மையில் தமிழக அடித்தட்டு மக்களிடம், இம்முறை ‘கை’, மத்தியில் வராவிட்டால் ஆண்டுக்கு நூறுநாள் வேலை திட்டம் கேன்சல் ஆகிவிடும் என்கிற அச்சம் இருக்கிறது. தமிழக நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்தவரை மின்வெட்டு, விலைவாசி மாதிரி அடிப்படைப் பிரச்சினைகளை முன்வைத்து வாக்களிக்கக்கூடிய மனோபாவம் கொண்டவர்கள். தங்கள் கோபத்தையோ, பாசத்தையோ மாநிலக் கட்சிகளிடம்தான் காட்டுவார்களே தவிர, தேசியக் கட்சிகளை இவர்கள் இதுவரை பொருட்டாக மதித்ததே இல்லை.

தமிழக மக்கள் ‘கவர்னன்ஸ்’ பார்த்து வாக்களிக்கிறார்கள் என்பது புல்ஷிட். 96-01ல் மிகச்சிறந்த மாநில வளர்ச்சியை தந்த கலைஞர் ஆட்சியை தூக்கியெறிந்தவர்கள் இவர்கள். மாதாமாதம் அமைச்சர்களையும், ஐ.ஏ.எஸ்./ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் சரியான காரண காரியமின்றி பந்தாடி வரும் ஜெயலலிதாவை மூன்று முறை தேர்ந்தெடுத்தவர்கள் தமிழக மக்கள். ‘ஸ்டேட் மாஸ் மெண்டாலிட்டி’ அடிப்படையில் வாக்களித்துவரும் தமிழக மக்களிடம் ‘குஜராத்தைப் பார்’ என்று காட்டி வாக்கு வாங்க முடியாது என்கிற அடிப்படையை புரிந்துகொள்ள முடியும்.

இம்முறை தமிழகத்தில் தேமுதிக தலைமையில் அமைந்திருக்கும் பாஜக கூட்டணிக்கு யார் யாரெல்லாம் வாக்களிக்கப் போகிறார்கள்?

ஏற்கனவே பாஜகவுக்கு விழும் இரண்டு, இரண்டரை சதவிகிதம் (மோடி ஃபேக்டர் இருக்கிறது என்று எடுத்துக்கொண்டாலே கூட மேற்கொண்டு அரை சதவிகிதமோ, ஒரு சதவிகிதமோ கூடும்) விழப்போகிறது. கூடுதலாக மதிமுக, பாமக கட்சிகளின் தலா ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவான வாக்கு வங்கி, தேமுதிகவின் எட்டு சதவிகித வாக்குகள் என்று அதிகபட்சமாக பதினைந்து, பதினாறு சதவிகிதத்தை தொடப்போகிறார்கள். அவ்வளவுதான். ஓரிரு தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம். ஏழெட்டு தொகுதிகளில் டெபாசிட் கூட கிடைக்கலாம். மற்றபடி இது பெரியார் மண்தான். அதில் சந்தேகம் எதுவுமில்லை. மதவெறிக்கு இங்கே இடமில்லை. வேண்டுமென்றால் சாதிவெறியை கூட ’கன்சிடர்’ செய்வார்கள் :)

தமிழகத்தில் நிஜமான போட்டி என்பது அதிமுக – திமுகவுக்கு இடையே நடக்கக்கூடியதுதான். மற்றவர்கள் தொட்டுக்க ஊறுகாய்தான். வேண்டுமென்றால் சில தொகுதிகளில் இந்த இரு கட்சிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய வகையில் ஓட்டுகளை பிரிப்பார்கள். தேர்தல் களேபரம் எல்லாம் ஆரம்பிப்பதற்கு முன்பாக மிக வலுவாக இருந்தது அதிமுக. அக்கட்சி சரியான கூட்டணியை அமைக்காதது, பிரச்சாரத்தில் தீவிர முனைப்பு செலுத்தாதது போன்ற காரணிகளை பயன்படுத்தி திமுக இடைவெளியை குறைத்து வருகிறது. கோடைகால மின்வெட்டு இம்முறை திமுகவுக்கு சாதகம். இன்றைய தேதியிலும் அதிமுக முதலிடத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும், திமுக மிக நெருக்கமாகவே வந்துக் கொண்டிருக்கிறது. ரிசல்ட் சிக்ஸ்ட்டி – ஃபார்ட்டி என்று இருக்கப் போகிறது. யார் சிக்ஸ்ட்டி என்பதற்காகதான் நாம் மே 16 வரை காத்திருக்க வேண்டும்.

Viewing all articles
Browse latest Browse all 406

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>