அன்புள்ள யுகி,
தற்போது சமூகத்தில் எழுத்தாளனின் இடமென்ன. எழுத்தாளனை சாதாமக்கள் இழிவுபடுத்தும் நிலை இருப்பதாக இணையத்தில் எழுத்தாளர்கள் குற்றம் சாட்டுகிறார்களே. சாதா தோசைக்கும், மசாலா தோசைக்கும் இந்த சாதாமக்களுக்கு வித்தியாசம் தெரியாதா. உங்களுடைய நேர் அல்லது எதிர்வினை என்ன?
அன்புடன்
சரவணர்

1. இணையத்தில் நான் ஏதேனும் கில்மா படங்களை போட்டு ஒப்பேற்றி நூற்றி சொச்சம் லைக்குகளையும், முப்பது நாப்பது கமெண்டுகளையும் வாங்குவதைத் தவிர்த்து வேறெதுவும் செய்வதில்லை. அதற்கான நேரமும் எனக்கு இல்லை. தலா ஒரு ஆபாசத் தொடரும், ஆபாச நாவலும் எழுதிவிட்டதாலேயே என்னை எழுத்தாளன் என்று இந்த சமூகம் நம்புகிறது. மற்றவர்கள் அரசுப் பேருந்துகளோடும், டிவிஎஸ் எக்ஸெல்லோடும், சைக்கிளோடும் மாரடித்துக் கொண்டிருக்கையில் நான் ஒன் பிஃப்டி சிசி பைக்கில் உல்லாசமாக உலாவருகிறேன். என்னுடைய அலுவலகத்தில் ஏசி இருக்கிறது. எனக்கு தனி கேபின் அளித்திருக்கிறார்கள். சன்னலை திறந்தால் மாமரத்தில் காய்கள் காய்த்துத் தொங்குகின்றன. அணில்கள் ஓடி விளையாடுகின்றன. பேருந்து நிறுத்தத்தில் சுடிதார் அணிந்த பெண்கள் நிற்கிறார்கள். டிராஃபிக்கில் வாகனங்கள் சிக்னலுக்காக காத்திருக்கின்றன. பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுகிறார்கள். சினிமா தியேட்டரில் படம் ஓட்டுகிறார்கள். என்னுடைய வாழ்க்கை இன்பங்களால் ஆனது. காலையில் இட்லி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் ‘ஜெலுசில்’ வாங்க மருந்துக்கடைக்கு போகும் வாழ்க்கை அல்ல.
2. எழுத்தாளன் என்பதால் எனக்கு எல்லோரும் தரும் மரியாதையை மற்ற எழுத்தாளர்களுக்கும் தருகிறார்கள் என்று பொதுமைப்படுத்த விரும்பவில்லை. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்ததுமே அங்கிருக்கும் எழுத்தாளர்களை போய் முதலில் சந்தித்தார் சித்தராமையா. ஆனால் இங்கோ ஜெயலலிதா ஆளுநரை போய்தான் பார்த்தார். நீங்களே கூட சிறுவயதில் சரவணனாக இருந்தீர்கள். வளர்ந்ததும் சரவணர் ஆகிவிட்டீர்கள். ஆனால் எழுத்தாளனோ பிறந்ததில் இருந்தே எழுத்தாளனாகதான் இருக்கிறான். அவனை எழுத்தாளர் என்று சொல்வதிலோ, எழுதுவதிலோ கூட இச்சமூகத்துக்கு தயக்கம் இருக்கிறது. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், மாலன், பாலகுமாரன், மனுஷ்யபுத்திரன், நாஞ்சில்நாடன், ஜெயமோகன், விஜயமகேந்திரன் என்று எழுத்தாளர்களை ‘ன்’ விகுதியிலேயே பதிப்பாளர்கள் பதிப்பிக்கிறார்கள். வாசகர்கள் வாசிக்கிறார்கள். ‘ர்’ போட்டால் குறைந்தாபோய் விடுவார்கள். ஆனால் ஐரோப்பாவில் பாருங்கள். டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி, சார்த்தர், சாக்ரடிஸ், காரல்மார்க்ஸ் என்று மரியாதையோடு விளிக்கிறார்கள். அங்கேயெல்லாம் ‘ன்’ விகுதியில் ஒரு எழுத்தாளனைகூட நீங்கள் பார்த்திருக்க முடியாது. இந்த அற்பத்தனத்தை, அராஜகத்தை எதிர்க்காவிட்டால் நான் எழுத்தாளனே அல்ல.
3. இரக்கமற்ற இந்த இழிநிலையை புறக்கணிப்பதோடு எதிர்க்கவும் செய்கிறேன். இணையத்தில் கொட்டப்படுவதெல்லாம் குப்பை என்பதாலேயே என்னுடைய குப்பையையும் அங்கேதான் கொட்டவேண்டியிருக்கிறது. இதை நீங்கள் சமரசம் என்று பார்க்கக்கூடாது. நிர்ப்பந்தம் என்றும் பார்க்கலாம். வேறு வழியில்லை என்றும் நினைக்கலாம். எனக்கும் மின்னஞ்சலில் வாசகர் கடிதங்கள் வரவேண்டாமா. என்னுடைய ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களுக்கும் ‘லைக்’ ‘கமெண்ட்’ வேண்டாமா. நான் எழுத்தாளன் என்பதாலேயே வெகுசாதாரணர்களுக்கு கிடைக்கும் இச்சலுகைகளை இழக்க வேண்டுமா?
4. பாண்டிச்சேரி பெரியவர் பற்றி நிறையபேர் பேசுவதையும், எழுதுவதையும் இணையத்தில் காண்கிறேன். இதையெல்லாம் காண எனக்கு நேரமில்லை என்றாலும் கூட காண்கிறேன். பாண்டிச்சேரி மதுவுக்கு பெயர் பெற்றது. அவ்வப்போது நானும் அங்கு சென்று மது அருந்துவதுண்டு. எனக்கு அங்கே கிடைக்கும் மதுவகையும், சாதாரணரான பாண்டிச்சேரி பெரியவருக்கு கிடைக்கக்கூடிய மதுவகையும் ஒரே வகை என்பதை அறிவுலகம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். குறைந்தபட்சம் சைட் டிஷ்ஷிலாவது வித்தியாசம் வேண்டாமா. நான் எழுத்தாளனாக இருந்து எனக்கு என்ன பிரயோசனம்?
5. யாரோ ஒருவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்மிடம் எலக்ட்ரிஷியன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது, எங்கள் வீட்டிலும் கொஞ்சம் எலக்ட்ரிக்கல் வேலை இருக்கிறது என்று கூறி அவரது உதவியை நாடலாம். பிளம்பருக்கும் இதுவே பொருந்தும். கொஞ்சம் விரிவாக சிந்தித்தோமானால் டிவி மெக்கானிக், கொத்தனார், மேஸ்திரி ஆகியோரை சந்திக்கும்போதும் கூட இதே சாத்தியம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஒரு எழுத்தாளனை நீங்கள் சந்திக்கும்போது கற்பூர ஆரத்தி காட்டி, மணி அடித்து, பூஜை செய்ய வேண்டாமா. கிரேக்கத்தில் சாக்ரடிஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோருக்கு அதைதானே செய்தார்கள். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு சாக்ரடிஸுக்கு கடைசியில் விஷக்கோப்பை கொடுத்ததை மட்டும் இன்னும் தமிழர்கள் மறக்காமல் இருப்பது ஏன்? ஓர் ஈழத்தமிழரோ, மலேசியத்தமிழரோ, தென்னாப்பிரிக்கத் தமிழரோ, சீனத்தமிழரோ, ரஷ்யத்தமிழரோ, செவ்வாய்க்கிரகத் தமிழரோ இம்மாதிரி நடந்துகொண்டு நான் பார்த்ததில்லை. தமிழகத் தமிழர்தான் இப்படி நடந்துக் கொள்கிறார்கள். இவர்கள் பூமியில்தான் இருக்கிறார்களா. அல்லது பூலோகத்தில் இருக்கிறார்களா என்று எனக்கு ஐயம் ஏற்படுகிறது.
6. நான் எழுதுவதால்தான் என்னை எழுத்தாளன் என்கிறார்கள். நீங்கள் வாசிப்பதால்தான் உங்களை வாசகன் என்கிறார்கள். மகத்தான விஷயங்கள் எழுத்தாளனுக்கு சொந்தமானது. அதை மற்றவர்கள் பட்டா போட்டுக்கொண்டு கொண்டாட ஆசைப்படக்கூடாது.
யு