Quantcast
Channel: யுவகிருஷ்ணா
Viewing all articles
Browse latest Browse all 406

சகுனியின் தாயம்

$
0
0
இதில் ரகசியம் எதுவுமில்லை. ‘கர்ணனின் கவசம்’ நூலின் என்னுரையிலேயே கே.என்.சிவராமன் குறிப்பிட்டு விட்டார். நரேனும், நானும் என்னவென்பதை. அதேதான். ‘சகுனியின் தாயம்’ தொடரிலும் எங்களுக்கு அதே வேஷம்தான்.

2013ஆம் ஆண்டின் இறுதிநாளில் முதல் அத்தியாயத்தை வாசித்தது ஏதோ நேற்று நடந்த போலிருக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டுகள் நிறைவடையப் போகிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் பொங்கல் இதழில் இருந்து குங்குமத்தில் இத்தொடர் வரத் தொடங்கியது என்று நினைவு. 49வது அத்தியாயத்தை சற்று முன்னர்தான் வாசித்தேன் (குங்குமம் வாசகர்கள் அடுத்த திங்கள் அன்று வாசிப்பார்கள்). 50வது அத்தியாயத்தோடு கதை முடிகிறது. ஒரு வருடமாகவா இந்த தாயத்தை உருட்டிக் கொண்டே இருந்திருக்கிறோம் என்று ஆச்சரியம் மேலிடுகிறது.

துரியோதன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சகாதேவன் குறித்துக் கொடுத்த முகூர்த்தத்தில் சகுனியின் தாயம் உருள்கிறது. தொடரின் ஆரம்பம் இதுதான்.

ஸ்காட் வில்லியம்ஸ் என்கிற பன்னாட்டு தரகு முதலாளிக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?

ஆலிஸின் மாய உலகம் போன்ற இடத்துக்குள் மகேஷ் ஏன் பிரவேசித்தான்?

யவனராணியும், இளமாறனும் புகார் நகருக்குள் ஏன் நுழைந்தார்கள்?

இப்படியாக மூன்று தளங்களில் தனித்தனியாக ‘சகுனியின் தாயம்’ பயணிக்கிறது. மூன்றுமே ஒன்றுக்கொன்று எவ்வகையிலும் தொடர்பில்லாதவை. ஆனால் மூன்றுக்கும் பொதுவான ஒரு புள்ளி உண்டு.
இந்நாவலின் தீம் முக்கியமானது. சமகாலத்து நடப்புகள் குறித்த கூர்மையான விமர்சனம் கொண்டது. அதாவது ஆடும், ஓநாயும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். தேவை ஏற்படும்போது ஆடு தன்னை ஓநாயாகவும், ஓநாய் தன்னை ஆடாகவும் மாற்றிக் கொள்கிறது. யார் இப்போது ஆடாக இருக்கிறோம், யார் ஓநாயாக இருக்கிறோம் என்று நம்மை நாமே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஸ்காட் வில்லியம்ஸ் கதை சமகாலத்தில் நடப்பது. ஆரம்பத்தில் ‘ரெட் மார்க்கெட்’ கதை என்பதைப் போன்று பாவ்லா காட்டிவிட்டு நக்சல்பாரிகள், தர்மபுரி கலவரம் என்று தமிழகத்தின் வெகுஜனத் தளத்தில் அவ்வளவாக அறியப்படாத களத்துக்குள் புகுந்து பயணிக்கிறது. ஓர் அத்தியாயம் முழுக்கவே தமிழக நக்ஸல்பாரிகளின் வரலாற்றை எளிய அறிமுகமாக கொடுக்கிறது. போலவே தர்மபுரி கலவரத்தை அப்படியே இன்னொரு அத்தியாயம் படம் பிடித்துக் காட்டுகிறது. ஒரு பிரபலமான போலிஸ் அதிகாரியையும், மறைந்துவிட்ட சந்தன கடத்தல்காரர் ஒருவரையும் நினைவுபடுத்துகிற பாத்திரங்கள் இப்பகுதிக்கு சுவாரஸ்யம் சேர்க்கின்றன. ஒரு நக்ஸல்பாரி, வெகுஜன இதழில் தொடர் எழுதினால் அப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது இந்த பகுதி.

மகேஷின் கதை முழுக்க ஃபேண்டஸி. வாண்டுமாமா நடையில் எழுதப்பட்ட இந்த கதையில் ஹாரிபாட்டர், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் என்று அத்துணை சூப்பர்ஹீரோக்களும் உள்ளே வருகிறார்கள். சிவராமனின் ஏரியாவான மேஜிக்கல் ரியலிஸம், போஸ்ட் மார்டனிஸம் எல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கும் பகுதி இதுதான்.

மூன்றாவது சாண்டில்யனின் ஏரியா. அவருக்கான ட்ரிப்யூட்டாக ‘யவனராணியே’ வருகிறார். இளமாறனின் தினவெடுக்கும் தோள்கள், யவனராணியின் கவர்ச்சியான மார்புகள் என்று லாகிரி வஸ்துகள் ஏராளமாக தூவப்பட்டிருந்தாலும் பண்டைய தமிழகத்தின் அரசியல் சூழ்ச்சிகள் குறித்த சித்தரிப்புதான் இப்பகுதியை ஆக்கிரமிக்கிறது. சேர சோழ பாண்டிய மன்னர்களுக்கு இடையேயான முரண்கள், சீன குறுக்கீடு, யவனர்கள் ஆதிக்கம் என்று கலர்ஃபுல்லான போர்ஷன் இது.
முந்தைய ‘கர்ணனின் கவசம்’ நூலில், சமகால இலக்கிய பாணி டெக்னிக்குகளை பயன்படுத்தினார் சிவராமன். ‘சகுனியின் தாயம்’ வடிவரீதியிலான பரிசோதனை முயற்சி. மூன்று வெவ்வேறு மொழியை பயன்படுத்தி இருக்கிறார். கதையின் அந்தந்த பகுதிக்கு எந்தெந்த மொழி தேவையோ, கதையே அதை கோரி பெற்றுக் கொண்டது. இந்த வித்தியாசமான முயற்சியை குங்குமம் வாசகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். முழு நாவலாக வாசிக்கும்போது சுவாரஸ்யம் இன்னும் சில மடங்கு கூடுமே தவிர, குறையாது என்று உறுதியாக தோன்றுகிறது. தொடருக்கான ஹைலைட்டாக ராஜாவின் ஓவியங்கள் விளங்கின. அவை நூலாக்கம் பெறும்போதும் இணைக்கப்பட்டால் நல்லது.

நாவலின் முடிவு?

உலகம் அழியும் வரை சகுனியின் தாயம் உருட்டப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். எனவே இந்த கதைக்கும் ‘முற்றும்’ இல்லை.

Viewing all articles
Browse latest Browse all 406

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>