Quantcast
Channel: யுவகிருஷ்ணா
Viewing all articles
Browse latest Browse all 406

ரைட்டர்ஸ் உலா : என்னுரை

$
0
0
‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று சொல்லதான் ஆசை.

இறைவன் இருந்திருந்தால் நன்றாகதான் இருந்திருக்கும் என்று வாழ்வியல் சிக்கல்கள் நெருக்கும்போது மட்டும் நினைத்துக் கொள்ளும் நாத்திகன் நான். இயற்கை நிகழ்வுகளை தவிர்த்து உலகின் எல்லா செயல்களுக்கும் மனிதன்தான் காரணமாக இருக்கிறான்.

அந்தவகையில் இந்நூல் உங்கள் கைகளில் தவழ காரணமாக இருப்பது இருவர். ஒருவர், ‘தினகரன்’ நாளிதழின் நிர்வாக மேலாளரான திரு ஆர்.எம்.ஆர். அடுத்தவர், ‘தினகரன்’ இணைப்பிதழ்களின் முதன்மை ஆசிரியரான கே.என்.சிவராமன்.

வெறும் இணைப்பிதழ்தானே என அலட்சியப்படுத்தாமல் தனி இதழுக்கான தன்மையுடன் ‘தினகரன்’ இணைப்பிதழ்களை இவர்கள் இருவரும் உருவாக்கி வருகிறார்கள். புதுப் புது வடிவங்களில் வித்தியாசமான சிந்தனைகளோடு கூடிய பேட்டிகளும், கட்டுரைகளும் அமையவேண்டும் என்று மெனக்கெடுகிறார்கள். அப்படி ‘தினகரன்’ ஞாயிறு இணைப்பிதழான ‘வசந்தம்’ இதழில் இவர்கள் வடிவமைத்த பகுதிதான் ‘ரைட்டர்ஸ் உலா’. எழுதியது மட்டுமே நான்.

இலக்கியத்தில் பெண்களின் பங்கு குறித்து ஒரு விவாதம் அப்போது தமிழ்ச் சூழலில் பரவலாக நடந்துக் கொண்டிருந்தது. சமகால தமிழ் பெண் படைப்பாளிகளின் படைப்புத் தரம் குறித்த கேள்வியும் வெகுவாக எழுந்தது. இதைப் பற்றியெல்லாம் சிவராமனும், நானும், நரேனும் தேநீர்க்கடையில் சூடுபறக்க உரையாடினோம்.

அந்த விவாதத்தின் நீட்சியே ‘ரைட்டர்ஸ் உலா’.

நிலவரைவியல், மொழி மாதிரி எந்த வரையறைகளையும் வைத்துக் கொள்ளாமல் மனம் போன போக்கில் வாராம்தோறும் ஒரு பெண் எழுத்தாளரை உரிய முறையில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம்.

‘தொடர்’ என்று அறிவித்துக் கொள்ளாமல் தனித்தனி கட்டுரையாக வாராவாரம் வந்தபோது ‘தினகரன் வசந்தம்’ வாசகர்களின் பெருவாரியான வரவேற்பு தந்த நெகிழ்ச்சிக்கு அளவேயில்லை. குறிப்பாக சகோதர இதழாளர்களை மனம்விட்டு பாராட்டுவதையே தன்னுடைய ஆதார குணமாகக் கொண்டிருக்கும் ‘நக்கீரன்’ வாரம் இருமுறை பத்திரிகையின் முதன்மை துணை ஆசிரியர் கோவி.லெனின், தமிழில் வரும் கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளையும் சுடச்சுட வாசித்துவிட்டு சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு தன்னுடைய கருத்தை விரிவாக தொலைபேசியில் பகிர்ந்துக்கொள்ளும் நண்பர் உளுந்தூர்ப்பேட்டை லலித்குமார் ஆகிய இருவரும் இத்தொடர் முழுக்க கூடவே பயணித்த தோழர்கள்.

இப்புத்தகத்தில் முக்கியமான எழுத்தாளர்கள் பலரின் பெயர்கள் விடுபட்டிருக்கலாம். அதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. நன்கு பிரபலமானவர்களை மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்திக் கொண்டே, தெரிந்த தகவல்களையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது வாசகர்களுக்கு சலிப்பைத் தரலாம் என்கிற எண்ணத்தாலேயே இது நடந்தது. அவர்கள் அறியாத புதிய தகவல் ஒன்றையாவது ஒவ்வொரு கட்டுரையிலும் தேடித்தரவேண்டும் என்கிற எண்ணத்தில் எழுதியதால் எந்த வரிசையையும் நாங்கள் அமைத்துக் கொள்ளவில்லை.

தமிழைப் பொறுத்தவரை வை.மு.கோதை நாயகி, லட்சுமி, ஆர்.சூடாமணி, அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், அனுராதா ரமணன் உட்பட அனைவரையும் சிறப்பிக்க ஆசைதான். ஆனால், மறைந்தும் மறையாமல் எழுத்துகளால் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இவர்களைப் பற்றி எழுத ஒருவார அறிமுகக் கட்டுரை போதாது. தனித்தனி புத்தகங்களாகவே எழுத வேண்டும். எனவேதான் இந்த நூலில் இவர்கள் இடம்பெறவில்லை.

நம்மோடு வாழ்ந்து, இயங்கிக் கொண்டிருக்கும் மூத்த தமிழ் படைப்பாளிகளான ரமணி சந்திரன், சிவசங்கரி ஆகியோரின் சிறப்புகளை சிறிய அளவிலாவது வாசகர்களுக்கு நினைவுபடுத்தியே ஆகவேண்டும் என்கிற எண்ணத்திலேயே அவர்கள் குறித்த கட்டுரைகளை சேர்த்திருக்கிறோம். சிவசங்கரி, நன்றிக் கடிதம் எழுதி பாராட்டியிருந்தார். கூச்சத்தோடு அவர் தந்த கவுரவத்தை ஏற்கிறோம்.

பெண் எழுத்தாளர்களை குறித்து ஓர் ஆண் எழுதுவது, வாசகர்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் இருந்தது. எனவேதான் என்னுடைய இளைய மகள் ‘தமிழ்நிலா’வின் பெயரில் எழுதினேன். ஆனால், இக்கட்டுரை குறித்த வாசகர்களின் எண்ணங்களை நேரடியாகவும், தொலைபேசி & கடிதங்கள் & மின்னஞ்சல்கள் மற்றும் சமூக இணையதளங்கள் வாயிலாகவும் அறிந்தபோது எங்களது சந்தேகம் அர்த்தமற்றது என்றுதான் தோன்றுகிறது. எழுதுகிறவரின் பெயரைவிட எழுதப்படும் விஷயத்துக்குதான் வாசகர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.

கதை சொல்வதில் கைதேர்ந்த நம் பெண்கள் கதை எழுதுவதில் அவ்வளவு நாட்டம் செலுத்துவதில்லை. எழுத்துலகில் ஆண்களோடு ஒப்பிடுகையில், பெண்களின் பங்களிப்பு மிகக்குறைவாகவே இருக்கிறது. ஆணும் பெண்ணும் சமம் எனும்போது எத்தனை ஆண் எழுத்தாளர்கள் இருக்கிறார்களோ, அத்தனை பெண் எழுத்தாளர்களும் இருக்கவேண்டும் என்பதுதானே நியாயம்?

இந்த நூலை வாசிக்க நேரும் ஒரு சில பெண்களாவது எழுத்துத்துறைக்கு வருவார்களேயானால், அதன் இலக்கை இப்புத்தகம் எட்டிவிட்டதாக அர்த்தம்.

இக்கட்டுரைகளை வாராவாரம் அழகான முறையில் வடிவமைத்துக் கொடுத்த வடிவமைப்பாளர்களுக்கும், தவறுகளை திறம்பட திருத்திய பிழை திருத்துனர்களுக்கும், கட்டுரைகளை சிறப்பாக தொகுத்து அருமையான நூலாக உங்கள் கைகளில் தவழவிட்டிருக்கும் சூரியன் பதிப்பகத்தாருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

அன்புடன்
யுவகிருஷ்ணா


நூல் : ரைட்டர்ஸ் உலா
விலை : ரூ.150/-
வெளியீடு : சூரியன் பதிப்பகம்

Viewing all articles
Browse latest Browse all 406

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>