Quantcast
Channel: யுவகிருஷ்ணா
Viewing all articles
Browse latest Browse all 406

திருப்பதி வெங்கடாசலபதி மகிமை

$
0
0
ஸ்ரீமான் சதீஷுக்கு வயது பதினெட்டு. ஒண்ணு + எட்டு = ஒன்பது. உலகம் போற்றும் தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் ராசி எண் என்பதை இதற்குள்ளாகவே ரத்தத்தின் ரத்தங்களான சிற்றிலைகள் கணக்கு போட்டிருப்பீர்கள்.

பதினெட்டு வருடத்தில் எவ்வளவு பேசியிருக்க வேண்டும்? ஆனால் ஸ்ரீமான் சதீஷ் அவர்களால் பேசமுடியவில்லை. ஸ்ரீமான் நரேந்திரமோதியின் ஆட்சி டெல்லி செங்கோட்டையிலும், தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புண்ணிய ஆட்சி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலும் நடந்துக் கொண்டிருக்கும் ஷேமமான கலிகாலத்தில் இப்படியொரு அவலம் பாரதத்தின் எந்த குடிமகனுக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் ஸ்ரீமான் சதீஷ் மட்டும், சரஸ்வதி சபதம் சிவாஜி மாதிரி வாய்பேச முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். ஏனெனில் அண்டோமேனியாவின் பங்காளியான எலிஸபெத் மகாராணியின் ஆட்சி ஆளுகைக்குள் இருக்கும் தீயநகரமான லண்டனில் அவர் வசித்து வந்தார்.

கிறிஸ்தவ மெஷினரியின் கோட்டைக்குள் வசித்து வந்ததால், நியாயமாக அவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய ஹிந்துமத கடவுளர்களின் அருளாசி இதுநாள் வரை கிடைக்காமல் இருந்தது. இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்டு புண்ணியஷேத்திரமான திருப்பதிக்கு ஸ்ரீமான் சதீஷின் குடும்பம் கடந்தவாரம் வந்தது.
திருமலையில் தரிசனம் முடிந்து, தீர்த்தம் பெற்றுக்கொண்டு பிரகாரத்துக்கு வந்தார்கள். அங்கே பஜகோவிந்த பக்தகோடிகள் இறைவனின் திருநாமத்தை ‘கோயிந்தா, கோயிந்தா’ என்று கோஷமாக இட்டுக் கொண்டிருந்தார்கள். சதீஷின் நாக்கில் இறைவன் எழுத்தாணி கொண்டு எழுதினான். உடனே, “அம்மா” என்று பேசினார். அங்கிருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். ஸ்ரீமான் சதீஷ், அம்மா என்று அழைத்தது அவரது சொந்த அம்மாவை அல்ல. புரட்சித்தலைவி அம்மாவைதான் என்பது அனைவருக்கும் புரிந்தது. இறைவனின் திருத்தலத்தில் தனக்கு பேச்சுவந்த அதிசயத்தை உணர்ந்த ஸ்ரீமான் சதீஷ், அடுத்து ‘கோயிந்தா, கோயிந்தா’ என்று கோஷமிட திருப்பதியே திருயெழுச்சி கண்டது. இது சத்தியம். போனவாரம் திருமலையில் நிகழ்ந்த அற்புதம். நம் ஹிந்துமத புனிதப் பத்திரிகைகள் யாவும் இந்த அதிசயத்தை செய்திக்கட்டுரையாக வெளியிட்டிருப்பதிலிருந்தே, இந்த சத்தியத்தின் வலிமையை எண்பத்து ஐந்து கோடி ஹிந்துக்களும் உணரலாம்.

இதுநாள் வரை கிறிஸ்தவ மெஷினரிகள் நடத்தும் கபட கூட்டத்தில்தான் ‘நடக்க முடியாதவர்கள் நடப்பார்கள். பேசமுடியாதவர்கள் பேசுவார்கள். பாட முடியாதவர்கள் பாடுவார்கள்’ என்றெல்லாம் அற்புதங்கள் நிகழ்ந்ததாக பொய்யாக பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீமான் கமலஹாசன் அவர்கள் நடித்த ‘காதலா காதலா’ என்கிற திரைக்காவியத்தில் இந்த பொய்ப்பிரச்சாரம் முறியடிக்கப்பட்டுவிட்டதை ஏற்கனவே ஹிந்துக்கள் அறிந்ததே. ஆனால் இனி நிஜமாகவே நம் ஹிந்துமதத் தலங்களிலும் இந்த அற்புதங்கள் அடுத்தடுத்து நிகழும் என்பதற்கு ரத்த சாட்சியாக ஸ்ரீமான் சதீஷ் திகழ்கிறார். பதினெட்டு ஆண்டுகளாக பேசமுடியாதவர், இறைவனின் ஆலயத்தில் பேசியிருக்கிறார். இறைவன் இருக்கிறான் என்பதற்கு இதைவிட பெரிய ஆதாரம் வேறென்ன வேண்டும்?

பேசமுடிந்தாலும் நாமும் இனி ‘அம்மா, அம்மா’ என்று ஸ்ரீமான் சதீஷைப் போல உரக்கப் பேசுவோம். இதுவொன்றே நாம் நம் பேச்சுரிமையை தக்கவைத்திருப்பதற்கு அடையாளமாகும். புரட்சித்தலைவியின் புகழைப் போற்றுவோம். இறையருளை பெறுவோம். ‘கோயிந்தா, கோயிந்தா’ என்று கோஷமிட்டு, நம் எதிர்காலத்தை குறியீடாக கிறிஸ்தவ மெஷினரிகளுக்கு உணர்த்துவோம்.

தீயசக்திகளும் குடிவெறியர்களும் வீழ்க. அம்மா வாழ்க.

Viewing all articles
Browse latest Browse all 406

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>