Quantcast
Channel: யுவகிருஷ்ணா
Viewing all 406 articles
Browse latest View live

சுதந்திரக்கலவி தமிழகக்கலையா?

$
0
0
நம்முடைய முந்தையப் பதிவான ‘ஓவர் முற்போக்கு ஒடம்புக்கு நல்லதல்ல’கட்டுரைக்கு நண்பர் ராஜன்குறை ஃபேஸ்புக்கில் எதிர்வினை ஆற்றி இருக்கிறார். அவருக்கு கிடைத்த அதிர்ச்சி நமக்கு கிடைக்கவில்லை.

ஏனெனில் முழுக்க மேற்கத்திய வாழ்க்கைமுறைக்கும், சிந்தனைகளுக்கும் முழுக்க ஆட்பட்டுவிட்ட ராஜன்குறைக்கு ‘சுதந்திரக் கலவி’ (நன்றி : பெருந்தேவி) மாதிரியான கலாச்சாரம் சாதாரணமானதாகவும், கேளிக்கைக்கு உரியதாகவும் தெரிவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தமிழகத்தில் வாழும் சராசரி நடுத்தரனான நாம் இன்னும் அந்தளவுக்கு பக்குவப்படவில்லை.

நாம் மிகவும் மதிக்கும் மானுடவியல் அறிஞர் பேராசிரியர் ராஜன்குறை. போலவே பெருமாள் முருகனும் நமக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்தான். எனவே இந்தப் பதிவையோ, முந்தையப் பதிவையோ இவர்களுக்கு எதிரான விரோதமான மனநிலையில் எழுதியதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்த இரு பதிவுகளுமே ‘மாதொரு பாகன்’ குறித்த சர்ச்சைக்கு மட்டுமே உரித்தானது.

ராஜன்குறையின் அதே ஃபேஸ்புக் திரியில் நண்பரும் அறிவுஜீவி என்று அவரை அவரே நம்பிக் கொண்டிருப்பவருமான ரோஸாவசந்த் எழுதியிருக்கும் பின்னூட்டமும் ஆச்சரியப்படுத்தவில்லை. ஏனெனில் உலகில் தனக்கு மட்டுமே அறிவு என்கிற ஆற்றல் இருப்பதாக நம்பிக் கொண்டிருப்பவர் இப்படிதான் பின்னூட்டமிட முடியும். ‘ஸ்டேண்ட்’ என்பதை நண்பர் ரோஸாவஸந்த் ‘பஸ் ஸ்டேண்ட்’ என்பதாக புரிந்துக் கொண்டிருக்கிறார். சூழல்தான் ஒருவனது நிலைப்பாட்டை தீர்மானிக்கும். நிலைப்பாடு அவ்வப்போது மாற்றத்துக்குறிய ஒன்று என்பதை பெரியாரை வாசித்தாலே புரிந்துக்கொள்ள முடியும். மாற்றிக்கொள்ளும் நிலைப்பாட்டுக்கு ஒருவன் தரும் ஜஸ்டிஃபிகேஷன்தான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா நிராகரிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும். இளையராஜாவின் இசையை கேட்டு ரசித்து ட்விட்டு போடுவதுதான் தமிழ் அறிவியக்க செயல்பாட்டின் உச்சக்கட்டமான நடவடிக்கை என்று நம்பிக்கொண்டிருக்கும், லிங்கா கட்டவுட்டுக்கு பால் ஊற்றும் ரஜினிரசிக மனப்பான்மைக்கு இணையான மனோபாவம் கொண்ட ரோசாவிடம் இதையெல்லாம் விவாதிக்க முடியாது. பிழைப்புக்கு போராளியாகவும், சந்தர்ப்பவசத்தால் இலக்கியவாதியாகவும் ஆகிவிட்ட சிலர் ரோசாவுக்கு ‘லைக்’ போட்டிருக்கிறார்கள். அவர்களுடைய நிர்ப்பந்தத்தையும் புரிந்துக்கொள்ள முடிகிறது.

ஓக்கே. பேராசிரியர் ராஜன்குறைக்கு வருவோம்.

“வாய்மொழி வரலாறு என்பதை அங்கீகரிக்கப்பட்ட அறிவுத்துறை என்று யுவகிருஷ்ணா ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று அன்புடன் அறிவுறுத்துகிறார்.

மானுடவியல் அறிஞர் ஒருவர் இவ்வாறு பேசுவதைவிட அபத்தமான விஷயம் வேறில்லை. எந்தெந்த வாய்மொழி தகவல்கள் வரலாறாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கான சான்றுகளை ராஜன்குறை தரவேண்டும். இன்று செய்திகளுக்கே ஆதாரம் கேட்கப்படும் சூழலில், வரலாற்றுக்கு மறுக்கமுடியாத ஆதாரங்கள் தேவை. ஆவணரீதியிலான தரவுகள் நிறைந்திருக்கும் வரலாற்றுத் தகவல்களையே கேள்விக்குள்ளாக்கக்கூடிய இன்றைய சூழலில் இப்படிப்பட்ட கருத்தை ஒரு பேராசிரியர் முன்வைப்பது துரதிருஷ்டவசமானது. நிறைய தரவுகள் நிறைந்த ‘திராவிட இனம்’ என்கிற கருத்தாக்கத்தையே வரலாற்றின் மாறுபட்ட வேறு தகவல்கள் மற்றும் அறிவியல் அடிப்படையில் இன்று மறுப்பவர்களோடு நாம் உரையாடிக் கொண்டிருக்கிறோம். நரசிம்ம பல்லவன் வாதாபியை கொளுத்தினானா, சாளுக்கியனை வென்றானா என்பதற்கே இருவேறு வரலாறு இருக்கிறது. இரண்டுக்குமே அசைக்கமுடியாத கல்வெட்டு ஆதாரங்களும் இருக்கின்றன.

நிலைமை இப்படியிருக்கையில்-

‘மாதொருபாகன்’ நூலில் சித்தரிக்கப்பட்டிருப்பதைப் போன்ற வாய்மொழி வரலாற்றினை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

‘ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை… அதனாலே’ என்று ராகத்தோடு பாடப்படும் (இப்போது விஜய்க்கும் அஜித்துக்கும் சண்டை என்று பரிணாமம் பெற்றுவிட்டது) வாய்மொழித் தகவல்களையும் வரலாற்றாக்கி விடலாமா. கிசுகிசு வரலாறு ஆகுமா. லட்சுமிகாந்தனும், கயிலைமன்னனும் பரப்பியதெல்லாம் வரலாறா?

தமிழ்நாட்டிலும் carnival உண்டு. ராஜன்குறை மொழியில் ‘வரம்பு மீறுவது’ ஆங்காங்கே ஒருசில மனிதர்களிடம் நடைபெற்றிருக்கலாம். நடைபெறுகிறது. இது individual ஆன விஷயம். ஆனால், ஒட்டுமொத்த திருச்செங்கோடுவாழ் சமூகமே ‘சுதந்திர கலவி’ திருவிழாவில் கலந்துக் கொண்டார்களா. நடந்திருந்தால் அது பிள்ளைப்பேறு இல்லாத மகளிருக்காக நடத்தப்பட்டதா என்பதுதான் இங்கே சர்ச்சைக்குரிய விஷயம். அப்படி இதற்கு ஆதாரமில்லாத பட்சத்தில் அவ்வாறு சித்தரிக்கப்பட்டிருப்பது திருச்செங்கோட்டுக்காரர்களை புண்படுத்தும் என்பது இயல்பானதுதான்.

எழுபதுகளின் துவக்கம் வரை சகஜமாக ‘சுதந்திர கலவி’ நடைபெற்றிருப்பதாக ராஜன்குறை அறிந்திருப்பதாக சொல்கிறார். ராஜன்குறை மட்டுமல்ல. நிறைய பேர் இப்படிப்பட்ட திருவிழாக்களை கண்களில் கனவு மின்ன ஆர்வத்தோடு சொல்கிறார்கள். இவர்களில் யாரேனும் அப்படிப்பட்ட திருவிழாக்களில் கலந்துக்கொண்டது உண்டா என்று கேட்டால், ‘கேள்விப்பட்டேன்’, ‘நண்பர் சொன்னார்’ ரீதியில்தான் சொல்கிறார்கள். கடந்த நூறாண்டுகளில் தமிழகத்தில் நடந்த பெரும்பாலான சம்பவங்கள் அனைத்தையும் ஊடகங்கள் பதிவு செய்திருக்கின்றன. இப்படிப்பட்ட திருவிழா ஒன்றினை ஏதேனும் ஊடகம் ‘லைவ் ரிப்போர்ட்டாக’ பதிவு செய்திருக்கிறதா என்று அறியவிரும்புகிறேன். ஏனெனில் ஊடகங்களுக்கு ‘ஹாட்கேக்’ ஆன மேட்டர் இதுவென்பதை, ஊடகத்தில் பணிபுரிபவனாக உணருகிறேன்.

அடுத்து,

“புனைவு என்பதை உண்மை என்பதாக புரிந்துகொண்டுவிடுவார்கள் என்பதற்காக புனைவுகளில் எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கும் விதமாகத்தான் எழுதவேண்டும் என்றெல்லாம் நிர்ப்பந்திக்கமுடியாது. இதையெல்லாம் விட முக்கியமான பிரச்சினை அப்படி என்ன கொலைகுற்றத்தையா பெருமாள் முருகன் எழுதிவிட்டார்?” என்கிற அதிமுக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறார் ராஜன்குறை.

புனைவுகளில் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் எல்லா நேரத்திலும் எழுதமுடியாதுதான். அப்படி யாரும் யாரையும் நிர்ப்பந்திக்கவும் முடியாதுதான். ஆனால் ராஜன்குறையின் இந்த ஸ்டேட்டஸுக்கு ‘லைக்’ போட்ட 100+ பேர்களை குறிப்பாக தொடர்புபடுத்தி, இம்மாதிரி புனைவு எழுதினால் அவர்கள் நூலை எரிப்பார்களா அல்லது கட்டிப்பிடித்து கொஞ்சி கருத்து சுதந்திரம் பேசுவார்களா?

யார் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் யாரைப்பற்றி வேண்டுமானாலும் எழுதிவிட்டு போகலாம் என்பதையெல்லாம் கருத்துச் சுதந்திரம் என்று பார்க்கமுடியாது. என்னுடைய கருத்துச் சுதந்திரத்தின் வரம்பளவு உங்களுடைய மூக்கின் அரை இஞ்சுக்கு முன்னால் முடிந்துவிடுகிறது அல்லவா. அப்படியில்லை. கருத்துவேறுபாடு கொண்டவரின் மூக்கை உடைப்பேன் என்றெல்லாம் விதண்டாவாதம் பேசினால் எந்த விவாதத்தையுமே நாம் நடத்த முடியாது.

ஒரு சமூகம் நல்லிணக்கத்தோடு சமதர்ம சமூகமாய் செயல்பட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்திருப்பது எவரையும் விட ஒரு படைப்பாளிக்கு அவசியமான அம்சமாகும். ஏனெனில் கலை என்பது மக்களை கரைசேர்க்கக்கூடிய கலங்கரை விளக்கம் என்கிற நம்பிக்கை மனித சமுதாயத்துக்கு இருக்கிறது. அவசியமற்ற கலகத்தை உருவாக்குவது படைப்பாளியின் பணியா?

புனைவு என்கிற கருத்துச் சுதந்திரம் பெருமாள் முருகனுக்கு மட்டுமா இருக்கிறது. இதே சுதந்திரத்தை ராஜன்குறை கனவிலும் எதிர்க்கும் இந்துத்துவர்களோ அல்லது வேறேதேனும் பிற்போக்குச் சக்திகளோ பயன்படுத்தினால் அதையும் அனுமதித்துவிடலாமா. மனு எதையோ எழுதிவிட்டு போய்விட்டான். அவனுடைய கருத்துச் சுதந்திரத்துக்கு நம்மால் அப்படியே மதிப்பளிக்க முடிகிறதா. கொளுத்துகிறோம் இல்லையா. நாளை ராஜன்குறையை சித்தரித்து அவதூறான புனைவு எழுதப்படுமேயானால் அதையும் அப்படியே அனுமதித்துவிடலாமா? அறிஞர் அண்ணா எழுதிய ‘தீ பரவட்டும்’ நூலை இங்கே பேராசிரியருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

ராஜன்குறைக்கு புரிகிறமாதிரி ஒரு சம்பவத்தை இங்கே எடுத்துச் சொல்கிறேன்.

அடிக்கடி சாருநிவேதிதா எழுதுவார். ‘ரெண்டாம் ஆட்டம்’ என்கிற அவருடைய மகத்தான நாடகத்தை நடத்தவிடாமல் மதுரையில் வன்முறை செய்தார்கள் என்று. புதிதாக அதை வாசிக்கும் வாசகர்களுக்கு கருத்துச் சுதந்திர உணர்வு பீறிட்டு எழும். ஆனால், தடுத்தவர்களும் முற்போக்காளர்களே, கருத்துச் சுதந்திரம் பேசுபவர்களே என்கிற உண்மை அப்படியே ‘வரலாற்றில்’ அமுங்கிவிட்டது. அவர்கள் ஏன் தடுத்தார்கள் என்பதற்கான நியாயமும், காரணமும் யாராலும் பரிசீலிக்க முடியாவண்ணம் மறைக்கப்பட்டு விட்டது.

வேறொன்றுமில்லை. எல்லாவற்றுக்கும் ‘இடம், பொருள், ஏவல்’ உண்டு என்பதுதான் emphasis செய்து இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்.

பெருமாள் முருகன் வெறும் புனைவாக மட்டுமே இதை முன்வைக்கிறார் என்கிற வாதத்தை நிறையபேர் பேசுகிறார்கள். திருச்செங்கோடு என்பதை திருச்செங்காடு என்றும் அவர் புனைந்துவிட்டிருந்தால் பிரச்சினை எழ என்ன வாய்ப்பு இருந்திருக்கும்?

ஆனால் அவரால் அப்படி செய்திருக்க முடியாது. ஏனெனில் பெங்களூரைச் சேர்ந்த ‘கலைகளுக்கான இந்திய மையம்’ – IFA (ரத்தன் டாட்டா அறக்கட்டளையின் ஓர் அங்கம்) நிறுவனத்துக்கு விண்ணப்பித்து, அவர்களது உதவியோடு (வேறென்ன பண உதவிதான்) ‘கள ஆய்வு’ மேற்கொண்டு, அதன் அடிப்படையில் இந்த நூலை பெருமாள் முருகன் எழுதியிருக்கிறார். எனவே ‘சுதந்திரக் கலவி’ என்பது ‘தமிழகக்கலைகள்’ என்றுதான் டாட்டா அறக்கட்டளையின் ஆவணங்களில் வரலாறாக –அதுவும் திருச்செங்கோட்டின் கலையாக- பதிவாகப் போகிறது. அப்படியிருக்க இதை வெறுமனே புனைவு, கருத்துச்சுதந்திரம் அளவுகளுக்குள் எப்படி அறிவுஜீவிகளும் சுருக்குகிறார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரக் கலவியை தமிழகக்கலை என்று ஏற்றுக்கொள்ள ராஜன்குறைக்கும், அவருடைய திரியில் பின்னூட்டமிட்டிருக்கும் பெருந்தேவிக்கும் மனத்தடங்கல் இருக்காது என்று அவர்களது கருத்துகளில் தெரிகிறது. ஆனால் ‘லைக்’ போட்ட, ‘கமெண்ட்’ போட்ட மற்ற தமிழர்களும் இதை ஒப்புக்கொள்கிறார்களா என்பதைதான் அறிய விரும்புகிறேன்.

“இதை எதற்காக பெண்ணியவாதிகள் எதிர்க்கவேண்டும் என்று நினைக்கிறார் என்றும் புரியவில்லை” என்று பேராசிரியர் ஐயம் எழுப்புகிறார்.

இதுதொடர்பான என்னுடைய பதிவிலேயே திருச்செங்கோட்டை சேர்ந்த பெண் ஒருவர் பின்னூட்டம் இட்டிருக்கிறார். ராஜன் அதை வாசிக்கும்போது ஓரளவுக்கு அவருக்கு நிலவரம் புரிபடலாம்.

அந்தப் பின்னூட்டம் இதுதான் :

“இந்த நாவலை படித்தேன், ஒரு சில பக்கங்களை படித்தவுடன் மிகவும் அபத்தமாக தோன்றியது, நானும் திருச்செங்கோட்டில் பிறந்தவள் என்பதால் அல்ல ஒரு பெண் என்பதால் அதுவும் (being a late child of my parents), என் அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன் குழந்தை பிறக்காதவர்களை இந்த சமூகம் எவ்வளவு மோசமக நடத்தும் என்று. ஒரு மாசம் முன்னாடி தான் எனக்கு கல்யாணம் முடிவு செய்தார்கள், இந்த எதிர்ப்பு பக்கத்தை பர்த்துவிட்டு அவர் கேட்டார் நீ கூட Late child தானே என்று கேட்டார் (because he is from chennai and he have no idea about my native, just see how much impact its creating for the people who didnt have idea of that place, may be author just taken this place to tell somthing but its affecting the people who are living there), விளையாட்டாக தான் கேட்டார் என்றாலும் எவ்வளவு அபத்தாமான கருத்தை இந்த எழுத்தாளார் மனதில் பதிக்கிறார் அவருடைய பொண்ன இப்படி யாரவது கேட்டிருந்தால் அவருக்கு எப்படி இருந்திருக்கும்.
என் பாட்டி சொன்னாங்க அந்த ஊர் அப்படி பட்ட ஊர் என்றால் எப்படி என் மகளை கல்யாணம் கட்டி கொடுத்திருப்பேன் என்று (சிந்திக்கபட வேண்டிய ஒன்று தான் இவர் சொல்வது போல இப்படி ஒன்று வழக்கத்தில் இருந்திருந்தால் எப்படி பெண் கொடுத்திருப்பார்கள்).

எழுத்து சுதந்திரம் மதிக்கபடவேண்டிய ஒன்று தான் ஆனால் அது அடுத்தவர்களைக் காயப்படுத்தாதவரை.

திரு பெருமாள் முருகன் அவர்களுக்கு ஒருவேளை குழந்தை இல்லாமலோ அல்லது ரொம்ப நாள் கழித்து குழந்தை பிறந்திருந்தால் இப்படி எழுதியிருக்க தோன்றியிருக்காது காரணம் இவர் மனைவியயும் இழிவு படுத்தபட்டிருப்பார் அல்லவா.

இதுக்கு எதிர்ப்பு இப்ப வருவதர்க்கு என்ன காரணம் என்று தெரியவில்லை ரொம்ப முன்னாடியே எதிர்க்கபட்டிருக்க வேண்டிய புத்தகம். என்ன மாதிரி ஒவ்வொருவரையும் ரொம்ப கஷ்டபடுத்திய புத்தகம்.

என் ப்ளாக்ல கூட என்னால இத எழுத முடியல, சில வக்கிர மனங்கள் எப்படி இத யோசிக்கும் என்று தெரிந்ததால். பெயர கூட சொல்லாமால் இதை இங்கு பகிர்கிறேன். இந்த புத்தகத்துக்கு support பண்றவங்க எங்க மன நிலையை யோசித்து பாருங்க.”


தாமதமான பிள்ளைப்பேறு அல்லது பிள்ளைப்பேறு இன்மை போன்ற சமூகப் பிரச்சினைகளில் தமிழகப் பெண்கள் எதிர்கொள்ள நேரிடும் கேள்விகளைக் குறித்து மானுடவியல் அறிஞரான ராஜன்குறை களஆய்வு செய்யவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

பின்னூட்டமிட்ட சகோதரியின் உணர்வை என்னாலோ, ராஜன்குறையாலோ முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாது. ஏனெனில் நாங்கள் இருவரும் ஜஸ்ட் ஆண்கள். அதிலும் ராஜன் அறிவுஜீவி வேறு. பெண்ணாகவோ அல்லது குறைந்தபட்சம் அர்த்தநாரீஸ்வரராக இருந்தாலாவது அந்த பெண்ணின் வலியை உணரமுடியும்.

ராஜனின் பதிவில் பிரச்சினைக்கு தொடர்பில்லாமல் ஒரு வரி துருத்திக்கொண்டு நிற்கிறது.

“நவீன கால காம இயந்திரங்களில் மாட்டிக்கொண்டு சரோஜோ தேவி எழுதிக்கொண்டிருக்கும் இந்த இளைஞருக்கு கடந்த காலம் புரியாமல் போவதில் வியப்பில்லை”

ஒன்றுமில்லை. பேராசிரியர் நம்மை இடுப்புக்குக் கீழே அடிக்கிறாராம். ஒரு பெண்ணோட வலி இன்னொரு பெண்ணுக்குதான் தெரியும் என்பதைப் போல, ஒரு பேராசிரியரின் வலி இன்னொரு பேராசிரியருக்கு தெரிகிறது. ‘எங்களையெல்லாம் நோண்டுனா என்னாகும் தெரியுமில்லே?’ என்கிற அறிவுஜீவித்தனமான மிரட்டல் இது.

ஒண்ணும் ஆகாது சார்.
‘சரோஜாதேவி’ என்பது செய்திகள், சம்பவங்கள், கட்டுரைகள், கதைகள் வழியாக சுவாரஸ்யமான பாலியல் வெகுஜன வாசிப்பைக் கோரும் நூல். அதனுடைய target audienceஐ அது சரியாகவே திருப்திபடுத்துகிறது. எல்லாரும் சரோஜாதேவி எழுத்துகளை எழுதிவிட்டு உன்னத இலக்கிய அந்தஸ்து கோருகிறார்கள். நான் மிக சாதாரணமாக எழுதிய எழுத்துகளையே ‘சரோஜாதேவி’ என்று டைட்டிலிட்டிருக்கிறேன். அவ்வளவுதான்.

சுவாரஸ்யத்துக்கும் உங்களுக்கும் சற்றும் சம்பந்தமில்லை என்பதால், இது நிச்சயமாக உங்களோட cup of tea கிடையாது. எனவே நான் எழுதியிருக்கிறேன் என்கிற ஒரே காரணத்துக்காக உங்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லி சித்திரவதை எல்லாம் செய்யமாட்டேன். ஆனால் என்ன, ஏதுவென்று தெரியாத ஒரு விஷயத்துக்கு, நீங்கள் படிக்காத ஒரு புத்தகத்தை, உங்களுடைய குறிப்பிட்ட ஒரு கருத்துக்கு மாறுபாடாக இருப்பவனை இழிவுசெய்ய பயன்படுத்தும் ஆயுதமாக பயன்படுத்துகிறீர்கள். நீங்கள்தான் இதுபோன்ற விஷயங்களில் ஜெயமோகனை கண்டிக்கிறீர்கள். ஜெயமோகனை கண்டிப்பவர்களிடம் ஜெயமோகனைவிட பன்மடங்கு ஜெயமோகத்தனம் இருக்கிறது என்பதற்கு நீங்களே நல்ல உதாரணமாகி விட்டீர்கள். நன்றி. Intellectuals என்று அறியப்படுபவர்கள் தேவை ஏற்படும்போது, சாதாரணர்கள் என்று அவர்கள் கருதக்கூடியவர்களை எப்படி அறிவுத்தீண்டாமையோடு நடத்துவார்கள் என்பதை ஏற்கனவே அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். சாதி, மதத்தின் பெயரால் நடப்பது பார்ப்பனீயம் என்றால்.. அறிவின் பெயரால் நடக்கும் இந்த கருத்து வன்முறைக்கு என்ன பெயர் வைப்பது?

கடைசியாக…

என்னுடைய பதிவில் பேசப்பட்ட மாதொருபாகனுக்கான ‘விளம்பர அரசியலை’ கவனமாக தவிர்த்தே பேராசிரியர் பேசியிருக்கிறார்.

ஏனெனில்…

அவருக்கே தெரியும். நடந்தது நல்ல நாடகம். ‘ஆலவாயன்’, ‘அர்த்தநாரீஸ்வரர்’ வெளியான நாளில் ஹிந்து, தினமலர் பத்திரிகைகள் கொடுத்த முன்னோட்ட விளம்பரங்கள் இதற்கு நல்ல ஆதாரம்.

இந்த நாடகத்தில் கருத்துரிமைப் போராளிகள் அத்தனை பேரும் கோமாளிகளாகி விட்டார்கள். நாடகத்தை நடத்தியவர் அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டிருப்பார். அதை மறைக்க அல்லது திசைதிருப்ப இப்படிதான் ஏதாவது புள்ளைப்பூச்சியை போட்டு அடித்துக் கொண்டிருப்பார்கள். அல்லது சரக்கடித்துதான் இந்த அவலத்தை மறந்தாக வேண்டும்.

தட்ஸ் ஆல்.

தமிழ்மகன் : இரு நூல்கள்

$
0
0
‘பத்திரிகையாளர்களுக்கு இலக்கியம் எழுதவராது’ – பொதுவாக தமிழ் இலக்கியவாதிகளுக்கு இருக்கும் மூடநம்பிக்கை இது. நவீன தமிழிலக்கியத்தின் பிதாமகனான பாரதியாரே கூட பத்திரிகையாளர்தான். கடந்த நூறாண்டுகளில் தமிழ் இலக்கியத்தில் கணிசமாக பங்காற்றியிருக்கும் பத்திரிகையாளர்களின் பட்டியல் மிகப்பெரியது.

வெகுஜனப் பத்திரிகைகள் என்றாலே ஒருமாதிரி ஒவ்வாமையோடு அணுகிவந்த இலக்கியவாதிகள் சமீபகாலமாக இப்பத்திரிகைகளில் பணியாற்ற முட்டி மோதிக்கொண்டு வருகிறார்கள் என்பதே ஆரோக்கியமான மாற்றம்தான்.

அவ்வப்போது ஏதேனும் ஒரு பத்திரிகையாளர் தன்னுடைய இருப்பை உறுதியாகவே பதிவு செய்தாலும், இலக்கியவாதிகள் முடிந்தவரை அவரை இருட்டடிப்பு செய்வது வாடிக்கை. அம்மாதிரி தொடர்ச்சியாக இருட்டடிப்பு செய்யப்படுபவர்களில் முக்கியமானவர் தமிழ்மகன்.

இவரது ‘வெட்டுப்புலி’ நாவலை வாசகர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ஆதரித்தார்களோ, இலக்கியவாதிகள் அவ்வளவுக்கு அவ்வளவு பதட்டம் அடைந்தார்கள். தனிப்பட்ட சந்திப்புகளில் ‘வெட்டுப்புலி’ குறித்து உயர்வாக பேசிய இலக்கிய ஜாம்பவான்கள் கூட, பொதுவில் அதுபற்றி ஒரு அபிப்ராயமும் தெரிவிக்காமல் தங்கள் நாகரிகத்தை வெளிப்படுத்தினார்கள்.

இருபத்தைந்து ஆண்டு காலமாக ‘நாவல்’ எழுதிவரும் தமிழ்மகன், தொழில்நிமித்தமாக வெகுஜன பத்திரிகைகளில் பணியாற்றுகிறார். சத்தமில்லாமல் தொடர்ச்சியாக இலக்கியம் படைத்து வருகிறார்.
அவருடைய முதல் நாவலான ‘மானுடப் பண்ணை’யே இதற்கு சாட்சி. தன்னுடைய 21வது வயதில் 1984ல் எழுதத் தொடங்கிய இந்நாவலை 25வது வயதில் 1989ல் முடித்திருக்கிறார். 1994ல் முதல் பதிப்பு வெளியாகியிருக்கிறது. 1996ல் தமிழக அரசு விருதும் பெற்றிருக்கிறது.

எமர்ஜென்ஸிக்கு பிறகு – உலகமயமாக்கலுக்கு முன்பு என்று யாராலும் அவ்வளவாக விவாதிக்கப்படாத மிக முக்கியமான அரசியல் சமூகச் சூழலை படம் பிடித்துக் காட்டியிருக்கும் நாவல் இது. குறிப்பாக இது பிற்படுத்தப்பட்டவர்களின் எழுச்சி தொடங்கிய காலம்.

நாவலின் நாயகன் பாலிடெக்னிக் முடித்த சிவில் என்ஜினியர். இன்று புற்றீசல்களாக பெருகிவிட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு அஸ்திவாரம் போடப்பட்ட காலம். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவனுடைய சில நாட்களின் டயரிக்குறிப்பாக ‘மானுடப்பண்ணை’ விளங்குகிறது. திராவிட இனமான உணர்வு கொண்ட அவன் எதிர்கொள்ள நேரிடும் மார்க்சிய விவாதங்களோடு, தன்னுடைய கொள்கை சார்ந்த புரிதல்களை ஒப்பிட்டுக் கொள்கிறான். கொள்கைகளும், சித்தாந்தங்களும் லவுகீக வாழ்க்கைக்கு எவ்வகையிலும் உதவாத கையறுநிலையை இறுதியில் அடைகிறான். சாதியம் தமிழ் வாழ்க்கையில் எத்தகைய அதிகாரத்தை கட்டமைத்து வைத்திருக்கிறது என்பதை இலைமறை காய்மறையாய் சம்பவங்களின் ஊடாக நுழைத்திருக்கிறார் தமிழ்மகன்.

2009க்குப் பிறகு வானத்தில் இருந்து குதித்தவர்கள் திராவிடத்துக்கு ஏதேதோ அருஞ்சொற்பொருள் அகராதி தயாரித்து உளறிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மண் எப்படி இருந்தது, திராவிடம் இங்கே என்ன சாதித்துக் கிழித்தது என்பதை அறிய ஆசை இருப்பவர்கள் ‘மானுடப்பண்ணை’ வாசிக்கலாம்.
‘ஆபரேஷன் நோவா’வுக்கு அறிமுகம் தேவையா?

‘ஆனந்தவிகடன்’ இதழில் வாராவாரம் ஆயிரக்கணக்கானோர் வாசித்து சிலிர்த்த தொடர்.

ஒரே நூலில் அவதார், இண்டர்ஸ்டெல்லார் இரு படங்களையும் பார்த்த அசாத்திய அனுபவத்தை தருகிறார் தமிழ்மகன்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் அல்ல. ஒவ்வொரு வரியிலுமே ‘ஆச்சரியங்கள்’ காத்திருக்கின்றன.

“சுஜாதாவுக்கு அப்புறம் யாரு சார் இண்டரெஸ்ட்டா எழுதறா?” என்று சலித்துக் கொள்பவருக்கு இந்த நாவல்தான் பதில்.

ஓர் எழுத்தாளனின் கற்பனை எந்தளவுக்கு உச்சத்தை எட்டமுடியும் என்பதற்கு ‘ஆபரேஷன் நோவா’வை உதாரணமாக காட்டலாம்.

* * * * * * * * * *

திராவிடனுக்கு இலக்கியமும் தெரியும், அதன் நெளிவுசுளிவுகளும் அத்துப்படி என்பதை பத்தாயிரத்தி ஒன்றாவது மனிதராக திரும்ப மீண்டும் நிரூபித்திருக்கும் ‘மக்கள் எழுத்தாளர்’ அண்ணன் தமிழ்மகனுக்கு வாழ்த்துகள்!

* * * * * * * * * *

இரு நூல்களையுமே உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

மானுடப்பண்ணை : விலை ரூ.130

ஆபரேஷன் நோவா : விலை ரூ.150

ரைட்டர்ஸ் உலா : என்னுரை

$
0
0
‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று சொல்லதான் ஆசை.

இறைவன் இருந்திருந்தால் நன்றாகதான் இருந்திருக்கும் என்று வாழ்வியல் சிக்கல்கள் நெருக்கும்போது மட்டும் நினைத்துக் கொள்ளும் நாத்திகன் நான். இயற்கை நிகழ்வுகளை தவிர்த்து உலகின் எல்லா செயல்களுக்கும் மனிதன்தான் காரணமாக இருக்கிறான்.

அந்தவகையில் இந்நூல் உங்கள் கைகளில் தவழ காரணமாக இருப்பது இருவர். ஒருவர், ‘தினகரன்’ நாளிதழின் நிர்வாக மேலாளரான திரு ஆர்.எம்.ஆர். அடுத்தவர், ‘தினகரன்’ இணைப்பிதழ்களின் முதன்மை ஆசிரியரான கே.என்.சிவராமன்.

வெறும் இணைப்பிதழ்தானே என அலட்சியப்படுத்தாமல் தனி இதழுக்கான தன்மையுடன் ‘தினகரன்’ இணைப்பிதழ்களை இவர்கள் இருவரும் உருவாக்கி வருகிறார்கள். புதுப் புது வடிவங்களில் வித்தியாசமான சிந்தனைகளோடு கூடிய பேட்டிகளும், கட்டுரைகளும் அமையவேண்டும் என்று மெனக்கெடுகிறார்கள். அப்படி ‘தினகரன்’ ஞாயிறு இணைப்பிதழான ‘வசந்தம்’ இதழில் இவர்கள் வடிவமைத்த பகுதிதான் ‘ரைட்டர்ஸ் உலா’. எழுதியது மட்டுமே நான்.

இலக்கியத்தில் பெண்களின் பங்கு குறித்து ஒரு விவாதம் அப்போது தமிழ்ச் சூழலில் பரவலாக நடந்துக் கொண்டிருந்தது. சமகால தமிழ் பெண் படைப்பாளிகளின் படைப்புத் தரம் குறித்த கேள்வியும் வெகுவாக எழுந்தது. இதைப் பற்றியெல்லாம் சிவராமனும், நானும், நரேனும் தேநீர்க்கடையில் சூடுபறக்க உரையாடினோம்.

அந்த விவாதத்தின் நீட்சியே ‘ரைட்டர்ஸ் உலா’.

நிலவரைவியல், மொழி மாதிரி எந்த வரையறைகளையும் வைத்துக் கொள்ளாமல் மனம் போன போக்கில் வாராம்தோறும் ஒரு பெண் எழுத்தாளரை உரிய முறையில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம்.

‘தொடர்’ என்று அறிவித்துக் கொள்ளாமல் தனித்தனி கட்டுரையாக வாராவாரம் வந்தபோது ‘தினகரன் வசந்தம்’ வாசகர்களின் பெருவாரியான வரவேற்பு தந்த நெகிழ்ச்சிக்கு அளவேயில்லை. குறிப்பாக சகோதர இதழாளர்களை மனம்விட்டு பாராட்டுவதையே தன்னுடைய ஆதார குணமாகக் கொண்டிருக்கும் ‘நக்கீரன்’ வாரம் இருமுறை பத்திரிகையின் முதன்மை துணை ஆசிரியர் கோவி.லெனின், தமிழில் வரும் கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளையும் சுடச்சுட வாசித்துவிட்டு சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு தன்னுடைய கருத்தை விரிவாக தொலைபேசியில் பகிர்ந்துக்கொள்ளும் நண்பர் உளுந்தூர்ப்பேட்டை லலித்குமார் ஆகிய இருவரும் இத்தொடர் முழுக்க கூடவே பயணித்த தோழர்கள்.

இப்புத்தகத்தில் முக்கியமான எழுத்தாளர்கள் பலரின் பெயர்கள் விடுபட்டிருக்கலாம். அதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. நன்கு பிரபலமானவர்களை மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்திக் கொண்டே, தெரிந்த தகவல்களையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது வாசகர்களுக்கு சலிப்பைத் தரலாம் என்கிற எண்ணத்தாலேயே இது நடந்தது. அவர்கள் அறியாத புதிய தகவல் ஒன்றையாவது ஒவ்வொரு கட்டுரையிலும் தேடித்தரவேண்டும் என்கிற எண்ணத்தில் எழுதியதால் எந்த வரிசையையும் நாங்கள் அமைத்துக் கொள்ளவில்லை.

தமிழைப் பொறுத்தவரை வை.மு.கோதை நாயகி, லட்சுமி, ஆர்.சூடாமணி, அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், அனுராதா ரமணன் உட்பட அனைவரையும் சிறப்பிக்க ஆசைதான். ஆனால், மறைந்தும் மறையாமல் எழுத்துகளால் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இவர்களைப் பற்றி எழுத ஒருவார அறிமுகக் கட்டுரை போதாது. தனித்தனி புத்தகங்களாகவே எழுத வேண்டும். எனவேதான் இந்த நூலில் இவர்கள் இடம்பெறவில்லை.

நம்மோடு வாழ்ந்து, இயங்கிக் கொண்டிருக்கும் மூத்த தமிழ் படைப்பாளிகளான ரமணி சந்திரன், சிவசங்கரி ஆகியோரின் சிறப்புகளை சிறிய அளவிலாவது வாசகர்களுக்கு நினைவுபடுத்தியே ஆகவேண்டும் என்கிற எண்ணத்திலேயே அவர்கள் குறித்த கட்டுரைகளை சேர்த்திருக்கிறோம். சிவசங்கரி, நன்றிக் கடிதம் எழுதி பாராட்டியிருந்தார். கூச்சத்தோடு அவர் தந்த கவுரவத்தை ஏற்கிறோம்.

பெண் எழுத்தாளர்களை குறித்து ஓர் ஆண் எழுதுவது, வாசகர்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் இருந்தது. எனவேதான் என்னுடைய இளைய மகள் ‘தமிழ்நிலா’வின் பெயரில் எழுதினேன். ஆனால், இக்கட்டுரை குறித்த வாசகர்களின் எண்ணங்களை நேரடியாகவும், தொலைபேசி & கடிதங்கள் & மின்னஞ்சல்கள் மற்றும் சமூக இணையதளங்கள் வாயிலாகவும் அறிந்தபோது எங்களது சந்தேகம் அர்த்தமற்றது என்றுதான் தோன்றுகிறது. எழுதுகிறவரின் பெயரைவிட எழுதப்படும் விஷயத்துக்குதான் வாசகர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.

கதை சொல்வதில் கைதேர்ந்த நம் பெண்கள் கதை எழுதுவதில் அவ்வளவு நாட்டம் செலுத்துவதில்லை. எழுத்துலகில் ஆண்களோடு ஒப்பிடுகையில், பெண்களின் பங்களிப்பு மிகக்குறைவாகவே இருக்கிறது. ஆணும் பெண்ணும் சமம் எனும்போது எத்தனை ஆண் எழுத்தாளர்கள் இருக்கிறார்களோ, அத்தனை பெண் எழுத்தாளர்களும் இருக்கவேண்டும் என்பதுதானே நியாயம்?

இந்த நூலை வாசிக்க நேரும் ஒரு சில பெண்களாவது எழுத்துத்துறைக்கு வருவார்களேயானால், அதன் இலக்கை இப்புத்தகம் எட்டிவிட்டதாக அர்த்தம்.

இக்கட்டுரைகளை வாராவாரம் அழகான முறையில் வடிவமைத்துக் கொடுத்த வடிவமைப்பாளர்களுக்கும், தவறுகளை திறம்பட திருத்திய பிழை திருத்துனர்களுக்கும், கட்டுரைகளை சிறப்பாக தொகுத்து அருமையான நூலாக உங்கள் கைகளில் தவழவிட்டிருக்கும் சூரியன் பதிப்பகத்தாருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

அன்புடன்
யுவகிருஷ்ணா


நூல் : ரைட்டர்ஸ் உலா
விலை : ரூ.150/-
வெளியீடு : சூரியன் பதிப்பகம்

எம்.ஜி.ஆரும், ஜெயமோகனும்!

$
0
0
பெண்கள் விஷயத்தில் எம்.ஜி.ஆரைப் பற்றி ‘வாய்மொழி வரலாறாக’ எவ்வளவோ தகவல்கள் உண்டு. சில நம்பகமான மனிதர்கள்கூட அவர் குறித்த நெகட்டிவ்வான சம்பவங்களை, நாம் நம்பக்கூடிய ஆதாரங்களோடு சொல்லியிருக்கிறார்கள்.

எதையுமே நம்பமாட்டேன். அதாவது நம்ப விரும்பமாட்டேன். இந்த விஷயத்தில் பகுத்தறிவுக்கு எல்லாம் ‘லீவு’ போட்டுவிடுவேன். எம்.ஜி.ஆர் விஷயத்தில் மட்டும் நான் ஆத்திகன். அவர்தான் கடவுள்.

சினிமாவில் அவர் காட்டிய ‘ஒழுக்கப் பிம்பம்’ அவ்வளவு நேர்த்தியானது. அது உண்மையென்று நம்பக்கூடிய அளவுக்கு மனசுக்கு நெருக்கமானது.

அனேகமாக எட்டாவது வயதில்தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ முதன்முறையாக பார்த்தேன். ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடல் முடிந்ததுமே, பேரழகியான அந்த தாய்லாந்து ஃபிகர் (14 வயது; தலைவரின் வயது அப்போது 55) நீச்சல்குளத்தருகே ஓடிவந்து தன் காதலை தெரிவிப்பார். ஓரிரு நிமிடங்களுக்கு முன்பாக பாடலில் இஷ்டத்துக்கும் புகுந்து விளையாடிய தலைவரோ, அசால்டாக வலக்கையில் (வாத்தியார் இடதுகைப் பழக்கம் கொண்டவர்) அந்த காதலை நிராகரிப்பார். கூடுதல் அதிர்ச்சியாக ‘தங்கச்சி’ என்று விளிக்க, தாய்லாந்து அவரைக் கட்டிக்கொண்டு கண்ணீர் உகுக்க, சட்டென்று படம் ‘பாசமலர்’ ரேஞ்சுக்கு காவியமாகி விடும். கடந்த முப்பது ஆண்டுகளாக அந்தப் படத்தை கிட்டத்தட்ட நூறுமுறை பார்த்தாகிவிட்டது. பைத்தியம் மாதிரி ஒரே படத்தை ஏன் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றால், எம்.ஜிஆர் தாய்லாந்திடம் காட்டிய அந்த ‘ஆண்மையான’ ஒழுக்கம்தான். சந்திரகலாவுக்காக மட்டுமே தன் கற்பை போற்றிப் பாதுகாப்பதும், தன் காதலன் என்று நினைத்து மஞ்சுளா கட்டியணைக்க ஓடிவரும்போது, ‘அண்ணீ, நான் ராஜூ. முருகனோட தம்பி’ என்று பதறிவிலகுவதுமாக… ‘மனுஷன்னா இவன்தான்யா…’ என்று அந்த வயசிலேயே தோன்றியது.

பெண்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று சுயக்கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாத்திரங்கள்தான் ரோல்மாடல் ஆனது.

தனிப்பட்ட ரசனை அடிப்படையில் கமல்ஹாசனையும், சாருநிவேதிதாவையும் பிடிக்குமென்றாலும் ‘பெண்கள்’ விஷயத்தில், அவர்களை எவ்விதத்திலும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. ஒருவேளை இந்த பிற்போக்குத்தனமான, தாலிபானிஸ மனநிலையால்கூட ‘பெ.முருகன் கருத்துச்சுதந்திர’ விவகாரத்தில் பெரும்பான்மை தமிழிலக்கிய அறிவுஜீவிகளின் கருத்துக்கு நேரெதிர் கருத்து எனக்கு உருவாகியிருக்கலாம். ஆனாலும் சாகும்வரை சினிமா எம்.ஜி.ஆராகவே இருக்க விருப்பம்.

எனவேதான் நிஜவாழ்வில் பெண்களை எதிர்கொள்ள நேரும்போதெல்லாம் நட்புபாராட்டவோ, நெருக்கமாக பழகவோ கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை ‘வாலண்டியராகவே’ தவிர்த்துவிடுவேன். அம்மா, சகோதரி, மனைவி தவிர்த்து (எம்.ஜி.ஆர் ஸ்டைல்தான்) மற்ற பெண்களிடம் “நல்லாருக்கீங்களா? ஊர்லே மழையெல்லாம் நல்லா பெய்யுதா?” ரேஞ்சுக்கு மேல் எதுவும் பேச நமக்கு சங்கதி இருப்பதில்லை. சமூகவலைத்தளங்களில் கூட வேண்டுமென்றே பெண்களிடம் சண்டை இழுத்து, ‘இரும்புத்திரை மனிதன்’ ஆக இமேஜை தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பதுண்டு.

‘சரோஜாதேவி’யெல்லாம் சும்மா. அப்பப்போ ஆல்டர் ஈகோவை திருப்திபடுத்திக்கொள்ள.

இம்மாதிரி எம்.ஜி.ஆர்களை நிஜவாழ்வில் சந்திக்க நேரும்போது, ‘அட நம்மாளு’ என்பது மாதிரி மனநெருக்கம் ஏற்படுகிறது. முடிந்தவரை கமல்ஹாசன்களிடமிருந்து விலகி வெகுதூரமாக ஓடிவிடுகிறேன் என்பது என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு தெரிந்த விஷயம்தான். கமல்ஹாசன்களும் நிரம்பியதுதான் உலகம் என்றாலும், அவர்களிடம் சேர்ந்துப் பழக என்னுடைய அந்தரங்கமான எம்.ஜி.யாரிஸ கொள்கை அனுமதித்துத் தொலைக்க மாட்டேன் என்கிறது.

எதையோ பேசவந்து எதையோ பேசிக்கொண்டிருக்கிறேன்.

நண்பர் சரவணகார்த்திகேயனின் ‘தமிழ்’மின்னிதழ் வெளிவந்திருக்கிறது.

அதில் ஜெயமோகனின் பேட்டி கிட்டத்தட்ட ஐம்பது பக்கங்களுக்கு விரிகிறது. ஜெமோ ஏற்கனவே பலமுறை விடையளித்துவிட்ட அலுப்பூட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கேள்விகள். ஆனாலும் தன்னுடைய சுவாரஸ்யமான வெளிப்பாட்டுத் தன்மையால் அந்த சுமை வாசகனுக்கு ஏற்படாமல் தோள் மீது தாங்கியிருக்கிறார்.

பேட்டியில் வழக்கமான இடதுசாரி துவேஷம், தமிழ் கிண்டல், நித்ய சைதன்யபதி, இந்து, ஆன்மீகம், நாத்திகம், இந்திய ஞானமரபு, சுரா, விஷ்ணுபுரம் என்று பலமுறை ஜல்லியடித்து ஜெமோ கான்க்ரீட் கட்டிடம் எழுப்பிய விஷயங்களை தாண்டி, அவருடைய எம்.ஜி.ஆர்த்துவம் இறுதியில் பளிச்சென்று வெளிப்படுகிறது. ஜெயமோகனை என் மனதுக்கு மிக அருகிலான ஆளுமையாக உணர்வது, அவர் தன் குடும்பத்தை பற்றி பேசும்போதுதான்.

பேட்டியின் இறுதிப்பகுதியில் ஜெயமோகன் பேசும் இந்திய குடும்பச்சூழல் வன்முறை மாதிரியான விஷயங்கள் முழுக்க ஏற்றுக்கொள்ளத்தக்கவையே.

இன்று சைதன்யா தன்னுடைய அப்பா ஜெயமோகன் பற்றி வைத்திருக்கும் மதிப்பீட்டை, என்னுடைய ஐம்பத்து மூன்று வயதில் என்னுடைய மகள்களும் என்மீது வைத்திருக்க வேண்டும் என்று உளமாற விரும்புகிறேன்.

நெகிழ்ச்சியான வாசிப்பனுபவத்தை தந்ததற்கு நன்றி ஜெமோ & சரவணகார்த்திகேயன்.

ஹண்ட்ரட் பர்சண்ட் ஹேப்பி

$
0
0
சமீபத்தில் சென்னை மயிலாப்பூர் தெற்குமாட வீதியிலிருந்த அந்த புத்தகக்கடைக்கு போயிருந்தோம். கார்த்திக் புத்தக நிலையம் என்று பெயர். நூற்றுக்கணக்கில் ரமணி சந்திரன் நாவல்கள். கூடவே கிட்டத்தட்ட முப்பது பெண் எழுத்தாளர்களின் புத்தகங்கள்.

“இவ்வளவு பெண்கள் தமிழில் எழுதுகிறார்களா?” ஆச்சரியத்தோடு முணுமுணுத்தோம்.

நம்முடைய முணுமுணுப்பு கடைக்காரரின் காதில் விழுந்திருக்க வேண்டும்.

“ஆமாங்க. இவ்வளவு பேரு எழுதுறதைவிட அதை லட்சக்கணக்கானோர் படிக்கிறாங்க என்பதுதான் முக்கியம்” என்றார். அவருக்கு எண்பது வயது இருக்கும். ஆனாலும் வயதை மீறிய சுறுசுறுப்பு.

“தமிழில் இப்போ யாருமே படிக்கிறதில்லை. புத்தக வாசிப்பே குறைஞ்சிடிச்சின்னு சொல்றாங்களே சார்?”

“எதை வெச்சி சொல்றாங்கன்னு தெரியலை. இந்த கடையிலே புத்தகங்கள் விற்கிறதை வெச்சி சொல்றேன். முன்னைவிட நிறைய பேர் படிக்கிறாங்க. குறிப்பா பெண்கள் நிறைய படிக்கிறாங்க”

சொன்னதோடு இல்லாமல், சூடாக விற்றுக் கொண்டிருந்த சில புத்தகங்களை நம் கையில் திணித்தார். சமீபத்தில் நன்றாக எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் என்று சிலரை நமக்கு சிபாரிசும் செய்தார்.

“ஓசையில்லாமே ஓர் எழுத்தாளப் பரம்பரை தமிழில் உருவாகிட்டு வருது. மெயின்ஸ்ட்ரீமில் இதைப்பத்தி பெருசா யாரும் பேசுறதில்லைன்னாலும், அண்டர்கரெண்டில் ரொம்ப வேகமா இது நடக்குது. ரமணி சந்திரன் தான் அவங்க தலைவி. நாப்பத்தஞ்சி வருஷமா எழுதறாங்க. அவங்களை ஃபாலோ பண்ணி கணிசமான இளம் பெண்கள் எழுத வந்திருக்காங்க” என்று டிரெண்டை சொன்னார்.

நன்றி சொல்லி விடைபெறும்போது அவரது பெயரை கேட்டோம். பாலச்சந்திரன் என்றார். ஏதோ ஒரு பொறி தட்டவே, “சார், நீங்க” என்றோம்.

“நீங்க யூகிக்கிறது சரிதான். அவங்க என்னோட மனைவிதான். நான்தான் மிஸ்டர் ரமணிசந்திரன்” என்றார். லட்சக்கணக்கான தமிழ்ப் பெண்களின் ஆதர்ச எழுத்தாளரின் கணவர்.

“அவங்க வெற்றிக்கு பின்னாலே நான்தான்னு எல்லாம் சொல்ல மாட்டேன். கதைகள் எழுதும்போது அவங்களுக்கு தேவைப்படுகிற சில விவரங்களை கேட்பாங்க. அதை சேகரிச்சி கொடுத்திருக்கேன். அதைத் தவிர்த்து முழுக்க முழுக்க அவங்களோட தனிப்பட்ட வெற்றிதான் இது” என்று அடக்கமாக சொன்னார்.

ரமணி சந்திரன் 1938, ஜூலை பத்தாம் தேதி பிறந்தார்.

தான் பிறந்தநாளை அவரே, அவரது பாணியில் சொல்லியிருக்கிறார்.

“சில பவுர்ணமி நாட்களில், நிலவைச் சுற்றிலும் காம்பஸ் கொண்டு வரைந்தாற்போல, ஓர் ஒளி வட்டம் தென்படுவது உண்டு. நன்கு கவனித்தால், அந்த ஒளியில் வான வில்லின் ஏழு வண்ணங்களும் தெளிவற்று ஒளிர்வதைக் காணலாம். அதை நிலவுக்குக் கோட்டை கட்டியிருப்பதாக ஊர்பக்கம் சொல்வதுண்டு. அன்று, நான் பிறந்த அந்த நாளில், இன்னமும் அற்புதமாக, நிலவுக்கு அது போன்ற இரு கோட்டைகள் அமைந்திருந்தனவாம். முற்றத்தில் அமர்ந்து, இரண்டு கோட்டை கட்டிய நிலவை, அதிசயத்துடன் பார்த்துவிட்டுப் போய், என்னை பெற்றதாக, என் அம்மா சொன்னதுண்டு”

மேற்கண்ட பத்தியை வாசித்ததுமே ரமணிசந்திரனின் வாசகர்கள் கண்டு கொண்டிருப்பார்கள். அவரது கதைகளின் பெரும்பாலான நாயகிகள், ரமணிசந்திரனுடைய அம்மாவின் தன்மையை கொண்டவர்கள்தான்.

ரமணிச்சந்திரனின் வீட்டில் அக்கா தங்கைகள் ஐந்து பேர். கோயமுத்தூரில் இருந்த தங்கைக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். தங்கையின் கணவர் ஒரு வாரப்பத்திரிகை ஆசிரியர். யதேச்சையாக இவரது கடிதங்களை படித்த அவர், எழுத்தில் இருந்த வடிவ நேர்த்தியை கண்டு இவர் கதை எழுதலாமே என்று கேட்க ஆரம்பித்தார்.

“எனக்கு அதெல்லாம் ஒத்துவராதுங்க” என்று ஆரம்பத்தில் கூச்சமாக மறுத்துக் கொண்டிருந்தார்.

அவரோ ஒருமுறை அதிரடியாக இவர் கதை எழுதுவதாக பத்திரிகையில் விளம்பரப் படுத்திவிட்டார். வேறுவழியில்லாமல் முதன்முதலாக ஒரு நாவலை எழுதினார். நாவலின் பெயர் ‘ஜோடிப் புறாக்கள்’. 1970ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போதிலிருந்து வருடத்துக்கு சராசரியாக ஐந்து, ஆறு நாவல்களாவது எழுதிக் கொண்டிருக்கிறார். நாவல்களின் எண்ணிக்கையில் மட்டுமே இரட்டை செஞ்சுரியை தாண்டிவிட்டார். இது தவிர்த்து சிறுகதைகளின் கணக்கு தனி.

ரமணிச்சந்திரனின் அனைத்துக் கதைகளுக்கும் பொதுவான சில அம்சங்கள் உண்டு.

சாதி மற்றும் மதப்பிரச்சினை இருக்கவே இருக்காது. பிழியவைக்கும் சோகத்துக்கு வாய்ப்பேயில்லை. ரொம்ப சீரியஸாக கதையில் பாத்திரங்கள் யாரும் தத்துவம் பேசமாட்டார்கள். எல்லோருமே அன்பானவர்கள். எல்லோருமே மகிழ்ச்சியாக வாழக்கூடியவர்கள். தொடர்ச்சியாகவே இயங்கும் இந்த பாசிட்டிவ்வான அணுகுமுறைதான் அவரை மற்ற எழுத்தாளர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது.

ரமணிச்சந்திரனின் கதைகள் தமிழ்ப் பெண்கள் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அளப்பறியாதது. நம் நண்பருக்கு திருமணம் நடந்திருந்த சமயம். அவரது மனைவிக்கும், அம்மாவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே முட்டல் மோதல். மாமியார் மருமகள் பிரச்சினையால் குடும்பமே பிளவுபடக் கூடிய சூழல். அப்போதுதான் அந்த ‘ரமணி மேஜிக்’ நடந்தது. மாமியார் எதையோ படித்துக் கொண்டிருந்ததை யதேச்சையாக மருமகள் பார்த்தார். அது ஒரு ரமணிச்சந்திரன் நாவல். இவரும் ரமணிச்சந்திரனின் தீவிர வாசகி. இரண்டு ரமணிச்சந்திரன் வாசகிகள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொள்ளலாமா என்று இருவரும் அன்றிலிருந்து ராசியாகி விட்டார்கள். இன்றுவரை நண்பர் அச்சம்பத்தை சொல்லி சொல்லி ஆச்சரியப்படுகிறார்.

ரமணிச்சந்திரன் கதைகளில் வரும் வில்லன்களும், வில்லிகளும் பெரும்பாலும் ஆபத்தில்லாதவர்கள். உண்மையில் அவர்களுக்கு வில்லத்தனம் இருக்கிறதா என்பதே சந்தேகம்தான். எப்படி இந்தமாதிரி கேரக்டர்களை பிடிக்கிறார்?

“திருமணத்திற்குப் போனோம் என்றால், உண்மையான அன்புள்ளவர்கள், பெண் மாப்பிள்ளை, வீடியோவுக்கும், போட்டோவுக்கும் நன்றாக இருக்க வேண்டும் என்று, வேர்வை துடைத்துவிடுவார்கள். நெற்றியில் கண்டபடி பூசப்படும் திருநீரு குங்குமத்த்தைச் சீர் செய்வார்கள். தத்தம் ஜரிகை துணிமணிகளையும், நகைகளையும் காட்டி, போஸ் கொடுக்க மாட்டார்கள். உதவுகிரமாதிரி வீடியோவுக்குக் காட்சி கொடுப்போரும் உண்டு. இன்னும், ஒரிருவரைப் பின்னே தள்ளுவதும், தலையே நீட்டி, கேமராவுக்கு முன்னே, தோற்றம் அளிப்பதும், கவனித்தால், கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்... குணநலன்களை (அப்படி ஒன்று இருந்தால்) விளக்குவதாகவும் இருக்கும். இன்னும், வீடியோவின் பிளாஷ் லைட் தங்கள் பக்கம் வரும்போது, சிலர் அப்பாவி போல முகத்தை வைத்துக்கொள்வதைப் பார்க்கையில் சிரிப்பு வரும். கூடவே, நம் கதைக்கு வில்லியும் கிடைப்பாள். வில்லன்களும்தான்”

கதைகள் எழுத விரும்பும் ஒவ்வொருவரும் ரமணிச்சந்திரனின் மேற்குறிப்பிட்ட பத்தியை மனப்பாடம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். எப்படி எழுதுவது என்பதை ஒரே பாராவில் இவ்வளவு எளிமையாக வேறு யாரும் சொல்லியதில்லை. நாம் பார்க்கும் கேட்கும் விஷயங்கள்தான் கதைகள். இவை வானத்திலிருந்து குதிப்பதில்லை.

ரமணிச்சந்திரனின் கதைகள் எப்போதும் மகிழ்ச்சியாகவேதான் முடியும். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் எவ்வளவோ துயரங்கள் இருக்க, கதைகளிலும் அது தேவையா என்பதுதான் அவரது கேள்வி. வாசகர்கள் திணற திணற மகிழ்ச்சி என்பதுதான் அவரது வெற்றி.

(சூரியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ரைட்டர்ஸ் உலா’நூலின் ஓர் அத்தியாயம்)

காதல் வழியும் கோப்பை

$
0
0
மெரீனா பீச்

“ஏண்டா லேட்டு?” என இன்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி தவடையில் இடமும், வலதுமாக நாலு அறை காட்டினால் தான் மனசு ஆறும். அப்படியும் திருந்துகிற ஜென்மம் இல்லை அவன்.

காதல் ‘ஓக்கே’ ஆகும் வரை ஐந்து மணிக்கு வரவேண்டிய இடத்துக்கு மூன்று மணிக்கெல்லாம் வந்து தேவுடு காக்கிறான்கள். காதலித்த பிற்பாடு ஏனோதானோவென்று சலிப்பாக ஏழு மணிக்கு வருவதே இந்த காதலன்களின் பிழைப்பாகி விட்டது.

காதலன்கள் சோம்பேறிகள். காதலிகள் கிள்ளுக்கீரைகள். ஆதாம் - ஏவாள் காலத்திலிருந்தே இதைதான் வரலாறு பதிவு செய்து வருகிறது.

கரையில் அமர்ந்து அலைகளை வெறித்துக் கொண்டிருந்தாள் அனிதா. ஸ்லீவ்லெஸ் மஞ்சள் கலர் சுடிதார். சிவந்த வாளிப்பான தோள்கள் கூடுதல் கவர்ச்சியை வெளிப்படுத்துவதாக தோன்றியதால், துப்பட்டாவை சால்வை மாதிரி போர்த்தியிருந்தாள். இவனை காதலிப்பதற்கு முன்பாக தோற்றம் குறித்த பெரிய கவனம் எதுவும் அவளுக்கில்லை. கைப்பையை திறந்து உள்ளங்கையளவு அகலம் கொண்ட கண்ணாடியில் முகம் பார்த்தாள். லேசாக கோணலாய் தெரிந்த நெற்றிப் பொட்டினை ‘சென்டர்’ பார்த்து நிறுத்தினாள். காதோர கேசத்தை சரி செய்தாள். கண்களை கசக்கித் துடைத்தாள்.

‘ஸ்ஸிவ்வென’ ஆர்ப்பரித்து பால்நிற நுரைகளோடு பொங்கி வரும் அலைகள், எதிர்பாராத நொடியில் அமைதியாகி, மவுனமாக பின்வாங்குவதை எத்தனை முறை பார்த்தாலும் சுவாரஸ்யம் குறைவதில்லை.

ஒரு காதல் படத்துக்கு ‘அலைகள் ஓய்வதில்லை’ என்பதைவிட பொருத்தமான பெயர் வேறு ஏது? ‘தொட்டுத் தொடரும் பந்தம்’ என்பது அலைகளுக்கும், கரைக்குமான சரியான உறவு. அலை காதலன். கரை காதலி. அலைக்காக கரை என்றுமே காத்திருப்பதில்லை. வரவேண்டிய நேரத்தில் மிகச்சரியாக வந்துவிடுகிறது. இந்த கிருஷ்ணா மட்டும் ஏன்தான் இப்படிப் படுத்துகிறானோ?

மணி ஆறரை. இருட்டத் தொடங்கியிருந்தது. தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தைக்கு ஐந்து ஆறு வயது இருக்கும். அப்பா அம்மாவுக்கு நடுவில் ஆளுக்கு ஒரு கையை கொடுத்து, அலைகள் வரும்போதெல்லாம் குதித்துக் கொண்டிருந்தாள். இந்த குழந்தை மனம் இனி தனக்கு வாய்க்க சாத்தியமேயில்லை என்கிற யதார்த்தம் புரிந்தது. இன்னும் ஒரு பதினைந்து ஆண்டுகள் கழித்து இதே குழந்தையும், அவளது காதலனுக்காக தன்னை மாதிரியே இதே கடற்கரையில் காத்திருக்கப் போகிறாள். ஓடிப்போய் அந்த குழந்தையிடம் ‘வளர்ந்து பெரியவ ஆயிட்டேனா, எவனையும் காதலிச்சி மட்டும் தொலைக்காதேடி செல்லம்’ என்று சொல்லலாமா என்று பைத்தியக்காரத்தனமாகவும் நினைத்தாள்.


பட்டினப்பாக்கம் டாஸ்மாக்

“மச்சி மணி ஆறு ஆவுது. அனிதா வெயிட் பண்ணிக்கிட்டிருப்பா. நான் கௌம்பறேண்டா” பைக்கில் வினோத்தை இறக்கிவிட்டு சொன்னான் கிருஷ்ணா.

“அடப்பாவி. ஃபிகருக்காக நட்பை முறிச்சிடுவியாடா நீயி”

“அப்படியில்லை மச்சான். குடிச்சிட்டுப் போனா ஓவரா பிகு காட்டுறாடாஞ்”

“டேய், சொல்றதை சொல்லிட்டேன். இப்பவே ஸ்ட்ராங்கா இருந்துக்கோ. அப்புறம் கல்யாணத்துக்கும் அப்புறம் ரொம்ப ஓவரா ஏறி மிதிப்பாளுங்க. நான் படுற பாட்டை பாத்துட்டாவது திருந்துங்கடா” பர்ஸில் இருந்து ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து, சரக்கு வாங்க கவுண்டரில் நீட்டினான் வினோத்.

“வீ.எஸ்.ஓ.பி. ஹாஃப்”

“எனக்கு வேணாம் மச்சான். அவளாண்ட பிராப்ளம் ஆயிடும்” கிருஷ்ணா கெஞ்சும் குரலில் சொன்னான்.

“அடப்பாவி. இவ்ளோ சொல்லிக்கிட்டிருக்கேன். அப்போன்னா நம்ம பிரண்ட்ஷிப் அவ்ளோதானா? ஆம்பளைங்களா நடந்துக்கங்கடா அப்ரண்டீஸுகளாஞ்” நக்கல் அடித்தான்.

“சரி மச்சி. சொன்னா கேட்க மாட்டேங்குறே. எனக்கு வோட்கா மட்டும் குவார்ட்டர் சொல்லு. ஸ்மெல்லு காமிச்சிக்காம சமாளிச்சிக்கலாம்”

“குவார்ட்டர் வீ.எஸ்.ஓ.பி., இன்னொரு குவார்ட்டர் வோட்கா. ரெண்டு கிளாஸு. ஒரு கோக்கு. ஒரு ஸ்ப்ரைட்டு”

இருவரும் ‘சீயர்ஸ்’ சொல்லிக்கொள்ளும்போது நேரம் ஆறரை.

“இதோ பாரு மாமா. பக்கத்து வீட்டுப் பொண்ணு. பார்த்தே. புடிச்சிடிச்சி. உன்னை அறியாம லவ் பண்ண ஆரம்பிச்சிட்டே. அதெல்லாம் சரிதான். லவ்வுக்காக உன்னை மட்டும் நீ எப்பவும் மாத்திக்காத. எந்தப் பொண்ணும் லவ்வருக்காக அவளை மாத்திக்கறதில்லை. இதே மாதிரி கல்யாணத்துக்கு அப்புறமாவும், டெய்லி சரக்கடிப்போம், தம் அடிப்போம். இதையெல்லாம் நீ கண்டுக்கக்கூடாது. அதே மாதிரி ப்யூட்டி பார்லர் போறது, ஆ வூன்னா அம்மா ஊட்டுக்கு போறது இதையெல்லாம் நான் கண்டுக்க மாட்டேன். இப்படின்னு உடனே டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸை தெளிவா பேசிடு. இல்லேன்னா நாளை பின்னே என்னை மாதிரி நீயும் புலம்பிக்கிட்டிருப்பே. என் நண்பன் நீ நல்லாருக்கணும்டாஞ்” வினோத் போதையில் அட்வைஸிக்கொண்டே இருக்க, எரிச்சலும் டென்ஷனுமாக இருந்த கிருஷ்ணா, க்ளாஸை எடுத்து ஒரே கல்ப்பில் சரக்கை முடித்தான்.

“சரக்கடிக்கிறது நம்ம பிறப்புரிமைடாஞ் இவளுங்க என்ன அதை தடுக்கறது?” அவன் அடுத்த ‘பஞ்ச்’ அடித்தான்.

’ஆமாம் தானே?’ இந்த பாயிண்ட் கிருஷ்ணாவுக்கு பிடித்திருந்தது. என்னவானாலும் சரி. சரக்கடிக்கும் உரிமையை மட்டும் காதலுக்காக தாரை வார்க்கக்கூடாது என்று உடனடியாக முடிவெடுத்தான். தம் பற்றவைத்து, நன்கு உள்ளிழுத்து, முடியை கைகளால் கோதி, தலையை மேலாக்க தூக்கி கூரையைப் பார்த்து ஸ்டைலாக புகையை ஊதினான்.

“வீட்டுக்குப் போனா கரடி மாதிரி கத்துவா ராட்சஸி. நானென்ன குடிச்சிட்டு ரோட்டுலே உழுந்து புரண்டு எழுந்தா போறேன். என் லிமிட்டு எனக்குத் தெரியாது.. எவ்ளோ குடிச்சாலும் நான் ஸ்டெடி மாமா. வாசலிலே நான் உள்ளே நுழையறப்பவே குழந்தையப் போட்டு நாலு சாத்து சாத்துவா.. இதுதான் சண்டைய ஆரம்பிக்கிறதுக்கு அவளுக்கு ஸ்டார்ட்டிங் பாயிண்ட்” அவன் அவனுடைய தரப்பு சோகத்தை புலம்பிக் கொண்டேயிருந்தான். அவனுக்கும் லவ் மேரேஜ்தான். கல்யாணத்துக்கு முன்பு ரொம்பவும் விட்டுக் கொடுத்துவிட்டதால், இப்போது பயங்கர ‘ரப்ஸர்’ என்று தினம் தினம் அழுது வடிகிறான் வினோத்.


மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

பயபக்தியோடு பிரகாரத்தை சுற்றிக் கொண்டிருந்தாள் அனிதா. பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, பொமரேனியன் நாய்க்குட்டி மாதிரியே அவளை பின் தொடர்ந்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.

“எத்தினி வாட்டி சொன்னாலும் திருந்த மாட்டேயில்லை” அவள் குரலில் ஏகத்துக்கும் அதிகாரமிருந்தது.

“இல்லைப்பா.. நான் சும்மா இருந்தாலும் ஃப்ரண்ட்ஸ் கூட்டிக்கிட்டுப் போயி ஊத்திடறானுங்க. பேசிக்கலி நான் ஒரு குடிகாரன் கிடையாதுங்கிறதை நீ புரிஞ்சுக்கணும்பா”

ஏதோ சிலையை தொட்டு வணங்கி, “குடியா, நானான்னு நீ இன்னிக்கே முடிவு பண்ணிடு கிருஷ்ணா. சீரியஸாவே சொல்றேன். என் குடும்பம் கெட்டதே எங்கப்பாவோட குடியாலதான். எங்கம்மா மாதிரி நானும் காலத்துக்கும் உன்னை கட்டிக்கிட்டு கஷ்டப்பட முடியாது”

“அவ்ளோதானா நம்ம லவ்வு?” அவன் குரல் அவனுக்கே பரிதாபமாய் தோன்றியது.

“அதென்னங்கடா.. நாங்க உங்க லவ்வை ஏத்துக்கற வரைக்கும் டீடோட்டலர் மாதிரி நடிக்கறீங்க. காஃபி, டீ கூட குடிக்கறதில்லைங்கறீங்க.. லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா, தைரியமா பக்கத்துலே உட்கார்ந்திருக்கறப்பவே சிகரெட்டு பத்த வைக்கறீங்க. தண்ணியடிச்சிட்டு வந்து உளறிக்கிட்டிருக்கீங்க.. தாலி கட்டினதுக்கப்புறமா மீதியிருக்கிற கெட்டப் பழக்கம்லாம் கூட வந்துடுமா உங்களுக்கெல்லாம்?” முன்கோபுர வாசலில் செருப்பு மாட்டிக்கொண்டே சீறினாள்.

செருப்புவிட வந்த இரண்டு தாவணிகள் நமட்டுச் சிரிப்போடு இவனைப் பார்த்தவாறே கடக்க, சுர்ரென்று கிளம்பிய ஈகோவை அடக்கியவனாய்.. “ப்ளீஸ் அனிதா. இனிமே தண்ணியே அடிச்சிருந்தாலும் சொன்ன நேரத்துக்கு, சொன்ன இடத்துக்கு கரெக்ட்டா வந்துடறேன்” சட்டென்று சொல்லிவிட்டு, நாக்கை கடித்துக் கொண்டான்.

“அப்போன்னா என்னை விட்டாலும் விட்டுடுவே.. தண்ணியை மட்டும் விடமாட்டே...”

“அப்படியில்லேப்பா. அது ஒரு பழக்கம். அவ்வளவு சுளுவா விட்டுட முடியாது. மாசாமாசம் ஆயிரக்கணக்குலே குடிக்காக செலவு பண்ணனும்னு எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா.. ஆறு மணியாச்சின்னா கை கால்லாம் தடதடன்னு ஆயிடுது தெரியுமா?” இப்போது அவளுக்கும் அவனைப் பார்க்க பரிதாபமாகவே இருந்தது.

“அச்சச்சோ... ரொம்ப பாவமாயிருக்கு.. நிறைய செலவு வேற ஆவுதா நான் வேணும்னா ஒரு ஐடியா சொல்றேன். கேட்குறீயா?”

“குடியை விட்டுருன்னு மட்டும் நொய்நொய்னு கழுத்தறுக்காம, வேற எந்த ஐடியான்னாலும் சொல்லு” இப்போது கொஞ்சம் தைரியமாகவே பேசினான்.

“ம்ம்... இப்போ சொல்ல மாட்டேன். நைட்டு கரெக்ட்டா பத்து மணிக்கு, செவுரு எகிறிக்குதிச்சி எங்க வீட்டுப் பின்னாடி இருக்குற கொய்யா மரத்தாண்ட வந்து ஒளிஞ்சிக்கிட்டிரு.. நானே வந்து சொல்றேன்”

“உன்னை பார்க்கணும்னா நரகத்துக்கு கூட வர்றதுக்கு ரெடியா இருக்கேன் செல்லம்!”


அனிதாவின் ஆபிஸ்

“அக்கா.. நீங்க சொன்ன ஐடியா ஒர்க்-அவுட் ஆயிடிச்சி. இப்போல்லாம் என் ஆளு தண்ணியே போடறதில்லை. ரொம்ப தேங்க்ஸ்க்கா” லஞ்ச் டேபிளில் உற்சாகமாக லதாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் அனிதா.

“ம்ஹூம்.. இதுகூட டெம்ப்ரவரி சொல்யூஷன்தான். கல்யாணத்துக்கப்புறம் ரொம்ப கேர்ஃபுல்லா இவனுங்களை வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்கணும். டெலிவரி, கிலிவரின்னு நாம பிஸியாவுற நேரத்துலே மறுபடியும் வேலையைக் காட்டிடுவானுங்க”

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். அய்யோ.. இப்போ அவனை நெனைக்கவே எனக்கு ரொமான்ஸ் மூடு எகிறுது. முன்னாடியெல்லாம் ஆறு மணிக்கு பார்க்க வரச்சொல்லிட்டு ஏழரை, எட்டு மணிக்கு தள்ளாடிக்கிட்டே வருவான். எரிச்சலா இருக்கும். இப்போ அஞ்சு, அஞ்சரைக்கே எனக்கு முன்னாடி வந்து வெயிட் பண்ணுறான். பச்சத்தண்ணி கூட யோசிச்சி யோசிச்சிதான் குடிக்கிறான்”

“அப்படி என்னடி சொக்குப்பொடி மந்திரம் சொல்லிக் கொடுத்தாங்க இந்த லதாக்கா?” சங்கீதா கேட்டாள்.

“அக்கா சொன்னது ரொம்ப ஈஸி டெக்னிக்டி. என்னாச்சினாலும் சரி. டெய்லி நைட்டு பத்து மணிக்கு ஒருவாட்டி என்னை நேரில் பார்த்துட்டு குட்நைட் சொல்லிட்டு போகணும்னு கண்டிஷன் போட்டேன். அதுமாதிரி கஷ்டப்பட்டு அவன் வர்றதாலே போனஸா ஒரு லிப்-டூ-லிப் கிஃப்ட். டிரிங்ஸ் வாசனை வந்தா நோ கிஸ். இந்த கிஸ்ஸை வாங்குறதுக்காகவே அவன் தண்ணி போடறதை விட்டுட்டான். அதுக்கப்புறமா போயி சரக்கு அடிக்க நினைச்சாலும் பத்து மணிக்கு மேலே டாஸ்மாக்கும் மூடிடுவாங்கங்கிறதாலே என் ஆளு வேற வழியில்லாமே சுத்தபத்தமாயிட்டான்”

“அட நல்ல ஐடியாக்கா.. என் ஆளு சரக்கடிக்கிறதில்லை. ஆனா கூட்ஸு வண்டி மாதிரி எப்பம்பாரு சிகரெட்டு ஊதிக்கிட்டிருக்கான். எத்தனையோ முறை பேசிப் பார்த்துட்டேன். திருந்தறமாதிரி தெரியலை. இந்த உதட்டு வைத்தியம்தான் அவனுக்கும் சரிபடும் போல” சங்கீதாவும் உற்சாகமானாள்.

“ம்ம்... நீங்கள்லாம் இப்போதான் லவ் பண்ணுறீங்க. உங்களுக்கு நான் கொடுக்குற ஐடியா ஒர்க்-அவுட் ஆவுது. நான் லவ் பண்ண காலத்துலே இதுமாதிரி எவளும் எனக்கு ஐடியா கொடுக்கலையே?” புலம்பிக்கொண்டே தன் தாலியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள் லதா.


ட்விஸ்ட்

முன்பு, நாம் பட்டினப்பாக்கம் டாஸ்மாக்கில் பார்த்த வினோத்தின் மனைவிதான் இந்த லதா என்று கதையை முடித்தால் நல்ல ‘ட்விஸ்ட்’ ஆகத்தான் இருக்குமில்லையா? எனவே அப்படியே இங்கேயே ‘முற்றும்’ போட்டுக் கொள்ளலாம்.

இன்னொரு ‘ட்விட்ஸ்ட்’டும் வேண்டும் என்பவர்கள், கிருஷ்ணா எட்டு மணிக்கெல்லாம் டாஸ்மாக்கில் சரக்கு வாங்கி ஸ்டாக் வைத்துவிட்டு, நைட்டு பத்து மணிக்கு அனிதாவிடம் கிஸ்ஸும் வாங்கிவிட்டு, பதினோரு மணிக்கு மொட்டை மாடி சென்று குடிப்பதாகவும் கதையை நீட்டி வாசித்து, ‘முற்றும்’ போட்டுக் கொள்ளலாம்.

(நன்றி : தமிழ்முரசு பொங்கல்மலர்)

கிணற்றுத் தவளைகள்

$
0
0
காலைப்பொழுது விடிய இரண்டு நாழிகை இருக்கும்போது லாந்தாரோடு ஸ்வாமி தெரிசனத்துக்காக கிளம்பினான் கிருஷ்ணமூர்த்தி. தலையில் வெள்ளைப் பாகை. நெற்றியில் ஸ்ரீசூர்ணம்.
முழந்தாள் வரை நீண்ட வடநாட்டுப்பாணி நாகரிக உடுப்பு. மகா சப்தமெழுப்பிய பாதக் குறடு. அப்பாவின் காசு இவன் அலங்காரத்துக்காகவே தண்ணீரால் செலவாய் கொண்டிருந்தது. தெருமுனையில் ஸ்நேகிதன் நாராயணனும் இணைந்து கொண்டான். சில்வண்டுகளின் ரீங்காரம் தவிர்த்த ஸப்தம் ஏதுமில்லா ஏகாந்த விடிகாலை.
நெஜமாவே பிரேமிக்கிறீயா அவளை நாராயணின் ஸப்தம் அமைதியையும் இருளையும் ஒலிபாய்ச்சிக் கிழித்தது.
அப்படித்தான் நினைக்கிறேன். அவளையே விவாஹம் செய்யவேணுமாய் ஆசைப்படுகிறேன். பூர்வீக சொத்திருக்கு. என் பங்கே ஏழு தலைமுறையைக் காக்கும். மூனுவேளை போஜனம் எந்த கஷ்டமுமில்லாம நடக்கும். அப்பாவிடம் சொல்லி அனுமதி கேட்டு அவளோட பந்துக்களோட பேசவைக்கணும்.
பேசிக்கொண்டே நடக்கையில் கிருஷ்ணமூர்த்தியின் முகத்தை மாதிரியே கிழக்கும் வெளுத்தது. கால்மணிநேர நடைதூரத்தில் கோபுர தரிசனம். கையெடுத்து நமஸ்கரித்தார்கள்.
எம்மை மட்டுமல்ல இந்தப் பூமண்டலத்தையே எந்தப் பாதகமுமில்லாமல் காக்கணும் நாராயணா வாய்விட்டு ஸப்தம் எழுப்பிப் பிரார்த்தித்தான் நாராயணன்.
எந்த பிரச்சினையுமில்லாமல் சக்குபாயை மணம் முடிக்கணும் நாராயணா கிருஷ்ணமூர்த்தி மனசுக்குள் கிசுகிசுத்தான்.
சக்குபாயை கிருஷ்ணமூர்த்தி முதலில் கண்டது ஊர்ப் பொது கேணி பக்கத்தில். ஊரிலிருந்த ஒரே கேணியும் அதுதான். உடல் குளிக்க, சமையல் செய்ய, பாத்திரம் துலக்க எல்லாவற்றுக்கும் அந்தக் கேணியை ஊர் சார்ந்திருந்தது. நீர்மொள்ள பித்தளைத் தவலையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு வந்திருந்தாள். ஒடிந்திடும் போல இருந்தது அவள் இடை. புடவை கட்டியிருந்த அழகை வைத்துப் பார்த்தால், புதுசாகக் கட்டுகிறாள் என தெரிந்தது. வடநாட்டில் பம்பாயில் அவளது பால்யம் பாட்டனார் வீட்டில் நடந்ததாம். புஷ்பவதியாய் ஆனபின் வரன் பார்க்க சொந்தத்தில் ஊருக்கு அழைத்துக்கொண்டார் அவளது தகப்பனார். முதலாய் அவள் கேணிக்கு வந்ததும் அன்றுதான்.
வாலிபனான கிருஷ்ணமூர்த்தி அப்பாவுக்குத் தெரியாமல் சுருட்டுப் பிடிக்க கேணிக்குப் பின்னாலிருந்த பழைய வீட்டுக்கு ஸ்நேகிதர்-களோடு வருவான். அவ்வாறான ஒரு பொழுதில்தான் அவளைக் கண்டான்.
ஸ்ரீமான் இராமபிரானுக்கு சீதைப்-பிராட்டியைக் கண்டதும் வந்ததே காதல். அதுபோலவே மருண்டவிழி மானாம் சக்குபாயைக் கண்டதுமே கிருஷ்ணமூர்த்தியின் இதயம் அவன் வசமிழந்தது. இவளோடு விவாகம் செய்துதான் வம்சம் பெருக்குவேன் என்று சபதமிட்டான். அவள் வேறு ஸமூகம், இவன் வேறு ஸமூகமென்பதெல்லாம் அப்போது அவனுக்கு உள்ளத்தில் தோன்ற-வில்லை.
அடுத்தடுத்த நாட்களில் கிருஷ்ணமூர்த்தி கேணி பக்கமாக வந்தானென்றால், சுருட்டுப் பிடிக்க அல்ல. சக்குபாயைப் பார்க்க. அவளருகே நடந்து மெலிதாக உதடு பிரித்து ஸ்ருதி சேர்த்துப் பாடுவான். நின்னைச் சில வரங்கள் கேட்பேன்! அவை நேரே இன்றெனக்குத் தருவாய். அவன் உள்ளக்கிடக்கையை உணர்ந்தவளாய் சினேகமாய்ச் சிரிப்பாள். அவளுக்கும் அவன் மீது பிரேமம் உண்டென்று தெரியும் வண்ணமாய் பார்ப்பாள்.
கிருஷ்ணமூர்த்தியின் தகப்பனார் ரங்கபாஷ்யத்துக்கு பாதக்குறடு கொண்டு பளாரென முகத்தில் அடித்தது போலிருந்தது.
ஓய் நீரென்ன ஸமூகம், நாங்களென்ன ஸமூகம்? பெண்கேட்டு வெட்கம் கெட்டு வர்றீரே. ஆசைப்பட்டு சிறுபிள்ளையான உம் பிள்ளை அறிவுகெட்டுக் கேட்டானென்றால், வயசான உமக்கும் அறிவில்லையா?
ஸிங்கம் மானை விவாகிக்குமா? யோஸிக்க மாட்டீரா? சக்குபாயின் தகப்பன் பெருங்குரலெடுத்துக் கத்திப் பேசப் பேச தெரு கூடியது. திண்ணையில் அமர்ந்திருந்த ரங்கபாஷ்யத்துக்கு உடல் கூசியது. கையில் வைத்திருந்த வெத்தலச்செல்லத்தை இறுகப் பற்றினார். பதில் பேச நாகுழறியது. தெரு கூடியது. விஷயமறிந்து அவர் முகத்தில் காறி உமிழ்ந்தது. ஊரெதிரில் மானமிழந்த அவர் அன்று இரவே ஊருக்குத் தெற்கு எல்லையில் ஆலமரத்தில் கழுத்தில் கயிறு மாட்டிக் கொண்டு உயிரை மரித்தார்.
சிலநாள் கிரஹத்திலேயே அடைந்துகிடந்த கிருஷ்ணமூர்த்தி, மகாத்மா அழைப்பு விடுத்திருந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்து போராட வெளியூர் போனான். என்ன ஆனான் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது.
* * *
ண்ணீர் எடுக்க தன் வீட்டுப் பெண்கள் வாசல்தாண்டி குடத்துடன் ஆற்றுக்குச் செல்வது கோவிந்தராஜூக்கு சங்கடமாக இருந்தது. கொலுசு குலுங்க குடத்துடன் குதித்துக் கிளம்பும் பூரணியைப் பார்த்தார். வருஷம்தான் எப்படி ஓடுகிறது. காலம்தான் எப்படி மாறுகிறது. மரப்பாச்சிப் பொம்மைக்கு அலங்காரம் செய்து, அப்பா! என்னோட மீரா பாப்பா அழகாயிருக்காளா? என்று மழலை பேசிக் கொஞ்சியவள், எப்படி பூத்துக் குலுங்கிப் பேரழகுப் பெண்ணாய் ஆகிவிட்டாள். அழகான பெண்ணைப் பெற்ற அம்மாக்களுக்குதான் அடிவயிற்றில் நெருப்பு என்பார்கள். கோவிந்தராஜூ தன்னுடைய அடிவயிற்றில் அந்த வெம்மையை உணர்ந்தார்.
சீக்கிரமா நம்மோட கொல்லைப்புறத்தில் ஒரு கிணறு வெட்டலாம் பூர்ணிம்மா. அதுக்கப்புறம் நீ குடத்தோட இப்படி அல்லாட வேண்டியதில்லே.
அடுத்த வாரமே கிணறு வெட்ட வந்தான் ஒப்பந்தக்காரன் மதியழகன். சுண்டி விட்டால் இரத்தம் தெரியும் சிகப்பு. தும்பைப்பூ நிறத்தில் வேட்டி, சட்டை. நெஞ்சில் தொங்கும் மைனர் செயின் வெளியே தெரிவதற்காக சட்டையின் முதல் பொத்தானை அவிழ்த்திருந்தான். லாம்பெரட்டா ஸ்கூட்டர் வைத்திருந்தான்.
பட்டமெல்லாம் படிச்சி முடிச்சிட்டேன். ஆனாலும் கட்சி, கிட்சின்னு அலைஞ்சுக்-கிட்டிருந்தேங்க. அப்பாதான் ஏதாவது தொழிலைப் பாரு. இருக்குற சொத்தை அழிக்கா-தேன்னு திட்டினாரு. நம்ம சுத்துவட்டாரத்துலே இப்போ கிணறு வெட்டதான் ஏகத்துக்கும் கிராக்கி. அதனாலே இந்தத் தொழிலில் இறங்கிட்டேன் படபடவெனப் பேசினான். கோவிந்தராஜூ வெத்தலைப் பாக்கோடு தட்டில் வைத்துக் கொடுத்த முன்பணத்தைப் பவ்யமாக வாங்கினான்.
கிணறு தோண்ட நாலு பேரை அழைத்து வந்திருந்தான். ஜோசியக்காரர் ஒருவர் சொன்ன இடத்தில் கோலமாவு கொண்டு வட்டம் போட்டான். சம்பிரதாயத்துக்குக் கடப்பாரை கொண்டு முதலில் கோவிந்தராஜூ தோண்ட, வேலை மும்முரமாக வளர்ந்தது. காலை, மதியம், மாலை என்று ஒருநாளைக்கு மூன்று முறை வந்து வேலை சுத்தமாக நடக்கிறதா என்று பார்ப்பான் மதியழகன்.
பஞ்சுவைத்த சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டே ஒருநாள் பாதிவரை தோண்டிய கிணற்றைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். கொலுசுச் சத்தமும், வளையல் சத்தமும் இணைந்து புதுவிதமான இனிமையான சப்தம் கேட்டது. மதியழகன் இதுவரை கேட்டறியா சப்தமிது. சட்டென்று சிகரெட்டைக் காலில் போட்டு நசுக்கி, திரும்பிப் பார்த்தான்.
அம்மா மோர் கொடுக்கச் சொன்னாங்க தலைகுனிந்து காலில் வட்டம் போட்டுக் கொண்டு நின்றிருந்தாள் பூரணி.
நன்றிங்க டம்ளரை வாங்கிக் கொண்டே அவளது வட்டமான முகத்தைப் பார்த்தான். குறுகுறுப்பும் மகிழ்ச்சியும் துள்ளி விளையாடும் கண்கள். சிவந்த அளவான நாசி. இதழ்களில் குறும்பான புன்னகை. அவளும் அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். கிராப் வெட்டி எம்.ஜி.ஆர் மாதிரியிருந்தான். நெற்றியில் குங்குமம் இட்டு களையான முகம். அருகே எங்கோ வானொலியில் புதுப்பாடல் ஒலித்தது. தொட்டால் பூ மலரும்.... தொடாமல் நான் மலர்வேன்
கிணற்றில் ஊற்று வருவதற்கு முன்பாகவே அவர்களுக்குள் காதல் ஊற்றெடுத்துவிட்டது.
ஜாதியெல்லாம் இந்தக் காலத்துலே பிரச்சினை இல்லை பூரணி. கலப்புத் திருமணத்துக்கு அரசாங்கமே சட்டம் போட்டிருக்கு தெரியுமில்லே?
நீங்க நல்லமாதிரிதான் பேசறீங்க. ஆனா எங்காளுங்க வேறமாதிரி ஆளுங்க. சொந்த ஜாதியா இருந்தாக்கூட பொண்ணு கொடுக்க ஆயிரம் முறை யோசிப்பாங்க.
ஒரே வழிதான். ஓடிப்போயிடலாம். குழந்தை குட்டின்னு பொறந்தப்புறம் ஊருக்கு வரலாம். அதுக்கப்புறம் அவங்க நினைச்சாலும் நம்மைப் பிரிக்க முடியாது.
எங்காளுங்க மானத்துக்குக் கட்டுப்-பட்டவங்க. செத்துடுவாங்க. இல்லைன்னா நம்பளைத் தேடிச் சாகடிப்பாங்க.
அதெல்லாம் ஒன்னும் கிடையாது. நாலு நாளைக்கித் தேடிட்டு அப்படியே விட்டுடு-வாங்க. நாம ஒரு வாரம் கழிச்சி கடிதாசி போட்டு நமக்குக் கல்யாணம் ஆயிடிச்சின்னு சொல்லிக்கலாம். இன்னைக்கு ராத்திரி பன்னெண்டு மணிக்கு தெருமுக்குலே வேப்பமரத்துக்குக் கீழே நிக்கறேன். துணிமணி-யோடு வந்துடு.
ம்ம்ம்... அரைகுறை மனதோடு சம்மதித்தாள்.
மறுநாள் காலை மதியழகன் வெட்டிய அதே கிணற்றில் பூரணி மிதந்து கொண்டிருந்தாள்.
* * *
ல்.. ஓ.. வி.. ஈ..
திரும்பச் சொல்லு லவ்

ஏய் நித்யா. குழந்தைக்கு என்னடி சொல்லிக் கொடுக்கறே? அண்ணி சமையலறையில் இருந்து குரல் கொடுத்தாள்.
ம்.. உம்பொண்ணுக்கு லவ் பண்ணச் சொல்லிக் கொடுக்கறேன் அண்ணி.

உங்கண்ணன் காதுலே விழுந்ததுன்னா செருப்புப் பிஞ்சிடும்.
வெவ்வேவ்வ்வே அண்ணிக்குப் பழிப்புக் காட்டிவிட்டு தெருவுக்கு ஓடினாள் நித்யா. பத்தொன்பது வயது. பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு. வழக்கம்போல எல்லா கதாநாயகி-களையும் மாதிரி கொள்ளை அழகு.
தெருவில் ஒரு லாரி நின்றிருந்தது. விர்ர்ரென்று இரைச்சல் சத்தம்.
எல்.. ஓ... வீ.. ஈ... லவ்வு.. சொல்லு எல்.. ஓ.. வீ.. ஈ லவ் தன்னுடைய டயலாக்கையே யார் சொல்லிக் கொண்டிருப்பது என்று ஆச்சரியமாகப் பார்த்தாள். கூலிங் க்ளாஸ், டீஷர்ட், ஜீன்ஸ் பேண்ட் என்று கதாநாயக லட்சணங்களோடு தெருப்பையன்களோடு விளையாடிக் கொண்டிருந்தான் அவன்.
பேரு ஷரண். பக்கத்து ஊர் காலனிங்க. கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் படிச்சேன். கவர்மெண்ட் வேலையே கிடைச்சிடிச்சி. நம்ம சுத்துப்பட்டுலே கிணறெல்லாம் வத்திப் போச்சில்லையா.. அதுக்காகதான் அரசாங்கம் போர்வெல் போடுது. இந்த வேலையைக் கண்காணிக்கிற வேலை என்னோடதுதான் என விவரம் கேட்ட ஊர்ப்பெருசு ஒருவரிடம் விலாவரியாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.
யூகித்திருப்பீர்கள். ஒருவருக்கொருவர் புன்னகைத்திருப்பார்கள். லேசாக வெட்கப்பட்டு அறிமுகப்படுத்திப் பேசிக்கொண்டிருப்பார்கள். செல்பேசி எண்கள் பரஸ்பரம் பரிமாறிக்-கொள்ளப்பட்டிருக்கும். இறுதியில் ஷரணுக்கும், நித்யாவுக்கும் அமரக்காதல் மலர்ந்திருக்கும் என்பதைத் தனியாக சொல்லவே வேண்டியதில்லை. வேறு வேறு ஜாதி. வீட்டுக்குத் தெரிந்து பிரச்சினை. ஷரணைக் கண்டதும் வெட்டுவேன் என்று நித்யாவின் அண்ணன் அருவாளைத் தூக்கிக்கொண்டு யமஹாவில் சுற்றிக் கொண்டிருந்தான்.
ஒரு சுபயோக சுபமுகூர்த்த தினத்தில் ரெஜிஸ்டர் ஆபிஸில் பதிந்து தம்பதியாய் ஆனார்கள். உயிர்பிழைக்க ஊரைவிட்டு பெங்களூருக்கு ஓடினார்கள். அங்கும் நித்யாவின் அண்ணனும், அவனுடைய நண்பர்களும் தேடிவந்தது தெரியவர மும்பைக்கு ரயில் ஏறினார்கள்.
மும்பையில் இறங்கியதுமே ஷரணுக்கு ஏதோ தப்பாகப்பட்டது. அப்பாவுக்கு போன் அடித்தான். ரிங் போய்க்கொண்டே இருந்தது. தம்பியின் போன் நாட் ரீச்சபிள். நண்பனுக்கு போன் அடித்தான். எதிர்முனையில் போனை கட் செய்த நண்பன் எஸ்.எம்.எஸ். அனுப்பினான். விஷயமே தெரியாதாடா உனக்கு.. உடனே பேப்பரைப் பாரு.
நியூஸ் பேப்பர் கடையில் தினத்தந்தி வாங்கினான். தலைப்புச் செய்தியே அவர்கள்-தான். காதல் திருமண தகராறு. இரு சமூகங்களுக்குள் வன்முறை. தர்மபுரி அருகே மூன்று கிராமங்கள் சூறை.

(நன்றி : உண்மை - தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழ், 2014)

இசை

$
0
0

SJ Surya came with bigbang back

இளமை துள்ளோ துள்ளுவென்று துள்ளுகிறது. கதாநாயகியின் தொப்புளை பியானோவாக்கும் காட்சியில் படம் பார்ப்பவர்களின் இதயம் ஏகத்துக்கும் எகிறி குதிக்கிறது.
நாயகியின் பெயர் சாவித்ரியாம். இடுக்குப்பல். வட்டமான முகம். ரோஜா நிறம். கழுத்துவரை பக்கா ஃபேமிலி லுக். முகலாய இளவரசிகள் பயன்படுத்திய மஸ்லின் துணிதான் இடைவேளை வரை இவருக்கு தாவணி. டிரான்ஸ்பரண்டாக இரு கோடுகள் ஜெயராஜின் ஓவியம் போல அப்பட்டமாக கேமிராவில் பதிவாகிறது. இவரது இடுப்புக்கு ஸ்பெஷல் லைட்டிங் வைத்திருக்கிறார் கேமிராமேன். நடிப்புக்கு ஜோதிகாவையும், சிம்ரனையும் டிப்பி அடிக்கிறார்.

சூர்யாவுக்கு முகம் கொஞ்சம் முத்தலாக இருந்தாலும் சேட்டைகளுக்கு குறைவில்லை. பாரதிராஜா மாதிரி கம்பீர குரல். இவருடைய பாம்புகடிக்கு சாவித்ரி மருந்து கொடுக்கும் லாவகத்தை பார்க்கும்போது, நம்மை ஏதாவது தண்ணிப் பாம்பாவது கொத்தித் தொலைக்கக்கூடாதா என்று ஆதங்கம் ஏற்படுகிறது.

படத்தின் தொடக்க காட்சிகள் படைப்பாற்றலின் உச்சம். இசை என்பது கேட்கக் கடவ உருவான சமாச்சாரம். அதை விஷூவலாக மாற்றிக் காட்டமுடியுமா என்கிற சவாலை ஏற்று அனுபவித்து இழைத்திருக்கிறார். குறிப்பாக மலைமுகட்டில் நின்றவாறே நோட்ஸுக்கு கை ஆட்டும் காட்சி ‘ஏ’ க்ளாஸ். டைட்டானிக்தான் இன்ஸ்பிரேஷன். இருந்தாலும் அதை தமிழ்ப்படுத்தியிருப்பதில் சூர்யாவின் தனித்தன்மை பளீரென்று கவர்கிறது. வனத்துக்கு நடுவே அருவிக்கு அருகில் ரெக்கார்டிங் தியேட்டர் மாதிரியான ஐடியாக்கள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கூட வந்திருக்க வாய்ப்பில்லை.

சத்யராஜை இப்படியும் ஓர் இயக்குனர் பயன்படுத்த முடியுமா என்று காட்சிக்கு காட்சி ஆச்சரியம். அவருடைய நடிப்புலக வாழ்வின் மைல்கல்.

எஸ்.ஜே.சூர்யா, தமிழ் நிலம் தன்னகத்தே உருவாக்கியிருக்கும் மாபெரும் இண்டெலெக்ச்சுவல். யாருடைய தாக்கத்தாலும் பாதிக்கப்படாமல் உருவாகியிருக்கும் சுயம்பு.

‘இசை’ வணிகரீதியாக வெல்லுகிறதோ இல்லையோ, படைப்பாற்றல் ரீதியாக தமிழ் சினிமாவின் புலிப்பாய்ச்சல். சினிமா என்பது டைரக்டர்களின் மீடியம் என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கும் படம்.

ஓக்கே. படம் பற்றிய உள்ளடக்கரீதியான விமர்சனம் ஓவர்.

* * * * * * *

இசை, இன்னொரு மாதொருபாகன்.

தமிழ்-இந்திய பிரபலங்கள் குறித்து இதுவரை நாம் வாய்மொழிவரலாறாக கேள்விப்பட்ட அத்தனை வக்கிரங்களையும் காட்சியாக்கி இருக்கிறது. மொத்த கேஸையும் தூக்கி சத்யராஜ் கதாபாத்திரத்தின் மீது சுமத்தியிருக்கிறது.

இது புனைவு. கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க கற்பனையே. படைப்பாளிக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது மாதிரி பஜனை கோஷங்கள் வேலைக்கு ஆகாது.

சூர்யா, ஏ.கே.சிவாவாக அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே அவர் கொடுக்கும் போஸ் வாழும் இளம் இசையமைப்பாளரை (தமிழ்ச்சூழலில் இன்றைய தேதிக்கு 62 வயது வரைக்கும் ‘இளம்’தான்) நினைவுபடுத்துகிறது. அந்த பாத்திரத்தின் ஒர்க்கிங் ஸ்டைல், தனிப்பட்ட பண்புகள் அனைத்துமே அவரை மனதில் நிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக ‘இசைக்கடல்’ என்கிற பட்டம் வேறு.

இசைக்கடலுக்கு வில்லன் இசைதேவனாம். தமிழில் இசைக்கு யார் தேவன் என்று கேட்டால் பிறந்த குழந்தை கூட ‘ங்கா..ங்காஜா’ என்று மழலைமொழியில் சொல்லிவிடும்.

தான் துப்புவது கூட இசை. அனைவரும் தன் காலில் விழுந்து அதை பொறுக்கிக் கொண்டு போகவேண்டும் மாதிரி தன்னகங்காரம் என்பதெல்லாம் அப்படியே அவருக்கு பொருந்துவது மாதிரி காட்சியமைப்புகள். அதுவும் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்த இயக்குனர் ஒருவரே முகத்தில் காறித்துப்பப்பட்டு போவது மாதிரி ஒரு காட்சி…

படம் நெடுக இதுமாதிரி காட்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இதெல்லாம் இசைதேவன் மீதான இயக்குனரின் விமர்சனமாக இருக்கலாம். பிரச்சினை இல்லை.

இசைக்கடலை நிலைகுலைக்க வைக்க இசைத்தேவன் செய்யும் கற்பனைக்கும் எட்டாத வக்கிரமான செயல்பாடுகள்?

இது கற்பனை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் படம் பார்க்கும் ரசிகன், நிஜத்தையும் நிழலையும் ஒப்பிட்டுப் பார்த்து அவரை ‘கதாபாத்திர படுகொலை’ (நன்றி : யாரோ ஒரு தமிழிலக்கியவாதி) செய்துவிட மாட்டானா?

தமிழிலக்கியம்தான் வக்கிரம் நிறைந்து வன்மமான இரத்த பூமியாகி இருக்கிறது. அந்த போக்கினை சினிமாவில் தொடங்கி வைத்திருக்கிறார் சூர்யா. இனி வேண்டாதவர்களை போட்டுத்தள்ள சினிமாவை ஆயுதமாக பயன்படுத்துவார்கள் படைப்பாளிகள். யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் என்னவாக வேண்டுமென்றாலும் சித்தரித்து கருத்து சுதந்திரத்தை காத்துக் கொள்வார்கள்.

ஏன் இந்தப் படத்தைப் பற்றி எதையும் பேச முடியாமல் வாயை இறுக தைத்துக் கொண்டிருக்கிறார்கள் இண்டஸ்ட்ரிகாரர்கள் என்பது புரிகிறது. படம் இத்தனை ஆண்டுகளாக பிசினஸ் ஆகாததின் ரகசியமும் அதுவாகதான் இருக்கக்கூடும்.

கறுப்பர் நகரம்

$
0
0
‘மெட்ராஸ்’ படம் வந்தபோதுதான் இந்த நாவலின் பெயரையே கேள்விப்பட்டேன். இந்த நாவலை அப்படியே இயக்குனர் சுட்டுவிட்டதாக யாரோ எழுதியிருந்தார்கள். படம் பார்த்த ஆர்வத்தில் உடனே வாசிக்க எண்ணி கடை கடையாக ஏறி இறங்கியதுதான் மிச்சம். கடந்த சென்னை புத்தகக்காட்சியில் கிடைத்தது.

இந்த நாவலில் ‘மெட்ராஸ்’ என்கிற ஊர் வருகிறதே தவிர, ‘மெட்ராஸ்’ திரைப்படத்துக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. சில காட்சிகளுக்கு லேசான கருத்தியல் இன்ஸ்பிரேஷனாக வேண்டுமானால் இந்நாவல் இருந்திருக்கலாம்.

கறுப்பர் நகரம் : சென்னை என்கிற நகரைப் பற்றிய நிஜமான novelised history. நாவலை எழுதியிருக்கும் கரன் கார்க்கியின் எழுத்து மட்டுமல்ல, வாழ்க்கையும் சுவாரஸ்யமானதுதான். வீடுகளில் எலெக்ட்ரீஷியனாக டெஸ்டர் வைத்துக்கொண்டு வேலை பார்க்கும் கரன், ஓய்வு நேரங்களில்தான் பேனா பிடிக்கிறார். சென்னையிலேயே பிறந்து வளர்ந்த இவர், நகரின் மாற்றங்களை நாவல் வழியாக மிக திறமையாக பதிவு செய்கிறார்.

இரட்டை ஆயுள் தண்டனை முடிந்து சிறையிலிருந்து வெளிவருகிறான் கிழவன் செங்கேணி. முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக அவன் பார்த்த சென்னையை, அடையாளம்கூட கண்டுகொள்ள முடியவில்லை. அவன் சிறைக்கு போவதற்கு முன்பாக சென்ட்ரலுக்கு அருகில் இருந்த அல்லிக்குளத்தில் பூத்த தாமரையை பறிப்பது பிடித்தமான விஷயம். இப்போது அல்லிக்குளத்துக்கு பதிலாக ஏதோ ஒரு கட்டிடம். மூர் மார்க்கெட் என்கிறார்கள். அப்படியெனில் நிஜமான மூர்மார்க்கெட் எங்கே என்று பார்க்கிறேன். அங்கே பெரிய கட்டிடம் எழுந்து நிற்கிறது. மக்கள் சகட்டுமேனிக்கு ஒருவருக்கொருவர் ஆங்கிலம் பேசியபடியே போவதைப் பார்த்து, மீண்டும் வெள்ளைக்காரன் ஆட்சிக்கு வந்துவிட்டானா என்று குழம்புகிறான். உடையில் தொடங்கி உணவு, உறைவிடம் வரை ஒரு நகரம் இவ்வளவு குறைவான கால அவகாசத்தில் எப்படி ஒட்டுமொத்தமாக மாற்றிக்கொள்ள முடியும் என்கிற ஆச்சரியத்தில் அவன் இருக்கும்போதே, அவனுடைய கடந்தகால ப்ளாஷ்பேக் ஓப்பன் ஆகிறது.

எழுபதுகளின் சென்னையை முடிந்தமட்டிலும் விரிவாக, நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார் கரன் கார்க்கி. புதுப்பேட்டை சித்ரா டாக்கீஸ் எதிரில் கூவத்தின் கரையில் இருந்த குடிசைப்பகுதி. அந்த காலத்தில் நரியங்காடு என்பார்கள். இப்போது குடிசைகள் எதுவுமில்லை. சாலையோரப் பூங்காவை நிறுவியிருக்கிறது மாநகராட்சி. இங்கேதான் ஆராயியைப் பார்க்கிறான் செங்கேணி. கண்டதும் காதல். ஆராயியை இரண்டாவது பொண்டாட்டியாக மாற்றிக்கொள்ள நினைக்கும் அவளது மாமாவிடம் இருந்து செங்கேணி காப்பாற்றி, ஓடிப்போய் கல்யாணம் கட்டிக் கொள்கிறார்கள்.

பெரியமேடுக்கும், சூளைக்கும் இடைபட்ட பகுதியில் அமைந்திருந்த ஜெகனாதபுரத்தில் குடிசை வாடகைக்கு எடுத்து தங்குகிறார்கள். அங்கு சுற்றி வாழும் மனிதர்களிடமிருந்து வாழ்வின் நல்லது, கெட்டதை பயிலும் வாய்ப்பு செங்கேணிக்கு கிடைக்கிறது. கட்டைவண்டி இழுத்து பிழைப்பு நடத்தும் செங்கேணிக்கு ஒரு ப்ளாஷ்பேக் உண்டு. மிகுந்த சோகமான ஒரு சூழலில் ஆராயியிடம் தன் சிறுவயது நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறான். அறுபதுகளின் ஆண்டான் அடிமை முறையை மனம்பதைக்கும் வகையில் இன்றைய தலைமுறைக்கு புரியவைக்கும் எபிஸோட் அது. ஊர் ஊராக பறந்த செங்கொடி உழைக்கும் மக்களுக்கு ஊட்டிய தன்மானத்தையும், அரசியல் கல்வியையும், வரலாற்றுத் தேவையையும் செங்கேணியின் இளம் வயது கதை சொல்கிறது.

அக்கம் பக்கம் வீடுகளில் வசிக்கும் சில படித்தவர்கள் மூலமாக காரல்மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களைப் பற்றிய புரிதல் செங்கேணிக்கு கிடைக்கிறது. ஆதிதிராவிட சமூகம் அடைந்திருக்கும் இன்னல்களுக்கு எல்லாம் என்ன காரணமென்ற தெளிவினை அவன் பெறுகிறான். அ, ஆ, இ, ஈ கூட எழுதத்தெரியாத செங்கேணி இரவுப்பள்ளிக்குச் சென்று படிக்கத் தொடங்குகிறான்.

கனவுகள் நனவாகும் என்கிற நம்பிக்கையை விதைப்பதோடு நாவலின் முதல் பாகம் முடிகிறது.

இரண்டாம் பாகம் ரியலிஸத் தன்மையோடு தொடங்குகிறது. தொழிலாளி – முதலாளி உறவின் முரணையும், பாட்டாளிகளின் மீதான முதலாளித்துவ எகத்தாளத்தையும் விவரிக்கிறது. எழுபதுகளின் சமகால அரசியல் குறித்த விமர்சனமும் இடம்பெறும் பகுதி இது. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்குகிறார். பெரியார் மறைகிறார் போன்ற வரலாற்று நிகழ்வுகள் கதையின் ஓட்டத்தில் வந்துபோகின்றன.

தான் பணிபுரியும் முதலாளி ஒருமுறை செங்கேணியை வழக்கம்போல நக்கல் அடிக்கிறார். அவன் பேசும் சென்னை மொழியின் தன்மை குறித்தது அந்த கிண்டல். சுயமரியாதை வரப்பெற்றுவிட்ட செங்கேணியோ பதிலுக்கு எகிறுகிறான். “நீங்க பேசுறது மட்டும் நல்ல தமிழா. அவா, இவா, ஆத்துலே எல்லாம் எந்த தமிழில் சாமி சேத்திக்க?” என்று கேட்கிறான். பொழைப்பில் மண் விழுகிறது.

மனைவி வேறு கர்ப்பமாகிறாள். முன்னிலும் அதிகம் சம்பாதிக்க உழைக்கும் செங்கேணிக்கு எதிர்பாராத விபத்து நேர்கிறது. அதனால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் அவன் வாழ்க்கையை அலைக்கழிக்கிறது.

கதையின் தொடக்கத்திலேயே ‘இரட்டை ஆயுள்’ தண்டனை வாங்கியவன் என்று தெரிந்துவிடுவதால், நாவலின் க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க யாரை போட்டுத் தள்ளப் போகிறானோ என்கிற பதட்டம் வாசிப்பவருக்கு கூடிக்கொண்டே போகிறது. கதையின் போக்கில் வரும் சில வில்லன்களை கவனித்ததுமே இவர்களைதான் கொல்லப் போகிறான் என்று யூகித்துக்கொண்டே வருகிறோம். நாம் யாருமே எதிர்பாராத ஒருவரை செங்கேணி கொல்ல நேர்கிறது.

வரலாற்றின் பசிக்கு மனிதர்கள்தான் இரை. சென்னைப் பட்டிணம், நாற்பது ஆண்டுகளில் சிங்கார சென்னையாக, மெட்ரோபாலிட்டன் நகராக தன்னை மாற்றிக் கொள்வதற்கு கொன்று தீர்த்த பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் பிரதிநிதிகளில் ஒருவன் செங்கேணி. இம்மண்ணில் பரம்பரை பரம்பரையாக பிறந்து வளர்ந்தவர்கள், இன்று சென்னைக்கு தொடர்பற்ற இடத்தில் எங்கோ தூரத்தில் அகதிவாழ்க்கை வாழ அலைக்கழிக்கப்படுகிறார்கள். யார் யாரோ இந்நகரை சொந்தம் கொண்டாடுகிறார்கள். மண்ணின் மைந்தன் என்கிற அடிப்படையில் தன் முன்னோரின் வாழ்க்கை எப்படி இருந்து இருக்கும் என்று கரன்கார்க்கி செய்துப் பார்த்திருக்கும் ஆய்வுதான் கறுப்பர் நகரம்.

வெறும் ஆவணமாகி இருக்கவேண்டிய வரலாற்றை ரத்தமும், சதையுமாக மாற்றியிருக்கிறது கரன்கார்க்கியின் பேனா. புனைவும், நிஜமுமாக… எது புனைவு, எது நிஜமென்று அறியமுடியாவகையில் உருவாகியிருக்கும் மந்திரவாத யதார்த்தம்.

இன்று எல்லாருக்கும் சென்னையைத் தெரியும். மெட்ராஸ் எப்படி இருந்தது என்பதை அறியவிரும்புபவர்கள் கறுப்பர் நகரத்தை வாசிக்கலாம். ஒடுக்கப்பட்டோரின் நியாயத்தை உணர நினைப்பவர்களும் வாசிக்கலாம். பொழுதுபோக்குக்கு ஒரு காதல் கதையையோ அல்லது குடும்பக்கதை, க்ரைம்கதை என்று ஏதோ ஒரு கதையை வாசிக்க விரும்புபவர்களும் இதை வாசிக்கலாம். வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சேதியை கறுப்பர் நகரம் கட்டாயம் வைத்திருக்கிறது.

நூல் : கறுப்பர் நகரம்

எழுதியவர் : கரன் கார்க்கி

பக்கங்கள் : 352

விலை : ரூ.195

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18
போன் : 24332424, 24332924, 24339024

இந்தியா டுடே

$
0
0
இருபத்தைந்து ஆண்டுகள் என்பது வரலாற்றுக்கு வேண்டுமானால் மிகச்சிறிய காலக்கட்டமாக இருக்கலாம். ஆனால் ஒரு தனிமனிதனின் வாழ்வில் பெரும் பங்கை எடுத்துக் கொள்ளும் காலம். சமகாலத்தில் என் கண் முன்னே பிறந்து, தன்னுடைய இறுதியை ‘இந்தியா டுடே’ எட்டுகிறது என்பது ஜீரணிக்க முடியாத நிகழ்வாக இருக்கிறது. அருண்பூரி தன் ஊழியர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தின் மூலம் இருபத்தைந்து ஆண்டுகால இந்தியா டுடே தமிழ் பதிப்பின் காலம் நிறைவடைகிறது.

அப்பத்திரிகையின் கொள்கைப்பாதையாக அடிநாதமாக தோன்றும் வலதுசாரிய தாராளமயவாத பார்வை நமக்கு ஏற்புடையது அல்ல என்றாலும், நவீனத்தமிழ் வாழ்வின் அடையாளங்களை, சிக்கல்களை, அருமை பெருமைகளை அவ்வப்போது பளிச்சென்று வெளிப்படுத்த இந்தியா டுடே தவறியதில்லை.

‘இண்டியா டுடே’ என்கிற பெயரை சண்டை போட்டு ‘இந்தியா டுடே’வாக மாலன் சார் மாற்றினார் என்பார்கள். ‘ரோஜா’ திரைப்படம் வருவதற்கு முன்பாகவே ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டியை (கால்பக்க அளவுக்குதான்) வெளியிட்ட பத்திரிகை. இந்தியா டுடே பரிந்துரைக்கும் புள்ளிகள், பிரபலங்கள் சமூகத்தில் முக்கியமானவர்கள் என்கிற எண்ணம் உடனடியாக ஏற்படும். நினைவில் நிற்கக்கூடிய பல கவர்ஸ்டோரிகளை வெளியிட்ட இதழ். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வி.பி.சிங் அரசாங்கம் அமல்படுத்த முனைந்தபோது டெல்லி பல்கலைகழக மாணவர் ராஜீவ்கோஸ்வாமி, தன் உடலில் தீ வைத்துக்கொண்டு மாண்ட காட்சியை இந்தியா டுடே அட்டைப்படமாக வெளியிட்டிருந்தது. இட ஒதுக்கீடு கொள்கைகளின் தாயகமான தமிழகத்தில் அது பெரிய சச்சரவினை உருவாக்கியது. ஷங்கர் இயக்கிய முதல் படமான ‘ஜெண்டில்மேன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை அடையக்கூடிய கருத்தியல் பார்வைக்கும் அதுவே காரணம். நக்கீரன் பத்திரிகை வீரப்பனை முதன்முதலாக பேட்டி கண்டபோது, அதே படங்கள் இந்தியா டுடேவிலும் வெளியிடப்பட்டு ஏற்பட்ட சர்ச்சையும் நினைவுக்கு வருகிறது.

வெகுஜன வாசகர்களுக்கு இலக்கியத்தை நெருக்கமாக்கிய முயற்சிகளை ஆரம்பத்தில் இருந்தே இந்தியா டுடே தொடர்ந்துக் கொண்டிருந்தது. பத்திரிகையுலகில் பிரபலமான ‘கதை’ ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது.

அது ஒரு புலனாய்வு வார இதழ் (இப்போது வாரமிருமுறை). இதழ் அச்சுக்கு போகவேண்டிய நாளில் பணியாளர்கள் எல்லோருக்கும் மூச்சு முட்டுமளவுக்கு வேலை இருக்கும். அதிரடியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த உதவி ஆசிரியர் ஒருவர் திடீரென மூர்ச்சை ஆனார்.

விஷயம் அறிந்த ஆசிரியர், முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தில் இருந்து வெளிவந்து மலங்க மலங்க விழித்துக்கொண்ட உதவி ஆசிரியரை உடனே தன்னுடைய ஜீப்பில் தூக்கிப் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாராம். பரிசோதித்த மருத்துவர், பிரிஸ்கிரிப்ஷன் எழுதி கொடுத்து, “இதை ஒருவேளை சாப்பிடச் சொல்லுங்க. எல்லாம் சரியாயிடும்” என்றிருக்கிறார். மருத்துவமனையிலேயே இருந்த பார்மஸிக்கு போய் பிரிஸ்கிரிப்ஷனை காட்டியிருக்கிறார் ஆசிரியர். பார்மஸி ஆள் சிரித்துக்கொண்டே, “என்ன எழுதியிருக்கிறது பாருங்கள்” என்று திருப்பிக் கொடுத்திருக்கிறார். ‘ஒரு ஃபுல் மீல்ஸ்’ என்று எழுதியிருக்கிறார் குறும்புக்கார டாக்டர். அதாவது உதவி ஆசிரியருக்கு ஏற்பட்டிருந்தது பசி மயக்கம். தன்னுடைய ஊழியன் ஒருவன் பசியால் மயங்கிய அவலத்தை ஆசிரியரால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.

எதுவும் பேசாமல் உதவி ஆசிரியரை ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். வயிறு நிரம்பச் சாப்பிட்டபிறகு ஆசிரியர் கேட்டாராம்.

“ஏன் தம்பி, சாப்பிடலை?”

“காசு இல்லை அண்ணாச்சி!”

“இஷ்யூ முடிக்கிற தேதி அன்னிக்கு எல்லாருக்கும் சாப்புட காசு கொடுக்கணும்னு அக்கவுண்டண்ட் கிட்டே சொல்லியிருக்கேனே? காசு கொடுக்கலையா?”

“அய்யோ. அப்படி இல்லைண்ணே. அவரு அதெல்லாம் கரெக்டா கொடுத்துடுவாரு”

“அப்போன்னா அந்த காசை என்ன பண்ணே?”

“இந்தியா டுடே இலக்கிய மலர் வாங்கிட்டேண்ணே”

நிஜமாகவே நடந்த சம்பவம் இது. இந்தியா டுடேவின் இலக்கிய மலர்களுக்கு எத்தகைய செல்வாக்கு இருந்தது என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் தேவையில்லை.

இந்தியா டுடே தமிழில் தொடங்கியபோது நான் பள்ளி மாணவன். அப்போது ஆசிரியர்கள் இந்த இதழை தொடர்ந்து வாசிக்குமாறு மாணவர்களுக்கு பரிந்துரைப்பார்கள் (பிற்பாடு இதுமாதிரி ஆசிரியர்களால் பரிந்துரைக்கப்பட்ட பத்திரிகை ‘புதிய தலைமுறை’).

என்னுடைய அண்ணன் பாலாஜி, ஆரம்பகால இந்தியா டுடே இதழ்கள் அத்தனையையும் சேகரித்து தனித்தனியாக ‘பைண்ட்’ செய்து வைத்திருப்பார். அப்போதெல்லாம் அதுதான் எனக்கு இயர்புக். இன்றைய தலைமுறையினருக்கு இந்தியா டுடே, அதன் செக்ஸ் சர்வேக்களால் அடையாளம் காணப்படுகிறது என்பது துரதிருஷ்டவசமான நிலைமை. கமல்ஹாசனின் கலையுலகப் பொன்விழாவின் போது இந்தியா டுடே வெளியிட்ட சிறப்பிதழ் என்றென்றும் எனக்கு நினைவில் நிற்கும்.

லுங்கி கட்டிக்கொண்டு செல்பவர்கள் மால்களிலும், சினிமா தியேட்டர்களிலும் அனுமதிக்கப்படுவதில்லை என்கிற சூழல் இருந்தபோது, அதுகுறித்த என்னுடைய கருத்து போட்டோவோடு இந்தியா டுடேவில் வெளியானது. எப்படியோ சின்ன துண்டு போட்டு பாஸ்போர்ட்சைஸ் படமாகவாவது வரலாற்றில் இடம்பெற்று விட்டோம்.

குட் பை இந்தியா டுடே!

எம்.ஜி.ஆரின் வயது என்ன?

$
0
0
1987 டிசம்பர் 24 அன்று எம்.ஜி.ஆர் இறந்தார்.

டிவியில் அவரது இறுதி ஊர்வலக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தோம்.

முகத்தை குளோஸப்பில் காட்டும்போது, “எண்பது வயசு மாதிரியா இருக்காரு வாத்தியாரு” என்று பார்த்தசாரதி மாமா சொன்னார்.

எங்கப்பாவுக்கு கோபம் வந்துவிட்டது. “சட்டுன்னு பத்து வயசு ஏத்திட்டியே மாமா” என்றார்.

“லச்சிம்பதி, உனக்கு விஷயம் தெரியாது. எம்.ஜி.ஆர் சினிமாவுலே ரொம்ப லேட்டாதான் பிக்கப் ஆனாரு. ஹீரோயினெல்லாம் சின்னப் பொண்ணுங்குறதாலே சங்கடப்பட்டுக்கிட்டு பத்து வயசு குறைச்சு சொல்லிட்டாரு”

அதாவது 1917, ஜனவரி 17 என்பது அஃபிஷியலாக எம்.ஜி.ஆரின் பிறந்தநாள். பார்த்தசாரதி மாமாவின் கணக்குப்படி பார்த்தால் அவர் பிறந்தது 1907. பழைய வாத்தியார் ரசிகர்கள் நிறையபேர் இந்த கூற்றினை ஒப்புக் கொள்கிறார்கள்.

உண்மையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அவருக்கே தெரியாது என்பார்கள். சினிமாவில் புகழ்பெற்ற பிறகு குன்ஸாக ஏதோ ஒரு வருடத்தை சொல்லவேண்டுமே என்று யோசித்தவர், இந்திராகாந்தி பிறந்த வருடத்தையே தன்னுடைய பிறந்தவருடமாக சொல்லிவிட்டார் என்றும் சிலர் சொல்வதுண்டு.

எம்.ஜி.ஆருக்கு நிறைய மர்மங்கள் உண்டு. அவற்றில் ஒன்று அவரது வயது.

எம்.ஜி.ஆரின் சாதி பற்றிகூட இதுமாதிரி ஒன்றுக்கும் மேற்பட்ட தகவல்கள் உலவுவது உண்டு.

பிறப்பால் ஈழத்தை சார்ந்தவர். அவரது அப்பா கோபாலமேனன் கேரளத்தில் பிறந்தவர். அந்த காலத்திலேயே தலித் பெண் ஒருவரை (அன்னை சத்யா) காதலித்து திருமணம் செய்துக் கொண்டதால் சாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டு ஊர்விலக்கத்துக்கு உள்ளானார். எனவே பிழைப்புக்காக இலங்கை சென்று, கண்டியில் அரசுப்பணி புரிந்தார் என்பது ஊரறிந்த வரலாறு.

அப்படியில்லை. ‘மேனன்’ என்பது கோபாலனுக்கு கொடுக்கப்பட்ட கவுரவப் பட்டம், சாதியல்ல. அவரது முன்னோர் பழனிக்கு அருகில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ‘மன்றாயர்’ சாதி என்று சொல்வோரும் உண்டு. எம்.ஜி.ஆரை மலையாளி என்றுகூறி தமிழகத்தில் தமிழ் அரசியல் நடந்தபோது, தானும் தமிழன்தான் என்று நிரூபிக்க எம்.ஜி.ஆர் உருவாக்கிய தியரி இதுவென்றும் சொல்வார்கள்.

கொங்கு பகுதியில் அதிமுகவின் செல்வாக்கு உலகறிந்தது. அப்பகுதியின் முக்கியப் பிரமுகர்கள் சிலர் எம்.ஜி.ஆரை ‘கவுண்டர்’ என்று நிரூபிக்க மெனக்கெட்டதும் உண்டு.

எம்.ஜி.ஆர் மேனனா, மன்றாயரா, கவுண்டரா என்று உறுதிப்படுத்த இன்று ஆட்கள் யாரும் உயிரோடு இருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். போலவே அவரது பிறந்த வருடமும் 1907-ஆ அல்லது 1917-ஆ என்று துல்லியமாக ஆதாரப்பூர்வமாக சொல்லக்கூடியவர்களும் இல்லை. எனவே அதிமுகவினர் வருடாவருடம் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை 1917ல் கணக்கில் வைத்தே கொண்டாடுவதால், அதையே நாமும் ஏற்றுக்கொண்டாக வேண்டியிருக்கிறது.

நிலைமை இப்படியிருக்க சில வருடங்களுக்கு முன்பு ஒரு வயதான சோதிடரை மடிப்பாக்கம் ஐயப்பன் கோயில் அருகில் சந்தித்தேன். சொந்த பந்தங்களில் யாருக்காவது வரன் பார்ப்பதாக இருந்தால் இவரிடம்தான் அம்மா ஜோடிப்பொருத்தம் பார்ப்பார். இப்போது சோதிடர் எங்கிருக்கிறாரோ தெரியவில்லை.

பேச்சுவாக்கில், எம்.ஜி.ஆருக்கு சோதிடம் பார்த்திருக்கிறேன் என்றார். ஆலந்தூர் மார்க்கெட் அருகில் அப்போது சோதிடர் இருந்திருக்கிறார். 1971 தேர்தலின் போது வாக்கு சேகரிக்க வந்த எம்.ஜி.ஆர், அப்பகுதியில் பிரபலமான சோதிடராக அப்போது இருந்த இவரிடம், தன்னுடைய எதிர்காலம் குறித்து சோதிடம் கேட்டதாகவும், தான் மிகத்துல்லியமாக கணித்துச் சொன்னதாகவும் சொன்னார். “இன்னும் ஆறே வருஷத்தில் நீங்கதான் நாட்டை ஆளப் போறீங்க” என்று  சொன்னபோது எம்.ஜி.ஆர் நம்பாமல் புன்சிரிப்பு சிரித்தாராம். அவர் ஆட்சிக்கு வந்தபின் ஆள் விட்டு தன்னை தேடியதாகவும், அதற்குள்ளாக தான் இடம்மாறி விட்டதாகவும் கூடுதல் தகவல் தந்தார். “ஒருவேளை அப்போ எம்.ஜி.ஆர் ஆளுங்க என்னை கண்டுபிடிச்சி இருந்தாங்கன்னா, இப்போ என்னோட நிலைமையே வேற. நம்ம தலையில் அப்படி எழுதிவெச்சிருக்கு, நாமென்ன செய்யமுடியும்” என்று நொந்துக் கொண்டார்.

சட்டென்று எனக்குள் பல்பு எரிந்தது. “எம்.ஜி.ஆர் உங்களிடம் சோதிடம் பார்த்திருந்தால், அவருடைய பிறந்த வருடம் உங்களுக்கு சொல்லியிருப்பாரே?” என்று கேட்டேன்.

“ஆமாம், சொன்னாரு. அறுபத்தியாறாவது வயசுலே அவர் நாட்டை ஆளுவாருன்னுதான் கணிச்சேன். 1911தான் அவரோட பிறந்தவருஷம். ஏடிஎம்கே காரங்க தப்பா கொண்டாடுறாங்க” என்றார்.

ஜோதிடர்கள் அடித்துவிடுவார்கள்தான். இருந்தாலும் தேவுடா. இப்போது மூன்றாவதாக ஒரு வருடம் குதித்திருக்கிறது. எம்.ஜி.ஆரின் ரோலக்ஸ் வாட்ச் இன்னும் அவரது சமாதியில் ‘டிக் டிக்’கிக் கொண்டிருக்கிறது என்கிற மர்மத்தைபோல, அவர் பிறந்த வருடமும் மர்மத்துக்கு மேல் மர்மமாகிக் கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆரின் ஆஸ்தான (கிட்டத்தட்ட தமிழக அரசவை) ஜோதிடரான வித்வான் வே.லட்சுமணனும் கூட 1911ஐ கணக்கில் வைத்துதான் எம்.ஜி.ஆருக்கு ஜோதிடம் பார்த்திருக்கிறார் என்று முன்னெப்போதோ கேள்விப்பட்டதும் இப்போது நினைவுக்கு வருகிறது.

தமிழ் சினிமாவை முப்பதாண்டுகள் கட்டி ஆண்டவர். ஹாட்ரிக் தேர்தல் வெற்றியை அடைந்து தமிழகத்தை பத்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர். அவருடைய பிறந்த வருடம் எதுவென்று இன்னமும் துல்லியமாக நமக்கு தெரியாது.

உசேனி

$
0
0
தொண்ணூறுகளின் துவக்கத்தில் உசேனி சென்னையில் ரொம்ப ஃபேமஸ். கராத்தே, வில்வித்தை உள்ளிட்ட மார்ஷியல் ஆர்ட்ஸ் வகுப்புகளுக்கு ஆட்சேர்ப்பு என்று கருப்பு சிவப்பு வண்ணங்களில் எல்லா சுவர்களிலும் போஸ்டர் ஒட்டியிருப்பார்.

அவ்வப்போது தலைமயிரில் கயிறு கட்டி ஆம்னி காரை இழுப்பது. சுத்தியால் மார்பை அடித்துக் கொள்வது மாதிரி ஏதேனும் சாதனைகள் (!) செய்வார். புறநகர்களில் உசேனியின் சீடர்கள் என்று சொல்லி நிறைய பேர் கராத்தே க்ளாஸ் எடுக்க ஆரம்பித்தார்கள். அம்மாதிரி சீடர்களில் ஓரிருவரும் பல்லால் ஜீப்பை இழுப்பது என்றெல்லாம் சாதனை செய்ய ஆரம்பித்தார்கள்.

உசேனியின் ஒரு சாதனையை நேரில் பார்க்க பெசண்ட் நகர் கடற்கரைக்கு போயிருந்தேன். காருக்குள் தீவைத்துக் கொண்டு உள்ளே உட்கார்ந்து கொள்ள போவதாக பேப்பரில் விளம்பரம் கொடுத்திருந்தார். மாலை நான்கு மணி அளவுக்கு போயிருந்தபோது தீப்பிடிக்காத ஆடைகளை அணிந்துகொண்டு ஒரு ஓட்டை அம்பாஸடருள் போய் அமர்ந்துக் கொண்டார். சீடர்கள் கார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தார்கள். ஐந்து நிமிடம் கார் எரிந்தது. உள்ளே இருந்து வெளியே வந்த உசேனி, மூர்ச்சை ஆனதைபோல தரையில் படுத்துக் கொண்டார். உடனே உடைகளை கழட்டிவிட்டு சீடர்கள் அவருக்கு விசிறி விட்டார்கள். போலிஸ் கூட ஏதோ கேஸ் போட்டதாக ஞாபகம். தீப்பிடிக்காத உடை அணிந்துகொண்டு தீக்குள் போவதில் என்ன சாதனை என்று எனக்கு புரியவேயில்லை. சினிமாவில் ஸ்டண்ட்மேன்கள் தினம் தினம் செய்யும் சாதனைதானே இதுவென்று தோன்றியது.

இதுமாதிரி அடிக்கடி செய்தித்தாள்களில் ஏதோ ‘சாதனை’ என்று இடம்பெறுவார். ஒரு கட்டத்தில் இவரது சாதனைகளை செய்தித்தாள்கள் போட மறுக்க, இவரே ஊரெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டினார். உசேனி ஒரிஜினல் கராத்தேகாரரோ என்னவோ தெரியாது. ஆனால் ஒரிஜினல் ஓவியர். சிற்பங்களும் செய்வார் என்பது மட்டும் உண்மை. பெசண்ட் நகரில் இருக்கும் அவரது வீட்டுக்கு தொண்ணூறுகளின் இறுதியில் அடிக்கடி போய் வந்துக் கொண்டிருந்தேன். என்னுடன் லே-அவுட் ஆர்ட்டிஸ்டாக சவுந்தர் என்றொரு மதுரைக்காரர் பணிபுரிந்துக் கொண்டிருந்தார். அவர் மதுரை ஓவியர் சங்கத்தில் ஏதோ பொறுப்பில் இருந்தவர். ஊரில் இருக்கும் போது உசேனி அவருக்கு க்ளோஸ் ஃப்ரெண்டு என்பார். புன்னகை மன்னன் படம் வந்தபோது, தியேட்டரில் கமல்ரசிகர்கள் உசேனியிடம் வம்பு செய்ததாகவும், உசேனி ஒரே செகண்டில் குங்ஃபூ கராத்தே அடி கொடுத்து பத்து பேரை வீழ்த்தியதாகவும் சவுந்தர் சொல்வார். உண்மையில் உசேனியின் ஆசை திரையுலகம்தான். சுத்தமாக இவருக்கு நடிப்பே வராது, சண்டையும் சுமார்தான் என்பதால் வேறு வழியில்லாமல் கராத்தே க்ளாஸ் ஆரம்பித்தார்.

த.மா.கா உருவானபோது அதன் சென்னை மாவட்ட செயலாளர்களில் ஒருவர் கராத்தே தியாகராஜன். இவர் நிஜமாகவே கராத்தே வீரர். உசேனி ஒரு டூப்ளிகேட், அவருக்கு கராத்தாவே தெரியாது என்பதை ஊரறிய வைத்தவர் இவர்தான். எந்த அங்கீகரிக்கப்பட்ட கராத்தே போட்டிகளிலும் உசேனியோ, அவரது சீடர்களோ கலந்துக் கொள்வதில்லை. மாறாக ஜப்பானிலிருந்து நேரடி பட்டம் என்று இவர்களாக கொடுக்கும் பெல்ட்டுகள் போலி என்று தொடர்ச்சியாக தியாகராஜன் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இதனால் உசேனியின் பிசினஸ் படுமோசமாக அடிபட ஆரம்பித்தது. அவரிடம் கராத்தே க்ளாசுக்கு சேர்ந்தவர்கள் விளக்கம் கேட்க ஆரம்பித்தார்கள். அப்போதெல்லாம் அவர் தன் பெயருக்கு முன்பாக ‘ஷீஹான்’ என்று பட்டம் போட்டுக் கொள்வார். கராத்தே தியாகராஜன், இவருடைய டவுசரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவிழ்க்க ஆரம்பிக்க ‘ஷீஹான்’ எங்கே போனதென்றே தெரியவில்லை.

இடையில் கிடைத்த குறுகியகால புகழை வைத்து உசேனி முயற்சித்த சில தொழிற்வாய்ப்புகள் படுதோல்வி அடைந்தன. அவரது தம்பியை சினிமா ஹீரோ ஆக்கும் முயற்சிக்கு மரண அடி. திருட்டு விசிடியை தடுக்க சிறப்பு படை என்று உசேனி தயாரிப்பாளர்களிடம் பல லட்சரூபாய் வாங்கினார். ஆனால் ‘முதல்வன்’ படம் ஊர் ஊராக கோயில் திருவிழாக்களில் கூட திரையிடப்பட, உசேனி ஏடிஎம் செக்யூரிட்டி வேலைக்கு கூட லாயக்கற்றவர் என்று திரையுலகுக்கு தெரிந்தது. திருட்டு விசிடியை தடுப்பதற்கு மாறாக மாட்டிக் கொள்பவர்களிடம் ‘கட்டிங்’ வாங்கினார்கள் அவரது ஆட்கள் என்றுகூட செய்திகள் அப்போது வந்தன.

கராத்தே தியாகராஜன் தமிழ் மாநில காங்கிரஸை சேர்ந்தவர். த.மா.கா, திமுக ஆட்சியின் ஆதரவோடு இருக்கிறது என்கிற ஒரே காரணத்தினாலேயே, அவரை சமாளிக்க தன்னை அதிமுககாரர் என்பது மாதிரி காட்டிக்கொள்ள ஆரம்பித்தார். அம்மாவின் பிறந்தநாள் ஒன்றுக்கு தன்னுடைய ரத்தத்தாலேயே ஓவியம் வரைந்து அம்மாவிடம் கொடுத்து திடீரென்று அதிமுக வட்டாரங்களில் பிரபலம் ஆனார்.

அதிலிருந்து வருடாவருடம் அம்மா கண்டுகொள்கிறாரோ இல்லையோ இவர் பாட்டுக்கு இரத்தத்தில் சிலை மாதிரி ஏதாவது ‘பயங்கரமான’ சாதனையை செய்துக்கொண்டே இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பாக ஏதோ சிலை செய்து தருகிறேன் என்று (சசிகலா) நடராசனிடம் ஒரு கொழுத்த தொகையை ஆட்டை போட்டதும், அதை அவர் திருப்பிக் கேட்டபோது கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று கூப்பாடு போட்டதும் நினைவிருக்கலாம்.

கூட்டத்தில் வீறிட்டு அழுது அனைவரின் கவனத்தையும் கவர்ந்து இழுக்கும் குழந்தையை மாதிரியானவர் இவர். எனக்கென்னவோ இவருக்கு ஏதோ சீரியஸான சைக்காலஜிக்கல் பிராப்ளம் இருப்பதாகவே தோன்றுகிறது. இதே பிராப்ளம்தான் சீமானுக்கும், உமாசங்கருக்கும்கூட இருக்கும் போல.

ஆனால், ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். நடத்துவது மன்னார் & கம்பெனிதான் என்றாலும், அதைவைத்தே இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளாக ஒருவர் எப்போதும் ‘லைம்லைட்’டில் இருந்துக்கொண்டே இருப்பது மாபெரும் சாதனைதான்.

திராவிட வடுக வந்தேறிகளை முன்வைத்து தமிழ்தேசிய முற்போக்கு ஆய்வு!

$
0
0
முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நிலமான லெமூரியாவை முப்பாட்டன் முருகன் ஆண்டான். திராவிட வடுக வந்தேறியான விநாயகன், நம் முப்பாட்டனுக்கு கொடுத்த ஞானப்பழ அரசியல் நயவஞ்சகத் தொல்லைகளை தமிழ்தேசிய வரலாறான ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் தமிழ்தேசிய இயக்குனர் ஏ.பி.நாகராசன் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இன்று இந்திய தேசிய ஆரிய வடுக கும்பல் புராணகாலத்திலேயே அவர்கள் விமானம் கண்டுபிடித்துவிட்டதாக கூறி புஷ்பகவிமானம், அது இதுவென்று கதை விடுகிறார்கள். உலகின் முதல் விமானத்தை ஓட்டியது முப்பாட்டன் முருகனே. மயில் வாகனம் விமானப் போக்குவரத்து நிறுவனத்தை உருவாக்கி, விமானத்தில் உலகை ஒரு சுற்று சுற்றி முப்பாட்டன் முருகன் அன்றே உலகசாதனை படைத்துவிட்டான்.

* * * * * *

இன்று நாகரிக தொலைக்காட்சியில் (fashion tv) உடையலங்கார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. உலகின் முதல் நாகரிக நடை நிகழ்வை (fashion walk) நடத்திக்காட்டியது நம் முப்பாட்டன் முருகனே என்கிற பேருண்மையை மேற்கத்திய வடுக வந்தேறிகள் உணரவேண்டும்.

இன்று இருகச்சை (two piece) ஆடைதான் நாகரிகம் என்று இந்த வந்தேறிகள் கூப்பாடு போடுகிறார்கள். ஆனால் நம் முப்பாட்டன் முருகனோ பழனி மலை மீதேறி ஒருகச்சை (single piece) ஆடை அணிந்து, தமிழனின் நாகரிகத்தை அன்றே குன்றிலிட்ட விளக்காக பறைசாற்றியிருக்கிறான். இன்று எதுவெல்லாம் நாகரிகம் என்று உலகம் நம்புகிறதோ, அதையெல்லாம் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே லெமூரிய தமிழ் தேசிய பேரரசு, முப்பாட்டன் முருகனின் ஆட்சிக்காலத்தில் சாதித்துக் காட்டியிருக்கிறது.

* * * * * *

முப்பாட்டனின் வழித்தோன்றலான திப்பாட்டன் திருவள்ளுவர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வடுக வந்தேறிகளின் தமிழ்நில ஆக்கிரமிப்பை தமிழ்தேசிய நீதிநூலான திருக்குறளில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

அதாவது இந்த தமிழ்தேசிய கீதத்தின் இறுதியில் இடம்பெறும் ‘வடு’ என்கிற சொல், திராவிட வடுக வந்தேறிகளையே குறிக்கிறது. வடுகன் தீயினாலும் சுடுவான், நாவினாலும் சுடுவான் என்பதே திப்பாட்டன் திருவள்ளுவர் தமிழ் மறவருக்கு சொன்ன எச்சரிக்கை.

ஆனால், பிற்பாடு வந்தேறி வடுக திராவிட திம்மிகளின் தலைவரான கருணாநிதியோ, “நெருப்பு சுட்ட புண்கூட ஆறிவிடும், ஆனால் வெறுப்பு கொண்டு திட்டிய சொற்கள் விளைவித்த துன்பம் ஆறவே ஆறாது” என நெருப்பு வெறுப்பு வார்த்தை விளையாட்டு விளையாடி வடுகருக்கு ஆதரவான போக்கில் மாற்றி எழுதினார்.

திராவிட வடுக வந்தேறிகள், வரலாற்றை எப்படியெல்லாம் திரித்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சோறு பதம் இந்த நிகழ்வு.

* * * * * *

‘தீரா விஷம்’ என்கிற ஆரிய சமஸ்கிருத வடுக வந்தேறிச் சொல்லையே தமிழில் ‘திராவிடம்’ என்று பொருள்மாறு மயக்க அணியை பயன்படுத்தி திராவிட வடுக வந்தேறி தான்தோன்றிகள் மாற்றிவிட்டதாக தமிழ் தேசிய மொழி ஆய்வாளரும், தீவிர உணர்வாளருமான மயில் மாணிக்கம் ‘திராவிட வடுக வந்தேறிகளின் திரிபுரசுந்தரி தீவிர விளையாட்டு’ என்கிற ஆய்வுநூலில் அம்மணப்படுத்தி இருக்கிறார்.

* * * * * *

‘சீமான்’ என்கிற தூயத்தமிழ் சொல்லையே ஆங்கில திராவிட வடுக வந்தேறிகள், வெட்கமே இல்லாமல் அப்படியே எடுத்துக்கொண்டு ‘see man’ என்கிற வார்த்தைத் தொடரை உருவாக்கி இருக்கிறார்கள்.

இவ்வாறே முப்பாட்டன் முருகனின் தமிழ்தேசிய ஆயுதமான ‘வேல்’ என்பதையே well என்று ‘நல்லது’ என்கிற பொருள்படும் வார்த்தையாகவும், கிணறு என்கிற அர்த்தத்தை தரும் வார்த்தையாகவும் வடுகர்கள் வெட்கமே இல்லாமல் திருடியிருக்கிறார்கள்

* * * * * *

சமீபமாக தமிழிலக்கிய எழுத்தாளர்களுக்கும் தமிழ்ச்சாதியினருக்குமான மோதலை திராவிட வடுக வந்தேறிகளே திட்டமிட்டு ஏற்படுத்தி வருகிறார்களோ என்கிற ஐயம் நமக்கு தோன்றுகிறது.

உதாரணமாக எழுத்தாளர் ‘புலியூர் முருகேசன்’ அவர்களது பெயரை வைத்தே நாம் ஆய்வு செய்து நிரூபிக்க முடியும். புலி என்பது தமிழ் தேசியப் பேரரசான சோழனின் கொடியில் இடம்பெற்ற தமிழ்தேசிய விலங்கு (பிற்பாடு இந்திய ஆரிய வடுக வந்தேறி கும்பல் புலியை நம்மிடமிருந்து அபகரித்து இந்திய தேசிய விலங்காக அறிவித்திருக்கிறார்கள்). மேலும் ‘புலி’ என்பது சமகாலத்தில் தமிழ்தேசிய வீரத்தின் அடையாளமும் கூட. முருகேசன் என்கிற பெயர் நம் முப்பாட்டன் முருகனை குறியீடாக உணர்த்துகிறது. இப்படி முழுக்க தமிழ் தேசிய தன்மையோடு ஒரு எழுத்தாளன் தனக்கு புனைபெயர் சூட்டிக்கொண்டால் திராவிட வடுக வந்தேறிகள் சும்மாவா இருப்பார்கள்? தமிழ்சாதியினரை தூண்டிவிட்டு தமிழனுக்கு தமிழனையே எதிரியாக்கி மோதிக்கொள்ள வைத்திருக்கிறார்கள்.

இதேதான் எழுத்தாளர் பெ.முருகன் விவகாரத்திலும் நடந்திருக்கிறது. முப்பாட்டன் முருகனின் பெயர்தான் அவர் பெயரும் என்றாலும் திராவிட வடுக வந்தேறிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்துக்கொண்டு திராவிட வடுக வந்தேறிகளின் தெய்வமான பெருமாளின் பெயரையும் தன் பெயருக்கு முன்பாக சூட்டிக்கொண்டதுதான் அவரது தவறு. அந்த தவறினை உணர்ந்து ‘பெருமாள்’ என்கிற வடுக வந்தேறி இடுபெயரினை துறந்து தமிழ்தேசியத்துக்கு அவர் மீண்டு வந்திருக்கிறார்.

* * * * * *

மக்கள் முதல்வர் நாமம் வாழ்க. மகத்தான தமிழ் தேசியம் ஓங்குக.

நடைவெளிப் பயணம்

$
0
0
ஃபேஸ்புக்கில் அக்கவுண்டு ஓபன் செய்தவுடனேயே இன்று எல்லோருமே எழுத்தாளர் ஆகிவிடுகிறார்கள். இணையத்தில் எழுதப்பட்ட ஸ்டேட்டஸ்களை எல்லாம் வெட்டி, தட்டி, ஒட்டி வருடக்கடைசியில் புத்தகமாகவும் போட்டு விடுகிறார்கள். அந்த புத்தகத்துக்கு வெளியீட்டு விழா, விமர்சன அரங்கம் என்று இலக்கியம் தாம்தூமாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் அசோகமித்திரன் எழுத ஆரம்பித்து அறுபது ஆண்டுகள் கழித்துதான் ஒரு வெகுஜன இதழில் பத்தி எழுதும் வாய்ப்பு கிடைத்தது என்று சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் சிரமமாகதான் இருக்கும். “அவரோட ஃபேஸ்புக் ஐடி சொல்லுங்க பாஸ். ஃப்ரெண்டா சேர்த்துக்கணும்” என்றுகூட இந்த பதிவுக்கு கீழே யாராவது நிச்சயம் கமெண்டு போடுவார்கள். ஒரு படைப்பாளி அவனுடைய இணைய முகவரியால்தான் அடையாளம் காணப்படுகிறான் என்கிற நிலையில் அசோகமித்திரன் நிச்சயமாக ஓர் ஆச்சரியம்.

நாற்பது வாரங்கள் அவர் தொடர்ச்சியாக குங்குமம் வார இதழில் எழுதிய கட்டுரைகளே ‘நடைவெளிப் பயணம்’. அவர் வாழ்ந்த எண்பத்து மூன்று ஆண்டுகளை புரிந்துக் கொள்ளும் முயற்சிகளே இக்கட்டுரைகள் என்று முன்னுரையில் சொல்கிறார். நம் காலத்தை புரிந்துக் கொள்வதே எவ்வளவு கடினமானது என்று வாசகரை நினைக்க வைப்பதற்காக இந்த முயற்சி என்கிறார்.

அசோகமித்திரன் தரும் பெரிய ஆசுவாசமே அவர் தன்னை எப்போதும் கறாரான இலக்கியவாதியாக காட்டிக் கொள்வதில்லை என்பதுதான். ஒரே ஒரு தொகுப்பு போட்டுவிட்டு உலக இலக்கியவாதிகளாகி விடும் தற்கால இளம் எழுத்தாளர்கள் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பண்பாடு இது. குஷ்வந்த்சிங்கை தீவிர இலக்கியவாதிகள் எப்படி இளக்காரமாக பார்ப்பார்கள் என்பது தெரிந்ததுதான். அசோகமித்திரன் அவரை இவ்வாறு வர்ணிக்கிறார். “அவர் விற்பனையில் கவனம் செலுத்திய பத்திரிகையாசிரியர்”.

தி.க.சி. மறைந்தபோது, “நீங்கள் ஒன்றும் இரங்கல் எழுதவில்லையா?” என்று இவரிடம் கேட்கிறார்கள். அலுப்பாக ஆரம்பிக்கிறார் அசோகமித்திரன். “நானும்தான் இந்த ஐம்பது ஆண்டுகளில் எத்தனை இரங்கல்கள் எழுதிவிட்டேன்?”. ஆனாலும் ஓர் அட்டகாசமான இரங்கல் கட்டுரையை எழுதுகிறார். எழுதி முடித்ததுமே இரங்கல் கட்டுரை குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார். “இரங்கலோடு சாதனைகளையும்தான் பதிவு செய்யவேண்டும். அப்போது செய்யாவிட்டால் பின் எப்போது?”. யாராவது உயிரைவிட்டால் போதும். அவரை அடக்கம் செய்வதற்குள்ளாகவே அவருடைய பிம்பத்தை குதறியெடுத்து, நார்நாராக கிழித்தெறிந்து இருபது முப்பது பக்கத்துக்கு கட்டுரை எழுதும் அஞ்சலி ஸ்பெஷலிஸ்டுகள் இதையும் கவனத்தில் கொள்ளலாம். கே.பாலச்சந்தரின் மகன் கைலாசம், யு.ஆர்.அனந்தமூர்த்தி, ருத்ரையா ஆகியோருக்கும் இதே நூலில் இரங்கல் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

அசோகமித்திரனின் அனுபவ அடுக்குகளிடமிருந்து வெளிப்படுபவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல. தொலைபேசி, சைக்கிள், தொலைக்காட்சி, ஜனதா அடுப்பு, அடையாறு ஆலமரம், பயணச்சுமை, சீட்டித்துணி, எம்டன் கப்பல் போன்றவற்றுக்கும் தனித்தனி கட்டுரைகள். இருபத்தொன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழும் தலைமுறை ஏதோ திடீரென்று வானத்தில் இருந்து குதித்தவர்கள் மாதிரி வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். கடந்த நூற்றாண்டின் மத்தியில் தொடங்கி இறுதிவரை நிகழ்ந்த மாற்றங்கள் புனைவின் தீவிரத்தன்மை கொண்டவை. நம்புவதற்கு சிரமமான விஷயங்கள்தான். 1948ல் வாங்கிய ராலே சைக்கிளை 2008 வரை அறுபது ஆண்டுகள் அசோகமித்திரன் வைத்திருந்திருக்கிறார் என்றால் கொஞ்சம் ஆச்சரியமாகதான் இருக்கிறது. இன்றைய தேதியில் ஒரு பைக்கையோ, காரையோ கூட ஐந்து வருடங்கள் வைத்திருந்தாலே பெரிய விஷயம்.

சூழலின் அபத்தங்கள் குறித்து அசோகமித்திரன் அடிக்கடி சலிக்கிறார். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தாவுக்கு தமிழ் எழுத்தாளர்கள் குழு ஒன்று புறப்படுகிறது. இவர்கள் கல்கத்தாவில் இருந்தபோது பெரும் புயல் ஒன்று தென்னிந்தியாவை புரட்டிப் போடுகிறது. விஜயவாடாவுக்கு தெற்கே கடலே ஆற்றுக்குள் புகுந்திருக்கிறது. நள்ளிரவில் பல நூறு கிராமங்கள் நீரோடு நீராகியிருக்கின்றன. பல்லாயிரம் பேர் மறைந்திருக்கிறார்கள். பிரளயம் நடந்துக் கொண்டிருந்தபோது நம் இலக்கியவாதிகள் கல்கத்தாவில் ஏழெட்டு பார்வையாளர்களுக்காக ‘உலகத்தின் எதிர்காலம் கதையா, கவிதையா?’ என்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

நூலை வாசிக்கும் உழைப்பையே நாம் செலுத்தாது போன்ற உணர்வே ஏற்படுகிறது. மெல்லிய குரலில் அசோகமித்திரன் சொல்லும் கதையை திண்ணையில் அமர்ந்து கேட்பது போன்ற வாசக அனுபவம் கிடைக்கிறது.

வார இதழுக்கான தொடராக எழுதப்பட்டது என்பதால் வார்த்தைகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு உண்டு. இதனால் எழுத்து வளவளவென்று இழுத்துக்கொண்டு போகாது என்பது பலம். அதே நேரம் விரிவாகப் பேச வேண்டிய விஷயங்களையும் சுருக்கமாகதான் பேசியாக வேண்டும் என்பது பலவீனம். ஒரு பத்தி எழுத்தாளர் இந்த இரண்டையும் எப்படி எதிர்கொண்டு, தன்னை வாசகனுக்கு சுவாரஸ்யப்படுத்துகிறார் என்பதுதான் அத்தொடரை முக்கியமானதாக ஆக்குகிறது. குறிப்பாக இதுபோன்ற தொடர்கள் பிற்பாடு புத்தகமாக வெளியிடப்படும்போது, சுருக்க பலகீனம் வெளிப்பட்டுவிடக்கூடிய ஆபத்தினை ‘ஞானதிருஷ்டியால்’ உணர்ந்து எழுதவேண்டும்.

இந்த புத்தகத்தை வாசிக்கும்போது அசோகமித்திரன் எப்படி இதையெல்லாம் handle செய்திருக்கிறார் என்பதை வரிவரியாக உற்று வாசித்துக்கொண்டே வந்தேன். வெகுஜன வாசகனுக்காக எழுதுகிறோம் என்கிற பிரக்ஞை ஒவ்வொரு சொல்லை எழுதும்போதும் அவருக்கு இருந்திருக்கிறது. அனாவசியமாக ஒரே ஒரு சொல்கூட துருத்திக்கொண்டு தெரியக்கூடாது என்கிற கவனமும், அக்கறையும் இந்நூலை அவரது வெற்றிகரமான படைப்புகளில் ஒன்றாக ஆக்கியிருக்கிறது.

நடைவெளிப்பயணத்தை வாசிக்கும்போது அசோகமித்திரன் நம்முடைய கையைப் பிடித்துக்கொண்டு எழுபதாண்டுகள் பின்னே அழைத்துச் சென்று ஒவ்வொன்றாக சுற்றிக் காட்டுவதைப் போன்ற மாயயதார்த்தவாத உணர்வை தோற்றுவிக்கிறது. இப்போது அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய பழைய மாம்பலத்தில் வசித்த அனுபவம் எனக்கும் இருக்கிறது. வரலாற்றில் வாழக்கூடிய வாய்ப்பினை ஓர் எழுத்தாளன், தன் வாசகனுக்கு தருகிறான். இதைவிட மகத்தான சாதனையை வேறு யார் படைத்திட இயலும்?

நூல் : நடைவெளிப் பயணம்
எழுதியவர் : அசோகமித்திரன்
பக்கங்கள் : 168
விலை : ரூ.130
வெளியீடு : சூரியன் பதிப்பகம்,
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை – 600 004.
போன் : 42209191 extn : 21125. மொபைல் : 7299027361

சாந்தி (70 எம்.எம். ஏ/சி)

$
0
0
சாந்தி தியேட்டருக்கும் எனக்கும் ஒருவகையில் பூர்வஜென்ம பந்தம் உண்டு.

அம்மா அங்கே சிவாஜி படம் (ஜஸ்டிஸ் கோபிநாத் அல்லது பைலட் பிரேம்நாத் என நினைக்கிறேன்) பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் இடுப்பு வலி வந்ததாம். மறுநாள் காலை நான் பிறந்தேன். ஒருவேளை தியேட்டரிலேயே பிறந்திருந்தால் சிவாஜி கணேசன் என்று பெயர் வைத்திருப்பார்கள். வாத்யார் ரசிகரான அப்பாவுக்கு அசிங்கமாகியிருக்கும்.

‘ஏர் கண்டிஷன்’ என்றொரு நவீன வசதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதையே தமிழர்கள் முதன்முதலாக சாந்தி தியேட்டர் மூலமாகதான் அறிந்தார்கள். ‘குளுகுளு வசதி செய்யப்பட்டது’ என்று விளம்பரப்படுத்தப் படுமாம். சென்னையின் முதல் ஏர்கண்டிஷண்ட் தியேட்டரான சாந்தி 1961ல் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் உமாபதி கட்டிய இந்த அரங்கை, சிவாஜி ஆசையாக கேட்டு வாங்கிக் கொண்டதாக சொல்வார்கள் (காசுக்குதான்). அப்படியல்ல, உமாபதி காண்ட்ராக்டர் மட்டும்தான் என்று சொல்வோரும் உண்டு. எப்படியிருப்பினும் இதற்கு நன்றிக்கடனாக பிற்பாடு நடிகர் திலகம் உமாபதிக்கு நடித்து கொடுத்த ‘ராஜ ராஜ சோழன்’ படுமோசமாக தோல்வியடைந்து, உமாபதியை மேற்கொண்டு நஷ்டத்துக்கு உள்ளாக்கியது என்பதெல்லாம் இப்போது தேவையில்லாத சமாச்சாரம்.

திறக்கப்பட்ட காலத்தில் நகரின் பெரிய தியேட்டரும் சாந்திதான். சுமார் 1200+ இருக்கைகள். பால்கனியில் மட்டுமே நானுத்தி சொச்சம் சீட்டு. இவ்வளவு பெரிய தியேட்டரை கட்டிவிட்டு கூட்டம் வராமல் ஆரம்பத்தில் சில நாட்களுக்கு அவதிப்பட்டிருக்கிறார்கள். தெலுங்கு டப்பிங் படம், இந்திப்படம் என்றுதான் காலத்தை ஓட்டினார்களாம். ‘அய்யோ, அந்த தியேட்டரா? உள்ளே போனா ஊட்டி மாதிரி பயங்கரமா குளுருமாமே? ஸ்வெட்டர் போட்டுக்கிட்டுதான் போவணுமாம்’ என்று மக்கள் அனாவசியமாக அச்சமடைந்திருக்கிறார்கள் (பின்னாளில் குளுகுளு ஏற்பாட்டில் ‘அலங்கார்’ சாதனை படைத்தது. இன்றும் காசினோ காஷ்மீர் மாதிரி ஜில்லிட்டு கிடக்கிறது)

அப்போது பீம்சிங் இயக்கத்தில் ‘பாவமன்னிப்பு’ நடித்திருந்தார் சிவாஜி. நட்சத்திர நடிகர்களின் படங்களை எல்லாம் ‘சித்ரா’வில்தான் திரையிடுவார்கள். சின்ன தியேட்டர் என்பதால் நூறு நாள் ஓட்டி கணக்கு காட்ட வசதியாக இருக்கும்.

சிவாஜியே சொந்தமாக தியேட்டர் கட்டியிருக்கிறார், அதில் பாவமன்னிப்பை வெளியிட்டே ஆக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். அவ்வளவு பெரிய தியேட்டரில் வெளியிட்டுவிட்டு நூறு நாள் ஓடாவிட்டால் அசிங்கமாகிவிடுமே என்று ஏவிஎம் நிறுவனம் அச்சப்பட்டிருக்கிறது. சிவாஜியின் வற்புறுத்தலின் பேரில் இங்கு திரையிடப்பட்ட ‘பாவமன்னிப்பு’ வெற்றிகரமாக வெள்ளிவிழா ஓடி சாதனை படைத்தது.

அதையடுத்து கிட்டத்தட்ட நூறு சிவாஜி படங்கள் இங்கே திரையிடப்பட்டிருக்கின்றன. பாவமன்னிப்பு, திருவிளையாடல், வசந்தமாளிகை, தங்கப்பதக்கம், திரிசூலம், முதல் மரியாதை ஆகிய படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியிருக்கின்றன. முப்பதுக்கும் மேற்பட்ட சிவாஜி படங்கள் நூறு நாள்களை தாண்டி ஓடியிருக்கிறது.

சென்னையின் பெரிய தியேட்டர் சிவாஜியின் கையில் இருந்ததாலும், அவர் நடித்த எந்த படம் திரையிடப்பட்டாலும் ரசிகர்கள் குவிந்துவிடுவார்கள் என்பதாலும் எம்.ஜி.ஆரை ஒப்பிடுகையில் வசூல்ரீதியாக சிவாஜியே சென்னையின் மன்னனாக இருந்திருக்கிறார். அதுவுமின்றி சிவாஜி கெடாவெட்டு கணக்கில் வருடத்துக்கு ஏழெட்டு படங்கள் நடித்துத் தள்ளிக்கொண்டே இருப்பார் என்பதால், சாந்தி தியேட்டருக்கு வேறு நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்யும் வாய்ப்பு குறைவு. எம்.ஜி.ஆருக்கு சித்ரா, ஸ்ரீகிருஷ்ணா மாதிரி சுமார் அரங்குகள்தான் மாட்டும். ஏசி தியேட்டரில் எம்.ஜி.ஆர் படம் என்கிற வாத்யார் ரசிகர்களின் ஆசை ரொம்ப நாள் கழித்து உலகம் சுற்றும் வாலிபனில்தான் தேவிபாரடைஸ் மூலமாக நிறைவேறியது. எனக்குத் தெரிந்து இன்றுவரை சாந்தி தியேட்டரில் எம்.ஜி.ஆர் படம் எதுவும் திரையிடப்பட்டதாக தெரியவில்லை. சிவாஜி தெலுங்கு, மலையாளத்தில் நடித்த படங்களைகூட அடமாக இங்கே திரையிட்டு நடிகர் திலகத்தின் ரசிகர்களை பரவசப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.

அந்த காலத்தில் சாந்தி தியேட்டரில் நைட்ஷோ விடும் நேரத்தை கணக்கில் வைத்து, படம் பார்த்து வருபவர்களின் வசதிக்காக ஸ்பெஷலாக பிராட்வேயிலிருந்து தாம்பரத்துக்கு 18ஏ பேருந்தினை அதிகாலை வேளையில் விட்டிருந்தது போக்குவரத்துக் கழகம். தினமலரில் பணியாற்றும்போது வீட்டுக்கு போக இந்த பேருந்து பல நாட்கள் எனக்கு பயன்பட்டிருக்கிறது.

சிவாஜிக்கு வயதானபிறகு பிரபு நடித்த திரைப்படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்பட்டன. இவரது பெரும்பாலான படங்கள் ‘டப்பா’தான் என்பதால் தியேட்டரின் மவுசே குறைய ஆரம்பித்தது. ‘சின்னத்தம்பி’ விதிவிலக்காக இருநூற்றி ஐம்பது நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ‘மன்னன்’ படத்தில் கவுண்டமணியும், ரஜினியும் சேர்ந்து ‘சின்னத்தம்பி’ படம் பார்ப்பது இந்த தியேட்டரில்தான்.

பிரபுவின் நூறாவது படமான ‘ராஜகுமாரன்’ பயங்கர ஃப்ளாப். ஆனாலும் ஓனர் படம் என்பதால் ஆளே இல்லாத டீக்கடையில் நூறு நாட்களுக்கு ஈ ஓட்டி நஷ்டப்பட்டது சாந்தி தியேட்டர். கடைசியாக இனிய திலகம் விக்ரம் பிரபு நடித்த அத்தனை படங்களையுமே நூறு நாட்களுக்கு மேலாக (அரிமா நம்பி கூட என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்) ஓட்டியது. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக பால்கனியை மட்டும் தனியாகப் பிரித்து ‘சாய்சாந்தி’ என்று தனி அரங்காக ஆக்கினார்கள்.

ஆண்பாவம், நீதிக்கு தண்டனை, வெற்றிவிழா, மன்னன், சந்திரமுகி, சுப்பிரமணியபுரம் போன்ற படங்கள் இங்கே அபாரவெற்றி பெற்றவை. இந்திப் படமான ‘சங்கம்’ வெள்ளிவிழா கண்டதும் இங்கேதான். பாகவதரின் ‘ஹரிதாஸ்’ சாதனையை (பிராட்வே தியேட்டர்) உடைக்க வேண்டும் என்பதற்காகவே, ‘சந்திரமுகி’யை 888 நாட்கள் ஓட்டி கணக்கு காட்டினார்கள்.

எல்லா சென்னைவாசிகளையும் போலவே சாந்தி திரையரங்கோடு எனக்கும் உணர்வுபூர்வமான பந்தம் உண்டு. எத்தனை படங்கள் இங்கு பார்த்திருப்பேன் என்று கணக்கு வழக்கே இல்லை. நண்பர்களோடு சேர்ந்து படங்கள் பார்த்த அற்புதமான தருணங்கள் எல்லாம் இப்போது நெஞ்சில் நிழலாடுகிறது.

ஒவ்வொரு காட்சி தொடங்குவதற்கு முன்பாக இன்றும் கவுண்டர் அருகே ஒயிட் & ஒயிட்டில் கம்பீரமாக வந்து நிற்கும் அந்த தியேட்டர் மேனேஜரை மறக்கவே முடியாது. இப்போது கலைஞரின் வயது ஆகிறது அவருக்கு. பெண்கள் பாதுகாப்பாக படம் பார்க்கவேண்டும் என்று ரொம்பவும் அக்கறை காட்டுவார்.

பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பாக படம் பார்க்க க்யூவில் நிற்கும்போது கையில் லத்தியோடு கூட்டத்தை ஒழுங்குபடுத்த அங்கும், அவர் இங்குமாக அலையும் காட்சி ஓர் ஓவியம் மாதிரி மனசுக்குள் பதிந்திருக்கிறது. இவரது கேரக்டரைதான் ‘அமர்க்களம்’ படத்தில் சரண், வினுசக்ரவர்த்திக்கு கொடுத்திருப்பார்.

தியேட்டரை இடித்துவிட்டு மால் கட்டுகிறோம் என்று அதிகாரபூர்வமாக சிவாஜி குடும்பத்தார் அறிவித்து விட்டார்கள். புதிதாக கட்டப்படும் மாலில் சாந்தி என்கிற பெயரிலேயே சில ஸ்க்ரீன்கள் இருக்கும் என்று ஆறுதல் அளிக்கிறார்கள். இருந்தாலும் ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘தில்லானா மோகனாம்பாள்’ ஓடிய ஒரிஜினல் சாந்தி மாதிரி வருமா?

சட்டம் பாலுவின் கையில்!

$
0
0

அறுபதுகளில் டி.என்.பாலு தமிழ் சினிமாவில் பிரபலம். படம் கமர்ஷியலாக ஹிட் ஆக வேண்டுமென்றால், ‘டி.என்.பாலுவை பிடி’ என்று டிஸ்கஷனுக்கு அழைப்பார்கள். நாடகங்கள் எடுத்து வந்த பாலுவுக்கு (சுருளிராஜன் இவர் நாடகங்களில் நடித்து வந்தவர்தான்) சினிமா சென்ஸ் அதிகம். ரசிகர்களின் பல்ஸ் அத்துப்படி. எப்படிப்பட்ட பொக்கை கதையையும், பக்காவான சீன்ஸ் சொல்லி தேத்திவிடுவார். தேவர் பிலிம்சுக்கெல்லாம் விசிட்டிங் புரொபஸர் மாதிரி.

ஆங்கிலப் படங்களின் தாக்கத்தில் இவர் எடுத்துக் கொடுக்கும் சீன்கள் எம்.ஜி.ஆருக்கு கொஞ்சம் அலர்ஜி. “நம்மூருக்கு ஏத்தமாதிரி சொல்லுங்க பாலு. லேடீஸ் தியேட்டரில் நெளியக்கூடாது” என்பாராம். எம்.ஜி.ஆர் நடித்த ‘காதல் வாகனம்’, ரவிச்சந்திரனின் ‘அதே கண்கள்’ படத்துக்கெல்லாம் வசனம் பாலுதான். டைட்டிலில் பெயர் வராமலேயே கூட நூற்றுக்கணக்கான படங்களில் (நட்புக்காக அல்ல துட்டுக்காக) பணியாற்றி இருக்கிறார். படங்களிலும் அவ்வப்போது ஏதேனும் கேரக்டரில் தலைகாட்டுவார்.

எல்லோரையும் போலவே பாலுவுக்கும் படம் இயக்கும் ஆசை. சிவாஜியை வைத்து இயக்கினார். ‘அஞ்சல் பெட்டி 520’. த்ரில்லருக்கான் இணையான வேகம் நிறைந்த வித்தியாசமான திரைக்கதை. எம்.ஜி.ஆர் க்ரூப் ஆட்களோடு பெருந்தன்மையாக சிவாஜி நடித்திருந்தார். படம் ஹிட்.

அந்த காலத்தில் முதல்படம் ஹிட் கொடுத்த இயக்குனர்கள் பெரும்பாலானோர் செய்யக்கூடிய தவறினையே பாலுவும் செய்தார். அடுத்த படத்தில் ஜெய்சங்கர் ஹீரோ. அவ்வளவுதான். மொக்கைப்பட இயக்குனர்கள் லிஸ்டில் பாலுவும் சேர்ந்துவிட்டார். மீண்டும் வாழ்வேன், ஓடி விளையாடு தாத்தா என்று ஒப்பேற்றிக் கொண்டிருந்தார். ஜோக் நீர்வீழ்ச்சிக்கு போய் முதன்முதலாக படப்பிடிப்பு நடத்திய தமிழ் இயக்குனர் இவர்தான் என்பார்கள்.

எழுபதுகளின் மத்தியில் ‘ஸ்டார்’ ஆகிவிட்ட கமல்ஹாசனுக்கு மாற்று சினிமா தாகம் தொண்டையில் நிரந்தரமாக ஏறிவிட்ட காலம் அது. இந்தியில் சஞ்சீவ்குமாருக்கு சிறந்த நடிகருக்கான தேசியவிருதை பெற்றுக் கொடுத்த ‘கோஷிஷ்’ படத்தை தமிழுக்கு கொண்டுவர வேண்டுமென்று மெனக்கெட்டுக் கொண்டிருந்தார். “வெயிட்டான கேரக்டர். சிவாஜி நடித்தால்தான் தேறும்” என்று நிறையபேர் கமலை கைவிட்டார்கள். பாலுவோ தைரியமாக, “கமல், நீங்கதான் அடுத்த சிவாஜி” என்று உசுப்பேற்ற ‘உயர்ந்தவர்கள்’ தயாரானது. படம் ஊத்திக் கொண்டாலும், பாலுவின் ‘ஒர்க்கிங் ஸ்டைல்’ கமலுக்கு பிடித்துப் போனது.

“பாலு சார், கவலையே வேணாம். கால்ஷீட் தர்றேன். நீங்களே தயாரிச்சி இயக்குங்க. படம் பக்கா கமர்ஷியலா இருக்கணும்” என்றார் கமல். இத்தனைக்கும் கமலுக்கு அப்போது நாளுக்கு இருபத்து நான்கு மணி நேரங்கள் போதாத காலம்.

இந்தியில் அமிதாப்பச்சன் சட்டத்தோடு விளையாடிக் கொண்டிருந்தார். அதே டெம்ப்ளேட்டை உருவி தமிழுக்கு ஏற்றாற்போல கதை செய்தார் பாலு. அதுதான் ‘சட்டம் என் கையில்’.

‘சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே’ - குடிகாரர்களிடையே செவ்வியல் அந்தஸ்து அடைந்துவிட்ட அட்டகாசமான பாடலை மறக்க முடியுமா? துண்டு வேடங்களில் தோன்றி ஹீரோவிடம் அடிவாங்கிக் கொண்டிருந்த சத்யராஜ் முதன்முறையாக வில்லனாக நடித்த படம்.

சினிமாவை டீலில் விட்டுவிட்டு எம்.ஜி.ஆர் முதல்வர் ஆகியிருந்த நேரம். ரஜினி – கமல் இருவரும் ரசிகர்களின் ‘தலைவர்’களாக உருவெடுத்ததை அவர் அவ்வளவாக ரசிக்கவில்லை. இருபத்தைந்து ஆண்டுகாலமாக தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக கையைவிட்டு போய்க்கொண்டிருக்கிறதோ என்கிற பதட்டத்திலும் இருந்தார். அவ்வப்போது தலையிட்டு சப்பைக் காரணங்களுக்காக குடைச்சலும் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒரு படத்துக்கு ஒட்டப்பட்ட போஸ்டரில் ரஜினி ஸ்டைலாக சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தை பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். “ஹீரோவே பொறுக்கி மாதிரி சிகரெட்டு புடிச்சிக்கிட்டிருந்தா, படத்தை பார்க்குற ரசிகனெல்லாம் என்ன செய்வான்?”. ராவோடு ராவாக ஒட்டப்பட்ட எல்லா போஸ்டர்களையும் கிழித்தெறிந்தார்கள்.

‘சட்டம் என் கையில்’ படத்தில் ஒரு வெள்ளைக்காரி கமல்ஹாசனுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் காட்சி அப்போது மாபெரும் புரட்சி. இந்த காட்சியை காண்பதற்காகவே பள்ளி – கல்லூரி மாணவர்கள் வகுப்பினை கட் அடித்துவிட்டு தியேட்டருக்கு வருவார்களாம். கமலுக்கு இளம்பெண்கள் கூட்டம் கூட்டமாக ரசிகைகளாக ஆனார்கள். விஷயம் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் கொதித்து விட்டார். அதுவரை தமிழக தாய்மார்களின் நெஞ்சில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த நாயகன் அல்லவா? “தமிழில் கூடவா ஆபாசப் படங்கள் எடுக்கிறார்கள்? கூப்பிடுங்கள் பாலுவை!”

பாலு கண்டுகொள்ளவில்லை. கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டிய வசூல்மழையை அனுபவித்துக் கொண்டிருந்தார். கலெக்‌ஷன் ஆன காசை எண்ணி, எண்ணியே அவரது கைகள் காய்த்துப் போய்க் கொண்டிருந்தன.

படம் நூறாவது நாளை நெருங்கிக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆரை வெறுப்பேற்றலாம் என்று பாலுவுக்கு தோன்றியிருக்கிறது. ஆட்சியை இழந்துவிட்ட கலைஞரை விட்டு சினிமா காக்காய்கள் பறந்துவிட்டிருந்த நேரம். பாலு, கலைஞரிடம் பேசினார். ஏற்கனவே ‘பூக்காரி’க்கு வசனம் எழுதியதில் இருவருக்கும் நல்ல உறவு ஏற்பட்டிருந்தது. “அய்யா, நான் தயாரித்து இயக்கிய படம் நூறாவது நாள் கொண்டாடப் போகிறது. விழாவுக்கு வந்திருந்து நீங்கள்தான் அனைவருக்கும் விருதுகள் வழங்கவேண்டும்”. கலைஞர் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார்.

அடுத்து முதல்வர் அலுவலகத்துக்கு போன் செய்தார். “சட்டம் என் கையில் நூறாவது நாள் விழாவுக்கு எம்.ஜி.ஆர் விருந்தினராக வரவேண்டும். அழைப்பிதழ் தருவதற்கு அப்பாயிண்ட்மெண்ட் தாருங்கள்”.

“எதிர்க்கட்சித் தலைவரான கலைஞர் மேடையில் விருது கொடுக்க, முதல்வரான நான் விருந்தினராக முன்வரிசையில் அமர்ந்து ரசிக்க வேண்டுமா? பாலுவுக்கு என்ன கொழுப்பு? என் கண்ணிலேயே அவன் படக்கூடாது” என்று எம்.ஜி.ஆர் சந்திக்க மறுத்தார். அதிலும் எம்.ஜி.ஆர் செட்டு ஆட்களான அசோகன், தேங்காய் சீனிவாசனுக்கெல்லாம் கலைஞர் விருது கொடுக்கப் போகிறார் என்கிற விஷயமே அவரை கூடுதலாக எரிச்சலாக்கியது.

பாலு, குசும்புக்காரர். ராமாவரம் தோட்டத்துக்கும், தலைமைச் செயலகத்துக்கும் தனித்தனியாக அழைப்பிதழை அஞ்சலில் அனுப்பி வைத்துவிட்டார்.

மறுநாள் என்ன நிகழ்ச்சியென்று பார்த்து முதல்வரிடம் சொல்ல வேண்டிய செயலர் ஒருவர் விஷயம் தெரியாமல் எம்.ஜி.ஆரிடம் சொல்லி இருக்கிறார். “நாளைக்கு ‘சட்டம் என் கையில்’ நூறாவது நாள் விழாவுக்கு அழைப்பு வந்திருக்குங்க சார்”.

கடுப்பாகிப் போன எம்.ஜி.ஆர் காவல்துறைக்கு கட்டளை இட்டார். “என்ன செய்வீங்களோ தெரியாது. அந்த விழா நடக்கக்கூடாது”

கட்டிவா என்றால் வெட்டி வருபவர்கள் ஆயிற்றே காவல்துறையினர்? நேராக பாலுவின் வீட்டுக்கு போனார்கள். தலைவருக்கு விழா நடப்பதில் விருப்பமில்லை என்று எடுத்துச் சொன்னார்கள். பாலு கேட்கிறார்போல தெரியவில்லை. கைது செய்துதான் இவரை அடக்க வேண்டும். ஆனால், என்ன சொல்லி கைது செய்வது?

போயிருந்த போலிஸ்காரர் ஒருவர் சூப்பர் ஐடியா சொன்னார். அனுமதி இல்லாமல் பாலு, மது குடித்தார் (!) என்று மதுவிலக்கு சட்டப்படி கைது செய்தார்கள்.

வெற்றிவிழாவுக்கு முந்தைய நாள் மாலை இயக்குனரும் தயாரிப்பாளருமான பாலு குடிகார குற்றத்துக்காக கைது. விழா நடக்குமா என்று டென்ஷன்.

மறுநாள் காலை, விழாவை நடத்த மாட்டேன் என்று நைச்சியமாக போலிஸிடம் பேசி விடுதலை ஆனார் பாலு.

வெளியே வந்தவுடனேயே, பிரெஸ்சைக் கூப்பிட்டுச் சொன்னார். “சொன்னபடி நடக்கும். கலைஞர்தான் விருதுகளை வழங்கப் போகிறார். எந்த மாற்றமுமில்லை”

பாலு, அவர் வேலையைக் காட்டியதுமே கடுப்பானார் முதல்வர். கோபத்தின் உச்சிக்குப் போன அவரை சாந்தப்படுத்த மறுபடியும் மதுவிலக்கு சட்டத்தில் உள்ளே போடலாம் என்று பாலுவின் வீட்டுக்கு போலிஸ் போனால், ஆள் மிஸ்ஸிங். எங்கு தேடியும் காணவில்லை. தலைமறைவாகி விட்டார்.

எப்படியும் விழாவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என்று மாறுவேடத்தில் (ஒயிட் & ஒயிட் டிரெஸ்தான் அப்போதெல்லாம் அவர்களுக்கு மாறுவேடம்) விழா நடக்கிற இடத்தின் வாசலில் போலிஸார் குவிந்திருந்தனர். மேடையில் கலைஞர் விருது வழங்கத் தொடங்கிவிட்டார்.

இயக்குனரின் பெயரை அறிவித்ததுமே, ‘பளிச்’சென்று அறிமுகமாகி பரிசை வாங்கிக் கொண்டு அப்படியே காற்றோடு காற்றாய் கலந்துவிட்டார் பாலு. கைது செய்யலாம் என்று ஆவேசத்தோடு வந்த போலிசுக்கு பெப்பே.

விழாவின் இறுதியில் கலைஞர் பேசும்போது சொன்னார். “சட்டம் என் கையில் இயக்குனர் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு எங்கோ மறைந்துவிட்டார்” (அப்போதெல்லாம் விருது ‘சட்டம்’ போட்டு வழங்கப்படும் என்பது இங்கே கவனிக்கத்தக்கது)

கலைஞரின் சிலேடையை கேட்டு கூட்டம் அதிர்ந்தது. கைது செய்யப் போன போலிஸாரும் கைத்தட்டி விசிலடித்துவிட்டு ஏமாற்றத்தோடு திரும்பினார்கள்.

அடுத்தும் கமல் பாலுவுக்கு கால்ஷீட் கொடுத்தார். ‘சங்கர்லால்’. படம் வளர்ந்துக் கொண்டிருந்தபோதே பாதியில் பாலு காலமானார். பின்னர் மீதிப்படத்தை கமல்ஹாசனே இயக்கி வெளியிட்டார்.
‘சட்டம் என் கையில்’ படத்தை கமல் மறக்கவே முடியவில்லை. பிற்பாடு இந்தியில் ‘யே தோ கமால் ஹோ கயா’வாக அவர் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. பாலு உயிரோடு இருந்திருந்தால், அவரே இந்தியிலும் இயக்கியிருப்பார். அங்கும் வெள்ளிவிழா.

கால் கிலோ காதல், அரை கிலோ கனவு!

$
0
0
ஒன்பதாவது படிக்கும்போது யாரை காதலித்துக் கொண்டிருந்தேன்?

அனுராதா – இல்லை. பத்தாவது கோட்டர்லி லீவில்தான் ‘லவ்வு’ பச்சக்கென்று வந்தது.

குணசுந்தரி – பார்த்திபன் ஜூட் விட்டுக் கொண்டிருந்தான். நண்பனின் காதலியை காதலிக்குமளவுக்கு நான் நாகரிகமற்றவன் இல்லை.

ஸ்ரீவித்யா – நோ சான்ஸ். வாழைக்காய் விஜய்யின் ஆளு.

எழிலரசி – வெள்ளைக்காரி மாதிரி இருப்பாள். வெள்ளை என்றாலே அலர்ஜி.

சபிதா – மூன்றாவது படிக்கும்போது லவ் பண்ணிய பொண்ணு. நாலாவதிலேயே புட்டிக்கிச்சி.

கவிதா – பர்ஸ்ட் ஸ்டேண்டர்டுன்னு நெனைக்கிறேன். சபிதாவுக்கு முன்னாடி.

ஸ்ரீதேவி, கவுதமி, குஷ்பூ - இவர்களையெல்லாம் லவ் செய்தேன். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒன்பதாவது படிக்கும்போதா என்று குறிப்பாக நினைவில்லை.

கோவிலம்பாக்கம் குமுதா – யெஸ். இவளாகதான் இருக்கவேண்டும். கொஞ்சம் குள்ளச்சி. அதனால் என்ன. அப்போது நானும் கொஞ்சம் குள்ளம்தான்.

கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு ‘பி’ பிரிவில் படித்த பா.ராகவன்.. மன்னிக்கவும்.. பத்மநாபன் என்கிற குடுமிநாதன் வளர்மதியை லவ் செய்கிறான்.

நாவலின் முதல் சாப்டரே, பவித்ரனின் ‘இந்து’ படத்தில் வாலி எழுதியதாக டைட்டிலில் பெயர் போடப்பட்டு -ஆனால் உண்மையில் ஷங்கர் எழுதிய- பாடலின் சமாச்சாரம்தான். ‘எப்படி எப்படி? பொண்ணு (ப்பீப்.. பீப் சவுண்டு) எப்படி?’

ஏற்கனவே வளர்மதி என்கிற குட்டச்சியை கிளாஸில் நான்கு பேர் லவ் செய்கிறார்கள். குடுமிநாதனுக்கு செம காம்பெடிஷன். போதாக்குறைக்கு அவள் வயசுக்கு வந்துவிட்டாள் என்கிற ப்ளாஷ் நியூஸ் வந்தபிறகு, மிச்ச சொச்சப் பயல்களுக்கும் அவள் மீது தெய்வீகக் காதல் வந்துத் தொலைக்கிறது.

சகப் போட்டியாளர்களை சமாளித்து, முப்பாட்டன் திருப்போரூர் முருகன் திருவருளால் வளர்மதியின் கடைக்கண் பார்வை, குடுமிநாதன் மீது விழுந்ததா என்பதே நாவல்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு பள்ளிக்கூட காதல் படம் ஹிட் ஆகும். அலைகள் ஓய்வதில்லை, வைகாசி பொறந்தாச்சி, துள்ளுவதோ இளமை, காதல் என்று பெரிய பட்டியல். பா.ராகவன் எழுதியிருக்கும் ‘கால் கிலோ காதல், அரை கிலோ கனவு’ அந்த ஜானர். முன்னெப்போதோ கல்கியில் எழுதிய இந்த தொடர்கதையை சினிமாவுக்கு கொடுக்காமல், ஏன் நாவலாக இப்போது அச்சில் கொண்டு வந்திருக்கிறாரோ தெரியவில்லை. இப்போதும் கெட்டுப்போய்விடவில்லை. படமாக எடுத்தால் பட்டையைக் கிளப்பலாம்.

பத்மநாபன் என்கிற இளைஞனின் (!) ஓராண்டு வாழ்க்கைப் பயணம். படிக்கச் சொல்லி வன்முறையில் ஈடுபடும் தீவிரவாத ஆசிரியர்கள். மகன் உருப்படுவான் என்கிற நம்பிக்கையே இல்லாத தறுதலை அப்பா. பத்து மாதம் சுமந்து பெற்றுவிட்டோமே என்பதற்காக கடனே என்று சோறு போட்டு வளர்க்கும் அம்மா. எங்கே இவனுக்கெல்லாம் லவ்வு செட் ஆகிவிடுமோ என்கிற பதட்டத்தில் அலையும் பொறாமைக்கார நண்பர்கள். குறிப்பாக பர்ஸ்ட் ரேங்க் பன்னீர்செல்வம். இப்படிப்பட்ட வாழத்தகுதியற்ற கொடூரமான உலகில், கண்ணுக்கு தெரிந்தமட்டும் பாலைவனமாய் நீண்டிருக்கும் துலாபார சோக வாழ்க்கையில் கானல்நீராய், பசுஞ்சோலையாய் வளர்மதி மட்டுமே.

கதை நடைபெறும் காலக்கட்டம் எண்பதுகளின் கரெக்ட்டான மத்தி. ஏனெனில் நாயகி வளர்மதி 1971ல் பிறந்தவள் என்கிற குறிப்பு கிடைக்கிறது. அவள் ஒன்பதாவது படிக்கிறாள் என்றால் 14 வயசு (வயசுக்கு வந்தது கொஞ்சம் லேட்டுதான்). எனவே, கதை நடக்கும் காலக்கட்டம் 1985 என்று எடுத்துக் கொள்ளலாம்.

இந்த கட்டுரையை வாசிக்கும்போது நாவல் கொஞ்சம் ‘அப்படி, இப்படி’ இருக்குமோவென்று உங்களுக்கு டவுட்டு வரலாம். பா.ராகவன் சுத்த சைவம். ஒரு இடத்தில் கூட அவரது பேனா வரம்பு மீறவில்லை. அதுவும் கல்கியில் தொடராக வந்த கதை. ஆனால் வாசிக்கும் வாசகரான நாம், ‘ப்ளெஷர் ஆஃப் டெக்ஸ்ட்’டுக்காக, ஆங்காங்கே லைட்டாக கூட்டிக் குறைத்து, ‘அப்படி, இப்படி’ கற்பனை செய்துக்கொள்ளக்கூடிய ஏராளமான வாய்ப்புகளை கதையின் சம்பவங்கள் அனுமதிக்கிறது. அவ்வகையில் இந்நாவலுக்கு ஒரு பின்நவீனத்துவத் தன்மை இருப்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய ‘ராஜீவ்காந்தி சாலை’ (ஓ.எம்.ஆர் என்றழைக்கப்படும் ஓல்டு மகாபலிபுரம் ரோடு) எப்படியிருந்தது என்கிற வர்ணனை மிகத்துல்லியமாக இந்நாவலில் பதிந்திருக்கிறது. நாவலாசிரியர் வளர்ந்த பகுதி அது என்பதாலும் இருக்கலாம். புவியியல்ரீதியான வர்ணனை மட்டுமின்றி, அத்தலைமுறையின் கலாச்சாரம், மரபு, இத்யாதி லொட்டு லொசுக்குகளை எல்லாம் மலரும் நினைவுகளாக ரீவைண்ட் செய்து ஃபிலிம் ஓட்டுகிறார் பாரா. இந்த கதை குடுமிநாதனுடையது அல்ல. நம் அனைவருடையதும் கூட. மாங்காய் அடிப்பது, கிணற்றில் குதிப்பது, சினிமா, கிரிக்கெட் என்று அக்கால இளைய தலைமுறையினரின் அசலான வாழ்க்கைப் பதிவு. வாட்ஸப் யூத்துகள் தங்களுடைய சித்தப்பாக்களும், மாமாக்களும் எப்படிப்பட்ட உயர்வான இலட்சிய வாழ்வினை வாழ்ந்தார்கள் என்பதை அறிய அரிய வாய்ப்பு.

சிறுவனை நாயகனாகவும், சிறுமியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்ட நாவல் என்பதால் இதை சிறுவர் இலக்கியம் என்று வகைப்படுத்தலாமா என்கிற குழப்பமும் இடையிடையே வருகிறது. ஆனால், இதற்கு எவ்வித இலக்கிய அந்தஸ்து மயிரும் வேண்டாம் என்று அட்டையிலேயே முத்திரை போட்டு முகத்தில் அறைந்திருக்கிறார் பா.ராகவன். ‘கத புஸ்தகம்’ என்று சிகப்பு முத்திரையிட்டு கழுதைப் படம் போட்ட முகப்பு அட்டை. கமர்சியல் ரைட்டர்களின் வழக்கமான கொணஷ்டை.

உண்மையை சொல்லப் போனால் தீவிர இலக்கியம் என்று சமகாலத்தில் முன்வைக்கப்படும் தீவிர த்ராபைகளை விடவும், அக்கால இளைஞர்களின் பிரச்சினைகளை தீவிரமாகவே அலசியிருக்கக்கூடிய நூல் இது. ஆனால், இதை எழுதியவர் ‘இதெல்லாம் இலக்கியமா?’ என்கிற பாணியில் அசால்டாக இருக்கிறார். சுவாரஸ்யமாக எழுதினால் அது நிச்சயமாக இலக்கியமல்ல என்று அதை எழுதக்கூடிய எழுத்தாளர்களே நம்பக்கூடிய அளவுக்கு தமிழிலக்கியத்தின் நிலைமை இப்படி அபாயகரமாக போகுமென்று டால்ஸ்டாயும், தஸ்தாவேஸ்கியும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

வாசிப்பும் இன்பம் தரும் என்பதற்கு இந்நாவல் நல்ல எடுத்துக்காட்டு. இது த்ரில்லர் அல்ல. ஆனால், த்ரில்லருக்கு இணையான வேகம் ஆரம்பம் முதல் இறுதிவரை இருக்கிறது. பத்திக்கு பத்தி சுவாரஸ்யத்துக்கு குறைவேயில்லை. வாசிப்பின் வழியாக ஒரு ரோலர் கோஸ்டர் ரைடுக்கு தயாராக இருப்பவர்கள் ‘மிஸ்’ பண்ணாதீங்க.
நூல் : கால் கிலோ காதல் அரை கிலோ கனவு
எழுதியவர் : பா.ராகவன்
பக்கங்கள் : 160
விலை : ரூ.80
வெளியீடு : மதி நிலையம்
எண் 2/3, 4வது தெரு, கோபாலபுரம்,
சென்னை – 600 086.
போன் : 28111506
மின்னஞ்சல் : mathinilayambook@gmail.com

உல்லாசம்

$
0
0
‘உல்லாசம்’ என்ற சொல்லை கேட்டால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?

அஜித் நடித்த சினிமா?

ஜாலி, ஹேப்பி மாதிரியான உணர்வுகள்?

அதெல்லாம் நினைவுக்கு வரும் பட்சத்தில் நீங்கள் ‘உல்லாசமாக’ இருக்க லாயக்கே இல்லை.

நமக்கு ‘உல்லாசம்’ என்றாலே தினத்தந்தி நினைவுக்கு வரும். அதில் உல்லாசம் என்கிற சொல்லை வாசிக்கும்போதே ‘உல்லாசமாக’ இருக்கும். செய்தி எழுதும் உதவி ஆசிரியர்கள், பேனாவில் ‘உல்லாசத்தை’ ஊற்றி எழுதுகிறார்கள்.

தந்தி, ‘உல்லாசம்’ என்கிற தமிழ்ச் சொல்லை எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறது என்பது தமிழர்கள் யாவரும் அறிந்ததே. உதாரணத்துக்கு நேற்று வாசித்த ‘உல்லாச’ செய்தி ஒன்று சாம்பிளுக்கு கீழே.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் கடை வீதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 34). அவருடைய மனைவிக்கும், நாமக்கல்லைச் சேர்ந்த என்ஜினியர் (வயது 28) ஒருவருக்கும் செல்போன் மூலம் பழக்கம். அப்படியே அது ‘கள்ளக்காதலாக’ உருவெடுக்கிறது.

செல்போனில் அடிக்கடி ராமசாமியின் மனைவி, என்ஜினியருடன் பேசிக்கொண்டே இருக்கிறார். ராமசாமி இந்த நடவடிக்கையை கண்டிக்கிறார். உடனே ராமசாமியின் மனைவி, என்ஜினியரிடம் தன் கணவர் இதுபோல திட்டுவதாக புகார் செய்கிறார்.

இதையடுத்து அந்த என்ஜினியர், ஆத்தூருக்கு வந்து ராமசாமியிடம் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார். “உங்கள் மனைவியோடு எனக்கு ‘தொடர்பு’ எதுவுமில்லை. சும்மா ‘பழக்கம்’ தான்”

“அப்படியா, அப்படியெனில் நாம் இருவரும் இனி நண்பர்களாக இருப்போம்” என்று பெருந்தன்மையோடு அவரை நண்பராக்கிக் கொண்டார் ராமசாமி.

உடனே, அந்த என்ஜினியரை தன் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். இருவரும் இணைந்து ‘சரக்கு’ சாப்பிட்டிருக்கிறார்கள். ராமசாமியின் மனைவி ‘சைட் டிஷ்’ ஏற்பாடு செய்திருக்கிறார். சரக்கு போதையில் ராமசாமி ராஜதந்திரமாக ஒருவேலை செய்தார்.

என்ஜினியரிடம், “என் மனைவியோடு ‘உல்லாசமாக’ இருக்க விரும்பினால் இருந்துக்கொள்” என்று சலுகை காட்டியிருக்கிறார்.

இதை கேட்டு மகிழ்ந்த இருவரும், நள்ளிரவில் நிர்வாண நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

கையும், களவுமாக இருவரையும் பிடித்துவிட்ட ராமசாமி, என்ஜினியரை கடுமையாக தாக்கினார். கொடுவாள் எடுத்து வெட்ட முயன்றார். உடையை மாற்றிக் கொள்ளக்கூட அவகாசமற்ற நிலையில் பேண்ட், சட்டை, ஜட்டி உள்ளிட்ட உடைகளை கையில் எடுத்துக்கொண்டு என்ஜினியர் தப்பி ஓடினார். அவரை ராமசாமி விரட்டிச் சென்றும் போதை காரணமாக பிடிக்க முடியவில்லை. உடனே வீட்டுக்கு திரும்பியவர் நிர்வாண நிலையில் இருந்த தன் மனைவியை கத்தரிக்கோலால் குத்த முயன்றிருக்கிறார். அவரும் உயிருக்குப் பயந்து ‘அப்படியே’ தெருவில் ஓடியிருக்கிறார்.

ஒரு வாலிபரும், அழகியும் தெருவில் ‘இந்த’ கோலத்தில் ஓடியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

பின்னர் அங்கிருக்கும் பொதுமக்கள் தலையிட்டு அழகிக்கு நைட்டி கொடுத்து மாட்டிக்கொள்ள சொல்லியிருக்கிறார்கள். ஒரு மரநிழலில் என்ஜினியரும் உடை மாற்றிக் கொண்டார். இருவரும் காயத்துக்கு சிகிச்சை பெற ஆத்தூர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள். விசாரணைக்குச் சென்ற போலிஸாரிடம் இருவரும் வழக்கு எதுவும் பதியவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். கீழே விழுந்து இருவருக்கும் அடிபட்டு விட்டது என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நேர்மையாளரான ராமசாமியோ நேராக காவல்நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறியிருக்கிறார். அவர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் பிரிவின் கீழ் போலிஸார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். ஆத்தூர் உதவி கலெக்டர் ‘நீதி விசாரணை’ நடத்த இருக்கிறார்.

நேற்று (மார்ச் 17, 2015) வாசித்த செய்தியை அப்படியே என்னுடைய மொழியில் மொழிபெயர்த்திருக்கிறேன். தந்தி லெவல் மொழிப்புலமை நமக்கு வராது.

மேற்கண்ட சம்பவத்தில் ஒரே ஒரு லாஜிக் இடிப்பதாக தோன்றுகிறது. அனேகமாக இது உதவி கலெக்டரின் நீதிவிசாரணையில் தெளிவாகும்.

‘நிராயுதபாணியாக’ என்ஜினியர் தப்பி ஓடியபோது, ராமசாமி துரத்திக்கொண்டு சென்றிருக்கிறார். கிடைத்த அவகாசத்தில் அந்த அம்மணி உடை மாற்றிக் கொண்டிருக்கலாமே? ராமசாமி வீட்டுக்கு திரும்பும்வரை ஏன் ‘அப்படியே’ இருந்திருக்கிறார்? – நேற்றிலிருந்து மண்டையை குடைந்துக் கொண்டிருக்கும் சந்தேகம் இது.

மக்கள் நாயகன்!

$
0
0
தயாரிப்பாளரும் இயக்குனருமான ஒய்.வி.எஸ்.சவுத்ரியை வேறெந்த படமும் இப்படி படுத்தி எடுத்ததில்லை. ரத்தக்கண்ணீர் வடித்துவிட்டார். ‘ரே’ படத்துக்கு பூஜை போட்டது 2010 விஜயதசமிக்கு. ரிலீஸ் ஆகப்போவதோ வரும் இருபத்தேழாம் தேதி. பூஜை போட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிறது என்றால், அந்த படம் எவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டு வெளிவருகிறது என்பதை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. முன்னெப்போதோ ஆடியோ ரிலீஸ் ஆகிவிட்டது.

பழைய படம் என்று மக்கள் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக ஏதாவது ‘ஸ்டண்ட்’ செய்யவேண்டுமே என்று சவுத்ரி யோசித்தார். பளிச்சிட்டது ஓர் ஐடியா. புதியதாக ஒரு பாட்டை சேர்த்தார். பவர் ஸ்டார் பவன் கல்யாணின் சமூக அக்கறையையும், மக்கள் பணிகளையும் பாராட்டி ‘பவனிஸம்’ என்று பெயரிட்டு செமத்தியான பாட்டு. படத்தை எப்படியாவது பவர் ஸ்டார் ரசிகர்கள் தேத்திவிடுவார்கள் என்று சவுத்ரிக்கு ஒரு மூடநம்பிக்கை.

ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இந்த ஒரு பாடலை மட்டும் வெளியிட ஒரு விழா. பாடலை வெளியிடுபவரின் பெயரை பார்த்துதான் சீமாந்திராவும், தெலுங்கானாவும் ஆச்சரியப்பட்டது.

சினிமா விழாக்கள் என்றாலே தலைமறைவாகி விடுபவர். தெலுங்கு சினிமாவின் நக்சலைட். தன்னுடைய சொந்தப் படங்களின் பிரமோஷனுக்கு கூட தலைகாட்ட மறுப்பவர். ‘மக்கள் நாயகன்’ என்று தெலுங்கானா மக்கள் அடைமொழியிட்டு கொண்டாடும் ஆர்.நாராயணமூர்த்தி, பவனிஸம் பாடலை வெளியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டதும் யாராலும் நம்பவே முடியவில்லை. இதற்கு முன்பாக எஸ்.வி.ரங்காராவை பற்றிய நூல் ஒன்றின் வெளியீட்டில் மட்டும் முகம் காட்டியிருந்தார் மூர்த்தி.

பவன்கல்யாணை பிடிக்கும் என்பதால், ‘பவனிஸம்’ பாடலை வெளியிட ஒப்புக்கொண்டார் என்கிறார்கள். நாராயணமூர்த்தியை அறிந்தவர்களுக்கு அவரது இந்த முடிவு ஆச்சரியமாகதான் இருக்கிறது. மார்க்சிய புரட்சித்தலைவர்களின் தாக்கத்தில் இருப்பவர், பவன்கல்யானையும் ரசிக்கமுடியுமா என்ன?
யார் இந்த நாராயணமூர்த்தி?

“காக்கிநாடாவுக்கு நீங்கள்தான் எம்.பி” என்று கேட்காமலேயே இருமுறை தேர்தலில் சீட்டு கொடுத்தது தெலுங்கு தேசம் கட்சி. காங்கிரஸ் கட்சியும், “நீங்கள் எம்.எல்.ஏ. ஆகிவிடுங்களேன்” என்று தொகுதி ஒதுக்கியது.

அன்போடு மறுத்தார் தோழர் நாராயணமூர்த்தி. சாகும் வரை ‘சிகப்பு’தான் அவரது கொள்கை. காசோ, பணமோ, பதவியோ, ஆட்சியோ, அதிகாரமோ தேவையே இல்லை. மக்களுக்காகதான் கலை என்கிற மார்க்ஸிய சித்தாந்தத்தில் ஊறிப் போனவர்.

கிழக்கு கோதாவரி மாவட்டம். மல்லம்பேட் என்கிற குக்கிராமம். ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் மூர்த்தி. ஊரில் ஒரே ஒரு டூரிங் டாக்கீஸ் உண்டு. என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ் படங்களைதான் அங்கே அதிகம் திரையிடுவார்கள்.

என்.டி.ராமாராவின் தீவிர ரசிகரான மூர்த்தி ஒரு படம் விடாமல் போய்விடுவார். படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்ததுமே படத்தில் என்.டி.ஆர் எப்படி ஸ்டைல் காட்டினாரோ, அதே மாதிரி கண்ணாடி முன்பாக ஸ்டைல் காட்டுவார். நாகேஸ்வரராவ் மாதிரி நடித்துப் பார்ப்பார். இப்படியாக நடிப்பு ஆர்வம் சின்னவயதிலேயே முளைவிட்டு உள்ளுக்கு ஆலமரமாய் கிளைபரப்பி வளர்ந்து நின்றது.

சங்காவரம் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோதுதான் அரசியல் விழிப்புணர்வு அவருக்கு ஏற்படத் தொடங்கியது. அரசு, என்பது பொதுமக்களை வதைக்கும் இயந்திரம் என்று உணரத் தொடங்கினார். புரட்சிகர இயக்கங்கள் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்படத் தொடங்கியது இந்த மாணவப் பருவத்தில்தான்.

இண்டர்மீடியேட் முடித்ததுமே சென்னைக்கு படையெடுத்தார். ஹீரோ ஆவதுதானே அவரது கனவு?

தாசரிநாராயணராவை சந்தித்து வாய்ப்பு கேட்டார். அப்போது கிருஷ்ணா நடித்துக் கொண்டிருந்த படம் ஒன்றின் படப்பிடிப்பு. ஒரு பாடல் காட்சியில் நூறு பேரில் ஒருவராக மூர்த்தியை நிற்க வைக்கப்பட்டார். ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிவது அவருக்கு பிடிக்கவில்லை. தாசரியிடம் முறையிட்டார்.

“முதலில் படிப்பை முடித்துவிட்டு வா. பிறகு பார்க்கலாம்” என்றார் தாசரி.

அப்போதுதான் இண்டர்மீடியேட் ரிசல்ட் வந்திருந்தது. பட்டப்படிப்பு என்றதுமே மூர்த்தியின் சாய்ஸ் ‘பி.ஏ’தான். ஏனெனில் அப்போதெல்லாம் சினிமா டைட்டில்களில் ‘என்.டி.ராமாராவ், பி.ஏ’ என்றுதான் போடுவார்கள்.

பெத்தாபுரம் கல்லூரியில் பி.ஏ படிக்க சேர்ந்தார். இதற்கிடையே அவர் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்திருந்த படமும் வெளிவந்தது. கூட்டத்தில் ஒருவராக தலை காட்டியிருந்தாலும், அவரை அடையாளங்கண்டு சொந்த ஊர்க்காரர்கள் விசில் அடித்தார்கள்.
அரசியல், சினிமா இரண்டிலும் ஆர்வம் பெருகிக்கொண்டே போனது. தன்னைப் போன்ற ஏழை மாணவர்களுக்கு வெளியில் நிதி வாங்கி உதவத் தொடங்கினார். மாணவர் இயக்கத் தலைவராக உயர்ந்தார். சுற்று வட்டார அநியாயங்களை தட்டிக் கேட்டு ‘ஹீரோ’ ஆனார். பெத்தாபுரம் ரிக்‌ஷாக்காரர்கள் தங்களுக்கு ஒரு தொழிற்சங்கம் அமைத்து, அதற்கு மாணவராக இருந்த நாராயணமூர்த்தியையே தலைவர் ஆக்கினார்கள்.

பொதுவாக கம்யூனிஸ்டுகள் ஒருவரை ஒருவர் ‘தோழர்’ என்றே விளித்துக் கொள்வார்கள். ஆனால் கல்லூரி மொத்தத்துக்கும் நாராயணமூர்த்தி ‘பிரதர்’. கல்லூரிக்கு புதுக் கட்டிடம் கட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தி பணம் வசூலித்துத் தந்தார். பீகாரில் வெள்ளம் என்றால் மூர்த்தி தலைமையில் மாணவர்கள் தெருத்தெருவாக போய் காசு சேர்த்து அரசிடம் நன்கொடை தருவார்கள். இவ்வாறாக அந்த வயதிலேயே தன்னை மொத்தமாக சமூகத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டார்.

அது எமர்ஜென்ஸி காலம். அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்று திரள செங்கொடியை பறக்கவிடுவதே ஒரே வழி என்று ஊர் ஊராகப் போய் மக்களை அணி திரட்டினார். மூர்த்தி சென்ற இடமெல்லாம் செங்கொடி பட்டொளி வீசிப்பறந்தது. அடிக்கடி போலிஸ் வந்து அள்ளிக்கொண்டு போவார்கள். மாணவர்கள் போராட்டம் நடத்தி மூர்த்தியை மீட்பார்கள்.

கல்லூரிப் படிப்பு முடிந்ததுமே மீண்டும் சென்னைக்கு பஸ் ஏறினார். தாசரி நாராயணராவைப் பார்த்தார். அப்போது கிருஷ்ணாவின் மூத்தமகன் ரமேஷ்பாபுவை வைத்து (மகேஷ்பாபுவின் அண்ணன்) ‘நீடா’ என்றொரு படம் எடுத்துக் கொண்டிருந்தார் தாசரி. அந்தப் படத்தில் சொல்லிக் கொள்ளும்படியான வேடம் மூர்த்திக்கு கிடைத்தது. படமும் நன்றாக ஓடியது. சென்னையில் நடந்த நூறாவது நாள் விழாவில் கலைஞரின் கையால் கேடயம் வாங்கினார் நாராயணமூர்த்தி.

தொடர்ச்சியாக நிறைய வாய்ப்புகள் வந்தது. குணச்சித்திர வேடம், வில்லனுக்கு கையாள் என்று நடித்து சோர்ந்துப் போனார். தன்னை ஹீரோவாக்கச் சொல்லி தாசரியிடம் கேட்டார். அந்த படம்தான் ‘சங்கீதா’. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசையமைத்திருந்த அந்த படம் சுமாராக ஓடியது.

சின்ன வேடங்களில் நடித்துவிட்டு திடீரென ஹீரோவாகும் நடிகர்களுக்கு ஏற்படும் பிரச்சினைதான் நாராயணமூர்த்திக்கும் உருவானது. அவரை ஹீரோவாக நடிக்கவும் யாரும் அழைக்க மாட்டார்கள். ஹீரோவாகி விட்டாரே என்று சின்ன வேடங்களுக்கும் அழைக்க மாட்டார்கள். வாய்ப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தவரின் கையில் சுத்தமாக காசில்லை. சாப்பாட்டுக்கே ததிங்கிணத்தோம்.

இனி தன்னை யாரும் நடிக்க அழைக்கப் போவதில்லை என்கிற யதார்த்தத்தை உணர்ந்தவர் தானே இயக்குனர் ஆனால்தான் தன்னை நடிகராக நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று நினைத்தார். முன்பாக நடிக்கும்போதே தாசரி நாராயணராவின் அருகில் இருந்து இயக்கம் தொடர்பான பயிற்சியை பெற்றிருந்தார். ஆனாலும், முன் அனுபவம் இல்லாத நாராயணமூர்த்திக்கு வாய்ப்பு கொடுத்து யாரும் படம் தயாரிக்க முன்வரவில்லை.

நண்பர்களிடம் தன் விருப்பத்தைச் சொன்னார். அவர்களால் முடிந்த தொகையை ஆளாளுக்கு பங்களித்தார்கள். ‘சிநேக சித்ரா’ (நண்பர்களின் படம்) என்று தயாரிப்பு நிறுவனத்துக்கு பெயர் வைத்தார். நிறுவனத்தின் லோகோவாக இந்திய-ருஷ்ய நட்புறவின் இலட்சினையான இரண்டு கைகள் குலுக்கிக் கொள்ளும் படத்தை வரைந்தார். மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் மீது பாரத்தை போட்டுவிட்டு ‘அர்த்தராத்திரி சுதந்திரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை 1984ல் தொடங்கினார்.

மொத்த செலவு பதினாறு லட்சம். நக்ஸல்பாரிகளின் புகழ் பாடும் அந்த திரைப்படம் சென்ஸாரில் மாட்டி சின்னாபின்னம் ஆனது. படத்தில் நக்ஸலைட்டாக நடித்திருந்த சிகப்புச் சிந்தனைக்காரரான இயக்குனர் டி.கிருஷ்ணாவின் திடீர் மரணம் வேறு மூர்த்தியை பாதித்தது. கிருஷ்ணாதான் தெலுங்கு சினிமாவில் புரட்சிகரச் சிந்தனைகளை பரவலாக்கியவர். விஜயசாந்திக்கு ஆக்‌ஷன் இமேஜ் ஏற்படுத்தியவர். இவருடைய மகன்தான் இன்றைய டோலிவுட்டின் முன்னணி இளம் ஹீரோக்களில் ஒருவரான கோபிசந்த்.

ஒருவழியாக 1986ல் கிருஷ்ணாவின் முதல் நினைவு நாளன்று ‘அர்த்தராத்திரி சுதந்திரம்’ வெளியானது. கதை, வசனம், பாடல்களில் தீ பறந்தது. படம் சூப்பர்ஹிட்.

அன்று தொடங்கி இன்றுவரை இருபத்தைந்துக்கும் மேற்பட்ட படங்கள். சுமார் இருபது படங்கள் இவரது சொந்த தயாரிப்பு. படங்கள் நன்றாக ஓடும்போதெல்லாம் கோடிகள் குவியும். எதையும் மூர்த்தி தனக்காக சேர்த்துக் கொள்ளவில்லை. தேவைப்படும் மக்களுக்கு சத்தமே இல்லாமல் வாரி வழங்கிவிடுவார்.

அர்த்தராத்திரி சுதந்திரம், அடவி தீவட்டிலு, லால் சலாம், தண்டோரா, எர்ர சைன்யம், சீமலா தண்டு, தலாம், சீக்கட்டி சூர்யலு, ஊரு மனதிரா, வேகு சுக்கலு உள்ளிட்ட படங்கள் நன்றாக ஓடியவை. இவரது படங்களில் ஆபாசமான காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ நிச்சயமாக இருக்காது. முன்னணி நட்சத்திரங்கள், பிரும்மாண்டமான காட்சிகள், காமெடி டிராக்கெல்லாம் இல்லாமல் எளிமையாகவே படம் எடுப்பார்.
நக்ஸல்பாரி புரட்சிகர கருத்துகளை தாங்கிய ‘லால் சலாம்’ படம் வந்தபோது காவல்துறை இவரை விசாரித்தது. ஆரம்பத்தில் அந்த படத்துக்கு திரையிட தடையும் போடப்பட்டது. இவரது ‘தண்டோரா’ வெளியான நேரத்தில், அதன் தாக்கத்தில் ஆந்திராவின் பல பகுதிகளிலும் சாராயக் கடைகளின் மீது பெண்கள் தாக்குதல் நடத்தினார்கள்.

வேலையில்லாத் திண்டாட்டம், மூன்றாம் உலகநாடுகளின் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, அரசியல் அராஜகம், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான விஷயங்கள், உலக வங்கி கொள்கை என்று சமகாலத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களைதான் படத்தின் கதைக்கருவாக எடுத்துக் கொள்கிறார். படம் பார்க்கும் சாமானிய மனிதன், தன்னுடைய கேரக்டரையே திரையில் கண்டு விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதே தன் நோக்கம் என்கிறார்.
நாராயணமூர்த்தி, திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டால், “இதென்ன சர்வதேசப் பிரச்சினையா?” என்று பதிலளிப்பார். பஸ்ஸிலும், ரயிலிலும்தான் பயணிக்கிறார். சொந்தமாக வீடோ, காரோ இன்றுவரை கிடையாது.

கணக்குலே ஃபெயிலு!

$
0
0
+2வில் கணக்கில் ஃபெயிலு. அட்டெம்ப்ட்டும் முன்பைவிட படுமோசமாக வெற்றிவாய்ப்பை இழந்தது.

எனவே, நமக்கு ‘கணக்கு’ பண்ணத் தெரியாது.

ஆனால்- பி.காம்., எம்.காம்., சி.ஏ., மாதிரி பெரிய கணக்கு படிப்பெல்லாம் படித்தவர்கள்தான் சி.ஏ.ஜி.யில் வேலை செய்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதுவும் தப்பு போலிருக்கிறது. அங்கேயும் நம்மைபோல ‘கணக்குப் புள்ளைகள்’தான் இருக்கிறார்களோ என்னமோ?

‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ என்று ஊடகங்களால் பெயர் சூட்டப்பட்ட அந்த சர்ச்சைக்குரிய சி.ஏ.ஜி. ரிப்போர்ட் குறிப்பிட்ட வருமான வரி இழப்பு அரசுக்கு என்ன?

முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் அ.ராசா அவர்களது காலத்தில் பயன்பாட்டில் இல்லாமல் இராணுவத்திடம் இருந்த ஸ்பெக்ட்ரம் பெறப்பட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன.

வினோத்ராய் அவர்களது அறிக்கைப்படி…

52.7 MHz அளவுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் 12,385 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. ஆனால், வினோத்ராயின் மதிப்பீட்டின் படி ஒரு MHz ஸ்பெக்ட்ரம் 3,350 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு விற்கப்பட்டிருந்தால் வரக்கூடிய தொகைதான் 1.76 லட்சம் கோடி.

முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ரூபாயை இப்படிதான் தன்னுடைய பாக்கெட்டில் போட்டுக்கொண்டு போனார் என்று ஊடகங்களும், அடிவருடிகளும் தொடர்பிரச்சாரம் செய்தார்கள்.

தற்போது பாஜகவின் ராமராஜ்ஜியத்தில் 380.75 MHz அளவுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை ஆகியிருக்கிறது. சிஏஜியின் மதிப்பீட்டின் படி விற்கப்பட்டிருக்க வேண்டுமானால் 380.75 x 3350 என்று கணக்கு போட்டு 12.75 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், 1.1 லட்சம் கோடிக்குதான் விற்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு MHz ஸ்பெக்ட்ரம் ரூ.267.51 கோடி ரூபாய்க்குதான் விற்பனை ஆகியிருக்கிறது.

இதைதான் ஆரம்பத்தில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். சிஏஜியின் உத்தேச மதிப்பீடு என்பது ‘கோழி மோசடி’கணக்குதான்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது பதினொன்றரை லட்சm கோடி வருமான இழப்பு என்று சிஏஜி அறிக்கை தரப்போவதில்லை.

ஊடகங்களும் பத்து லட்சம் கோடி ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ என்று கட்டுரைகள் வெளியிடப் போவதில்லை.

தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஊழல் செய்துவிட்டார் என்று யாரும் டிவிக்களில் அனலைஸ் செய்யப் போவதில்லை. அவர் திகாருக்கும் திக்விஜயம் செய்ய வேண்டியதில்லை.

அடிவருடிகளோ வாயையும் வயிற்றையும் பொத்திக் கொண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் என்ன ஸ்கோர் என்று நெட்டை நொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அ.ராசாவுக்கு எதிரான அநியாயத்தை ‘பார்ப்பன மோசடி’ என்று தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். நம்மை ‘சாதிவெறியன்’ என்று முத்திரை குத்துகிறார்கள். சாதியை எதிர்ப்பவர்களும் சாதிவெறியர்கள் என்று விளங்கிக் கொள்ளப்படும் வித்தியாசமான டிக்‌ஷனரிகள் இந்தியாவில் மட்டுமே அச்சாகின்றன.
Viewing all 406 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>