Quantcast
Channel: யுவகிருஷ்ணா
Viewing all 406 articles
Browse latest View live

எவடே சுப்பிரமணியம்?

$
0
0


“நீ யாரு?”

“யுவகிருஷ்ணா”

“அது உன் பேரு. நீ யாரு?”

“ஈ.எஸ்.எல்.சி., எஸ்.எஸ்.எல்.சி., ஹையர் செகண்டரி டூ அட்டெம்ப்ட்ஸ்”

“அதெல்லாம் உன் எஜுகேஷனல் குவாலிஃபிகேஷன். நீ யாரு?”

“சீனியர் சப் எடிட்டர் இன் எ லீடிங் டேமில் டெய்லி”

“அது உன் புரொஃபஷன். நீ யாரு?”

இப்படியே ‘நீ யாரு?’ என்று யாராவது தாலியறுத்துக் கொண்டிருந்தால், என்ன ஆகும்?

சித்தார்த்தன் இந்த கேள்விக்கு விடை தேடி போய்தான் புத்தர் ஆனார்.

நாம் விடை தேடி போவதாக இருந்தால் ஒன்று மெண்டல் ஆவோம், அல்லது புத்தன் ஆவோம். இரண்டுக்கும் இடையே மெல்லிய கோடுதான்.

மாஸ் மசாலா தாயகமான டோலிவுட்டில் இருந்து ‘எவடே சுப்பிரமணியம்’ மாதிரி தத்துவார்த்த விசாரணை கோரும் திரைப்படத்தை –அதுவும் பக்கா கமர்சியல் டெம்ப்ளேட்டில்- சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை. அதனால்தான் அங்கே இப்படத்தை நியூவேவ் சினிமா என்று விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள். தெலுங்கில் சேகர் கம்முலாவுக்கு பாத்தியதைபட்ட இந்த ஏரியாவில் அறிமுக இயக்குனரான நாக் அஸ்வின் பிரமாதப்படுத்தி இருக்கிறார். கேரளாவில் ‘காட்ஸ் ஓன் கண்ட்ரி’, ‘பெங்களூர் டேஸ்’ போன்ற படங்கள் உருவாக்கிய ஆரோக்கியப் போக்கினை, தெலுங்கில் ‘எவ்வடே சுப்பிரமணியம்’ ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள்.

சுப்பிரமணியம் எவரெஸ்ட்டு மலையின் ஏதோ ஒரு முகட்டில் ஊசலாடிக் கொண்டிருக்கிறான். கீழே அதலபாதாளம். இன்னும் சில நாட்களில் ஸ்டாக் எக்சேஞ்சையே அதிரவைக்கப் போகும் கார்ப்பரேட் டான். ஹைதராபாத்தின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர். அங்கே ஏன் அனாவசியமாக தொங்குகிறான் என்று ப்ளாஷ்பேக்கில் விரிகிறது கதை.

சிறு வயதிலேயே படிப்புல் சூட்டிகை சுப்பு. டபுள் பிரமோஷன்களாக வாங்கி சீக்கிரமே பத்தாவது படிக்க வந்துவிடுகிறான். அங்கு அவனுக்கு அறிமுகமாகிறான் ரிஷி. தடாலடியாக எதையாவது செய்வது ரிஷியின் வழக்கம். டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே அமீர்கான் ஸ்டைலில் சக மாணவியை பிரபோஸ் செய்வான். அச்சம், கோபம் மாதிரி உணர்வுகளுக்கு அவன் அகராதியில் அர்த்தமே இல்லை. யார் எதை கேட்டாலும் யோசிக்காமல் கொடுப்பான். எதிர்காலம் பற்றியோ, தன்னைச் சுற்றி நடப்பதைப் பற்றியோ எவ்வித பிரக்ஞையும் இல்லாதவன்.

சுப்புவுக்கு பிறந்தநாள். மிகச்சரியாக அதிகாலை 12.01 மணிக்கு ரிஷி வருகிறான். பிறந்தநாள் ட்ரீட் என்றுகூறி ஜாவா பைக்கில் எங்கோ அதிவேகமாக அழைத்துச் செல்கிறான். அது ஒரு சுடுகாடு. அங்கிருக்கும் அகோரி சாமியார், உங்களை அறிய நீங்கள் தூத் காசிக்கு வருவீர்கள் என்று குத்துமதிப்பாக ஏதோ ஜோஸியம் மாதிரி சொல்கிறார்.

வீட்டுக்கு திரும்பும் வழியில் பைக் ஆக்ஸிடெண்ட். ரிஷியோடு சேர்ந்து சுப்புவும் கெட்டுப் போகிறான் என்று புகார். ரிஷியை வேறு ஊருக்கு அழைத்துச் செல்கிறார்கள் அவனது பெற்றோர். அவனை மறந்துவிட்டு இவன் படிப்பில் கவனம் செலுத்துகிறான்.

ஐஐஎம்மில் பட்டம். பெரிய நிறுவனத்தில் லட்சங்கள் சம்பளம் வாங்கும் வேலை. ஒரு முக்கியமான அசைன்மெண்டை முடித்தால் அவன் வேலை பார்க்கும் நிறுவனம்தான் நெம்பர் ஒன். யாராலும் முடியாத வேலையை சுப்பு முடிக்கப் போகிறான். கிட்டத்தட்ட வேலை முடிந்த மாதிரிதான். முதலாளி, பரிசாக தன் மகளையும் நிறுவனத்தையும் சுப்புவுக்கு அளிக்க இருக்கிறார்.

பூஜைவேளையில் கரடி மாதிரி இப்போது திடீரென்று ரிஷி வருகிறான். நாம் இருவரும் தூத்காசிக்கு போகவேண்டும், மறந்துவிட்டாயா என்று கேட்கிறான். அதையெல்லாம் இன்னுமாடா நினைவில் வைத்திருக்கிறாய் என்று தலையில் அடித்துக் கொள்கிறான் சுப்பு. தன்னுடைய லட்சியத்தை எட்ட, ஒரு பெண்ணிடம் இருக்கும் பங்குகள் சுப்புவின் நிறுவனத்துக்கு தேவை. அதை அடையும் முயற்சியின் போது இருவருக்கும் பொதுவான நட்பாக ஆனந்தி அறிமுகமாகிறாள்.

ஒரு விபத்தில் ரிஷி திடீரென காலமாகிறான். தூத்காசி போவதுதான் அவனுடைய ஒரே ஆசை என்பதால் அவனுடைய அஸ்தியையாவது அங்கே கரைக்க வேண்டும். சுப்புவோடுதான் அங்கே போக ரிஷி ஆசைப்பட்டான். எனவே சுப்புவும் கூட வரவேண்டும் என்று ஆனந்தி வற்புறுத்துகிறாள். அவ்வாறு வருவதாக இருந்தால்தான் தன்னிடம் இருக்கும் பங்குகளை கொடுக்க முடியும் என்று டீலிங் பேசுகிறாள். அவளுடைய பங்குகள் கிடைத்தால்தான் நிறுவனம் நெம்பர் ஒன் ஆகும், நிறுவனத் தலைவருக்கு மருமகன் ஆக முடியும் என்பதால் ஆனந்தியோடு தூத்காசிக்கு கிளம்புகிறான் சுப்பு.
ஏதோ காசி, ராமேஸ்வரம் போவது மாதிரி இல்லை தூத்காசி போவது. உயிரை பணயம் வைத்து எவரெஸ்ட்டில் மலையேற வேண்டும். விருப்பு இல்லாமல் வெறுப்பாக சுப்பிரமணியம் மேற்கொள்ளும் பயணம் அவனுடைய வாழ்க்கையை மாற்றி போடுகிறது. பிரும்மாண்டமான இயற்கைக்கு முன்னால் தன்னுடைய அற்ப இருத்தலியலின் இடத்தை அறிகிறான். தான் யார் என்பதை உணருகிறான்.

சுப்புவாக நானி. ‘நான் ஈ’ படத்தின் அசட்டு நானியல்ல. இந்தப் படத்தில் வருவது ஐஐஎம் அதுப்பு நானி. ஆனந்தியாக வரும் மாளவிகா நாயர் ஒரு சாடையில் சோனாக்‌ஷி மாதிரி இருக்கிறார். “ஐ லவ் யூன்னா லவ் யூதான். லைக் யூ இல்லை” எனும்போது அவர் முகத்தில் வெளிப்படும் காதலை என்னவென்று சொல்ல.

ரிஷியாக நடித்திருக்கும் விஜய் தேவேரெகொண்டா மிகக்குறைந்த காட்சிகள் வந்தாலும் நிறைவான நடிப்பு. “நான் என்ன செய்யமுடியும், நாம என்ன செய்யமுடியும்னு ஒவ்வொருத்தரா இன்னொருத்தரை நம்பிக்கிட்டிருந்தா யாருதாண்டா செய்யுறது?” என்று ஆவேசமும், அழுகையுமாக கொட்டும் இடத்தில் பின்னுகிறார். ஒரு குழந்தையின் மரணத்தில் அவர் தன்னை அறியும் தருணம் அட்டகாசம்.
 
அவதாரம் படத்தில் இடம்பெறும் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலை அனுமதி பெற்று பயன்படுத்தி இருக்கிறார்கள். தெலுங்கில் ‘ஈரக்காற்று அடிக்கும்போது’வாக மொழிமாற்றம் ஆகியிருக்கிறது. உணர்ச்சிபூர்வமான அந்த காட்சியை சர்வதேச தரத்துக்கு இளையராஜாவின் இசை உயர்த்துகிறது.

இதுவரை சினிமாக்காரர்களின் கால்படாத பகுதிகளில் நடத்தப்பட்டிருக்கும் படப்பிடிப்பு அநியாய உழைப்பு. எவரெஸ்ட் கேம்பில் இருக்கும் நேபாளி இளைஞன் நானியைப் பார்த்து சொல்கிறான். “உனக்கு முன்பாகவே ஒரு சவுத் இண்டியன் இங்கே வந்து போட்டோ எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்”. யாரென்று நானி போட்டோ வாங்கிப் பார்க்கிறார். ‘ரஜினிகாந்த்’.

ஈரானும், பிரான்ஸும் இருக்கும் அதே உலகத்துக்குள்தான் சீமாந்திராவும், தெலுங்கானாவும் இருக்கிறது என்பதால் ‘எவடே சுப்பிரமணியம்’ படத்தையும் தாராளமாக உலகப்படம் எனலாம். Must watch movie!

சரோஜாதேவி - ராஜபோதை!

$
0
0
சென்னை புத்தகக் கடையொன்றில் மேய்ந்து கொண்டிருந்த போது, மற்ற புத்தகங்களை எல்லாம் காட்சிக்கு அடுக்கி வைத்திருந்தார்கள். ‘சரோஜாதேவி’ புத்தகத்தை மட்டும் கண்ணுக்குத் தெரியாதபடி ‘சொருகி’ வைத்திருந்தார்கள். உயிர்மை பதிப்பகம், மஞ்சள் கலர் அட்டையில் பொம்மைப் படம் போட்டிருக்கும் என்றெல்லாம் அடையாளம் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், என் தோழிதான் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டு வந்து தந்தாள். இது தற்செயலானதாகக்கூட இருக்கலாம். ஆனால் தமிழர்களின் பொதுவான மனநிலையை வெளிச்சம் போட்டு இது காட்டுவதாகவே தோன்றியது.

பாலியல் சார்ந்த புத்தகங்களை விழுந்து விழுந்து புரண்டு புரண்டு படி(டு)ப்போம். ஆனால் அதைப்பற்றி எழுதினால் அதற்கு நூலகத்தில் இடம் கொடுக்க மாட்டோம். ‘முள்ளில்லா சுள்ளி எரிமடுத்து முயன்றுன்னை நோக்குகிறோம் காமா’ என்றெல்லாம் பாலுணர்வை அப்பட்டமான மொழியில் வெளிப்படுத்துகிற செழுமையான மரபில் வந்த நாம் எப்போது இந்த ‘இலைமறை காய்’ போக்கிற்குத் தாவினோம்? பாலியல் சார்ந்த சாதாரணமான விஷயத்தைக்கூட பேசவே தயங்குகிறோம். அஞ்சுகிறோம். வேறு வழியில்லாமல் முற்றிப் போன கட்டத்தில், டாக்டர் காமராஜ் வகையறாக்களிடம் மட்டும் பேசித் தொலைக்கிறோம். இந்தியாடுடே வருடா வருடம் ‘செக்ஸ் சிறப்பிதழ்’ கொண்டு வரும் போது வக்கிரம், ஆபாசம் என வசைக் கடிதங்கள் குவியும். ஆனால் அதேசமயம் உள்ளே பணிபுரிந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும், ஒரு காப்பிகூட மிச்சமில்லாமல் அந்தச் சிறப்பிதழ் விற்றுத் தீர்கிற ரகசியம்.

“சலவைத் தொழிலாளியிடம் அகப்பட்ட வாழைக்கறை படிந்த வேட்டியைப் போல வெளுத்துவிடத் துடிக்கும் ரகசிய உள்மனம் தனக்கான பாலியல் வேட்கையை நுகர இணைய பால்வெளியில் சஞ்சாரிக்கும் பொழுதுகளில்...”இப்படி ஒரு இறுக்கமான நடையில் ஒருவேளை இந்தப் புத்தகத்தில் இந்த விஷயத்தை அணுகியிருந்தால், நூலக அந்தஸ்து கிடைத்திருக்குமோ என்னவோ? ஆனால் விஷயம் ஒருத்தருக்கும் புரிந்திருக்காது. இறுக்கமும் தயக்கமும் தட்டிப் போன இந்த விஷயத்தை கொண்டாட்டமான மனநிலையில் கொண்டாட்டமான மொழிநடையில் இந்தப் புத்தகத்தில் யுவகிருஷ்ணா அணுகியதால்தான், கொஞ்சத்திற்கு கொஞ்சமாவது இறுக்கம் தளர்ந்திருக்கிறது.

இத்தனை வருட தொலைக்காட்சி அனுபவத்தில் சொல்கிறேன். நேஹா ஆண்ட்டி, சபிதா அண்ணி, அக்கதைகளில் உலவும் ஆண்களெல்லாம் வெறும் கற்பனை பாத்திரங்கள் இல்லை. நம்மோடு நிஜ வாழ்க்கையில் உலவிக் கொண்டிருப்பவர்கள்தான். காதலில் ஏது நல்ல காதல், கள்ளக் காதல் என தமிழர்கள் கேட்க ஆரம்பித்து ஒரு ’மாமா’ங்க காலம் ஆகிவிட்டது. வயது வந்தவர்களுக்கு மட்டும் போன்ற கதைகளையும் எழுதிய கி.ராவுக்கு கிடைத்த வரவேற்புக்கு இணையான கவனம் யுவகிருஷ்ணாவிற்கும் கிடைக்க வேண்டும். புனித பிம்பங்களோடு எத்தனை காலம்தான் வாழ்ந்து கொண்டிருக்கப் போகிறோம்? சன்னிலியோனுக்கு இருக்கிற தைரியம் தமிழ்ச் சிந்தனையாளர்களுக்கு இல்லாமல் போனது ஏனோ?

இணையத்தில் இதைப் படிக்காதவர்கள் தயவுசெய்து புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். அதைவிட முக்கியம் தைரியமாக நூலகத்தில் அதற்கு இடம் கொடுத்து உங்களது சிந்தனை உயரத்தை விசாலமாக்குங்கள். தமிழ் இலக்கிய உலகிற்கும் ஒரு வேண்டுகோள். உங்களது ‘தீவிரத்’தன்மையை சற்றே தளர்த்தி, உங்களது கதவுகளைத் திறந்து வைப்பீர். அக்னி வெப்பப் புழுக்கம் தாளவில்லை. இது போன்ற புதிய காற்று உள்ளே வரட்டும். வாசக எல்லைகள் விரிவடைய வேண்டிய தருணம் இது. இறுதியாய் படிப்பவர்களுக்கு. ஒரு குவார்ட்டர் பிராந்தி, ஒரு பொட்டுக் கடலை பாக்கெட், ஒரு வாட்டர் பாக்கெட், ஒரு டம்ளர்... இவற்றிற்கு 152 ரூபாய் ஆகிறது. ‘சரோஜாதேவி’ புத்தகத்தின் விலை வெறும் நூறு ரூபாய்தான். ஒரு குவார்ட்டர் பிராந்தி தருவதை விட ராஜபோதை நிச்சயம்.

நன்றி :சரவணன் (பத்திரிகையாளர், டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்)

நீலவேணி

$
0
0
சையே துன்பத்துக்கு காரணம் என்கிற தத்துவத்தை எல்லாம் விடுங்கள். ஏனோ தெரியவில்லை. என்னைப் பார்த்ததுமே அடைந்துவிட வேண்டும் என்றுதான் எல்லா பாவிகளும் ஆசைப்படுகிறார்கள். இது என் பிறப்பின் வரமா சாபமா?

“பரிகாரி”

பரிவு காட்டுவதைப் போன்ற நாடகத்தொனியில் அவன் அழைத்தது நன்றாகவே கேட்டது. ஆனாலும் கேளாதது போல வாளாவிருந்தேன். நானென்ன அவன் மனைவியா. அழைத்ததுமே போக.

மீண்டும் குரலுயத்தி அழைத்தான். “பரிகாரீஈஈஈஈஈஈஈஈ”

ஜனநடமாட்டம் அதிகரித்திருந்த முன்மாலைப் பொழுது. சந்தையே திரும்பிப் பார்த்தது. நான் திரும்பவில்லை.

அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தான். பைஜாமாவை தட்டி மணலை உதறினான். கையில் சவுக்கை எடுத்தவாறே என்னைப் பார்த்தான். இந்த அதட்டல், மிரட்டல், உருட்டல்களுக்கு நானா அஞ்சுவேன். அவனுடன் நின்றுகொண்டிருந்த தடியனை கண்டதுமே எனக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக அவன் அணிந்திருந்த கரும்பச்சை நிற குல்லா.

‘ப்பட்..’ என் முதுகை சவுக்கு முத்தமிட்ட சப்தம். அடிக்கடி வாங்கி பழக்கப்பட்டு விட்டாலும் ‘களுக்’கென்று ஒரு துளி நீர் கண்களில் கோர்த்துக் கொள்வது வழக்கமாகி விட்டது. ஆரம்பத்தில் அழுது அரற்றிக் கொண்டிருந்தேன். இப்போது பழகிவிட்டது. சுற்றிலும் இருந்தவர்கள் என்னை பரிதாபமாக பார்த்தார்கள். இந்த ஊடுருவும் பார்வைதான் எனக்கு பிரச்சினை. உடல் கூசுகிறது.

“திமிர் பிடித்தவள். யாருக்கும் அடங்கமாட்டாள். ஆனால் அட்டகாசமானவள். ஆசைப்பட்டுதான் நல்ல விலைக்கு பிடித்தேன். நீயும் ஆசைப்பட்டு கேட்கிறாய். இருமடங்கு கூடுதல் விலைக்கு தருவதில் எனக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும்?”, குல்லாக்காரனிடம் இவன் கறைபடிந்த பற்கள் பளிச்சென்று தெரிய, அசிங்கமாக இளித்துக்கொண்டே சொன்னான்.

புரிந்திருக்குமே? வணிகம். நான் மீண்டும் ஒரு முறை விலைக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய விலை என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் பாரசீக நாட்டின் விலையுயர்ந்த பண்டங்களில் ஒன்றாக நான் மாறிக்கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரிகிறது. எத்தனைமுறை கை மாற்றப்பட்டேன் என்று எனக்கே நினைவில்லை. ஆனால் என்னை வாங்கிய எவனுக்கும் நான் அடங்கிப் போனதில்லை. அது மட்டும்தான் என்னுடைய பெருமை. ‘அடங்கா குதிரைக்கு விலை அதிகம்’ என்று எங்கள் ஊர்பக்கம் ஒரு பழமொழி உண்டு. எனக்கு அது அப்பட்டமாய் பொருந்தும்.

நான் பிறந்த ஊரில் மருந்துக்கு கூட பசுமை கிடையாது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பாலைதான். எக்காலத்திலோ வறண்டுப்போன ஏரி ஒன்றுதான் எங்கள் ஊரின் அடையாளம். பாதங்கள் புதையுமளவுக்கு மென்மையான செம்மணல் ஏரிப்பரப்பு முழுக்க வியாபித்திருக்கும். இக்கரைக்கும் அக்கரைக்குமாக இலக்கில்லாமல் ஓடுவேன். மந்திரவாதி ஏவிவிட்ட பிசாசு துரத்துவதைப் போல அசுரவேகத்தில் ஓடுவேன். அதே வேகத்தில் திரும்ப வருவேன். செந்தூசி பறக்கும்.

தூரத்தில் இருந்து யாரேனும் அக்காட்சியை காண நேர்ந்திருந்தால் அமானுஷ்யமான ஓர் அனுபவத்தை உணர்வார்கள். எந்த சவாலையும் எதிர்கொள்ளும் திண்மை என் நெஞ்சுக்கு கிடைத்தது அந்த இலக்கற்ற ஓட்டங்களால்தான். ஓடி ஓடி வலுவானது என் கால்கள். உரமேறியது உடம்பு. உறுதியோடு உபவிளைவாக வனப்பும் கூடியது. நானே சொல்லக்கூடாது. எங்கள் ஊரிலேயே அழகி நான்தான். என் அழகோடு போட்டிபோட யாருக்குமே அருகதை இல்லை. பேரெழில் என்கிற வார்த்தைக்கு உருவம் கொடுத்தால் நிச்சயமாக அது நான்தான். என் அழகை வருணிக்க பாரசீக மொழியில் வார்த்தைகளின்றி கவிஞர்கள் தடுமாறுவார்கள். அழகுதான் ஆபத்து. அழகின் விளைவு இரண்டு. ஒன்று அழகுக்கு மற்றவர்கள் அடிமை ஆவார்கள். அல்லது அழகு மற்றவர்களுக்கு அடிமை ஆகவேண்டும். துரதிருஷ்டவசமாக என் விஷயத்தில் இரண்டாவது நடந்தது.

சிறுவயதில் அடிக்கடி ஒரு கனவு வரும். அந்த ஏரி முழுக்க நீலநீர் நிறைந்திருக்கும். அதில் நானும் என்னுடைய தோழிகளும் நேரம் காலம் இல்லாமல் விளையாடி களித்திருப்போம். கனவு. வெறும் பகற்கனவு. நிஜத்தில் எனக்கு தோழிகளே இருந்ததில்லை. தனிமை மட்டுமே நிழலுக்கு நிகரான என்னுடைய துணைவன். நான் அந்த ஊரில் இருந்தவரை ஒரு சொட்டு கூட மழை பொழிந்ததாக நினைவேயில்லை. மழைகூட கருணை காட்ட வக்கில்லாத ஓர் ஊரில் உயிரினங்கள் எத்தனை காலத்துக்கு ஜீவித்திருக்க முடியும். எல்லோரும் வேறு வேறு ஊர்களுக்கு இடம்பெயரும்போது நானும் இடம்பெயர்ந்தேன். பிடித்தது பீடை.

என்னை முதன்முதலாக பிடித்தவன் கொஞ்சம் நல்லவன்தான். இப்ராஹிம். கோதுமை விவசாயி. தானுண்டு தன் பிழைப்புண்டு என்று வாழ்பவன். முதன்முதலாக பச்சை நிறத்தை கண்ணில் கண்டதே இப்ராஹிமின் பரந்து வளர்ந்த வயலில்தான். எனது அழகை பற்றி அவனுக்கு அக்கறை எதுவுமில்லை. எனக்கு பரிகாரி என்று பெயர் சூட்டியவனே அவன்தான். வீட்டிலும், வயற்காட்டிலும் கொஞ்சம் ஒத்தாசை செய்யவேண்டுமென்று எதிர்பார்த்தான். காட்டுகுதிரையாய் திரிந்த எனக்கு வீட்டுவேலை என்ன தெரியும். அவனுடைய அன்புக்கு கட்டுப்பட்டு இருப்பதே எனக்கு அவஸ்தையாக இருந்தது. நல்ல மதுமயக்கத்தில் அவன் உறங்கிக் கொண்டிருந்த ஓரிரவில் தப்பித்து ஓடினேன். ஓடப்பிறந்தவள் ஆயிற்றே நான். ஓரிடத்தில் தேங்க முடியுமா.

நான் எங்கெல்லாம் ஓடுகிறேனோ, அங்கெல்லாம் என்னை பிடிக்க எவனோ ஒருவன் தயாராக இருந்தான். எல்லாருமே பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை பிடித்த பேராசைக்காரன்கள். மனிதர்களைவிட அபாயகரமான ஜந்துகள் காட்டில்கூட கிடையாது. என்னை பார்த்ததுமே ஆசைபட்டு உடைமை ஆக்கிக்கொள்ள முயற்சிப்பார்கள். எவனுக்குமே நான் அடங்கியதில்லை. இதனாலேயேதான் அடிக்கடி கைமாறி கொண்டிருந்தேன்.

“பரிகாரி நம்மிடம் இருக்கவேண்டியவளே அல்ல. பாரசீக மன்னரின் அரண்மனையை அலங்கரிக்க வேண்டியவள்” என் காதுபடவே நாலு பேர் பேசுவார்கள். பெருமையாகதான் இருக்கும். என்றோ ஒருநாள் காபூலுக்கும் வாழ்க்கைப்பட்டு தொலைக்கப் போகிறோம் என்று நினைத்துக்கொள்வேன்.

அந்த பச்சை குல்லாகாரன் என்னை காபூலுக்கு அழைத்துச்செல்லதான் வாங்கியிருக்கிறான். காபூல் சுல்தானின் அந்தரங்க ஆலோசகனாம் இவன்.

முட்டாள்களே! சுல்தான் என்ன பெரிய இவனா? நான் அவனுக்கும் அடங்கப் போவதில்லை. என்னுடைய இலட்சியம் இந்துஸ்தான். டெல்லி அரண்மனையை அலங்கரிக்கப் பிறந்தவள் நான். காபூல் எனக்கு சுண்டைக்காய்.

பச்சை குல்லா என்னை பட்டாடைகளால் அலங்கரித்தான். உடல் முழுக்க வாசனைத் திரவியங்களை தெளித்தான். இதுவரை எனக்கு யாருமே செய்யாத அலங்காரமாக, என்னுடைய வாலில் மல்லிகைச் சரத்தை சுற்றினான். ஆம், வாலில்தான்.

அன்பான வாசகரே! ஏன் குழப்பமடைகிறீர். நீங்கள் என்னை யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நானொரு குதிரை. மேலேயே இரண்டு முறை என்னை நான் குதிரை என்றுதான் சொல்லியிருக்கிறேன். மீண்டும் கவனமாக வாசித்துப் பாருங்கள். மனிதர்கள்தான் கதை சொல்ல வேண்டுமா. குதிரை சொல்லக்கூடாதா. சொல்லுகிறேன். கேளுங்கள்.
“இதுதானா காபூலில் இருந்து எனக்கு வந்து சேர்ந்திருக்கும் பிறந்தநாள் பரிசு?” டெல்லி பாதுஷா என்னை பார்த்ததுமே திருப்தி அடைந்தார் என்றுதான் அவரது இறுக்கம் தளர்ந்த சிரிப்பை பார்த்ததுமே எனக்கு தோன்றியது. 

முதுகுவளைந்து பாதுஷாவுக்கு தொடர்ந்து சலாம் போட்டுக்கொண்டே இருந்த காபூல் மன்னரின் தூதன், என்னைப்பற்றி விளக்க ஆரம்பித்தான்.

“உயர்ஜாதி குதிரை பாதுஷா. புயல்வேகத்தில் பறக்கும். ஓராண்டு காலத்துக்கும் மேலாக கடுமையான பயிற்சிகளை கற்றுக் கொடுத்திருக்கிறோம். போர்க்களத்தில் தன் உயிர்கொடுத்து நம்முயிர் காக்கும். காபூல் மன்னர் பெரும் பொருள் கொடுத்து வாங்கினார். இந்துஸ்தானின் பேரரசர்தான் இதில் ஆரோகணித்து பயணிக்க வேண்டும் என்று எங்கள் மன்னர் ஆணையிட்டுவிட்டதால், இதுவரை இந்த குதிரையின் மீது யாருமே ஏறியதில்லை. இது உங்களது பிரத்யேக சொத்து”

“அச்சா” என்று அவனை ஆமோதித்த ஆலம் ஷா, என்னை சுற்றி வந்து பார்க்கத் தொடங்கினார். உயர்ரக மஸ்லின் ஆடையை அணிந்திருந்தார். வழக்கமாக அரசர்கள் அணியும் தலைப்பாகை அன்று அவர் தலையில் இல்லை. ஏனோ ஒரு எளிமையான கதர் குல்லா அணிந்திருந்தார். அத்தர் நெடி அளவுக்கதிகமாய் வீசியது.

“அபாரம். ஆலம்ஷா அகமகிழ்ந்துவிட்டான் என்று போய் உன் மன்னனிடம் சொல். நினைவில் வாழும் என்னுடைய தந்தையார் பாதுஷா அவுரங்கசீப் இதே மாதிரி தோற்றம் கொண்ட குதிரையில்தான் கம்பீரமாக டெல்லியை வலம் வருவார். அவரது மகனான எனக்கும் அந்த பாக்கியம் அமைந்திருக்கிறது”

மன்னரை சுற்றி நின்றிருந்தவர்கள், அவர் சொன்னதை ஆமோதிக்கும் விதமாக தலையசைத்தார்கள். லாயத்தில் திடீரென தீனமான, பரிதாபமான, எந்த விலங்கின் ஒலி என்று அடையாளம் காண இயலாத சப்தம் கேட்டது. இந்த சப்தம் காதில் விழுந்ததுமே மன்னர் எரிச்சலடைந்தார். லாயத்துக்கு பொறுப்பானவனை அழைத்தார்.

“இன்னும் அந்த சனியனை வெட்டிப் போட்டு புதைக்கவில்லையா? என்னுடைய ராஜாங்கத்தில் தகுதியற்றவர்களுக்கு இடம் இல்லை. இன்னும் அரை மணி நேரம்தான் உனக்கு அவகாசம். இதே சப்தத்தை மீண்டும் ஒருமுறை கேட்டால் என்னுடைய வாள் உன் கழுத்தில் இருக்கும்” மன்னரின் முகத்தில் தவழ்ந்த சிரிப்பு மறைந்தது. கடுகடுவென மாறியது அவர் முகம்.

“இதோ பாதுஷா. பத்து நிமிடங்களில் முடித்துவிடுகிறேன்” லாயக்காரன் மன்னரின் ஆணையை கேட்டதுமே அரக்க பரக்க ஓடினான்.

“என்ன விஷயம் அரசரே?” நறுவிசாக உடையணிந்திருந்த இளைஞன் ஒருவன் கேட்டான். அவனுடைய தோரணையைப் பார்த்தால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்கும் என்று யூகித்துக் கொண்டேன்.

“சென்ற வாரம் வேட்டைக்கு போனபோது, ஒரு மானை துரத்த முயன்றேன். பாழாய்ப்போன குதிரை எங்கோ பள்ளத்தில் தெரியாத்தனமாக பாதம் பதித்து, காலை உடைத்துக் கொண்டது. இனி பழைய மாதிரி நலம் பெறாது என்று சொல்லிவிட்டார்கள். எதற்கு வீணாக அதையும் வைத்து அரண்மனை லாயத்தில் பராமரிக்க வேண்டுமென்று கொன்றுவிடச் சொன்னேன். மடையன், இன்னும் செய்யவில்லை” மன்னரின் குரலில் தெரிந்த அரக்கத்தனம் எனக்கு அருவருப்பு ஊட்டியது.

எந்த டெல்லியை என் கனவுதேசமாக நினைத்தேனோ, அதை ஆளுபவர்கள் இரக்கமற்றவர்கள் என்று தெரிந்ததும் மனக்கசப்படைந்தேன். திமிர் பிடித்த இந்த பேரரசன் மட்டுமல்ல. மொகலாய சாம்ராஜ்யத்தின் எடுபிடி எவனும் கூட என் மீது ஏறி அமர்ந்துவிடக்கூடாது என்று உடனடியாக ஒரு சபதம் மேற்கொண்டேன். கோபத்தில் முன்னங்கால் இரண்டையும் ஒன்றரை அடி தூரத்துக்கு தரைக்கு மேலாக தூக்கி பலமாக கனைத்தேன்.

மன்னன் என் அருகே வந்தான். இனி வந்தான்தான். வந்தார் அல்ல. உயிரின் அருமை தெரியாத, இரக்கம் என்கிற குணத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாத இவனுக்கு எதற்கு மரியாதை?

“இரும்மா செல்லம். இதோ வந்துவிட்டேன். நகர் முழுக்க ஓர் உலா போகலாம். தங்கள் பாதுஷாவின் புதிய பட்டத்துக் குதிரையை டெல்லிவாசிகள் தரிசிக்கட்டும்” பட்டத்தரசியை கொஞ்சுவது மாதிரி என்னையும் கொஞ்சினான். எரிச்சலாக இருந்தது. முதுகை தடவிக் கொடுத்தான். பூச்சி ஊர்வதைப் போல அருவருப்பாக உணர்ந்தேன்.

“அடேய்! தயாரா?” மன்னன் யாருக்கோ குரல் கொடுத்தான்.

ஒருவன் ஓடி வந்தான். நீரெடுத்து வந்து என் உடல் துடைத்தான். இன்னொருவன் கையில் நிறைய பட்டுத்துணி. எனக்கு அணிவிக்க தொடங்கினான். ஒருவன் வாசனைத்திரவியங்களை என் உடல் முழுக்க பூசினான். முகத்தில் நான்கைந்து வண்ணங்கள் பூசி என்னை அலங்கரித்தார்கள். டெல்லி பாதுஷாவின் குதிரையாம். எல்லோரும் பார்த்ததுமே மூக்கில் விரல்வைக்க வேண்டுமாம்.

அமைதியாக எல்லா கூத்துகளுக்கும் ஒத்துழைப்பு கொடுத்து வந்தேன். மன்னன் ஓரமாக நின்று, முதலிரவு புதுப்பெண்ணை மாப்பிள்ளை ரசிப்பது மாதிரி என்னை ரசித்துக் கொண்டிருந்தான்.

முல்லா ஒருவர் வந்து ஏதேதோ மந்திரங்களை ஓதினார். என்னுள் ஏதேனும் சைத்தான் ஒளிந்திருந்தால், அதை அவரது மந்திரம் துரத்திவிடுமாம். சாம்பிராணி புகையெழுப்பி என் உடலை கதகதப்பாக்கினார்கள்.

எல்லாம் தயார்.

என் மீது ஆரோகணிக்க, கம்பீரநடை நடந்து வந்தான் மன்னன். என் கழுத்துக்கு கீழாக காலுக்கு அருகில் நீண்டிருந்த பட்டையில் அவன் கால் வைத்து, ஒரு எக்கு எக்கி, இன்னொரு காலை தூக்க முயற்சித்ததுமே ஒரு குலுக்கு குலுக்கி, முன்னங்கால்களை தூக்கி அப்படியே ஒரு சுற்று சுற்றினேன். பாதுஷா தூரமாக போய்விழுந்தான். நீ இந்த வெறும் மண்ணுக்குதான் மன்னன். நானோ உலகக் குதிரைகளுக்கெல்லாம் பேரரசி. உன் திமிர் உனக்கென்றால், என் திமிர் எனக்கு.

சுற்றி நின்ற மொத்த கூட்டமும் அதிர்ச்சியடைந்தது. பேரரசன் அவமானப்பட்டு எழுந்து நின்றான். அவனுக்கு அழுகையே வந்திருக்கும்.

“என்ன செய்வீர்களோ தெரியாது. இன்னும் பத்து நாளில் இந்த குதிரை எனக்கு அடங்க வேண்டும். தயார் செய்யுங்கள்” கரகரவென கத்திவிட்டு, திரும்பிப்பாராமல் நடந்தான்.

பிரதம அமைச்சர் என்னை கவலையோடு பார்த்துக்கொண்டே சொன்னார். “தளபதி! உடனடியாக செங்கிரிக்கு ஆளனுப்பி ஸ்வரூப் சிங்கை கையோடு அழைத்துவர ஆவன செய்யுங்கள். அடங்காத குதிரையெல்லாம் அவனுக்குதான் அடங்கும்”

“அப்படியே ஆகட்டும் அமைச்சரே. ஸ்வரூப்சிங்கின் மகன் தேஜ்சிங்கையும் உடன் அழைத்துவர ஏற்பாடு செய்துவிடுகிறேன். அவன் அப்பனை மிஞ்சிய கெட்டிக்காரனாக வளர்ந்துவிட்டான் என்று கேள்விப்பட்டேன்” என்றான் தளபதி. கட்டி வா என்றால் வெட்டி வருவான் போலிருக்கிறது. ஆர்வக்கோளாறு. அவசரக் குடுக்கை.

எவன் அவன் தேஜ்சிங்? வரட்டும். எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும், நான் அனுமதிக்காமல் என் மீது எவனும் ஏற முடியாது. அப்பனையும், மகனையும் ஒரு வழி பண்ணாமல் அனுப்பமாட்டேன்.
“பரிகாரி, இதுதான் டெல்லி” அரண்மனை லாயத்துக்கு பொறுப்பான அமர்சிங் எனக்கு டெல்லியை சுற்றி காட்டிக் கொண்டிருந்தான். கடந்த பத்து நாட்களில் இந்நகரில் எனக்கு கிடைத்த பிரபலம் அளப்பரியது. பாதுஷாவையே ஏற்க மறுத்த குதிரையென்று முதலில் கோட்டையில் வசிப்பவர்கள் அசந்தார்கள். விஷயம் மெதுவாக நகர்வாசிகளுக்கும் பரவியிருந்தது. அமர்சிங்குக்கு ஏனோ என்னை ரொம்பவும் பிடித்துப் போயிற்று. என்னிடம் அன்பாக நடந்து கொண்டான். நிரம்பவும் பரிவாக நடத்தினான். கவனமாக பராமரித்தான். என்னை குதிரையாக நடத்தாமல், அவனுடைய நண்பன் மாதிரி பழகினான். சக மனிதர்களோடு பேசுவது மாதிரி, என்னோடும் பேசினான். அவன் பேசியது எனக்கு நன்றாகவே புரிந்தது. 

லாயத்திலேயே அடைந்து கிடந்த என்னை இரண்டு நாட்களாக டெல்லியை சுற்றிக்காட்ட நடத்திக் கொண்டிருக்கிறான். நான் செல்லும் தெருவெங்கும் டெல்லிவாசிகள் என்னை ஆச்சரியமாக பார்த்தார்கள். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்னை காட்டி, “அதுதான் பரிகாரி. இந்துஸ்தானத்திலேயே தலைசிறந்த குதிரை” என்று காட்டிக் கொண்டிருந்தார்கள்.

அன்று பதேபூர் சிக்ரி அருகே நானும், அமர்சிங்கும் நடந்துக் கொண்டிருந்தோம். கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே இருந்த மக்களிடையே திடீர் பரபரப்பு. ஏதோ ஒரு இந்து கோயிலுக்கு உரிமையான கோயில்மாடு ஒன்று வெறிபிடித்தாற்போல ஓடிக்கொண்டிருந்தது. வெள்ளைநிற காளை மாடு. நெற்றியில் நிறைய குங்குமம் அப்பிடப்பட்டிருந்தது. கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது. வீரர்கள் சிலர் அதை அடக்குவதற்காக, தங்களது ஈட்டியை கையில் ஏந்தியவாறு அதை பின் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்கள். சிலர் அதை கொன்று அடக்கும் வண்ணம், அதை நோக்கி ஈட்டியை எறிந்தார்கள். காளையோ லாகவமாக அதை தவிர்த்து, அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. காளைமாட்டின் கூரிய கொம்புகளால், நான்கைந்து பேரின் குடல் உருவப்பட்டு விட்டது. தெருவெங்கும் ரத்தக்களரி.

என்னைவிட பெரிய அடங்காப்பிடாரியை அன்றுதான் கண்டேன். காளை என்னையும், அமர்சிங்கையும் நோக்கிதான் அதிவேகமாக வந்துகொண்டிருக்கிறது. பதட்டத்தில் அமர்சிங் என் மீது ஏறி தப்பிக்க முயற்சித்தான். போயும் போயும் ஒரு லாயக்காரன் என் மீது ஏறுவதா. வறட்டுக் கவுரவம் தலைக்கேறியது. அவனை ஏறவிடாமல் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தேன். காளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உயிர் தப்பினால் போதுமென்று என்னை விட்டு விட்டு அமர்சிங் தெறித்து ஓடினான். பட்டாடைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நான், அந்த காளைக்கு வித்தியாசமாக தெரிந்திருக்க வேண்டும். என்னை குத்தி கிழிக்கும் ஆவேசத்தோடு நெருங்கிக் கொண்டிருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. மோதி பார்த்துவிடலாமா. வெறிகொண்ட ஒரு காளையை, ஒரு குதிரையால் மோதி வென்றுவிட முடியுமா?

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. காற்றை கிழித்துக்கொண்டு ஒரு கருநிற குதிரை, எனக்கும் காளைக்கும் இடையில் வந்து நின்றது. அதன் மீது நெட்டையாய் ஒருவன் ஆரோகணித்திருந்தான். ஒரு கையில் வாளும், மறு கையில் வேலுமாக கம்பீரமாக காட்சியளித்தான். நான் இருந்த இடத்திலிருந்து அவனுடைய பின்புறத்தைதான் காணமுடிந்தது. ஆவேசமாக வந்த காளை அவனை கண்டதும் தயங்கி நின்றது. குதிரையிலிருந்து வழக்கமான பாணியில் இறங்காமல், அப்படியே எகிறிக் குதித்தான். அச்சம் சிறிதுமின்றி காளையை நெருங்கினான். தன்னைப் பார்த்து பயப்படாமல் நெருங்கி வரும் வீரனை கண்ட காளைக்கு ஆவேசம் பன்மடங்கானது. முன்கால்கள் இரண்டையும் மண்ணில் தேய்த்து, கொடூரமாக உறுமியது. புழுதி பறந்தது.

“இந்துஸ்தான் பேரரசரின் விசுவாசி, செங்கிரி கோட்டையை ஆளும் மாவீரன் ஸ்வரூப்சிங்கின் திருமகன் இளவரசன் தேஜ்சிங் ஆணையிடுகிறேன். அறிவுகெட்ட காளையே அடங்கிப்போ” என்று உரத்த குரலில் ஆணையிட்டான். அவன் மொழி காளைக்கு எப்படி தெரியும்? அவனை ஒரு வழியாக்கும் முடிவோடு ஆவேசத்தோடு நெருங்கி பாய்ந்தது. கூட்டம் ஓடுவதை நிறுத்திவிட்டு வேடிக்கை காண முனைந்தது.

முதல் மோதலில் அவனுடைய வாளும், வேலும் தூரமாகப் போய் விழுந்தது. காளையின் இரண்டு கால்களுக்கிடையே நுழைந்து உயிர் தப்பினான். வேகமாக விலகி வாலைப்பிடித்து இழுத்து, பட்டென்று காளை மீதேறி, அதன் திமிலை வலுவாகப் பிடித்து, அவனுடைய கால்களை காளையின் உடலில் பின்னி அடக்க முனைந்தான். இப்படியும் அப்படியுமாக திமிறி காளை அவனை தூக்கியெறிந்தது. ஓரமாக விழுந்தவன் உடனே எழுந்தான். காளையே எதிர்ப்பார்க்காத கணத்தில் அதன் முன் நிறு இருகைகளாலும் கொம்பினை பிடித்தான். கால்களை தரையில் நன்றாக ஊன்றி, காளையின் தலையை அசையாதவாறு ஒரு நிமிடத்துக்கு அப்படியே நிறுத்தினான். கனத்த சரீரத்தை இடமும், வலமுமாக அசைத்துக்கொண்டிருந்த காளை கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. அதன் கண்களில் மின்னிய கொலைவெறி அப்படியே மறைந்தது.

மக்கள் வாழ்த்தொலி முழங்க தொடங்கினார்கள். “இந்துஸ்தான் பாதுஷா ஆலம்ஷா நீடூழி வாழ்க. செங்கிரி இளவரசர் தேஜ்சிங் பல்லாண்டு வாழ்க”

சில நிமிடங்களுக்கு முன்னராக காட்டுமிருகமாக காட்சியளித்த காளை இப்போது பூனையாய் தேஜ்சிங்கின் கைகளுக்கு அடங்கியது. அதை தட்டி, தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். கோயிலில் இருந்து வந்த ஒருவர், அதன் கழுத்தில் கயிறு மாட்டினார். தேஜ்சிங்குக்கு நன்றி சொல்லிவிட்டு காளையை நடத்திச் சென்றார்.

ஆஹா இவனல்லவோ வீரன். இப்படியொரு வீரன் அல்லவா என்மீது ஏறி சவாரி செய்ய வேண்டும். முதல் பார்வையிலேயே எனக்கு தேஜ்சிங்கை பிடித்துவிட்டது. எங்கிருந்தோ அமர்சிங் ஓடிவந்தான். தேஜ்சிங்குக்கு வணங்கி வணக்கம் தெரிவித்தான். “இளவரசரே! இதோ நிற்கிறதே இதுதான் பரிகாரி. இதை அடக்கத்தான் பேரரசர் உங்களை இங்கே வரவழைத்திருக்கிறார்”

தேஜ்சிங் என்னை பார்த்தான். தீர்க்கமான பார்வை. அவனுக்கு பதினெட்டு, பத்தொன்பது வயதுதான் இருக்கும். தோள்கள் வலுவாக உரமேறி இருந்தது. கால்களும், கைகளும் நல்ல பருமனில் தூண்கள் மாதிரி இருந்தது. நெற்றியில் நீளவாக்கில் செந்தூரம் இட்டிருந்தான். பின்னங்கழுத்தில் முடி பரவலாக அடங்காமல் காற்றில் பறந்துக் கொண்டிருந்தது.

என்னிடம் வந்தவன் பரவசமாக என் முதுகை தொட்டான். தடவிக் கொடுத்தான். சிலிர்த்தது. வார்பட்டையில் கால்வைத்து, ஒரே மூச்சில் என் மீதேறினான். அமைதியாக, மகிழ்ச்சியாக அவனை அனுமதித்தேன். கடிவாளம் பிடித்து என்னை செலுத்த ஆரம்பித்தான். எதிர்காற்று முகத்தில் மோத, என்றுமில்லாத வேகத்தில் கோட்டையை நோக்கி பறக்க ஆரம்பித்தேன்.
“ஆண்டவா, நான் வெல்லவேண்டும் என்று உன்னிடம் பிரார்த்திக்கவில்லை. அதர்மம் வென்றுவிடக்கூடாது. எனவே தர்மத்தின் பக்கமாக நிற்கும் செஞ்சிப்படைகள், ஆற்காடுப்படைகளை வெல்ல நீ உத்தரவிட வேண்டும்” சிங்கவரம் அருள்மிகு அரங்கநாத சுவாமிகள் சன்னதியில் நின்று மனமுருக வேண்டினான் ராஜா தேசிங்கு. 

தேசிங்கு வேறு யாருமல்ல. யாராலும் அடக்க முடியாத என்னை அடக்கிய தேஜ் சிங்தான். செங்கிரியை இங்கே எல்லோரும் செஞ்சி என்கிறார்கள். அந்த செஞ்சி கோட்டையின் ராஜா தேஜ்சிங்கை, சுருக்கமாக தேசிங்கு என்று அழைக்கிறார்கள். பரிவாதினி என்கிற என்னுடைய இயற்பெயரை மாற்றி, என்னை எல்லோரும் இங்கே ‘நீலவேணி’ என்று அழைக்கிறார்கள்.

எந்த காரியமாக இருந்தாலும் அரங்கநாத சுவாமிகளின் உத்தரவு கிடைத்தபிறகே தேஜ்சிங் செய்வது வழக்கம். அதையொட்டிதான் போருக்கு தன் இஷ்டதெய்வத்திடம் அனுமதி வாங்க சிங்கவரம் வந்திருந்தான். அன்று இறைவன் என்ன நினைத்தானோ. தேஜ்சிங் இவ்வாறு பிரார்த்தித்ததுமே அவரது தலை பின்புறமாக திரும்பிக் கொண்டது.

அர்ச்சகர் பதறிவிட்டார். “மன்னரே! இந்த போரில் இறைவனுக்கு நாட்டமில்லை போலும். தன்னுடைய சிரசை திருப்பிக் கொண்டார். இம்முடிவு குறித்து நீங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும்”

அரசியும் கூட போர்வேண்டாம் என்று ராஜாவை வற்புறுத்தினாள்.

“முன்வைத்த காலை பின்வைக்க முடியாது ராணி. ஆற்காடு நவாப் சாதத் உல்லா கான், செஞ்சி மீது அநீதியாக போர் தொடுத்திருக்கிறார். எண்பத்தைந்தாயிரம் குதிரை வீரர்கள் நம்மை முற்றுகையிட்டிருக்கிறார்கள். நம் பக்கம் இருப்பதோ முன்னூற்றி ஐம்பது பேர்தான். நாம் வெல்லுவது நிச்சயமல்ல. நவாப் என்னை போரில் கொல்லலாம். ஆனாலும் வரலாறு நிரந்தரமாக வாழவைக்கும். திலகமிட்டு சிரித்த முகத்தோடு என்னை வழியனுப்பி வை தேவி” என்று கேட்டுக் கொண்டான்.

“மன்னர் மன்னா. இந்துஸ்தானின் பேரரசரின் அமைச்சருக்கு மகளாக டெல்லியில் பிறந்தவள் நான். உங்கள் வீரத்துக்கு பரிசாக என் தந்தை, எம்மை உமக்கு மணமுடித்து வைத்தார். விதியின் பயனாக இணைந்தோம். ஓரிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தாலும், மணமொத்த தம்பதியராய் வாழ்ந்தோம். இந்த குறுகிய மணவாழ்க்கையில் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உயிராய் மாறினோம். போர்க்களத்தில் உங்கள் உயிர் பிரிந்தது என்று சேதி கேட்டால் அடுத்த நொடியே என் உயிரும் பிரியும். இது சத்தியம்!” என்று ஆரத்தித் தட்டில் எரிந்துக்கொண்டிருந்த கற்பூரம் மீது ராணிபாய் சத்தியம் செய்தாள். குங்குமம் எடுத்து தன் தாலியில் ஒற்றிக் கொண்டாள். அதே குங்குமத்தை கணவன் தேஜ்சிங் நெற்றியிலும் இட்டாள்.

“வீரவேல்! வெற்றிவேல்!” என்று முழங்கிக்கொண்டே உருவிய வாளோடு, ஓடிவந்து என் மீதமர்ந்தான் தேஜ்சிங். பாரசீகத்தில் பிறந்து, காபூலில் வாழ்ந்து, டெல்லிக்கு வந்து, கடைசியாக செஞ்சியில் பட்டத்து குதிரையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இடைப்பட்ட காலத்தில் என் மீதமர்ந்து ஏகப்பட்ட போர்களில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறான் தேசிங்கு. இம்முறை வெற்றி சாத்தியமல்ல என்று அவனுக்கும் தெரியும், எனக்கும் தெரிகிறது. போரில் வெற்றியா முக்கியம். வீரம்தானே பிரதானம்? தேசிங்குவின் பெயர் வரலாற்றில் வாழ்ந்தால், இந்த நீலவேணியின் பெயரும் கூடவே வாழாதா?

கண்ணுக்கு தெரிந்த தூரம் மட்டும் நவாப்பின் வீரர்கள். கருநிற ஆடை அணிந்திருந்தார்கள். சமுத்திரமாய் விரிந்திருந்த நவாப்பின் படைகளுக்கு முன்பு சிறுகுட்டையாய் தேசிங்குவின் படைகள்.

“வீரர்களே! முன்னேறுங்கள். உங்கள் ஒவ்வொருவரின் வாளுக்கும் குறைந்தது பத்து ஆற்காடு தலைகள் மண்ணில் உருளட்டும். அடக்குமுறைக்கும், அதிகாரத்துக்கும் செஞ்சி அடங்காது என்று ஆற்காடு நவாப்பு உணரட்டும்” வீரர்களை உரத்தக்குரலில் உற்சாகப்படுத்தினான் தேசிங்கு. அவனது உற்சாகம் வீரர்களுக்கும் தொற்றிகொள்ள போர் தொடங்கியது.

மனிதசுவர்களால் உறுதியாய் நின்றிருந்த நவாப்பின் சிப்பாய்களை ஊடறுத்து உள்ளே புகுந்தேன். எங்களை சுற்றி வளைத்த வீரர்களின் தலைகளை மண்ணுக்கு உரமாக்கினான் தேசிங்கு. அவனுடைய மனம் என்ன நினைக்கிறதோ, அதை செயல்படுத்தும் வேகத்தோடு நான் இயங்கினேன்.

போர் தொடங்கி ஒரு மணி நேரம் ஆகியும், தேசிங்குவின் வீரப்படை சலிப்பில்லாமல் மோதிக்கொண்டே இருந்தது. இன்னும் எத்தனை தலைகளை மண்ணில் உருட்டினாலும், போர் முடியவே முடியாது என்று தெரிந்திருந்தும் செஞ்சி வீரர்கள் மன உறுதியோடு போராடினார்கள். உயிரை இழந்தார்கள். தேசிங்கு மட்டுமே நானூறு, ஐநூறு பேரை வீழ்த்தியிருப்பான். ‘சுண்டக்காய் நாடு, நசுக்கி விடுகிறேன்’ என்று நவாப்பிடம் கிண்டலடித்துவிட்டு வந்த, ஆற்காடு தளபதி அசந்துப் போனான். தன்னுடைய வீரர்கள் தொடர்ந்து வீரமரணம் எய்திக்கொண்டே இருந்தபோதும், தனிமனிதனாக தேசிங்கு போராடினான். தானே நேரடியாக தேசிங்குவை எதிர்கொள்ள, பொறுக்கியெடுத்த இருபத்தைந்து பாதுகாவலர்களோடு களத்துக்கு வந்தான்.

சக்கரமாய் வட்டமாக நின்ற ஆற்காடு வீரர்களுக்கு நடுவிலே தேசிங்குவும், நானும் மட்டும்தான்.

“செஞ்சி மன்னரே! வீரத்தின் விளைநிலமே. உங்கள் வீரத்துக்கு முன்பாக நாங்களெல்லாம் ஒன்றுமில்லை. உம்மை வீரத்தால் வெல்ல எங்களில் தனியொருவர் எவராலும் முடியாது. ஆனால் நாங்கள் நிறைய பேர். இப்போது நீங்களோ ஒருவர் மட்டும்தான். தயவுசெய்து ஆற்காடு நவாப்புக்கு அரசியல்ரீதியாக அடிபணிந்து விடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார் தளபதி.

“அச்சமா தளபதி? உயிரைவிடும் முடிவோடுதான் போர்க்களத்துக்கு வந்திருக்கிறேன். அநீதிக்கு அடிபணிந்தான் தேசிங்கு என்று யாரும் பேசிவிடமுடியாது. அதுதான் எனக்கு கிடைக்கப்போகும் வெற்றி. போரில் நீங்கள் வெல்லலாம். ஆனால் மக்கள் மனதில் தோற்கப்போகிறீர்கள். தயவுசெய்து உங்கள் ஆயுதங்கள் என் நெஞ்சில் பாய்ச்சுங்கள்” என்று சொல்லியவாறே தன்னை சுற்றி நின்றவர்களை எதிர்கொள்ள தயார் ஆனான் தேசிங்கு.

ஆற்காடு வீரர்களின் சக்கர வட்டம் சுருங்கியது. நான் உங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கும் என் கதையும் இந்த வரியோடு முடிந்தது.

பின்குறிப்பு :

* தேசிங்கு மறைந்த செய்தியை கேட்டதும் ராணிபாய் தீக்குளித்து மாய்ந்தாள். அவளுடைய நினைவாக ஒரு ஊருக்கு ‘ராணிப்பேட்டை’ என்று பெயர்வைத்தார் ஆற்காடு நவாப்.

* தேசிங்குவோடு வீரமரணம் எய்திய எனக்கும் தனியாக சமாதி வைத்து கவுரவித்தார்கள் ஆற்காடு வீரர்கள்.

* தேசிங்குவின் வீரத்தை போற்றும் வகையில் தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள், அவன் கதையை வில்லுப்பாட்டாக தெருக்கூத்தாக இன்றும் தமிழகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

* பொய்க்கால் குதிரை என்று புதியதோர் கலை தமிழர்களுக்கு கிடைத்தது. பொய்க்கால் குதிரையில் வீற்றிருக்கும் ராஜா வேறு யார்? தேசிங்குதான். குதிரை? நீலவேணி என்கிற நான்தான்.
(தினகரன் வசந்தம் இதழில் நான்குவார தொடர்கதையாக வெளியான கதை)

அன்பான அப்பா

$
0
0
ஏப்ரல் 24, 2014 - ஜெயகாந்தன் பிறந்தநாளையொட்டி ‘புதிய தலைமுறை’ வார இதழுக்காக, அவரது இளைய மகள் தீபா எழுதியது :
ஓர் எழுத்தாளருக்கு யாரெல்லாம் அன்பர்களாக இருக்கக் கூடும்? வாசகர்கள், வளரும் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், கவிஞர்கள், திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள்; யோசித்துப் பார்த்தால் இன்னும் ஏழெட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுவார்கள்.

ஜே.கே.வை நேசிப்பவர்களை இம்மாதிரி எந்தப் பட்டியலிலுமே சேர்க்க முடியாது. அவரது ஓர் எழுத்தை கூட வாசிக்காத டாக்டர், எழுத்தறிவே பெறாத ஆட்டோ ஓட்டுனர், கானா பாடகர்கள், கஞ்சா வியாபாரிகள், இன்னும் ஏராளமான விளிம்புநிலை மனிதர்கள் என்று ஒருவருக்கொருவர் எவ்வகையிலும் ஒப்பிடமுடியாதவர்கள் எல்லாருக்குமே அவரைப் பிடித்திருக்கிறது.

சமீபத்தில் அவருக்கு உடல்நலம் குன்றியபோது இதை அனுபவப் பூர்வமாகவே உணர்ந்தேன். தினமும் நாற்பது கிலோ மீட்டர் பைக் ஓட்டிவந்து அவர் கூடவே இருந்த திரு.பழனி. மகளைப் பார்க்க அமெரிக்கா சென்றிருந்தாலும், அங்கிருந்து சதா இவரது உடல்நலனை விசாரித்தபடியே இருந்த டாக்டர் பூங்குன்றன். பாளையத்தம்மன் கோயில் பிரசாதத்தோடு வந்து, கண்களில் நீர்மல்க நெற்றியில் விபூதி பூசிவிட்ட ஆட்டோ செல்வராஜ். இன்னும் நிறையப் பேரை சொல்லிக்கொண்டே போகலாம். மனிதர்களிடம் அவர் காட்டிய பேரன்பு எத்தனை மகத்தானது என்பதற்கு அவர் தினுசுதினுசாய் சேர்த்துவைத்திருக்கும் நண்பர்களே சாட்சி.

விதிகளுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டு ஒரு விஷயத்தை நம்மால் முழுமனதோடு நேசிக்க முடியுமா? சமூகத்தின் விதிகளை துச்சமாக மதித்தவர்களே சமூகம் மீது பெருநேசம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.

லட்சக்கணக்கான வாசகர்கள் வாசித்து பிரமிக்கும் ஜே.கே.வேறு. என்னுடைய அப்பா ஜெயகாந்தன் வேறு என்று ஒரு காலத்தில் தீர்மானமாக எனக்கு தோன்றியிருக்கிறது. எனக்கும் அவரது மடத்தில் இடம் கிடைத்திருந்தால் ஒருவேளை இந்த எண்ணம் மாறியிருக்கலாம்.

”உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்ல. உங்களிலிருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் உங்கள் வழியே உலகுக்கு வந்தவர்கள்” என்கிற கலீல் ஜிப்ரானின் வரிகளை வாசிக்கும் போதெல்லாம், அப்பா இப்படித்தானே நம்மை நடத்தினார், வளர்த்தார் என்று தோன்றும். எங்களுடைய ஆசைகளுக்கு அவர் எவ்வித தடையும் விதித்ததில்லை. கனவுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் குறுக்கே நின்றதில்லை. எங்கள் மீது அவருக்கு எதிர்ப்பார்ப்பில்லாத பேரன்பு உண்டு. எத்தனை பெற்றோருக்கு இது கை கூடுகிறது?

நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது கதைகள் சொல்லுவார். வேடிக்கைப் பாடல்கள் பாடுவார். பள்ளிக்குக் கிளம்பும்போது தினமும் அவர்தான் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பார். ஷூவுக்கு லேஸ் கட்டிவிடுவார். பள்ளி முடிந்து ரிக்‌ஷா வராத நாட்களில் யாரையாவது சரியான நேரத்துக்கு அனுப்பி வைத்துவிடுவார். ஒருமுறை கூட பள்ளிவிட்டு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நாங்கள் காத்திருந்ததில்லை. ஒருமுறை வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவரே வந்தது அழகானதொரு நினைவு.

அற்பத்தனங்களுக்கு இடங்கொடாமல், சமரசமற்ற பெருவாழ்வினை வாழ்ந்து காட்டுவதுதான் நம் குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் வெகுமதியாக இருக்கமுடியுமென்று, ஒரு தாயான பின் உணர்கிறேன். எனக்கு இந்த சிந்தனை தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்தவர் அப்பா.

மதிப்பீடுகளுக்கு மரியாதை

$
0
0
காரமான கோங்குரா சட்னி தேசம். சாதி மதம் மட்டுமல்ல, வம்ச கவுரவமும் கோலோச்சும் பிற்போக்கு நிலவுடைமை சமூகம். மலையூர் மம்பட்டியான் பாணியில் கருப்பு போர்வை போத்திக்கொண்டு, கையில் லாந்தர் விளக்கோடு காட்டிலும் மேட்டிலும் அலையும் நக்சல்கள் என்றொரு சர்வதேச தோற்ற மயக்கம். ரத்தம் தெறிக்க சண்டை போடுவார்கள். கலர் கலராக டிரெஸ் போட பிடிக்கும். சர்வசாதாரணமாக வாயில் வந்து விழும் பாலியல் வசவுகள். கதறக் கதற கற்பழிப்பு. சொர்ணாக்கா பாணி பெண் ரவுடிகள். விஜயசாந்தி பாணியில் சிகப்புத் துண்டை தலையில் கட்டிய பெண் போராளிகள். புரட்சிப் பாடகர் கத்தார். புழுதி பறக்க சுமோவிலோ, டொயோட்டாவிலோ சேஸிங் சீன். வெடித்து தெறிக்கும் டிரான்ஸ்ஃபார்மர். துப்பாக்கியை தூக்கிக் கொண்டு ஓட்டு பெட்டியை கடத்தும் தாதாக்கள்.

சராசரித் தெலுங்கன் எப்படியிருப்பான், தெலுங்கு நிலம் எப்படியிருக்கும் என்று யோசிக்கவே தாவூ தீருகிறது. மூளையில் நான்லீனியராக வந்து விழும் இமேஜ்கள் கொஞ்சம் டெர்ரராகதான் இருக்கிறன. அதிலும் சித்தூரில் தமிழர்கள் மீது நடந்திருக்கும் சீமாந்திர அரசின் அநியாய கொலை வன்முறைக்கு பிறகு தெலுங்கர்களை நினைத்தாலே சிங்களவர்களின் ரத்தம் வழியும் பற்களோடு கூடிய அரக்கத் தோற்றம்தான் (நன்றி : நக்கீரன் அட்டைப்படங்கள், கார்ட்டூனிஸ்ட் பாலாக்கள்) நினைவுக்கு வருகிறது.

‘சன் ஆப் சத்யமூர்த்தி’ படம் பிடித்துக் காட்டும் தெலுங்கன் வேறு மாதிரியானவன்.

நவீனமானவன். ஆனால் பழைய மதிப்பீடுகள் மீது மரியாதை கொண்டவன். குடும்ப கவுரவம் காக்க வாழ்க்கையை பணயம் வைப்பவன். சுருக்கமாக சொன்னால் உள்ளுக்குள் கொல்டிதன்மை நிரம்பிய அல்ட்ரா மாடர்ன் காஸ்மோபோலிட்டன் இண்டியன்.

படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன். இவருடைய தாத்தாதான் சிரஞ்சீவியின் மாமனார். தெலுங்கின் செல்வாக்கான குடும்பத்து வாரிசுதான். பார்ன் வித் ப்ளாட்டினம் ஸ்பூன். எனவே குடும்பப் பெருமை பேசும் படத்தில் இவர் ஹீரோ என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஃபெவிக்விக் மாதிரி பச்சக்கென்று கேரக்டரில் ஸ்ட்ராங்காக ஒட்டிக் கொள்கிறார்.

அல்லு அர்ஜூன் ஏற்று நடித்திருக்கும் பாத்திரத்தின் பெயர் விராஜ் ஆனந்த். அப்பா சத்தியமூர்த்தி (பிரகாஷ்ராஜ்) கோடிஸ்வரர். தன்னை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தாலும், அவர்களுக்கு உதவும் கோமான். திடீரென்று ஒரு விபத்தில் சத்தியமூர்த்தி மறைந்துவிடுகிறார்.

அவர் தலைமையேற்று நடத்தும் நிறுவனங்களின் பங்கு, மார்க்கெட்டில் சடசடவென்று சரிகிறது. முதலீட்டாளர்களுக்கு பயங்கர நஷ்டம். தன்னுடைய அப்பாவை நம்பி முதலீடு செய்தவர்கள் நஷ்டமடையக் கூடாது என்று, சொந்த சொத்தை விற்று அந்த பங்குகளை தானே வாங்குகிறான் விராஜ்.

வெறும் பேப்பர்களாகிவிட்ட பங்குகளை முன்னூறு கோடி ரூபாயை கொட்டி வாங்கும் அவனது முடிவை பார்த்தவர்கள் பிழைக்கத் தெரியாதவன் என்கிறார்கள். சொத்துகளை காத்துக்கொள்ள சால்வன்ஸி கொடுத்துவிட்டு போகலாம், கார்ப்பரேட் யுகத்தில் இதெல்லாம் சகஜம்தான் என்றெல்லாம் யோசனை சொல்கிறார்கள். ஒரே ஒருவன்கூட தன்னுடைய அப்பாவால் நஷ்டமடைந்ததாக சொல்லக்கூடாது என்று மறுக்கிறான். அப்பாவே இல்லை, அவருடைய பெயரை காப்பாற்றி என்ன செய்யப் போகிறாய் என்று கேட்பவர்களிடம் ‘வேல்யூஸின் வேல்யூ’ குறித்து பேசுகிறான் விராஜ்.

பில்லியனர் குடும்பம் ஒரே நாளில் கீழ்நடுத்தர நிலைக்கு வருகிறது. பங்களா இல்லை. கார் இல்லை. கணவனே உலகம் என்றிருந்த அம்மாவுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அப்பா இறந்ததில் இருந்து லேசான மனநிலைக்கு ஆளாகிவிட்ட அண்ணன். இந்த நிலையில் இந்த குடும்பத்தை விட்டு விலகமுடியாது என்று கஷ்டங்களை ஏற்றுக் கொள்ள தயாராகும் கோடிஸ்வர அண்ணி. பச்சைக் குழந்தையான அண்ணன் மகளுக்கு நிலைமையை புரியவைக்க முடியவில்லை. விராஜ், இழந்ததை மீட்டானா என்பதுதான் மீதி கதை. இடையில் ‘உன் அப்பாவால் எனக்கு நஷ்டம்’ என்று சொன்னவரின் பிரச்சினையை உயிரை பணயம் வைத்து தீர்க்கிறான்.

அண்ணாமலை, படையப்பா மாதிரி ஃபேண்டஸியாக எடுக்கப்பட வேண்டிய படத்தை முடிந்தவரை ரியலிஸ்டிக்காக அமைத்திருக்கிறார் இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். சுயநலத்துக்கும், மதிப்பீடுகளுக்கும் இடையேயான விவாதம் படம் முழுக்க ராஜேந்திர பிரசாத் பாத்திரத்துக்கும், அல்லு அர்ஜூன் பாத்திரத்துக்கும் இடையில் நிகழ்ந்தபடியே இருக்கிறது. மனித உணர்வுகளுக்கு மதிப்பு தரும் விராஜ், தன்னுடைய எதிரிகளையும் தன்னை கேலி பேசியவர்களையும் கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை முறையில் வெல்கிறான். இறுதியில் காற்று அவன் பக்கம் அடிக்கிறது. நல்லது செய்தவனுக்கு நல்லதே நடக்கும் என்கிற ஃபீல்குட் மெசேஜ்தான்.

இளம் வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஹீரோயின் சமந்தாவை எந்தவித நெருடலுமின்றி ஹீரோ ஏற்றுக் கொள்வதாக ஒரு போர்ஷன். கமல்ஹாசன், வாசிம் அக்ரம் போன்றோர் இளமையிலேயே அந்நோயை எதிர்கொண்டு அவரவர் ஈடுபட்ட துறையில் உச்சத்தை எட்டியதே இந்த கேரக்டருக்கு இன்ஸ்பிரேஷன் என்று இயக்குனர் சொல்கிறார். த்ரிவிக்ரம் சீனிவாசை புதிய தலைமுறைக்கோ அல்லது பாலம் பத்திரிகைக்கோ கட்டுரை எழுத சொல்லவேண்டும். அந்தளவுக்கு அநியாயத்துக்கு நல்லவர்.

இம்மாதிரி படம் முழுக்கவே ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ ‘நான்தான் முகேஷ்’ பாணியில் ஒவ்வொரு கேரக்டரிலும் ஒவ்வொரு சீனிலும் ஏதோ ஒரு மெசேஜ் அதுவாக ஆட்டோமேடிக்காக வந்து விழுந்துக் கொண்டே இருக்கிறது. 165 நிமிஷத்தில் எப்படிப்பட்ட வில்லனையும் உத்தமனாக்கிவிடும் அகிம்சைவெறியோடு உழைத்திருக்கிறார்கள்.

படம் தொடங்கி பத்தே நிமிடத்தில் இறந்துவிடும் பிரகாஷ்ராஜ் பாத்திரம், க்ளைமேக்ஸ் வரை காட்சிக்கு காட்சி முக்கியத்துவம் பெற்றுக்கொண்டே இருப்பதைப் போன்ற புத்திசாலித்தனமான திரைக்கதை. படம் நெடுக ஏராளமான நட்சத்திரப் பட்டாளம். ஆனால், எல்லாமே பாசிட்டிவ்வான கேரக்டர்கள்தான். தமிழில் இருபது ஆண்டுகளுக்கு முன்பே ஓட்டி தேய்ந்த அப்பாவின் கவுரவத்தை மகன் காப்பது என்கிற அரதப்பழசான ரீல்தான். ஆனால் அதையே ஒழுங்காக ஸ்க்ரிப்ட் ஆக்கி, இன்றைய தலைமுறைக்கு ஏற்ற E வடிவத்துக்கு மாற்றி இருப்பதில்தான் தெலுங்கர்களின் சாமர்த்தியம் வெற்றியை எட்டியிருக்கிறது. தொண்ணூறுகளின் விக்ரமன் காலத்துக்கேற்ப அப்டேட் ஆகிக்கொண்டே வந்திருந்தால் இன்னேரம் சன் ஆஃப் சத்யமூர்த்தி மாதிரி அதிரடி வெற்றியை ருசித்துக் கொண்டிருப்பார்.

சன் ஆஃப் சத்யமூர்த்தி : ஃபேமிலி பிக்னிக்!

தாரா.. த.. த்த.. ததத்தத்தா... த்தாரா த்தரா!

$
0
0
‘தாலியில்லா தமிழகம்’ என்கிற திராவிடர் கழகத்தின் கனவினை பிரச்சாரம் செய்ய வந்திருக்கும் திரைப்படம் ‘ஓ காதல் கண்மணி’. விழா வைத்து தாலி அகற்றிக் கொண்டிருக்கும் திராவிடர்களைவிட, ஆரியர்கள் எவ்வளவு முற்போக்கானவர்களாக மும்பையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.

மணி சாருக்கு இது ‘கம்பேக் மூவி’ என்றெல்லாம் அவரது ரசிகர்கள் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு சொல்ல முடியாது என்றாலும், மணி சாரும் இன்னும் ரேஸில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறார் என்பதை நிரூபித்திருக்கும் திரைப்படம். ஒருவகையில் சொல்லப்போனால் இராவணனும், கடலும் ஏற்படுத்திய சேதாரத்தில் இருந்து தப்பித்திருக்கிறார்.

கோபாலரத்தினம் என்கிற மணிரத்தினம் ஐம்பத்தி ஒன்பது வயதிலும் பத்தொன்பது வயது இளைஞனுக்காக படமெடுக்கிறார் என்பதே ஆகப்பெரிய ஆறுதல். ‘லிவிங் டூகெதர்’ குறித்து தமிழில் ஒரு படம் என்பதே கலாச்சார காவலர்களின் யுகத்தில் கொஞ்சம் துணிச்சலான முயற்சிதான். மணிசாரின் சின்ன மாமனார் கமல் சார் இதை சொந்த வாழ்க்கையிலேயே முயற்சித்துப் பார்ப்பதை துணிச்சலின் அடுத்தக்கட்ட பாய்ச்சல் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

படத்தின் ப்ளஸ், முதல் காட்சியிலிருந்தே திரையில் ஒவ்வொரு மில்லி மீட்டரையும் ஆக்கிரமிக்கும் இளமை. கிழ போல்டுகளான மணிசாருக்கும், பி.சி.ஸ்ரீராம் சாருக்கும், அரைகிழமான ஆஸ்கர் நாயகனுக்கும் எப்படி இவ்வளவு இளமை ஆர்ட்டீஷியன் ஊற்றாக கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது என்பது ஆச்சரியமான உலகசாதனை.

இயக்குனர் மணிசாரை விட, வசனகர்த்தா மணிசார்தான் மார்க்குகள் அதிகம் பெறுகிறார். இதுமாதிரி குட்டி குட்டியான க்யூட்டான டயலாக்குகளை இருபதுகளில் இருப்பவர்கள்கூட சிந்திப்பது அசாத்தியம் என்றே தோன்றுகிறது. ‘துகில் உரிப்பியா?’ என்று பட்டாம்பூச்சியின் சிறகுகளை மாதிரியே படபடத்துக்கொண்டு நித்யாமேனன் கேட்கும்போது, சென்னையின் சூப்பர் ஏ சென்டர் ரசிகர்கள் விசிலடிக்கக் கற்றுக்கொள்ளாத தங்கள் இயலாமையை நொந்துக் கொள்கிறார்கள். ஹீரோவும், ஹீரோயினும் சர்ச்சில் சாடை மொழியில் பேசும் மவுன டயலாக்குகள். அட.. அட.. அடடா...

‘தாரா.. த்த.. தத்தத்தா... த்தாரா த்தரா’ என்று தீம் மியூசிக்கில் தொடங்கி ‘மெண்டல் மனதில்’, லீலா சாம்சனிடம் நித்யாமேனன் பாடும் கர்நாடக தமிழிசை பாடல், குறும்பான பின்னணி இசை என்று ஆஸ்கர் வாங்கியதற்கு நியாயம் செய்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

ஸ்ரீகர்பிரசாத்தின் க்ரிஸ்பான எடிட்டிங் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது தமிழ் படமா ஆங்கிலப் படமா என்று புரியாத அளவுக்கு உச்சமான தொழில் நேர்த்தி.

ஆனாலும்-

அத்தனை பேரையும் தூக்கி சாப்பிடுபவர் பி.சி.ஸ்ரீராம்தான். ரயில்நிலைய முதல் காட்சி தொடங்கி, மழை கொட்டும் க்ளைமேக்ஸ் வரைக்க ‘காதல் கண்மணி’ முழுக்க அவர் ராஜ்ஜியம்தான். கண்களை உறுத்தாத அமைதியான லைட்டிங்கில் முழுப்படமும் ஏற்படுத்தும் ரொமான்ஸ் மூடை உணர்கையில், இளையராஜாவுக்கு நிகரான மேதையான பி.சி. சாரை நாம் தகுந்த முறையில் கவுரவிக்கவில்லையோ என்கிற குற்றவுணர்வு தோன்றுகிறது.

படம் பார்க்கையில் ஓர் ஆச்சரியகரமான ஒப்பீடு தோன்றியது. ஏற்கனவே இந்த படத்தை குழந்தைப் பருவத்தில் பார்த்திருக்கிறோமோ என்கிற ஃபீலிங். இடைவேளையில் டாய்லெட்டில் பேண்ட் ஜிப்பை அவிழ்க்கும்போதுதான் பொறி பறந்தது. ‘புதுப்புது அர்த்தங்கள்’. கிட்டத்தட்ட அதுவும் ‘லிவிங் டூகெதர்’ சப்ஜெக்ட்தான். துல்கர் – நித்யா ஜோடி, ரகுமான் – சித்தாராவை நினைவுபடுத்துகிறார்கள். இளம் ஜோடியை சமப்படுத்த இங்கே பிரகாஷ்ராஜ் – லீலா சாம்சன் என்றால், பு.பு.அர்த்தங்களில் பூரணம் விசுவநாதன் – சவுகார்ஜானகி. எல்லாவற்றையும் விட பெரிய ஆச்சரியகரமான –அதே நேரம் யதேச்சையாக அமைந்த- மேட்டர், கே.பி.சாருக்கும் அந்தப் படத்தை இயக்கும்போது வயது ஐம்பத்தி ஒன்பதுதான். என்ன, ரகுமானுக்கும் சித்தாராவுக்கு அந்த படத்தில் ‘காந்தர்வ விவாகம்’ நடக்காது. மணிசார், ஓக்கே கண்மணியில் அதற்கும் ஓக்கே சொல்லியிருக்கிறார்.

துல்கர், ஜீன்களின் அறிவியல் ஆச்சரியம். அப்பாவை மாதிரியே பையன் இருப்பது சகஜம்தான். ஆனால் இப்படியா ‘ஃபிட் டூ பேப்பர்’ கமாண்ட் கொடுத்து பிரிண்ட் எடுத்தமாதிரி மம்முட்டியின் அச்சு அசலான இளமை காப்பியாக இருப்பார். தளபதி காலத்து மம்முட்டியே மீண்டும் ஜீன்ஸும், டீஷர்ட்டும் போட்டுக்கொண்டு நடித்தது மாதிரி விஷூவல் எஃபெக்ட்டை தருகிறார்.

சாண்டில்யனின் கதாநாயகிகள் மாதிரி (குறிப்பாக ‘ராஜதிலகம்’ மைவிழிச்செல்வி) சோமபானத்தில் திராட்சை மிதக்கும் கண்கள் நித்யா மேனனுக்கு. நுரைப்பஞ்சு மெத்தை மாதிரியான உடல்வாகு. ‘குஷி’ ஜோதிகா, ‘வாலி’ சிம்ரன், ‘அன்பே வா’ சரோஜாதேவி, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஜெயலலிதா, ‘நடிகன்’ குஷ்பூ ரேஞ்சுக்கு செமத்தியான ஃபெர்பாமன்ஸ்.

எல்லாம் சரி.

ஆனால்-

அழுத்தமேயில்லாமல் அது பாட்டுக்குமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைக்கதை. கதாபாத்திரங்களின் செயல்பாடுகளுக்கு போதுமான ஜஸ்டிஃபிகிஷேன்களே இல்லாமல் ‘ஜஸ்ட் லைக் தட்’டாக போய்க் கொண்டிருக்கிறது. இருவரும் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு ஜாலியாக பேசிக்கொண்டிருப்பதெல்லாம் ஓக்கேதான். ஆனால் துல்கருக்கு இவர் ஏன் கண்மணியாகிறார், யாருக்கும் எளிதில் மடங்காத ஃபிகரான நித்யா தடாலென்று கசமுசா மூடுக்கு ஆளாகிறார், இருவரும் இணைந்து லிவிங் டூகெதராக வாழ என்ன எழவு நிர்ப்பந்தம் என்றெல்லாம் காட்சிகளில் விடையில்லை. துல்கர் உருவாக்கும் வீடியோ கேம் மாதிரி அது பாட்டுக்கும் எல்லாம் நடக்கிறது. ‘ஃபீல் குட்’ என்பதெல்லாம் சரிதான். சரவணபவனில் நெய் மிதக்கும் பொங்கல் சாப்பிட்டமாதிரி, காரசாரமான முரண் எதுவுமே இல்லாமல் மப்பாக படம் ஓடிக்கொண்டே இருப்பது (இத்தனைக்கும் வெறும் ரெண்டேகால் மணிநேரம்தான்) உறுத்துகிறது.

மோகன் தொட்டால் ரேவதிக்கு கம்பளிப்பூச்சி ஊறுவது மாதிரி இருந்ததற்கு பின்னால் இருந்த அழுத்தம், ‘நீ அலகா இருக்கேன்னு நெனைக்கலை’யென்று ஷாலினியிடம் ஜொள்ளு விடுவதற்கு பின்னால் மாதவனுக்கு இருந்த ரொமான்டிக் மைண்ட்செட், ‘ஓடிப்போலாமா?’ என்று நாகார்ஜூனனிடம் கிரிஜா செய்யும் குறும்பான ஃபன், கார்த்திக் வீட்டுக்கு வந்து ‘மூணுமாசம்’ என்று அலட்டும் நிரோஷா – இப்படியாக மணி சாரின் கடந்தகால வரலாற்றில் இருந்த சுவாரஸ்யம் எதுவுமே இல்லாமல் சவசவவென்றும், காமாசோமாவென்றும், எதிர்காலத்தில் நினைத்து நினைத்து உருகுகிற காட்சிகளோ, பாத்திரங்களோ இல்லாமல் காதல் கண்மணி அமைந்துவிட்டாள்.

சுஹாசினி மேடமுக்காக மவுஸ் நகர்த்தல் ஃபைனல் வெர்டிக்ட் : (இதையும் அவரது சித்தப்பா பாணியில்தான் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது)

“படம் நல்லா இல்லைன்னு சொல்ல வரலை. ஆனா, நல்லா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமேன்னுதான் சொல்லுறோம்”

விழிகளால் மொழி பேசிய வித்யா!

$
0
0
கமலஹாசன் அந்த ஒரு மணி நேரமும் கலங்கிப் போயிருந்தார்.

சராசரி மனிதர்களுக்கேயான எந்தவித செண்டிமென்டும் இல்லாத இரும்பு மனிதர் என்றுதான் அவரை அறிந்தவர்கள் சொல்வார்கள்.

ஆனால்-

அந்த சந்திப்பு மட்டும் விதிவிலக்கு.

திருவனந்தபுரம் ஸ்ரீ சித்திர திருநாள் மருத்துவமனை. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார் ஸ்ரீவித்யா. தன்னுடைய நோய் யாருக்கும் தெரியக்கூடாது என்று நண்பர்களோ, உறவினர்களோ, மற்ற பிரபலங்களோ தன்னை வந்து பார்ப்பதை தவிர்த்தார். கமல்ஹாசனை மட்டுமே சந்திக்க அனுமதித்தார்.

ஏனெனில்-

கமலஹாசன், ஸ்ரீவித்யாவுக்கு எப்போதுமே ஸ்பெஷல். இருவரும் காதலிக்கிறார்கள் என்று எழுபதுகளின் மத்தியில் தமிழ் – மலையாள ஊடகங்கள் பக்கம் பக்கமாக எழுதின. இத்தனைக்கும் கமலஹாசனைவிட ஸ்ரீவித்யா ஒரு வயது பெரியவர். இரு குடும்பத்தாரிடமும் போராடி திருமணத்துக்கு அவர்கள் சம்மதம் வாங்கிவிட்டதாகவும் செய்திகள் வந்தன.

நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஸ்ரீவித்யாவின் இறுதிக்காலம் இத்தனை சோகமாக இருந்திருக்காது. கமலஹாசன் – ஸ்ரீவித்யா இருவரும் ஏன் பிரிந்தார்கள் என்றெல்லாம் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்குப் பிறகு இப்போது புலனாய்வு செய்யவேண்டிய அவசியமில்லை. இருவரும் காதலித்தார்களா என்றுகூட இன்று உறுதிப்படுத்திக் கொள்ளவும் தேவையில்லை. ஏனென்றால், இருவரும் தனித்தனி பாதையை தேர்ந்தெடுத்தார்கள். ஈடுபட்ட துறையில் உச்சத்தை எட்டினார்கள்.

கடைசி நாட்களில் ஸ்ரீவித்யாவை கவனித்துக் கொண்டவர் மலையாள நடிகரும், கேரளாவின் முன்னாள் அமைச்சருமான கே.பி.கணேஷ்குமார். “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. சிகிச்சைக்காக உலகின் எந்த நாட்டுக்கு அனுப்பினால், நோய் தீருமோ அங்கு அனுப்புங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவரிடம் கமல் உறுதியளித்தாராம்.

இருவருக்கும் இடையே நடந்த அந்த கடைசி சந்திப்புதான் ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையை படமாக எடுக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியது என்கிறார் இயக்குனர் ரஞ்சித். அவர் எடுத்து 2008ல் வெளிவந்த ‘திரக்கதா’ திரைப்படத்தின் போஸ்டரிலேயே பெரியதாக மறைந்துவிட்ட ஸ்ரீவித்யாவின் படத்தை அச்சிட்டார்கள். ரசிகர்களும், விமர்சகர்களும் ‘திரக்கதா’வை கொண்டாடினார்கள். ஸ்ரீவித்யா பாத்திரத்தில் நடித்த பிரியாமணிக்கு, அந்த ஆண்டு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.

அக்டோபர் 19, 2006ல் காலமானபோது ஸ்ரீவித்யாவுக்கு வயது 53. அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் அவருக்கு ‘ஸ்பைன் கேன்சர்’ இருப்பது கண்டறியப்பட்டது. ‘கீமோ தெரபி’ சிகிச்சைக்கு செல்லும்போதெல்லாம் இதனால் தன் தோற்றம் பாதிக்கப்படுமோ, அதனால் நடிப்பு வாய்ப்பு குறைந்துவிடுமோ என்று அவர் அச்சப்பட்டதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஸ்ரீவித்யாவுக்கு அவரது வாழ்வும், நடிப்பும் வேறு வேறல்ல. நடிப்பினை உயிருக்கும் மேலாக நேசித்ததால்தான் இன்னும் சிறிது காலம் வாழ விரும்பினார்.

இத்தனைக்கும் ஸ்ரீவித்யா நடிக்க வந்ததே கூட யதேச்சையாக நடந்த விஷயம்தான்.
அம்மா எம்.எல்.வசந்தகுமாரி மிகப்பிரபலமான கர்நாடகப் பாடகி. அப்பா கிருஷ்ணமூர்த்தியும் பிரபலமான நடிகர்தான். 1953ல் ஸ்ரீவித்யா பிறந்தபோது உடல்நலக்குறைவு காரணமாக அவரது அப்பா நடிப்பதை நிறுத்தியிருந்தார். குடும்பம் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் இருந்தது. கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ஒப்புக்கொண்டு மேடை மேடையாக பாடிக் கொண்டிருந்தார் அம்மா. “கைக்குழந்தையான எனக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூட நேரமில்லாமல் அம்மா குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருந்தார்” என்று பிற்பாடு ஒரு பேட்டியில் சொன்னார் ஸ்ரீவித்யா.

பெற்றோர் சூட்டிய பெயர் மீனாட்சிதான். ஆனால், இவர் பிறந்ததை கேள்விப்பட்ட சிருங்கேரி மடத்தின் தேத்தியூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள், ‘ஸ்ரீவித்யா’ என்று பெயரிட்டு அழைக்கும்படி கேட்டுக் கொண்டாராம். ஸ்ரீவித்யா உபாசகரான அவரது ஆசையை தவிர்க்கமுடியாமல் மீனாட்சி, ஸ்ரீவித்யா ஆனார்.

வித்யாவின் சிறுவயதின் போது குடும்ப பொருளாதாரம் காரணமாக பெற்றோருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருந்தது. தாத்தா அய்யசாமி அய்யர்தான் வித்யாவுக்கு ஆறுதல். தினமும் சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து லஸ் கார்னரில் இருக்கும் தண்ணீர்த்துறை மார்க்கெட்டுக்கு தாத்தாவும், பேத்தியும் காய்கறி வாங்க ரிக்‌ஷாவில் வருவார்கள்.

இசைமேதையான தாத்தா ரிக்‌ஷா பயணத்தின் போது கீர்த்தனைகளை பாடியபடியே வருவாராம். பேத்திக்கு புரிகிறதோ இல்லையோ, தான் பாடிய பாடலின் ராகம், தாளம் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுப்பாராம். இதனால் ஐந்து வயதிலேயே ராகங்களை அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய திறமை ஸ்ரீவித்யாவுக்கு வாய்த்தது.

வித்யாவுக்கு பத்து வயதாக இருக்கும்போது, அவரது குரு டி.கிருஷ்ணமூர்த்தி, “இவள் கச்சேரி செய்யுமளவுக்கு கற்றுத் தேர்ந்துவிட்டாள்” என்று சான்று கொடுத்தார்.

ஆனால்-

ஸ்ரீவித்யாவுக்கு சங்கீதத்தைவிட நாட்டியத்தில்தான் குழந்தையாக இருந்ததிலிருந்தே ஆர்வம். பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் இந்தியாவிலேயே நாட்டியத்தில் புகழ்பெற்ற திருவாங்கூர் சகோதரிகள் அல்லவா? நாட்டியப் பேரொளி பத்மினியின் நாட்டியம் என்றால் ஸ்ரீவித்யாவுக்கு அவ்வளவு உயிர். அவர்தான் குரு தண்டாயுதபாணி பிள்ளையிடம் ஸ்ரீவித்யாவை சேர்த்து வைத்தவர். அவருக்கு ஆறு வயதாக இருந்தபோதே பத்மினி-ராகினி நடத்திய நாட்டிய நாடகத்தில் பாலசீதாவாக தோன்றினார். பதினோரு வயதில் அரங்கேற்றம்.

அத்தனை சிறுவயதிலேயே இந்தியா முழுக்க ஸ்ரீவித்யா நடனத்தில் பிரபலமானார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்திராகாந்தி, ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மேடையேறினார்.
அம்மாவுக்கு சங்கீதம், மகளுக்கு நாட்டியம் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். அப்படியிருக்கையில், அந்த மாலைப்பொழுது ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையையே மாற்றியது. பள்ளியில் இருந்து திரும்பியிருந்தார். வீட்டு வாசலிலேயே பரபரப்பாக காத்திருந்தார் பத்மினி.

“வித்யா, சீக்கிரம் ரெடி ஆகு. உனக்கு இன்னைக்கு மேக்கப் டெஸ்ட்”

“எதுக்குக்கா?”

“நீ சினிமாவில் நடிக்கப் போறே”

வித்யா அப்போதுதான் டீனேஜிலேயே நுழைந்திருந்தார். “வேணாம் அக்கா. எனக்கு டேன்ஸுதான் பிடிச்சிருக்கு”

“அடிப்பாவி. தமிழ்நாட்டுலே அத்தனைப் பொண்ணுங்களும் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுற எம்.ஜி.ஆரே கூப்பிட்டிருக்காரு. வேணாம்னு சொல்றீயே?”

“எம்.ஜி.ஆரா?” கிட்டத்தட்ட மயங்கிவிழப் போன வித்யாவை, பத்மினிதான் தாங்கிப் பிடித்தார். எம்.ஜி.ஆரின் பெயரை சொன்னபிறகும் மறுக்க முடியுமா என்ன. அந்த காலத்தில் அவரை யார்தான் ரசிக்காமல் இருந்திருக்க முடியும்?

பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய ‘ரகசிய போலிஸ் 115’ படத்துக்குதான் வித்யாவுக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. ஆனால் புடவையில் இவரைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை. “ரொம்ப சின்னப் பொண்ணா இருக்கு. இன்னும் கொஞ்சம் வளரட்டும். நானே வாய்ப்பு கொடுக்கறேன்” என்றார். ஸ்ரீவித்யா நடிக்க இருந்த வேடத்தில்தான் ஜெயலலிதா அந்த படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த மேக்கப் டெஸ்டெல்லாம் எடுப்பதற்கு முன்பாகவே ஏ.பி.நாகராஜன், வித்யாவின் அம்மாவிடம் இவரை நடிக்கவைக்க கேட்டுக் கொண்டுதான் இருந்தார். ஆனால், அப்போது எம்.எல்.வசந்தகுமாரிக்கும் சரி, வித்யாவுக்கும் சரி. நடிப்பைப் பற்றி ஐடியா எதுவுமில்லை. ‘ரகசியப் போலிஸ்’ விஷயத்தில் ஏமாற்றம் அடைந்திருந்த வித்யாவுக்கு இப்போது நடிப்பை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்று வீம்பு ஏற்பட்டு விட்டது. ஏ.பி.என்.னுக்கு சம்மதம் தெரிவித்து செய்தி அனுப்பினார்கள்.

‘திருவருட்செல்வர்’ படத்தில் நடனம் ஆடினார் ஸ்ரீவித்யா. தொடர்ச்சியாக படங்களில் நடனமும், சிறிய வேடங்களும் கிடைத்தன. ‘காரைக்கால் அம்மையார்’ திரைப்படத்தில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய ‘தகதகதகதகவென ஆடவா’ பாடலுக்கு தகதகவென ஸ்ரீவித்யா ஆடியிருந்த வேகத்தில் தமிழ்நாடே அசந்துப் போனது.

மலையாளத்தில் ஸ்ரீவித்யா ‘சட்டம்பிக்காவலா’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஹீரோ சத்யனுக்கு வயது அப்போது ஐம்பத்து ஏழு. தன்னைவிட நாற்பது வயது மூத்த ஹீரோவுக்கு ஈடுகொடுத்து நடித்த இவரது துணிச்சல் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

தமிழில் பாலச்சந்தர் புயல் வீச ஆரம்பித்த காலம். அவரது ‘வெள்ளிவிழா’, ‘நூற்றுக்கு நூறு’ படங்களில் வித்யா தலை காட்டியிருந்தார். பாலச்சந்தரின் ஃபேவரைட் நடிகையாக மெதுவாக உருவாகத் தொடங்கினார். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, கமலுக்கும், ஸ்ரீவித்யாவுக்கும் பெரிய பிரேக்காக அமைந்தது. நடனம் தெரிந்த ஸ்ரீவித்யாவின் பெரிய கண்கள் அவரது நடிப்புக்கு ப்ளஸ்பாயிண்ட்.
வித்தியாசத்துக்கு பெயர்போன பாலச்சந்தர், ஸ்ரீவித்யாவை ஒரு ட்ரீம்கேர்ளாக இல்லாமல் திறமையான நடிகையாக வளர்த்தெடுத்தார். இருபத்தி இரண்டு வயது ஸ்ரீவித்யா, இருபது வயது பெண்ணுக்கு அம்மாவாக ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடித்தபோது ஆச்சரியப்படாத ஆளே இல்லை. அந்த படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவித்யாவின் ‘பைரவி’ கேரக்டர், தமிழ் சினிமாவில் சாகாவரம் பெற்ற பாத்திரம். ரஜினிகாந்தின் முதல் ஜோடி ஆயிற்றே? படத்தில் ரஜினிகாந்துக்கு மனைவி, கமலுக்கு காதலி.

ரஜினி, கமல் மட்டுமல்ல. எழுபதுகளின் பிற்பாதியில் கோலோச்சிய தமிழ் சினிமாவின் அத்தனை ஹீரோக்களுடனும் ஸ்ரீவித்யா நடித்தார். தான் பிறப்பதற்கு முன்பே தமிழ் சினிமாவில் ஹீரோவாகிவிட்ட சிவாஜியுடனும் ‘நாம் இருவர்’, ‘நாங்கள்’, ‘நீதியின் நிழல்’ மாதிரி படங்களில் ஜோடி சேர்ந்தார்.

முதன்முதலாக வாய்ப்பு தர முன்வந்த எம்.ஜி.ஆரோடு மட்டும் ஜோடி சேரமுடியவில்லை. ஆனால், அதற்கு பரிகாரமாக எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனதுமே ஸ்ரீவித்யாவுக்கு ‘கலைமாமணி விருது’ கிடைத்தது. மட்டுமல்ல, 1977-78ஆம் ஆண்டின் சிறந்த நடிகையாக தமிழக அரசு விருதையும் பெற்றார்.

தமிழ் – மலையாளம் இரு மொழிகளுக்குமே முக்கியத்துவம் தந்தவர் கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களிலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். அதனால்தான் ஒட்டுமொத்தமாக அவரால் 900 படங்கள் நடிக்க முடிந்தது.

அவரது சினிமா வாழ்க்கை சிறப்பாக இருந்தபோதே இல்லற வாழ்வினை தேர்ந்தெடுத்தார். உண்மையை சொல்லப் போனால் சொர்க்கத்திலிருந்து நரகத்துக்கு போய் சேர்ந்த உணர்வினை அடைந்தார். தன் வாழ்க்கைத் துணைவராக ஜார்ஜ் தாமஸை அவர் தேர்ந்தெடுத்ததுதான் அவர் செய்த பெரிய தவறு. அடுத்த ஒன்பது ஆண்டுகளில் ஒருநாள் கூட ஸ்ரீவித்யா நிம்மதியாக உறங்கியதே இல்லை.

வித்யாவின் அம்மாவும், நண்பர்களும் ஆரம்பத்திலேயே இத்திருமணத்துக்கு எதிராகதான் இருந்திருக்கிறார்கள். தன்னுடைய சொந்த தேர்வு தவறானதுமே, அதை வெளிப்படுத்திக்கொள்ள முடியாமல் தவித்தார். இவருடைய சொத்துக்களை எல்லாம் தன்னுடைய உல்லாச வாழ்வுக்காக அழிக்கத் தொடங்கினார் ஜார்ஜ். ஏகப்பட்ட கடன். எல்லாவற்றுக்கும் ஸ்ரீவித்யாவே ஜவாப்தாரி. எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்ட ஸ்ரீவித்யாவால் திருமணம்தாண்டிய ஜார்ஜின் பெண் உறவை மட்டும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. விவாகரத்து வாங்கினார்.

ஆனால், ஸ்ரீவித்யா தன் சொந்த உழைப்பில் சேர்த்த வீட்டைகூட ஜார்ஜ் அபகரித்துக் கொண்டார். நீண்டகால சட்டப் போராட்டம் நடத்தியே அதை மீண்டும் பெற முடிந்தது. இந்த போராட்டமான காலத்தில் நடிகர் செந்தாமரை, இயக்குனர் ஆர்.சி.சக்தி போன்ற நண்பர்கள்தான் ஸ்ரீவித்யாவுக்கு துணையாக இருந்தார்கள் (ஆர்.சி.சக்தி கமலின் உள்வட்ட நண்பர் எனும் தனிக்குறிப்பு இங்கே தேவையில்லாதது என்றாலும் குறிப்பிடத்தக்கது).

யோசித்துப் பார்த்தால் ஸ்ரீவித்யாவின் இந்த தவறான தேர்வுக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. “நான் முதன்முதலாக அம்மாவின் மடி மீது தலைசாய்ந்து படுத்தபோது எனக்கு வயது 34 ஆகிவிட்டிருந்தது” என்று வித்யா ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். தாயன்பினை தரிசிக்கவே முப்பது ஆண்டுகள் காத்திருந்திருக்கிறார் என்பது எவ்வளவு கொடுமை? சிறுவயதில் இருந்தே அன்புக்கு ஏங்கியவராகதான் இருந்திருக்கிறார்.

அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கருத்து வேறுபாடு என்பதால் அப்பாவின் அன்பு அவருக்கு கிடைக்கவேயில்லை. பதிலாக தாத்தாவிடமிருந்து கிடைத்த நேசிப்பும் பத்து வயது வரை மட்டுமே -தாத்தாவின் திடீர் மரணம் காரணமாக- நீடித்தது.

திரையுலகில் எதிர்பாராமல் கிடைத்த கமலின் நட்பும், அன்பும் அவரை தேற்றியிருக்கும். ஆனாலும் அந்த பந்தம் திருமணத்தில் முடியாததாலேயே, அவசர அவசரமாக ஓர் ஆண் பாதுகாப்பினை நாடி ஜார்ஜை தேர்ந்தெடுத்துவிட்டார். உச்சநீதிமன்றம் வரை போய் தனக்கு உரிமையான சொத்துகளை ஜார்ஜிடமிருந்து திரும்பப் பெற்றவருக்கு சென்னையில் வாழும் ஆசையே அற்றுப்போனது. திருவனந்தபுரத்துக்கு இடப்பெயர்ச்சி செய்தார்.

இடையில் திருமணம் மாதிரியான பிரச்சினைகளால் அவரது நடிப்பு வாழ்க்கையிலும் சில பாதிப்பு. நிறைய புதுநடிகைகள் இவரது இடத்தில் அமர்ந்து விட்டார்கள். எழுபதுகளின் இறுதிவரை கோலோச்சிக் கொண்டிருந்தவர் எண்பதுகளின் துவக்கத்திலேயே அம்மா, அண்ணி பாத்திரங்களை ஏற்கவேண்டியதாயிற்று. 1982ல் வெளிவந்த ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ படத்தில் நாயகி அருணாவுக்கு அம்மாவாக நடிக்கும்போது ஸ்ரீவித்யாவின் வயது முப்பதைகூட எட்டவில்லை.
ரஜினியின் முதல் ஜோடியான ஸ்ரீவித்யா அவருக்கு அக்காவாக ‘மனிதன்’, ‘உழைப்பாளி’ படங்களிலும், மாமியாராக ‘மாப்பிள்ளை’, அம்மாவாக ‘தளபதி’ படங்களிலும் நடித்தார். ஊரே திருஷ்டிபோட்ட ஜோடிப்பொருத்தம் கமல்-ஸ்ரீவித்யா ஜோடிக்கு. அதே கமலுக்கு அம்மாவாக ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நடித்தார். ‘என் ராசாவின் மனசிலே’ போன்ற படங்களில் வயதுமுதிர்ந்த கிழவியாகவும் நடித்தார். வேடங்களை ஏற்பதில் அவருக்கு எந்த ஈகோவும் இல்லை என்பதுதான் முக்கியமானது. புதுமுக நடிகர், தன்னைவிட வயது மூத்தவர்கள் பாகுபாடு இல்லாமல் ‘நடிப்பு’ என்கிற தொழிலுக்கு விசுவாசமாக இருந்தார். கடைசிக் காலத்தில் சினிமா வாய்ப்புகள் குறைந்தபோது தமிழ், மலையாளம் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஸ்ரீவித்யாவின் மரணத்தை கேரளா பெரும் இழப்பாக எடுத்துக் கொண்டது. அம்மாநில முதல்வர் அச்சுதானந்தன், “ஸ்ரீவித்யா பிறப்பால் தமிழராக இருக்கலாம், ஆனால் அவரை கேரளா மகளாக தத்தெடுத்துக் கொண்டது” என்றுகூறி இருபத்தோரு குண்டுகள் முழங்க அரசு மரியாதையோடு தகனம் நடத்த ஏற்பாடு செய்தார்.

ஒரு நடிகையின் மறைவுக்கு அரசு மரியாதை என்கிற மாபெரும் கவுரவத்தை தான் சார்ந்த தொழிலுக்கு செத்த பிறகும் பெற்றுத் தந்தவர் ஸ்ரீவித்யா.

(நன்றி : தினகரன் வசந்தம்)

தீர்ப்பு யாருக்கு சாதகம்?

$
0
0
முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

ஜெ, விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தருகிறது (திமுக தலைவருக்கும் அப்படிதான் இருக்குமென்று யூகிக்கிறேன்).

இந்திய நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளக்கூடிய நிலை இன்று நிச்சயமாக இல்லை.பலகீனமான நீதித்துறை என்று ஜெ.வுக்கு தண்டனை அளித்தபோது நாம் விமர்சித்தபோதுநம்மை திட்டித் தீர்த்தவர்கள், இன்று அதை ஒப்புக் கொள்வார்கள். பதினெட்டு ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுக்கு செல்லுமேயானால் இறுதித் தீர்ப்பினை பெற இன்னும் நூற்றி எண்பது ஆண்டுகள் கூட ஆகலாம்.

இந்தியாவில் ‘நக்சல்பாரிகள்’ உருவாவதற்கான அத்தனை நியாயங்களையும் இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களுமே உருவாக்கி வைத்திருக்கின்றன.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டுகள் கூட முழுமையாக இல்லாத நிலையில் வந்திருக்கும் குமாரசாமியின் தீர்ப்பு, தமிழகத்தில் எந்தெந்த கட்சிகளுக்கு என்னமாதிரியான சாதகபாதகங்களை ஏற்படுத்தக்கூடும் என்று பார்ப்போம்.

இது, அதிமுகவுக்கு ஆதரவான தீர்ப்பாக அதிமுகவின் அடிமைகள் (தொண்டர்கள் என்கிற சொல், இக்கட்சியைப் பொறுத்தவரை சரியான பொருளில் வராது) எண்ணலாம். மாறாக, இத்தீர்ப்பால் அதிக பலன்களை அறுவடை செய்ய இருப்பது திமுகவே என்று தோன்றுகிறது.

கடந்த தேர்தலில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுகவுக்கு எதிராக பிரயோகித்த ஆயுதம் ஊழல். திமுக அதனாலேயே படுதோல்வி அடைந்து, அக்கட்சியின் பல்வேறு மட்டத் தலைவர்கள் நிலஅபகரிப்பு / சொத்துக்குவிப்பு வழக்குகளை மாவட்டம் தோறும் சந்தித்து வருகிறார்கள். தேசிய அளவில் 2ஜி உள்ளிட்ட கத்திகளும் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டு அவ்வப்போது அச்சமூட்டுகிறது. இந்த வழக்குகளோடு தேர்தலில் மக்களை சந்திக்க நேரவேண்டிய சங்கடம், குமாரசாமியால் அடியோடு துடைக்கப்பட்டிருக்கிறது.

அம்மா ‘உள்ளே’ எனும் நிலை இருந்தால், 91ல் ஏற்பட்டிருந்த அனுதாப அலையை போன்ற சுனாமியை எதிர்கொண்டாக வேண்டிய நெருக்கடி திமுகவுக்கு இருந்திருக்கும். “ஆயிரம்தான் இருந்தாலும் ஒரு பொம்பளையை கருணாநிதி உள்ளே தள்ளியிருக்கக் கூடாது” என்கிற தமிழர்களின் இரக்க மனோபாவத்தை வெல்ல திமுக ஏழு கடல், ஏழு மலையை கடக்கவேண்டிய சிரமத்தை அடைந்திருக்கும். இப்போது அம்மாதிரி தொல்லைகள் இல்லாமல், கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியின் அவலங்கள், ஊழல் முறைகேடுகள், வளர்ச்சியற்று ஸ்தம்பித்துவிட்ட நிர்வாகம், விலைவாசி உயர்வு என்றெல்லாம் மக்களுக்கு ‘பிடித்தமான’ சப்ஜெக்ட்டுகளை பிரச்சாரத்தில் பேசக்கூடிய சுதந்திரம் அக்கட்சியினருக்கு கிடைத்திருக்கிறது. ஏற்கனவே ஸ்டாலின் சலங்கை கட்டி ஆடுவார். இத்தீர்ப்பு வெளிவந்திருக்கும் சூழலில் ருத்திரத் தாண்டவம் ஆடக்கூடிய வாய்ப்பு அவருக்கு.

அதிமுகவைப் பொறுத்தவரை அம்மா வெளியே வந்துவிட்டார் என்பதுதான் லாபம். அம்மா, நீதியை வென்று வெளியே வந்தார் என்று அவர்களால் மக்களுக்கு நிரூபிக்க முடியாது. “கோர்ட்டில் பணம் விளையாடிடிச்சி...” என்று பேசும் மக்களிடம், தங்களை நிரூபிக்கவே அவர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு தாவூ தீரும்.

திமுகவுக்கு எதிராக மாறிக்கொண்டிருந்த தமிழ் நடுத்தர வர்க்கத்து மனோபாவம், இந்த தீர்ப்பால் திடீர் தடை பெற்றிருப்பதுதான் அதிமுகவுக்கு நிஜமான இழப்பு. குமாரசாமியின் தீர்ப்பினை, ஊழலற்ற இந்தியா கனவில் மிதக்கும் ‘ஜெய் ஹோ’ தலைமுறை ரசிக்கப் போவதில்லை. கடந்த தேர்தலில் முதன்முறையாக வாக்களித்த இந்த மாபெரும் கூட்டம், இரட்டை இலைக்கு வாக்கு இயந்திர பொத்தான்களை சரமாரியாக அமுக்கித் தள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.

நியாயமாக இந்த சூழலில் அமோக அறுவடை செய்யவேண்டியது, சட்டமன்ற எதிர்க்கட்சியான தேமுதிகதான்.

ஆனால்-

கடந்த தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்ததால்தான் விஜயகாந்த் வெல்ல முடிந்தது என்கிற பொதுக்கருத்தை தவறென்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி இருக்கிறது. அதற்காக தனியாக போட்டியிட்டு, ‘கெத்து’ காட்ட நினைத்தால், நிலைமை என்னாகும் என்று விஜயகாந்துக்கும் தெரியும், பிரேமலதாவுக்கும் தெரியும்.

பாஜக கூட்டணியில் இன்னமும் தேமுதிக நீடிக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்கு இந்த கூட்டணி வலுவானது அல்ல. அதற்காக திமுகவோடு கூட்டணி வைத்துக் கொண்டால், எதிர்காலத்தில் எப்போதுமே முதல்வர் கனவு காணமுடியாது. அப்படியொரு நிலைமை ஏற்படும் பட்சத்தில் இன்றைய பாமகவுக்கான இடம்தான் எதிர்காலத்தில் தேமுதிகவுக்கும்.

எப்படிப் பார்த்தாலும் இந்த தீர்ப்பை சாதகமாகவோ/பாதகமாகவோ எடுத்துக்கொள்ளக் கூடிய நிலையில் தேமுதிக இல்லை. அரசியல் ஆற்றில் அதுவாக அடித்துச் செல்லப்படும் தேமுதிக எதைப் பிடித்து கரையேறும் என்பது சஸ்பென்ஸ். ஒருவேளை கடந்த தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி காட்டாமல் தனியே நின்றிருந்தால், இன்றைய நிலைமை தேமுதிகவுக்கு அட்டகாசமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்திருக்கும்.

காங்கிரஸைப் பொறுத்தவரை இம்முறையும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை சொல்ல வித்வான் வே.லட்சுமணன் தேவையில்லை. திமுக அல்லது அதிமுக என்று இரண்டு பிராதனக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றோடு கூட்டணி சேர முடிந்தாலே, அது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்யக்கூடிய உலகசாதனையாக இருக்கும்.

அகண்ட பாரத கொள்கை கொண்ட பாஜகவால், இன்னமும் அகண்ட பாஜக ஆவதற்கே முட்டுக்கட்டையாக நிற்பது தமிழகம்.

ஜெயலலிதா விடுதலை ஆனது மோடியின் கைங்கர்யம் என்று சாதாரண மக்கள் நம்புகிறார்கள். அருண் ஜெட்லி, போயஸ் கார்டனுக்கு வந்து சொத்துக்குவிப்பு குற்றவாளியாக ஜாமீனில் இருந்த ஜெயலலிதாவை ‘மரியாதை நிமித்தம்’ சந்தித்துவிட்டுச் சென்றதிலிருந்து மாறிய காட்சிகளை அவர்கள் கவனித்திருக்கிறார்கள். இந்த தீர்ப்புக்கு பிரதியுபகாரமாக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கூடுதல் இடம் கொடுத்து தன் கூட்டணியில் அதிமுக சேர்த்துக் கொள்ளும் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

ஒருவேளை அதிமுக கூட்டணியில் பாஜக இணையும் பட்சத்தில், 96ல் நரசிம்மராவ் தமிழகத்தில் பெற்ற படுதோல்வியையே மோடி பெறவேண்டியிருக்கும். இங்கே ஓரளவுக்கு துளிர்த்திருக்கும் பாஜகவை ஒட்டுமொத்தமாக பட்டு போகவைக்கும். இது தமிழக அளவிலான அக்கட்சியின் தலைவர்களுக்கு தெரிகிறது என்றாலும், அதை கட்சி மேலிடத்தலைவர்களுக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பாமக உள்ளிட்ட குட்டிக் கட்சிகளை இந்த ஆட்டத்தில் சேர்க்க வேண்டியதில்லை. எது எப்படி நடந்தாலும் இந்த கட்சிகளுக்கு சாதக/பாதகம் என்பது கடைசி நேரத்தில் எந்த கட்சியோடு போய் ஒட்டிக் கொள்கிறார்கள் என்பதில் மட்டும்தான் இருக்கிறது.

மக்கள் முதல்வராக இருந்து மாநில முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் ஜெயலலிதாவுக்கு முன் இப்போது இருக்கும் பெரிய சவால், தான் பெற்றிருக்கும் இந்த தீர்ப்பு நேர்மையான முறையில் பெற்றது என்பதை நிரூபிப்பதுதான். இதற்குப் பிறகே மற்ற விஷயங்களை பிரச்சாரம் செய்து, அதிமுகவின் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள முடியும். ஆயினும், இது சாத்தியமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

கடைசியாக-

குமாரசாமி கொடுத்திருக்கும் ‘நேர்மையான’ தீர்ப்பின் காரணமாக நிஜமாகவே விடுதலை ஆகியிருப்பவர் நிரந்தர மக்கள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம்தான். முதல்வராக கத்தி மேல் பேலன்ஸ் செய்து நடந்த அவருடைய அரசியல் எதிர்காலம் படு இருட்டாக இருந்தது. இப்போது கண்ணுக்குப் பழகிய இருட்டாக மாறியிருக்கிறது.

ஒரு பயணம்

$
0
0
திருவண்ணாமலையை யாராவது குன்று என்றால் எனக்கு கோபம் வந்துவிடும். உயரமாக இருக்கிறது. அது மலைதான் என்று ஆவேசமாக வாதிடுவேன். மலையை குன்று என்று சொல்வதால் என்ன பெரிய இழவு என்று நினைப்பவர்கள், பாலகுமாரனின் ’பழமுதிர் குன்றம்’ நாவலை வாசிக்கலாம். அல்லது அந்நாவலின் ஒரிஜினல் வெர்ஷனான ’The Englishman Who Went Up a Hill But Came Down a Mountain’ திரைப்படத்தைப் பார்க்கலாம். பாலகுமாரனின் நாவலில் வரும் மலை, திருவண்ணாமலைக்கு அருகில் இருப்பதாகதான் சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் திருவண்ணாமலை எனக்கு சொந்த ஊர் அல்ல. அந்த மாவட்டத்தில் இருக்கும் வந்தவாசியிலும் அதைச்சுற்றியிருக்கும் தாழம்பள்ளம், மருதாடு போன்ற கிராமங்களிலும் சில உறவினர்கள் இருக்கிறார்கள். அவ்வளவுதான். திருவண்ணாமலை மீது ஏற்பட்டிருக்கும் இருக்கும் நிபந்தனையில்லா ஈர்ப்புக்கு என்ன காரணமென்று தெரியவில்லை. நிச்சயமாக பக்தி அல்ல.

எஸ்.ராமகிருஷ்ணனுக்காவும், வேடியப்பனுக்காகவும் நேற்று அங்கே செல்ல வேண்டியிருந்தது.

பைக்கில் 100 கி.மீ.க்கு மேல் லாங்ரைட் அடித்து நீண்ட காலமாகி விட்டது. கடைசியாக போனது ’தடா’வுக்கு. அதற்கு முன்னர் புதுச்சேரி. லாங் பைக் ரைட் என்பது காமம் மாதிரி. ஒருமுறை அறிமுகமாகி விட்டால் விடாது கருப்பு.

நான் முதன்முதலாக ஓட்டு போட்ட சட்டமன்றத் தேர்தல் 1996ல் தமிழகத்தில் இருகட்டமாக நடந்தது (பதினெட்டு வயதில் ஓட்டுரிமை வாங்கிய பர்ஸ்ட் செட்டு நான்). விழுப்புரத்துக்கு அந்த பக்கமாக முதல் கட்டத் தேர்தல். சில நாள் இடைவெளியில் சென்னையிலும், வடமாவட்டங்களிலும் தேர்தல். லைவ்வாக தேர்தலை பார்க்க சென்னையிலிருந்து மதுரைக்கு ஜாகிர் என்கிற நண்பர் ஒருவரோடு KB100ல் கிளம்பினேன். ஜி.எஸ்.டி. ரோடு, இப்போதைபோல நவீனமடைவதற்கு முன்பு பள்ளமும், மேடுமான சாலைகளில் கடினப் பயணம். மாலை 6 மணிக்கு மேலூர் போய் சேர்ந்தபோது உடம்பின் அத்தனை எலும்புகளும் தடதடத்துப் போயிருந்தது. அன்று பிடித்த லாங் டிரைவ் பேய் இன்றுவரை ஆட்டிக் கொண்டிருக்கிறது. பைக் பயணம் பிடித்துவிட்டவர்களுக்கு பஸ், ரயில்... ஏன் விமானப் பயணம் கூட போர் அடிக்கும்.

திருவண்ணாமலைக்கு பைக்கில் பலமுறை போயிருக்கிறேன். ஹரி அண்ணனோடுதான் அடிக்கடி. அவர் பவுர்ணமிதோறும் கிரிவலம் வருவார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு Adreno என்கிற அட்டகாசமான பைக்கில் போனதுதான் முதல் தடவை.

கடைசியாக அங்கு போய் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. வயசாகிவிட்டது. இருந்தாலும் இம்முறை பைக்தான் என்று ஆவேச முடிவுக்கு வந்தேன். அண்ணன் சிவராமனும் கூட வருவதாக சொன்னதால் உற்சாகப் பயணம்.

அக்னிநட்சத்திரம் என்கிறார்கள். தாம்பரம் தாண்டியதுமே மார்கழி மாதிரி பயங்கர பனி. ஐந்தரைக்கு தாம்பரம். எட்டு மணிக்கு திண்டிவனத்தில் டிஃபன். அறுபதுக்கு மேல் விரட்ட அச்சமாக இருந்தது. அரிதான சந்தர்ப்பங்களில் மட்டும் எண்பதை எட்டினேன். ஒரு காலத்தில் யமஹா ஓட்டும்போது அசால்டாக நூறு. BOXER 150க்கு அவ்வளவு துப்பில்லை. நான் முன்பு வைத்திருந்த CD DAWN கூட மவுண்ட்ரோட்டிலேயே நூறை ஒருமுறை எட்டியிருக்கிறது (ஆனால், தரைக்கு அரை அடி மேலே ஓடியது போல சுத்தமாக பேலன்ஸ் இல்லை).

டிராவல்ஸ் கார்கள் நூறில் பறக்கின்றன என்றால் ஒயிட்போர்டு வண்டிகள் காஞ்சனாக்கள் மாதிரி நூற்றி இருபது. நம் வண்டியை கடக்கும்போது கிறுகிறுக்கிறது. சட்டென்று லெஃப்டிலோ, ரைட்டிலோ இண்டிகேட்டர் போட்டு நொடிகளில் ஓவர்டேக் அடிக்கிறான்கள். லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளை கடக்கையில், இந்த ஓவர்டேக் வெறியன்களிடம் சிக்கி சாண்ட்விச் ஆகிவிடுமோ என்று அடிவயிற்றிலிருந்து அச்சம் கிளம்புகிறது.

வழியெங்கும் காண்கையில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் குறித்து திமுகவினர் உற்சாகமான மனநிலையில் இருப்பது பேனர்களிலும், சுவர் விளம்பரங்களிலும் தெரிகிறது. அம்மா விடுதலை ஆகிவிட்டாலும் அதிமுகவினரிடம் அவ்வளவு ஜரூர் இல்லை. சேர்த்துவைத்த கஜானாவை இழுத்து மூடியிருக்கிறார்கள். கூடுவாஞ்சேரி-நந்திவரம் அதிமுகவினர் மட்டும் சக்திக்கு மீறி செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வடமாவட்டங்களில் வலுவாக காலூன்றியிருந்த தேமுதிக, இப்போது இருப்பதற்கான சுவடுகளே இல்லை. பாமகவை மொத்தமாக காலி செய்திருப்பது மட்டுமே கேப்டனின் சாதனை. காங்கிரஸ், தமாக கட்சிகள் தமிழகத்தில் இருப்பதற்கான சான்றுகளை இந்த பயணத்தில் காணமுடியவில்லை. எல்லா ஊரிலுமே மார்க்சிஸ்டுகள் ஏதாவது ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சுற்றுச்சூழல் கொஞ்சம் சரியாகி இருக்கிறது போல. அல்லது குளோபல் வார்மிங் வார்னிங் எல்லாம் புட்டுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. வறண்டுபோன தரிசுகளில் பசுமை. மலைகளில் நிறைய மரங்கள் வளர்ந்திருக்கின்றன. கிணறு, ஏரியெல்லாம் வற்றிவிட்டாலும் ‘போர்’ போட்டு, எப்படியோ விவசாயம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். போர்வெல்லுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவந்தால் பெரும் கொந்தளிப்பை அரசு எதிர்கொள்வது நிச்சயம்.

இந்த சுற்றுச்சூழல் அவதானிப்பில் சந்தேகம் இருப்பவர்கள் கத்திப்பாரா மேம்பாலத்தில் நின்றுகொண்டு புனித தோமையர் மலையை பார்க்கலாம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கரும்பாறைகளோடு கரேல் என்றிருந்த குன்று, இன்று முழுக்க வனம் மாதிரி மரங்களை வளர்த்து பசேலென்று இருக்கிறது. வட மாவட்டம் முழுக்கவே இந்த பசுமைப்புரட்சி எப்படியோ ஏற்பட்டிருக்கிறது. போனமுறை காஞ்சிபுரம் போனபோது பார்த்தேன். மீண்டும் நிறைய விவசாயிகள் உருவாகியிருக்கிறார்கள். ஒருவேளை விவசாயம் லாபகரமான தொழிலாக மாறியிருக்க வேண்டும். நவீன முறைகள் மூலம் முன்பிருந்த தடைகளை வெல்ல விவசாயிகள் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்.
திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை சாலை பயங்கர பேஜார். ஒரு கி.மீ.க்கு ஒருமுறை பூகம்பம் வந்திருக்கிறது. பள்ளத்தில் விட்டு வண்டியை கீர் மாற்றி எடுக்கும் ஒவ்வொரு வாகன ஓட்டியும் ‘அம்மா வாழ்க, குமாரசாமி வாழ்க’ என்று கோஷம் எழுப்புகிறான். தட்டு தடுமாறி போய் சேரும்போது மணி பதினொன்று. பவா செல்லதுரையின் அட்டகாசமான பண்ணையில் அருமையான இளைப்பாறல்.

ரெண்டு மணி வாக்கில் வடக்கின் வானத்தை பார்த்தபோது பயமாக இருந்தது. பிரளயம் கொண்டுவரும் கருமேகங்கள். சென்னைக்கு திரும்புவது கஷ்டமாகி விடும் போல தெரிந்ததும், நிகழ்வை முடிக்காமல், சாப்பிடாமல்கூட அவசரமாக சொல்லிவிட்டு மூன்று மணிக்கு கிளம்பிவிட்டோம்.

அதே செஞ்சி ரோட்டில் பயணிப்பதை யோசித்தால் அய்யோவென்றிருந்தது. அங்கிருந்த நண்பர் ஒருவர் அவலூர் ரூட்டை சொல்லியிருந்தார். பெங்களூர் செல்லும் பைபாஸில் அவலூர் தாண்டி இடையில் இளைப்பாறுதலுக்காக முட்டைதோசை தள்ளினோம். சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது கடைக்காரர் நடுரோட்டில் பூசணிக்காய் உடைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். நாம் சாப்பிட்டதால் கடைக்கு என்ன திருஷ்டி பட்டுவிடப் போகிறது என்று குழம்பினால், நேற்று அமாவாசையாம்.

சேத்பட்டை எட்டும்போதே அருகில் தெரிந்த கிளிமூக்கு மலை ஒன்றின் பாறை முகட்டை கருப்பான மேகங்கள் உரசிக் கொண்டிருந்தது. நெடுங்குணத்தை கடக்கும்போது பிசாசு மழை. ஓரங்கட்டி ஒரு மணி நேரம் நகத்தை கடித்துக் கொண்டிருந்தோம். சும்மா மொபைலை நோண்டி ஏதோ ஒரு அப்ளிகேஷனைப் புரட்டிக் கொண்டிருந்தால், நான் நெடுங்குணத்தில் வாட்டர் டேங்குக்கு கீழே கோழிக்குஞ்சு மாதிரி குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பது அமெரிக்காகாரனுக்கு சேட்டிலைட் மூலம் தெரிந்திருப்பதை உணர்ந்தேன். மொபைல் வைத்திருப்பவனுக்கு பிரைவஸியே கிடையாது. அங்கிருந்து மடிப்பாக்கம் 108 கி.மீ. என்று ஆறுதல் சொன்னான் (ஆக்சுவலி morethan 150 km. நம் அதிகாரிகள் யாரோ லஞ்சம் வாங்கிக்கொண்டு தப்பான தகவல்களை கூகிள் மேப்ஸுக்கு கொடுத்திருக்க வேண்டும்).

மழை கொஞ்சம் குறைந்து தூறத் தொடங்கியிருந்தது. மருவத்தூர் பைபாஸை எட்டினால்தான் நிம்மதி என்று பயணத்தைத் தொடர ஆரம்பித்தோம். கொடூரமான இருள். பயமுறுத்தும் மின்னல். நசநசவென தூறிக்கொண்டிருந்த மழை. பயங்கர குளிர். எதிரில் சரியான விஷன் இல்லை. எதிர்ப்படும் வண்டிகளின் விளக்கு வெளிச்சம் மழையில் கொடுத்த க்ளேர் வேறு கண்களை துன்புறுத்தியது. நாற்பது, ஐம்பது என்று மாட்டுவண்டி மாதிரி ஓட்டிக்கொண்டு வந்தவாசி வந்து சேர்ந்ததும்தான் உயிர் வந்தது. அங்கிருந்து மேல்மருவத்தூர் 30 கி.மீ.க்கு ஓரிரு கி.மீ. குறைவுதான். “ரோடு சூப்பர் சார்” என்று வந்தவாசிகாரர் வழி சொல்லி அனுப்பினார். ‘சூப்பர்’ என்றால் அவருடைய அகராதியில் என்ன அர்த்தமென்று தெரியவில்லை. செஞ்சி சாலை அளவுக்கு இல்லாவிட்டாலும் இதுவும் கொஞ்சம் மோசம்தான். இருட்டில் இரண்டு, மூன்று பள்ளங்களில் தொபுக்கடீர் என்று இறக்கி ஏற்றினாலும் பஜாஜ்காரனின் அட்டகாசமான சஸ்பென்ஷன் காப்பாற்றியது.

சோத்துப்பாக்கம் வழியாக மருவத்தூரை எட்டிய பிறகுதான் திராட்டலை கூட்டவே முடிந்தது. வழியெங்கும் ‘கும்பகோணம் டிகிரி காஃபி’ என்று போர்ட் வைத்திருக்கிறார்களே, குடிக்கலாம் என்று தேடினால் எல்லா பயலும் நாங்கள் வருவதையொட்டி கடையை மூடிவிட்டான் போலிருக்கிறது. நாற்பது கி.மீ.க்கு அந்தபுறமாக அப்படி மழை அடித்துக் கொண்டிருக்கிறது, இங்கே மழை என்பதற்கான சுவடுகளே இல்லை. முழுக்க நனைந்தும், முக்காடு போடாமல் வந்துகொண்டிருந்த எங்களை மெண்டல் மாதிரிதான் ஃபுல் மேக்கப்பில் இருந்த செவ்வாடை தொண்டர்கள் நினைத்திருக்கக்கூடும். சிவராமன் வேறு சிகப்புச்சட்டை போட்டிருந்தார்.

எட்டரை வாக்கில் ஜி.எஸ்.டி.யை அடைய முடிந்துவிட்டதால் ‘மேட் மேக்ஸ்’ மாதிரி வண்டியை விரட்ட முடிந்தது. பத்தரைக்கு வீட்டுக்கு வந்துவிட்டேன். மீட்டரை பார்த்தபோது 398 கி.மீ. பயணித்திருப்பது தெரிந்தது. எந்த சோர்வுமின்றி இப்போது அலுவலகத்துக்கு வர முடிந்திருக்கிறது. முதுகுவலி மாதிரி எந்த சைட் எஃபெக்டும் இல்லை. இன்னும் அவ்வளவு வயசாகவில்லை என்று உற்சாகமாகவும் இருக்கிறது. என்ஃபீல்ட் எடுத்ததுமே பர்ஸ்ட் ட்ரிப்பாக ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ கிளம்பிவிட வேண்டும்.

அம்மா ரசிகர் மன்றம்!

$
0
0
தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தபோது அவருக்கு ரசிகர் மன்றம் இருந்ததோ என்னமோ.

அந்த குறை நீங்க இப்போது பத்திரிகையாளர்கள் அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கத் தொடங்கி இருப்பதாக தெரிகிறது. ‘பொழைப்பு’ காரணமாக ஐடி கார்டு இல்லாமல், விசிட்டிங் கார்டு மட்டும் வைத்திருப்பவர்கள் செய்வதை புரிந்துக் கொள்ள முடிகிறது. மற்றவர்கள்?

கண்ணாடி வீட்டுக்குள் இருந்துக்கொண்டு கல்லடிப்பது கொஞ்சம் கஷ்டமாகதான் இருக்கிறது. எனினும், எவ்வளவு நாளைக்குதான் ‘நடுநிலை’ நாயகர்களை சகித்துக்கொண்டிருக்க முடியும். தங்களுடைய சார்பை வெளிப்படையாக முன்வைத்துவிட்டு எழுதும் பத்திரிகையாளர்கள் ‘அவன் திமுகவாச்சே?’, ‘அவன் அதிமுகவாச்சே?’, ‘அவன் கம்யூனிஸ்ட் ஆச்சே?’, ‘அவன் ஆர்.எஸ்.எஸ் ஆச்சே?’ என்று ஆட்டையில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் ‘நடுநிலை’ போர்வை உடுத்தியவர்களை ஒப்பீனியன் மேக்கர்களாக ஒரு சிலராவது நம்புகிறார்கள்.

மிக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மே 11 அன்று காலையில் ‘ஜெ. விடுதலை’ என்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டதில் தொடங்கி, அடுத்தடுத்து குமாரசாமியின் தீர்ப்பை நியாயப்படுத்தும் சில கருத்துகளை தொடர்ச்சியாக முன்வைத்துக் கொண்டிருந்தார். நீதியரசரின் உலகப் புகழ்பெற்ற ‘கணக்கு மிஸ்டேக்’ வெளிவரும் வரை இது தொடர்ந்துக் கொண்டிருந்தது. ஒரு பத்திரிகையாளர் மிக முக்கியமான தீர்ப்பு வரும்போது அது தொடர்பான பதிவுகளையும், தன்னுடைய சொந்த கருத்துகளையும் பதிவது இயல்பானதுதான்.

ஆனால்-

ஆர்வம் தாங்காமல் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று அவர் என்ன ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார் என்று தேடிப்பார்த்தேன். மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பை விமர்சனம் செய்த ஒருவரின் ஸ்டேட்டஸை ரீஷேர் செய்ததோடு கடமையை முடித்துக் கொண்டுவிட்டார். அன்றைய அவருடைய மற்ற இரண்டு ஸ்டேட்டஸ்களில் ஒன்று கூகிளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறது. சி.பி.எஸ்.ஈ பள்ளிகளிலும் மாணவர்கள் கட்டாயம் தமிழை வாசிக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டிருப்பதை பற்றி மற்றொரு ஸ்டேட்டஸ். அவ்வளவுதான்.

இன்னொரு மூத்த பத்திரிகையாளர். பெண் பத்திரிகையாளர் ஒருவர் குமாரசாமியின் தீர்ப்பை விமர்சிப்பவர்களை நோக்கி பார் கவுன்சில் மிரட்டியிருந்த செய்தியை அப்படியே எடுத்துப் போட்டிருந்தார். அங்கே கமெண்டில் போய் நம் மூத்தப் பத்திரிகையாளர் கேட்கிறார். “ஸ்டாலினின் ஊழல் கதையை உங்கள் பத்திரிகையில் போட்டதின் விளைவா? அப்படியே முரசொலி எழுத்தாளர் ஆகிவிட்டீர்களா?”. அவ்வளவுதான். பிரச்சினையை பேசுவதைவிட்டு பெண் பத்திரிகையாளர் தன் நடுநிலைமையை அந்த மூத்தப் பத்திரிகையாளருக்கு நிரூபிக்க தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியதாயிற்று.

இன்னொரு இளம் பத்திரிகையாளர், நண்பர்தான். தீர்ப்பு வந்த குஷியில் வரிசையாக அம்மா புகழ் மேளா. கமெண்டில் போய் சண்டை போட்டு நீதி கேட்க ஆரம்பித்தேன். மறுநாள் கணக்கு குளறுபடி விவகாரம் வந்தபிறகுதான் அவர் மீண்டும் நடுநிலை பாதைக்கு வரமுடிந்தது.

ஒரு மாதமிருமுறை பத்திரிகையின் போஸ்டர் வாசகம் “தீயசக்திகளை வென்ற தெய்வசக்தி”.

ஒரு வாரப்பத்திரிகையின் தலையங்கம் பார்த்தேன். அதிமுக தலைமைக்கழகத்தின் அறிக்கை மாதிரி இருக்கிறது.

‘ஒரு அரசியல்வாதி நீதிமன்றத்தில் அல்ல. மக்கள் மன்றத்தில் வீழ்த்தப்பட வேண்டும்’ என்று ஒரு நாளிதழ் கட்டுரை ஜனநாயகம் பேசுகிறது. பர்சனலாக, இது எனக்கு ஏற்புடைய கருத்துதான் என்றாலும்கூட அரசியலமைப்புச் சட்டம், நீதிமன்றம் எல்லாம் எதற்கு இருக்கிறது. கோழி திருடியவனையும், பிக்பாக்கெட் அடித்தவனையும் விசாரிக்க மட்டும்தானா என்கிற அடிப்படைக் கேள்வியும் எழுகிறது.

அந்த நாளிதழ் கட்டுரையின் தொடக்கம் விசித்திரமானது. “எதிர்க்கட்சிகளின் அந்தராத்மாவிடம் கேட்டால், அதுகூட சொல்லும், ‘இன்றைய சூழலில் மீண்டும் அதிமுகதான் ஆட்சியைப் பிடிக்கும்’ என்று.” திருச்செந்தூரில் அம்மாவுக்காக ராஜினாமா செய்வேன் என்று அனிதாராதாகிருஷ்ணனே கூட ‘பூடகமாக’தான் சொன்னார். இந்த கட்டுரை அவ்வளவு வெளிப்படையானது.

அதே கட்டுரை ஸ்ரீமான் நரேந்திர மோதி அவர்கள் பதவியேற்ற ஓராண்டிலேயே இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயகம் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக ‘தகுதி’ பெற்றிருக்கிறது என்று இன்னொரு மாங்காயும் அடிக்கிறது. தமிழக சட்டமன்றம் அத்தகைய மாண்பினை பெறாமல் போனதற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறது. கட்டுரையின் நடுநிலை தவறிவிடக்கூடாது என்று முதல்வரும், அரசாங்கமும், ஆளுங்கட்சியும் உறைநிலையில் இருக்கிறார்கள் என்று தீர்க்கமாக விமர்சிக்கப்படுகிறது. நன்கு கவனிக்கவும். புரட்சித்தலைவி, எதிர்க்கட்சிகளின் பொய்வழக்கால் இதெல்லாம் முடங்கிப் போயிருக்கிறது. அவர் வந்துவிட்டால் சரியாகிவிடும் என்பதை நாம் between the linesல் தான் வாசித்தாக வேண்டும். ஏனெனில் கட்டுரையாளர் ஏற்கனவே ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து இறங்கி விட்டதால்தான் (அவராகவே இறங்கினார் என்பதை போன்ற தொனியில்) எல்லாம் முடங்கிவிட்டது என்று தெளிவாகவே எழுதுகிறார்.

சட்டமன்ற ஜனநாயகத்தை எதிர்க்கட்சிகளுக்கு போதிக்கும் அந்த கட்டுரையாளர், சபை உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் 110 விதியின் கீழ் 110 அறிவிப்புகளையாவது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சமர்ப்பித்திருப்பார் என்பதை அறிவாரா? மாண்புமிகு சபாநாயகர் தனபால் அவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களை எப்படி நடத்துகிறார் என்பதை டிவியிலாவது பார்த்திருப்பாரா?

மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் கொடுத்திருக்கும் தீர்ப்பிலேயே கூட்டல் தப்பாக இருக்கிறது. அதைப்பற்றி எந்த கவலையுமில்லாத கட்டுரையாளர் எதிர்க்கட்சிகளை வர்ணிக்க கீழ்க்கண்ட சில வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.

  • விஜயகாந்த் - செயல்படா எதிர்க்கட்சித் தலைவர் (முன்பு புரட்சித்தலைவி நரசிம்மராவை செயல்படா பிரதமர் என்று விமர்சித்தது நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல)
  • திமுக – பெயருக்கு போராட்டம் நடத்தும் / போராட மறந்துவிட்ட கட்சி
  • காங்கிரஸ், பாமக, மதிமுக, இடதுசாரிகள், பாஜக – அறிக்கை அரசியல்; பாவனை அரசியல்; உள்ளேன் ஐயா அரசியல்
  • ஜெயலலிதா விடுதலைக்குப் பின் மேல் முறையீடுக்காக கர்நாடகத்துக்கு ‘காவடி தூக்குவது’ அரசியல் அவலம்
  • ஜெயலலிதா இல்லாத இடத்தில் அரசியல் கட்சிகள் கம்பு சுற்ற ஆசைப்படுகின்றன
  • ஜெயலலிதா வழக்கையே அரசியல் கட்சிகள் கட்டிக்கொண்டு அழுவது அருவெறுக்கத்தக்கது
- ஜெயலலிதா என்பதற்கு பதில் டாக்டர் புரட்சித்தலைவி என்று குறிப்பிடாதது ஒன்று மட்டும்தான் குறை. இதெல்லாம் நாஞ்சில் சம்பத் ஜெயாடிவியில் பேசியவை அல்ல. ஒரு ‘நடுநிலை’ நாளிதழில் வெளிவந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் வாசகங்கள்.

இப்படியாகதான் பெரும்பாலான பத்திரிகைகயாளர்கள் நமது எம்.ஜி.ஆர் நிருபர்களாகவும், ஜெயா டிவி செய்தியாளர்களாகவும் இருக்கிறார்கள்.

தோழர்களே, புரட்சித்தலைவி பேரவையில் சேரும் உரிமை நம்மில் ஒவ்வொருவருக்குமே உண்டு. ஆனால் அந்த பணிகளை அங்கு சேராமலேயே பசுத்தோல் போர்த்திக்கொண்டு மக்கள் மத்தியில் செய்வது அநியாயம். பாவம், மக்களை அரசியல்வாதிகளில் தொடங்கி ஆட்டோகாரர் ஏற்கனவே ஏமாற்றி ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த லிஸ்டில் நட்டநடு சென்டர் மீடியா பர்சனாலிட்டிகளும் சேரவேண்டுமா?

தற்கொலைப் பாதையில் தமிழ் சினிமா?

$
0
0
தயாரிப்பாளர் ஜூ.வி. தற்கொலை செய்துக் கொண்டார்.

ஏவி.எம். ஏன் அமைதியாக இருக்கிறது?

தொண்ணூறுகளின் பிரம்மாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் எங்கு போனார்?

அசைக்க முடியாத ஆள் என்று பெயரெடுத்த ஆஸ்கர் மூவிஸ் ரவிச்சந்திரனை வங்கிகள் ஏன் மிரட்டுகின்றன?

சூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்னம் ரத்தக்கண்ணீர் வடித்த கதையெல்லாம் தெரியுமா?

லஷ்மீ மூவி மேக்கர்ஸ் என்ன ஆயிற்று?

ரோஜா கம்பைன்ஸ் இப்போது எங்கிருக்கிறது?

சத்யஜோதி ஃபிலிம்ஸ் எங்கே?

பிரமிட் சாய்மீரா என்ன ஆனது?

செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன்?

அழகன் தமிழ்மணி?

ராஜ் பிலிம்ஸ் ராமநாதன்? கோவைத்தம்பி?

‘வின்னர்’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர், இப்போது துணை நடிகராக துண்டு துக்கடா வேடங்களில் நடிப்பது ஏன்?

யோசித்துக் கொண்டே போனால் இந்த பட்டியல் செஞ்சுரி அடிக்கும். வடபழனியில் மொட்டை போட்டுக்கொண்டு, வெயிலுக்கு தலையில் துண்டு போட்டுக் கொண்டு கோடம்பாக்கம் தெருக்களில் ஹவாய் செருப்பு தேய நடந்துக் கொண்டிருப்பவர்கள் யாரென்று நினைக்கிறீர்கள்? நம்ம தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்தான்.

உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்காவது மிஞ்சும். சினிமா தொழிலில் அதுகூட கிடைக்காது. ஊரை சுற்றி வட்டிக்கு வாங்கிய கடன்தான் கழுத்தை நெறிக்கும்.

இன்னும் நாலு ஹிட் கூட கொடுக்காத இளம் ஹீரோ ஒருவர் பத்து கோடி சம்பளம் கேட்பதாக சொல்கிறார்கள். இத்தனைக்கும் அவர் நடித்த கடைசி இரண்டு படங்கள் அட்டர் ஃப்ளாப். ஹீரோவின் கவுரவத்தை காக்க தியேட்டரில் ஆள் வைத்து ஈ ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் வசூல் வரலாற்றில் மறக்க முடியாத படங்களான ‘முரட்டுக்காளை’யும், ‘சகலகலா வல்லவ’னும் ரிலீஸ் ஆனபிறகும் ரஜினியும், கமலும் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்று யாராவது ‘இந்த’ புதிய ஸ்டார்களுக்கு எடுத்துச் சொன்னால் தேவலை.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

பொள்ளாச்சிக்கு அருகில் அந்த படத்தின் ஷூட்டிங். தயாரிப்பது பாரம்பரியமான நிறுவனம். நம் படத்தின் வேலைகள் எப்படி போய்க் கொண்டிருப்பது என்று பார்க்க சென்னையிலிருந்து தயாரிப்பாளர் கிளம்பிப் போகிறார்.

தயாரிப்பாளரை ஸ்பாட்டில் கண்டதுமே இயக்குநர் பதறிவிட்டாராம். “நீங்க எதுக்கு சார் இங்கே வந்தீங்க? ஹீரோ கோச்சிக்கப் போறாரு!” என்று விரட்ட ஆரம்பித்தாராம்.

“என்னங்க அநியாயமா இருக்கு. பணத்தை போட்டு படமெடுக்குறது நாங்க. ஒழுங்கா எடுக்கறீங்களான்னு பார்க்க வந்தா ஹீரோ எதுக்குங்க கோச்சிக்கணும்? அவங்க அப்பாவையே வெச்சி படமெடுத்தவங்க நாங்க தெரியுமில்லே” என்று தயாரிப்பாளர் அமைதியாக சொல்லியிருக்கிறார்.

கேரவனிலிருந்து ஹீரோ இறங்கினாராம். தயாரிப்பாளர் அவருக்கு வணக்கம் வைத்திருக்கிறார். தயாரிப்பாளரை பார்த்ததுமே ஹீரோவுக்கு கோபம் (!) வந்து, ‘பேக்கப்’ சொல்லிவிட்டு மீண்டும் கேரவனுக்குள் போய்விட்டாராம். தயாரிப்பாளர் முன்னிலையில் ஹீரோவுக்கு ஹீரோயினுடன் ‘கெமிஸ்ட்ரி’ ஒர்க்கவுட் ஆகாதாம்.

அதிர்ச்சியடைந்துப் போன தயாரிப்பாளர் தலையில் அடித்துக் கொண்டு, “இந்த தமிழ் சினிமா நாசமாதாண்டா போகப் போவுது” என்று மண்ணைத் தூற்றி அப்படியே சென்னைக்கு பஸ் ஏறினார். தியேட்டர்களுக்கு ஒழுங்காக லாபம் வரக்கூடிய படங்களாக வருடா வருடம் மூன்று, நான்கு படங்களை தயாரித்துக் கொண்டிருந்த அந்நிறுவனம் அதன் பிறகு படத் தயாரிப்பையே நிறுத்திக் கொண்டது.

இப்படிதான் தமிழ் திரையுலகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இருப்பதே தோராயமாக 1300 திரையரங்குகள்தான். என்னதான் அப்பாடக்கர் படமாக இருந்தாலும் 700 முதல் 800 தியேட்டர்களில் ரிலீஸாவதே பெரிய விஷயம். எந்திரனோ / தசாவதாரமோ பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரும்.

FMS ஏரியா என்று சொல்லக்கூடிய அயல்நாடுகளில் ஒட்டுமொத்தமாக ஐம்பது, அறுபது தியேட்டர்களில் ஒரு தமிழ் படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தாலே அதிசயம். தெலுங்கில் மார்க்கெட் / இந்தியில் ஃபேமஸ் என்பதெல்லாம் டுபாக்கூர். ஷாருக்கான், அமீர்கானை எல்லாம் கூடதான் தமிழ்நாட்டில் எல்லாருக்கும் தெரியும். அவர்கள் படங்கள் இங்கே ரிலீஸ் ஆனால் கோடி கோடியாகவா வசூல் ஆகிறது?

ஒரு பக்கா கமர்ஷியல் ஹிட் என்பது இங்கே ரூ.50 கோடிதான் வசூலிக்கும். இது, முன் பின் மாறலாம். நகரங்களில் அதிகபட்சமாக (மல்ட்டிப்ளக்ஸ் அரங்குகளில்) ரூ.120 டிக்கெட் கட்டணம், சாதாரண அரங்குகளில் 50, 60 ரூபாய். சிறுநகரங்களில், போஸ்டரிலேயே இரண்டாவது வாரத்திலிருந்து ரூ.20 கட்டணம் என்று கூவிக்கூவி தியேட்டருக்கு அழைக்க வேண்டியிருக்கிறது.

தயாரிப்பு, விளம்பரம், வினியோகம், தியேட்டர் வாடகை, க்யூப்/யூஎஃப்ஓ கட்டணம் என்றெல்லாம் இதர செலவுகள் போக மிஞ்சுவதுதான் ஒரு படம் கொடுக்கக்கூடிய லாபம்.

உண்மை இப்படியிருக்க, ரூ.40 - 50 கோடியில் ஒரு தமிழ் படத்தை எடுத்தால் எப்படி லாபம் கிடைக்கும்? அட, முதலாவது தேறுமா?

பத்து, இருபது, முப்பது, நாற்பது என்று நட்சத்திரங்களுக்கு கோடிகளை தூக்கி கொட்டிவிட்டு வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும், கடைசியாக தனக்கு தானேவும் கூட நாமம் போட்டுக் கொள்கிறார்கள் நம் தயாரிப்பாளர்கள்.

இதுவரை சோலோவாக ஒரே ஒரு ஹிட்டு கூட கொடுக்காத ஒரு ஹீரோ கேட்கும் சம்பளம் நாலு கோடியாம். மூன்று வருடங்களாக ஒரு ஹீரோவுக்கு படமே இல்லை. ஆனால், ‘அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான்’ என்று சொல்லிக் கொண்டு சம்பளமாக பத்து விரல்களையும் விரித்துக் காட்டுகிறாராம்.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ஒரு வெற்றிப்படத் தயாரிப்பாளர் அடுத்து நான்கு படங்களாவது தயாரிக்கக்கூடிய தெம்பில் இருப்பார். இன்றோ ஒரு தயாரிப்பாளர் தன் வாழ்நாளில் மூன்று படங்களை தயாரித்து விட்டாலே அது சாதனைதான்.

இயக்குநர்களின் ரப்ஸர் இன்னொரு கதை. டபுக்கு டபான் டான்ஸ் ஆடுவதற்கு எதற்கு நியூஸிலாந்து லொகேஷன்? சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைக்கு போயும் கூட ஹீரோயினின் மத்தியப் பிரதேசத்தை ஹீரோ முகரும் காட்சிகளைதானே படம் பிடித்து வருகிறார்கள். இதை ஊட்டியிலோ, கொடைக்கானலிலோ எடுத்துத் தொலைத்தால் என்ன?

ஒரு கதைக்கு எது தேவையோ, அதை தவிர்த்து அத்தனை செலவையும் தயாரிப்பாளர்களுக்கு வைக்கிறார்கள். கேட்ட சம்பளத்தைவிட கெஞ்சிப்பேசி கொஞ்சம் குறைத்து ஒப்புக்கொள்ள வைத்த தயாரிப்பாளரிடம் ‘ஒரு மலை முழுக்க சிகப்பு பெயிண்ட் அடிக்கணும்’ என்று சாங் ஷூட்டிங்குக்கு ஓர் இயக்குநர் டிமாண்ட் செய்தாராம். அவ்வளவு பெயிண்டுக்கு எங்கே போவது என்று மண்டைகாய்ந்து, கடைசியில் ஒரு பெயிண்ட் கம்பெனியிடம் பெரிய அமவுண்டுக்கு காண்ட்ராக்ட் பேசி (அந்த கம்பெனியில் இருந்து டைரக்டருக்கு கமிஷனாம்) தயாரிப்பாளர் மாதக்கணக்கில் அலைந்துத் திரிந்து, நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டிருக்கிறார். கடைசியில் சுற்றுச்சூழலை காரணம் காட்டி அனுமதி கிடைக்காததால் தயாரிப்பாளரின் கல்லாப்பெட்டிக்கு அவ்வளவு சேதாரமில்லை.

இதன் பிறகு நடந்ததுதான் பகீர். “நான் கேட்கிறதை எல்லாம் நீங்க செஞ்சிக் கொடுக்க முடியலை. பிராடக்ட் சுமாராதான் வரும்” என்று கைவிரித்து அழவைத்திருக்கிறார் இயக்குநர்.

இதையெல்லாம் கேட்க நல்லாவா இருக்கு?

பதினைந்து ரூபாய் திருட்டு டிவிடிக்கு மக்கள் அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். தியேட்டர்களை இழுத்து மூடி திருமண மண்டபங்களாகவும், ஷாப்பிங் காம்ப்ளக்ஸுகளாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் வருடா வருடம் நூற்றுக்கணக்கான கோடிகளை கொட்டி மோசமான தரத்தில் மொக்கைப் படங்களை எடுத்து வெளியிடுவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. எல்லாப் பிரச்னைகளையும் தற்காலிகமாவது மூட்டை கட்டிவிட்டு தயாரிப்பாளர்களும், படைப்பாளிகளும், கலைஞர்களும் ஒன்று சேர்ந்து தாங்கள் கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி சினிமாவை காப்பாற்ற வேண்டிய நேரமிது. இல்லாவிட்டால் கோவணமும் மிஞ்சாது.

பெரும் அழிவிலிருந்து ஊரையோ / உலகையோ சினிமாவில் ஒரு ஹீரோ காப்பாற்றுவான்.

இது கற்பனைதான். ஆனால், இதேதான் நிஜத்திலும் இப்போது நடந்தாக வேண்டும். அப்போதுதான் திரையுலகம் பிழைக்கும்.

யெஸ், ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அல்லது தயாரிப்பில் பங்கேற்று லாபத்தையோ நஷ்டத்தையோ எது வந்தாலும் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இது ஒன்றும் புதிய யோசனை அல்ல. தெலுங்கு, இந்தியில் தொடங்கி ஹாலிவுட் வரை இப்படித்தான் நடக்கிறது. நம்புங்கள், இந்திக்கு அடுத்தபடி அதிக லாபக் கணக்கு காட்டும் தெலுங்கில், முன்னணி ஹீரோக்களாக இருக்கும் நால்வரின் சம்பளம் படம் ஒன்றுக்கு எவ்வளவு தெரியுமா? ரூ.14 கோடிக்குள்தான்.

தமிழிலும் இந்த நடைமுறை வந்தால்தான் இண்டஸ்டிரி பிழைக்கும்.

(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)

காணாமல் போனவன்

$
0
0
காணாமல் போனவர் குறித்த அறிவிப்பினை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தான் காணாமல் போனவன்.

‘இடது மார்பில் ஒரு ரூபாய் அளவுக்கு மச்சம் இருக்கும்’ என்று அடையாளம் சொல்லியிருக்கிறார்கள். சட்டைப்பைக்குள் கைவிட்டு ஒரு ரூபாய் நாணயம் எடுத்தான். இரு பட்டன்களை கழற்றி மச்சத்தைப் பார்த்தான். அதன் மேல் ஒரு ரூபாய் நாணயம் வைத்தான். ம்ஹூம். மச்சம் இன்னும் பெரியது. பழைய ஒரு ரூபாய் நாணயத்தின் அளவுக்கு இருந்தது.

எதிரில் உட்கார்ந்திருந்தவன் இவனை வினோதமாக பார்த்தான். அவன் தலைக்கு மேலாக கொஞ்சம் தள்ளி டிவி இருந்தது. திரும்பிப் பார்த்திருந்தால் ஒருவேளை இவன்தான் அவன் என்று தெரிந்துக் கொண்டிருப்பான்.

டீக்கடை டேபிள் மீது இருந்த தினத்தந்தியைப் புரட்டினான். ஏழாம் பக்கத்தில் இவனுடைய படத்தோடு ‘காணவில்லை’ விளம்பரம் வந்திருந்தது. அம்மா படுத்த படுக்கையாக கிடக்கிறார். மனைவி பச்சைத் தண்ணீர் கூட அருந்தவில்லை. செல்ல நாய்கள் இரண்டும் உண்ணாவிரதம் இருந்து குலைத்துக்கொண்டே இருக்கின்றன போன்ற அரிய தகவல்களை கொடுத்திருந்தார்கள். காணாமல் போனவன் எந்த சலனமும் இல்லாமல் பேப்பரை மடித்து வைத்தான். குடித்த டீக்கு காசு கொடுத்தான்.

டீக்கடையை விட்டு வெளியே வந்ததும், உடல் எந்த திசை நோக்கி நின்றதோ அந்த திசை நோக்கி நடந்தான். டிவியில் காட்டுகிறார்கள். பேப்பரில் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். ஊரெல்லாம் சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள். ஆனால், இந்த மாநகரில் நான்கு நாட்களாக இவனை கடந்து சென்ற லட்சம் பேரில் ஒருவன் கூட அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

காசுதான் தண்டம். இனிமேல் யாராவது காணாமல் போனால் விளம்பரம் கொடுத்து காசை வீணாக்கக்கூடாது என நினைத்தான். பிறகு தான் என்ன நினைத்தானோ அதற்காக வேதனை அடைந்தான். இவன்தான் காணாமல் போய்விட்டானே. இனி எதற்கு வருங்காலத்தில் காணாமல் போகப்போகிறவர்களை பற்றி கவலைப்பட வேண்டும்.

போக்குவரத்து சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. மனிதன் சுதந்திரமாக நடப்பதைகூட சிக்னல் போட்டு கட்டுப்படுத்துகிறார்கள். சிக்னலில் எந்த பக்கத்துக்கோ பச்சை சுதந்திரம் கிடைத்தது. விரைந்து நகராவிட்டால் உலகம் அழிந்துவிடுமோ என்கிற அவசரத்தில் பைக்குகளும், கார்களும் சீறிப்பாய்ந்தன. அடுத்த பக்கத்தில் எதிர்வாடைக்கு வருவதற்கு சிக்னலுக்காக காத்திருந்தவர்கள் கோட்டை தாண்டி கொஞ்சம் கொஞ்சமாக நத்தை மாதிரி ஊர்ந்துக் கொண்டிருந்தார்கள்.

நடப்பதற்கு அனுமதிக்கப்பட்ட வெளியில் பச்சை சமிக்ஞையை எதிர்ப்பார்த்து இவனுக்கு பின்னால் கூட்டம் சேர ஆரம்பித்தது. அம்மாவின் கைபிடித்து வந்த ஆறுவயது சிறுவன் ஒருவன் சட்டென்று கையை உதறிவிட்டு சுயேச்சையாக இயங்க விரும்பினான். ‘கூட்டத்துலே காணாமப் போயிடுவே’ என்று அம்மா எச்சரித்து, மீண்டும் வலுப்பிடியாக அவனுடைய கையைப் பிடித்தாள். ‘அவன் காணாமதான் போவட்டுமே’ என்று அந்த பெண்மணியை பார்த்து இவன் சொன்னான். முகத்தை கடுகடுவென்று வைத்துக்கொண்டு, ‘பைத்தியம் போலிருக்கு’ என்றாள். சிக்னல் விழ, எல்லோரும் இவனை கடந்துப் போனார்கள்.

மந்தைகளின் மத்தியில் செம்மறியாய் நடப்பதை இவன் வெறுத்தான். அதற்காகதான் காணாமலும் போனான். எனவே வந்த வழியே திரும்பி நடக்க ஆரம்பித்தான். நெற்றியில் வழிந்த வியர்வை கண்ணில் பட்டு எரிய ஆரம்பித்தது. கைதூக்கி தோளில் முகம் புதைத்து துடைத்தான்.

காணாமல் போக வேண்டும் என்று அவனுக்கு வேண்டுதல் எதுவும் இல்லை. திடீரென்று தோன்றியது. காணாமல் போய்விட்டான். ‘கண்ணுக்கு தெரியாம எங்கேயாவது போய் தொலை’ என்று எத்தனையோ முறை எத்தனையோ பேர் திட்டியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் தொலைந்து போக தோன்றவேயில்லை.

காணாமல் போன அன்று என்ன நடந்தது என்று பட்டியல் இட்டான்.

ஆறு மணிக்கு எழுந்தான்.

காலைக்கடன்களை முடித்தான்.

அவசரமாக பேப்பர் படித்தான்.

குளித்தான்.

காலையுணவு உண்டான்.

மனைவிக்கு முத்தம் கொடுத்தான்.

அம்மாவுக்கு டாட்டா சொன்னான்.

நாய்களை தடவி கொடுத்தான்.

பைக்கை எடுத்தான்.

தெரு முனையில் நின்று சிகரெட் பிடித்தான்.

சிக்னலில் நின்றான்.

ஊர்ந்து ஊர்ந்து சிக்னலுக்கு வந்து மீண்டும் நின்றான்.

அலுவலகத்துக்கு அரை மணி நேரம் தாமதமாக வந்தான்.

மேனேஜரின் குரைப்பை சகித்துக் கொண்டான்.

கடுமையாக வேலை பார்த்தான்.

மதிய உணவு உண்டான்.

ஒரு சிகரெட் பிடித்தான்.

மீண்டும் வேலை பார்த்தான்.

ஆறு மணிக்கு கணினியை அணைத்தான்.

எல்லோருக்கும் ‘பை’ சொன்னான்.

ஒரு சிகரெட் பிடித்தான்.

செல்போனை குப்பைத்தொட்டியில் வீசினான்.

காணாமல் போய்விட்டான்.

ஏன் காணாமல் போனான். ஏன் காணாமல் போகக்கூடாது என்று அவனுக்கு பட்டது. போனான்.

இலக்கில்லாமல் நடந்து கொண்டிருந்தபோது முன்பு டீ குடித்த அதே டீக்கடை திரும்பவும் வந்தது. ஒரு சிகரெட்டு வாங்கிக்கொண்டு நுழைந்தான். டிவி அணைக்கப்பட்டிருந்தது. யாரோ தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தார்கள். ஏழாம் பக்கம். சலனமே இல்லாமல் அவன் திருப்பிவிட்டு, ‘பேப்பர் வேணுமா?’ என்று இவனிடம் கேட்டு, இவன் சம்மதத்தை எதிர்ப்பார்க்காமல் கையில் திணித்துவிட்டு போனான்.

‘மாஸ்டர், ஸ்ட்ராங்கா சர்க்கரை தூக்கலா ஒரு டீ’ சொல்லிவிட்டு சிகரெட்டை பற்றவைத்தான். புகையை வெளியில் விட்டான். தான் ஏன் சிகரெட் பிடிக்கிறோம் என்று அவனுக்கு காரணமே தெரியவில்லை. கையிலிருந்த சிகரெட்டை காலில் போட்டு நசுக்கினான். டீ குடித்தான். காசு கொடுத்தான். மீண்டும் நடந்தான்.

விபத்தில் மரணமடைந்தவனுக்கு வீரவணக்கம் போஸ்டர் ஒட்டி இருந்தார்கள். விபத்துக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு? ‘கிரிக்கெட் வீரன்’ என்கிற சொல்லில் கூட காணாமல் போனவனுக்கு ஒப்புதல் கிடையாது. கிரிக்கெட் ஆடுவது எப்படி வீரம் ஆகும்? ‘அழகி கைது’ என்று தலைப்பிடப்பட்டு பிரசுரிக்கப்படும் படங்களில் இருக்கும் பெண்கள் அழகிகளாக இருப்பதே இல்லை. காணாமல் போனால் இப்படியெல்லாம் சிந்திப்பதற்கு எவ்வளவு நேரம் கிடைக்கிறது.

ஒரு நாய் குலைத்துக் கொண்டிருந்தது. சுடிதார் அணிந்த கிழவி செல்போனில் யாருடனோ கடலை போட்டுக் கொண்டிருந்தாள். ஒரு கள்ளக்காதலன் திடீரென்று மனம் திருந்தி, ‘சாப்பிட்டியா?’ என்று மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தான். எழுத்தாளன் ஒருவன், விகடனில் பிரசுரம் ஆகியிருந்த தன் கதைக்கு தானே ஃபேக் ஐடியாக வாசகர் கடிதம் எழுதுகிறான். கல்லூரி மாணவி ஒருத்தி ஃபேஸ்புக்கில் ரன்பீர் கன்பூர் படத்துக்கு லைக் போட்டுக் கொண்டிருக்கிறாள். அவளை சைட் அடிக்கும் பையன், இவளை கட்டிக் கொண்டால் நெட்டுக்கு பில்லு கட்டவே நட்டு கழண்டுவிடும் போலிருக்கு என்று கவலைபட்டுக் கொண்டிருக்கிறான். அக்னி வெயிலில் கருகிப்போன டிரைவர் சட்டையை கழட்டிவிட்டு கையில்லாத பனியனோடு பஸ் ஓட்டுகிறான். கோயம்பேட்டில் பூ வாங்கிவிட்டு திரும்பும் பூக்காரி அவனை ஓரக்கண்ணால் பார்க்கிறாள். அந்த பஸ்ஸில்தான் காணாமல் போனவன் ஏறினான்.

ஏதோ ஒரு நிறுத்தத்தின் பெயரை சொல்லி கண்டக்டர் இறங்கச் சொன்னான். இவனும் இறங்கினான். இலக்கில்லாமல் நடந்தான். காணாமல் போன இவன் வீட்டுக்கே அறியாமல் சென்றான்.

மனைவி இண்டர்நெட்டில் சமையல் குறிப்பு தேடிக் கொண்டிருந்தாள்.

அம்மா, டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

நாய்கள் இரண்டும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு தெருவை வெறித்துக் கொண்டிருந்தன.

இவன் வந்ததை யாரும் பொருட்படுத்தவே இல்லை. குரல் கொடுத்து அழைத்தான். எந்த சலனமுமில்லை. எல்லோருக்கும் காது செவிடாகி விட்டதா? குருடாகி விட்டார்களா?

ஓடிப்போய் மனைவியை உலுக்கினான். வெறும் காற்றை பிடித்து உலுக்குவது மாதிரி இருந்தது. இவனது உலுக்கல் அவளிடம் எந்த அசைவையுமே ஏற்படுத்தவில்லை.

அம்மா பார்த்துக் கொண்டிருந்த டிவியை மறைத்து நின்றான். இப்படி ஒருவன் நிற்பதே அவளது கண்களுக்கு தெரியவில்லை. இவனை ஊடுருவிக் கொண்டு அவளால் சீரியல் பார்க்க முடிந்தது.

நாய்களிடம் போனான். இவன் வந்திருப்பதையே அவை உணரவில்லை.

காணாமல் போனவன், தான் காணாமல் போனதற்காக முதல் தடவையாக பதட்டம் அடைந்தான்.

வேகமாக சாலை நோக்கி ஓடினான். ஒலி எழுப்பிக்கொண்டு படுவேகமாக குடிநீர் லாரி வந்தது. தவிர்த்துக்கொள்ள சமயமில்லை. முடிந்தது கதை என்று நினைத்தான். அதுவோ இவனை ஊடுருவிக்கொண்டு நகர்ந்தது. குழம்பினான். கதறினான். தேம்பி தேம்பி அழுதான். காணாமல் போனவனின் இருப்பை எவருமே உணரமுடியவில்லை. இவனுக்கு ‘எக்சிஸ்டென்ஷியலிஸம்’ என்கிற சொல்லே அர்த்தமற்றதாகி விட்டது.

தாரை தப்பட்டையோடு எதிர்ப்பட்டது சாவு ஊர்வலம். உற்றுப் பார்த்தான். வித்தியாசமாக உணர்ந்தான். ஊர்வலத்தில் வந்த அத்தனை பேருமே இவனாக இருந்தார்கள். அந்த ஊர்வலத்தோடு சேர்ந்து நடந்தான். செத்தவன் எவன் என்று தெரியாமலேயே செத்தவனுக்காக வாயில் வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதான்.

சுடுகாட்டில் பிணத்தை இறக்கிவைத்தார்கள். வெட்டியானாகவும் அவனே இருந்தான். பிணமேடையில் கிடத்தப்பட்ட பிணத்தின் மீது வறட்டிகளையும், கட்டையையும் லாகவமாக வெட்டியான் அடுக்கினான். கொள்ளி போடுபவனும் இவன்தான்.

‘முகம் பார்க்குறவங்கள்லாம் பார்த்துடுங்க. உடன் பால்’ வெட்டியானின் குரல் கேட்டதும் காணாமல் போனவனுக்கு முகம் பார்க்க ஆசை வந்தது.

பிணமும் இவனே.

காணாமல் போனவன் நிஜமாகவே காணாமல் போய்விட்டான்.

மிஸ்டர் மிடில் க்ளாஸ்!

$
0
0
கீழ்க்கண்டவற்றுக்கு ஆம்/இல்லை என்று பதில் சொல்லவும்.

  • உங்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் காய்கறி கடையிலேயே வெண்டைக்காய் கிலோ ரூ.30/-க்கு கிடைக்கிறது. ஆனால் அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் சந்தையில் ரூ.25/-க்கு விற்கிறது என்பது தெரிந்து டூவீலரில் போய், நாலு கிலோ மொத்தமாக வாங்குகிறீர்கள்.
  • சென்னைக்கு மிக அருகில் செய்யாறுக்கு பக்கத்தில் வீட்டு மனை சதுர அடி ரூ.250/- என்று நாளிதழ்களில் வெளியிடப்படும் விளம்பரங்களை விரும்பி வாசிக்கிறீர்கள். உடனே கால்குலேட்டர் எடுத்து கால்கிரவுண்டு வாங்க எவ்வளவு ஆகுமென்று கணக்கு போடுகிறீர்கள்.
  • டூவீலரோ/சிறியரக காரோ வைத்திருக்கிறீர்கள். அதற்கு மாதாமாதம் தவணை செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
  • டூவீலராக இருந்தால் கட்டாயம் ஹெல்மெட், காராக இருந்தால் மறக்காமல் ‘சீட் பெல்ட்’ போடுகிறீர்கள். பாதுகாப்புக் காரணத்தைவிட போலிஸிடம் மாட்டினால் ‘கப்பம்’ கட்டவேண்டுமே என்றுதான் கூடுதல் அச்சம்.
  • இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ஐம்பது பைசா ஏறுகிறது என்று டிவியில் ஃப்ளாஷ் நியூஸ் போட்டதுமே, அவசர அவசரமாக பெட்ரோல் பங்குக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று ‘டேங்க் ஃபுல்’ செய்துக் கொள்கிறீர்கள்.
  • ஊழல் செய்திகளை உங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. “இவனை எல்லாம் நடுரோட்டுலே நிறுத்தி யாராவது இந்தியன் தாத்தா மாதிரி ஆளுங்க சுட்டுத் தள்ளணும் சார்” என்று சக நண்பர்களிடம் அரசியல் பேசுகிறீர்கள். இதே ஆவேசத்தை ஃபேஸ்புக், ட்விட்டர் ஸ்டேட்டஸ்களிலும் காட்டுகிறீர்கள்.
  • உங்கள் மொத்த வருவாயில் பெரும்பகுதி உங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுக்காகவே செலவிடப் படுகிறது. செலவுகளை சமாளிக்க தம்பதிகள் இருவரும் பணியாற்றுகிறீர்கள். அப்படியும் மாதாமாதம் பற்றாக்குறை பட்ஜெட்தான்.
  • மாதத்துக்கு ஒரு முறை குடும்பத்தோடு மால் விஜயம். சும்மா ‘விண்டோ ஷாப்பிங்’தான். வந்ததற்கு அடையாளமாக ஒரு ஃபேன்ஸி கம்மலோ, ஃப்ரண்ட்ஸ் பேண்டோ வாங்குகிறீர்கள். அங்கிருக்கும் திரையரங்கில் ஏதோ ஒரு மசாலாப்படம் பார்க்கிறீர்கள். இடைவேளையில் பாப்கார்ன் நிச்சயம் உண்டு.
  • பர்சனல் லோன்/ஹோம் லோன் இவற்றுக்கு எந்த வங்கி குறைந்த வட்டி வாங்குகிறது போன்ற தகவல்களை விரல்நுனியில் வைத்திருக்கிறீர்கள். எப்போதும் ஏதோ ஒரு லோன், தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டே இருக்கிறது.
  • மொபைல் போனோ, கலர் டிவியோ வாங்குவது எதுவாக இருந்தாலும், “ஏதாவது ஸ்பெஷல் ஆஃபர் இருக்கா?” என்று கூச்சநாச்சமில்லாமல் கேட்டு, குறைந்தபட்சம் ஒரு துணிப்பையையாவது இலவசமாக வாங்கிக்கொண்டுதான் வருவீர்கள்.
  • இரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய்.. இரண்டில் ஒன்றுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறீர்கள்.
பட்டியலிட்டுக் கொண்டே போனால் குறைந்தது நூறு பாயிண்டுகள் தேறும். அதை விடுங்கள். பெரும்பாலானவற்றுக்கு ‘ஆம்’ சொல்லியிருக்கிறீர்களா. கையைக் கொடுங்கள். இந்த கட்டுரையின் ஹீரோ நீங்கள்தான். உங்களுக்கு ‘மிஸ்டர்/மிஸஸ் மிடில்க்ளாஸ்’ பட்டம் வழங்கி கவுரவிப்பதில் பெருமையடைகிறோம்.
மிடில்க்ளாஸ் ஆட்களை மாதிரி அல்லோலகல்லோலப் படுபவர்கள் வேறு யாருமே இருக்க முடியாது. குடிசையுமில்லாமல், பங்களாவுமில்லாமல்.. இங்குமில்லாமல், அங்குமில்லாமல் நானூற்றி ஐம்பது சதுர அடி ஃப்ளாட்டில் நெரிசலாக நான்கைந்து பேர் இடித்துக்கொண்டு திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்பவர்கள். அரசாங்க கஜானா காலியாகிக் கொண்டிருக்கிறது என்றால் முதலில் வரிபோட்டு சாகடிப்பது இவர்களைதான். மக்கள் தொகையில் இருபதிலிருந்து முப்பது சதவிகிதம் பேர்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்காக வருமான வரியில் தொடங்கி, கார்ப்பரேட் டாக்ஸ், ரோட் டாக்ஸ், பிராப்பர்ட்டி டாக்ஸ் என்று ஆண்டு முழுக்க எது எதுவென்றே தெளிவாக தெரியாமல் ஏதோ ஒன்றுக்காக வரி வரியாக வரி கட்டியே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பவர்கள். வருடத்துக்கு ஒருமுறை கொஞ்சமே கொஞ்சமாய் சம்பளம் ஏறினாலும், அதையும் பெட்ரோல் டீசல், பால், பஸ் ரயில் டிக்கெட், மருத்துவம், கல்வி, மின்சாரம் என்று இவர்களது அடிப்படை ஆதாரங்களின் விலையை ஏற்றி ஈஸியாக அரசாங்கங்கம் பிடுங்கிக் கொள்கிறது. சுருக்கமாக சொன்னால் இந்திய அரசாங்கத்தின் ஏ.டி.எம். கார்டு, நம்முடைய மிடில் க்ளாஸ் மாதவன்கள்தான். என்ன செய்வது, குருவித்தலையில் பனங்காயை வைத்துதான் நாட்டை நடத்த வேண்டியிருக்கிறது.
ஜனகனமன பாடும்போது அட்டென்ஷனில் சிலிர்த்துக்கொண்டு நிற்பதற்காகவும், பாரதம் கிரிக்கெட் கோப்பைகளை வெல்லும்போது, டிவிக்கு முன்பாக குடும்பத்தோடு ஜெய்ஹிந்த் சொல்லும்போது குரலில் தானாகவே வந்து சேரும் பெருமிதத்துக்காகவும் இந்த தியாகங்களை திருவாளர் நடுத்தரம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. குடியரசுத் தினத்துக்கும், சுதந்திர தினத்துக்கும் மறக்காம சட்டையில் தேசியக்கொடி குத்திக்கொண்டு நாட்டை பெருமைப்படுத்துவது யார். நம்ம மிடில்க்ளாஸ்தானே? இந்தியனாக இருப்பதற்கு இன்னும் ஏராளமான துன்பங்களையும், அழுத்தங்களையும் சகித்துக்கொள்ள வேண்டியதாக போகிறது. பாழாய்போன அமெரிக்காவில் முன்புமாதிரி ஈஸியாக வேலை கிடைத்து தொலைக்க மாட்டேங்கிறது சார். ஒபாமா ஓவரா ஸ்ட்ரிக்ட் பண்ணுறார்.
அப்படியிருந்தாலும் பாருங்கள். நடுத்தர வர்க்கத்துக்கு நல்ல பெயரே இல்லை. நாட்டில் எது நடந்தாலும் முதலில் அறிவுஜீவிகளும், ஊடகங்களும் திட்டுவது நம்மைதான். ‘middle class morons’ என்று ஆரம்பித்து, நடுத்தர வர்க்கத்து மனோபாவம்தான் நாட்டின் எல்லா சீரழிவுகளுக்கும் காரணமென்று பத்தி, பத்தியாக எது எதையோ எழுதுகிறார்கள். மூச்சு விடாமல் மூன்று மணி நேரம் கருத்தரங்குகளில் பேசுகிறார்கள். ஏழைகளை பற்றி அக்கறை இல்லை. என்கவுண்டரை மனிதநேயமில்லாமல் ஆதரிக்கிறார்கள். மேன் ஈட்டரான புலியை அதிரடிப்படை சுட்டுக்கொன்றதை சுற்றுச்சூழலியல் அறிவின்றி வரவேற்கிறார்கள் என்றெல்லாம் எல்லாத்துறை பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டி, மிடில் க்ளாஸ் மாரோன்கள் எப்படி இயற்கைக்கும், இயல்புக்கும், அறத்துக்கும், அறிவுக்கும் எதிராக செயல்படுகிறார்கள் வாழ்கிறார்கள் என்றெல்லாம் சுட்டிக் காட்டுகிறார்கள். உற்றுக் கவனித்தால் இம்மாதிரி எழுதுபவர்களும் பேசுபவர்களும் கூட ‘மிடில் க்ளாஸ்’ ஆகதான் இருக்கிறார்கள். என்ன, நாம் டிகிரியில் அரியர்ஸ் வைத்திருப்போம். அறிவுஜீவிகள் பன்ணென்டாங்கிளாஸ் பாஸ் செய்திருப்பார்கள். பாஸ் பெருசா ஃபெயில் பெருசா தர்க்கத்தில் போட்டு நம்மை தாலியறுக்கிறார்கள்.
ஏதோ முக்கியமான ஆய்வு மாதிரி ஆரம்பித்து, கலாய்ப்பது மாதிரி போகிறதா கட்டுரை? சரி, சட்டென்று சீரியஸாகி விடுவோம்.
அறுபதுகளில்தமிழ்நாட்டில்பாதி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்து வந்தோம். குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு, பெண்களுக்கு கல்வி, கிராமங்கள் வரை மருத்துவம் என்று பல்வேறு காரணங்களால் கட்டுக்குள் வந்த மக்கள் தொகை பெருக்கத்தால், இன்று நாட்டிலேயே நடுத்தர மக்கள் அதிகமாக வாழும் மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது. எனவே இந்த வர்க்கத்தினரின் பிரச்சினை என்பது மாநிலத்தின் பிரச்சினையும் கூட.
வாழ்க்கை முழுக்கவே பொருளாதார, சமூக அழுத்தங்களால் உந்தப்பட்டு வாழ்ந்துக் கொண்டிருப்பவன் என்பதுதான் மிஸ்டர் மிடில்க்ளாஸின் அசலான அடையாளம். அவனுடைய கனவு எந்த தொல்லையுமில்லாத வாழ்க்கை. துரதிருஷ்டவசமாக அது கடைசிவரை கனவாகவே ஆகிவிடுகிறது. அடிப்படை வசதிகளை பெற்றுவிட்ட நடுத்தர வர்க்கம், தனக்கு சுலபத்தில் எட்டாத வசதிகளுக்கு எம்பி, எம்பி முயற்சித்துக் கொண்டிருப்பதே அவர்களுடைய வாழ்க்கை முறையை சிக்கல்களுக்கு உள்ளாக்குகிறது. சவால்களை எதிர்கொள்ள ‘ரிஸ்க்’ எடுக்க விரும்புவதில்லை. தனிப்பட்ட முறையிலோ அல்லது ஒட்டுமொத்த குடும்பத்தின் வாழ்க்கைத்தரத்தை இன்னும் சில படிகள் மேலே கொண்டுவர ஏதேனும் ‘ரம்மி’ விளையாடி, ‘ஜோக்கரே’ வராமல் போய்விடுமோ என்கிற அச்சம்தான் நடுத்தரவர்க்கத்து வாழ்க்கையை சஞ்சலத்துக்கு உள்ளாக்குகிறது.
அரசியல் தலைவர்களை பொறுத்தவரை ‘நடுத்தர வர்க்கம்’ என்பதை ஓட்டு போடும் இயந்திரமாகதான் பார்க்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு இவர்களை சீண்டுவார் இல்லை. ஆட்சியை தக்கவைக்க ஏழைகளுக்கு இலவசத் திட்டங்கள். அதிகாரத்தை தக்கவைக்க பணக்காரர்களுக்கு சலுகைகள். இடையில் இருப்பவர்களுக்கு தொடர்ச்சியாக விழுந்துக் கொண்டிருப்பது நாமம்தான்.
அனாயசமாக ஆங்கிலம் பேசக்கூடிய, பட்டம் பெற்ற, பல்வேறுதுறைகளில் தொழில்நுட்ப அனுபவமும் தகுதியும் கொண்ட நடுத்தர வர்க்கம் நாட்டின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறார்கள் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. கலை மற்றும் அறிவுசார் துறைகளிலும் இந்தியா உலகளவில் உயர்ந்து வருவதற்கு நடுத்தரக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்களே பிரதான காரணமாக இருக்கிறார்கள். ஆனால் நாடு இவர்களை எந்தளவுக்கு பொருட்டாக எடுத்துக் கொள்கிறது என்பது கேள்விக்குறிதான்.

முதுகு வளைந்துவிட்ட திருவாளர் நடுத்தரம் நிமிர்ந்து நடக்க முயற்சிக்கிறார் என்றே சமீபகாலமாக எண்ணத் தோன்றுகிறது. அரசியல், நாட்டு நடப்பு குறித்து வெறுமனே கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தவர்கள் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்திருக்கிறார்கள். அரசியல் அதிகாரத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டுமென்ற எண்ணத்துக்கு நடுத்தர வர்க்கம் வந்திருப்பதாக தோன்றுகிறது. பார்ப்போம். பவர்ஆஃப்மிடில்க்ளாஸ்ஸைஅவ்வளவுசுலபமாகஎடைபோட்டுவிடமுடியாது.

காதல் + மழை + பட்டாம்பூச்சி = பிரேமம்!

$
0
0
The butterfly is mentally mental, so as love!

‘ஹம் ஆப்கே ஹைன் கோன்’ பாதிப்பு நீடித்துக் கொண்டிருந்த 1996. நான் டீனேஜின் கடைசிக் கட்டத்தில் இருந்தபோது அண்ணனுக்கு திருமணம் ஆனது. பட்டாம்பூச்சிகள் வயிற்றுக்குள் காதல் காதல் என்று கதறிக்கொண்டு சிறகடித்துக் கொண்டிருந்த பதினெட்டு வயசு.

கல்யாண மண்டபம் முழுக்க ஏதேனும் மாதுரிதீட்சித் தென்படுவாளா என்று – பர்சனாலிட்டிக்காக - கூலிங் க்ளாஸ் மாட்டிக்கொண்டு வெடவெடவென உடைத்தால் ஒடிந்துவிடுவேன் போலிருந்த உடல்வாகுடன் பைத்தியம் மாதிரி அலைந்துத் திரிந்தேன். அதற்குள்ளாகவே சில காதல்தோல்விகள் (!) ஏற்பட்டிருந்தாலும், அந்த சோகத்துக்கெல்லாம் தாடி வளர்க்க முயற்சித்து அது வளர்ந்துத் தொலைக்காத கூடுதல் சோகம் சேர்ந்துக் கொண்டதாலும், அந்த அவலத்தையெல்லாம் பீர்விட்டு மறந்திருந்ததாலும் அன்று கொஞ்சம் ப்ரெஷ்ஷாகவே இருந்ததாக ஞாபகம். லேசான ‘ஆண்ட்டி’மேனியா வேறு இருந்துத் தொலைத்தது.

மிகச்சரியாக அந்த திருமணம் நடந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து எனக்கு திருமணம் ஆனது. இடையில் அவ்வப்போது நமக்கு பழக்கப்பட்டு விட்ட சில லவ் ஃபெய்லியர்கள். ஒன்று ஊத்திக்கொண்டால், புதுசாக இன்னொன்று என்று சகஜமாகி விட்டது.

எப்படியோ காதல் என்கிற நெருப்பை அணைத்துவிட்டு கல்யாண சாகரத்தில் மூழ்கி ஓரிரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும். வீட்டில் இல்லத்தரசி ஏதோ திருமண வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அண்ணனுடைய கல்யாண டிவிடிதான். டொக்கு விழுந்த கன்னத்தோடு, அங்குமிங்கும் அலைபாய்ந்துக் கொண்டிருந்த கண்களோடு, லூசான ஷர்ட்டோடு லூசுமாதிரி பார்க்கவே சகிக்க முடியாத கோலத்திலிருந்த என்னை காட்டி வீட்டில் இருந்தவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

சட்டென்று ஒரு இடத்தை வீட்டுக்காரம்மா pause செய்தார். பாவாடைச் சட்டை அணிந்துக் கொண்டு, இரட்டைச் சடையோடு பதினொன்று, பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி freeze ஆனாள். “அது நான்தான். அந்த கல்யாணத்துக்கு நானும் வந்திருக்கேன்போல” என்று அவர் சொல்ல கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானேன் (யெஸ், என்னுடைய மனைவி, அண்ணிக்கு ஒண்ணுவிட்ட தங்கச்சி. அண்ணன் எங்கே சிறைபட்டாரோ, அதே சிறைச்சாலையில்தான் நானும் இப்போது ஆயுள்கைதி. முன்பு நாங்கள் பங்காளி, இப்போது சகலையும் ஆகிவிட்டோம்).

என்னுடைய பதினெட்டு வயதில் நான் சைட் அடிக்க கூட consider செய்ய முடியாத வயதிலிருந்த சிறுமி இன்று எனக்கு மனைவி. ஒருவேளை அப்போது, “பாப்பா, அங்கிளை டிஸ்டர்ப் பண்ணாம அப்படி ஓரமா போயி விளையாடும்மா” என்றுகூட நான் அதட்டியிருக்கக்கூடும்.

காலம், கறாரான காமெடியன்.

இதே சூழலை ஒரு சினிமாவில் பார்க்கும்போது, படைப்பாளி என்பவன் எவ்வளவு நுட்பமாக வாழ்க்கையை வாசிக்கிறான் என்று ஆச்சரியம் அள்ளுகிறது.

அழுதுப் பிழிந்து பிரிவு சோகத்தை சக்கையாக்கிப் போட்ட சேரனின் ‘ஆட்டோகிராப்’ படத்தின் 2015 வடிவம்தான் மலையாளப்படமான ‘ப்ரேமம்’. மலையாளப் படம் பார்த்தேன் என்று சொல்லவே ஒரு காலத்தில் மஜாவாக இருக்கும். இப்போது சொன்னால் ஜோல்னாப்பை அறிவுஜீவிக்கான இலக்கிய மதிப்பீடோடு கூடிய மரியாதை கிடைக்கிறது.

+2 படிக்கும்போது ஜோர்ஜுக்கு (ஜார்ஜ் அங்கே ஜோர்ஜ்தானே?) மேரியோடு முதல் காதல் பிறக்கிறது. அவளிடம் காதலை வெளிப்படுத்த செம காம்பெடிஷன். மேரியின் அப்பா ஹிட்லர் மாதிரி. வீட்டை சுத்தி சுத்தி வரும் பசங்களை துரத்தி துரத்தி விளாசுகிறார். அவருடைய கண்காணிப்பையும் மீறி ஒருமுறை மேரி, ஜோர்ஜிடம் தன் காதலை தெரிவிக்கிறாள். கவனிக்கவும். ‘காதலை’ சொல்கிறாள். காதலன் இவன் அல்ல.

அடுத்து காலேஜ் காதல். எழவு, மாணவிகளை விட்டு விட்டு லெக்சரர் மீது காதல் வந்து தொலைக்கிறது. மலர் என்கிற அந்த விரிவுரையாளர் தமிழ்ப்பெண். எனவே கனவில் ஒரு தமிழ் டூயட்டும் உண்டு. மலருக்கு ஜோர்ஜை பிடிக்கும். அது காதலா அல்லது சும்மா பிடிக்குமா என்று தெரிவதற்கு முன்பாகவே, ஒரு விபத்தின் காரணமாகவே மலருக்கு எல்லா நினைவுகளும் அழிந்துவிடுகிறது.

கதை, நிகழ்காலத்துக்கு வருகிறது. ஜோர்ஜ் இப்போது cafe நடத்தும் முதலாளி. கடந்தகால காதல்கள் கானல். செலினை பார்த்ததுமே டீனேஜ் ஜோர்ஜ் ஆகி ஜொள்ளுவிட ஆரம்பிக்கிறான். பழைய அனுபவங்களால் matured ஆகிவிட்டவன், நாகரிகமாக தன் காதலை வெளிப்படுத்த நினைக்கும்போதுதான் செலின் ஓர் அணுகுண்டை போடுகிறாள். ‘வர்ற சண்டே எனக்கு என்கேஜ்மெண்ட்’.

ஜோர்ஜுக்கும் அப்படி இப்படி எப்படியோ கல்யாணம் ஆகிறது. யாரை செய்துக் கொண்டான் என்பதுதான் க்ளைமேக்ஸ்.

சேரன் மாதிரியே ஃபீலிங்ஸோடு நிவின்பாலி, ரசிகர்களின் இதயத்தை கீறிப் பார்த்திருக்கலாம். ஆனால், இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி மாதிரி நொடிக்கு நொடி வெடித்து சிரிக்க வைக்கிறார். கரைபுரண்டோடும் காமெடிதான் ‘ப்ரேமம்’ ஸ்பெஷல். ஆட்டோகிராப்பை காமெடியாக எடுத்தால் என்ன என்று யோசித்திருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன். தமிழ்ப்படங்களின் தரை டிக்கெட்டு ரசிகர் போலிருக்கிறது. ‘குணா’ படம் நெடுக வருகிறது. சக்கைப்போடு போட்ட பழைய மோகன்லால் படங்களுங்கு ஆங்காங்கே tribute (‘மாஸ்’ படத்தில் ‘எங்கேயும் எப்போதும்’ வருவது மாதிரி) செய்யப்படுவது புத்திசாலித்தனமான யோசனை.

ஒரு காட்சி.

முந்தைய நாள் மேரியை சைட் அடிக்கப் போய், அவளது அப்பனிடம் அப்பு வாங்கி கன்னம் வீங்கிப் போய் டீக்கடையில் சோகமாக அமர்ந்திருக்கிறான் பையன் ஒருவன்.

டீக்கடை மாஸ்டர் கேட்கிறார். “கன்னத்தில் என்ன காயம்?”

“கொசு கடிச்சிடிச்சி!”

“கொசு கடிச்சா, இவ்ளோ வீங்குமா?”

“கடிச்ச கொசுவை அடிச்சதாலேதான் இப்படி ஆயிடிச்சி”

படம் முழுக்கவே இப்படிதான். ‘கடி’ ‘கடி’யென்று எஸ்.வி.சேகர், கிரேஸி மோகனையெல்லாம் பீட் செய்திருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன். சூப்பர் ஸ்டார் ரஜினி, யுனிவர்சல் ஹீரோ கமல்ஹாசனுக்கு என்றெல்லாம் ஐந்து நிமிடத்துக்கு தொடர்ச்சியாக தேங்க்ஸ் கார்ட் போடுவதிலிருந்தே தொடங்கிவிடுகிறது அவரது அதகளம்.

மூன்று ஹீரோயின்களில் மலர் டீச்சர்தான் டாப். சரோஜாதேவி மாதிரி கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசுகிறார். சில காட்சிகளில் முகப்பருவால் கன்னிப்போய் சிவந்திருக்கும் அவரது கன்னங்கள் அத்தனை அழகு. திடீரென்று ஜீன்ஸும், டீஷர்ட்டுமாக குத்தாட்டம் போடும்போது ஜோர்ஜ் மட்டுமல்ல, படம் பார்க்கும் அத்தனை பேருமே அவரை காதலிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

நிவின்பாலியை பற்றி சொல்லவே வேண்டாம். சாதாரணமாகவே கலக்கி விடுவார். செமத்தியான கேரக்டர் கிடைத்தால் காட்டு, காட்டுவென்று காட்டுகிறார். அதுவும் வேட்டியை அருவாள் வீசுவது மாதிரி ஷார்ப்பாக தூக்கிக் கொண்டு மிதப்பாக நடப்பது மரண மாஸ்.

ஒவ்வொரு காதலின் போதும் மழையும், மழைக்குப் பின்னான பசுமையில் தேன் சேகரிக்கும் வண்ணத்துப் பூச்சிகளுமாய் காட்சிகள் கிறங்கடிக்கின்றன. மப்பும் மந்தாரமுமான கடவுளின் தேசத்து குளிர் அப்படியே படம் பார்க்கிறவனுக்கு ஊடுருவுவது மாதிரி பளிச் கேமிரா.

இதே படம் தமிழில் வந்திருந்தால், ‘மசாலா குப்பை’ என்று விமர்சிக்கக்கூடிய கொம்பு முளைத்த நம்மூர் விமர்சகர்கள், மலையாளத்தில் வந்திருப்பதால் மட்டுமே இதை கைப்பற்றி குறியீடுகளும், கோட்பாடுகளுமாக கொத்துக்கறி போட்டு தாலியறுத்து நம்மை கருத்து விதவையாக்குவதற்கு முன்பாக தயவுசெய்து பார்த்துவிடுங்கள். இல்லையேல், காதலுக்குள் பட்டாம்பூச்சியாய் பயணிக்கக்கூடிய அற்புதமான வாய்ப்பை இழந்துவிடுவீர்கள்.

‘The second film in the history of world cinema with nothing fresh’ என்று இந்தப் படத்தை அதன் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனே விமர்சித்தாலும் (முதல் படம், அவரது முந்தைய படமான நேரமாம்), இரண்டே முக்கால் மணி நேரம் படம் பார்த்த எந்த அலுப்புமே இல்லாமல் தியேட்டரை விட்டு ப்ரெஷ்ஷாக வெளியே வருகிறார்கள் ரசிகர்கள். ஜோர்ஜையும், அவனது காதலிகளையும், கோமாளி வட்டத்து நண்பர்களையும் நீண்டகாலத்துக்கு மறக்கவே முடியாத அளவுக்கு கலக்கலான கமர்ஷியல் கல்ட் கிளாசிக்.

Premam : Must watch Malayalam movie!

கொஞ்சம் மெய், நிறைய பொய்..

$
0
0
இந்தியா சுதந்திரம் வாங்கிய அதே ஆண்டில் அமெரிக்காவின் CBS ரேடியோவில் ஒலிபரப்பான candid microphoneதான் உலகின் முதல் ரியாலிட்டி கண்டெண்ட். அமெரிக்க குடிமகனான Allen funtதான் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்.

Candid microphone என்கிற வானொலி நிகழ்ச்சி 1950களில் Candid camera என்கிற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் ABC மற்றும் NBC தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. கேமிராவை மறைவான இட்த்தில் வைத்துவிட்டு சாதாரண மக்களின் அன்றாட சுவாரசியங்களைப் படம் பிடிப்பதே நிகழ்ச்சியின் நோக்கம். ஒரு தொகுப்பாளர் களத்தில் புகுந்து விசித்திரமாக நடந்துக் கொள்வதும் அதைப் பார்க்கும் பொதுமக்களின் விசேஷ ரியாக்‌ஷன்களை படம் பிடிப்பதே நோக்கம். முழுக்க முழுக்க நகைச்சுவை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி இது.

அமெரிக்க அதிபராக இருந்த ஹேரி ட்ரூமென் வீதியில் போகிறவர்களிடம், “மணி என்ன?” என்று கேட்கும்போது அதை வேடிக்கை பார்க்கும் பொது மக்களின் வினோத முகபாவங்கள் மிகப் பிரபலம்.

1950களில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு 2004ஆம் ஆண்டு வரை தொடர்ந்திருக்கிறது. 1960களில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் குடும்பங்களில் அன்றாட நிகழ்வுகளை படம் பிடித்து நிகழ்ச்சியாக்கும் பைத்தியம் பிடித்தது. The American Family என்ற நிகழ்ச்சியை ஒரு தொடக்கம் எனலாம். 1970களில் காவல்துறையின் நடவடிக்கைகளை நோக்கி ரியாலிட்டி கேமரா திரும்பியது. அதுவரை நகைச்சுவையை மட்டுமே மையப்படுத்திய ரியாலிட்டி தயாரிப்பாளர்கள் கொலை – கொள்ளை – விசாரணை என இன்னொரு மைதானத்தில் விளையாடத் தொடங்கினார்கள். பல மணி நேரம் படம் பிடிப்பதை எடிட்டிங் செய்வதுதான் பெரிய தலைவலியாக இருந்தது. 1980களில் கண்டறியப்பட்ட புதிய படத்தொகுப்பு தொழில்நுட்பங்கள் இந்தப் பணியையும் எளிமையாக்கின.

1990களில்தான் ரியாலிட்டி வட்டத்திற்குள் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் பிறந்தது. Pop idol என்ற talent reality நிகழ்ச்சி உருவாக்கிய பாட்டுப் போட்டி மேடையும் நாட்டாமை நடுவர்களும் ஆரவார பார்வையாளர்களும் இன்று உலகம் முழுக்க கடைபிடிக்கப்படும் வடிவமாகி விட்டது.

இந்த நிகழ்ச்சியைத் தயாரித்த Freemantle Media என்கிற தயாரிப்பு நிறுவனம், நரசிம்மராவின் புதிய பொருளாதார கொள்கையின் உதவியோடும் தனியார் தொலைக்காட்சிகளின் விஸ்வரூப வளர்ச்சியைப் பயன்படுத்தியும் 2004-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் Pop Idol என்கிற தங்கள் நிகழ்ச்சியின் இந்தியப் பிரதியான Indian Idolஐ தயாரித்து அரங்கேற்றியது. தனி நிறுவனமாக இல்லாமல் பல துணை தயாரிப்பு நிறுவனங்களின் உதவியோடு இதைச் செய்தது. தயாரிப்பு அவ்வப்போது கைமாறினாலும் Idol நிகழ்ச்சி வடிவத்தின் உரிமை அவர்களுடையதே. Indian Idol நிகழ்ச்சி வந்த அதே வழியில் India’s got talent நிகழ்ச்சியும் வந்தது. வட இந்திய ஊடகங்கள் உள்வாங்கிய வெளிநாட்டு நிகழ்ச்சி வடிவங்கள் விற்பனை மாறி ஒப்பனை மாறி சப்தஸ்வரங்கள், சூப்பர் சிங்கர், மானாட மயிலாட, தமிழகத்தின் சேம்பியன் என்று தமிழ் தொலைக்காட்சிகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது.

ஸ்டாப்.. ஸ்டாப்.. ஸ்டாப்..

நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பது விக்கிப்பீடியா தரும் விவரங்கள் அல்ல. ஒரு தமிழ் நாவலின் கதைப்போக்கில் கிடைக்கக்கூடிய தகவல்கள்.
நாவல் என்பது, சித்தரிக்கப்பட்ட பாத்திரங்கள், சம்பவங்களை உள்ளடக்கிய நீண்ட கதை வடிவம் என்கிற நீண்டகால தமிழ்நாவல் மரபு உடைந்துக் கொண்டிருப்பதன் முக்கியமான அடையாளமாக கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் ‘மெய்நிகரி’யை பார்க்கலாம்.

இன்றைய தலைமுறைக்கு கதை கேட்பதை/வாசிப்பதை காட்டிலும், தகவல்களை பெறுவதில் ஆர்வம் அதிகம். மெகாசீரியல்களுக்கு மவுசு குறைந்து ரியாலிட்டி ஷோ-க்கள் தொலைக்காட்சிகளில் பெருகிவருவதை இதன் நீட்சியாக பார்க்கலாம். தகவல்களை தெரிந்துக் கொள்வது என்பது வெறுமனே பரிட்சைக்கு படிப்பதாக இல்லாமல், பொழுதுபோக்கே அதுதான் எனக்கூடிய infotainment சூழல் தொடங்கியிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இந்த மாற்றம் இயல்பானதுதான்.

‘காட்சி ஊடகம் பற்றிய கதை விவாதம்’ என்று ‘மெய்நிகரி’, அதை வாசிக்கும் வாசகர்களுக்கு முன்வைக்கப்படுகிறது.

காட்சி ஊடகம் என்று சொல்லக்கூடிய தொலைக்காட்சி துறை குறித்த சித்தரிப்பு தமிழ் நாவல்களில் மிகக்குறைவு. சமீபத்தில் விநாயக முருகன் எழுதி வெளிவந்திருக்கும் ‘சென்னைக்கு மிக அருகில்’ என்கிற நாவலில் ஒரு பகுதி காட்சி ஊடகத்தை பிரதானப்படுத்துகிறது. எனினும் அந்நாவலின் மையம் வேறு எனும்போது இப்பகுதி மிகக்குறைந்த அளவிலான வெளிப்பாட்டையே கொண்டிருக்கிறது.

விநாயக முருகன் நேரடியாக தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றியவர் அல்ல என்பதால் தான் கேள்விப்பட்ட, வாசித்த, யூகித்த விஷயங்களை புனைவாக்கி இருக்கிறார். ரியல் எஸ்டேட் விளம்பரங்களின் பின்னணி அரசியலை சாக்காக வைத்துக்கொண்டு அதில் சம்பந்தப்பட்ட பாத்திரங்களை நாவலுக்குள் கொண்டு வந்திருக்கிறார். கூடுதலாக சில ஆண்டுகளுக்கு முன்பாக பரபரப்பாக பேசப்பட்ட நித்யானந்தா வீடியோ விவகாரத்தை தன்னுடைய புனைவின் சட்டகங்களுக்குள் நுழைக்க முயன்றிருக்கிறார். அந்த வீடியோ ஏன் வெளிவந்திருக்கலாம் என்கிற தன்னுடைய யூகத்தை நாவலின் களத்துக்கு ஏற்புடையதாக மாற்ற முயன்றிருக்கிறார்.
‘மெய்நிகரி’ முற்றிலும் வேறான களத்தில் இயங்குகிறது. கபிலன் வைரமுத்துவுக்கே தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால், அவருக்கு இத்துறை குறித்த துல்லியமான சித்தரிப்புகளை உருவாக்க முடிகிறது. ‘இடியட் பாக்ஸ்’ எப்படி கோடிக்கணக்கானவர்களை இடியட்டுகள் ஆக்கிக் கொண்டிருக்கிறது என்கிற தேவரகசியத்தை வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார். ஒருவகையில் சொந்த செலவில் சூனியம் என்றுகூட சொல்லலாம். சினிமா எப்படி எடுக்கப்படுகிறது என்பதைக் குறித்து சினிமா எடுக்கப்படுவதை எம்.ஜி.ஆர் அந்த காலத்தில் கடுமையாக எதிர்த்த சம்பவங்கள் ஏனோ நினைவுக்கு வருகின்றன.

டெரன்ஸ் பால், மெய்நிகரியின் நாயகன். மாடப்புறா தொலைக்காட்சியில் எடிட்டராக பணியாற்றியவன். டயரி எழுதுவதை போல தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை காட்சித் தொகுப்பாக ஆவணப்படுத்தி பத்திரப்படுத்தும் பழக்கம் கொண்டவன். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவன் எடுத்த புகைப்படங்கள், செல்போன் வீடியோக்களை எடிட் செய்து அடுக்குகிறான். இந்த படத்தின் பின்னணியாக தன்னுடைய voice over மூலம் வருணனை தருகிறான். டெரன்ஸ் பாலின் குரலாகவே ‘மெய்நிகரி’ வாசகர்களுக்கு வழங்கப்படுகிறது.

மாடப்புறா தொலைக்காட்சி ஒரு புதிய ரியாலிட்டி ஷோவை உருவாக்க முயற்சிகளை முன்னெடுக்கிறது. அதன் பொறுப்புகளின் ஒரு பகுதி டெரன்ஸிடம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் பணியாளர்களை பயன்படுத்தாமல், இதற்கென்று ஒரு புதிய குழுவை டெரன்ஸ் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நேர்முகத்தேர்வு நடத்தி ராகவன், பெனாசிர், மானசா, நிலாசுந்தரம் ஆகியோரை தேர்ந்தெடுத்து தனக்கான குழுவை உருவாக்குகிறான்.

இந்த குழு புதிய ஷோவுக்கான ஐடியாக்களை உருவாக்குவதில் தொடங்கி, அது தொடர்பான நிர்வாகத்தின் சம்பிரதாயங்கள் முடிந்து, நிகழ்ச்சியை வடிவமைப்பது, பின்னணி பணிகள், படப்பிடிப்பு, எடிட்டிங் என்று ஒரு ரியாலிட்டி ஷோ எப்படி உருவாகிறது என்பதன் முழுமையான செய்முறையே மெய்நிகரி நாவல்.

இதற்கிடையே டெரன்ஸுக்கு, அந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் பெனாசிர் மீது ஏற்படும் காதல். ராகவனுக்கும், டெரன்ஸுக்கும் நடக்கும் சண்டை. குழுவிலேயே உள்கை ஒன்று செய்யும் துரோகம். பொதுமக்கள் அரசல் புரசலாக கேள்விப்பட்டு பேசிக்கொள்ளும் தொலைக்காட்சித் துறை பாலியல் சுரண்டல்கள். நிறுவன உரிமையாளர்களுக்கு இடையேயான ஈகோ மோதல். அல்லக்கைகளின் ஆட்டம் என்று நாவலின் ஒவ்வொரு பக்கமும் கதையின் போக்கில் தகவல்களை அள்ளித் தெளித்துக்கொண்டே போகிறது.

சர்வதேச அளவிலேயே படைப்பாளிகளுக்கும், மார்க்கெட்டிங் ஆட்களுக்குமான மோதல்தான் இன்றைய உலகின் அறிவிக்கப்படாத மூன்றாம் உலகப்போர். எல்லா துறைகளிலும் கிரியேட்டிவ்வாக சுதந்திரமாக சிந்திப்பவர்களுக்கும், கூவி கூவி சந்தையில் விற்பவர்களுக்கும் நடக்கும் சண்டை மீடியாவில் சற்றே அதிகம்.

நிகழ்ச்சியின் தலையெழுத்தை மட்டுமின்றி, அதை உருவாக்கிய கிரியேட்டர்களின் விதியையும் இன்று மார்க்கெட்டிங் தயவுதாட்சணியமின்றி தீர்மானிக்கும் போக்கினை தகுந்த சம்பவங்களின் துணையோடு மிக எளிமையாக முன்வைக்கிறார் கபிலன். Programs are effective support systems for the sponsor economy என்பதுதான் இன்று தொலைக்காட்சிகளை ஆளக்கூடிய கருத்தாக்கம் என்றால் படைப்பாளியின் இடம் இங்கே எதுவென்று நாமே புரிந்துக்கொள்ள வேண்டியதுதான்.

‘டி.ஆர்.பி’ என்கிற சொல் அதன் அர்த்தம் புரிந்தோ, புரியாமலேயோ இன்று அனைவராலும் உச்சரிக்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இதன் தொடர்பிலான TAM குறித்த விளக்கமும் மிக விரிவாக இந்நாவலில் வாசிக்க கிடைக்கிறது.

இந்தியாவில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று கணக்கிடுவதற்கு தூர்தர்ஷன் ஆரம்பத்தில் ஏற்படுத்திய அமைப்பே DART – Doordarshan Audience Research Team. முப்பத்தி மூன்று நகரங்கள் மட்டுமே அதன் இலக்கு. தொழில்நுட்பம் வளராத அந்த காலக்கட்டத்தில் மனிதர்களை மனிதர்களே சந்தித்து நேரடியாக பேசி ஒரு கணக்கீடு எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

1994ல் Indian National Television Audience Measurement என்கிற INTAM, 1997ஆம் ஆண்டு A.C.Nielsen துணையோடு உருவான TAM – என இரண்டு அமைப்புகள் TAM என்கிற பெயரிலேயே ஒருங்கிணைந்து பார்வையாளர்கள் எண்ணிக்கையை கணக்கிடும் தனிபெரும் தனியார் நிறுவனங்களாக வளர்ந்தது. இவர்கள் கணக்கீட்டுக்கு people meter என்கிற கருவியை பயன்படுத்தியே ஒரு நிகழ்ச்சியின் வெற்றி, தோல்வியை கணக்கெடுக்கிறார்கள். இவர்கள் அறிவிக்கும் முடிவை நம்பிதான் இந்தியாவில் தொலைக்காட்சி உலகமே இயங்குகிறது. தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் தருபவர்களும் இவர்களது கணக்கெடுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே பல்லாயிரம் கோடி ரூபாயை செலவிடுகிறார்கள். இது குறித்த முழுமையான வரலாற்றை இரண்டே பக்கங்களில் கதாபாத்திரங்கள் ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ளும் வசனங்களில் வாசகர்களுக்கு புரியவைக்கிறார் கபிலன்.

நாவலின் கடைசி ஒன்றரை பக்கம் பக்கா மங்காத்தா – இந்த ஒருவரி விமர்சனத்துக்கு அர்த்தம் புரியவேண்டுமானால் நீங்கள் நாவலை முழுக்க வாசித்துதான் ஆகவேண்டும்.
டிவி என்கிற துறை இன்று கனவுத்துறையாக மாறிக் கொண்டிருக்கிறது. வெறுமனே டிவி பார்த்து டிவியில் வேலை பார்க்க ஆசைப்படுகிறார்கள் நம் இளைஞர்கள். எப்படியோ அடித்து பிடித்து வேலைக்கு சேர்ந்தபிறகுதான் நினைத்த மாதிரியாக இல்லையே என்று நொந்துப் போகிறார்கள். அம்மாதிரி இளைஞர்களுக்கு ஒரு டிவி நிறுவனம் எப்படி செயல்படும் என்று பொறுமையாக தம்மும், டீயும் சாப்பிட்டபடியே கதையாக சொல்கிறார் கபிலன்.

இந்த நாவலுக்கு என்று எந்தவிதமான முஸ்தீபுகளும் செய்துக் கொள்ளாமல், நடையைப் பற்றியெல்லாம் ரொம்ப மெனக்கெடாமல், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பயன்படுத்தும் freakyயான தமிழையே பயன்படுத்துகிறார்.
தமிழிலும் சேத்தன் பகத்துகள் சாத்தியமே என்கிற நம்பிக்கை ஒளிக்கீற்றை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் ‘மெய்நிகரி’ அளிக்கிறது.



நூல் : மெய்நிகரி
எழுதியவர் : கபிலன் வைரமுத்து
பக்கங்கள் : 152
விலை : ரூ.125
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
177/103, முதல் தளம், அம்பாள்’ஸ் பில்டிங்,
லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14
போன் : 044-42009603

குறிப்பு : இந்த நாவலுக்கென்றே ஒரு பிரத்யேக இணையத்தளத்தை கபிலன் உருவாக்கியிருக்கிறார். ஆர்வமிருப்பவர்கள் பார்க்கலாம் www.meinigari.com

(நன்றி : தமிழ் மின்னிதழ்)

லிரில் கேர்ள் - நினைவில் இருக்கிறாரா?

$
0
0
‘லா... லாலலா... லாலலா... லால்லால்லா’

இது ஏதோ மழலைமொழி என்று நினைத்தால் உங்களுடைய வயது முப்பதுக்கும் கீழே.

மாறாக-

இது ‘லிரில் ராகம்’ என்று உணர்ந்து, மலரும் நினைவுகளில் மூழ்க ஆரம்பித்தால்... நீங்கள் பக்கத்து வீட்டு குழந்தைகளால் அங்கிள் என்றோ ஆண்ட்டி என்றோ அழைக்கப்படும் நடுத்தர வயதை எட்டி விட்டீர்கள் என்று அர்த்தம்.

மறக்க முடியுமா அந்த லிரில் கேர்ளை?

லைம் க்ரீன் நிறத்தில் பிகினி அணிந்த இளம்பெண். சில்லென்று கொட்டித் தீர்க்கும் காட்டாற்று அருவியில் குதியாட்டம் போடுகிறாள். பின்னணியில் ‘லா... லாலலா... லாலலா... லால்லால்லா’ என்று மனசை மயக்கும் ஹம்மிங். லிரில் சோப்பின் புத்துணர்ச்சியை அனுபவிக்க வாருங்கள் என்கிற அழைப்போடு முடியும் அந்த நாற்பத்தியேழு நொடி டிவி விளம்பரம்.

டிவியிலும், சினிமா இடைவேளைகளிலும் இந்த விளம்பரத்தை கண்ட கோடிக்கணக்கான இந்தியர்கள் குளிக்காமலேயே புத்துணர்ச்சியை அடைந்தார்கள். லிரில் சோப்பின் வாசனையை சுவாசித்தார்கள். இளசுகள் விசில் அடிப்பார்கள். பெருசுகள் விழிவிரிய ஆச்சரியத்தோடு ரசிப்பார்கள்.

காரணம், அந்த லிரில் கேர்ள்.

கரேன் லூனல்.

விளம்பரத்தை ரசித்து முடித்ததுமே, அப்போதெல்லாம் இல்லத்தரசிகள் ‘உச்சு’ கொட்டுவார்கள்.

“பாவம். இந்தப் பொண்ணு விளம்பர ஷூட்டிங் முடிஞ்சதுமே அந்த அருவிலேயே அடிச்சிக்கிட்டுப் போயிட்டாளாம்”

நாடே அப்படிதான் நம்பியது.

லிரில் கேர்ள், அதே அருவியிலேயே அடித்துக்கொண்டு போய் இறந்துவிட்டார் என்று. இன்றும் கூட ஐம்பதை கடந்த அம்மா, அப்பாக்களிடம் விசாரித்துப் பாருங்களேன். இதையேதான் சொல்வார்கள்.

லிரில் கேர்ளை சாக்கிட்டு லேசாக இந்திய விளம்பர உலகில் நிகழ்ந்த அந்த மகத்தான மக்கள் தொடர்பு புரட்சியை அறிந்துக் கொள்வோம்.

1975. இந்தியர்களுக்கு வாங்கும் சக்தி அதிகரித்துக் கொண்டிருந்தது. விரிவடைந்துக் கொண்டிருந்த இந்தியச் சந்தையில் கடை விரிக்க ஏராளமான நிறுவனங்கள் போட்டா போட்டி போட்டுக் கொண்டிருந்தன. நுகர்வோரின் தேவையை ஈடு செய்ய புதுசு புதுசாக சொகுசுப் பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு FMCG (fast moving consumer goods) நிறுவனங்கள் ஆட்பட்டன.

ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் ப்ரீமியம் வகை குளியல் சோப்பு ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டது. ஏற்கனவே ரெக்ஸோனா, லக்ஸ், லைஃபாய் (செங்கல் கூட நீரில் கரையும், அந்த காலத்து லைஃப்பாய் கரையவே கரையாது) என்று ஏகப்பட்ட ரகங்கள் இருந்தன. ப்ரீமியம் வகை சோப்பாக அந்த நிறுவனத்திடம் இருந்தது பியர்ஸ்தான். விலை சற்றே அதிகம் என்பதால், ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை குளிக்க வேண்டிய தேவை ஏற்படும் வெயில் காலங்களில் யாரும் பியர்ஸ் வாங்க மாட்டார்கள்.

ரெக்ஸோனாவுக்கும், பியர்ஸுக்கும் இடையில் எலுமிச்சை புத்துணர்ச்சியை (எலுமிச்சைதான் கோடைக்கு புத்துணர்வு தரும் என்பது இந்தியர்களின் மரபான நம்பிக்கை) தரும் சோப்பாக லிரிலை அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம்.

‘லிண்டாஸ்’ என்கிற விளம்பர நிறுவனத்திடம் இந்த சோப்பை பிரபலப்படுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டது. மார்க்கெட்டில் இதை கொண்டுச் செல்வதற்கு முன்பாக சில ஆய்வுப்பணிகளை லிண்டாஸ் மேற்கொண்டது.

அதில் வெளிவந்த முக்கியமான பாயிண்ட் இதுதான். ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்து இந்தியப் பெண்மணி மூன்று புறம் சுவர், ஒரு புறம் கதவு மூடிய குளியலறைக்குள் ஒரு நாளைக்கு பத்து நிமிடம் மட்டுமே செலவழிக்கிறாள். மீதி நேரம் சமையல் மற்றும் வீட்டு வேலைகளில் கழிகிறது. குளியலுக்காக அவள் செலவழிக்கும் பத்து நிமிடம்தான் ஒரு நாளில் அவளுக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச பிரைவசியாக இருக்கிறது. அந்த பத்து நிமிடங்களை ஒவ்வொரு நாளும் அவள் ஆவலோடு எதிர்ப்பார்க்கிறாள்.

இந்த பாயிண்டை பிடித்துக் கொண்டது லிண்டாஸ். ‘சுதந்திரமான குளியல்’ என்று பெண்களை டார்கெட் செய்து, லிரிலுக்கு விளம்பரங்களை உருவாக்க வேண்டுமென்கிற ஐடியாவுக்கு மெனக்கெட்டார்கள். ‘டார்ஜான்’ படங்களில் டார்ஜானும், அவளுடைய கேர்ள் ஃப்ரண்ட் ஜேனும் இயற்கை எழில் சூழந்த அருவியில்தான் குளிப்பார்கள். இதைவிட சுதந்திரமான குளியல் வேறு இருக்க முடியுமா? இங்கிருந்துதான் அருவியில் குளிக்கும் பெண் என்கிற கான்செப்ட் உருவாகிறது.

அடுத்ததாக அருவியில் ‘தாராளமாக’ குளிக்க சம்மதிக்கக்கூடிய பெண் வேண்டும். நாற்பதாண்டுகளுக்கு முன்பு ‘பிகினி’ ‘கிகினி’ என்றால் சுளுக்கெடுத்து விடுவார்கள். அடுத்து இந்த விளம்பரத்தில் நடிக்க வேண்டிய பெண்ணுக்கு இதுமாதிரி சுதந்திரக் குளியலில் ஈடுபாடு இருக்க வேண்டும். அருவிநீர் தலையில் கொட்டும்போது கண்களை மூடிவிடக்கூடாது. நல்ல உயரமான பெண்ணாக இருந்தால்தான் விளம்பரங்களில் எடுபடும்.

நாடெங்கும் சல்லடை போட்டு தேடினார்கள். மும்பையில் ஒரு துணிக்கடையில் வேலை பார்க்கும் சேல்ஸ் கேர்ள் ஒருவர் அம்சமாக இருப்பதை கேள்விப்பட்டு, அவரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்தார்கள்.

அவர்தான் கரேன் லூனல். சொந்த ஊர் பெங்களூர். மாடலிங் ஆர்வத்தில் மும்பைக்கு வந்தார்.

தயங்கி தயங்கி கேட்டார்கள்.

“பிகினி அணிந்து நடிக்க சம்மதமா?”

“பீச்சுக்கு போனால் அதைதான் அணிவேன். அதை அணிந்து ஒரு விளம்பரத்தில் நடிக்க எனக்கென்ன பிரச்சினை. நான் யார் என்பது எனக்கு தெரியும் எனும்போது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை”

கரேன் நிறைய தத்துவம் பேசுவார் என்று தெரிந்தது. அதே நேரம் ‘எதற்கும்’ துணிந்திருக்கிறார் என்றதுமே, அவருக்கான துணியான ‘பிகினி’யை கொடுத்து ஷூட்டிங்குக்கு அள்ளிக்கொண்டுச் சென்றார்கள்.

மகாராஷ்டிராவில் இருக்கும் ‘கண்டாலா’ என்கிற ஊர் அருவியில்தான் விளம்பரங்களை படம் பிடித்தார்கள். குளிரில் நடுங்கி, சரியான ரியாக்‌ஷன் கொடுக்க முடியாமல் சிரமப்படுவார் கரேன். இதை சமாளிக்க லைட்டாக ‘பிராண்டி’யையோ, ‘ரம்’மையோ ஒரு கட்டிங் போடுவார். லிண்டாஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்த விளம்பர ஜாம்பவான் பதம்ஸீ வேடிக்கையாக இதை குறிப்பிடுவார். “அவளது கண்களில் தெரிந்த குறும்புத்தனம் லிரில் சோப்பு போட்டு குளித்ததாலா அல்லது மதுவின் விளையாட்டா என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை”
‘சுதந்திரக் குளியல்’ விளம்பரங்கள் சக்கைப்போடு போட, லிரில் சோப் சந்தையில் அடுத்த ஓராண்டுக்குள்ளேயே நெம்பர் ஒன் இடத்துக்கு வந்தது. அடுத்த பத்தாண்டுகளுக்கு ‘லிரில் கேர்ள்’ ஆக கேரனே தொடர்ந்தார்.

பிளாக் & ஒயிட்டில் இருந்த டிவி வண்ணத்துக்கு மாறும்போது, இன்னும் கூடுதல் கவர்ச்சி விளம்பரத்துக்கான தேவை ஏற்பட்டது. ஏற்கனவே விளம்பரங்கள் எடுத்துக் கொண்டிருந்த கண்டாலா அருவியைவிட நல்ல லொக்கேஷன் தேடினார்கள். கடைசியாக நம்மூர் கொடைக்கானலில் பாம்பாற்று அருவி மாட்டியது. அங்கே எடுக்கப்பட்ட விளம்பரம்தான் நாம் டிவியில் பார்த்து பல்லாண்டுகளாக ரசித்ததும், இன்றும் யூட்யூப் போன்ற இணையத்தளங்களில் பல லட்சம் பேர் ரசித்துக் கொண்டிருப்பதும். லிரில் விளம்பரம் எடுக்கப்பட்டதாலேயே அந்த அருவி இன்றுவரை ‘லிரில் அருவி’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

கரேனுக்கு பிறகு ப்ரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோனே, பூஜா பத்ரா, தாரா ஷர்மா என்று நிறைய லிரில் கேர்ள்ஸ் வந்துவிட்டார்கள். ஆனால் இன்றுவரை கரேனுக்கு இணையே இல்லை.

சரி. நடிகையின் கதைக்கு வருவோம்.

கொடைக்கானல் படப்பிடிப்பில் அருவி வெள்ளத்தில் கரேன் லுனால் அடித்துச் செல்லப்படவில்லை என்பதால், அவர் இறந்துவிட்டதாக சொல்லப்பட்டது வெறும் வதந்தி.

மாடலிங்கில் இவருக்கு கிடைத்த புகழின் காரணமாக இடையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டஸ் ஆக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. பயணிகள் எல்லோருமே “லிரில் பெண் தானே நீ?” என்று கேட்டு, ஆட்டோகிராப் வாங்குவார்களாம். ஒருமுறை பிரதமர் ராஜீவ்காந்தி பயணத்தின் போது இவரை அடையாளம் கண்டுகொண்டு கைகுலுக்கி வாழ்த்தி இருக்கிறார்.

அந்த பிரபலமான டிவி கமர்ஷியலுக்கு பிறகு தொடர்ச்சியாக இவர் மாடலிங் துறையில் ஈடுபடவில்லை. ஏனெனில் மும்பையில் அப்போது நடந்த விபத்து ஒன்றின் காரணமாக அறுபதுக்கும் மேற்பட்ட தையல்கள் இவரது முகத்திலும், உடலிலும் போடப்பட்டது. லிரில் விளம்பரத்துக்கு பிறகு அவரை எங்கும் காணமுடியாத விரக்தியில் யாரோ ஒரு ரசிகர் கற்பனையாக கட்டிவிட்ட வதந்திதான் அருவியில் அடித்துச் சென்று மரணம்.

ஏர் ஹோஸ்டஸாக இருந்தபோது தஷி என்கிற திபெத்தியரை விமானப் பயணத்தில் சந்தித்தார். கண்டதும் காதல். ஐந்து ஆண்டுகள் காதலித்துவிட்டு 1985ல் திருமணம் செய்துக் கொண்டார். கரு தரித்ததுமே விமானப் பணிப்பெண் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். ஒரே மகன் ஸ்காட்.

பின்னர் டைம்ஸ் எஃப்.எம்.மில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சில காலம் வேலை பார்த்தார். அதன் பிறகு ஒரு தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானப் பணிபெண்களுக்கு பயிற்சியாளராக இருந்தார். தற்போது நியூசிலாந்தில் குடும்பத்தோடு சகல செளபாக்கியமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்.

(நன்றி : தினகரன் வசந்தம் - ‘நடிகைகளின் கதை’ தொடர்)

வசூல் வேட்டை @ காக்கா முட்டை

$
0
0
‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் இறுதிக் காட்சி கம்யூனிஸ்டுகளுக்கும், ஏழைப் பங்காளர்களுக்கும், ஃபேஸ்புக் புரட்சியாளர்களுக்கும் கடுமையான கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம். பீட்ஸா கடையின் ஓனரான பாபு ஆண்டனி மிக தந்திரமாக பிரச்சினையை முடித்துக் கொண்டது முதலாளித்துவ பயங்கரவாதத்தின் தன்மைக்கு ஒரு துண்டு பீட்ஸாவாக எடுத்துக் காட்டப்பட்டிருப்பதாக நினைக்கலாம்.

மக்கள் தொடர்புத்துறையில் crisis management என்றொரு கூறு உண்டு. ஒரு நிறுவனம் பல்வேறு வகையிலான இழப்புகளை சந்திக்கும். பொதுமக்களிடம் ஒரு நிறுவனம் தன்னுடைய நல்ல பெயரை (goodwill) இழப்பது என்பது அந்நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய சவால். அப்போது அந்நிறுவனத்தின் மக்கள் தொடர்பாளர்கள் அந்த crisisஐ எப்படி handle செய்யப் போகிறார்கள் என்பதே crisis management.

‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் க்ளைமேக்ஸில் சம்பந்தப்பட்ட சிறுவர்களுக்கு சிம்புவுக்கு இணையான மரியாதை கொடுத்து, பீட்ஸா ஊட்டும் காட்சிக்கு தியேட்டரில் நல்ல சிரிப்பலை. உண்மையில் இதுபோன்ற பிரச்சினையில் ஒரு நிறுவனம் மாட்டிக் கொண்டால், இதைவிட சிறப்பான தீர்வு வேறெதுவுமில்லை. அனேகமாக இயக்குனர் மணிகண்டன் விளம்பர நிறுவனம் எதிலாவது பணியாற்றி இருப்பார். அதனால்தான் அவருக்கு இந்த நடைமுறையை இவ்வளவு துல்லியமாக காட்சியாக்க முடிந்திருக்கிறது.

சில பேர் இந்த காட்சி டிராமாவாக மாறிவிட்டதாக இணையத்தில் விமர்சிக்கிறார்கள். என்னுடைய பத்தாண்டு விளம்பரத்துறை அனுபவத்தில் மூன்றாண்டுகள் முழுக்க முழுக்க public relations நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். இப்படிப்பட்ட சிக்கலில் இருக்கும் பீட்ஸா கடை, இதைத்தவிர வேறெந்த முறையிலும் இந்த பிரச்சினையை கையாளாது. நாற்பத்தி ஐந்து ரூபாய்க்கு ‘மக்கள் பீட்ஸா’ ஐடியாவெல்லாம் பக்காவான PR activity.

எம்.எல்.ஏ.விடம் போவது, போலிஸுக்கு காசு கட்டி சரி செய்ய நினைப்பது, மீடியாக்கள் அச்சூழலை எப்படி கையாளக்கூடும் போன்ற சித்தரிப்புகள்தான் உண்மையில் dramatise செய்யப்பட்டிருக்கிறது. பாபு ஆண்டனி கேரக்டரின் வில்லத்தன்மைக்கு -அதாவது முதலாளித் தன்மைக்கு- கூடுதல் அழுத்தம் சேர்க்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அவை சேர்க்கப்பட்டிருக்கலாம்.

Crisis management தொடர்பாக உள்ளூர், அயல்நாடுகளின் கேஸ் ஸ்டடிகளை பலநூறு கணக்கில் படித்திருக்கிறேன். Coca cola நிறுவனம் எதிர்கொண்ட சிக்கல்களை அவர்கள் தீர்த்துவைத்த முறையெல்லாம் படுசுவாரஸ்யமாக இருக்கும்.

ஆனால், கூடங்குளம் அணுவுலை பிரச்சினையை, நியூக்ளியர் ஃபவர் கார்ப்பரேஷன் ஆஃப் இண்டியா லிமிடெட் நிறுவனம் எப்படி கையாண்டது என்பதுதான் இதுவரை இந்திய அளவில் நானறிந்த crisis managementகளிலேயே மிகச்சிறந்தது. மிக சரியான விளம்பர நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, கச்சிதமான வழிமுறைகள் வாயிலாக இதுவரை கண்டிராத மாபெரும் போராட்டத்தை வலுவிழக்கச் செய்தார்கள். என்னென்ன செய்தார்கள், யார் யாரை குறிவைத்து எப்படி எப்படி வீழ்த்தினார்கள் என்று விலாவரியாக விளக்க ஆரம்பித்தால் ஏகப்பட்ட சேகுவேராக்களின் முகங்களில் அப்பிக்கொண்டிருக்கும் நீலச்சாயம் வெளுக்கும். ’காக்கா முட்டை’ படத்தில் வரும் ரமேஷ் திலக், அவரது அல்லக்கையான பன்னிமூஞ்சி வாயனெல்லாம் யாரை சித்தரித்து என்று நினைக்கிறீர்கள். நாமறிந்த பிரபலமான போராளிகளைதான் அவை குறியீடாக சொல்கின்றன.

‘காக்கா முட்டை’ திரைப்படம் எதையும் எதிர்ப்பதாகவோ, விமர்சிப்பதாகவோ எனக்கு தோன்றவில்லை. இது இது இப்படி இப்படி இருக்கிறது என்று பிரச்சினைகளை தொட்டுக் காட்டுகிறதே தவிர, ஏழைகள் மீதான பச்சாதாபத்தை ஏற்படுத்தவோ, புரட்சி பேசவோ அதன் இயக்குனர் முயலவில்லை.

ஆனால்-

படம் பார்த்தவர்களுக்கு குற்றவுணர்ச்சி தோன்றுகிறது. காக்கா முட்டைகளுக்கு பரிதாபப்படும் இவர்களில் ஒருவர் கூட, வாழ்க்கையில் இதுவரை ஒரே ஒரு காக்கா முட்டைக்கு பீட்ஸா என்ன.. பன்னும் டீயும் கூட வாங்கித்தராதவர்களாகவே இருப்பார்கள். உண்மையைச் சொன்னால் ஜீரணிப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். உண்மையில் நமக்கு (அதாவது நடுத்தர வர்க்கத்து மொக்கைகளுக்கு) ஏழைகள் மீது பரிதாபமெல்லாம் எதுவுமில்லை. ‘காக்கா முட்டை’ மாதிரி சந்தர்ப்பங்களில், அவர்களுக்காக நெகிழ்வதெல்லாம் சும்மா நடிப்புதான். படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படும் முதலாளி பாபு ஆண்டனிக்கும், படம் பார்த்துவிட்டு ஃபேஸ்புக்கில் ஏழ்மையை கடைபரப்பி ஸ்டேட்டஸ் போட்டு லைக்கு அள்ளுபவர்களுக்கு வித்தியாசமெல்லாம் பெரிதாக எதுவுமில்லை. நாமும் பீட்ஸா கடை ஓனராக இருந்தால் இப்படிதான் நடந்துக் கொள்வோம்.

இந்த நடுத்தர வர்க்கத்தின் குற்றவுணர்ச்சியை மிகச் சரியாக அறுவடை செய்வதாலேயேதான் ஏழைகளை பற்றி பேசும் ஏழைப்படம் வசூலில் கோடி, கோடியாக கொட்டி குவிக்கிறது. முன்னூறு ரூபாய்க்கு பீட்ஸா வாங்கி சாப்பிட முடியாத நிலையில் இருப்பவர்கள் என்று இப்படம் சுட்டிக்காட்டும் விளிம்புநிலை காக்கா முட்டைகள் அண்ணாசாலை நெடுக வானுயர்ந்த கட்டிடங்களுக்கு பின்னால் அமைந்திருக்கும் சேரிகளில் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தங்களைப்பற்றி எடுக்கப்பட்ட இந்த படத்தைக் காண தேவியிலும், சத்யமிலும் நூற்றி இருபது ரூபாய் செலவு செய்கிறார்கள். ஒவ்வொரு திரையரங்கிலும் பத்து ரூபாய் டிக்கெட் குறைந்தது பத்து சதவிகிதம் தரப்பட வேண்டும் என்கிற விதியை காக்கா முட்டைக்கு மட்டுமாவது திரைத்துறையினர் கறாராக கடைப்பிடித்திருக்கலாம்.

ஏழ்மையை நல்ல பிசினஸாக மாற்ற முடியும் என்கிற சூத்திரத்தை காக்கா முட்டை கற்றுத் தந்திருக்கிறது. முன்பு, ‘வழக்கு எண் பதினெட்டு’க்கு இந்த விஷயத்தில் சுமாரான வெற்றிதான். விளிம்பு நிலைக் கதைகளை கையில் வைத்துக்கொண்டு அடுத்த ஓராண்டுக்கு வரிசை கட்டி படங்கள் வரப்போகின்றன. படம் பார்த்துவிட்டு உச்சு கொட்டவும், ஃபேஸ்புக்கில் ‘சாட்டையடி சகோதரி’ சமூக ஸ்டேட்டஸ்கள் போடவும் நிறைய சந்தர்ப்பங்கள் நமக்கு கிடைக்கும். அடுத்து கொஞ்ச காலத்துக்கு கார்ப்பரேட் நிறுவன பணியாளர்கள் CSR ஆக்ட்டிவிட்டிகளில் கூடுதல் முனைப்பாக ஈடுபடுவார்கள்.

சாந்தி (70 எம்.எம். ஏ/சி)

$
0
0
சாந்தி தியேட்டருக்கும் எனக்கும் ஒருவகையில் பூர்வஜென்ம பந்தம் உண்டு.

அம்மா அங்கே சிவாஜி படம் (ஜஸ்டிஸ் கோபிநாத் அல்லது பைலட் பிரேம்நாத் என நினைக்கிறேன்) பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் இடுப்பு வலி வந்ததாம். மறுநாள் காலை நான் பிறந்தேன். ஒருவேளை தியேட்டரிலேயே பிறந்திருந்தால் சிவாஜி கணேசன் என்று பெயர் வைத்திருப்பார்கள். வாத்யார் ரசிகரான அப்பாவுக்கு அசிங்கமாகியிருக்கும்.

‘ஏர் கண்டிஷன்’ என்றொரு நவீன வசதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதையே தமிழர்கள் முதன்முதலாக சாந்தி தியேட்டர் மூலமாகதான் அறிந்தார்கள். ‘குளுகுளு வசதி செய்யப்பட்டது’ என்று விளம்பரப்படுத்தப் படுமாம். சென்னையின் முதல் ஏர்கண்டிஷண்ட் தியேட்டரான சாந்தி 1961ல் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் உமாபதி கட்டிய இந்த அரங்கை, சிவாஜி ஆசையாக கேட்டு வாங்கிக் கொண்டதாக சொல்வார்கள் (காசுக்குதான்). அப்படியல்ல, உமாபதி காண்ட்ராக்டர் மட்டும்தான் என்று சொல்வோரும் உண்டு. எப்படியிருப்பினும் இதற்கு நன்றிக்கடனாக பிற்பாடு நடிகர் திலகம் உமாபதிக்கு நடித்து கொடுத்த ‘ராஜ ராஜ சோழன்’ படுமோசமாக தோல்வியடைந்து, உமாபதியை மேற்கொண்டு நஷ்டத்துக்கு உள்ளாக்கியது என்பதெல்லாம் இப்போது தேவையில்லாத சமாச்சாரம்.

திறக்கப்பட்ட காலத்தில் நகரின் பெரிய தியேட்டரும் சாந்திதான். சுமார் 1200+ இருக்கைகள். பால்கனியில் மட்டுமே நானுத்தி சொச்சம் சீட்டு. இவ்வளவு பெரிய தியேட்டரை கட்டிவிட்டு கூட்டம் வராமல் ஆரம்பத்தில் சில நாட்களுக்கு அவதிப்பட்டிருக்கிறார்கள். தெலுங்கு டப்பிங் படம், இந்திப்படம் என்றுதான் காலத்தை ஓட்டினார்களாம். ‘அய்யோ, அந்த தியேட்டரா? உள்ளே போனா ஊட்டி மாதிரி பயங்கரமா குளுருமாமே? ஸ்வெட்டர் போட்டுக்கிட்டுதான் போவணுமாம்’ என்று மக்கள் அனாவசியமாக அச்சமடைந்திருக்கிறார்கள் (பின்னாளில் குளுகுளு ஏற்பாட்டில் ‘அலங்கார்’ சாதனை படைத்தது. இன்றும் காசினோ காஷ்மீர் மாதிரி ஜில்லிட்டு கிடக்கிறது)

அப்போது பீம்சிங் இயக்கத்தில் ‘பாவமன்னிப்பு’ நடித்திருந்தார் சிவாஜி. நட்சத்திர நடிகர்களின் படங்களை எல்லாம் ‘சித்ரா’வில்தான் திரையிடுவார்கள். சின்ன தியேட்டர் என்பதால் நூறு நாள் ஓட்டி கணக்கு காட்ட வசதியாக இருக்கும்.

சிவாஜியே சொந்தமாக தியேட்டர் கட்டியிருக்கிறார், அதில் பாவமன்னிப்பை வெளியிட்டே ஆக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். அவ்வளவு பெரிய தியேட்டரில் வெளியிட்டுவிட்டு நூறு நாள் ஓடாவிட்டால் அசிங்கமாகிவிடுமே என்று ஏவிஎம் நிறுவனம் அச்சப்பட்டிருக்கிறது. சிவாஜியின் வற்புறுத்தலின் பேரில் இங்கு திரையிடப்பட்ட ‘பாவமன்னிப்பு’ வெற்றிகரமாக வெள்ளிவிழா ஓடி சாதனை படைத்தது.

அதையடுத்து கிட்டத்தட்ட நூறு சிவாஜி படங்கள் இங்கே திரையிடப்பட்டிருக்கின்றன. பாவமன்னிப்பு, திருவிளையாடல், வசந்தமாளிகை, தங்கப்பதக்கம், திரிசூலம், முதல் மரியாதை ஆகிய படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியிருக்கின்றன. முப்பதுக்கும் மேற்பட்ட சிவாஜி படங்கள் நூறு நாள்களை தாண்டி ஓடியிருக்கிறது.

சென்னையின் பெரிய தியேட்டர் சிவாஜியின் கையில் இருந்ததாலும், அவர் நடித்த எந்த படம் திரையிடப்பட்டாலும் ரசிகர்கள் குவிந்துவிடுவார்கள் என்பதாலும் எம்.ஜி.ஆரை ஒப்பிடுகையில் வசூல்ரீதியாக சிவாஜியே சென்னையின் மன்னனாக இருந்திருக்கிறார். அதுவுமின்றி சிவாஜி கெடாவெட்டு கணக்கில் வருடத்துக்கு ஏழெட்டு படங்கள் நடித்துத் தள்ளிக்கொண்டே இருப்பார் என்பதால், சாந்தி தியேட்டருக்கு வேறு நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்யும் வாய்ப்பு குறைவு. எம்.ஜி.ஆருக்கு சித்ரா, ஸ்ரீகிருஷ்ணா மாதிரி சுமார் அரங்குகள்தான் மாட்டும். ஏசி தியேட்டரில் எம்.ஜி.ஆர் படம் என்கிற வாத்யார் ரசிகர்களின் ஆசை ரொம்ப நாள் கழித்து உலகம் சுற்றும் வாலிபனில்தான் தேவிபாரடைஸ் மூலமாக நிறைவேறியது. எனக்குத் தெரிந்து இன்றுவரை சாந்தி தியேட்டரில் எம்.ஜி.ஆர் படம் எதுவும் திரையிடப்பட்டதாக தெரியவில்லை. சிவாஜி தெலுங்கு, மலையாளத்தில் நடித்த படங்களைகூட அடமாக இங்கே திரையிட்டு நடிகர் திலகத்தின் ரசிகர்களை பரவசப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.

அந்த காலத்தில் சாந்தி தியேட்டரில் நைட்ஷோ விடும் நேரத்தை கணக்கில் வைத்து, படம் பார்த்து வருபவர்களின் வசதிக்காக ஸ்பெஷலாக பிராட்வேயிலிருந்து தாம்பரத்துக்கு 18ஏ பேருந்தினை அதிகாலை வேளையில் விட்டிருந்தது போக்குவரத்துக் கழகம். தினமலரில் பணியாற்றும்போது வீட்டுக்கு போக இந்த பேருந்து பல நாட்கள் எனக்கு பயன்பட்டிருக்கிறது.

சிவாஜிக்கு வயதானபிறகு பிரபு நடித்த திரைப்படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்பட்டன. இவரது பெரும்பாலான படங்கள் ‘டப்பா’தான் என்பதால் தியேட்டரின் மவுசே குறைய ஆரம்பித்தது. ‘சின்னத்தம்பி’ விதிவிலக்காக இருநூற்றி ஐம்பது நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ‘மன்னன்’ படத்தில் கவுண்டமணியும், ரஜினியும் சேர்ந்து ‘சின்னத்தம்பி’ படம் பார்ப்பது இந்த தியேட்டரில்தான்.

பிரபுவின் நூறாவது படமான ‘ராஜகுமாரன்’ பயங்கர ஃப்ளாப். ஆனாலும் ஓனர் படம் என்பதால் ஆளே இல்லாத டீக்கடையில் நூறு நாட்களுக்கு ஈ ஓட்டி நஷ்டப்பட்டது சாந்தி தியேட்டர். கடைசியாக இனிய திலகம் விக்ரம் பிரபு நடித்த அத்தனை படங்களையுமே நூறு நாட்களுக்கு மேலாக (அரிமா நம்பி கூட என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்) ஓட்டியது. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக பால்கனியை மட்டும் தனியாகப் பிரித்து ‘சாய்சாந்தி’ என்று தனி அரங்காக ஆக்கினார்கள்.

ஆண்பாவம், நீதிக்கு தண்டனை, வெற்றிவிழா, மன்னன், சந்திரமுகி, சுப்பிரமணியபுரம் போன்ற படங்கள் இங்கே அபாரவெற்றி பெற்றவை. இந்திப் படமான ‘சங்கம்’ வெள்ளிவிழா கண்டதும் இங்கேதான். பாகவதரின் ‘ஹரிதாஸ்’ சாதனையை (பிராட்வே தியேட்டர்) உடைக்க வேண்டும் என்பதற்காகவே, ‘சந்திரமுகி’யை 888 நாட்கள் ஓட்டி கணக்கு காட்டினார்கள்.

எல்லா சென்னைவாசிகளையும் போலவே சாந்தி திரையரங்கோடு எனக்கும் உணர்வுபூர்வமான பந்தம் உண்டு. எத்தனை படங்கள் இங்கு பார்த்திருப்பேன் என்று கணக்கு வழக்கே இல்லை. நண்பர்களோடு சேர்ந்து படங்கள் பார்த்த அற்புதமான தருணங்கள் எல்லாம் இப்போது நெஞ்சில் நிழலாடுகிறது.

ஒவ்வொரு காட்சி தொடங்குவதற்கு முன்பாக இன்றும் கவுண்டர் அருகே ஒயிட் & ஒயிட்டில் கம்பீரமாக வந்து நிற்கும் அந்த தியேட்டர் மேனேஜரை மறக்கவே முடியாது. இப்போது கலைஞரின் வயது ஆகிறது அவருக்கு. பெண்கள் பாதுகாப்பாக படம் பார்க்கவேண்டும் என்று ரொம்பவும் அக்கறை காட்டுவார்.

பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பாக படம் பார்க்க க்யூவில் நிற்கும்போது கையில் லத்தியோடு கூட்டத்தை ஒழுங்குபடுத்த அங்கும், அவர் இங்குமாக அலையும் காட்சி ஓர் ஓவியம் மாதிரி மனசுக்குள் பதிந்திருக்கிறது. இவரது கேரக்டரைதான் ‘அமர்க்களம்’ படத்தில் சரண், வினுசக்ரவர்த்திக்கு கொடுத்திருப்பார்.

தியேட்டரை இடித்துவிட்டு மால் கட்டுகிறோம் என்று அதிகாரபூர்வமாக சிவாஜி குடும்பத்தார் அறிவித்து விட்டார்கள். புதிதாக கட்டப்படும் மாலில் சாந்தி என்கிற பெயரிலேயே சில ஸ்க்ரீன்கள் இருக்கும் என்று ஆறுதல் அளிக்கிறார்கள். இருந்தாலும் ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘தில்லானா மோகனாம்பாள்’ ஓடிய ஒரிஜினல் சாந்தி மாதிரி வருமா?

கன்னட குண்டர்

$
0
0
சில வருடங்களுக்கு முன்புவரை இயக்குனர் நந்தாகிஷோர் குண்டர்தான்.

‘குண்டர்’ என்கிற சொல், இருவிதமாக புரிந்துக்கொள்ளப் படுகிறது. சமூகவிரோதியையும் குண்டர் என்றே சொல்கிறோம். உடல் கொஞ்சம் கூடுதலாக சதை போட்டிருந்தாலும் ‘குண்டர்’ என்றே அழைக்கிறோம்.

இவர் இரண்டாவது வகை. இருநூறு கிலோவுக்கும் மேலாக அவரது எடை இருந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பிதான் ஆகவேண்டும். சுபாவத்தில் அப்பாவி.

சந்தோஷத்தில்தான் சதை போடும் என்பார்கள். இடைவிடாத சோகம் காரணமாக இவர் குண்டடித்தார்.

நந்தாவின் அப்பா சுதிர், கன்னடத்தில் பிரபலமான வில்லன் நடிகர். அப்பாவும், மகனும் வீட்டில் இருக்கும்போது குறைந்தது இரண்டு படங்களாவது பார்ப்பார்களாம். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம், கொரியன், ரஷ்யன், பிரெஞ்சு... மொழிப் பாகுபாடெல்லாம் சினிமாவுக்கு இல்லை. சினிமா என்பதே தனி மொழிதானே?

சில படங்களை திரும்பத் திரும்ப  போட்டுக் காட்டி அவரது அப்பா சினிமாவை கற்பித்திருக்கிறார். அதுமாதிரி ஆறேழு முறை அடுத்தடுத்து ஒரே படத்தை பார்த்ததுண்டு. “என்னிடம் இன்றும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட டிவிடிக்கள் இருக்கின்றன. இந்த படங்கள் அத்தனையையும் நான் பார்த்திருக்கிறேன்” என்று ஒரு பேட்டியில் இப்போது சொல்லியிருக்கிறார் நந்தா.

அபியும் நானும் மாதிரி சினிமாவும் அப்பாவுமாக இருந்தவருக்கு முதல் ஷாக், அப்பாவின் மரணம். திக்குத் தெரியாத காட்டில் தனித்து விடப்பட்டது மாதிரி தடுமாறினார். படுக்கை அறைக்குள் நுழைந்தவர் அடுத்த இரு ஆண்டுகளுக்கு தன்னைத்தானே அங்கேயே சிறைப்படுத்திக் கொண்டார்.

நந்தாவை சகஜமாக்க அவரது அம்மா ஏகப்பட்ட முயற்சிகள் எடுத்தார். தியேட்டர் ஆர்ட்டிஸ்டான அம்மா, மகனை தன்னுடனேயே தான் நடிக்கும் நாடகங்களுக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தார். அந்த நாடகக்குழுவினரோடே அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு பித்து பிடித்தாற்போல அலைந்துத் திரிந்தார். ஸ்டேஜை பெருக்குவதில் தொடங்கி, திரை இழுக்கும் வேலை வரை அத்தனையையும் இழுத்துப் போட்டு செய்தார்.

கம்பன் வீட்டுத்தறியும் கவிபாடும் அல்லவா? அம்மாவும் நடிகை. அப்பாவும் நடிகர். நான் மட்டும் ஏன் இப்படி என்று சோர்வு வரத் தொடங்கியது நந்தாவுக்கு.

அப்பா பாணியிலேயே சினிமாவில் நடிக்கலாம். காசு சம்பாதிக்கலாம். அம்மாவை நன்றாக வைத்து பார்த்துக்கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்தார்.

வில்லன் வாய்ப்பு கேட்டு ஒவ்வொரு சினிமா ஆபிஸாக ஏறி இறங்கினார். குண்டான இவரது உடலுக்கு காமெடி காட்சிகள்தான் சரிபடும் என்றார்கள் இயக்குனர்கள். அதிலும் பத்தோடு பதினொன்றாய் துணைநடிகராகதான் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

சுதீப் நடித்த படத்தின் படப்பிடிப்பு. இடைவேளையில் யாரோ சுதீப்பிடம் நந்தாவை அறிமுகப்படுத்தினார்கள். “வில்லன் நடிகர் சுதீர் சாரோட பையன் இவரு”

நந்தாவிடம் அன்பாக பண்பாக பேசிய முதல் ஹீரோ சுதீப்தான்.

“தலைவா. பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா? நீ எதுக்கு நடிக்கணும்னு நெனைக்கிறே? உனக்கு நடிப்பு வர்றமாதிரி எனக்கு தோணலை. டைரக்‌ஷன் பண்ண ட்ரை பண்ணு. அதுதான் உனக்கு சரியா வரும்”

அடர்ந்த இருளில் தடவிக்கொண்டிருந்தபோது மெழுகுவர்த்தி ஏற்றியது மாதிரி இருந்தது சுதீப்பின் யோசனை.

‘உய்யாலே’ படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றத் தொடங்கினார். இயக்கம்தான் தனக்கு மகிழ்ச்சி தரும் என்பதை உணர்ந்தார்.

தொழில் கற்றுக்கொண்ட பிறகு தனிக்கடை போடவேண்டும்தானே?

‘ஸ்க்ரிப்ட்’ தயார் செய்துக்கொண்டு வாய்ப்புக்காக மீண்டும் சினிமா கம்பெனிகளின் படி ஏற ஆரம்பித்தார். டைட்டில் ‘ஹரஹர மகாதேவ்’

ஜெர்மனி என்.ஆர்.ஐ. ஒருவர் இவரது ஸ்க்ரிப்ட்டை கேள்விப்பட்டு, படம் தயாரிக்க முன்வந்தார். ஆன்லைனிலேயே அட்வான்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்தார்.

‘பட வேலைகளுக்காக ஊருக்கு வருகிறேன்’ என்று செய்தி அனுப்பிய தயாரிப்பாளரை வரவேற்க விமானநிலையத்துக்கு அவசர அவசரமாக ஓடினார் நந்தா. பெங்களூர் விமான நிலையமே பரபரப்பாக இருந்தது. 2010ல் நடந்த மங்களூர் விமான விபத்து உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதேதான். விபத்துக்குள்ளான விமானத்தில் தயாரிப்பாளரும் இருந்தார். இறந்துவிட்டார். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரி ஆகிவிட்டது கிஷோருக்கு. ஒரு மனிதனை வாழ்க்கை முழுக்க துரதிருஷ்டம் மட்டுமேவா துரத்திக் கொண்டிருக்கும்?

வாழ்க்கையை வெறுத்தவருக்கு தற்கொலை எண்ணம் தோன்றியது. நேராக அறைக்குச் சென்றார். சுழன்றுக் கொண்டிருந்த மின்விசிறியை நிறுத்தினார். அதில் சுருக்குக் கயிறை மாட்டினார். மறு முனையை தன் கழுத்தோடு பிணைத்தார். ஸ்டூலை காலால் எட்டி உதைத்தார்.

மளுக்.

முறிந்தது நந்தாவின் கழுத்தல்ல. மின்விசிறி. தற்கொலை முயற்சியிலும் துரதிருஷ்டத் தேவதை அவரை கைவிடவில்லை. அவரது உடல் பாரத்தை சீலிங் ஃபேனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

நொந்துப் போய் கட்டிலில் விழுந்தார். தன்னை கைவிட்ட ஃபேனை அண்ணாந்துப் பார்த்துக்கொண்டே இருந்தார். எவ்வளவு நேரம் போனது என்றே தெரியவில்லை. அவரது தம்பி தருண் வந்தான். அண்ணனின் நிலையைப் பார்த்தான். எதுவுமே பேசவில்லை.

“ஒண்ணும் பேசாதே. முதல்லே ரிலாக்ஸ் ஆகலாம், வா”

தருண், தன்னுடைய டூவீலரில் அண்ணனை ஏற்றிக்கொண்டு கிரிக்கெட் மைதானத்துக்குச் சென்றான்.

அங்கே ஓர் ஆச்சரியம்.

சுதீப் பிராக்டிஸ் செய்துக் கொண்டிருந்தார். நட்சத்திர கிரிக்கெட்டில் கலக்கும் கர்நாடகா புல்டோஸர் அணியின் கேப்டன் இல்லையா?

“என்னதான்யா பண்ணிக்கிட்டிருக்கே? உன்னை எங்கேயும் பார்க்க முடியலையே?”

மனசுக்குள் இருந்த சுமை மொத்தத்தையும் அழுகையாக சுதீப்பிடம் கொட்டினார் நந்தா.

“முதல்லே இந்த சனியன் புடிச்ச கழிவிரக்கத்துலே இருந்து வெளியே வந்து தொலை. படம் பண்ணிக்கிட்டிருக்கேன். கூட மாட வந்து வேலையை பாரு”

அந்த படம் ‘கெம்பேகவுடா’. நம்ம ஊரு ‘சிங்கம்’ படத்தைதான் கன்னடத்தில் ரீமேக்கி இயக்கி நடித்தார் சுதீப். படப்பிடிப்புத் தளத்தில் நந்தாவிடம் அத்தனை பேரும் அன்பை கொட்டினார்கள் (சுதீப் எல்லோரிடமும் நந்தாவின் கதையை சொல்லி எச்சரித்திருக்கக்கூடும்). பார்க்கும் போதெல்லாம் வயிற்றில் குத்தி, ‘குண்டா’ என்று கிண்டல் செய்வார். அதற்காகவே ஜிம்முக்கு போனார். கடுமையான உழைப்பு. உடல் எடையும் வெகுவாக குறைந்தது.

மெகாசீரியல் நாயகி மாதிரி எப்போதும் அழுது வடிந்துக் கொண்டிருந்தவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கை மீது நம்பிக்கை வந்தது. தன் வாழ்க்கையில் இருந்தே ஓர் ஒன்லைனரை பிடித்தார்.

‘ஹீரோ தற்கொலைக்கு முயற்சிக்கிறான். தற்கொலை அவனுக்கு தண்ணி காட்டுகிறது’

தன்னை மாதிரியே தான் எடுக்கும் சினிமாவும் படுசோகமாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். கதையை காமெடியாக்கினார்.

ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் முதலிரவுதான் முதல் காட்சி. இருவருக்கும் அப்போதே பிரிவு வந்துவிடுகிறது. பசலைத் துயரம் தாங்காமல் ஹீரோ தற்கொலைக்கு முயற்சிக்கிறான். அடுத்தடுத்த முயற்சிகள் படுதோல்வி. தன்னை தானே கொன்றுக்கொள்ள முடியாது என்று தெரிந்ததும், ஒரு புரொஃபஷனல் கில்லரிடம் தன்னை கொல்வதற்கு காண்ட்ராக்ட் கொடுக்கிறான். இதற்கிடையே மனம் திருந்திய ஹீரோயின் மீண்டும் ஹீரோவிடம் வந்து சேர்ந்து விடுகிறார். இப்போது தான் சாவதற்குரிய காரணமே இல்லை. எனவே தன்னுடைய காண்ட்ராக்டை கேன்சல் செய்துவிடுமாறு கில்லரிடம் வேண்டுகிறான். எடுத்துக்கொண்ட வேலையை முடிக்காமல் விடுவதில்லை என்று கில்லர் இவனை கொல்ல அடுத்தடுத்து முயற்சிக்கிறான்.

கலாட்டாவாக இப்படி ஸ்க்ரிப்ட் எழுதி, ‘விக்டரி’ என்று டைட்டிலும் வைத்தாயிற்று. தயாரிப்பாளரை தேட வேண்டும்.

அப்போது ஏராளமான படங்களில் துணைநடிகராக நடித்துவந்த ஷரண், ‘ராம்போ’ படம் மூலம் ஹீரோ ஆகியிருந்தார். நடிகை ஸ்ருதியின் அண்ணன் இவர். படம் ஆவரேஜ் வெற்றிதான் என்பதால் அடுத்த படம் சூப்பர்ஹிட்டாக வேண்டும் என்று கதை தேடிக் கொண்டிருந்தார். நந்தா சொன்ன கதை அவருக்குப் பிடித்துப் போக ‘விக்டரி’யை ஷரணே தயாரித்தார்.
2013ல் இரண்டரை கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் வெளிவந்தது. யாருமே எதிர்பாராத ப்ளாக்பஸ்டர் ஹிட். டிவி சேனல் ஒன்று இந்தப் படத்தின் ஒளிபரப்பு உரிமையை இரண்டரை கோடி கொடுத்து வாங்கியது அப்போது சாண்டல்வுட்டின் பரபரப்பான செய்தி.

திடீரென பெரிய ஹீரோவாகிவிட்ட ஷரண், தனக்கு இந்த அந்தஸ்தை பெற்றுக் கொடுத்த நந்தாவை அப்படியே கோழிமாதிரி அமுக்கி அடுத்த படத்துக்கும் அட்வான்ஸ் கொடுத்துவிட்டார். கையில் கதை இல்லாமல் என்னத்தை எடுப்பது என்றே இவருக்கு தெரியவில்லை.
அப்போது தமிழில் சக்கைப்போடு போட்ட ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை யதேச்சையாக பார்த்தார். ஷரணிடம் சொல்லி ரீமேக் உரிமையும் வாங்கிவிட்டார். 2014ல் ‘அத்யக்‌ஷா’ என்கிற பெயரில் வெளியான அந்த படம், முந்தைய படத்தைவிட இருமடங்கு கூடுதலான வெற்றியைப் பெற்றது.

“என்னையெல்லாம் வெச்சி படம் எடுக்க மாட்டியா நந்தா?” என்று சுதீப் விளையாட்டாக கேட்க... “எடுத்துட்டாப் போச்சு. நீங்க கொடுத்த லைஃபுதானே?” என்றார் நந்தா.

அடுத்த வாரமே அறிவிப்பு வந்துவிட்டது. நந்தாவின் மூன்றாவது படத்தில் சுதீப் நடிக்கிறார். தலையே சுற்றிவிட்டது. சுதீப்புக்கு போன் அடித்தார்.

“விளையாட்டுக்கு கேட்கறீங்கன்னு நெனைச்சேன்”

“யோவ். இதென்ன விளையாட்டு சமாச்சாரமா? அடுத்த மாசம் ஷூட்டிங் போயிடலாம் இல்லே?”

மறுபடியும் அதே பிரச்சினை. கையில் கதையே இல்லை. தயங்கித் தயங்கிச் சொன்னார்.

“அத்தாரிண்டிக்கி தாரேதின்னு தெலுங்குலே ஒரு சூப்பர் படம் வந்திருக்கு. கன்னடத்துலே நான்தான் ரைட்ஸ் வாங்கியிருக்கேன். செஞ்சுடலாமா?”

சந்தோஷமாக செய்தார் நந்தா.
இந்த மாத தொடக்கத்தில் ‘ராணா’ என்கிற பெயரில் வெளியாகியிருக்கும் அந்த திரைப்படம், கன்னட சினிமாவின் அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்திருக்கிறது. சுதீப்பின் கால்ஷீட்டுக்காக கால்கடுக்க எத்தனையோ கன்னட இயக்குனர்கள் காத்திருக்க, தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் நந்தாவுக்கே கொடுத்திருக்கிறார்.

சினிமாவில் முதல் மூன்று படங்களையும் ஹிட்டாக்கி, ஹாட்ரிக் கொடுத்த இயக்குனர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம்.

ஆனால்-

முதல் மூன்று படங்களுமே ப்ளாக்பஸ்டர் ஹிட் என்கிற சாதனைக்கு நந்தாதான் சொந்தக்காரர்.

இதற்கெல்லாம் நந்தா நன்றி சொல்ல வேண்டியது முன்பிருந்த தன்னுடைய குண்டு உடலுக்குதான். ஒருவேளை அவர் குண்டாக இல்லையென்றால், அன்று நடந்த தூக்கு முயற்சியில் பரலோகம் போய் சேர்ந்திருப்பார் இல்லையா?

நாளைய தீர்ப்பு முதல் புலி வரை!

$
0
0
அந்த கட்டவுட்டை பார்த்ததுமே எல்லாருக்கும் உடனடியாக பூஸ்ட் அடித்ததுமாதிரி ‘தன்னம்பிக்கை’ ஏற்பட்டது என்று சொன்னால் மிகையில்லை.

“இவனெல்லாம் ஹீரோ ஆயிட்டான். நாம ஆக முடியாதா?”

முப்பது அடி உயரத்துக்கு ஒல்லியான விஜய்யின் கட்டவுட். கீழே ‘அனைத்திந்திய விஜய் ரசிகர் மன்றம்’ என்று எழுதப்பட்டிருந்ததை கண்டவர்கள் காண்டு ஆனதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

அறிமுகப் படத்திலேயே ‘அனைத்திந்திய ரசிகர் மன்றம்’ ட்ரெண்டினை கொண்டுவந்தவர் விஜய்தான். இன்று, ரஜத் (‘இயக்குனர்’ படத்தின் ஹீரோ கம் இயக்குனர் கம் ஒளிப்பதிவாளர், படத்தில் எட்டு ஹீரோயினாம்) என்பவருக்கு ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்றால், 1992லேயே விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ.சி. செய்த அடாவடியான அமர்க்களங்கள்தான் காரணம். படம் வெளியான அரங்கங்கள் முழுக்க ‘ஸ்டார்’ டிசைனால் அலங்கரித்திருந்தார்கள். அப்போதெல்லாம் ரஜினிக்கு மட்டும்தான் ஸ்டார் அலங்காரம் (அவர் சூப்பர் ஸ்டார் இல்லையா?) என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது.

எக்சர்சைஸ் செய்து ஆர்ம்ஸ் காட்டி அறிமுகமாகும் விஜய்யை திரையில் பார்த்த அத்தனை பேரும் கை கொட்டி சிரித்தார்கள். ஒரு வகையில் பார்க்கப் போனால் வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷூக்கும், பவர்ஸ்டார் சீனிவாசனுக்கும் முன்னோடி இளையதளபதி விஜய்தான்.

அமெரிக்காவில் ஆக்டிங் படித்துவிட்டு வந்திருக்கிறார் மாதிரி பில்டப்புகள் எடுபடவில்லை. ‘நாளைய தீர்ப்பு’ அட்டர் ப்ளாஃப். விஜய்யின் அறிமுகம் கேலிக்குரியதாக ஆகிப்போனது.

கன்னி முயற்சியே படுதோல்வி எனும்போது, கொஞ்சம் ‘கேப்’ விட்டுதான் ஆடுவார்கள். ஆனால், விடாமுயற்சிக்கு பேர் போன எஸ்.ஏ.சி., எப்படியாவது மகனை தேற்ற விஜயகாந்திடம் சரணடைந்தார். ஏனெனில் தமிழ் சினிமாவில் அப்போதெல்லாம் தோல்வியடைந்தவர்களின் வேடந்தாங்கல் கேப்டன்தான். விஜயகாந்துக்கு திரையுலகில் அடையாளம் பெற்றுத் தந்தவர் எஸ்.ஏ.சி. அந்த நன்றிக் கடனுக்காக ‘செந்தூரப் பாண்டி’ தயார் ஆனது (பிற்பாடு இதே மாதிரி சூரியாவுக்கும் வாழ்வு கொடுக்க, கேப்டன் ‘பெரியண்ணா’ நடித்தார். ஆனால், அப்போது கேப்டனுக்கே வாழ்வு இல்லை என்பதால், அது backfire ஆகிவிட்டது).

‘செந்தூரப் பாண்டி’, ஆஹா ஓஹோவென்று சொல்ல முடியாவிட்டாலும் ‘ஹிட்’ ஆனது. யுவராணியோடு, விஜய்யின் கெமிஸ்ட்ரி கவர்ச்சியாக ‘கபடி’ ஆடியதில் பிக்கப் ஆனது. இந்த பாயிண்டை அப்படியே பிக்கப் செய்து, ‘ரசிகன்’ ஆக்கினார் எஸ்.ஏ.சி.

‘ரசிகன்’ படப்பிடிப்பில் இருந்தபோது, ஏதோ ஒரு சினிமா பத்திரிகையில் படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர் ஒருவரின் பேட்டியை வாசித்திருந்தேன். அநேகமாக எஸ்.பி.ராஜ்குமார் என நினைவு. ‘இளைய தளபதி’ என்கிற வார்த்தையை முதன்முதலாக கேட்டது அப்போதுதான். ஸ்டண்ட் காட்சிகளில் எல்லாம் டூப் போடாமலேயே, இளைய தளபதி எப்படி ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார் என்பது அந்த பேட்டியில் விரிவாக பதிவாகி இருந்தது.

செந்தூரப் பாண்டியின் மூலமாக பட்டி தொட்டியெங்கும் அறிமுகமாகியிருந்த விஜய்க்கு, ‘ரசிகன்’ ஓபனிங் பெரிய சவாலாக எல்லாம் இல்லை. ஸ்யூர் ஹிட் ஸ்க்ரிப்ட். வைல்டான செக்ஸ். ஸ்ட்ராங்கான காமெடி. லேசான செண்டிமெண்ட். ‘பம்பாய் குட்டி, சுக்கா ரொட்டி’ பாட்டுக்கு தமிழ்நாடே டேன்ஸ் ஆடியது. விஜயின் புயல்வேக நடன அசைவுகளே அவரது தனித்துவமானது. ‘ஆட்டோ ராணி ஹாரனை கொஞ்சம் நானும் அமுக்கட்டுமா?’ பாடலில் ‘ஹாரனுக்கு’ சென்ஸாரில் தடா போட அதுவே பரபரப்பாகி படத்துக்கும் விளம்பரமாக அமைந்தது. சங்கவி, ஸ்ரீவித்யா, விஜயகுமார், மனோரமா, கவுண்டமணி, செந்தில், ‘மடிப்பு அம்சா’ விசித்ரா என்று பிரபலமான நட்சத்திரப் பட்டாளத்தை எப்படி ஒரே படத்தில் கட்டி மேய்ப்பது என எஸ்.ஏ.சி. பாடமே எடுத்திருந்தார்.

விஜய்யின் முகத்தை மோசமாக எழுதிய குமுதத்தின் விமர்சனத்தை எல்லாம் தவிடுபொடியாக்கி ‘ரசிகன்’ வெள்ளிவிழா கொண்டாடியதால், விஜய்க்கு ஏகப்பட்ட கிராக்கி. தன் மகனை மாஸ் ஹீரோவாக வடிவமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ரசிகன் டைப் ஸ்க்ரிப்டுகளையே தேர்ந்தெடுத்தார் எஸ்.ஏ.சி. ‘தேவா’, ‘விஷ்ணு’ போன்ற படங்கள் வசூலில் குறைவைக்கவில்லை.

ரசிகனில் ‘பம்பாய் குட்டி’ பாடலை விஜய்யே பாடியிருந்தார். பாடல் ஓடும்போது ‘இந்தப் பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்’ என்று உலக சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக வித்தியாசமாக ஒரு டைட்டில் போட்டார் எஸ்.ஏ.சி.

பின்னணிப் பாடகராகவும் விஜய் (அவருடைய தாய்மாமா எஸ்.என்.சுரேந்தர், அவரும் சில படங்களில் விஜய்க்கு பின்னணி பாடியிருக்கிறார், அம்மாவும் நல்ல பாடகி) நிலைபெற்றுவிட, அடுத்தடுத்த படங்களில் விஜய்யையே பாடவைக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டினர். நல்ல குரல்வளம், நளினமான நடன அசைவுகள், காமெடி என்று வழக்கமான நடிப்பை தாண்டிய ப்ளஸ் பாயிண்டுகள் விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் இமேஜை பெற்றுக் கொடுத்தது.

இதே காலக்கட்டத்தில் விஜய்க்கு போட்டி நடிகர்கள் என்றால் அரவிந்த்சாமி, பிரபுதேவா, பிரசாந்த் போன்றவர்கள்தான். அஜித்தெல்லாம் அப்போது ஆட்டையிலேயே இல்லை. யாருமே எதிர்ப்பார்க்காமல் சட்டென்று பிக்கப் ஆன ஆல்டைம் வொண்டர் அஜித். அப்போதிருந்த விஜய்யின் சகப்போட்டியாளர்களுக்கு அவ்வளவு சமர்த்து போதாது என்பதும் அவரது அதிரடிப் பாய்ச்சலுக்கு உதவியது.

மசாலா ரூட்டிலேயே போய்க்கொண்டிருந்த விஜய்க்கு காதல் படங்களிலும் நடித்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது. ஏனெனில் பிரசாந்தும், சில குட்டி நடிகர்களும் இந்த ஏரியாவில் ரவுண்டு கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அம்மாதிரி அவர் தேர்ந்தெடுத்த சில ஸ்க்ரிப்டுகள் ‘ராஜாவின் பார்வையிலே’ (அஜித்துக்கு துக்கடா வேடம்), ‘சந்திரலேகா’, ‘பூவே உனக்காக’, ‘வசந்தவாசல்’, ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ போன்றவை.

இதில் ‘பூவே உனக்காக’ யாருமே எதிர்பாராத அதிரிபுதிரியான ஹிட் (இயக்குனர் விக்ரமனுக்கும் இது ரீபர்த்). நல்ல இயக்குனரிடம் மாட்டினால், விஜய்யும் நல்ல நடிகர்தான் என்பது புரிந்தது. இந்தப் படத்தில் நடிக்கும்போது போதிய ஆர்வம் காட்டாமல் ஏனோதானாவென்றுதான் விஜய் நடித்தார். இதன் வெற்றியிலும் அவருக்கு ஏகத்துக்கும் சந்தேகமிருந்தது. மாஸ் ஹீரோவான தனக்கு க்ளாஸ் சரிப்படாது என்று அவர் நினைத்திருக்கக் கூடும்.

ஆனால்-

அந்த ‘பூவே உனக்காக’தான் விஜய்யின் நடிப்புலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்துக்கு பிறகு வெளிவந்த விஜய்யின் டெம்ப்ளேட் படமான ‘மாண்புமிகு மாணவன்’ (எஸ்.ஏ.சி. இயக்கம்) படுதோல்வி அடைந்தது. இனிமேல் விவரமான ஸ்க்ரிப்டுகளைதான் ஓக்கே செய்ய வேண்டும் என்று விஜய் முடிவெடுத்து விட்டதால், இயக்குனரான எஸ்.ஏ.சி.யின் திரையுலக வாழ்க்கையே ஆட்டம் கண்டது குறிப்பிடத்தக்கது. விஜய், கதையை நம்பி நடித்த ‘லவ் டுடே’வும் ஹிட்.

வசந்தின் ‘நேருக்கு நேர்’ பெரிய ஹிட் இல்லையென்றாலும், ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் குறித்த அறிவினை விஜய் அறிந்துக்கொள்ள உதவியது. ‘காதலுக்கு மரியாதை’ தமிழ் திரையுலகில் தவிர்க்கவே முடியாத நடிகர் என்கிற அந்தஸ்தை அவருக்கு பெற்றுத் தந்தது.

அதன் பிறகு அவர் தேர்ந்தெடுத்து நடித்த இரண்டு ஸ்க்ரிப்டுகள் வெற்றி (நினைத்தேன் வந்தாய், பிரியமுடன்). அவருக்காக அப்பா ஓக்கே செய்திருந்த ‘நிலாவே வா’ படுதோல்வி அடைந்ததோடு, கே.டி.குஞ்சுமோன் என்கிற தயாரிப்பாளரை நிரந்தர வனவாசத்துக்கும் அனுப்பியது (இந்த அட்டர் ஃப்ளாபுக்கு பிறகு விஜய்யை வைத்து உடனடியாக இன்னொரு  அட்டர் ஃப்ளாபையும் தயாரித்தார் குஞ்சுமோன், ‘என்றென்றும் காதல்’).

‘துள்ளாத மனமும் துள்ளும்’ சூப்பர்ஹிட் படத்துக்கு பிறகு, விஜய் எதை தொட்டாலும் தோல்வி என்கிற நிலை ஏற்பட்டது. திரையுலகில் எல்லா பெரிய நடிகர்களுமே கடந்து வரவேண்டிய சோதனைக்காலம் இது. இத்தனைக்கும் ‘மின்சார கண்ணா’, ‘கண்ணுக்குள் நிலவு’ போன்ற படங்கள் கமர்ஷியலாகவும் ஹிட் ஆகக்கூடிய அம்சங்களை கொண்டிருந்தும் தோல்வி அடைந்தன. அப்பாவின் இயக்குனர் அந்தஸ்தை தக்கவைப்பதற்காக அவர் நடித்துக் கொடுத்த ‘நெஞ்சினிலே’, எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றியது.

எஸ்.ஜே.சூர்யாவின் முதல் படம் வாலி. அஜித்தின் இடத்தை தமிழில் நிரந்தரமாக்கிய திரைப்படம். அடுத்து, விஜய்க்கு சூப்பர்ஹிட் படம் வேண்டும் என்கிற வெறியில் ‘குஷி’யை இழைத்து இழைத்து இயக்கினார். சில தோல்விகளை அடுத்தடுத்து பெற்றிருந்த விஜய், இந்த படத்தில் “என்னை மட்டுமல்ல, என் இமேஜை கூட உன்னால அசைக்க முடியாது” என்று அஜித்துக்கு பஞ்ச் கொடுத்துப்பேச, படம் பற்றிக் கொண்டது.

குஷியை அடுத்தே விஜய் – அஜித் மோதல் திரையில் சுறுசுறுப்பானது. ஒரு கட்டத்தில் இந்த ஆடுபுலி ஆட்டம் வெறுத்துவிட, அஜித்தே தன்னை போட்டியில் இருந்து கழற்றிக் கொண்டு தன் பாதை தனிப்பாதை என்று போய்விட்டார். விஜய் இன்னமும் பொத்தாம் பொதுவாக வானத்தைப் பார்த்து பஞ்ச் அடித்துக் கொண்டிருக்கிறார்.

‘குஷி’யின் மெகாவெற்றியை தொடர்ந்து ‘பிரியமானவளே’, ‘ஃபிரண்ட்ஸ்’ என்று ஹாட்ரிக் வெள்ளிவிழா கொண்டாடினார் விஜய்.

ஆனால்-

விஜய்க்கு ஒரு ராசி. ஓராண்டு முழுக்க வெற்றி என்றால், அடுத்த ஆண்டு முழுக்க படுதோல்வி காண்பார். மீண்டும் ஒரே ஒரு வரலாற்று வெற்றியை எட்டி, அத்தனை தோல்வியின் சுவடுகளையும் துடைப்பார். இந்த தோல்வி காலத்தில் அவர் நடித்த நல்ல படங்களும் கூட ஓடாது என்பது என்னமாதிரியான டிசைன் தெரியவில்லை (‘வசீகரா’ இன்றும் டிவியில் பெருவாரியாக ரசிக்கப்படும் படம், ஆனால் விஜய்யின் வனவாச காலத்தில் வெளியாகி தோல்வி அடைந்தது).

2003 தீபாவளிக்கு வெளியான திருமலை அவருக்கு திருப்புமுனை. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ‘போக்கிரி’ வரை வெற்றிமழையிலேயே விஜய் நனைந்துக் கொண்டிருந்தார் (இடையில் ‘மதுர’, ‘ஆதி’யெல்லாம் திருஷ்டிபடிகாரங்கள்).

‘போக்கிரி’யின் வரலாற்று வெற்றிக்குப் பிறகு அடுத்த நான்காண்டுகள் சிரமதசை. இந்த காலக்கட்டத்திலும் கூட ஓரளவுக்கு தேறக்கூடிய படங்களான ‘வேட்டைக்காரன்’, ‘காவலன்’ போன்றவை போதுமான வெற்றியை ருசிக்க முடியவில்லை. ‘வேலாயுதம்’ வந்துதான் மீண்டும் இளையதளபதியின் ஆட்சி.

‘நண்பன்’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’யென்று சமீபவருடங்கள் ஆரோக்கியமாக தெரிந்தாலும் ‘தலைவா’, ‘ஜில்லா’வென்று அவ்வப்போது அவர் சறுக்கவும் தவறவில்லை.

சிம்புதேவன் இயக்கத்தில் புலி, அட்லி இயக்கத்தில் ஒரு படம், மீண்டும் பிரபுதேவாவுடன் இணைகிறார் என்று கிராப் உயர்ந்துக் கொண்டிருப்பது மாதிரிதான் தெரிகிறது.

எனினும் விஜய்யின் எந்த படத்தையுமே நிச்சயவெற்றி என்று உறுதியாக நம்ப முடியாத நிலை நீடிப்பதுதான் அவரது ஆகப்பெரிய பலவீனம். கிட்டத்தட்ட இதே நிலைதான் அவரது நேரெதிர் போட்டியாளரான அஜீத்துக்கும் என்றாலும், அஜித்தின் தோல்விப் படங்கள் வணிகரீதியாக பெரும் நஷ்டத்தை தருவதில்லை. ஓரளவுக்கு சமாளித்துக் கொண்டு, அடுத்து விட்டதைப் பார்த்துக் கொள்ளலாம் என்பது மாதிரி இருக்கிறது. ஆனால் விஜய்யின் ஒரு படம் தோல்வியுற்றால், அந்த செயினில் வரும் அத்தனை ஆட்களுமே தலையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டியதுதான் என்பது நிலை. எனவேதான் அஜித்தைவிட விஜய்யின் படங்களுடைய வெற்றி, தோல்வியை இண்டஸ்ட்ரி முக்கியமானதாக கருதுகிறது.

எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய் என்று தலைமுறைகளாய் தொடரும் வரிசையில் கிட்டத்தட்ட அஜித், ரஜினியின் இமேஜை நெருங்கிவிட்டார். ஆனால் இன்னமும் விஜய்யால் அடுத்த கமல் என்கிற இலக்கில் பாதி தூரத்தை கூட கடக்க முடியவில்லை. (இங்கே ரஜினி-கமல் என்று இதை ஆளுமைரீதியாக லிட்டரலாக எடுத்துக் கொள்ளக்கூடாது, அந்த brand positionஐ சுலபமாக சுட்டிக் காட்டவே இந்த பெயர்கள்)

ரஜினி ஆவது கமல் ஆவதை விட ரொம்ப ஈஸிதான் என்றாலும்கூட-

மிகத் திறமையான கலைஞரான விஜய், இருபத்து மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக திரைத்துறையில் பணியாற்றுகிறார். இன்னமும் அவருக்கு இயக்கம் மாதிரியான நடிப்பு தவிர்த்த மற்ற தொழில்நுணுக்கங்களில் ஆர்வம் ஏற்பட்டிருப்பதாக கூட அடையாளங்கள் எதுவும் தெரியவில்லை. இத்தனைக்கும் அவரது அப்பாவே வெற்றிகரமான இயக்குனர்தான். ஆனால், அஜித்தோ சரண் போன்ற இயக்குனர்களிடம் பணியாற்றி இயக்கத்தின் அரிச்சுவடியை முறையாக கற்கிறார்.

கமலஹாசன் தன்னுடைய நாற்பதாவது வயதில் ‘மகாநதி’ செய்துக் கொண்டிருந்தார். விஜய்யோ ‘புலி’யில் நடித்துக் கொண்டிருக்கிறார். நாற்பதுக்குள் கமலஹாசன் பெற்ற விருதுகளும், செய்த சாதனைகளும் யாராலும் ஈடு செய்ய முடியாததுதான் என்றாலும், அவருடைய இடத்தை நிரப்பவேண்டிய இடத்தில் இருப்பவர், அதில் பாதியாவது செய்து முடித்திருக்க வேண்டாமா? அஜித்துக்கு நடக்கத்தான் வரும், நடிக்க வராது. நன்கு நடிக்கத் தெரிந்த விஜய் இன்னமுமா ‘தலைவா’, ‘ஜில்லா’, ‘கத்தி’யென்று பஞ்ச் டயலாக் அடித்துக் கொண்டிருப்பது?

திரையுலகில் தோல்விகள் சகஜம்தான். சில ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்க்கும்போது அந்த தோல்விகள் கவுரவமான தோல்விகளாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு கமல்ஹாசன், 1991ல் பெற்ற ‘குணா’ தோல்வி. அதை அவரால் பெருமையாக திரும்பிப் பார்க்க முடியும். ‘அன்பே சிவம்’, ‘ஹேராம்’ என்று கம்பீரமான தோல்விகளை படைக்கவே பிறந்தவர் அவர். இன்றைய ‘உத்தம வில்லன்’ கூட இருபது ஆண்டுகளுக்கு பிறகு கமலின் புகழை பறைசாற்றுவதாகவே இருக்கும்.

விஜய்யின் தோல்விகள் அத்தகைய தன்மை கொண்டவையா? ‘தலைவா’ மாதிரி வெற்றிக்காக முயற்சித்து, அடையக்கூடிய தோல்விகள் அசிங்கமானவைதானே?

மாஸ் படங்கள் நடித்து வசூலை வாரிக்குவிக்க அஜித் போதும். முன்பு ரஜினி இருந்தார். ஆனானப்பட்ட ரஜினியே இப்போது கோச்சடையான், லிங்காவென்று அடுத்தடுத்து அதிர்ச்சி கண்டு, தன்னை தானே மறுபரிசீலனை செய்துக்கொள்ள முன்வந்திருக்கிறார்.

திரையுலகில் எத்தனை படங்கள் வெற்றிப் படங்கள் என்பது கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அப்படி பார்த்தால் சிவாஜியை இன்னேரம் நாம் முற்றிலுமாக மறந்திருக்க வேண்டும். எண்பதுக்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களில் எம்.ஜி.ஆர் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் – சிவாஜியின் படங்களை நினைவுகூறி எண்ணச் சொன்னால், பத்து படங்களுக்கு மேல் எம்.ஜி.ஆரின் படங்கள் தேறினால் யதேஷ்டம். ஆனால், சிவாஜியின் படங்களுக்கு நம்முடைய இரு கை, கால் விரல்களை இருமுறை எண்ணிய பிறகும் போதாது.

விஜய், சிவாஜி – கமல் வரிசையில் பொசிஸன் ஆகவேண்டிய நடிகர். திரைக்கு வெளியே உருவாகும் இமேஜ் அஜித்தை காப்பாற்றும். விஜய்யோ திரையில் உழைத்துதான் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.

இன்று நாற்பதாவது பிறந்தநாள் காணும் விஜய், அடுத்த ஐந்தாண்டில்...

· ஒரு படமாவது இயக்கியிருக்க வேண்டும்.

· அவர் நடிப்பில் வெளிவந்த ஒரு படமாவது, நடிப்புக்காக தேசிய விருதுக்கு மோதியிருக்க வேண்டும்.

· தான் நடிக்காமல், இயக்காமல் (தனுஷ், ஷங்கர் மாதிரி) இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘காக்கா முட்டை’ மாதிரி பேசப்படக்கூடிய இரண்டு மூன்று படங்களையாவது தயாரித்திருக்க வேண்டும்.

வரலாற்றில் வாழவிரும்பினால் விஜய் இவற்றை பரிசீலிக்கலாம். வசூல்தான் டார்கெட், விசில்தான் லட்சியமென்றால் வழக்கமாக ஆடும் கபடியையே யூ கண்டினியூ விஜய்!
Viewing all 406 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>