Quantcast
Channel: யுவகிருஷ்ணா
Viewing all articles
Browse latest Browse all 406

இறைவி

$
0
0
டைட்டிலே பெருமழை சத்தத்தோடுதான் தொடங்குகிறது.

இன்னும் எத்தனை ஆண்டுகளோ கழித்து நடைபெறவிருக்கும் கல்யாணம் குறித்து கனவு காணும் ஓர் இறைவி, மறுநாளே கல்யாணம் செய்துக்கொள்ளப் போகும் ஓர் இறைவி, கல்யாணம் முடிந்து கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்து முடித்த ஓர் இறைவி.

அந்த மழைநாளில் இந்த இறைவிகளின் அப்போதைய மனநிலைதான் படத்தின் தொடக்கம். படம் முழுக்கவே பாத்திரங்களின் உணர்வுபூர்வமான எழுச்சியிலோ, வீழ்ச்சியிலோ சாட்சியாக ஜோவென மழை கொட்டுகிறது.

படத்தில் விஜய்சேதுபதி, “என்ன கான்செப்ட்?” என்று கேட்கிறார். ‘மழையில் நனைய விரும்பும் இறைவிகள்’ என்பதுதான் கான்செப்ட். இறுதியில் ஒரே ஒரு இறைவிதான் நனைகிறார் என்பதோடு படம் முடிகிறது.

பாலுமகேந்திரா, பாலச்சந்தர், சுஜாதா மூவருக்கும் tribute செய்யப்பட்டு படம் தொடங்குகிறது. நியாயமாகப் பார்க்கப் போனால் இந்தப் பட்டியலில் மணிரத்னத்தையும், ஆனந்தவிகடன் ஆசிரியர் ரா.கண்ணனையும் கூட சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும். ‘மவுன ராகம்’ ரேவதிக்குப் பிறகு மழையை அதிகம் காதலிப்பவர்கள் இவர்கள்தான்.

இறைவிகளின் கதையாக மட்டும் ‘இறைவி’ இருந்திருக்கலாம். கான்செப்டை மீறி இறைவன்களின் திருவிளையாடலாக மாறிவிட்டதுதான் ‘இறைவி’யின் சோகம்.

‘கோவலன் அல்ல கேவலன்’ என்கிற பாபிசிம்ஹாவின் கோபம் ஒருவகையில் நியாயமே. ‘வயிற்றுக்குள் இருக்கும் குட்டியை ஓர் ஓரமாக வைத்துவிட்டு, புதுக்குட்டியை எப்படி பிரசவிக்க முடியும்?’ என்கிற எஸ்.ஜே.சூர்யாவின் லாஜிக்கும் சரிதான். படைப்பாளியின் வலியை இன்னொரு படைப்பாளியாக புரிந்துக் கொள்ளும் சிற்பியான ராதாரவியின் பாத்திர வார்ப்பும் அருமை. வைப்பாட்டி மீதிருந்த ஆசையும், மோகமும் அற்றுப்போக மனைவியை நாடிவந்து வாழ விரும்பும் நேரத்தில் எல்லாம் ஏதோ பிரச்சினைகளால் பிரிய நேரும் விஜய் சேதுபதியின் பரிதவிப்பும் உணரக்கூடியதுதான்.

எல்லாம் இருந்தும் ‘இறைவி’யை ஏன் வழிபட முடியவில்லை என்றால் படத்தின் மையத்துக்கு தொடர்பில்லாமல் அலைபாயும் காட்சிகளாக தயாரிப்பாளரின் ஈகோ, சிலை கடத்தல் என்று திரைக்கதை கோட்டை தாண்டி ஓடிக்கொண்டே இருப்பதால்தான்.

நெடில் ஆண்கள், குறில் பெண்களை கொடுமைப் படுத்துகிறார்கள் என்கிற பிரசங்கமெல்லாம் சரிதான். உண்மைதான். ஆனால், ஆண்கள் அவ்வளவுதானா?

இருபத்து நான்கு வயதில் தன் தலையை தவிர அத்தனையையும் அடகு வைத்து தங்கைக்கு திருமணம் செய்துவைத்த ஆணை எனக்குத் தெரியும். மனைவி உடல்நலிவுற்ற காலத்தில் urine pan பிடித்தவனையும் தெரியும். வாங்கும் சம்பளத்தை அப்படியே கவர் பிரிக்காமல் அம்மாவிடம் கொடுத்து, அம்மா கொடுக்கும் காசில் தன் செலவுகளை சுருக்கிக் கொள்பவனையும் தெரியும். எலாஸ்டிக் போன ஜட்டியை அரைஞாண்கயிறின் உதவியால் அட்ஜஸ்ட் செய்து மாட்டிக்கொண்டு, குழந்தைகளுக்கு பர்த்டே டிரெஸ்ஸை ஆடம்பரமாக எடுக்கும் ஆண்களை கார்த்திக் சுப்புராஜ் அறியமாட்டாரா என்ன?

அறிவார். ஆனால், பெண்ணியம்தான் இப்போது பேஷன். அது நிஜமான பெண்ணியமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் அவசியமில்லை. பெண்ணியம் மாதிரி ‘போலச் செய்துவிட்டால்’ போதும். ‘கல்யாணமெல்லாம் வேணாம், just fuck me’ என்று பூஜா திவாரியா, விஜய் சேதுபதியை கூப்பிட்டு கூடும்போது சத்யம் சினிமாஸில் ஐடி ரசிகர்கள் விசில் அடித்து ஆர்ப்பரிக்கிறார்கள். போதாதா?

‘வித்தியாச விரும்பி’ என்று நாலுபேர் புகழ்ந்து, அப்படியொரு பெயரெடுத்து தொலைத்து விட்டதாலேயே, இயல்பாக இருக்க முடியாமல் சொந்த வாழ்க்கையிலும் கூட ஏதாவது வித்தியாசமாக இருந்துத் தொலைக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆட்பட்டு மெண்டல் ஆகிப் போனவர்கள் சினிமாவிலும், இலக்கியத்திலும் ஏராளம்.

சினிமாவை சினிமா என்று சினிமாக்காரர்கள் அழைத்துக் கொண்டிருந்த போதெல்லாம் தயாரிப்பாளரில் தொடங்கி தியேட்டர் வாசலில் கடலை விற்றுக் கொண்டிருந்தவர்கள் வரை சந்தோஷமாகதான் இருந்தார்கள். ‘படைப்பு’, ‘படைப்பாளி’ என்று எப்போது கெத்து கூட்ட ஆரம்பித்தார்களோ, அன்று பிடித்தது ஏழரை நாட்டு சனி. இன்றுவரை தொடர்கிறது.

இறுதிக்காட்சியில் பாபிசிம்ஹாவை விஜய்சேதுபதி கொல்கிறார். விஜய்சேதிபதியை எஸ்.ஜே.சூர்யா கொல்கிறார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே ரசிகர்களை கொன்றுவிட்டார்.

‘இறைவி’ முடிந்ததும் நல்ல மழையில் நனைந்தேன். ஆண்கள், நனைய விரும்புவதுமில்லை. மழையில் நனைய அச்சப்படுவதுமில்லை.

Viewing all articles
Browse latest Browse all 406

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>