தயாரிப்பாளரும் இயக்குனருமான ஒய்.வி.எஸ்.சவுத்ரியை வேறெந்த படமும் இப்படி படுத்தி எடுத்ததில்லை. ரத்தக்கண்ணீர் வடித்துவிட்டார். ‘ரே’ படத்துக்கு பூஜை போட்டது 2010 விஜயதசமிக்கு. ரிலீஸ் ஆகப்போவதோ வரும் இருபத்தேழாம் தேதி. பூஜை போட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிறது என்றால், அந்த படம் எவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டு வெளிவருகிறது என்பதை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. முன்னெப்போதோ ஆடியோ ரிலீஸ் ஆகிவிட்டது.
பழைய படம் என்று மக்கள் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக ஏதாவது ‘ஸ்டண்ட்’ செய்யவேண்டுமே என்று சவுத்ரி யோசித்தார். பளிச்சிட்டது ஓர் ஐடியா. புதியதாக ஒரு பாட்டை சேர்த்தார். பவர் ஸ்டார் பவன் கல்யாணின் சமூக அக்கறையையும், மக்கள் பணிகளையும் பாராட்டி ‘பவனிஸம்’ என்று பெயரிட்டு செமத்தியான பாட்டு. படத்தை எப்படியாவது பவர் ஸ்டார் ரசிகர்கள் தேத்திவிடுவார்கள் என்று சவுத்ரிக்கு ஒரு மூடநம்பிக்கை.
ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இந்த ஒரு பாடலை மட்டும் வெளியிட ஒரு விழா. பாடலை வெளியிடுபவரின் பெயரை பார்த்துதான் சீமாந்திராவும், தெலுங்கானாவும் ஆச்சரியப்பட்டது.
சினிமா விழாக்கள் என்றாலே தலைமறைவாகி விடுபவர். தெலுங்கு சினிமாவின் நக்சலைட். தன்னுடைய சொந்தப் படங்களின் பிரமோஷனுக்கு கூட தலைகாட்ட மறுப்பவர். ‘மக்கள் நாயகன்’ என்று தெலுங்கானா மக்கள் அடைமொழியிட்டு கொண்டாடும் ஆர்.நாராயணமூர்த்தி, பவனிஸம் பாடலை வெளியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டதும் யாராலும் நம்பவே முடியவில்லை. இதற்கு முன்பாக எஸ்.வி.ரங்காராவை பற்றிய நூல் ஒன்றின் வெளியீட்டில் மட்டும் முகம் காட்டியிருந்தார் மூர்த்தி.
பவன்கல்யாணை பிடிக்கும் என்பதால், ‘பவனிஸம்’ பாடலை வெளியிட ஒப்புக்கொண்டார் என்கிறார்கள். நாராயணமூர்த்தியை அறிந்தவர்களுக்கு அவரது இந்த முடிவு ஆச்சரியமாகதான் இருக்கிறது. மார்க்சிய புரட்சித்தலைவர்களின் தாக்கத்தில் இருப்பவர், பவன்கல்யானையும் ரசிக்கமுடியுமா என்ன?

“காக்கிநாடாவுக்கு நீங்கள்தான் எம்.பி” என்று கேட்காமலேயே இருமுறை தேர்தலில் சீட்டு கொடுத்தது தெலுங்கு தேசம் கட்சி. காங்கிரஸ் கட்சியும், “நீங்கள் எம்.எல்.ஏ. ஆகிவிடுங்களேன்” என்று தொகுதி ஒதுக்கியது.
அன்போடு மறுத்தார் தோழர் நாராயணமூர்த்தி. சாகும் வரை ‘சிகப்பு’தான் அவரது கொள்கை. காசோ, பணமோ, பதவியோ, ஆட்சியோ, அதிகாரமோ தேவையே இல்லை. மக்களுக்காகதான் கலை என்கிற மார்க்ஸிய சித்தாந்தத்தில் ஊறிப் போனவர்.
கிழக்கு கோதாவரி மாவட்டம். மல்லம்பேட் என்கிற குக்கிராமம். ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் மூர்த்தி. ஊரில் ஒரே ஒரு டூரிங் டாக்கீஸ் உண்டு. என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ் படங்களைதான் அங்கே அதிகம் திரையிடுவார்கள்.
என்.டி.ராமாராவின் தீவிர ரசிகரான மூர்த்தி ஒரு படம் விடாமல் போய்விடுவார். படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்ததுமே படத்தில் என்.டி.ஆர் எப்படி ஸ்டைல் காட்டினாரோ, அதே மாதிரி கண்ணாடி முன்பாக ஸ்டைல் காட்டுவார். நாகேஸ்வரராவ் மாதிரி நடித்துப் பார்ப்பார். இப்படியாக நடிப்பு ஆர்வம் சின்னவயதிலேயே முளைவிட்டு உள்ளுக்கு ஆலமரமாய் கிளைபரப்பி வளர்ந்து நின்றது.
சங்காவரம் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோதுதான் அரசியல் விழிப்புணர்வு அவருக்கு ஏற்படத் தொடங்கியது. அரசு, என்பது பொதுமக்களை வதைக்கும் இயந்திரம் என்று உணரத் தொடங்கினார். புரட்சிகர இயக்கங்கள் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்படத் தொடங்கியது இந்த மாணவப் பருவத்தில்தான்.
இண்டர்மீடியேட் முடித்ததுமே சென்னைக்கு படையெடுத்தார். ஹீரோ ஆவதுதானே அவரது கனவு?
தாசரிநாராயணராவை சந்தித்து வாய்ப்பு கேட்டார். அப்போது கிருஷ்ணா நடித்துக் கொண்டிருந்த படம் ஒன்றின் படப்பிடிப்பு. ஒரு பாடல் காட்சியில் நூறு பேரில் ஒருவராக மூர்த்தியை நிற்க வைக்கப்பட்டார். ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிவது அவருக்கு பிடிக்கவில்லை. தாசரியிடம் முறையிட்டார்.
“முதலில் படிப்பை முடித்துவிட்டு வா. பிறகு பார்க்கலாம்” என்றார் தாசரி.
அப்போதுதான் இண்டர்மீடியேட் ரிசல்ட் வந்திருந்தது. பட்டப்படிப்பு என்றதுமே மூர்த்தியின் சாய்ஸ் ‘பி.ஏ’தான். ஏனெனில் அப்போதெல்லாம் சினிமா டைட்டில்களில் ‘என்.டி.ராமாராவ், பி.ஏ’ என்றுதான் போடுவார்கள்.
பெத்தாபுரம் கல்லூரியில் பி.ஏ படிக்க சேர்ந்தார். இதற்கிடையே அவர் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்திருந்த படமும் வெளிவந்தது. கூட்டத்தில் ஒருவராக தலை காட்டியிருந்தாலும், அவரை அடையாளங்கண்டு சொந்த ஊர்க்காரர்கள் விசில் அடித்தார்கள்.

பொதுவாக கம்யூனிஸ்டுகள் ஒருவரை ஒருவர் ‘தோழர்’ என்றே விளித்துக் கொள்வார்கள். ஆனால் கல்லூரி மொத்தத்துக்கும் நாராயணமூர்த்தி ‘பிரதர்’. கல்லூரிக்கு புதுக் கட்டிடம் கட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தி பணம் வசூலித்துத் தந்தார். பீகாரில் வெள்ளம் என்றால் மூர்த்தி தலைமையில் மாணவர்கள் தெருத்தெருவாக போய் காசு சேர்த்து அரசிடம் நன்கொடை தருவார்கள். இவ்வாறாக அந்த வயதிலேயே தன்னை மொத்தமாக சமூகத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டார்.
அது எமர்ஜென்ஸி காலம். அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்று திரள செங்கொடியை பறக்கவிடுவதே ஒரே வழி என்று ஊர் ஊராகப் போய் மக்களை அணி திரட்டினார். மூர்த்தி சென்ற இடமெல்லாம் செங்கொடி பட்டொளி வீசிப்பறந்தது. அடிக்கடி போலிஸ் வந்து அள்ளிக்கொண்டு போவார்கள். மாணவர்கள் போராட்டம் நடத்தி மூர்த்தியை மீட்பார்கள்.
கல்லூரிப் படிப்பு முடிந்ததுமே மீண்டும் சென்னைக்கு பஸ் ஏறினார். தாசரி நாராயணராவைப் பார்த்தார். அப்போது கிருஷ்ணாவின் மூத்தமகன் ரமேஷ்பாபுவை வைத்து (மகேஷ்பாபுவின் அண்ணன்) ‘நீடா’ என்றொரு படம் எடுத்துக் கொண்டிருந்தார் தாசரி. அந்தப் படத்தில் சொல்லிக் கொள்ளும்படியான வேடம் மூர்த்திக்கு கிடைத்தது. படமும் நன்றாக ஓடியது. சென்னையில் நடந்த நூறாவது நாள் விழாவில் கலைஞரின் கையால் கேடயம் வாங்கினார் நாராயணமூர்த்தி.
தொடர்ச்சியாக நிறைய வாய்ப்புகள் வந்தது. குணச்சித்திர வேடம், வில்லனுக்கு கையாள் என்று நடித்து சோர்ந்துப் போனார். தன்னை ஹீரோவாக்கச் சொல்லி தாசரியிடம் கேட்டார். அந்த படம்தான் ‘சங்கீதா’. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசையமைத்திருந்த அந்த படம் சுமாராக ஓடியது.
சின்ன வேடங்களில் நடித்துவிட்டு திடீரென ஹீரோவாகும் நடிகர்களுக்கு ஏற்படும் பிரச்சினைதான் நாராயணமூர்த்திக்கும் உருவானது. அவரை ஹீரோவாக நடிக்கவும் யாரும் அழைக்க மாட்டார்கள். ஹீரோவாகி விட்டாரே என்று சின்ன வேடங்களுக்கும் அழைக்க மாட்டார்கள். வாய்ப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தவரின் கையில் சுத்தமாக காசில்லை. சாப்பாட்டுக்கே ததிங்கிணத்தோம்.
இனி தன்னை யாரும் நடிக்க அழைக்கப் போவதில்லை என்கிற யதார்த்தத்தை உணர்ந்தவர் தானே இயக்குனர் ஆனால்தான் தன்னை நடிகராக நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று நினைத்தார். முன்பாக நடிக்கும்போதே தாசரி நாராயணராவின் அருகில் இருந்து இயக்கம் தொடர்பான பயிற்சியை பெற்றிருந்தார். ஆனாலும், முன் அனுபவம் இல்லாத நாராயணமூர்த்திக்கு வாய்ப்பு கொடுத்து யாரும் படம் தயாரிக்க முன்வரவில்லை.
நண்பர்களிடம் தன் விருப்பத்தைச் சொன்னார். அவர்களால் முடிந்த தொகையை ஆளாளுக்கு பங்களித்தார்கள். ‘சிநேக சித்ரா’ (நண்பர்களின் படம்) என்று தயாரிப்பு நிறுவனத்துக்கு பெயர் வைத்தார். நிறுவனத்தின் லோகோவாக இந்திய-ருஷ்ய நட்புறவின் இலட்சினையான இரண்டு கைகள் குலுக்கிக் கொள்ளும் படத்தை வரைந்தார். மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் மீது பாரத்தை போட்டுவிட்டு ‘அர்த்தராத்திரி சுதந்திரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை 1984ல் தொடங்கினார்.
மொத்த செலவு பதினாறு லட்சம். நக்ஸல்பாரிகளின் புகழ் பாடும் அந்த திரைப்படம் சென்ஸாரில் மாட்டி சின்னாபின்னம் ஆனது. படத்தில் நக்ஸலைட்டாக நடித்திருந்த சிகப்புச் சிந்தனைக்காரரான இயக்குனர் டி.கிருஷ்ணாவின் திடீர் மரணம் வேறு மூர்த்தியை பாதித்தது. கிருஷ்ணாதான் தெலுங்கு சினிமாவில் புரட்சிகரச் சிந்தனைகளை பரவலாக்கியவர். விஜயசாந்திக்கு ஆக்ஷன் இமேஜ் ஏற்படுத்தியவர். இவருடைய மகன்தான் இன்றைய டோலிவுட்டின் முன்னணி இளம் ஹீரோக்களில் ஒருவரான கோபிசந்த்.
ஒருவழியாக 1986ல் கிருஷ்ணாவின் முதல் நினைவு நாளன்று ‘அர்த்தராத்திரி சுதந்திரம்’ வெளியானது. கதை, வசனம், பாடல்களில் தீ பறந்தது. படம் சூப்பர்ஹிட்.
அன்று தொடங்கி இன்றுவரை இருபத்தைந்துக்கும் மேற்பட்ட படங்கள். சுமார் இருபது படங்கள் இவரது சொந்த தயாரிப்பு. படங்கள் நன்றாக ஓடும்போதெல்லாம் கோடிகள் குவியும். எதையும் மூர்த்தி தனக்காக சேர்த்துக் கொள்ளவில்லை. தேவைப்படும் மக்களுக்கு சத்தமே இல்லாமல் வாரி வழங்கிவிடுவார்.
அர்த்தராத்திரி சுதந்திரம், அடவி தீவட்டிலு, லால் சலாம், தண்டோரா, எர்ர சைன்யம், சீமலா தண்டு, தலாம், சீக்கட்டி சூர்யலு, ஊரு மனதிரா, வேகு சுக்கலு உள்ளிட்ட படங்கள் நன்றாக ஓடியவை. இவரது படங்களில் ஆபாசமான காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ நிச்சயமாக இருக்காது. முன்னணி நட்சத்திரங்கள், பிரும்மாண்டமான காட்சிகள், காமெடி டிராக்கெல்லாம் இல்லாமல் எளிமையாகவே படம் எடுப்பார்.

வேலையில்லாத் திண்டாட்டம், மூன்றாம் உலகநாடுகளின் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, அரசியல் அராஜகம், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான விஷயங்கள், உலக வங்கி கொள்கை என்று சமகாலத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களைதான் படத்தின் கதைக்கருவாக எடுத்துக் கொள்கிறார். படம் பார்க்கும் சாமானிய மனிதன், தன்னுடைய கேரக்டரையே திரையில் கண்டு விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதே தன் நோக்கம் என்கிறார்.
நாராயணமூர்த்தி, திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டால், “இதென்ன சர்வதேசப் பிரச்சினையா?” என்று பதிலளிப்பார். பஸ்ஸிலும், ரயிலிலும்தான் பயணிக்கிறார். சொந்தமாக வீடோ, காரோ இன்றுவரை கிடையாது.