Quantcast
Channel: யுவகிருஷ்ணா
Viewing all 406 articles
Browse latest View live

நிலவை முத்தமிடு

$
0
0
சீனு, கல்லூரிப் படிப்பின் கடைசி ஆண்டில் இருக்கிறான். அம்மா, அப்பா, அக்கா என கச்சிதமான குடும்பம்.

அப்பா, எழுபதுகளின் ஜாக்கிரதை உணர்வுகளோடே வாழ்க்கையை எதிர்கொள்கிறவர். பாட்டனும், பூட்டனும் சும்மாவா சொல்லியிருப்பான். எல்லாத்துக்கும் ஓர் அர்த்தம் இருக்கும் என்று ஏற்கனவே விதிக்கப்பட்ட டெம்ப்ளேட் வாழ்க்கையை நிதானமாக வாழ்ந்து முடிக்க நினைக்கும் அந்த காலத்து ஆள். மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்.

சீனுவோ, உலகமயமாக்கலின் விளைவு. நாலு ரவுண்டு ஆடினால், ஜோக்கர் நிச்சயம் வந்துவிடும். ரிஸ்க்கே எடுக்காமல், வருமுன் காப்போம் என்று வழவழா கொழகொழாவென்று வாழ்வதில் அர்த்தமில்லை என்று நினைப்பவன். கல்லூரி நாடக விழாவில் தொடர்ச்சியாக இரண்டு முறை முதல் பரிசினை வென்ற படைப்பாளி. மூன்றாவது முறையும் கோப்பையை வென்றுவிட்டால், நிரந்தரமாக அவனிடமே கோப்பை இருக்கும்.

அப்பாவுக்கு படிப்பு தவிர்த்த மகனின் மற்ற செயல்பாடுகளில் ஒப்புதல் இல்லை. எனவே, தன்னுடைய நாடக ஆர்வத்தை அப்பாவிடமிருந்து மறைக்கிறான் சீனு.

தான் பெற்ற மகன், தான் விரும்பும் வகையில்தான் வளரவேண்டும் என்று நினைக்கிறார் அப்பா. ஏனெனில் அவர், அவருடைய அப்பா விரும்பிய வகையில்தான் வளர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். தனக்கு தனித்துவம் இருக்கிறது என்று நம்புகிறான் சீனு. அப்பாவின் நிழலில் ஆடு மாதிரி பாதுகாப்பாக வளர்ந்து கல்யாணம் கட்டி, குழந்தை பெற்று தானும் அதே அப்பா மாதிரி வாழ்வதை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. கலைத்துறைதான் தன்னுடைய வாழ்வின் அர்த்தமென்று கருதுகிறான்.

வென்றது சீனுவா, அவனுடைய அப்பாவா என்பதுதான் கதை.
1995ஆம் ஆண்டு ‘பாக்யா’ வார இதழில் தொடராக பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ‘நிலவை முத்தமிடு’.

வர்ணனைகள் எதுவுமின்றி வெறும் வசனங்களால் மட்டுமே இருநூறு பக்கங்களுக்கும் மேலான முழுநாவலும் எழுதப்பட்டிருக்கிறது. தமிழில் இந்த வடிவில் வேறு ஏதேனும் நாவல் எழுதப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால்- வெறும் வசனங்களால் மட்டுமே தமிழில் எழுதப்பட்ட முதல் தொடர்கதை இதுதானென்று பட்டுக்கோட்டை பிரபாகர் முன்னுரையில் சொல்கிறார்.

வர்ணனைகள் இல்லாத இழப்பை வசனங்களில் புத்திசாலித்தனமாக ஈடுகட்டியிருக்கிறார் பட்டுக்கோட்டை. எனினும் அதற்காக திரும்பத் திரும்ப பாத்திரங்களின் பெயர்கள் எல்லா வசனங்களிலும் இடம்பெறுவது வாசிக்க கொஞ்சம் இடையூறாக இருக்கிறது. சீனுவின் நண்பன் அத்தியாய ஆரம்பத்தில் ‘சீனு’ என்று பெயர் சொல்லி அழைப்பது ஓக்கே. ஆனால், அவன் ஒவ்வொரு முறை இவனிடம் பேசும்போதும் “டேய் சீனு” “இங்க பார்றா சீனு” “என்னடா சொல்றே சீனு” என்று திரும்பத் திரும்பப் போடும் சீன் கொஞ்சம் தொல்லைதான். ஆனால்- இதைத் தவிர்த்திருந்தாலும் வர்ணனைகள் இல்லாத நாவலில், சில இடங்களில் வாசகனுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வாசகனுக்கு வலிக்கக்கூடாது என்கிற அக்கறையில் தன்னுடைய எழுத்துவன்மையை மிகவும் அடக்கி வாசித்திருக்கிறார் பிரபாகர்.

நாவலின் முடிவு, அபாரம். அனுபவமும் மண்ணை கவ்வுகிறது. துணிச்சலான இளமைத்துடிப்பும் வெற்றிவாய்ப்பை இழக்கிறது. நம்பிக்கைக்கான கீற்று நட்சத்திர ஒளியாய் தென்பட, அவர்களது பயணம் தொடர்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முந்தைய இளைஞர்களையும், அவர்களது பெற்றோரையும் பற்றிய கதை. இந்த கால ஃபேஸ்புக் தலைமுறை, இக்கதையை வாசித்தால், “வீட்டுலே காலேஜிலே எல்லாம் இப்படிதான் பக்கம் பக்கமாவா வசனம் பேசுவாங்க?” என்று நம்பாமலேயே போகலாம்.

ஆனால்-

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இப்படிதான் தமிழ் சமூகம் இருந்தது. வாயைத் திறந்தாலேயே எவனும் மூடமாட்டான். சிவாஜிக்கு ஆரூர்தாஸ் எழுதிய வசனங்கள் மாதிரி பக்கம் பக்கமாக பேசி தீர்த்த தலைமுறை அது. எல்லா வீடுகளுமே எப்போதும் சத்தமாகதான் இருக்கும். தாகம் எடுத்தால், “தண்ணி கொண்டு வா” என்று மணிரத்னம் படம் மாதிரி சுருக்கமாக கேட்டுத் தொலைக்க மாட்டார்கள். “தவிச்ச வாய்க்கு தண்ணி” என்று ஆரம்பித்து மூன்று நிமிடங்களுக்கு உவமானம், எடுத்துக்காட்டு, அழகியல் என்று மொழியின் எல்லா எழவு சாத்தியங்களையும் பயன்படுத்திவிட்டு, கடைசியாக “கொஞ்சம் தண்ணி கொடேன், தாகமா இருக்கு” என்று முடிப்பார்கள்.

என் அப்பாவெல்லாம் அப்படிதான் பேசுவார். “படிச்சித் தொலையேண்டா” என்று சிம்பிளாக சொல்ல மாட்டார். “காமராஜர் படிச்சதில்லை, கலைஞர் படிச்சதில்லை, எம்.ஜி.ஆர் படிச்சதில்லை. ஆனா நாவலரும், பேராசிரியரும்...” என்று ஆரம்பித்து அவரது அரசியல் வரலாற்று சமூக அறிவினை எல்லாம் கொட்டி பத்து நிமிடங்களுக்கு தாலியறுத்து, “ஒழுங்காப் படிச்சி உருப்படுடா” என்று முடிப்பார். கிரிக்கெட் பேட்டை எடுத்து அப்படியே வழுக்கை மண்டையில் நாலு போடு போடலாமா என்று வெறிவரும்.

அப்பாவாவது பரவாயில்லை. அம்மா இன்னும் மோசம். பேச ஆரம்பித்தால், துலாபாரம் சாரதா மாதிரி குடும்பக் கஷ்டம், சரீரக் கஷ்டம், பெண்ணியம், லஷ்மி தொடர்கதை என்றெல்லாம் காண்டெக்ஸ்ட்டே இல்லாமல் நான்ஸ்டாப்பாக பேசிக்கொண்டே இருப்பார். இப்போது மெகாசீரியல்களில் ஏன் பெண்கள் பக்கம் பக்கமாக பேசுகிறார்கள் என்றால், மெகாசீரியல் எழுதும் எழுத்தாளர்கள் எண்பதுகள்/தொண்ணுறுகள் தலைமுறை. நல்லவேளையாக இந்த சீரியலையெல்லாம் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருப்பதால், இப்போதைய பெண்கள் இப்படி பேசி புருஷன்களை/மகன்களை சாகடிப்பதில்லை.
அனேகமாக, பட்டுக்கோட்டை பிரபாகர் எழுத்துதான் தன் எதிர்காலம் என்று முடிவெடுத்தபோது, அவரது அப்பா நூறு, நூற்றி ஐம்பது பக்கங்களுக்கு வசனம் பேசியிருப்பார் என்று கருதமுடிகிறது.

‘நிலவை முத்தமிடு’ என்னுடைய டீனேஜ் வயதுகளை நினைவுறுத்துகிறது. அப்பாவோடு நான் போட்ட சண்டைகள், அம்மாவை டபாய்த்த சமயங்கள் எல்லாம் அப்படியே மாண்டேஜ் ஷாட்டுகளாக வந்து போகிறது.

இந்த நாவலின் கருமையம்தான் ‘இந்தியன்’ திரைப்படம் என்று தோன்றுகிறது. ஷங்கர் காப்பி அடித்தார் என்றெல்லாம் குற்றம் சாட்டவில்லை. பட்டுக்கோட்டையாரும், ஷங்கரும் ஒரே தலைமுறையினர்தானே? எனவே ஒரே மாதிரியாக சிந்தித்திருக்கலாம். அப்பா-மகன் முரண் என்கிற மைக்ரோ ஸ்டோரி மீது தேசத்தை உறிஞ்சும் ஊழல் என்று மேக்ரோ பிரச்சினையை பெயிண்ட் அடித்ததுதானே ‘இந்தியன்’ கதை. இந்த நாவலில் வரும் அகிலா எனும் அக்கா கேரக்டரை, ‘இந்தியன்’ படத்தில் வரும் கஸ்தூரியோடு அப்படியே பொருத்த முடிகிறது.

எனினும்-

‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தின் ஒன்லைன் சத்தியமாக இதிலிருந்துதான் உருவப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. ‘பொம்மரிலு’ பாஸ்கர் நிச்சயமாக இந்த கதையை வாசித்திருப்பார் என்றே நம்புகிறேன்.

நாவலின் நடுவில் நாடகம் போடுவது பற்றி டிஸ்கஷன் செய்யும்போது வரும் ஒரு குட்டிக்கதை, அப்படியே ‘நீ வருவாய் என’ (99 தானே, இந்த நாவல் 95) படத்தின் ஒன்லைனராக இருப்பது இன்னுமொரு ஆச்சரியம்.

இதெல்லாம் யதேச்சையாகவும் நடந்திருக்கலாம். ஆனால் தோழர்களே, தமிழில் சமகால இலக்கியம் என்று நம்பப்படும் கதைகளை எல்லாம் சினிமாவாக்கினால் படுதோல்விதான். மாறாக இதுபோன்ற வெகுஜனக் கதைகளில் இருந்து எடுக்கப்படும் கரு, மக்கள் மத்தியில் நன்றாக எடுபடும். மேலே நான் ஒப்பிட்டிருக்கும் மூன்று படங்களுமே சூப்பர்ஹிட் படங்கள் என்பதை கவனியுங்கள். இலக்கியம், சாதாரண மக்களின் வாழ்க்கையிலிருந்து எவ்வளவு அந்நியப்பட்டு நிற்கிறது?

நூல் : நிலவை முத்தமிடு
எழுதியவர் : பட்டுக்கோட்டை பிரபாகர்
பக்கங்கள் : 228
வெளியீடு : பூம்புகார் பதிப்பகம்
விலை : ரூ.45

விருது கேட்டு விசித்திர வழக்கு

$
0
0
இன்று சென்னையில் பிரசித்தி பெற்ற அந்த விருது விழா நடக்கிறது. யாருக்கு விருது, எந்தப் படம் சிறந்த படமென்று நாமினேட் ஆனவர்கள் நகம் கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்-

கன்னட இயக்குனர் தயாள் பத்மநாபன் மட்டும் வயிறு எரிந்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் அவர் இயக்கிய ‘ஹக்கட கோனே’ (கயிறுக்கு முடிவு) திரைப்படம் முதன்முதலாக திரையிடப்பட்டது. அதையடுத்து சர்வதேச அளவிலும் பல திரைப்பட விழாக்களில் கலந்துக்கொண்டு பாராட்டப்பட்டது. கன்னட ஊடகங்களும் கடந்த ஆண்டின் மிகச்சிறந்த திரைப்படம் என்று ஒட்டுமொத்தமாக ஒரே குரலில் பாராட்டுப் பத்திரம் வாசித்தன.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கன்னடத்தில் மேடையேறிய நாடகம் ஒன்றினை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட படம். மரணத் தண்டனை கைதி ஒருவனின் கடைசி நாட்கள்தான் கதை. தன்னுடைய இந்த நிலைமைக்கு யாரெல்லாம் காரணம் என்று நினைக்கிறானோ, அவர்களிடமெல்லாம் சில கேள்விகளை முன்வைக்கிறான். தன்னை இப்படி ஆக்கியது சமூகம்தான் எனும்போது தனக்கு மட்டும் ஏன் தண்டனை என்கிற வினாவுக்கு விடை தேட முயலுகிறான். தனக்கு மரணத் தண்டனை சரியென்றால், தான் செய்த கொலையும் சரிதான் என்று வாதிடுகிறான். இப்படியாக சிந்திக்கத் தூண்டும் காட்சிகள், வசனங்கள் வழியாக நகர்கிறது படம். நீதி என்பது குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை தருவதா அல்லது அவர்களை சீர்த்திருத்துவதா என்கிற விவாதத்தை வலுவாக முன்வைக்கிறது ‘ஹக்கட கோனே’.

துரதிருஷ்டவசமாக இன்று நடைபெறும் விருதுவிழாவின் இறுதிச் சுற்றுக்கு இப்படம் நடுவர்களால் பரிந்துரைக்கப்பட வில்லை. ‘திருஷ்யம்’, ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் ரங்காச்சாரி’, ‘உக்ரம்’, ‘உளிடவாரு கண்டதே’ ஆகிய படங்கள்தான் தேர்வாகி இருக்கின்றன. சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட எந்த பிரிவுகளிலுமே தன் படத்துக்கு இடமில்லை என்றதும் கொதித்துப் போனார் இயக்குனர் தயாள் பத்மநாபன். உலகமே பாராட்டும் படத்துக்கு உள்ளூரில் அவமானமா என்று சீறினார்.

தயாள், நம் விழுப்புரத்து ஆள்தான். சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்து, மிக ஏழ்மையான நிலையில் வளர்ந்து இந்த நிலைக்கு வந்தவர். ‘மர்ம தேசம்’ நாகாவிடம் சினிமா கற்றவர். கன்னட சினிமாவுக்கு இடம்பெயர்ந்து கதாசிரியரானார். இயக்குனர், தயாரிப்பாளர் என்று படிப்படியான வளர்ச்சி. சுயமரியாதையை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்கிற கொள்கை உடையவர்.

எனவேதான், கோர்ட்டுக்குப் போயிருக்கிறார். “என் படத்தை நீதிமன்றமே பார்க்கட்டும். விருதுக்கு பரிந்துரைக்கப்படக்கூட தகுதியில்லாத படமா என்று நீதிபதிகள் தீர்ப்பு சொல்லட்டும்” என்று கிளம்பியிருக்கிறார். எத்தனையோ வழக்குகளை சந்தித்த நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு விசித்திரமானது. ஏனெனில் இதுவரை யாருமே, ஒரு தனியார் வழங்கும் விருதில் நீதிமன்றத்தை தலையிட சொல்லி வழக்கு போட்டதில்லை.

தமிழ் சினிமாவில் ஊடகங்கள் தங்கள் படங்களை நியாயமாக விமர்சிக்கவில்லை என்று ‘கற்றது தமிழ்’ ராம், தங்கர்பச்சான் போன்றவர்கள் பொங்கியிருக்கிறார்கள். ஒரு தனியார் விருது வழங்கும் விழாவில், தன் படத்தின் பாடல் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று அந்த விழா மேடையிலேயே கூட ராம் பொரிந்துத் தள்ளியிருக்கிறார்.

ஆனால்-

யாருமே இம்மாதிரி பிரச்சினைகளுக்காக இதுவரை நீதிமன்றத்தை நாடியதில்லை. ஒருவேளை தயாள் பத்மநாபனுக்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்தால், அவார்டு கொடுப்பவர்களின் கதி இனி அதோகதிதான்.

கடந்த 26-6-15 அன்று தினகரன் இணைப்பிதழான ‘வெள்ளி மலர்’ இதழில் நாம் எழுதியிருந்த சிறு கட்டுரை இது.

விருதுகளுக்காக ஒரு இயக்குனர் கோர்ட் படி ஏறினார் என்பது ஊடகங்களுக்கு அல்வா மாதிரி மேட்டர். ஏன் இந்த செய்தி தீயாக பரவவில்லை என்று தெரியவில்லை (எனக்குத் தெரியும், ஆனால் வெளிப்படையாக சொல்ல மாட்டேன்). எது எப்படியோ, குறைந்தது நாம் மட்டுமாவது ‘நியூஸ் வேல்யூ’ அறிந்து, அம்பலம் ஏற்றிவிட்டோம்.
இயக்குனர் தயாள் பத்மநாபன், இச்செய்தியை தினகரனில் வாசித்துவிட்டு வெள்ளிமலர் ஆசிரியர் குழுவினரிடம் தொலைபேசியில் பேசினார். தன்னுடைய தன்மான உணர்வை, தாய்மொழியில் வெளிவரும் ஒரு பத்திரிகை அங்கீகரித்தது குறித்த நெகிழ்ச்சி அவரது குரலில் தெரிந்தது.

அந்த செய்தியின் ‘ஃபாலோ-அப் நியூஸ்’ என்னவென்றும் போனில் தெரிவித்துவிட்டு, ஆதாரமாக சில கோர்ட்டு ஆவணங்களை மின்னஞ்சல் செய்திருக்கிறார்.

விஷயம் என்னவென்றால், இந்த விசித்திரமான வழக்கில் வெற்றி இயக்குனருக்கே.

பெங்களூர் சிவில் கோர்ட்டு (CCH-32), 24-06-2015 அன்று கொடுத்திருக்கும் தீர்ப்பில் ‘ஹக்கட கோனே’ திரைப்படத்தை சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் ஆகிய நான்கு பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது.

அனேகமாக, உலக அளவிலேயே இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வந்திருப்பது இதுதான் முதல் முறையாக இருக்கக்கூடும். இந்த தீர்ப்பு திரையுலகில் இயங்கும் படைப்பாளிகளுக்கு, எதிர்காலத்தில் உதவக்கூடும். விமர்சனம் செய்யும் / விருது வழங்கும் ஊடகங்களும், நிறுவனங்களும் இனி கூடுதல் கவனத்தோடு இயங்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால்-

26ந்தேதி மாலை சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில், கோர்ட்டின் ஆணை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது.

தயாள் பத்மநாபன் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. Our fingers crossed!

டிஜிட்டல் நார்சிஸம்

$
0
0
புராதன கிரேக்க கதைகளில் வரும் ஒரு கதாபாத்திரம் நார்சிசஸ். தண்ணீரில் தெரியும் தனது பிரதிபலிப்பையே காதலிப்பான் என்பது மாதிரி கேரக்டர் ஸ்கெட்ச். இவனை முன்வைத்துதான் சிக்மண்ட் ப்ராய்ட் ‘நார்சிஸம்’ என்கிற உளவியல் கோட்பாட்டினை முன்வைக்கிறார்.

வெட்கமே இல்லாமல் எதிலும் தன்னையே முன்னிலைப்படுத்தி பேசுவதும், சிந்திப்பதுமான நிலையை ‘நார்சிஸம்’ என்கிற மனரீதியான பிரச்சினையாக சொல்கிறார்கள் மனநிலை ஆய்வாளர்கள்.

சுற்றி வளைத்துச் சொல்வானேன். எப்போது பார்த்தாலும் உங்கள் ஸ்மார்ட்போனில் செல்ஃபீ எடுத்து ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்து, எத்தனை லைக்கு, என்னென்ன கமெண்டு என்று வெட்டியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறீர்களா?

நீங்கள் ஒரு நார்சிஸ்டாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

கூகிளில் இமேஜஸ் தேடினால் சமீபமாக செல்ஃபீ படங்கள்தான் அதிகம் தட்டுப்படுகின்றன. செல்ஃபீ என்றால் தன்னைத்தானே படமெடுத்துக் கொள்வது என்றெல்லாம் ஏ, பி, சி, டி-யில் இருந்து உங்களுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியமில்லைதானே?

சாமானியர்கள் பிரபலங்கள் வித்தியாசமில்லாமல் எல்லோரும் தங்களை தாங்களே படம் எடுத்துக் கொண்டு, பெருமையாக அதை மற்றவர்களிடம் பகிரும் போக்கினை ‘டிஜிட்டல் நார்சிஸம்’ என்று புதுப்பெயர் சூட்டி அழைக்கிறார்கள். ‘ஸ்ட்’-டில் முடித்தால் ஏதோ கம்யூனிஸ்ட், பெரியாரிஸ்ட் மாதிரி கவுரவமாக இருந்துத் தொலைக்கிறது. இந்த டிஜிட்டல் நார்சிஸ்ட்டுகளை டிஜிட்டல் பைத்தியங்கள் என்று அழைப்பதே முறை.

தொண்ணூறுகள் வரை ஊடகங்கள் ஏதோ தேவலோகத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருப்பதான தோற்றம் மக்களுக்கு இருந்தது. ஊடகங்களில் இடம்பெறும் பிரபலங்கள், சாமானியர்களால் அணுக முடியாத தேவதூதர்களாக இருந்தார்கள்.

தொலைக்காட்சித் துறையின் வளர்ச்சி காரணமாக புதிய சிந்தனைகளுக்கான, வடிவங்களுக்கான தேவை பெருகியது. தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பாக ஆணியடித்து செட்டில் ஆகிவிட்டவர்களுக்கு இருபத்து நான்கு மணி நேரமும் நுகர்வுப் பசியெடுத்துக் கொண்டே இருந்தது. அவர்களை திருப்திபடுத்த ரியாலிட்டி ஷோக்கள் அறிமுகப்படுத்தப் பட்டன.

தேவதூதர்கள் பூமிக்கு வந்து தரையில் கால்பதித்து சாமானியர்களோடு பேசினார்கள். சாமானியர்களுக்கும், பிரபலங்களுக்குமான இடைவெளி குறைந்தது. ஒரு பிரபலத்தை பற்றி, அந்த பிரபலத்துக்கே தெரியாத செய்திகளை எல்லாம் சாமானியன் தெரிந்து வைத்துக் கொண்டான். அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களின் நீட்சியாக இணையம், இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு, மில்லெனியம் ஆண்டுகளில் மகத்தான ஊடகமாக உருவெடுக்கிறது.
மரபு ஊடகங்களை முறையான பயிற்சி பெற்ற ஊடகவியலாளர்கள்தான் நடத்த முடியும். மாறாக நவீன ஊடகமான இணையம் பெரும்பாலும் சாமானியர்களை சார்ந்திருக்கிறது. ஈமெயிலில் தொடங்கி சமூகவலைத்தளங்கள் வரை அவர்களது ஆதிக்கம்தான். இணைய ஊடகத்தில் இயங்க விரும்பும் பிரபலங்கள், சாமானியர்களை தாஜா செய்துதான் தங்களை புரமோட் செய்துக்கொள்ள முடிகிறது. லைக்குகள் மற்றும் ரீட்விட்டுகளின் எண்ணிக்கைதான் அந்த பிரபலத்தின் பிரபல அளவை அளவிட உதவுகிறது.

இதற்கிடையே செல்போன் என்கிற தகவல் தொடர்பு சாதனம் வருகிறது. ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள என்கிற நிலை மாறி இது கேமிராவாகவும் செயல்படுகிறது. போட்டோ எடுப்பது மட்டுமின்றி இதில் வீடியோவும் எடுக்கலாம். செல்போனும், இணையமும் இணைந்த புள்ளிதான் முக்கியமானது.

தான் எடுத்த போட்டோவையோ, வீடியோவையே ஃபேஸ்புக்கில் பதிந்து அதை உலகின் அடுத்த மூலையில் இருப்பவனுக்கும் காட்ட முடிகிறது என்கிற ‘அதிகாரம்’ சாமானியனுக்கு கிடைக்கிறது. தானும் பிரபலம்தான் என்கிற எண்ணம் அவனுக்குள் இப்போது வேரூன்றுகிறது.

குஷ்பூவே ட்விட்டரில் தனக்கு நன்றி சொல்லிவிட்டார் என்று பக்கத்து வீட்டுக்காரனை கேவலமாக பார்க்க ஆரம்பிக்கிறான். “கலைஞரும், நானும் ஃபேஸ்புக்குலே ப்ரெண்ட்ஸ், தெரியுமா?” என்று பெருமை பேச ஆரம்பிக்கிறான்.

கருத்துக் களங்களும், வலைப்பூக்களும், சமூக வலைத்தளங்களுமாக இணையமெங்கும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஓராயிரம் வாசல்களில் கன்னாபின்னாவென்று நுழைந்து விளையாடுகிறான். நூறு லைக்கும், முப்பது கமெண்டும் பெற்றுவிட்ட பிறகு அவனாகவே ‘கெத்து’ என்று நினைத்துக் கொள்கிறான்.

‘நான்’, ‘என்’, ‘எனக்கு’, ‘என்னுடைய’, ‘என் வீடு’, ‘என் அறை’, ‘என் பைக்’ ‘என் கார்’ என்று பர்ஸ்ட் பர்சனிலேயே பேச ஆரம்பிக்கிறான். எந்நேரமும் தன்னை தானே படமெடுத்து ஃபேஸ்புக்கில் போடுகிறான். ‘நைஸ்’, ‘பியூட்டிஃபுல்’ ‘ஹேண்ட்ஸம்’ ‘அழகு’ கமெண்டுகளுக்காக ஒற்றைக்காலில் தவம் கிடக்கிறான்.

போதுமான வாசிப்போ, புரிதலோ இன்றி தத்துவங்கள் பேச ஆரம்பிக்கிறான். உலகின் சர்வ பிரச்சினைகளுக்கும் தன் சிந்தனைகளில் தீர்வு(!) காண்கிறான். ‘நான் என்ன சொல்கிறேன் என்றால்...’ ‘இந்தப் பிரச்சினையை நான் எப்படி பார்க்கிறேன் என்றால்...’ ‘குப்பையாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை நான் எடுத்திருந்தேன் என்றால்...’ ‘ என்று அவனது ஈகோ, நார்சிஸத்தின் உச்சத்தை எட்டுகிறது.
வேண்டுதல் மாதிரி இவனை ஏற்றிவிடவே நூறு பைத்தியங்களாவது இணையத்தில் திரிகின்றன. ‘சாட்டையடி சகோதரி’ ‘பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள் நண்பா’, ‘அருமையான சிந்தனை, ஆழ்ந்த கருத்து’ மாதிரி ஓராயிரம் ஒன்லைனர் புகழாரங்களை ஒரு வேர்ட் ஃபைலில் சேமித்து வைத்துக் கொண்டு, ஆங்காங்கே ஆணி மாதிரி காபி & பேஸ்ட் அடித்துவிட்டுச் செல்வார்கள்.

இவர்களுக்கு என்ன லாபம்?

மொய் மாதிரிதான். பதிலுக்கு இவனுடைய நார்சிஸ ஸ்டேட்டஸ்களுக்கு அவர்கள் வந்து லைக் போட்டு, ‘பிரித்து மேய்ந்துவிட்டீர்கள்’ கமெண்டு போட வேண்டாமா?

இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் லாகின் செய்து சந்தோஷமாக மேய முடிந்தால், சந்தேகமே இல்லை. சத்தியமாக நாம் மெண்டல்தான்.

நாம் வாழும் உலகமே மாபெரும் மூடர்கூடமோ என்கிற சந்தேகத்தை இணையம் ஏற்படுத்துகிறது.

(நன்றி : தினகரன் வசந்தம்)

ரேஷ்மாவின் கதை

$
0
0
கிறங்கடிக்கும் கண்கள். ரோஸ் நிறம். சுண்டினால் சிவப்பார். ஒல்லியான உடல்வாகு அந்த சின்னப் பெண்ணை நெடுநெடுவென காட்டியது. பதினேழு வயது. “ஹேய், பார்க்குறதுக்கு மாலாஸ்ரீ மாதிரி இருக்கேடி” என்று தோழிகள் ஏற்றிவிட்டதால் எந்நேரமும் சினிமா கனவு.

பெங்களூர் கல்யாண் நகரைச் சேர்ந்த அந்த பெண்ணின் உண்மைப் பெயரே அதுதானா என்று இன்றுவரை யாருக்கும் தெரியாது. ஆனால், ‘ரேஷ்மா’ பிரபலமானவர்தான். ஒருவேளை அவரை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

-ஏனெனில்

அவர் ‘நடித்த’ நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் ஒன்றுகூட ‘யூ’ சான்றிதழ் பெற்றதில்லை. அதனால் அவரை நீங்கள் டிவியிலும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் சென்னைக்கு வந்திருந்தால், நகரெங்கும் ஒட்டப்படும் போஸ்டர்களில் ஒருவேளை இவரைப் பார்த்திருக்கலாம். மாநகரத்தின் நுழைவாயிலிலேயே பரங்கிமலையில் ஒரு தியேட்டர் உண்டு. அப்போதெல்லாம் அந்த தியேட்டரில் வாராவாரம் ரேஷ்மா ரசிகர்கள் அலைமோதுவார்கள். அரங்கம் ஹவுஸ்ஃபுல் ஆகி, நின்றுக்கொண்டே படம் பார்ப்பார்கள். பெரும்பாலும் மலையாளம்தான். சில நேரங்களில் தமிழில் டப்பிங் செய்து போடுவார்கள். இந்தப் படத்துக்கு எல்லாம் மொழியா முக்கியம்? பார்த்தாலே புரியும்.

சினிமா நடிகை ஆகவேண்டும் என்கிற லட்சியம் மட்டும்தான் ரேஷ்மாவுக்கு இருந்தது. ஆவதற்கு என்ன தகுதி வேண்டும், யாரை அணுக வேண்டும் எதுவுமே தெரியாது.

பெங்களூரில் இருந்த பிரபல நடிகர்களின் வீட்டுக்கு முன்பாக போய் நிற்பார். காரில் போகும்போதும், வரும்போதும் யதேச்சையாக பார்த்து, “இந்தப் பெண் அழகாக இருக்கிறாளே, நம்ம படத்தில் ஹீரோயின் ஆக்கிடலாமே?” என்று முடிவெடுப்பார்கள் என நினைப்பு. செக்யூரிட்டிகள், இவரை விரட்டி விரட்டி அடிப்பார்கள்.

அடுத்து சில சினிமா கம்பெனிகளின் முகவரியை எப்படியோ பெற்று, ஒவ்வொரு அலுவலகமாக படியேறி இறங்கினார். சினிமாவின் இன்னொரு முகம் தெரிந்தது.

யாரோ பரிதாபப்பட்டு சொன்னார்கள்.

“இங்கெல்லாம் உனக்கு சான்ஸே கிடைக்காது. நடிக்க வைக்கிறேன்னு சொல்லி, அதைத் தவிர்த்து எல்லாத்துக்கும் யூஸ் பண்ணிப்பானுங்க. மைசூர்லே நிறைய சூட்டிங் நடக்கும். அங்கே போய் ட்ரை பண்ணு. துணை நடிகையாவாவது நடிக்கலாம்”

மைசூரில்தான் அப்போதெல்லாம் நிறைய தமிழ்ப்படங்களின் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது. படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குப் போய் வேடிக்கை பார்ப்பார். படப்பிடிப்புக் குழுவில் இருக்கும் யாரைப் பார்த்தாலும், “அண்ணா, நான் நல்லா நடிப்பேண்ணா. உங்க படத்துலே நடிக்கை வைங்கண்ணா” என்று கெஞ்சுவார்.

குறைந்தது ஐநூறு பேரிடமாவது கெஞ்சி இருப்பார். சில பேர் திட்டி அனுப்பி விடுவார்கள். சில பேர் ஜொள்ளு விடுவார்கள். சிலர் வேறு நோக்கத்துக்காக அழைப்பார்கள்.

ஆனால்-

ஒரே ஒரு படத்தில் கூட கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் வாய்ப்பு கூட ரேஷ்மாவுக்கு கிடைத்ததே இல்லை.

ஒருநாள். ஏதோ மலையாள சினிமா படப்பிடிப்பு. மலையாளத்தின் பெரிய நடிகர் நடித்துக் கொண்டிருந்தார். கக்கத்தில் பையை அமுக்கிக் கொண்டு துணை நடிகர்களை அதிகாரமாக ஆணையிட்டுக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தார் ரேஷ்மா. வழக்கமாக எல்லாரிடமும் கேட்பதைப் போல அவனிடமும் வாய்ப்பை கேட்டார். ஏற இறங்கப் பார்த்தான். கண்களில் திருட்டுத்தனம் டாலடித்தது.

“இந்தப் படத்துலே சான்ஸ் இல்லை. ஆனா வேற ஒரு படத்துக்கு ஹீரோயின் தேவைப்படுது. கேரளாவிலே ஷூட்டிங். அஞ்சே அஞ்சு நாள் நடிச்சிக் கொடுத்தா போதும்”

விவரம் புரியாத ரேஷ்மா, “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா” என்று நன்றியுணர்ச்சியில் நா தழுதழுத்தார்.

“இனிமே அண்ணான்னு கூப்பிடாத. மாமான்னு கூப்பிடணும். நைட்டு வந்து பாரு” சொன்னவன், தான் தங்கியிருந்த லாட்ஜ் முகவரியை எழுதிக் கொடுத்தான்.

ரேஷ்மா, மீள முடியாத புதைகுழியில் விழுந்த நாள் அதுதான்.

அவன் சொன்ன படத்துக்காக கேரளா போனார். ஐந்து நாட்கள் கால்ஷீட். ஆனால், மூன்றே நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்துவிட்டார்கள். கேமிராமேன், டைரக்டர் என்றெல்லாம் ஒரு படத்துக்கு தேவையான அத்தனை பேரும் இருந்தார்கள். ஆனால் காஸ்ட்யூமருக்கு மட்டும் வேலையே இல்லை.

முதல் நாள் நடிக்கும்போது ரேஷ்மாவுக்கு அழுகையாக வந்தது. மறுநாளில் இருந்து சகஜமானார். முழுக்க நனைந்தபிறகு முக்காடு போடுவது முட்டாள்தனம் அல்லவா?

தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பரமதிருப்தி. சம்பளத்தை கவரில் கொடுத்தார்கள். பிரித்துப் பார்த்தார். ஒரு லட்ச ரூபாய். இதுவரை ரேஷ்மா, கனவில் கூட நினைத்துப் பார்த்திராத தொகை. “சினிமாவில் நடிச்சா நிறைய காசு கிடைக்கும்னு தெரியும். இவ்வளவு காசா?” என்று வாய் பிளந்தார்.

“ஷகீலா மாதிரி பெரிய நடிகையா வருவேம்மா. மாசத்துக்கு ரெண்டு படமாவது எடுப்பேன். ஷூட்டிங் இருந்தா போன் பண்ணுறேன். வந்துடு” என்று ஆசிர்வதித்தார் தயாரிப்பாளர்.

அன்றிலிருந்து அடுத்த சில வருடங்களுக்கு ரேஷ்மா, படப்பிடிப்பிலேயே பிஸியாக இருந்தார். ஷகிலாவோடு இணைந்து இவர் நடித்த பல படங்கள் வசூலில் சக்கைப்போடு போட்டன. ஷகிலா, சிந்து, ஜோதிஸ்ரீ என்று இத்துறையில் முன்னணியில் இருந்த நடிகைகளோடு இணைந்து ரேஷ்மா நடித்த ‘சிலகம்மா’ ப்ளாக்பஸ்டர் ஹிட். ஆனால், தான் நடித்த ஒரு படத்தை கூட ரேஷ்மா தியேட்டருக்கு போய் பார்த்ததே இல்லை.

திடீரென்று ஒரு நாள் ரேஷ்மாவுக்கு படப்பிடிப்பே இல்லை. மறுநாள் போன் வரும் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றம். அதன்பிறகு அவரை நடிக்க யாருமே கூப்பிடவில்லை. மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள், ‘இந்த’ மாதிரி படங்களால், தாங்கள் நடிக்கும் படங்கள் ஓடுவதில்லை என்று பிரச்சினை செய்ததால், ‘அந்த’ மாதிரி படங்கள் எடுப்பது முற்றிலுமாக நின்றுவிட்டது.

ஆறேழு ஆண்டுகள் கழிந்தன. 2007ஆம் ஆண்டு. கொச்சின் புறநகர்ப் பகுதியான காக்கநாட்டில் இருந்த ஓர் அப்பார்ட்மெண்டில் ரேஷ்மாவும், கூட சிலரும் கைது செய்யப்பட்டார்கள். பொது இடத்தில் பாலுறவுக்கு வற்புறுத்தி மற்றவர்களை அழைத்தது உள்ளிட்ட பிரிவுகளில் ரேஷ்மா மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. அப்போது அவர் மீது நடந்த காவல்துறை விசாரணையே மிக அசிங்கமாக இருந்ததாக, ஒரு வீடியோ இணையத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. கோர்ட்டில் பெயில் வாங்கிக் கொண்டு பெங்களூருக்கு போனவர்தான்.

இன்றுவரை ரேஷ்மா எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. உயிரோடு இருக்கிறாரா என்றும் தெரியாது. அவர் தலைமறைவான போது அவருக்கு வயது இருபத்தைந்துக்குள்தான் இருக்கும்.

கலைத்துறையில் ஈடுபடவேண்டும் என்கிற ஆசை யாருக்கு வேண்டுமானால் வரலாம். ஆனால்- முறையான பயிற்சியோ, சரியான வழிகாட்டுதலோ, போதுமான பாதுகாப்புப் பின்னணியோ இல்லாதவர்கள் என்ன ஆவார்கள் என்பதற்கு ரேஷ்மாவின் வாழ்க்கையே பாடம்.

(நன்றி : தினகரன் வசந்தம்)

இன்று இயக்குனர். நேற்று ரசிகர். நாளை?

$
0
0
“டேப்ரிக்கார்டரில் கேசட்டை ரீவைண்ட் பண்ணுற மாதிரி, லைஃபையும் ரீவைண்ட் பண்ண முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்?” ‘முதல்வன்’ படத்தில் சுஜாதா எழுதிய டயலாக். இதேதான் ‘இன்று நேற்று நாளை’ படத்தின் ஒன்லைனர். டைம் மெஷினில் கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் பயணிக்க முடியும். கதாநாயகனின் வாழ்க்கையில் இந்த டைம் மெஷின் எப்படி விளையாடியது என்பதுதான் கதை.

தமிழில் எல்லா வகையிலும் படங்கள் எடுக்கப்படுகின்றன. சயன்ஸ் ஃபிக்‌ஷன் மட்டும் கொஞ்சம் அரிதுதான். ஏனெனில் ‘எந்திரன்’ மாதிரி படங்கள் எடுப்பதற்கு மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படும். சிக்கனமான பட்ஜெட்டில், பளிச்சென்று அனைத்துத் தரப்பையும் கவரும் வண்ணம் இந்த அறிவியல்புனை படத்தை இயக்கியிருக்கிறார் ஆர்.ரவிக்குமார்.

இவரையே டைம் மெஷினில் உட்காரவைத்து கடந்த காலத்துக்கு வண்டியை ஓட்டச் சொன்னோம். இருபத்து மூன்று வருடங்களுக்கு பின்பாக போய் பிரேக் போட்டார். காலம் அங்கிருந்து நிகழ்காலம் நோக்கி மெதுவாக நகரத் தொடங்கியது.
“திருப்பூர் சிவன் தியேட்டர். எட்டு, ஒன்பது வயசு இருக்கும். ‘தேவர் மகன்’ படம் ஓடுது. முதன்முதலா தனியா படம் பார்க்குறேன். பயமாயிருக்கு. ஆயாதான் வாராவாரம் இங்கே என்னை படம் பார்க்க கூப்பிட்டுக்கிட்டு வருவாங்க. இப்போ நான் கொஞ்சம் பெரிய பையன் ஆயிட்டேன்னு ஆம்பளைங்க க்யூவில்தான் டிக்கெட் கொடுக்கறாங்க.

இந்த தியேட்டரை சுற்றிதான் என்னோட வாழ்க்கையே. இங்கேதான் அப்பா நூல் வியாபாரம் பார்க்குறாரு. வீடும் பக்கத்துலேதான். நைட்ஷோ இங்கே படம் ஓடுறப்போ, வீட்டுலே சத்தம் கேட்கும். சினிமா ஓடுற சத்தம்தான் எனக்கு தாலாட்டு.

50 பைசாவுக்கு கடையில் ஃபிலிம் கிடைக்கும். ரஜினி, கமல், எம்.ஜி.ஆர், சிவாஜின்னு அவங்க நடிச்ச ஃபிலிமெல்லாம் வாங்கி வெச்சுப்பேன். 80 வாட்ஸ் பல்பை புரொஜெக்டர் மாதிரி யூஸ் பண்ணி சுவத்துலே படம் காட்டுவேன். நான் காட்டுற படத்தை ரசிக்கிற ரசிகை என் தங்கச்சி காயத்ரிதான். பானைக்குள்ளே பழைய ஸ்பீக்கரை வெச்சி, சிவன் தியேட்டர்லே வர்றமாதிரி சவுண்ட் எஃபெக்ட் ரெடி பண்ணுவேன். ‘ஹோம் தியேட்டர்’னா என்ன அர்த்தம்னு தெரியாத வயசுலேயே, என் வீட்டை தியேட்டரா மாத்தினேன்.

கொஞ்சம் வளர்ந்ததுமே, பிரெண்ட்ஸ் கிட்டே மூவி கேமிரா ஓசி வாங்கி மனசுக்கு பட்ட காட்சியை எல்லாம் படம் பிடிச்சேன். இதுலேயும் சோதனை எலி என் தங்கச்சிதான். எனக்கு படம் பிடிக்கத் தெரியும்னு எல்லாரும் நம்ப ஆரம்பிச்சதுக்கப்புறமாதான் எனக்கு நம்பிக்கை வந்தது.

வாசிச்ச நல்ல கதைகளை எல்லாம் குறும்படங்களா எடுக்க ஆரம்பிச்சேன். உள்ளூர்லே நடக்கிற விழாக்களில் அதை திரையிடுவேன். சினிமா எடுக்கணும்னுலாம் அந்த கட்டத்துலே ஐடியாவெல்லாம் இல்லை. பிடிச்சிருந்தது, செஞ்சேன். அப்பாவோட பிசினஸை வளர்க்குறதுதான் அப்போ எதிர்கால லட்சியமா இருந்தது.

ஒரு தனியார் தொலைக்காட்சியில் குறும்படங்களுக்கான போட்டி நடந்தப்போ விளையாட்டா கலந்துக்கிட்டேன். தொழில்நுட்பம்னா என்னன்னு அப்போதான் தெரிஞ்சுது. இயக்குனர் நலன்குமாரசாமியோட அறிமுகமும் அப்போதான் கிடைச்சுது.

நலன், அப்போ டிவி சீரியல் டைரக்ட் பண்ணிக்கிட்டிருந்தாரு. அவரோட அசோசியேட்டா என்னை சேர்த்துக்கிட்டாரு. அவருக்கு ‘சூது கவ்வும்’ வாய்ப்பு வந்ததுமே, ஸ்க்ரிப்ட் எழுத கிளம்பிட்டாரு. அந்த சீரியலை நான் டைரக்ட் பண்ண ஆரம்பிச்சேன். மாசாமாசம் நல்ல சம்பளங்கிறதாலே வீட்டுலே இதுக்கு எதிர்ப்பு எதுவுமில்லே.

‘சூது கவ்வும்’ படப்பிடிப்பு ஆரம்பிக்கறப்போ கூப்பிட்டார். எதையும் யோசிக்காம போய் சேர்ந்துட்டேன். இன்ச் பை இன்ச்சா அங்கே எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.

அந்த படத்தோட தயாரிப்பாளர் சி.வி.குமார் ஜாலியா பேசிக்கிட்டிருந்தப்போ, ஒருநாள் யதேச்சையா இந்த படத்தோட ஒன்லைனரை சொன்னேன். “நல்லா இருக்குப்பா. ஸ்க்ரிப்ட் பண்ணி எடுத்துட்டு வா”ன்னு சொன்னாரு.

கதை எழுதி, திருத்தி, நண்பர்களோட பேசி திரும்பத் திரும்ப எழுதி... இந்த பிராசஸே 500 நாள் ஆயிடிச்சி. தயாரிப்பாளருக்கு திருப்தின்னதும் வேலையை ஆரம்பிச்சோம். அதாவது... ஒன்றரை வருஷம் எழுதின கதையை வெறும் ஒன்றரை மாசத்துலே எடுத்தோம்.

லாபகரமா படம் எடுக்கணும்னா இதுதான் வழி. வேலையை தொடங்குறதுக்கு முன்னாடி பக்காவா எல்லாத்தையும் எழுதி வெச்சிக்கணும். படப்பிடிப்புக்கு போய் திணறக்கூடாது. எனக்கு தெரிஞ்ச ஃபார்முலா இதுதான்.

படம் இப்போ ஹிட் ஆயிடிச்சி. ஆனால், கதை எழுதறப்பவும் சரி. படம் எடுக்கறப்பவும் சரி. ரொம்ப பேருக்கு இதோட வெற்றியில் சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்தது. ரசிகர்கள் அரவணைச்சுக்கிட்டாங்க.
எனக்கு பெரிய சந்தோஷம் என்னன்னா, இப்போ எனக்கு கிடைக்குற பாராட்டுகளை பார்த்து அப்பா ராஜேந்திரனுக்கு ரொம்ப சந்தோஷம். என் வயசு பசங்க எல்லாம் கல்யாணம், தொழிலுன்னு செட்டில் ஆயிட்டாங்க. தன்னோட பையன் மட்டும் இப்படி கேமிராவை தூக்கிட்டு சுத்தறானேன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தாரு. என்னோட வெற்றி, என்னைவிட என் குடும்பத்துக்குதான் ரொம்ப முக்கியம்.

டைரக்டர் ஆயாச்சு. இப்பவும் நடுத்தர வாழ்க்கைதான். எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்னு அப்பா உழைச்சிக்கிட்டு இருக்காரு. வாழ்க்கை முழுக்க உழைச்ச ஆளு. அவருக்கு சீக்கிரமா ஓய்வு கொடுத்து, ராஜா மாதிரி பார்த்துக்கணும்.

அடுத்த படம் பற்றி நான் அவசரப்படலை. இதே படத்துக்கு இரண்டாம் பாகம்னு எல்லாரும் பேசுறாங்க. எடுக்கறதுக்கு ஸ்கோப் இருக்கு. ஆனா, நல்ல கதை தோணி, அதை பக்காவா ரெடி பண்ணிக்கிட்டுதான் அடுத்து பண்ணலாம்னு இருக்கேன். நம்ம பக்கம் காத்தடிக்குதுன்னு, வர்ற வாய்ப்பை எல்லாம் வாரி போட்டுக்கிட்டு, எடுத்தேன் கவிழ்த்தேன்னு சரியா வேலை பார்க்கலைன்னா பேரு கெட்டுடும் இல்லையா?”

டைம் மெஷின் நிகழ்காலத்துக்கு வந்து நிற்பதற்கும், ரவிக்குமார் பேசி முடிப்பதற்கும் சரியாக இருந்தது.

அதே திருப்பூர் சிவன் தியேட்டர். அன்று ரவி, ‘தேவர் மகன்’ பார்த்த அதே தியேட்டரில்தான் ‘இன்று நேற்று நாளை’ ஓடுகிறது.

‘ஹவுஸ்ஃபுல் போர்டு’ வெளியே தொங்குகிறது!

(நன்றி : தினகரன் வெள்ளி மலர்)

பாகுபலி மீது பாலியல் வழக்கு?

$
0
0
பாகுபலி என்னவெல்லாம் அநியாயத்தை அவந்திகாவுக்கு செய்திருக்கிறான் பாருங்கள். அவந்திகா அறியாமலேயே அவளுடைய கைகளில் ஓவியம் வரைகிறான். Intruded her privacy.

பாம்பை ஏவிவிட்டு அவளை சில விநாடிகள் உறையச் செய்கிறான். கத்தி காட்டி மிரட்டுவதை போல பாம்பை காட்டி மிரட்டியிருக்கிறான்.

இச்சையை வெளிப்படுத்தும் நடனம் ஆடுகிறான். அவள் கூந்தலை கலைக்கிறான். உடுத்தியிருந்த ‘போராளிக்கான’ உடையை அவிழ்க்கிறான். ‘பெண்மை’ புலப்படுமளவுக்கு அவளது உடையை செதுக்குகிறான் (அவந்திகா என்ன சிற்பமா?). சாயங்களை சேகரித்து கண்ணுக்கு மை தீட்டுகிறான். உதட்டுக்கு சாயம் பூசுகிறான். அவளை பெண்மை (?) செய்கிறான். அவளை நாணப்படுத்துகிறான். அவனது இறுக்கத்தில் அயர்ந்துப் போகிறாள். உச்சக்கட்டமாக விலங்கை போல ஒரு பெண் பழக்கப்படுத்தப்படுகிறாள்.

நம் அறிவுஜீவிகள் கொஞ்சம் அட்வான்ஸாகதான் சிந்திக்கிறார்கள்.

ஆனானப்பட்ட பல்லாலதேவனையே சமாளித்துவிட்ட பாகுபலியால் நம்மூர் இண்டெலெக்ச்சுவல்களை சமாளிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் நாயகன், நாயகியின் இடுப்பைப் பிடித்து வலுக்கட்டாயமாகதான் இழுக்க வேண்டுமா என்று எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி, என்னுடைய ஒருநாள் இரவு தூக்கத்தை முற்றிலுமாக பறித்துக் கொண்டிருக்கிறது.

‘அவந்திகா, துணிச்சல்மிகு போராளி’ என்று போடப்பட்ட பன்ச்சிலேயே ‘பணால்’. ‘போராளி’ என்கிற வார்த்தையை கேட்டதுமே/வாசித்ததுமே இணையப் போராளிகள் போர்ப்பரணி பாடத் தொடங்கிவிட மாட்டார்களா?

நிச்சயமாக பாலியல் குற்றம்தான். பாகுபலி மீது இ.பி.கோ 375 பாய்வதுதான் நியாயம். முடிந்தால் இந்த ஆபாசமான காம வெளிப்பாட்டை படம் பிடித்த ராஜமவுலி மற்றும் அவரது குழுவினர் மீதும் இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம்.

இதோடு நிறுத்திவிடக்கூடாது. ‘சண்டிராணியே எனக்கு கப்பம் கட்டு நீ’ என்று பாடிக்கொண்டே வாளை நீட்டி அச்சுறுத்தி, விஜயசாந்தியை பணியவைத்த சூப்பர் ஸ்டாரில் தொடங்கி ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ ஹரிதாஸ் வரைக்கும் நம் சினிமாவில் நடந்த அத்தனை பாலியல் பலாத்காரங்களையும் விசாரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். குறிப்பாக பெண்ணியவாதிகளுக்கு இந்த கடமை இருக்கிறது. ஓர் அவந்திகாவுக்கு நடந்த அவலம் இனிமேல் இன்னொரு அவந்திகாவுக்கு நடக்கக்கூடாது என்றால், அவந்திகாவை மாதிரியே நாமெல்லாம் போராளிகளாக, ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்களாக (குறைந்தபட்சம் ஃபேஸ்புக்கிலாவது) மாறவேண்டியது காலத்தின் கட்டாயம்.

அட்லீஸ்ட் இதுபோல இந்திய சினிமாவில் இதுவரை வெளிவந்த ஆயிரக்கணக்கான சினிமாக்களில் நடந்த பாலியல் பலாத்காரங்களை, மோட்டுவளையை பார்த்து சிந்தித்து கண்டுபிடித்து நாம் வெளிப்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு தற்கொலை மூடில் இருந்த ரேகாவை வலுக்கட்டாயமாக இழுத்து உதட்டோடு உதடு கிஸ் அடித்த கமல்ஹாசனை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று ஒரு ஸ்டேட்டஸாவது போடவேண்டும். அதற்கு குறைந்தபட்சம் முன்னூறு கமெண்டு, மூவாயிரம் ‘லைக்’காவது விழுந்தால்தான் ஆண்மய்யப்பட்ட இந்திய சமூக விழுமியங்களின் மீது நாம் சிறுநீராவது கழித்த அறிவுலகச் செயல்பாட்டினை நிகழ்த்த முடியும்.

எருதினை அடக்கும் காட்சிக்கு கூட கணிப்பொறியில் சித்தரிக்கப்பட்ட காட்சியைதான் காட்டியாக வேண்டும் என்கிற அறம், ஏற்கனவே இந்தியாவில் இருக்கிறது. விலங்குகள் காட்சிகளில் இடம்பெறுமாயின், ‘இந்தப் படத்தில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை’ என்று ஸ்லைடு போட்டு காட்டவேண்டியது அவசியம் என்று இந்திய தணிக்கைத்துறை வலியுறுத்துகிறது.

நிலைமை அப்படியிருக்கையில் விலங்கினைவிட பெண்கள் மட்டமா என்கிற அடிப்படைக்கேள்வி நமக்கு இங்கே எழுகிறது. முதற்கட்டமாக இனிமேல் சினிமாக்களில் இதுபோன்ற பாலியல் பலாத்கார காதல் காட்சிகள் இடம்பெறுமாயின், அவை கணிப்பொறியில் சித்தரிக்கப்பட்ட இமேஜ்களாகதான் இருக்கவேண்டும் என்கிற கோரிக்கையை நோக்கி நம் போராட்டம் துவங்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இடம்பெறக்கூடிய அவ்வாறான காதல் காட்சிகளில் ‘புகை பிடிப்பது புற்றுநோயை வரவழைக்கும்’ என்பதுபோல, ‘பெண்ணை வலியுறுத்தி காதல் செய்வது, இந்திய தண்டனை சட்டப்படி குற்றமாகும்’ என்கிற எச்சரிக்கை திரையின் கீழே பொறிக்கப்பட வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு.

இந்த சீரிய சிந்தனையை தூண்டிய கட்டுரை :'பலாத்கார பாகுபலி'யும் அவிழ்க்கப்பட்ட அவந்திகாவும்!


கனவை நனவாக்குதல்!

$
0
0
அறிவியலாளர்களை கவுரவிக்க இந்திய தேசம் எப்போதுமே தவறியதில்லை. அறிவியல் அறிஞர் ஒருவர் இந்தியாவின் ஜனாதிபதி என்றபோது உலகமே ஆச்சரியத்தில் மூழ்கியது. அப்துல்கலாமின் வாழ்க்கை நாட்டின் கடைக்கோடி குடிமகனுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் பாதை. தமிழ்நாட்டின் சிறிய ஊரில், ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் ராஷ்டிரபதி பவனில் அமர்ந்து நாட்டையே வழிநடத்த முடியும் என்கிற இந்த வாய்ப்பு வேறு நாடுகளில் அமைவது கடினம்.

இந்த வாய்ப்புக்குப் பின்னால் இருந்த டாக்டர் கலாமின் கடின உழைப்பும், கனவும் அவரை எப்படி சரியான வழியில் நடத்தியது என்பதை ‘எனது பயணம்’ நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். எண்பது வயதைக் கடந்தவர் தன்னுடைய தனித்துவ அனுபவங்களை பகிர்ந்துக் கொள்வது என்பது இன்றைய இளைய தலைமுறைக்கு அரிதாகக் கிடைக்கக்கூடிய பொக்கிஷம். ஏராளமான சம்பவங்கள் நிறைந்த நீண்டகால வாழ்வின் அனுபவங்களை நம் மனதுக்கு அப்படியே கடத்தும் நெருக்கமான மொழியமைப்பில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. கூடு விட்டு கூடு பாய்ந்ததைபோல புத்தகத்தை படித்து முடிக்கும்போது, வாசித்த ஒவ்வொருவருமே நம்மை கலாமாக உணர்கிறோம்.

தன் வாழ்வில் கண்டடைந்த மிகப்பெரிய பாடமாக கனவினை சொல்கிறார் கலாம். “ஒருவர் தன் வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் தொடர்ந்து கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டும். பிறகு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்” என்று தன் வாழ்வின் வெற்றி ரகசியத்தை சொல்லிக் கொடுக்கிறார்.

இந்தியர் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளும் மகத்தான சாதனைகளை படைத்து பெருவாழ்வு வாழ்ந்துக் கொண்டிருக்கும் கலாம், கடைசியாக நூலை முடிக்கும்போது என்ன சொல்கிறார் தெரியுமா?

“கடக்க வேண்டிய தூரம் இன்னும் கணிசமாக இருக்கிறது”

நூல் : எனது பயணம்
எழுதியவர் : ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
தமிழில் : நாகலட்சுமி சண்முகம்
விலை : ரூ. 150/-
பக்கங்கள் : 172
வெளியீடு : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்,
7/32, தரைத்தளம், அன்சாரி சாலை, தார்யாகஞ்ச்,
புதுடெல்லி-110002.
E-mail : sales@manjulindia.com
 Website : www.manjulindia.com



நூலிலிருந்து...

“1998ஆம் ஆண்டில் பொக்ரானில் இந்தியா தனது இரண்டாவது அணுவெடிப் பரிசோதனையை நடத்தியபிறகு, அதன் உருவாக்கத்தில் பங்காற்றியிருந்த எனக்குப் பல்வேறு பட்டப் பெயர்கள் வழங்கப்பட்டன. அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகும், ஜனாதிபதியாக எனது பதவிக்காலம் முடிந்து பல வருடங்களுக்குப் பிறகும் என்னோடு எப்போதும் தங்கி வந்துள்ள ஓர் அடைமொழி ‘ஏவுகணை மனிதன்’ என்பதுதான். நான் அவ்வாறு அழைக்கப்படும்போது அது எனக்குப் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், ஓர் அறிவியல் மனிதனாக என்னை நான் கருதிக் கொண்டிருக்கையில், அப்பெயர் ஒரு குழந்தையின் சாகசக் கதாநாயகனின் பெயரைப் போல ஒலிக்கிறது”

மோட்டிவ்

$
0
0

“போட்டா இவளைதான் போடணும்” கதையின் முதல்வரியிலேயே முடிவெடுத்து விட்டான் நரேந்திரன்.

ஏன் போடணும்?

கிரிமினாலஜி படிக்கும் மாணவனான அவனுக்கு அன்று காலைதான் திடீரென்று இந்த எண்ணம் தோன்றியது.

வகுப்பில் புரொபெஸர் திரும்பத் திரும்ப வலியுறுத்தி சொல்லிக் கொண்டிருந்தார்.

“எந்த ஒரு குற்றச் செயலுக்கும் ‘மோட்டிவ்’ நிச்சயமிருக்கும். மோட்டிவ் எந்தவொரு குற்றச் சம்பவமும் நடைபெற வாய்ப்பே இல்லை”

அவளைப் பார்த்து சிரித்தான்.

லேசாக குழம்பினாள். தனக்குப் பின்னால் வேறு யாரையாவது பார்த்து சிரிக்கிறானோ என்று திரும்பிப் பார்த்தாள். யாருமே இல்லை. அங்கே யாருமே இல்லை.

“ரேப்புக்கு மோட்டிவ் கிடையாதே சார்?” நரேன்தான் சந்தேகம் கேட்டான்.

“ரேப்புதான்டா மோட்டிவ்” புரொபஸர் கிண்டலாக சொன்னார்.
வகுப்பே கொல்லென்று சிரித்தது. அவமானத்தை உணர்ந்தான். கொல்லென்ற சிரிப்பு நிற்காமல் தொடர, அவமானம் கோபமானது. கைவிரல்கள் உதறின. கண்கள் சிவந்தன.

‘யாரென்று தெரியாத ஒருவன் தன்னைப் பார்த்து ஏன் சிரிக்கிறான்?’ அவள் கலவரமானாள்.

இவன் அவளை நோக்கி புன்னகைப்பதை நிறுத்தவே இல்லை.

பளீரென மஞ்சள்புடவை அணிந்திருந்தாள்.

தொப்புளில் இருந்து ஒன்றரை சாண் இறக்கி கொசுவம் வைத்திருந்தாள். எப்படி இது சாத்தியம்?

என்ன அனாடமியோ. ஒன்றும் புரியவில்லை.

“இல்லைங்க சார். பல சம்பவங்களுக்கு மோட்டிவ்வே இருக்குறதில்லை” இவன்தான் மறுத்தான்.

“இருவது வருஷமா நான் எவ்வளவு கேஸ் ஸ்டடி படிச்சிருப்பேன். மோட்டிவ் இல்லாத ஒரே ஒரு கிரிமினல் ரெக்கார்ட் கூட இந்தியாவிலேயே இல்லை. அப்படி இருக்கிறதா இருந்தா அது முடிவுபெறாத கேஸா இருக்கும்” புரொபஸர் மறுத்தார்.

அவளை நோக்கி இவன் நடக்கத் தொடங்கினான்.

இவன் அவளை நெருங்க நெருங்க அவளது முகத்தில் அப்பட்டமாய் அச்சம் தெரிந்தது. சுற்றும் முற்றும் மலங்க மலங்க பார்த்தாள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஈ, காக்காய் இல்லை.

“எனவேதான், போலிசும் டிடெக்டிவ்வும் எந்த கேசை எடுத்தாலும் முதலில் மோட்டிவ் என்னன்னு கெஸ் பண்ணிப்பாங்க. அந்த ரூட்டுலே கிரிமினலை தேட ஆரம்பிக்கிறதுதான் ஈஸி”

சட்டென்று அவளது முகத்தில் மந்தகாசமான புன்னகை ஒன்று விரிந்தது. உதடு திறந்து சிரிக்க ஆரம்பித்தாள். டார்க் ரெட் லிப்ஸ்டிக். இப்போது நரேந்திரன் ஜெர்க் ஆனான். ஒருவேளை அயிட்டமோ?

“கையும் களவுமா ஸ்பாட்டுலேயே கிரிமினல் மாட்டிக்கிட்டா?”

“மாட்டிக்கிட்டவனை பிடிச்சி ‘மோட்டிவ்’ என்னன்னு விசாரிச்சி கண்டுபிடிப்பாங்க. கோர்ட்டுலே குறிப்பிட்ட குற்றத்தை செய்ய குற்றவாளிக்கு என்ன மோட்டிவ்வுன்னு ஆதாரப்பூர்வமா நிரூபிச்சாதான் பிராசிக்யூசன் வின் பண்ணதா அர்த்தம்”

பரந்து விரிந்திருந்த அவளது மெகாசைஸ் மார்பைத் தொட்டு இடப்புறமாக சுட்டிக் காட்டினாள். கைவிடப்பட்ட ஒரு வீடு தெரிந்தது. சந்தேகமேயில்லை.

இவள் அப்படிதான்.

“எனக்கு சரியா படலை சார். மோட்டிவ் இல்லாத க்ரைம் சாத்தியம்தான்னு நினைக்கிறேன். காம்யூவோட நாவல்ல கூட...”

புரொபஸர் இம்முறை கோபப்பட்டார். “கிரிமினல்ஸையும், கேஸையும் கரைச்சுக் குடிச்சி இவ்வளவு புக்ஸ் எழுதினவனுங்க முட்டாளு. அதையெல்லாம் படிச்சி உங்களுக்கு கத்துக்கொடுக்கிற நான் கேணையன். எடக்குமடக்கா கேள்வி கேட்குற நீ மட்டும்தான் புத்திசாலியாடா?”

மறுபடியும் கொல்லென்ற சிரிப்பு. கொலைவெறி வந்தது நரேனுக்கு. ஆட்டு மந்தைகள். என்ன பாடம் சொல்லிக் கொடுக்கிறார்களோ அதை அப்படியே மனப்பாடம் செய்து, தேர்வில் வாந்தி எடுக்கும் மந்திகள். என்னைப் பார்த்து சிரிக்க இவனுங்களுக்கு என்ன யோக்கியதை?

அவளோடு சேர்ந்து அவனும் நடந்தான். இதுவரை இருவரும் ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்ளவில்லை. இவனுக்கு எந்த மோட்டிவ்வும் இல்லை. அவளுக்கு?

‘கொல்’லென்ற சிரித்த மந்திகளில் ஒருவனையாவது ‘கொல்’ என்று உள்மனம் ஆணையிட்டது. கொன்றுவிட்டால் ‘கொல்’லென சிரித்ததால்தான் கொன்றான் என்பது மோட்டிவ் ஆகிவிடும்.

மோட்டிவ்வே இல்லாமல் ஒருவனையோ/ஒருவளையோ போட்டால் என்ன?

அந்த மஞ்சள் புடவையோடு சேர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறானே நரேன். அதற்கு மோட்டிவ், வகுப்பறையில் அவனுக்கு நடந்த அவமானம்தான். அரை அடி நீளத்துக்கு பளபளக்கும் பொருளை உடைக்குள் மறைத்து வைத்திருந்தான்.

அந்த கட்டிடம் இருளடைந்து போயிருந்தது. அடிக்கடி இங்கே வந்து செல்பவள் என்பது அவளது இயல்பான நடவடிக்கைகளில் தெரிந்தது. சொந்த வீட்டுக்குள் பிரவேசிப்பவளைபோல விறுவிறுவென நடந்தாள். லேசான படபடப்போடு இவனும் பின் தொடர்ந்தான்.

வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாய் சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒரு ஈ, காக்காய் கூட...

அந்த பழையவீட்டின் வரவேற்பரை முழுக்க செடிகொடிகளால் நிறைந்திருந்தது. நேராகப் போய் ஓர் அறையை திறந்தாள். பூட்டியிருந்த அந்த அறைக்கதவுக்கான சாவி, அவளிடம் இருந்தது என்பதுதான் ஆச்சரியம்.

திரும்பிப் பார்த்து இவனை வரும்படி சைகை செய்தாள். கொஞ்சம் தயக்கமாக உள்ளே நுழைந்தான். ‘பொருள்’ இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

அந்த அறை முதலிரவு அறையை போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. மெழுகுவர்த்தி ஒன்று பாதி எரிந்த நிலையில் மங்கிய மஞ்சள் வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டிருந்தது.

தயக்கத்தை விட்டான். அறைக்குள் நுழைந்தவன் கட்டிலை எட்டி அமர்ந்தான்.

ஒருவிரலை உயர்த்திக் காட்டி ‘ஒரு நிமிஷம்’ என்பதாக சைகை செய்தவள், பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

அவசரமாக உடைக்குள் மறைத்திருந்த ஆயுதத்தை எடுத்து தலையணைக்கு கீழே வைத்தான். அவள் வந்ததுமே கட்டியணைத்து, மெதுவாக கத்தியை எடுத்து, வெண்ணெய் கட்டி மாதிரி இருக்கும் இடுப்பில் ஒரு சொருகு சொருகி, திருகி....

மோட்டிவ்வே இல்லாத பச்சை படுகொலை.

ஆனால்-

மோட்டிவ்வே இல்லாமல் ஒரு கொலை செய்யவேண்டும் என்கிற சிந்தனைதான் இதற்கு மோட்டிவ். அப்படியெனில் அது எப்படி மோட்டிவ் இல்லாத கொலையாகும்?

லாஜிக் இடிக்கிறதே?

திடீர் குழப்பம் அவனைச் சூழ, அவள் கதவைத் திறக்கும் சப்தம் கேட்டது.

தட்.

மண்டைக்குள் பூச்சி தாறுமாறாய் பறந்தது. அனிச்சையாய் தலையை தொட்டான். கெட்டியாய் ரத்தம் கொழகொழத்தது. முகத்தில் அடர்சிகப்பு வழிய அதிர்ச்சியாய் திரும்பினான்.

அவளது முகத்தில் அடையாளம் காணமுடியாத கோபம். கண்கள் சிவந்திருந்தாள். கையில் நீளமான சுத்தியல். மீண்டும் சுத்தியலை தலைக்கு மேலே தூக்கி, இன்னொரு தட்.

மூளை சிதறுவதற்கு முன்பாக சிந்தித்தான். “என்னை கொல்ல இவளுக்கு என்ன மோட்டிவ்?”

நீலவேணி

$
0
0
சையே துன்பத்துக்கு காரணம் என்கிற தத்துவத்தை எல்லாம் விடுங்கள். ஏனோ தெரியவில்லை. என்னைப் பார்த்ததுமே அடைந்துவிட வேண்டும் என்றுதான் எல்லா பாவிகளும் ஆசைப்படுகிறார்கள். இது என் பிறப்பின் வரமா சாபமா?

“பரிகாரி”

பரிவு காட்டுவதைப் போன்ற நாடகத்தொனியில் அவன் அழைத்தது நன்றாகவே கேட்டது. ஆனாலும் கேளாதது போல வாளாவிருந்தேன். நானென்ன அவன் மனைவியா. அழைத்ததுமே போக.

மீண்டும் குரலுயத்தி அழைத்தான். “பரிகாரீஈஈஈஈஈஈஈஈ”

ஜனநடமாட்டம் அதிகரித்திருந்த முன்மாலைப் பொழுது. சந்தையே திரும்பிப் பார்த்தது. நான் திரும்பவில்லை.

அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தான். பைஜாமாவை தட்டி மணலை உதறினான். கையில் சவுக்கை எடுத்தவாறே என்னைப் பார்த்தான். இந்த அதட்டல், மிரட்டல், உருட்டல்களுக்கு நானா அஞ்சுவேன். அவனுடன் நின்றுகொண்டிருந்த தடியனை கண்டதுமே எனக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக அவன் அணிந்திருந்த கரும்பச்சை நிற குல்லா.

‘ப்பட்..’ என் முதுகை சவுக்கு முத்தமிட்ட சப்தம். அடிக்கடி வாங்கி பழக்கப்பட்டு விட்டாலும் ‘களுக்’கென்று ஒரு துளி நீர் கண்களில் கோர்த்துக் கொள்வது வழக்கமாகி விட்டது. ஆரம்பத்தில் அழுது அரற்றிக் கொண்டிருந்தேன். இப்போது பழகிவிட்டது. சுற்றிலும் இருந்தவர்கள் என்னை பரிதாபமாக பார்த்தார்கள். இந்த ஊடுருவும் பார்வைதான் எனக்கு பிரச்சினை. உடல் கூசுகிறது.

“திமிர் பிடித்தவள். யாருக்கும் அடங்கமாட்டாள். ஆனால் அட்டகாசமானவள். ஆசைப்பட்டுதான் நல்ல விலைக்கு பிடித்தேன். நீயும் ஆசைப்பட்டு கேட்கிறாய். இருமடங்கு கூடுதல் விலைக்கு தருவதில் எனக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும்?”, குல்லாக்காரனிடம் இவன் கறைபடிந்த பற்கள் பளிச்சென்று தெரிய, அசிங்கமாக இளித்துக்கொண்டே சொன்னான்.

புரிந்திருக்குமே? வணிகம். நான் மீண்டும் ஒரு முறை விலைக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய விலை என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் பாரசீக நாட்டின் விலையுயர்ந்த பண்டங்களில் ஒன்றாக நான் மாறிக்கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரிகிறது. எத்தனைமுறை கை மாற்றப்பட்டேன் என்று எனக்கே நினைவில்லை. ஆனால் என்னை வாங்கிய எவனுக்கும் நான் அடங்கிப் போனதில்லை. அது மட்டும்தான் என்னுடைய பெருமை. ‘அடங்கா குதிரைக்கு விலை அதிகம்’ என்று எங்கள் ஊர்பக்கம் ஒரு பழமொழி உண்டு. எனக்கு அது அப்பட்டமாய் பொருந்தும்.

நான் பிறந்த ஊரில் மருந்துக்கு கூட பசுமை கிடையாது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பாலைதான். எக்காலத்திலோ வறண்டுப்போன ஏரி ஒன்றுதான் எங்கள் ஊரின் அடையாளம். பாதங்கள் புதையுமளவுக்கு மென்மையான செம்மணல் ஏரிப்பரப்பு முழுக்க வியாபித்திருக்கும். இக்கரைக்கும் அக்கரைக்குமாக இலக்கில்லாமல் ஓடுவேன். மந்திரவாதி ஏவிவிட்ட பிசாசு துரத்துவதைப் போல அசுரவேகத்தில் ஓடுவேன். அதே வேகத்தில் திரும்ப வருவேன். செந்தூசி பறக்கும்.

தூரத்தில் இருந்து யாரேனும் அக்காட்சியை காண நேர்ந்திருந்தால் அமானுஷ்யமான ஓர் அனுபவத்தை உணர்வார்கள். எந்த சவாலையும் எதிர்கொள்ளும் திண்மை என் நெஞ்சுக்கு கிடைத்தது அந்த இலக்கற்ற ஓட்டங்களால்தான். ஓடி ஓடி வலுவானது என் கால்கள். உரமேறியது உடம்பு. உறுதியோடு உபவிளைவாக வனப்பும் கூடியது. நானே சொல்லக்கூடாது. எங்கள் ஊரிலேயே அழகி நான்தான். என் அழகோடு போட்டிபோட யாருக்குமே அருகதை இல்லை. பேரெழில் என்கிற வார்த்தைக்கு உருவம் கொடுத்தால் நிச்சயமாக அது நான்தான். என் அழகை வருணிக்க பாரசீக மொழியில் வார்த்தைகளின்றி கவிஞர்கள் தடுமாறுவார்கள். அழகுதான் ஆபத்து. அழகின் விளைவு இரண்டு. ஒன்று அழகுக்கு மற்றவர்கள் அடிமை ஆவார்கள். அல்லது அழகு மற்றவர்களுக்கு அடிமை ஆகவேண்டும். துரதிருஷ்டவசமாக என் விஷயத்தில் இரண்டாவது நடந்தது.

சிறுவயதில் அடிக்கடி ஒரு கனவு வரும். அந்த ஏரி முழுக்க நீலநீர் நிறைந்திருக்கும். அதில் நானும் என்னுடைய தோழிகளும் நேரம் காலம் இல்லாமல் விளையாடி களித்திருப்போம். கனவு. வெறும் பகற்கனவு. நிஜத்தில் எனக்கு தோழிகளே இருந்ததில்லை. தனிமை மட்டுமே நிழலுக்கு நிகரான என்னுடைய துணைவன். நான் அந்த ஊரில் இருந்தவரை ஒரு சொட்டு கூட மழை பொழிந்ததாக நினைவேயில்லை. மழைகூட கருணை காட்ட வக்கில்லாத ஓர் ஊரில் உயிரினங்கள் எத்தனை காலத்துக்கு ஜீவித்திருக்க முடியும். எல்லோரும் வேறு வேறு ஊர்களுக்கு இடம்பெயரும்போது நானும் இடம்பெயர்ந்தேன். பிடித்தது பீடை.

என்னை முதன்முதலாக பிடித்தவன் கொஞ்சம் நல்லவன்தான். இப்ராஹிம். கோதுமை விவசாயி. தானுண்டு தன் பிழைப்புண்டு என்று வாழ்பவன். முதன்முதலாக பச்சை நிறத்தை கண்ணில் கண்டதே இப்ராஹிமின் பரந்து வளர்ந்த வயலில்தான். எனது அழகை பற்றி அவனுக்கு அக்கறை எதுவுமில்லை. எனக்கு பரிகாரி என்று பெயர் சூட்டியவனே அவன்தான். வீட்டிலும், வயற்காட்டிலும் கொஞ்சம் ஒத்தாசை செய்யவேண்டுமென்று எதிர்பார்த்தான். காட்டுகுதிரையாய் திரிந்த எனக்கு வீட்டுவேலை என்ன தெரியும். அவனுடைய அன்புக்கு கட்டுப்பட்டு இருப்பதே எனக்கு அவஸ்தையாக இருந்தது. நல்ல மதுமயக்கத்தில் அவன் உறங்கிக் கொண்டிருந்த ஓரிரவில் தப்பித்து ஓடினேன். ஓடப்பிறந்தவள் ஆயிற்றே நான். ஓரிடத்தில் தேங்க முடியுமா.

நான் எங்கெல்லாம் ஓடுகிறேனோ, அங்கெல்லாம் என்னை பிடிக்க எவனோ ஒருவன் தயாராக இருந்தான். எல்லாருமே பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை பிடித்த பேராசைக்காரன்கள். மனிதர்களைவிட அபாயகரமான ஜந்துகள் காட்டில்கூட கிடையாது. என்னை பார்த்ததுமே ஆசைபட்டு உடைமை ஆக்கிக்கொள்ள முயற்சிப்பார்கள். எவனுக்குமே நான் அடங்கியதில்லை. இதனாலேயேதான் அடிக்கடி கைமாறி கொண்டிருந்தேன்.

“பரிகாரி நம்மிடம் இருக்கவேண்டியவளே அல்ல. பாரசீக மன்னரின் அரண்மனையை அலங்கரிக்க வேண்டியவள்” என் காதுபடவே நாலு பேர் பேசுவார்கள். பெருமையாகதான் இருக்கும். என்றோ ஒருநாள் காபூலுக்கும் வாழ்க்கைப்பட்டு தொலைக்கப் போகிறோம் என்று நினைத்துக்கொள்வேன்.

அந்த பச்சை குல்லாகாரன் என்னை காபூலுக்கு அழைத்துச்செல்லதான் வாங்கியிருக்கிறான். காபூல் சுல்தானின் அந்தரங்க ஆலோசகனாம் இவன்.

முட்டாள்களே! சுல்தான் என்ன பெரிய இவனா? நான் அவனுக்கும் அடங்கப் போவதில்லை. என்னுடைய இலட்சியம் இந்துஸ்தான். டெல்லி அரண்மனையை அலங்கரிக்கப் பிறந்தவள் நான். காபூல் எனக்கு சுண்டைக்காய்.

பச்சை குல்லா என்னை பட்டாடைகளால் அலங்கரித்தான். உடல் முழுக்க வாசனைத் திரவியங்களை தெளித்தான். இதுவரை எனக்கு யாருமே செய்யாத அலங்காரமாக, என்னுடைய வாலில் மல்லிகைச் சரத்தை சுற்றினான். ஆம், வாலில்தான்.

அன்பான வாசகரே! ஏன் குழப்பமடைகிறீர். நீங்கள் என்னை யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நானொரு குதிரை. மேலேயே இரண்டு முறை என்னை நான் குதிரை என்றுதான் சொல்லியிருக்கிறேன். மீண்டும் கவனமாக வாசித்துப் பாருங்கள். மனிதர்கள்தான் கதை சொல்ல வேண்டுமா. குதிரை சொல்லக்கூடாதா. சொல்லுகிறேன். கேளுங்கள்.
“இதுதானா காபூலில் இருந்து எனக்கு வந்து சேர்ந்திருக்கும் பிறந்தநாள் பரிசு?” டெல்லி பாதுஷா என்னை பார்த்ததுமே திருப்தி அடைந்தார் என்றுதான் அவரது இறுக்கம் தளர்ந்த சிரிப்பை பார்த்ததுமே எனக்கு தோன்றியது. 

முதுகுவளைந்து பாதுஷாவுக்கு தொடர்ந்து சலாம் போட்டுக்கொண்டே இருந்த காபூல் மன்னரின் தூதன், என்னைப்பற்றி விளக்க ஆரம்பித்தான்.

“உயர்ஜாதி குதிரை பாதுஷா. புயல்வேகத்தில் பறக்கும். ஓராண்டு காலத்துக்கும் மேலாக கடுமையான பயிற்சிகளை கற்றுக் கொடுத்திருக்கிறோம். போர்க்களத்தில் தன் உயிர்கொடுத்து நம்முயிர் காக்கும். காபூல் மன்னர் பெரும் பொருள் கொடுத்து வாங்கினார். இந்துஸ்தானின் பேரரசர்தான் இதில் ஆரோகணித்து பயணிக்க வேண்டும் என்று எங்கள் மன்னர் ஆணையிட்டுவிட்டதால், இதுவரை இந்த குதிரையின் மீது யாருமே ஏறியதில்லை. இது உங்களது பிரத்யேக சொத்து”

“அச்சா” என்று அவனை ஆமோதித்த ஆலம் ஷா, என்னை சுற்றி வந்து பார்க்கத் தொடங்கினார். உயர்ரக மஸ்லின் ஆடையை அணிந்திருந்தார். வழக்கமாக அரசர்கள் அணியும் தலைப்பாகை அன்று அவர் தலையில் இல்லை. ஏனோ ஒரு எளிமையான கதர் குல்லா அணிந்திருந்தார். அத்தர் நெடி அளவுக்கதிகமாய் வீசியது.

“அபாரம். ஆலம்ஷா அகமகிழ்ந்துவிட்டான் என்று போய் உன் மன்னனிடம் சொல். நினைவில் வாழும் என்னுடைய தந்தையார் பாதுஷா அவுரங்கசீப் இதே மாதிரி தோற்றம் கொண்ட குதிரையில்தான் கம்பீரமாக டெல்லியை வலம் வருவார். அவரது மகனான எனக்கும் அந்த பாக்கியம் அமைந்திருக்கிறது”

மன்னரை சுற்றி நின்றிருந்தவர்கள், அவர் சொன்னதை ஆமோதிக்கும் விதமாக தலையசைத்தார்கள். லாயத்தில் திடீரென தீனமான, பரிதாபமான, எந்த விலங்கின் ஒலி என்று அடையாளம் காண இயலாத சப்தம் கேட்டது. இந்த சப்தம் காதில் விழுந்ததுமே மன்னர் எரிச்சலடைந்தார். லாயத்துக்கு பொறுப்பானவனை அழைத்தார்.

“இன்னும் அந்த சனியனை வெட்டிப் போட்டு புதைக்கவில்லையா? என்னுடைய ராஜாங்கத்தில் தகுதியற்றவர்களுக்கு இடம் இல்லை. இன்னும் அரை மணி நேரம்தான் உனக்கு அவகாசம். இதே சப்தத்தை மீண்டும் ஒருமுறை கேட்டால் என்னுடைய வாள் உன் கழுத்தில் இருக்கும்” மன்னரின் முகத்தில் தவழ்ந்த சிரிப்பு மறைந்தது. கடுகடுவென மாறியது அவர் முகம்.

“இதோ பாதுஷா. பத்து நிமிடங்களில் முடித்துவிடுகிறேன்” லாயக்காரன் மன்னரின் ஆணையை கேட்டதுமே அரக்க பரக்க ஓடினான்.

“என்ன விஷயம் அரசரே?” நறுவிசாக உடையணிந்திருந்த இளைஞன் ஒருவன் கேட்டான். அவனுடைய தோரணையைப் பார்த்தால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்கும் என்று யூகித்துக் கொண்டேன்.

“சென்ற வாரம் வேட்டைக்கு போனபோது, ஒரு மானை துரத்த முயன்றேன். பாழாய்ப்போன குதிரை எங்கோ பள்ளத்தில் தெரியாத்தனமாக பாதம் பதித்து, காலை உடைத்துக் கொண்டது. இனி பழைய மாதிரி நலம் பெறாது என்று சொல்லிவிட்டார்கள். எதற்கு வீணாக அதையும் வைத்து அரண்மனை லாயத்தில் பராமரிக்க வேண்டுமென்று கொன்றுவிடச் சொன்னேன். மடையன், இன்னும் செய்யவில்லை” மன்னரின் குரலில் தெரிந்த அரக்கத்தனம் எனக்கு அருவருப்பு ஊட்டியது.

எந்த டெல்லியை என் கனவுதேசமாக நினைத்தேனோ, அதை ஆளுபவர்கள் இரக்கமற்றவர்கள் என்று தெரிந்ததும் மனக்கசப்படைந்தேன். திமிர் பிடித்த இந்த பேரரசன் மட்டுமல்ல. மொகலாய சாம்ராஜ்யத்தின் எடுபிடி எவனும் கூட என் மீது ஏறி அமர்ந்துவிடக்கூடாது என்று உடனடியாக ஒரு சபதம் மேற்கொண்டேன். கோபத்தில் முன்னங்கால் இரண்டையும் ஒன்றரை அடி தூரத்துக்கு தரைக்கு மேலாக தூக்கி பலமாக கனைத்தேன்.

மன்னன் என் அருகே வந்தான். இனி வந்தான்தான். வந்தார் அல்ல. உயிரின் அருமை தெரியாத, இரக்கம் என்கிற குணத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாத இவனுக்கு எதற்கு மரியாதை?

“இரும்மா செல்லம். இதோ வந்துவிட்டேன். நகர் முழுக்க ஓர் உலா போகலாம். தங்கள் பாதுஷாவின் புதிய பட்டத்துக் குதிரையை டெல்லிவாசிகள் தரிசிக்கட்டும்” பட்டத்தரசியை கொஞ்சுவது மாதிரி என்னையும் கொஞ்சினான். எரிச்சலாக இருந்தது. முதுகை தடவிக் கொடுத்தான். பூச்சி ஊர்வதைப் போல அருவருப்பாக உணர்ந்தேன்.

“அடேய்! தயாரா?” மன்னன் யாருக்கோ குரல் கொடுத்தான்.

ஒருவன் ஓடி வந்தான். நீரெடுத்து வந்து என் உடல் துடைத்தான். இன்னொருவன் கையில் நிறைய பட்டுத்துணி. எனக்கு அணிவிக்க தொடங்கினான். ஒருவன் வாசனைத்திரவியங்களை என் உடல் முழுக்க பூசினான். முகத்தில் நான்கைந்து வண்ணங்கள் பூசி என்னை அலங்கரித்தார்கள். டெல்லி பாதுஷாவின் குதிரையாம். எல்லோரும் பார்த்ததுமே மூக்கில் விரல்வைக்க வேண்டுமாம்.

அமைதியாக எல்லா கூத்துகளுக்கும் ஒத்துழைப்பு கொடுத்து வந்தேன். மன்னன் ஓரமாக நின்று, முதலிரவு புதுப்பெண்ணை மாப்பிள்ளை ரசிப்பது மாதிரி என்னை ரசித்துக் கொண்டிருந்தான்.

முல்லா ஒருவர் வந்து ஏதேதோ மந்திரங்களை ஓதினார். என்னுள் ஏதேனும் சைத்தான் ஒளிந்திருந்தால், அதை அவரது மந்திரம் துரத்திவிடுமாம். சாம்பிராணி புகையெழுப்பி என் உடலை கதகதப்பாக்கினார்கள்.

எல்லாம் தயார்.

என் மீது ஆரோகணிக்க, கம்பீரநடை நடந்து வந்தான் மன்னன். என் கழுத்துக்கு கீழாக காலுக்கு அருகில் நீண்டிருந்த பட்டையில் அவன் கால் வைத்து, ஒரு எக்கு எக்கி, இன்னொரு காலை தூக்க முயற்சித்ததுமே ஒரு குலுக்கு குலுக்கி, முன்னங்கால்களை தூக்கி அப்படியே ஒரு சுற்று சுற்றினேன். பாதுஷா தூரமாக போய்விழுந்தான். நீ இந்த வெறும் மண்ணுக்குதான் மன்னன். நானோ உலகக் குதிரைகளுக்கெல்லாம் பேரரசி. உன் திமிர் உனக்கென்றால், என் திமிர் எனக்கு.

சுற்றி நின்ற மொத்த கூட்டமும் அதிர்ச்சியடைந்தது. பேரரசன் அவமானப்பட்டு எழுந்து நின்றான். அவனுக்கு அழுகையே வந்திருக்கும்.

“என்ன செய்வீர்களோ தெரியாது. இன்னும் பத்து நாளில் இந்த குதிரை எனக்கு அடங்க வேண்டும். தயார் செய்யுங்கள்” கரகரவென கத்திவிட்டு, திரும்பிப்பாராமல் நடந்தான்.

பிரதம அமைச்சர் என்னை கவலையோடு பார்த்துக்கொண்டே சொன்னார். “தளபதி! உடனடியாக செங்கிரிக்கு ஆளனுப்பி ஸ்வரூப் சிங்கை கையோடு அழைத்துவர ஆவன செய்யுங்கள். அடங்காத குதிரையெல்லாம் அவனுக்குதான் அடங்கும்”

“அப்படியே ஆகட்டும் அமைச்சரே. ஸ்வரூப்சிங்கின் மகன் தேஜ்சிங்கையும் உடன் அழைத்துவர ஏற்பாடு செய்துவிடுகிறேன். அவன் அப்பனை மிஞ்சிய கெட்டிக்காரனாக வளர்ந்துவிட்டான் என்று கேள்விப்பட்டேன்” என்றான் தளபதி. கட்டி வா என்றால் வெட்டி வருவான் போலிருக்கிறது. ஆர்வக்கோளாறு. அவசரக் குடுக்கை.

எவன் அவன் தேஜ்சிங்? வரட்டும். எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும், நான் அனுமதிக்காமல் என் மீது எவனும் ஏற முடியாது. அப்பனையும், மகனையும் ஒரு வழி பண்ணாமல் அனுப்பமாட்டேன்.
“பரிகாரி, இதுதான் டெல்லி” அரண்மனை லாயத்துக்கு பொறுப்பான அமர்சிங் எனக்கு டெல்லியை சுற்றி காட்டிக் கொண்டிருந்தான். கடந்த பத்து நாட்களில் இந்நகரில் எனக்கு கிடைத்த பிரபலம் அளப்பரியது. பாதுஷாவையே ஏற்க மறுத்த குதிரையென்று முதலில் கோட்டையில் வசிப்பவர்கள் அசந்தார்கள். விஷயம் மெதுவாக நகர்வாசிகளுக்கும் பரவியிருந்தது. அமர்சிங்குக்கு ஏனோ என்னை ரொம்பவும் பிடித்துப் போயிற்று. என்னிடம் அன்பாக நடந்து கொண்டான். நிரம்பவும் பரிவாக நடத்தினான். கவனமாக பராமரித்தான். என்னை குதிரையாக நடத்தாமல், அவனுடைய நண்பன் மாதிரி பழகினான். சக மனிதர்களோடு பேசுவது மாதிரி, என்னோடும் பேசினான். அவன் பேசியது எனக்கு நன்றாகவே புரிந்தது. 

லாயத்திலேயே அடைந்து கிடந்த என்னை இரண்டு நாட்களாக டெல்லியை சுற்றிக்காட்ட நடத்திக் கொண்டிருக்கிறான். நான் செல்லும் தெருவெங்கும் டெல்லிவாசிகள் என்னை ஆச்சரியமாக பார்த்தார்கள். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்னை காட்டி, “அதுதான் பரிகாரி. இந்துஸ்தானத்திலேயே தலைசிறந்த குதிரை” என்று காட்டிக் கொண்டிருந்தார்கள்.

அன்று பதேபூர் சிக்ரி அருகே நானும், அமர்சிங்கும் நடந்துக் கொண்டிருந்தோம். கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே இருந்த மக்களிடையே திடீர் பரபரப்பு. ஏதோ ஒரு இந்து கோயிலுக்கு உரிமையான கோயில்மாடு ஒன்று வெறிபிடித்தாற்போல ஓடிக்கொண்டிருந்தது. வெள்ளைநிற காளை மாடு. நெற்றியில் நிறைய குங்குமம் அப்பிடப்பட்டிருந்தது. கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது. வீரர்கள் சிலர் அதை அடக்குவதற்காக, தங்களது ஈட்டியை கையில் ஏந்தியவாறு அதை பின் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்கள். சிலர் அதை கொன்று அடக்கும் வண்ணம், அதை நோக்கி ஈட்டியை எறிந்தார்கள். காளையோ லாகவமாக அதை தவிர்த்து, அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. காளைமாட்டின் கூரிய கொம்புகளால், நான்கைந்து பேரின் குடல் உருவப்பட்டு விட்டது. தெருவெங்கும் ரத்தக்களரி.

என்னைவிட பெரிய அடங்காப்பிடாரியை அன்றுதான் கண்டேன். காளை என்னையும், அமர்சிங்கையும் நோக்கிதான் அதிவேகமாக வந்துகொண்டிருக்கிறது. பதட்டத்தில் அமர்சிங் என் மீது ஏறி தப்பிக்க முயற்சித்தான். போயும் போயும் ஒரு லாயக்காரன் என் மீது ஏறுவதா. வறட்டுக் கவுரவம் தலைக்கேறியது. அவனை ஏறவிடாமல் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தேன். காளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உயிர் தப்பினால் போதுமென்று என்னை விட்டு விட்டு அமர்சிங் தெறித்து ஓடினான். பட்டாடைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நான், அந்த காளைக்கு வித்தியாசமாக தெரிந்திருக்க வேண்டும். என்னை குத்தி கிழிக்கும் ஆவேசத்தோடு நெருங்கிக் கொண்டிருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. மோதி பார்த்துவிடலாமா. வெறிகொண்ட ஒரு காளையை, ஒரு குதிரையால் மோதி வென்றுவிட முடியுமா?

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. காற்றை கிழித்துக்கொண்டு ஒரு கருநிற குதிரை, எனக்கும் காளைக்கும் இடையில் வந்து நின்றது. அதன் மீது நெட்டையாய் ஒருவன் ஆரோகணித்திருந்தான். ஒரு கையில் வாளும், மறு கையில் வேலுமாக கம்பீரமாக காட்சியளித்தான். நான் இருந்த இடத்திலிருந்து அவனுடைய பின்புறத்தைதான் காணமுடிந்தது. ஆவேசமாக வந்த காளை அவனை கண்டதும் தயங்கி நின்றது. குதிரையிலிருந்து வழக்கமான பாணியில் இறங்காமல், அப்படியே எகிறிக் குதித்தான். அச்சம் சிறிதுமின்றி காளையை நெருங்கினான். தன்னைப் பார்த்து பயப்படாமல் நெருங்கி வரும் வீரனை கண்ட காளைக்கு ஆவேசம் பன்மடங்கானது. முன்கால்கள் இரண்டையும் மண்ணில் தேய்த்து, கொடூரமாக உறுமியது. புழுதி பறந்தது.

“இந்துஸ்தான் பேரரசரின் விசுவாசி, செங்கிரி கோட்டையை ஆளும் மாவீரன் ஸ்வரூப்சிங்கின் திருமகன் இளவரசன் தேஜ்சிங் ஆணையிடுகிறேன். அறிவுகெட்ட காளையே அடங்கிப்போ” என்று உரத்த குரலில் ஆணையிட்டான். அவன் மொழி காளைக்கு எப்படி தெரியும்? அவனை ஒரு வழியாக்கும் முடிவோடு ஆவேசத்தோடு நெருங்கி பாய்ந்தது. கூட்டம் ஓடுவதை நிறுத்திவிட்டு வேடிக்கை காண முனைந்தது.

முதல் மோதலில் அவனுடைய வாளும், வேலும் தூரமாகப் போய் விழுந்தது. காளையின் இரண்டு கால்களுக்கிடையே நுழைந்து உயிர் தப்பினான். வேகமாக விலகி வாலைப்பிடித்து இழுத்து, பட்டென்று காளை மீதேறி, அதன் திமிலை வலுவாகப் பிடித்து, அவனுடைய கால்களை காளையின் உடலில் பின்னி அடக்க முனைந்தான். இப்படியும் அப்படியுமாக திமிறி காளை அவனை தூக்கியெறிந்தது. ஓரமாக விழுந்தவன் உடனே எழுந்தான். காளையே எதிர்ப்பார்க்காத கணத்தில் அதன் முன் நிறு இருகைகளாலும் கொம்பினை பிடித்தான். கால்களை தரையில் நன்றாக ஊன்றி, காளையின் தலையை அசையாதவாறு ஒரு நிமிடத்துக்கு அப்படியே நிறுத்தினான். கனத்த சரீரத்தை இடமும், வலமுமாக அசைத்துக்கொண்டிருந்த காளை கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. அதன் கண்களில் மின்னிய கொலைவெறி அப்படியே மறைந்தது.

மக்கள் வாழ்த்தொலி முழங்க தொடங்கினார்கள். “இந்துஸ்தான் பாதுஷா ஆலம்ஷா நீடூழி வாழ்க. செங்கிரி இளவரசர் தேஜ்சிங் பல்லாண்டு வாழ்க”

சில நிமிடங்களுக்கு முன்னராக காட்டுமிருகமாக காட்சியளித்த காளை இப்போது பூனையாய் தேஜ்சிங்கின் கைகளுக்கு அடங்கியது. அதை தட்டி, தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். கோயிலில் இருந்து வந்த ஒருவர், அதன் கழுத்தில் கயிறு மாட்டினார். தேஜ்சிங்குக்கு நன்றி சொல்லிவிட்டு காளையை நடத்திச் சென்றார்.

ஆஹா இவனல்லவோ வீரன். இப்படியொரு வீரன் அல்லவா என்மீது ஏறி சவாரி செய்ய வேண்டும். முதல் பார்வையிலேயே எனக்கு தேஜ்சிங்கை பிடித்துவிட்டது. எங்கிருந்தோ அமர்சிங் ஓடிவந்தான். தேஜ்சிங்குக்கு வணங்கி வணக்கம் தெரிவித்தான். “இளவரசரே! இதோ நிற்கிறதே இதுதான் பரிகாரி. இதை அடக்கத்தான் பேரரசர் உங்களை இங்கே வரவழைத்திருக்கிறார்”

தேஜ்சிங் என்னை பார்த்தான். தீர்க்கமான பார்வை. அவனுக்கு பதினெட்டு, பத்தொன்பது வயதுதான் இருக்கும். தோள்கள் வலுவாக உரமேறி இருந்தது. கால்களும், கைகளும் நல்ல பருமனில் தூண்கள் மாதிரி இருந்தது. நெற்றியில் நீளவாக்கில் செந்தூரம் இட்டிருந்தான். பின்னங்கழுத்தில் முடி பரவலாக அடங்காமல் காற்றில் பறந்துக் கொண்டிருந்தது.

என்னிடம் வந்தவன் பரவசமாக என் முதுகை தொட்டான். தடவிக் கொடுத்தான். சிலிர்த்தது. வார்பட்டையில் கால்வைத்து, ஒரே மூச்சில் என் மீதேறினான். அமைதியாக, மகிழ்ச்சியாக அவனை அனுமதித்தேன். கடிவாளம் பிடித்து என்னை செலுத்த ஆரம்பித்தான். எதிர்காற்று முகத்தில் மோத, என்றுமில்லாத வேகத்தில் கோட்டையை நோக்கி பறக்க ஆரம்பித்தேன்.
“ஆண்டவா, நான் வெல்லவேண்டும் என்று உன்னிடம் பிரார்த்திக்கவில்லை. அதர்மம் வென்றுவிடக்கூடாது. எனவே தர்மத்தின் பக்கமாக நிற்கும் செஞ்சிப்படைகள், ஆற்காடுப்படைகளை வெல்ல நீ உத்தரவிட வேண்டும்” சிங்கவரம் அருள்மிகு அரங்கநாத சுவாமிகள் சன்னதியில் நின்று மனமுருக வேண்டினான் ராஜா தேசிங்கு. 

தேசிங்கு வேறு யாருமல்ல. யாராலும் அடக்க முடியாத என்னை அடக்கிய தேஜ் சிங்தான். செங்கிரியை இங்கே எல்லோரும் செஞ்சி என்கிறார்கள். அந்த செஞ்சி கோட்டையின் ராஜா தேஜ்சிங்கை, சுருக்கமாக தேசிங்கு என்று அழைக்கிறார்கள். பரிவாதினி என்கிற என்னுடைய இயற்பெயரை மாற்றி, என்னை எல்லோரும் இங்கே ‘நீலவேணி’ என்று அழைக்கிறார்கள்.

எந்த காரியமாக இருந்தாலும் அரங்கநாத சுவாமிகளின் உத்தரவு கிடைத்தபிறகே தேஜ்சிங் செய்வது வழக்கம். அதையொட்டிதான் போருக்கு தன் இஷ்டதெய்வத்திடம் அனுமதி வாங்க சிங்கவரம் வந்திருந்தான். அன்று இறைவன் என்ன நினைத்தானோ. தேஜ்சிங் இவ்வாறு பிரார்த்தித்ததுமே அவரது தலை பின்புறமாக திரும்பிக் கொண்டது.

அர்ச்சகர் பதறிவிட்டார். “மன்னரே! இந்த போரில் இறைவனுக்கு நாட்டமில்லை போலும். தன்னுடைய சிரசை திருப்பிக் கொண்டார். இம்முடிவு குறித்து நீங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும்”

அரசியும் கூட போர்வேண்டாம் என்று ராஜாவை வற்புறுத்தினாள்.

“முன்வைத்த காலை பின்வைக்க முடியாது ராணி. ஆற்காடு நவாப் சாதத் உல்லா கான், செஞ்சி மீது அநீதியாக போர் தொடுத்திருக்கிறார். எண்பத்தைந்தாயிரம் குதிரை வீரர்கள் நம்மை முற்றுகையிட்டிருக்கிறார்கள். நம் பக்கம் இருப்பதோ முன்னூற்றி ஐம்பது பேர்தான். நாம் வெல்லுவது நிச்சயமல்ல. நவாப் என்னை போரில் கொல்லலாம். ஆனாலும் வரலாறு நிரந்தரமாக வாழவைக்கும். திலகமிட்டு சிரித்த முகத்தோடு என்னை வழியனுப்பி வை தேவி” என்று கேட்டுக் கொண்டான்.

“மன்னர் மன்னா. இந்துஸ்தானின் பேரரசரின் அமைச்சருக்கு மகளாக டெல்லியில் பிறந்தவள் நான். உங்கள் வீரத்துக்கு பரிசாக என் தந்தை, எம்மை உமக்கு மணமுடித்து வைத்தார். விதியின் பயனாக இணைந்தோம். ஓரிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தாலும், மணமொத்த தம்பதியராய் வாழ்ந்தோம். இந்த குறுகிய மணவாழ்க்கையில் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உயிராய் மாறினோம். போர்க்களத்தில் உங்கள் உயிர் பிரிந்தது என்று சேதி கேட்டால் அடுத்த நொடியே என் உயிரும் பிரியும். இது சத்தியம்!” என்று ஆரத்தித் தட்டில் எரிந்துக்கொண்டிருந்த கற்பூரம் மீது ராணிபாய் சத்தியம் செய்தாள். குங்குமம் எடுத்து தன் தாலியில் ஒற்றிக் கொண்டாள். அதே குங்குமத்தை கணவன் தேஜ்சிங் நெற்றியிலும் இட்டாள்.

“வீரவேல்! வெற்றிவேல்!” என்று முழங்கிக்கொண்டே உருவிய வாளோடு, ஓடிவந்து என் மீதமர்ந்தான் தேஜ்சிங். பாரசீகத்தில் பிறந்து, காபூலில் வாழ்ந்து, டெல்லிக்கு வந்து, கடைசியாக செஞ்சியில் பட்டத்து குதிரையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இடைப்பட்ட காலத்தில் என் மீதமர்ந்து ஏகப்பட்ட போர்களில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறான் தேசிங்கு. இம்முறை வெற்றி சாத்தியமல்ல என்று அவனுக்கும் தெரியும், எனக்கும் தெரிகிறது. போரில் வெற்றியா முக்கியம். வீரம்தானே பிரதானம்? தேசிங்குவின் பெயர் வரலாற்றில் வாழ்ந்தால், இந்த நீலவேணியின் பெயரும் கூடவே வாழாதா?

கண்ணுக்கு தெரிந்த தூரம் மட்டும் நவாப்பின் வீரர்கள். கருநிற ஆடை அணிந்திருந்தார்கள். சமுத்திரமாய் விரிந்திருந்த நவாப்பின் படைகளுக்கு முன்பு சிறுகுட்டையாய் தேசிங்குவின் படைகள்.

“வீரர்களே! முன்னேறுங்கள். உங்கள் ஒவ்வொருவரின் வாளுக்கும் குறைந்தது பத்து ஆற்காடு தலைகள் மண்ணில் உருளட்டும். அடக்குமுறைக்கும், அதிகாரத்துக்கும் செஞ்சி அடங்காது என்று ஆற்காடு நவாப்பு உணரட்டும்” வீரர்களை உரத்தக்குரலில் உற்சாகப்படுத்தினான் தேசிங்கு. அவனது உற்சாகம் வீரர்களுக்கும் தொற்றிகொள்ள போர் தொடங்கியது.

மனிதசுவர்களால் உறுதியாய் நின்றிருந்த நவாப்பின் சிப்பாய்களை ஊடறுத்து உள்ளே புகுந்தேன். எங்களை சுற்றி வளைத்த வீரர்களின் தலைகளை மண்ணுக்கு உரமாக்கினான் தேசிங்கு. அவனுடைய மனம் என்ன நினைக்கிறதோ, அதை செயல்படுத்தும் வேகத்தோடு நான் இயங்கினேன்.

போர் தொடங்கி ஒரு மணி நேரம் ஆகியும், தேசிங்குவின் வீரப்படை சலிப்பில்லாமல் மோதிக்கொண்டே இருந்தது. இன்னும் எத்தனை தலைகளை மண்ணில் உருட்டினாலும், போர் முடியவே முடியாது என்று தெரிந்திருந்தும் செஞ்சி வீரர்கள் மன உறுதியோடு போராடினார்கள். உயிரை இழந்தார்கள். தேசிங்கு மட்டுமே நானூறு, ஐநூறு பேரை வீழ்த்தியிருப்பான். ‘சுண்டக்காய் நாடு, நசுக்கி விடுகிறேன்’ என்று நவாப்பிடம் கிண்டலடித்துவிட்டு வந்த, ஆற்காடு தளபதி அசந்துப் போனான். தன்னுடைய வீரர்கள் தொடர்ந்து வீரமரணம் எய்திக்கொண்டே இருந்தபோதும், தனிமனிதனாக தேசிங்கு போராடினான். தானே நேரடியாக தேசிங்குவை எதிர்கொள்ள, பொறுக்கியெடுத்த இருபத்தைந்து பாதுகாவலர்களோடு களத்துக்கு வந்தான்.

சக்கரமாய் வட்டமாக நின்ற ஆற்காடு வீரர்களுக்கு நடுவிலே தேசிங்குவும், நானும் மட்டும்தான்.

“செஞ்சி மன்னரே! வீரத்தின் விளைநிலமே. உங்கள் வீரத்துக்கு முன்பாக நாங்களெல்லாம் ஒன்றுமில்லை. உம்மை வீரத்தால் வெல்ல எங்களில் தனியொருவர் எவராலும் முடியாது. ஆனால் நாங்கள் நிறைய பேர். இப்போது நீங்களோ ஒருவர் மட்டும்தான். தயவுசெய்து ஆற்காடு நவாப்புக்கு அரசியல்ரீதியாக அடிபணிந்து விடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார் தளபதி.

“அச்சமா தளபதி? உயிரைவிடும் முடிவோடுதான் போர்க்களத்துக்கு வந்திருக்கிறேன். அநீதிக்கு அடிபணிந்தான் தேசிங்கு என்று யாரும் பேசிவிடமுடியாது. அதுதான் எனக்கு கிடைக்கப்போகும் வெற்றி. போரில் நீங்கள் வெல்லலாம். ஆனால் மக்கள் மனதில் தோற்கப்போகிறீர்கள். தயவுசெய்து உங்கள் ஆயுதங்கள் என் நெஞ்சில் பாய்ச்சுங்கள்” என்று சொல்லியவாறே தன்னை சுற்றி நின்றவர்களை எதிர்கொள்ள தயார் ஆனான் தேசிங்கு.

ஆற்காடு வீரர்களின் சக்கர வட்டம் சுருங்கியது. நான் உங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கும் என் கதையும் இந்த வரியோடு முடிந்தது.

பின்குறிப்பு :

* தேசிங்கு மறைந்த செய்தியை கேட்டதும் ராணிபாய் தீக்குளித்து மாய்ந்தாள். அவளுடைய நினைவாக ஒரு ஊருக்கு ‘ராணிப்பேட்டை’ என்று பெயர்வைத்தார் ஆற்காடு நவாப்.

* தேசிங்குவோடு வீரமரணம் எய்திய எனக்கும் தனியாக சமாதி வைத்து கவுரவித்தார்கள் ஆற்காடு வீரர்கள்.

* தேசிங்குவின் வீரத்தை போற்றும் வகையில் தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள், அவன் கதையை வில்லுப்பாட்டாக தெருக்கூத்தாக இன்றும் தமிழகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

* பொய்க்கால் குதிரை என்று புதியதோர் கலை தமிழர்களுக்கு கிடைத்தது. பொய்க்கால் குதிரையில் வீற்றிருக்கும் ராஜா வேறு யார்? தேசிங்குதான். குதிரை? நீலவேணி என்கிற நான்தான்.
(தினகரன் வசந்தம் இதழில் நான்குவார தொடர்கதையாக வெளியான கதை)

அசந்துட்டாங்க ஆங்கிலேயனுங்க

$
0
0
தமிழ் திரையுலகின் வரலாற்று சாதனையாளரான தேவருக்கும் ஆங்கிலத்துக்கும் எட்டாம் பொருத்தம். இருந்தாலும் வாழ்வின் கடைசிநாள் வரை அம்மொழியோடு விடாது மல்லு கட்டிக் கொண்டிருந்த பயில்வான் தேவர். தமிழிலும், இந்தியிலும்தான் படங்கள் தயாரித்தார் என்றாலும் ஆங்கிலப் படங்கள் மீதுதான் அவருக்கு அத்தனை மோகம். 1930களில் தொடங்கி 70கள் வரை வந்த முக்கியமான ஆங்கிலப் படங்கள் அத்தனையையுமே தேவர் பார்த்து ரசித்திருக்கிறார். சில ஹாலிவுட் படங்களின் கருவை எடுத்துக்கொண்டு, தமிழில் புதுசாக தன்னுடைய கதை இலாகாவை கதை தயார் செய்யச் சொல்லி படமும் எடுத்திருக்கிறார்.

---

சென்னைக்கு வந்து சினிமா தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஆரம்பக் காலம். கம்பெனிக்காக வங்கி அக்கவுண்டு ஓபன் செய்திருந்தார். தமிழ் சினிமாவின் புரொடியூஸர் அல்லவா? தமிழில் கையெழுத்து போட்டால் கெத்தாக இருக்காது என்று ஆங்கிலத்தில் கையெழுத்து போட பழகிவந்தார்.

‘செக்’ புத்தகத்தில் அவர் போடும் கையெழுத்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒருமுறை அவசரப் பணத்தேவைக்காக ஒரு செக் கிழித்து எழுதி பையனிடம் கொடுத்து அனுப்பினார். வங்கியில் கையெழுத்து வேறு மாதிரியாக இருக்கிறது என்று திருப்பி அனுப்பினார்கள்.

தேவரே நேரடியாகப் போய் கையெழுத்து போட்டார். ஒத்துக் கொள்ளவில்லை. “என் காசை வெச்சுக்கிட்டு எனக்கு கொடுக்க மாட்டேங்கறீங்களேடா. பாவிகளா!” என்று பயங்கர கலாட்டா செய்தவர், கடுப்பில் தன்னுடைய வங்கி அக்கவுண்டையே குளோஸ் செய்து மொத்தப் பணத்தையும் எடுத்துவிட்டார். அதில் தொடங்கி அவருக்கு வங்கி, செக் போன்ற விஷயங்கள் என்றாலே அலர்ஜி.

கோடம்பாக்கமோ மும்பையோ... தேவர், யாருக்கு அட்வான்ஸ் கொடுப்பதாக இருந்தாலும் கத்தையாக மடியில் கட்டிய பணத்தைதான் எடுத்துக் கொடுப்பார். செக் கொடுப்பதில்லை என்பதின் பின்னணிக் காரணம் இதுதான்.

---

படப்பிடிப்பில் நடிக நடிகையர் ‘டிமிக்கி’ கொடுத்தால் தேவர், வில்லனாக மாறிவிடுவார். ஆனால்- அவரிடம் அனுமதி கேட்டு லீவு வாங்கினால், வள்ளலாக வாரி வழங்குவார்.

சரோஜாதேவிக்கு மறுநாள் அவசரவேலைகள் இருந்தன. தயங்கித் தயங்கி தேவரிடம் கேட்டார். “அண்ணே! கொஞ்சம் வீட்டு வேலைகள் இருக்கு. நாளைக்கி நான் இல்லாம ஷூட்டிங் அட்ஜஸ்ட் பண்ணிக்கறீங்களா?”

தேவருக்கு அப்போதுதான் அட்வைஸ் செய்திருந்தார்கள். யாராவது தமிழில் பேசினாலும் ஆங்கிலத்திலேயே பதில் சொல்லுங்கள். மொழி வசமாகும் என்று.

தேவர், பளீரென்று சொன்னதைக் கேட்டு சரோஜாதேவிக்கு மயக்கமே வந்துவிட்டது.

“ஓக்கே. டும்மார்ரோ ஐ வில் மேரேஜ் யூ”

அதாவது ‘மேனேஜ்’ செய்துக் கொள்கிறாராம்.

---

எழுபதுகளின் தொடக்கத்தில் இந்தியில் அவர்தான் ‘ஹாட்’ பீஸ். இருபது ஆண்டுகள் கழித்து அவரது மகளும் பாலிவுட்டில் நெம்பர் ஒன் இடத்தை பிடித்தார். அந்த நடிகைக்கு கட்டுமஸ்தாக இருக்கும் தேவரின் மீது ஒரு கண். மனுஷனும் அப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் பணத்தை ‘தண்ணீ’யாக அள்ளி எறிவார். இவரை மடக்கிப் போட்டால் ஈஸியாக தமிழ் திரையுலகில் நுழைந்துவிடலாம், எம்.ஜி.ஆருக்கு ஜோடி சேரலாம் என்று கணக்கு போட்டார் அந்த நடிகை. தேவர், அந்த நடிகையை வைத்து பிரும்மாண்டமான ஒரு இந்திப்படத்தை அப்போது தயாரித்துக் கொண்டிருந்தார்.

படப்பிடிப்பில் வேண்டுமென்றே தேவரை உரசுவது, தொட்டுத் தொட்டுப் பேசுவது என்று காஜூ ஏற்றிக் கொண்டிருந்தார். ஏகபத்தினி விரதனான தேவர், ஒரு முறை டென்ஷன் ஆகி கத்தினார்.

“சீ. டோண்ட் டச் ஐ. முருகன் ஒன்லி டூ வைஃப். மீ டச் ஒன்லி மை வைஃப்”

தேவரின் தமிழ் கற்பு ஒழுக்கத்தை வியந்தவாறே, அந்த நடிகை அதற்குப் பிறகு அவருக்கு தொல்லை கொடுக்கவில்லை.

---

‘நீதிக்குப் பின் பாசம்’ படப்பிடிப்பு. வெள்ளைக்காரர்கள் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தேவரின் யூனிட்டும் தேவர் மாதிரியேதான். ஆங்கிலம் என்றால் அலர்ஜி. எனவே, வெள்ளைக்காரர்கள் ஏதாவது கேட்டுவிட்டு, அதற்கு பதில் சொல்ல முடியாமல் மானபங்கம் ஆகிவிடுமோ என்று அஞ்சிக்கொண்டே வேலை பார்க்கிறார்கள்.

படப்பிடிப்பு இடைவேளையில் திடீர் திருப்பம். அந்த வெள்ளைக்காரர்களோடு தேவர் ஜோவியலாக பேசி சிரித்துக் கொண்டிருந்தார். அவர்களும் தேவருக்கு சல்யூட் வைத்து, கைகுலுக்கி பாராட்டிவிட்டு, டாட்டா காண்பித்துவிட்டுச் செல்கிறார்கள்.

தூரத்தில் இருந்து எம்.ஜி.ஆர் இந்த அதிசயத்தைப் பார்த்து அசந்துக் கொண்டிருந்தார்.

அருகில் வந்த தேவரிடம் எம்.ஜி.ஆர் கேட்டார்.

“மொதலாளி, அவங்களோட என்ன பேசிக்கிட்டிருந்தீங்க?”

“படம் பத்தி சில தகவல்கள் கேட்டானுங்க முருகா. சொன்னேன்”

“என்ன கேட்டாங்க, நீங்க என்ன சொன்னீங்க?”

“படத்தோட கதையை கேட்டாங்க. தலைப்பை சொன்னேன். கதை புரிஞ்சிடுச்சி, நல்லாருக்கு. சூப்பருன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க”

“அவங்களுக்கு தமிழ் தெரியாதே? இங்கிலீஷ்லேயா சொன்னீங்க?”

“ஆமாம். ‘தி ஜட்ஜ் பேக் ஆஃப் லவ்’ அப்படின்னேன். அசந்துட்டானுங்க ஆங்கிலேயனுங்க”

அனேகமாக அன்று புரட்சித்தலைவருக்கு காய்ச்சல் வந்திருக்க வேண்டும்.

வசூல் கணக்கு

$
0
0
டீக்கடையில் சில இளவட்டங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“நம்ம ‘தல’க்கு ஒரு ஐம்பது கோடி சம்பளம் இருக்காது?”

“மேலேயே இருக்கும். விஜய்க்கே ‘புலி’க்கு அறுவது கொடுத்தாங்களாம்”

“அப்போன்னா ரஜினிக்கெல்லாம் நூறு, நூத்தியம்பது இருக்கும்னு நெனைக்கிறேன்”

பல நூறு கோடிகள் இப்படி தெருக்கோடியில் புரளுமளவுக்கு புனைவுகள், செய்திகளாக அவ்வளவு கனகச்சிதமாக உருவாக்கப்படுகின்றன. விக்கிப்பீடியா பக்கங்களில் பதியப்படும் தல, தளபதி படங்களின் வசூல் விவரங்களெல்லாம் டைட்டானிக்கையும், அவதாரையும் அடித்து துரத்திவிடும் போலிருக்கிறது.

உண்மையை சொல்ல வேண்டுமானால், கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கையில் பத்தே பத்து சதவிகிதம் திரைப்படங்கள் வெற்றி கண்டாலே யதேஷ்டம். இன்னொரு பத்து சதவிகிதம் படங்கள் நஷ்டமில்லாமல் தப்பிக்கும். மீதி எண்பது சதவிகிதம் கோயிந்தாதான்.

‘பாகுபலி’ அது இதுவென்று அமர்க்களப்பட்டுக் கொண்டிருப்பதால், சமீபத்தில் கமல்ஹாசனிடம் கேட்டார்கள்.

“மருதநாயகம் வந்துவிடுமா?”

“நூறு கோடி ரூபாய் தேவை. கிடைத்தால் எடுப்பேன்”

“சார், இப்போதான் நூறு கோடியெல்லாம் சினிமாவில் ரொம்ப சாதாரணமான தொகையாச்சே?”

“நான் ‘ரியல்’ நூறு கோடியை சொல்றேங்க”

முப்பத்தைந்து ஆண்டுகளாக படத்தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர் கமல். ரியல் எது, ரீல் எதுவென்று நிச்சயமாக அவருக்கு நம்மைவிட நன்றாகவே தெரியும்.

குறிப்பாக, ஃபிலிம் காலம் முடிந்து ‘க்யூப்’ சிஸ்டம் மூலமாக புரொஜெக்‌ஷன் என்று வந்தபிறகு நிலைமை கொஞ்சம் மோசம்தான். டிஜிட்டல் சிஸ்டம் காசை மிச்சப்படுத்தும் என்றுதான் முன்பு தலை மீது அடித்து சத்தியம் செய்தார்கள். அதை நம்பிதான் wide release கலாச்சாரம் உருவானது. இன்று 500 திரைகளுக்கு குறைவாக வெளியிடுபவர்கள் தப்பிப்பது என்பது தலைகீழாக தண்ணீர் குடிக்கும் சாகசம் ஆகிவிட்டது. இருபது, இருபத்தைந்து கோடிகளுக்கு மேலே முதலீடு போட்டு எடுக்கப்படும் பெரிய படங்கள் எப்படியோ அடித்துப் பிடித்து, தியேட்டர் பிடித்து ‘க்யூபுக்கு’ பணம் கட்டிவிடுகிறார்கள். ஐந்து கோடி, பத்து கோடி என்று படம் எடுப்பவர்களுக்குதான் தாவூ தீர்ந்துவிடுகிறது.

ஃபிலிம் காலம் எப்படி இருந்தது என்றால், ஒரு பிராசஸிங் லேபில் சென்ஸார் முடிந்த படம் குறிப்பிட்ட ஃபிலிம் காப்பிகள் போடப்படும். அந்த காப்பிகள் தனித்தனியாக பொட்டியில் அடைக்கப்பட்டு ஒவ்வொரு திரையரங்குக்கும் டெலிவரி செய்யப்படும். தம்பி இன்னும் டீ வரலை என்பதுமாதிரி அந்த காலத்தில் ‘பொட்டி இன்னும் வரலை’ என்பார்கள். ஃபிலிம் ஓட்டிக் கொண்டிருந்தபோது ஒரு பிரிண்டுக்கு தோராயமாக அறுபதாயிரம், எழுபதாயிரம் செலவழிக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் நூறு திரைகள் வெளியிட வேண்டும் என்றாலே அரை கோடி பழுத்துவிடும். எண்பதுகளின் சூப்பர்ஹிட் ரஜினி, கமல் படங்கள் எல்லாம் தோராயமாக ஐம்பது அரங்குகளில்தான் வெளியாகும். ‘தளபதி’தான் முதன்முதலாக நூறு திரைகளை எட்டிய படம் என்பதாக நினைவு.

படங்களின் வசூல் இப்போது போல நூறு கோடிகளில் அப்போது பேசப்பட்டதில்லை என்றாலும் குறைவாக செலவு செய்து நிறைவாக இண்டஸ்ட்ரியை நடத்தினார்கள். 1992ல்தான் சூப்பர் ஸ்டாரே முதன்முதலாக ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை எட்டினார் எனும்போது, பட்ஜெட் எவ்வளவு இருந்திருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக டிஜிட்டல் புரொஜெக்‌ஷன் வந்தபோது, அதை வரமென்றுதான் அனைவரும் கருதினார்கள். குறிப்பாக திருட்டு விசிடி கலாச்சாரத்தை வெற்றிகொள்ள wide release முறை உதவுமென்று நினைத்தார்கள். நேரம் ஏகத்துக்கும் மிச்சம். தொழில்நுட்பரீதியாக அனேக அனுகூலங்கள். தியேட்டர்களில் ஓடிமுடித்து வந்த ஃபிலிம் ரோலை அவ்வப்போது கெமிக்கல் போட்டு கழுவி பரமாரிக்கும் செலவும் இல்லை மாதிரி எத்தனையோ வசதிகள்.

க்யூப் நிறுவனத்திடம் கட்டணத்தை தயாரிப்பாளர் கட்டிவிட்டால், தயாரிப்பாளரின் விருப்பப்படி டைம்டேபிள் போட்டு கரெக்டான நேரத்தில் சேட்டிலைட் மூலம் (கிட்டத்தட்ட நம்ம டி.டிஎச். டைப்பில்) திரையரங்கில் படங்கில் ஒளிப்பரப்பாகும்.

‘க்யூப்’ சிஸ்டம் எப்படி கட்டணம் வசூலிக்கிறது என்று முதலில் பார்ப்போம். கீழ்க்கண்டவை ஒரு திரைக்கு மட்டுமேயான கட்டணம்.

பகல் காட்சி மட்டுமாக ஒரு தியேட்டரில் வாரத்துக்கு ஏழு காட்சிகள் ஓட்ட வேண்டுமென்றால் ரூ.2275/-

ஒரு நாளைக்கு நாலு காட்சிகள் வீதம் ஒரு வாரத்துக்கு இருபத்தெட்டு காட்சிகள் ஓட்ட வேண்டுமென்றால் ரூ.9000/-

அன்லிமிடெட் இண்டர்நெட் மாதிரி கணக்கு வழக்கேயில்லாமல் அன்லிமிடெட் காட்சிகளுக்கு ரூ.22,500/-

500 திரைகளில் ஒரு படத்தை திரையிட வேண்டுமானால் க்யூப் கட்டணம் மட்டும் எவ்வளவு ஆகுமென்று கால்குலேட்டர் வைத்து நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இது தவிர்த்து தியேட்டர் வாடகை. போஸ்டர் மற்றும் பத்திரிகை விளம்பர பப்ளிசிட்டி. ரேடியோ மற்றும் சாட்டிலைட் சேனலில் நிகழ்ச்சிகள் நடத்த கட்டணம். இவையெல்லாம் திரைப்பட காட்சிப்படுத்துதல் (exhibition) தொடர்பான செலவுகள் மட்டும்தான். படத்தின் தயாரிப்புச் செலவு தனி.

ஒரு தயாரிப்பாளர் பெரிய முதலீடு போட்டு படத்தை தயாரிப்பார். ஆடியோ, வீடியோ, சாட்டிலைட், தியேட்டரிக்கல் ரைட்ஸ், ரீமேக் என்று அதை பகுதி பகுதியாக லாபம் வைத்து விற்பார். ஏரியாவாரியாக வாங்கிய வினியோகஸ்தர்கள் தியேட்டர்களோடு தங்கள் லாபத்தை பகிர்ந்துக் கொள்வார்கள். பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டும் மினிமம் கேரண்டி –- அதாவது இவ்வளவு வசூல் நிச்சயமென்று தியேட்டர்காரர்கள் முன்கூட்டியே ஒரு தொகையை வினியோகஸ்தர்களுக்கு உறுதி செய்தல் –- இருக்கும். அது தவிர்த்து ஒவ்வொரு டிக்கெட்டின் கட்டணமும் தியேட்டருக்கும், வினியோகஸ்தருக்கும் ஒப்பந்தப்படி சதவிகிதவாரியாக பிரியும். அரசின் வரிவிலக்கு கிடைக்குமேயானால் இவர்களுக்கு லாபம் கூடுதலாக 30% கிடைக்கும். இல்லையேல் 100 ரூபாய் டிக்கெட் கட்டணம் என்றால், அதில் 30 ரூபாய் கேளிக்கைவரியாக அப்படியே போய்விடும். இப்படிதான் சினிமா வணிகம் நடக்கிறது.

டிஜிட்டல் புரொஜெக்‌ஷன் முறை வந்தபிறகு, பெரிய நடிகர்களின் படங்கள் குறைந்தது 300 திரையரங்குகளுக்கு மேலாக வெளியாகிறது. இவர்களுக்கு பெரிய ரசிகர் பலம் இருக்கிறது என்பதால் முதல் மூன்று நாட்களில் ஒவ்வொரு திரையரங்கிலும் 12 காட்சிகள் அரங்கு நிறையும் என்கிற நம்பிக்கை இருப்பதால், தாங்கள்தான் தமிழ் சினிமாவையே தாங்குவதாக நினைக்கிறார்கள். எனவே இப்போது சம்பளம் என்பதை FMS என்று சொல்லப்படும் அயல்நாட்டு உரிமை, சாட்டிலைட் ரைட்ஸ், ரீமேக் ரைட்ஸ் மற்றும் சென்னைநகர வினியோக உரிமை என்று உரிமைகளாக எடுத்துக் கொள்கிறார்கள். இதையெல்லாம் கணக்கு போட்டுதான் குன்ஸாக இருபத்தைந்து கோடி, முப்பத்தைந்து கோடி என்று அவர்களது சம்பளம் பற்றிய பேச்சு கிளம்புகிறது. இந்த உரிமை ஒவ்வொரு படத்துக்கும் மாறக்கூடியது. ஃப்ளாப் படம் கொடுத்துவிட்ட ஒரு ஹீரோ, அடுத்த படத்துக்கும் முந்தைய படத்துக்கு ஆன வியாபாரத்தையே எதிர்ப்பார்க்க முடியாது. இதுதான் ஹீரோக்களின் சம்பள ரகசியம்.

ஓக்கே.

அடுத்து திரையரங்குகளின் எண்ணிக்கை. இந்தியாவில் ஒட்டுமொத்த திரைகளின் எண்ணிக்கையே பத்தாயிரத்து சொச்சம்தான். இவற்றில் பாதிக்கும் மேல் தென்னிந்தியாவில் இருக்கிறது. ஆந்திராவில் கிட்டத்தட்ட மூவாயிரம், தமிழகத்தில் தோராயமாக ஆயிரத்து ஐநூறு, கேரளா மற்றும் கர்நாடகாவில் தலா ஆயிரம். இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்திலேயே கூட கேரளாவைவிட குறைவான திரைகள்தான். ஆனால், உலகிலேயே அதிகம் திரைப்படங்கள் தயாரிக்கும் நாடு இந்தியாதான். இந்த விஷயத்தில் நமக்கு அடுத்து இருக்கும் நைஜீரியா, அரங்குகளை நம்பாமல் தயாரிக்கும் படங்களை ஹோம்வீடியோவாக வெளியிடுகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில்தான் ஐநூறு கோடி, ஆயிரம் கோடி என்று நம் டீக்கடைகளில் பேசப்படும் வசூல்கணக்கினை நாம் மதிப்பிட வேண்டியிருக்கிறது.

இன்று சூப்பர் ஏ சென்டர் என்று கூறப்படும் மல்ட்டிப்பிளக்ஸ் திரையரங்குகளில்தான் 120 ரூபாய் டிக்கெட். தமிழகம் முழுக்கவே இம்மாதிரி திரைகள் 250 இருந்தால் அதிகம். அடுத்து காம்ப்ளக்ஸ் எனப்படும் (உதயம், ஆல்பட் மாதிரி) இரண்டு அல்லது மூன்று திரைகள் கொண்ட ஏ சென்டர் கூட்டு அரங்கங்கள். இவற்றில் 50, 60, 80 என்று கட்டணம். அதற்கு அடுத்து பி சென்டர் தனி அரங்கங்கள். ஏசி, டிடிஎஸ் போன்ற வசதிகள் இருந்தால் 30, 50 என்று கட்டணம். மாம்பலம் சீனிவாசா, தி.நகர் கிருஷ்ணவேணி, உசிலம்பட்டி கண்ணன் மாதிரி ஏசி வசதியில்லாத சி வசதி அரங்கங்களில் 20, 30 ரூபாய் கட்டணம்.

சராசரியாக ஒரு அரங்குக்கு 500 இருக்கைகள் என்று கணக்கு வைத்துக் கொள்ளலாம். 500 அரங்குகளில் வெளியிடப்படும் ஒரு பெரிய படத்துக்கு சராசரி கட்டணம் ரூ.75 என்று வைத்துக் கொண்டு, அது முதல் மூன்று நாட்கள் 100 சதவிகிதம் இருக்கை நிறைந்து ஓடினால் எவ்வளவு வசூல் ஆகும் என்று கால்குலேட்டர் வைத்து கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். திங்கள் முதல் 60 சதவிகித இருக்கை நிறைந்தாலே அதிகம். புதன், வியாழனில் 40 சதவிகிதத்துக்கு இறங்கும். படம் ஹிட் என்றால் மீண்டும் அடுத்த வெள்ளிக்கு கொஞ்சம் கூட்டம் கூடும்

மொத்தமாக இதில் வரும் தொகை கூட gross தான். வரிவிலக்கு இல்லையென்றால் 30 சதவிகிதம் கழித்துக் கொள்ளுங்கள். கியூப் செலவு, விளம்பர செலவு, தியேட்டர் பங்கு ஆகியவற்றை கழித்து வரும் தொகைதான் net. இந்த netல் இருந்து வினியோகஸ்தர் விலை கொடுத்து வாங்கிய தொகையை கழித்தபிறகு வரும் சொற்பத்தொகைதான் ஒரு படம் செய்திருக்கும் நிஜமான பிசினஸ் என்று எடுத்துக் கொள்ளலாம்.

அப்படியெனில் 60, 70 கோடி செலவழிக்கப்பட்டு எடுக்கப்பட்ட ‘நண்பன்’, ‘ஐ’ மாதிரியான ஒரு பிரம்மாண்டமான திரைப்படம் தமிழகமெங்கும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி 80 கோடி வசூலித்தால்கூட அதை வெற்றியென்று சொல்ல முடியுமா? அல்லது ‘திரிஷா அல்லது நயன்தாரா’ மாதிரி மூன்று, நான்கு கோடியில் படமெடுத்து முப்பது கோடி வசூலித்தால், அது வெற்றியா?

இப்படியாக உழுதவன் கணக்கு பார்க்கும் கதையாகதான் தமிழ் சினிமா வணிகம் நடந்துக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு சோதனை மேல் சோதனையாக டிவிகளில் விளம்பரக் கட்டுப்பாடு என்று மத்திய அரசு பேசிக் கொண்டிருக்கிறது. அது மட்டும் அமலுக்கு வருமேயானால் சேட்டிலைட் ரைட்ஸ் தொகை பன்மடங்கு குறைந்துவிடும். சம்பளத்தின் ஒரு பகுதியாக சேட்டிலைட் ரைட்ஸ் வாங்கிக் கொள்ளும் ஹீரோக்கள், அதற்கு பதில் பணமாகவே கேட்கத் தொடங்கிவிடுவார்கள். அது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

இன்றைய நிலையில் சினிமா ஒரு சூதாட்டம். ரம்மி பக்காவாக செட்டு சேர்ந்து ஜோக்கர் வந்து விழுந்தால் டிக் அடிக்கலாம். இல்லையேல் ஃபுல் என்று தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் கவிழ்த்துவிட்டு, குவார்ட்டர் அடிக்க கிளம்ப வேண்டியதுதான். தியேட்டர் உரிமையாளர்களுக்காவது குறைந்தபட்சம் பார்க்கிங், கேண்டீன் சேல்ஸ் உள்ளிட்ட நிச்சயிக்கப்பட்ட வருமானம் உண்டு.

இப்படிப்பட்ட சூழலில்தான் 200 கோடி வசூல், 300 கோடி வசூல் என்று விக்கிப்பீடியா பக்கங்களில் நமக்கு பிடித்த நடிகர்களின் படங்களுக்கு நாம் புள்ளிவிவரங்களை இஷ்டத்துக்கும் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறோம்.

நேரு குடும்பத்தின் நயன்தாரா

$
0
0
மோடி அரசின் செயல்பாடுகளை கண்டித்து தான் பெற்ற சாகித்திய அகாதெமி விருதினை திருப்பியளிப்பதன் மூலம் இப்போது ஊடகங்களின் மஞ்சள் வெளிச்சத்துக்கு வந்திருப்பவர் எழுத்தாளர் நயன்தாரா சாஹல். இவரைக் குறித்த இந்த அறிமுகக் கட்டுரை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ‘தினகரன் வசந்தம்’ இதழில் வெளியானது.
நயன்தாராவின் கதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலும் இந்திய உயர்வர்க்கத்தின் ஆண்களும், பெண்களும்தான். அவரால் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்து மனிதர்களையோ, ஏழைகளையோ, சாதிய பாகுபாடுகளால் ஒடுக்கப்பட்டவர்களையோ கதைகளாக்க முடியவில்லை. ஏனெனில் அவர்களோடு அவர் பழகியதே இல்லை. இதை அவர் மீதான விமர்சனமாக நிறைய விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால், இந்திய அரசியல் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளையும், தன்மைகளையும் இவரளவுக்கு நேர்மையாக எழுத்தில் முன்வைத்தவர் வேறு யாருமில்லை.

“நான் ஒரு நாவலாசிரியர் மட்டுமல்ல. அரசியல் செய்திகளை எழுதக்கூடிய பத்திரிகையாளரும் கூட. நான் திட்டமிட்டு அரசியல் பின்னணியை எழுத்தில் கொண்டு வருவதில்லை. நான் வாழ்வில் சந்தித்த மனிதர்களும், சம்பவங்களும் அரசியல் தொடர்பானவை மட்டுமே. அவற்றை மட்டுமே எனக்கு எழுதத் தெரிந்திருக்கிறது” என்று தன் எழுத்துகளை குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிறார் நயன்தாரா சாஹல்.

இந்தியாவின் நெம்பர் ஒன் அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு இவருடைய தாய்மாமன். ஐக்கிய நாடுகள் சபைக்கு சுதந்திர இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட முதல் தூதரான விஜயலஷ்மி பண்டிட்தான் அம்மா. இந்திராகாந்திக்கு அத்தை மகள். பிறந்து வளர்ந்ததெல்லாம் அலகாபாத்தில் இருக்கும் நேருவின் பாரம்பரிய பரம்பரை வீடான ஆனந்தபவனத்தில்தான். இவரது எழுத்துகளில் அரசியலும், வரலாறும் கலந்திருப்பதில் ஆச்சரியமென்ன?

அப்பா ரஞ்சித் சீத்தாராம் பண்டிட் அந்த காலத்தில் பிரபலமான வக்கீல். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வரலாற்றுக் காவியமான ராஜதரங்கிணியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் இவர்தான். நேரு குடும்பம் ஆயிற்றே. அடிக்கடி சுதந்திரப் போராட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை செல்ல வேண்டியிருக்கும். அம்மாதிரி சிறைப்பட்டிருந்த ஒரு நேரத்தில் திடீரென மரணமடைந்தார். அப்போது நயன்தாராவுக்கு வயது பதினேழுதான். ஒரு அக்காவும், ஒரு தங்கையும் இருந்தார்கள். நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய பத்து, பதினைந்து ஆண்டுகள் நேரு குடும்பத்துக்கு சோதனையானவை. கிட்டத்தட்ட எல்லோருமே சிறைக்கு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக போய்விட்டு வருவார்கள். எனவே குழந்தைகளாக இருந்தவர்கள் அவர்களாகவே வளர்ந்தார்கள். பள்ளி, கல்லூரி படிப்பெல்லாம் வெளியூர்களில்தான்.

மேற்கத்திய பாணி குடும்ப வாழ்க்கையை பின்பற்றும் நேரு குடும்பத்தில் பிறந்ததால் நுனிநாக்கு ஆங்கிலமும், ஐரோப்பிய நடை உடை பாவனைகளுமாக ஸ்டைலாக வலம் வந்தார் நயன்தாரா. இந்திய சமூக மரபில் பெண்கள் பலியாடுகளாய் வளர்க்கப்படுவதை வெறுத்தார். பெண்களுக்கான தனித்த அடையாளத்தை தர ஆண்கள் மறுப்பதாய் நினைத்தார். அவருடைய இளமைக் காலத்தில் ஐரோப்பாவில் தொடங்கிய பெண்ணிய சிந்தனை போக்கு இவருக்குள் ஆழமாக ஊடுருவியது. இதனாலேயே என்னவோ திருமண வாழ்க்கை தடுமாற்றம் கண்டது. இரண்டு விவாகரத்துகளுக்கு பிறகு மூன்றாவதாக அந்தகால ஐ.சி.எஸ் (இன்றைய ஐ.ஏ.எஸ் மாதிரி) அதிகாரியான மங்கத்ராயை மணந்தபிறகுதான் வாழ்க்கை சமநிலைக்கு வந்தது.

அரசியல் மட்டத்தில் இவருக்கும், இவருடைய தாயாருக்கும் இருந்த செல்வாக்கை சொந்த மாமன் மகளான இந்திராகாந்தி பிரதமர் ஆனதும் அடித்து நொறுக்கினார். இத்தாலிக்கான இந்திய தூதராக நயன்தாரா நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பதவியேற்பதற்கு முன்பாகவே அந்த ஆணையை திரும்பப் பெற்றார் புதியதாக பதவிக்கு வந்திருந்த இந்திராகாந்தி. இவ்வாறாக நேருவின் தங்கை குடும்பம் இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு முடிவுக்கு வந்தது. இந்திராவின் அதிரடி வளர்ச்சியை உண்மையில் யாருமே யூகிக்க முடியவில்லை. நேருவின் மரணத்துக்குப் பிறகு அதிரடியாய் மிகக்குறுகிய காலத்தில் காங்கிரஸையும், இந்தியாவையும் அவர் கைப்பற்றிய கதையை பிற்பாடு ‘இந்திராகாந்தி, எமர்ஜென்ஸ் அண்ட் ஸ்டைல்’, என்று என்று நூலாய் எழுதினார். தன் மாமன் மகளை எட்ட நின்று பார்வையாளராய் ஆச்சரியமாய் அவர் பார்த்த அனுபவங்கள்தான் அந்த நூல். இதையே கொஞ்சம் பிற்பாடு புனைவு பாணியில் ‘இந்திராகாந்தி : ஹெர் ரோட் டூ பவர்’ என்று நாவலாகவும் எழுதி வெளியிட்டார். இந்திரா முதன்முதலாக ஆட்சியை இழந்த நேரத்தில் முதல் நூல் வெளிவந்தது. நாவல் வெளிவரும்போது மீண்டும் அவர் ஆட்சியை கைப்பற்றியிருந்தார். எனவே இரண்டு நூல்களும் எத்தகைய பரபரப்பை அந்த காலத்தில் ஏற்படுத்தியிருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

அரசியலும் வரலாறும்தான் ஆர்வம் என்றாலும் புனைவு மீது அலாதி ப்ரியம் கொண்டவர் நயன்தாரா. தன் குடும்பத்தின் சிறை நினைவுகளை ‘ப்ரிஸன் அண்ட் சாக்லேட் கேக்’ என்று 1954ல் அவர் எழுதிய நினைவலைகள், ஆங்கில இலக்கிய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக அவருக்கு அரசியல் அலசல் கட்டுரைகளையும், நூல்களையும் எழுததான் வாய்ப்புகள் நிறைய கிடைத்தது. ஒரு கட்டத்தில் இந்த நான்ஃபிக்‌ஷன் உலகில் இருந்து வெளிவரவேண்டும் என்கிற வேட்கையோடு தொடர்ச்சியாக நாவல்கள் எழுத ஆரம்பித்தார். இந்திய மேல்தட்டு வர்க்கம் குறித்த சித்திரம் மிக துல்லியமாக இவரது கதைகளில் இடம்பெற்றது. உலகளவில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பெண் எழுத்தாளர்களுக்கே சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அவர்களில் நயன்தாராவும் ஒருவர்.

இவரது எழுத்துகளில் சம்பவங்களும், பாத்திரங்களும் வேண்டுமானால் மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் அந்த வர்க்கத்திலும் கூட பெண்கள் மீதான ஒடுக்குமுறை இருப்பதை துணிச்சலாக விமர்சித்தார். பெண்களுக்கான சுதந்திரம் குறித்த உரிமைக்குரலை தொடர்ச்சியாக பதிவு செய்து வந்திருக்கிறார். கடைசியாக அவர் எழுதிய நாவலில் கூட இந்திய பெண்கள் எப்படி உன்னதமான உயரத்தை எட்டக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறது என்கிற விவாதமே பிரதானமாக இருந்திருக்கிறது. எட்டு நாவல்கள், ஏராளமான சிறுகதைகள் (இவை தொகுப்பாக வந்ததாக தெரியவில்லை), அரசியல் விமர்சன கட்டுரைகள் உள்ளிட்ட அபுனைவு நூல்கள் ஒன்பது என்கிற எண்ணிக்கைகளில் இவரது எழுத்துகள் நூலாக அச்சாகியிருக்கின்றன.

அரசியலில் இருந்து திட்டமிடப்பட்டு இவர் வெளியேற்றப் பட்டிருந்தாலும் இந்தியாவின் பல உயரங்களை இவர் தொடமுடிந்திருக்கிறது. 1972ல் இருந்து 75 வரை சாகித்ய அகாதெமியின் (ஆங்கில இலக்கியப் பிரிவு) ஆலோசகராக பதவி வகித்தார். இந்திய ரேடியோ மற்றும் டிவிக்கான வர்கீஸ் கமிட்டியின் உறுப்பினராக 77-78 ஆண்டுகளில் இருந்தார். ஐக்கிய நாடுகள் பொதுசபையின் இந்திய பிரதிநிதியாக செயல்பட்டிருக்கிறார். குடிமக்கள் உரிமைகளுக்கான யூனியன் அமைப்பில் துணைத்தலைவராக பணிபுரிந்திருக்கிறார்.

1985ல் இங்கிலாந்தின் புனைவுக்கான சிங்க்லேர் விருது, 1986ல் சாகித்திய அகாதெமி, 1987ல் காமன்வெல்த் எழுத்தாளர்களுக்கான விருது என்று தேசிய, சர்வதேச விருதுகள் ஏராளம் இவரது வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கிறது. அமெரிக்காவின் லைப்ரரி ஆஃப் காங்கிரஸிலும் இவரது இருபதுக்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

எண்பத்தேழு வயதாகும் நயன்தாரா சாஹல், தற்போது டெஹ்ராடூனில் வசிக்கிறார். பெண்ணியம், அடிப்படைவாதம், இனவாதம் முதலியவற்றை காரசாரமாக விமர்சித்து எழுதும் பத்திரிகையாளரும், ஆவணப்பட இயக்குனரும், மனித உரிமைப் போராளியுமான கீதா சாஹல் இவருடைய மகள்தான்.
இந்த கட்டுரை, சூரியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ரைட்டர்ஸ் உலா’ நூலின் ஓர் அத்தியாயமாகவும் இடம்பெற்றிருக்கிறது.

துக்ளக் பிறந்த கதை!

$
0
0
‘சம்பவாமி யுகே யுகே’ நாடகம் நடக்கிறது.

நாடகத்தின் இடைவேளையில் திடீரென முதல்வர் காமராஜர் அரங்குக்கு வருகிறார். அவரை சோ அழைக்கவில்லை. நாடகம் நடத்திய சபா, சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது.

நாடகத்தைப் பாராட்டி ஜெமினி கணேசன் மேடையில் பேசுகிறார். “அருமையான இந்த நாடகத்தை மேடையேற்ற அரசு அதிகாரிகள் லைசென்ஸ் மறுத்ததாக சோ சொல்கிறார்” என்று ஜெமினி பேச, காமராஜருக்கு ‘கெதக்’கென்று ஆனது. (அப்போதெல்லாம் ரேடியோ வைத்திருக்கவே லைசென்சு வேண்டும்).

சோவிடம் விவரம் கேட்கிறார். மத்திய மாநில அரசுகளை விமர்சித்து சில வசனங்கள் நாடகத்தில் இடம் பெற்றிருந்ததாகவும், ஸ்க்ரிப்டை வாசித்த அரசு அதிகாரிகள் லைசென்ஸ் வழங்க மறுத்ததாகவும் சொன்னார். இதையடுத்து காமராஜருக்கும், சோவுக்கும் விவாதம் வலுக்கிறது.

“பொறுப்பில்லாமே கண்டதையும் எழுதினா எவன் லைசென்சு கொடுப்பாண்ணேன்?”

“இப்போ கொடுத்திருக்கீங்களே? மேடை ஏத்திட்டேனே? அப்படின்னா யார் பொறுப்பில்லாதவா?”

“வண்டி ஓட்ட லைசென்சு கொடுக்கிறதுங்கிறது, உங்களுக்கு ஓட்டத் தெரியும்னுதான். அந்த வண்டியை எடுத்துட்டுப் போய் எவன் மேலேயோ மோதி விபரீதம் ஆயிடிச்சின்னா அதுக்கு லைசென்ஸ் கொடுத்தவனா பொறுப்பு?”

“எனக்கு ஓட்டத் தெரியுமா தெரியாதான்னு நீங்களே இருந்து பார்த்திருந்தாதானே தெரியும். பாதியிலே வந்துட்டு இப்படி பேசுறது சரியா?”

இதைத் தொடர்ந்து காமராஜர் கோபமாக கிளம்புகிறார். நாடகத்தை நடத்தும் சபாவினருக்கு தர்மசங்கடம். நாடகம் பார்க்க வந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி. நாட்டின் முதல்வரையே ஒரு சின்னப்பையன் எதிர்த்து, மரியாதை இல்லாமல் பேசுவதா என்று. அதே நேரம், இந்த சம்பவம்தான் சோவை துணிச்சல் மிக்கவராகவும், கறாரான அரசியல் விமர்சகராகவும் பிரபலப்படுத்தியது.

சோவின் தந்தையார் காமராஜர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தவர். எனவே, காமராஜரிடம் மன்னிப்பு கேட்காமல் வீட்டுக்கு வந்தால் சேர்க்க மாட்டேன் என்று கூறிவிட்டார். சோ, பணிபுரிந்த அலுவலகமான டி.டி.கே.வும் இதேரீதியான நிபந்தனையை விதித்திருந்தது.

பிற்பாடு காமராஜரை பார்த்து தன்னிலை விளக்கம் சொல்ல சோ முயற்சிக்கிறார்.

“அதெல்லாம் எதுக்குங்குறேன்? அப்படி இல்லைன்னா நீங்க சோவே இல்லைங்கறேன்” என்று தன் பெருந்தன்மையை காமராஜர் காண்பித்தார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு ‘சோ பேசுகிறார்’ என்று தமிழகத்தில் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பரபரப்பான பேச்சாளராகிறார். அவ்வகையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை பேசவேண்டியிருக்கிறது.

பார்ப்பனீயச் சிந்தனைகளின் மொத்த உருவம் சோ. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களிடமோ அப்போது திராவிட சுயமரியாதை இயக்கக் கருத்துகள் நாடி, நரம்பெல்லாம் ஓடிக்கொண்டிருந்தன.

சோ பேசப்பேச மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பு. எழுந்து ஒருமையில் கோஷமிடத் தொடங்கினார்கள்.

“இப்படியெல்லாம் மேடையிலே பேச உனக்கு வெட்கமா இல்லையாடா?” என்று ஒரு மாணவர் சூடாக கேட்டார்.

“பேசுறது என்னடா... தைரியமா எழுதக்கூட செய்வேன்” என்று பதிலடி கொடுத்தார் சோ.

“நீ எழுதுனா எந்த பத்திரிகை பிரசுரிப்பான்? எவன் படிப்பான்?” மாணவர்களின் பதிலடி.

“எவனும் பிரசுரிக்கலேன்னா நானே பத்திரிகை ஆரம்பிச்சி எழுதறேன். எவனும் படிக்கலேன்னா நானே அதை படிச்சிக்கறேன்”

அடுத்த சில நாட்களில் ‘தி ஹிந்து’ பத்திரிகையில், “நான் பத்திரிகை தொடங்கலாமா?” என்றொரு விளம்பரத்தை தமிழிலேயே கொடுத்தார். அதுதான் அந்த ஆங்கில நாளிதழில் வெளிவந்த முதல் தமிழ் விளம்பரம் என்கிறார்கள். அந்த விளம்பரத்தை கண்டு பத்தாயிரம் பேர் ‘தொடங்குங்கள்’ என்று சோவுக்கு கடிதம் எழுதினார்களாம் (அதென்ன ‘பத்தாயிரம்’ கணக்கு என்று தெரியாது. ‘முகம்மது பின் துக்ளக்’ படத்துக்கு சென்சார் பிரச்சினை வந்தபோதும் ‘பத்தாயிரம்’ பேர் தந்தி அனுப்பியதாக சொல்வார்).

ஆனால்-

பத்திரிகை நடத்துமளவுக்கு தனக்கு பொருளாதார பலமில்லை என்று சோ தயங்கிக் கொண்டிருந்தபோது, விகடன் நிறுவனம் அவரை தொடர்பு கொண்டு தங்கள் brandக்கு தொடர்பில்லாத வகையில், ஆனால் பின்னணியில் இருந்து ‘துக்ளக்’ தொடங்க உதவியிருக்கிறார்கள்.

‘ஆறு மாதத்தில் தொடங்கிவிடலாம்’ என்று விகடன் சொன்னபோது, “முடியாது. பதினைந்தே நாளில் ‘துக்ளக்’ வந்தாக வேண்டும். இல்லையேல் பத்திரிகையே வேண்டாம்” என்றாராம் சோ. 

1970, ஜனவரி 14 அன்று ‘துக்ளக்’ முதல் இதழ் வெளிவந்தது.

எண்பதுகளின் இறுதியில் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழுக்காக சோவை எஸ்.எஸ்.சந்திரன் எடுத்த பேட்டியில் இந்த விவரங்கள் விரிவாக உள்ளன.

ஆனால்-

சோ இதே கதையை வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார். அல்லது எழுதியிருக்கிறார். ‘அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்’ தொடரில் நண்பர்களிடம் கட்டிய ஐந்து ரூபாய் பெட்டுக்காக தொடங்கப்பட்ட பத்திரிகை ‘துக்ளக்’ என்று சொல்லியிருப்பார். தொடர்ச்சியாக வாசிக்காததால் ‘குமுதம்’ தொடரில் என்னவென்று எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. நூலாக வெளிவந்த பின்தான் வாசிக்க வேண்டும்.

வேதாளம்

சுப்பாண்டியின் சாகசங்கள்!

$
0
0

சுப்பாண்டியை உங்களுக்கு தெரியுமென்றால் நீங்கள் ‘பூந்தளிர்’ வாசகராக இருக்கக்கூடும். உங்கள் வயது முப்பத்தைந்தை தாண்டிவிட்டது என்று அர்த்தம். இல்லையேல் நீங்கள் ‘டிங்கிள்’ வெறியர். ரைட்?

சுப்பாண்டி ஒரு தெனாலிராமன். அல்லது தெனாலிராமன்தான் சுப்பாண்டி. வெடவெடவென்று ‘காதலன்’, ‘இந்து’ காலத்து பிரபுதேவா தோற்றம். கோமுட்டி தலை. காந்தி காது. இந்திராகாந்தி மூக்கு. ராஜாஜி முகவாய். என்று ஆளே ஒரு தினுசாகதான் இருப்பான். சுப்பாண்டி ஒரு வேலைக்காரன். ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள். முதலாளி ஏவிவிடும் வேலைகளை ஏடாகூடமாக செய்வான் என்பதுதான் அவன் கதைகளில் இருக்கும் முரண்.

இந்திய காமிக்ஸ் உலகம் எட்டியிருக்கும் அதிகபட்ச உயரங்களில் சுப்பாண்டிக்கும் கணிசமான இடம் உண்டு. சுப்பாண்டியின் தாய்வீடு தமிழ்நாடு என்பதுதான் தமிழராக நாம் பெருமைகொள்ள வேண்டிய விஷயம். ஆனால், நிலபிரபுத்துவத்துவ மேலாதிக்கத்தின் வெறியாட்டம்தான் சுப்பாண்டி கதைகள் என்பதை இதுவரை எந்த கம்யூனிஸ்டும் கண்டுபிடிக்காததால் ‘டிங்கிள்’ முப்பத்தி இரண்டு ஆண்டுகளாக சுப்பாண்டியை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

‘டிங்கிள்’ வாசிப்பவர்களுக்கு பழக்கமான விஷயம்தான். டிங்கிள் பதிப்பகமே வெளியிடும் காமிக்ஸ் கதைகள் தவிர்த்து, வாசகர் படைப்புக்கும் அவ்விதழில் முக்கியத்துவம் உண்டு. வாசகர்கள் எழுதியனுப்பும் கதைகளுக்கும் சின்சியராக ஓவியம் வரைந்து வெளியிட்டு கவுரவப்படுத்துவார்கள்.

அம்மாதிரி 1983ஆம் ஆண்டு ஜனவரி இதழில் திருச்சியைச் சேர்ந்த வாசகர் பி.வரதராஜன் என்பவர் எழுதி அனுப்பிய மூன்று கதைகளின் அடிப்படையில்தான் சுப்பாண்டி பிறந்தான். அந்த வரதராஜன் தற்போது சென்னையில் வசிப்பதாக டிங்கிள் குறிப்பிடுகிறது.

இந்த சுப்பாண்டியை உருவாக்குவதற்கு வரதராஜனுக்கு அனேகமாக ‘பதினாறு வயதினிலே’ சப்பாணி இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன். சிறுவயதில் சுப்பாண்டியை வாசிக்கும்போதெல்லாம் எனக்கு பின்னணி இசையாக ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடல் ஒலித்துக் கொண்டே இருப்பதை போன்ற பிரமை இருக்கும்.

சுப்பாண்டியின் கதைகளை வாசிக்கும்போது வெடிச்சிரிப்பு எல்லாம் ஏற்படாது. ஆனால், நினைத்து நினைத்து புன்னகைக்கக்கூடிய ‘சரக்கு’ நிச்சயமாக இருக்கும். சரியாக சொல்லப்போனால் கிரேஸி மோகன் பாணி அதிரடி ஜோக் அல்ல, யூகிசேது டைப் புத்திசாலித்தனமான காமெடி.

பல மேடைப்பேச்சுகளிலும், பட்டிமன்றங்களிலும் சுப்பாண்டியின் ஜோக்குகளை பேச்சாளர்கள் தங்கள் பாணியில் பேசுவதை கேட்டிருக்கிறேன். Source material சுப்பாண்டிதான் என்று எனக்கு தெளிவாகத் தெரியும். ஒரு பிரபலமான பெண் பேச்சாளர் ஒரு மேடையில் பேசும்போது சொன்ன ஒரு தெனாலிராமன் கதை, தெனாலிராமன் கதையே கிடையாது. அது சுப்பாண்டியின் கதை. சுப்பாண்டியை தெனாலியாக்கி சொன்னார். ஆனால், பேச்சாளர்களிடம் போய் சண்டையா போட முடியும்?

Imitation is the best form of praising என்று விளம்பரத்துறை பாடம் எடுக்கும்போது சொல்லுவார்கள். ஒரு நல்ல படைப்பு என்பது நம்மை inspire செய்து, நாமறியாமலேயே அதை வேறெங்கோ imitate செய்ய வைக்கும். அம்மாதிரியான inspirationதான் அந்த படைப்பாளிக்கு செய்யப்படும் மரியாதைகளிலேயே தலைசிறந்தது.

எதையோ சொல்லவந்து, எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம்.

விஷயம் என்னவென்றால் முப்பதாண்டுகளுக்கும் மேலாக வந்துகொண்டிருக்கும் சுப்பாண்டியின் சாகசங்களை விசேஷத் தொகுப்புகளாக வெளியிட ‘டிங்கிள்’ முடிவெடுத்திருக்கிறது. அதுவும் நம் தமிழிலேயே வெளிவருகிறது என்பதுதான் நமக்கான விசேஷம்.

முதல் இதழ் வெளிவந்து கடைகளில் கிடைக்கிறது. விலை ரூ.80. முழு வண்ணத்தில் தரமான தாளில் அச்சிடப்பட்டிருக்கிறது. அட்டை பளபள கிளாஸி லேமினேஷனில் பளிச்சிடுகிறது. திரும்பவும் இதெல்லாம் ரீபிரிண்ட் ஆக வாய்ப்பேயில்லை என்பதால் கிடைக்கும்போதே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் குழந்தைகளுக்காக சுப்பாண்டியை சேகரியுங்கள்.
வழக்கமாக டிங்கிள் கிடைக்கும் கடைகளில் ‘சுப்பாண்டியின் சாகசங்கள்’ கிடைக்கும். சென்னையில் எங்கு கிடைக்கிறது என்று தெரியாவிட்டால் மயிலாப்பூர் லஸ் கார்னர் நேரு நியூஸ் மார்ட்டில் வாங்கிக் கொள்ளலாம்.

ஹேப்பி ரீடிங் ஃப்ரண்ட்ஸ்!

கவர்ச்சி பாதி, அதிரடி மீதி!

$
0
0
உலகை காக்க வருகிறார் உலகநாயகன்...
‘திருப்பதிக்கே லட்டு’, ‘திருநெல்வேலிக்கே அல்வா’, ‘ரஜினிக்கே ஸ்டைலு’, ‘மோடிக்கே ஃபாரின் டூரு’ மாதிரியான க்ளிஷேவான விஷயம்தான் ‘தினகரன் வெள்ளிமலர்’ வாசகர்களுக்கு ஜேம்ஸ்பாண்டை அறிமுகப்படுத்துவதும். நீங்களெல்லாம் சாதா வாசகர்களா என்ன, உலக வாசகர்கள் இல்லையா. உங்களுக்குத் தெரியாத எதை நாங்கள் புதியதாக எழுதிவிட முடியும்?

விதவிதமான துப்பாக்கிகள், எல்லா ‘சைஸிலும்’ பேரழகிகள், நவீனரக கார்கள், மிடுக்கான கோட் ஷூட், கொடூரமான வில்லன்கள், கொலை நடுக்கம் ஏற்படுத்தும் ஆக்‌ஷன் காட்சிகள், ரத்த அழுத்தத்தை எகிறவைக்கும் சேஸிங் சீன்... இதெல்லாம் இல்லாமல் என்ன ஜேம்ஸ்பாண்ட் படம்?

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக உலகம் ஜேம்ஸ்பாண்டை ரசித்துக் கொண்டேதான் இருக்கிறது. நம் தாத்தாவும் ஜேம்ஸ்பாண்ட் ரசிகராக இருந்தார். நம் அப்பாவும் 007க்கு வெறியராக இருந்தார். நமக்கும் அந்த பிரிட்டிஷ் உளவாளி மீது அத்தனை மோகம். தலைமுறைகளை கடந்த ரசனை இது. ஒவ்வொரு படம் வெளிவரும்போதும், அந்தந்த காலக்கட்டத்தின் விருப்பு வெறுப்புகளை கருத்தில் கொண்டு ஜேம்ஸ்பாண்ட் தன்னை சாஃப்ட்வேர் மாதிரி அப்டேட் செய்துக் கொள்கிறார் என்பதே அவரது நிஜமான வெற்றி.

நியாயத்தின் பக்கம் மட்டுமே நிற்பார். உயரிய லட்சியங்களுக்காக உயிரை பணயம் வைப்பார். தீயவர்களுக்கு தீ. அதிவேகமாக காரை ஓட்டும் அதே அனாயசமான ஸ்டைலை, அழகிகளை ஓட்டும்போதும் காட்டுவார். நவீன ஆயுதங்களை கையாளுவதில் ராட்சஸன். உலகம் சுற்றும் வாலிபன். இனம், மொழி, நாடு, அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர். இத்தகைய கல்யாண குணங்கள் கொண்ட மாப்பிள்ளையை யாருக்குதான் பிடிக்காது?

உலக வரலாற்றை கிமு, கிபி என்று பிரிப்பதைக் காட்டிலும் இ.உ.போ.மு, இ.உ.போ.பி என்று வகைபடுத்துவதுதான் நியாயம் (குழம்பாதீர்கள் இரண்டாம் உலகப்போருக்கு முன், பின் என்பதின் சுருக்கம்தான்). உலகம் அதுவரை சந்தித்திராத வகையில் ஹிட்லர் என்கிற மாபெரும் வில்லன் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா என்று வகைதொகை இல்லாமல் வல்லரசு நாடுகளின் வலிமையை அசைத்துப் பார்த்தான். அயலுறவு, உள்நாட்டுப் பாதுகாப்பு என்று உலகநாடுகள் பல விஷயங்களை கவலையோடு மீள்பரிசோதனை செய்தது அந்த சந்தர்ப்பத்தில்தான். எதிர்காலம் குறித்த அச்சம் அரசுகளுக்கு மட்டுமின்றி, சாதாரண சிவிலியன்களையும் பாடாய் படுத்தியது. அர்த்தமில்லா அச்சம், பனிமூட்டமாய் உலகை சூழ்ந்திருந்த காலக்கட்டம் அது.

“எங்களையெல்லாம் காப்பாத்த ஒரு வேலாயுதம் வரமாட்டானா?” என்று யாரோ ஓர் அபலை கூக்குரலிட்டிருக்க வேண்டும். ‘வேலாயுதம்’ சற்று தாமதமாக 2011ல்தான் இளைய தளபதி விஜய் மூலமாக வந்தார். ஆனால் 1953லேயே சூப்பர் ஹீரோ ஜேம்ஸ்பாண்ட் வந்துவிட்டார். ஜேம்ஸ் மட்டுமல்ல. இன்று (சினிமாவிலும் நாவல்களிலும்) உலகை காக்கும் ஏராளமான சூப்பர் ஹீரோக்கள் இரண்டாம் உலகப் போருக்கு பிறகே பிறந்தார்கள். ‘தீயவர்களால் பிரச்சினையா? எங்க கிட்டே வாங்க’ என்று நம்பிக்கை கொடுத்தார்கள்.

ஜேம்ஸை பிரசவித்தவர் பிரபல நாவலாசிரியர் இயான் ஃப்ளெமிங். அந்த காலத்தில் ராபர்ட் ஃப்ளெமிங் & கோ என்கிற வங்கி, ஐரோப்பாவில் ரொம்ப பிரபலம். அந்த வங்கியின் உரிமையாளர் குடும்பத்தில்தான் ஃப்ளெமிங் பிறந்தார். இவர், முனிச் மற்றும் ஜெனிவா பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வங்கித் தொழிலை கவனிக்க தயாரான நிலையில்தான் இரண்டாம் உலகப் போர் வந்தது. நாட்டை காக்க ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து ஒருவராவது இராணுவசேவைக்கு போவது அப்போது கடமையாக இருந்தது. ஃப்ளெமிங், அச்சந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் கடற்படையில் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றினார். தன்னுடைய பணியில் மகத்தான சாகஸங்களை நிகழ்த்தி, இங்கிலாந்தின் ஹீரோவாக வேண்டும் என்று தினம் தினம் கனவு கண்டார். அதற்கான சந்தர்ப்பங்கள் சரியாக வாய்க்காத நிலையில் தன் கனவுகளை கதைகளாக மூளைக்குள் அடுக்கத் தொடங்கினார். தன்னுடைய சகப்பணியாளர்களிடம் போர் முடிந்தபிறகு ஓர் உளவாளியை நாயகனாக்கி நாவல் எழுதப்போவதாக சொல்லுவார். கதையின் சம்பவங்களாக தன்னுடைய கனவுகளை விவரிப்பார்.

போர் முடிந்தது. அட்வெஞ்சரான பணிகள் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்கிற சலிப்பில் கடற்படைப் பணியில் இருந்து ஃப்ளெமிங்கும் விலகினார். சாகஸமானப் பணியை தேடி பத்திரிகையாளர் ஆனார். சில ஆண்டுகளில் அதுவும் வெறுத்துப் போக, போர்க்கால கனவுகளை தூசுதட்டி நாவல் எழுத உட்கார்ந்தார்.

என்ன எழுதுவது என்று திட்டவட்டமான ஐடியாவே இல்லை. என்னதான் சிந்தித்தாலும் மப்பாகவே இருந்தது. தன்னையே ஹீரோவாக கருதி எழுத ஆரம்பித்தார். இயல்பிலேயே மந்தமானவராக அமைந்துவிட்ட ஃப்ளெமிங், தன்னுடைய ஹீரோவையும் மிஸ்டர் மந்தமாக உருவாக்க விரும்பினார். அவனுக்கு என்ன பெயர் சூட்டுவது என்றும் தெரியவில்லை. தன் பெயரை சூட்டி, தன் குடும்பப் பாரம்பரியத்தையே கேவலப்படுத்தவும் மனமில்லை. மொக்கையான வேலையை செய்பவருக்கு மொக்கையான பெயர்தான் இருக்கும். அதுமாதிரி எந்த சுவாரஸ்யமுமில்லாத வேலையை செய்துக் கொண்டிருப்பவர் ஒருவரின் பெயரை சூட்டலாம் என்கிற முடிவுக்கு வந்தார். அக்காலத்தில் அமெரிக்காவில் பறவையியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் இருந்தார். நாள் கணக்கில் ஆடாமல், அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் அந்த வேலைதான் இருப்பதிலேயே மொக்கையான வேலை என்று முடிவுகட்டிய ஃப்ளெமிங், அவரது பெயரையே தன்னுடைய ஹீரோவுக்கு நாமகரணம் செய்தார். இந்த பெயரை கேட்டாலே, கேட்பவருக்கு மந்தமான ஃபீலிங் உருவாகும் என்று நம்பவும் செய்தார். அந்த பெயர்தான் ஜேம்ஸ்பாண்ட்.
‘எம்.ஐ-6’ என்கிற ரகசிய பிரிட்டிஷ் உளவு ஸ்தாபனத்தை தன் புனைவில் சிருஷ்டித்தார். 007 என்பது அதன் உளவாளியான ஜேம்ஸ்பாண்டின் ரகசியக் குறியீட்டு எண். தான் விரும்பி உண்ணும் உணவு, லிமிட்டாக சிப்பும் ‘சரக்கு’, ஸ்டைலாக ஊதும் சிகரெட்டு, நாகரிகமாக அணியும் உடை அனைத்தையுமே ஜேம்ஸுக்கு சொந்தமாக்கினார். ஆனால், ஃப்ளெமிங் திட்டமிட்டது மாதிரியாக இல்லாமல் ஜேம்ஸ்பாண்ட் சுவாரஸ்யமாக உருவானான். ஃப்ளெமிங்தான் ஜேம்ஸ். ஜேம்ஸ்தான் ஃப்ளெமிங். வேண்டுமென்றால் தலைவர் ஸ்டைலாக புகை பிடிக்கும் இந்தப் படத்தைப் பாருங்கள். புரியும்.

1953ல் ஜேம்ஸ்பாண்ட் நாவல் நாயகனாக பிறந்து, சரியாக பதினோரு ஆண்டுகள் கழித்து 1964ல் ஜேம்ஸை உருவாக்கிய ஃப்ளெமிங் மறைந்தார். அவர் உயிரோடு இருக்கும்போதே அவர் உருவாக்கிய ஹீரோவை வெள்ளித்திரையில் கிடைக்கும் பாக்கியம் அவருக்கு கிடைத்தது. 1962ல் ‘டாக்டர் நோ’ படம் மூலமாக, நாவலில் சாகஸங்கள் செய்துக் கொண்டிருந்த ஜேம்ஸ், சினிமாவுக்கும் தாவினார்.

ஃப்ளெமிங்கின் காலத்துக்குப் பிறகு ஜான் காட்னர், ரேமண்ட் பென்ஸன், கிங்ஸ்லி அமிஸ், செபஸ்டியன் ஃபாக், ஜெஃப்ரி டேவர் என்று ஏராளமான எழுத்தாளர்கள் ஜேம்ஸ்பாண்ட் நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்கள். காமிக்ஸ், டிவி சீரியல், வீடியோ கேம்ஸ், சினிமா, மொபைல் அப்ளிகேஷன்கள் என்று ஜேம்ஸ் இடம்பெறாத வடிவமே கிடையாது.

ஹாலிவுட்டில் மட்டுமல்ல. உலகம் முழுக்க இருக்கும் எல்லா வுட்டு மாஸ் ஹீரோக்களும் ஜேம்ஸ்பாண்ட் தாக்கத்தில் இருந்து தப்பவே முடியாது. சினிமாக்களில் மட்டுமல்ல. நம்மூர் சுஜாதா, ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்களின் கதைகளில் வரும் துப்பறியும் ஹீரோக்களும் ஜேம்ஸ்பாண்டின் பரம்பரைதானே? அந்தகால ஜெய்சங்கர் படங்கள்தான் ஜேம்ஸ்பாண்டின் நேரடி உல்டா என்று நினைக்காதீர்கள். லேட்டஸ்ட் ‘வேதாளம்’, ‘தூங்காவனம்’ வரைக்கும்கூட ஜேம்ஸின் பாதிப்பு ஹீரோவுக்கு இல்லாமலா இருக்கிறது? லேடி ஜேம்ஸ்பாண்டு கூட உண்டு தெரியுமா? விஜயசாந்தி வேறு யார்?
ஓக்கே, கமிங் டூ த பாயிண்ட். இந்த வரலாற்று ஆராய்ச்சி எதற்கென்றால் இன்று முதல் ஜேம்ஸ்பாண்ட் இந்தியாவை காக்கவும், கலக்கவும் வருகிறார் ‘ஸ்பெக்டர்’ மூலமாக. ‘ஸ்பெக்டர்’ என்றால் Special Executive for Counter Intelligence, Terrorism, Revenge and Extortion என்பதன் சுருக்கம். அதற்கு அர்த்தம் தேடி ரொம்ப காய வேண்டாம். மக்களுக்கும் எதிரான மொள்ளமாறி அமைப்பு என்று புரிந்துக் கொண்டால் போதும்.

ஐரோப்பாவில் போன மாதமும், அமெரிக்காவில் இம்மாத தொடக்கத்திலும் வெளியாகிவிட்ட ‘ஸ்பெக்டருக்கு’ கறாரான விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள்தான் வந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அறிவுஜீவி விமர்சகர்களை வழக்கம்போல புறந்தள்ளிவிட்டு ஜேம்ஸை கொண்டாடித் தீர்க்கிறார்கள் ரசிகர்கள். வசூல் மழை கொட்டோ கொட்டுவென்று கொட்டிக் கொண்டிருக்கிறது. ‘ஸ்பெக்டர்’ இந்தியாவில் வெளியான பிறகு இந்த மழை, சுனாமியாகக்கூடும் என உலக சினிமா வானிலை ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த குமணன் என்பவர் ஜோஸியம் சொல்லியிருக்கிறார்.
ஜேம்ஸ்பாண்ட் சினிமா வரிசையில் இது 24வது திரைப்படம். மெக்ஸிகோவின் ‘டே ஆஃப் டெட்’ திருவிழாவில் ஆரம்பக்கும் காட்சியில் தொடங்கி, இறுதி வரை விறுவிறுப்பாக படம் போகிறது என்று ஜேம்ஸ் ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள். ‘ட்ஜாங்கோ அன்செய்ன்ட்’ படத்துக்காக ஆஸ்கர் வென்ற கிறிஸ்டோப் வால்ட்ஸ்தான் வில்லன் என்பது எதிர்ப்பார்ப்புகளை எகிறச் செய்கிறது. செக்ஸ் பாம் மோனிகா பெலூச்சியின் தாராளக் கவர்ச்சி, தீபாவளிக்குப் பிந்தைய போனஸாம். இப்படத்தின் பாண்ட் கேர்ளான லியா சீடோக்ஸும் சும்மா கும்மென்று இருப்பதாக படம் பார்த்தவர்கள் வெட்கத்தோடு சொல்கிறார்கள்.

முந்தைய ஜேம்ஸ் படமான ‘ஸ்கைஃபால்’தான் இதுவரை வந்த ஜேம்ஸ் படங்களிலேயே வசூலை அதிகமாக வாரிக் குவித்தது. அதை இயக்கிய சாம் மெண்டிஸே ‘ஸ்பெக்டரையும்’ இயக்கியிருக்கிறார்.

ரைட்டு. நாம் பேசிப்பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஜேம்ஸ் படங்கள் பேசுவதற்கானவை அல்ல. பார்த்து ரசித்து கொண்டாடி தீர்ப்பதற்கானவை. ஹேப்பி ஜேம்ஸ் டே!

(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)

கதைக்கார தேவர்

$
0
0
“யார் யாரோ வர்றாங்க. தேவருக்கு நூற்றாண்டு விழான்னு ஆரம்பிக்கிறாங்க. பேஷா செய்யலாமேன்னு சொல்றேன். போயி கலந்து பேசிட்டு உடனே வர்றோமுன்னு கிளம்புறாங்க. அவ்வளவுதான். அப்புறம் என்ன ஆனாங்கன்னே தெரியாது. தமிழ் சினிமாவுக்கு தேவர் எவ்வளவு பங்களிப்பு செஞ்சிருக்காரு. எவ்வளவு சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்காரு. எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்திருக்காரு. வள்ளலா வாரி வாரி வழங்கியிருக்காரே. கருத்து கட்சி வேறுபாடுகளை மறந்து எல்லாருமா சேர்ந்து எவ்வளவு பிரும்மாண்டமா நடத்திக் காட்டியிருக்கணும். மறந்துவிடக்கூடிய மனிதரா அவரு. வயசு மட்டும் ஒத்துழைச்சிருந்தா நானே ஆடி, ஓடி செஞ்சிருப்பேன்” கலைஞானத்தின் கண்களில் கடந்தகாலம் நிழலாடுகிறது.

எட்டு வயதில் டூரிங் தியேட்டரில் முறுக்கு விற்றுக் கொண்டிருந்த கலைஞானம், பிற்பாடு முப்பது படங்களுக்கு கதை எழுதி, நூற்றுக்கணக்கான படங்களின் திரைக்கதை விவாதங்களில் பங்குபெற்று, தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தேவரின் கதை இலாகா அவ்வளவு பிரபலம். திரைப்படத்தின் டைட்டிலிலேயே ‘கதை : தேவர் கதை இலாகா’ என்று பெயர் வரும்போது ரசிகர்கள் கைத்தட்டி மகிழ்வார்கள். அந்த பிரசித்தி பெற்ற கதை இலாகாவின் தூண்களில் ஒருவராக இருந்தவர் கலைஞானம்.

சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் குறித்த தன்னுடைய நினைவலைகளை தினகரன் தீபாவளி மலருக்காக பகிர்ந்துக் கொண்டார்.
“எல்லாம் தேவரோட ஆசி. நான் நல்லா இருக்கணும்னு முதல் சந்திப்பிலேயே விரும்பினவரு அவரு. அப்போதான் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிக்கிட்டிருந்தேன். சிவம்னு ஒருத்தரு தேவரண்ணனோட குழுவில் இருந்தவரு. அவர்தான் என்னை அண்ணன் கிட்டே அழைச்சிட்டுப் போனாரு.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு நான் எழுதிக்கொடுத்த படங்களோட பேரையெல்லாம் வரிசையா சொன்னவரு, ‘இதையெல்லாம் நீதானே எழுதினே’ன்னு கேட்டாரு. ‘ஆமாம்’னு சொன்னேன். ‘கோபாலகிருஷ்ணனே அருமையா கதை சொல்லுவாரு. அவரையே நீ கதை சொல்லி அசத்தியிருக்கே. கெட்டிகாரன் தாம்பா’ன்னு பாராட்டினாரு.

கொஞ்ச நேரம் பேசிட்டு, குடும்ப நிலவரத்தை விசாரிச்சாரு. அப்போ நான் பெருசா சம்பாதிக்கலை. அதை சொன்னதும், ‘அடப்பாவி, இவ்வளவு ஹிட்டு கொடுத்துட்டு இன்னும் ஒண்ணும் சேர்த்து வைக்கலையா?’ன்னு கேட்டாரு.

உடனே தன்னோட தம்பிகிட்டே சொல்லி பத்தாயிரம் ரூபாய் எடுத்துக்கிட்டு வரச் சொன்னாரு. என் கையிலே கொடுத்து, ‘இது வெறும் அட்வான்ஸ்தான். இதை எடுத்துட்டு ஊருக்குப் போய் ஏதாவது நிலபுலன் வாங்கி போட்டுட்டு வா. எதிர்காலத்துக்கு உதவும். மத்ததையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்’னு சொன்னாரு. இப்படிதான் நான் தேவர் கிட்டே சேர்ந்தேன்.

தேவரோட இருந்த ஒவ்வொருத்தருக்கும் இதுமாதிரிதான் அனுபவம் இருக்கும். அறிமுகமானவுடனேயே ஒருத்தர் மேலே அளவில்லாமே அக்கறை காட்ட தேவராலே மட்டும்தான் முடியும்.

தேவர் கிட்டே வேலைக்கு சேர்ந்ததுமே தினமும் ஒரு கதை சொல்ல சொல்லுவாரு. கதை இலாகாவை சேர்ந்தவங்களுக்கு இது மட்டும்தான் வேலை. நாங்க சொல்லிக்கிட்டே இருப்போம். அவரு கேட்டுக்கிட்டே இருப்பாரு. பிடிக்கலைன்னா துப்பிடுவாரு. பிடிச்சிருந்தா உடனே ஓக்கே பண்ணி வெச்சுப்பாரு. ஏதாவது படம் படப்பிடிப்பிலே இருந்தாகூட கேப் விடமாட்டார். நாங்க அடுத்தடுத்த படத்துக்கு கதை சொல்லிக்கிட்டே இருக்கணும். எங்களையெல்லாம் ஆசையா ‘டேய் கதைக்காரனுங்களா...’ன்னுதான் கூப்பிடுவாரு.

அவரும் சுவாரஸ்யமா கதை சொல்லுவாரு. அண்ணன் சொல்ல ஆரம்பிச்சாருன்னா நேரம் போறதே தெரியாது. அவரோட வாழ்க்கையோட ஒவ்வொரு அங்குலத்தையும் மனசு திறந்து எங்களிடம் சொல்லியிருக்காரு.
சின்ன வயசுலே அண்ணன் எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி உடம்பை நல்லா பலமா வெச்சிருப்பாரு. கோயமுத்தூர் ராமநாதபுரம் பகுதியிலே ‘மாருதி உடற்பயிற்சி நிலையம்’னு இருந்துச்சி. அங்கேதான் அண்ணன் பயிற்சி பண்ணுவாரு. அவருக்கு சினிமாவிலே பெரிய ஸ்டண்ட் கலைஞரா வரணும்னு ஆசை. அங்கேதான் எம்.ஜி.ஆரும் உடற்பயிற்சி செய்ய வருவார். இப்படியாக ரெண்டு பேருக்கும் நட்பு மலர்ந்துச்சி.

அண்ணன் மாச சம்பளத்துக்கு ஜூபிடர் பிக்சர்ஸ்லே வேலைக்கு சேர்ந்துட்டாரு. ஷூட்டிங் இருந்தாலும் சரி. இல்லைன்னாலும் சரி. அவருக்கு மாசாமாசம் சரியா சம்பளம் வந்துடும். ஆனா அப்போ எம்.ஜி.ஆர் காண்ட்ராக்டுலே இல்லை. அதனாலே அவருக்கு வேலை இருந்தாதான் காசு. குடும்ப கஷ்டம்.

ஒருமுறை தேவரண்ணன் எம்.ஜி.ஆர் வீட்டு வழியா நடந்து போய்க்கிட்டிருக்காரு. அப்போ எம்.ஜி.ஆரோட தாய் சத்யாம்மா தெருவிலே மிரண்டுப்போய் நின்னுக்கிட்டிருந்தாங்க. என்ன்ன்னு இவரு கேட்டிருக்காரு. ‘காசு வாங்கிட்டு வர்றேன்னு முதலாளியை பார்க்க ராமச்சந்திரன் போயிருக்கான். அவன் வந்து காசு கொடுத்தப்புறம்தான் அரிசி வாங்கி சமைக்கணும். இப்பவே இருட்டிடிச்சி. புள்ளை பசியோட வருவான். என்ன செய்யுறதுன்னு தெரியலை’ன்னு அம்மா சொல்லியிருக்காங்க. தேவருக்கு அப்படியே ஒரு மாதிரி ஆயிடிச்சி.

உடனே தன்னோட வீட்டுக்கு ஓடிப்போனவரு சமையலறைக்கு போய் அரிசிப்பானையிலே இருந்து அரிசியை எடுத்து தன்னோட சட்டை, டவுசர் பாக்கெட்டில் எல்லாம் நிரப்பிக்கிட்டு எம்.ஜி.ஆர் வீட்டுக்கு ஓடியிருக்காரு. அந்த அரிசியை கொடுத்து சீக்கிரமா சோறு வடிச்சி வைங்கம்மான்னு சொல்லியிருக்காரு.

நைட்டு வீட்டுக்கு வந்துப் பார்த்த எம்.ஜி.ஆர், சாதம் தயாரா இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கார். சத்யாம்மா என்ன நடந்ததுன்னு மகன் கிட்டே சொல்லியிருக்காங்க. அப்படியே நெகிழ்ந்துப் போயிட்டாராம் எம்.ஜி.ஆர்.

பிற்பாடு எம்.ஜி.ஆரை வெச்சி தேவர் எப்படி அதிகப் படங்கள் தயாரிச்சாருங்கிறதுக்கு இந்த சம்பவம் ஒரு முக்கியமான காரணம். ஒருத்தரு மேலே ஒருத்தரு அவ்வளவு அன்பு ஆரம்பத்துலேருந்தே வெச்சிருந்தாங்க.

தேவருக்கு கல்யாணமாகி குழந்தைகள்லாம் பிறந்திருந்தது. சினிமாவையெல்லாம் மறந்துட்டு கோயமுத்தூரில் பால் கடை நடத்திக்கிட்டிருந்தாரு. நேர்மையா வியாபாரம் பார்க்குறவரு என்பதால் பிசினஸ் நல்லா இம்ப்ரூவ் ஆச்சி. பழைய சினிமா ஆளுங்க அப்பப்போ வந்து தேவரை பார்த்து பேசிட்டு போவாங்க. அப்படிதான் ஒருமுறை கேமிராமேன் விஜயனும், நடிகர் எஸ்.ஏ.நடராஜனும் பேசிக்கிட்டிருந்தாங்க.

பேச்சுவாக்கிலே நாமளே படம் தயாரிக்கலாம்னு திட்டம் தீட்டினாங்க. மூணு பேரும் காசு போட்டு படக்கம்பெனி ஆரம்பிச்சாங்க. பால் வியாபாரத்துலே சேர்த்த காசை தேவரண்ணன் முதலீடா போட்டாரு.

படம் பேரு ‘நல்ல தங்கை’. எஸ்.ஏ.நடராஜனே நடித்து இயக்கினார். கதை, வசனம் ஏ.பி.நாகராஜன். நம்பியார், ராஜசுலோசனா, மாதுரிதேவின்னு நடிக நடிகையர் எல்லாம் ஸ்டார்ஸ். படம் பூஜை போட்ட அன்னிக்கே நல்லா வியாபாரம் ஆச்சி. நல்லா வளர்ந்துக்கிட்டிருந்த நேரத்துலே ஒரு பிரச்சினை. பார்ட்னர் ஒருத்தர் கொஞ்சம் ‘அப்படி இப்படி’ புதுமுக நடிகை ஒருத்தர் கிட்டே நடந்துக்கிட்டு, விஷயம் தேவரண்ணன் காதுக்கு வந்துச்சி. இப்படியே போச்சின்னா தன்னோட பேரும் கெட்டுப் போயிடும்னு தேவர் போய் அவரோட சண்டை போட்டாரு. அடிதடி லெவலுக்கு போக அப்புறம் எல்லாரும் வந்து சமரசம் பண்ணி, தேவரண்ணன் தன்னோட பங்கை பிரிச்சி வாங்கிக்கிட்டாரு.

சினிமா ஃபீல்டுக்குள்ளே நுழையணும்னு ஆசைப்பட்டு இப்படி ஆகிப்போச்சேன்னு அவருக்கு வேதனை. ஏ.பி.நாகராஜன்தான் சமாதானப்படுத்தி, ‘நீங்களே தேவர் பிலிம்ஸ் என்கிற பேருலே படக்கம்பெனி ஆரம்பிக்கலாமே?’ன்னு யோசனை சொன்னாரு. தேவருக்கு படக்கம்பெனி ஆரம்பிக்கிற ஐடியாவை விட கம்பெனிக்கு ஏ.பி.என். சொன்ன பேரு ரொம்ப புடிச்சிருந்தது. குடும்பத்தை அப்படியே சென்னைக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. தி.நகரில் சின்னதா ஒரு ஆபிஸ் போட்டாரு. இப்படிதான் புகழ்பெற்ற தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தோன்றிச்சி.
முதல் படமே எம்.ஜி.ஆரை வெச்சிதான் தயாரிக்கணும்னு முடிவு பண்ணியிருந்தாரு. அதுதான் ‘தாய்க்குப் பின் தாரம்’. படம் எடுக்குறப்பவே தேவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் கதையோட முடிவு விஷயத்தில் சின்ன மனஸ்தாபம். இதனாலே அடுத்து ரஞ்சனை வெச்சி நீலமலைத் திருடன் எடுத்தாரு தேவர். இதுவும் வெற்றிப்படம் தான்னாலும் ‘தாய்க்குப் பின் தாரம்’ அடைந்த வெற்றியை தொட முடியலை. அடுத்து ‘செங்கோட்டை சிங்கம்’னு ஒரு படம். இது ஓடலை. ஜெமினியை வெச்சி ‘வாழவைத்த தெய்வம்’ எடுத்தாரு. சுமாராதான் போச்சி. ‘யானைப்பாகன்’, ‘கொங்கு நாட்டு தங்கம்’னு அடுத்தடுத்து ரெண்டு ஃபெய்லியர்.

தேவர் ஃபிலிம்ஸ்லே கலகலத்துப் போயிடிச்சி. இனிமேல் தேவர் அவ்வளவுதான்னு எல்லாரும் அவரை விட்டு விலக ஆரம்பிச்சாங்க. எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு கோயமுத்தூருக்கே திரும்பப்போய் ஏதாவது தொழில் செஞ்சி பிழைச்சுக்கலாம்னு அண்ணன் முடிவெடுத்திருக்காரு. அப்போதான் நாகிரெட்டி நிலைமையை கேள்விப்பட்டு கூப்பிட்டு அனுப்பியிருக்காரு. ‘நீங்க தொடர்ந்து சினிமா தயாரிக்கணும்’னு சொல்லி அவரோட ஸ்டுடியோவில் எந்த வேலையா இருந்தாலும் செஞ்சுக்கலாம். காசு பத்தியெல்லாம் பிற்பாடு பேசிக்கலாம்னு சொல்லிட்டாரு.

சரி. ஒருமுறை முயற்சிக்கலாம்னு அண்ணனும் சாங்ஸ் ரெக்கார்ட் பண்ணிட்டு வேலையை தொடங்கினாரு. அப்போ எம்.ஜி.ஆருக்கு கால் உடைஞ்சிருந்த சமயம். யதேச்சையா அண்ணனும், அவரும் வாகினி ஸ்டுடியோவில் எதிர்படுறாங்க. ஏற்கனவே இருந்த மனஸ்தாபத்தாலே அஞ்சு வருஷம் பிரிஞ்சிருந்த நண்பர்கள் ஒருத்தரை ஒருத்தர் கட்டி தழுவிக்கிறாங்க. தன்னைப் பத்தி பேசாம, எம்.ஜி.ஆரோட நலனைப் பத்தி மட்டுமே விசாரிச்சிக்கிட்டிருந்தாரு தேவர்.

அப்போ எம்.ஜி.ஆர் செஞ்ச ஒரு காரியம் மகத்தானது. தேவரை தன்னோடவே தன் வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போனார். அவரோட தாய் சத்யபாமா படத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் மவுனமா நின்னாங்க. ‘அண்ணா! என் தாய் மீது ஆணை. இனிமேல் நீங்க எப்போ என்னை கேட்டாலும் கால்ஷீட் இல்லைன்னு சொல்லமாட்டேன்’னு சத்தியம் பண்ணினாரு.

சத்தியபாமா தாய் சொர்க்கத்திலிருந்தே தேவரை ஆசிர்வதிச்சிருக்கணும். உடனே தான் எடுத்துக்கிட்டிருந்த படத்துக்கு எம்.ஜி.ஆரை ஹீரோவா போட்டாரு. தேவர், படத்துக்கு வெச்ச பேரை பார்த்தோம்னா, அவரு எவ்வளவு பெரிய குசும்புக்காரருன்னு தெரியும். எம்.ஜி.ஆர் செய்த சத்தியத்தை நினைவுறுத்தும் விதமா ‘தாய் சொல்லைத் தட்டாதே’ன்னு பேரு வெச்சாரு.

அதில் தொடங்கி அடுத்தடுத்து எம்.ஜி.ஆரை வெச்சி பதினாறு படம் தயாரிச்சாரு. எம்.ஜி.ஆர் படம் எடுக்கலைன்னா தண்டாயுதபாணி பிலிம்ஸ் பேனரில் மிருகங்களை வெச்சி படம் எடுப்பாரு. பக்திப்படம் எடுப்பாரு. இந்திக்கெல்லாம் போய் ராஜேஷ்கண்ணாவை வெச்சு ‘ஹாத்தி மேரா சாத்தி’யெல்லாம் எடுத்து வெற்றிக்கொடி நாட்டினார். தேவர் பிலிம்ஸ் என்றால் நாடு முழுக்க தெரியுமளவுக்கு கம்பெனியை வளர்த்தார். கதையை முதல்லேயே பக்காவா ரெடி பண்ணி வெச்சுக்கிட்டு குறுகிய காலத்துலே படப்பிடிப்பை முடிச்சி நாற்பது, நாற்பத்தஞ்சி நாளில் முழுப்படத்தையும் எடுத்துடுவாரு. உழைப்புக்கு தாராளமா ஊதியம். அதே நேரத்தில் வேலையில் கறாரான கண்டிப்புங்கிறதுதான் தேவரோட ஃபார்முலா.

தன் கூட இருக்குறவங்களும் தன்னை மாதிரியே முன்னேறனும்னு நெனைக்கிற பரந்த மனசு. என்னை தயாரிப்பாளர் ஆக்கி அழகு பார்க்க விரும்பினார் தேவர். ‘எல்லாத்தையும் நானே கூட இருந்து முடிச்சிக் கொடுக்கறேன்’னு வாக்கும் கொடுத்தார். நானும் உற்சாகமா போய் முதன்முதலா ரஜினியை ஹீரோவா புக் பண்ணினேன். வில்லன் வேஷம் பண்ணிக்கிட்டிருக்குறவரை ஹீரோவாக்குறியே, சரிபடாதுன்னு தேவர் விலகிட்டாரு. அவரு பேச்சை கேட்கலைன்னு என் மேலே கோவம் கூட பட்டாரு.
எப்படியோ கஷ்டப்பட்டு ‘பைரவி’ படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணினேன். முதல் காட்சி முடிந்ததுமே தேவரண்ணன் கூப்பிட்டு அனுப்பினாரு. ‘நீ ஜெயிச்சிட்டடா’ன்னு சொன்னாரு. எனக்கு குழப்பமாயிடிச்சி. இப்போதானே முதல் காட்சியே முடிந்திருக்கு, அண்ணன் நம்மளை சமாதானப்படுத்த சொல்றாரோன்னு நெனைச்சேன். ‘நீங்க படம் பார்த்த அதே தியேட்டர்லேதாண்டா நானும் மாறுவேஷத்துலே பார்த்தேன். படம் பிரமாதம். நீ ஜெயிச்சிட்டே’ன்னு திரும்பச் சொன்னாரு. அப்போதான் அண்ணன் என் மேலே எவ்வளவு அக்கறையா இருந்திருக்காருன்னு தெரிஞ்சது.

நான் இந்தப் படத்தை தயாரிச்சிக்கிட்டிருந்த நேரத்துலே தினமும் பூஜையிலே உட்கார்ந்து, நான் ஜெயிக்கணும்னுதான் முருகனை வேண்டிக்கிட்டிருந்திருக்காரு. தயாரிப்பாளர் ஆயிட்டதாலே பொம்பளை, தண்ணீன்னு கெட்ட பழக்க வழக்கம் பக்கமா போறேனான்னு ஆளுங்களை வெச்சி கண்காணிச்சி இருக்காரு. அப்படியெல்லாம் இல்லைன்னு தெரிஞ்சதும்தான் என்னோட வெற்றியையே அங்கீகரிச்சாரு.

எந்த ரஜினியை வெச்சி படம் பண்ணக்கூடாதுன்னு அண்ணன் எனக்கு சொன்னாரோ, அதே ரஜினியை வெச்சி மூணு படம் அடுத்தடுத்து பண்ணனும்னு ஆசைப்பட்டாரு. என்னை கதைகூட ரெடி பண்ணச் சொன்னாரு. அந்த படம்தான் ‘தாய் மீது சத்தியம்’.

அதுக்காக அவரோட ஆபிசுக்கு போய் வந்துக்கிட்டு இருந்தேன். ஊட்டியிலே அமிதாப்பச்சனை வெச்சி தேவர் எடுத்துக்கிட்டிருந்த படத்தோட ஷூட்டிங். அதுக்கு கிளம்பிக்கிட்டிருந்தார். ஆபிஸில் அப்போ கொஞ்சம் கையாடல் மாதிரி ஊழல்கள் நடந்து, தேவரண்ணன் கொஞ்சம் மனவருத்தத்தில் இருந்தார். ஒரே நேரத்துலே மூணு படம் எடுக்கற டென்ஷன் வேற. முருகன் படத்துக்கு முன்னாடி நின்னு, “ஏண்டா என்னை இப்படி சோதிக்கறே? சீக்கிரமா என்னை கூப்பிட்டுக்கடா”ன்னு மனமுருக வேண்டினார். எனக்கு அப்படியே பக்குன்னு ஆயிடிச்சி.

மூணு நாள் கழிச்சி செய்தி வந்தது. எங்களை வாழவைத்த தெய்வம் எங்களை விட்டுப் போனது. அவர் கேட்டுக்கிட்ட மாதிரியே முருகன் அவரை அழைச்சிக்கிட்டான். இத்தனைக்கும் தேவரண்ணனுக்கு அப்போ வயசு வெறும் அறுபத்தி நாலுதான். நாற்பது வயசுலேதான் அவரோட சினிமா வாழ்க்கையே தொடங்கிச்சி. மிகக்குறுகிய காலத்தில் அப்படியொரு அமரப்புகழை அடைந்த மகத்தான சாதனையாளர் அவர். சினிமா எப்படி எடுக்கணும்னு கத்துக்கணும்னா, தேவர் என்னவெல்லாம் செஞ்சிருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்டாலே போதும். ஒரு மனிதன் எப்படி வாழணும்னாலும் அவருதான் எல்லாருக்கும் பாடம்”

(நன்றி : தினகரன் தீபாவளி மலர் 2015)

சென்னையில் நிகழ்ந்திருப்பது செயற்கைப் பேரழிவு!

$
0
0
கடந்த வாரத்தில் சென்னையை சின்னாபின்னமாக்கிய வெள்ளம், இயற்கைப் பேரழிவு அல்ல. செம்பரம்பாக்கம் ஏரி நீரை வெளியேற்றுவதில் அரசு நிர்வாகம் செய்த குளறுபடியே சென்னை நகரை மூழ்கடித்தது.

நவம்பர் இறுதியில் சர்வதேச வானிலை ஆய்வு அமைப்புகள் தமிழக அரசு தலைமையை எச்சரித்திருந்தன. டிசம்பர் 1 மற்றும் இரண்டு தேதிகளில் 500 மி.மீ அளவுக்கு சென்னையில் மழை பொழியலாம் என்று அவ்வமைப்புகள் கணித்திருந்தன. இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை செயலருக்கு செம்பரம்பாக்கம் நீரின் அளவை 22 அடியிலிருந்து 18 அடியாக குறைக்கச் சொல்லி பரிந்துரைத்தார்கள். இதன் மூலம் மேலும் பொழியும் கனமழையை எதிர்கொண்டு அடையாறு ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய ஆபத்தினை தவிர்க்கலாம் என்றார்கள். ஆனாலும், நவம்பர் 26 முதல் 29ந் தேதி வரை அடையாறு ஆற்றில் மிகக்குறைவான நீரேதான் பாய்ந்துக் கொண்டிருந்தது.

ஏனெனில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பரிந்துரை கோப்பு, கோட்டையில் தூங்கிக் கொண்டிருந்தது. நமக்குக் கிடைத்த தகவல்களின் படி பொதுப்பணித்துறை செயலர், தலைமைச் செயலரின் உத்தரவுக்காக காத்திருந்தார். தலைமைச் செயலர் யாருடைய அனுமதிக்காக காத்திருந்தார் என்பது இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது. இதனால்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சரியான திட்டமிடுதல் இல்லாமல் பக்ராநங்கல் அணையை திறந்துவிட்டபோது பஞ்சாப் எத்தகைய பேரழிவைச் சந்தித்ததோ அதற்கு இணையான பேரழிவினை இன்று சென்னை சந்தித்திருக்கிறது.

செம்பரம்பாக்கம் நீர்த்தேக்க அணை மொத்தமாக நிரம்பி, தண்ணீர் தளும்பும்வரை அதன் கதவு திறக்கப்படவில்லை. சென்னையிலும் ஏற்கனவே கணித்தபடி கனமழை பொழியத் தொடங்கியது. “டிசம்பர் ஒன்று அன்று இரவு நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 33,500 கன அடி நீரைதான் திறந்துவிட்டோம் என்று மாநில அரசு கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்கிறது. ஆனால், உண்மை நிலவரம் திறந்துவிடப்பட்ட நீர் இதைவிட இருமடங்கு என்பதுதான். கூடவே அத்தனூர் ஏரியின் நீரும் விநாடிக்கு 5,000 கன அடி அளவுக்கு திறந்துவிடப்பட்டதால் அடையாறு அழிவாறாக ஆனது” என்பது பொதுப்பணித்துறை வட்டாரத்திலிருந்து நமக்கு கிடைத்திருக்கும் தகவல்.
“இந்த மோசமான நீர் நிர்வாகக் குளறுபடிகளின் காரணமாகவே டிசம்பர் 2 மற்றும் 3 இரு தேதிகளிலும் அடையாறில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக நீர் வெள்ளமென பயணித்தது” என்று வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் மூத்த ஐஏஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் அவர், “தாங்களாகவே முடிவெடுக்க தைரியமில்லாத முதுகெலும்பில்லாத அதிகாரிகளை பெற்றிருப்பதற்கான பலனைதான் சென்னை நகரம் அனுபவித்திருக்கிறது. இந்த துரதிருஷ்ட வேளையிலும் நல்ல வேளையாக முழுக்கொள்ளளவை எட்டிய நீர்த்தேக்கம் உடைந்து பாய்ந்து மொத்த ஊர்களையும் நாசமாக்கவில்லை. அதுவரை நிம்மதி” என்றார்.

“சென்னையிலும் புறநகரிலும் ஏற்பட்டிருக்கும் இந்த கொடுமையான பாதிப்பை, செம்பரம்பாக்கம் தண்ணீரை வெளியேற்றுவதில் ஒழுங்கான நிர்வாகத்தை கையாண்டிருந்தால் தவிர்த்திருக்கலாம்” என்று மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸைச் சேர்ந்த புரொபஸர் எஸ்.ஜனகராஜன் சொல்கிறார். “செம்பரம்பாக்கம் ஏரியை அரசு தனியான ஒரு நீர்த்தேக்கமாக மட்டும் கருதக்கூடாது. அந்த ஏரி அடையாறு ஆற்றோடு மட்டுமின்றி மேலும் தோராயமாக 200 நீர்நிலைகளோடு தொடர்புடையது. அதனால்தான் விநாடிக்கு 33,500 கன அடி நீரை அங்கிருந்து திறந்துவிட்டாலும் கூட, அந்நீர் சைதாப்பேட்டையை அடையாறு வழியாக அடையும்போது 60,000 கன அடியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. நிர்வாகத்துக்கு இந்த இயல்பான நிகழ்வு தெரிந்துத் தொலைக்காததால் மக்கள் அதற்கான விலையை தந்திருக்கிறார்கள்” என்றும் அவர் விளக்கினார்.

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் மட்டும் ஏரி, குளம், ஆறு என்று உத்தேசமாக 3,600 நீர்நிலைகள் உண்டு. இவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக (நதிநீர் இணைப்பு மாதிரி) செய்துவிட்டால் தோராயமாக 30 ஆயிரம் மில்லியன் கன அடி நீரை இவற்றில் தேக்க முடியும். மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் வராமலும் எதிர்காலத்தில் காக்க முடியும் என்கிற யோசனையையும் ஜனகராஜன் முன்வைக்கிறார்.
இந்த பேரழிவின் விளைவு இவ்வளவு மோசமாக இருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மக்களுக்கு -– குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு - எவ்வித வழிகாட்டுதலோ எச்சரிக்கையோ விடுக்கப்படவில்லை. மேலும், சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் அத்தனை பேருடைய செல்போனும் அணைத்துவைக்கச் சொல்லி ‘யாராலோ’ அறிவுறுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. வயர்லெஸ் மூலம் மட்டுமே அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அவதிக்குள்ளான மக்கள் உடனடியாக உள்ளூர் காவல்துறையினரின் உதவியை கோர முடியாத நிலை ஏற்பட்டது.

இதைப்பற்றியெல்லாம் விளக்கங்களை கேட்க தலைமைச் செயலரையும், பொதுப்பணித்துறைச் செயலரையும் தொடர்புகொள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்த அத்தனை முயற்சிகளும் பலனை எட்ட முடியவில்லை. விடையறிய முடியாமல் நம் முன் நிற்கும் கேள்விகள் இவைதான்.

1) அபாய அளவை எட்டிய பிறகும் செம்பரம்பாக்கம் நீரை திறந்துவிடாமல் யாருடைய உத்தரவுக்காக அதிகாரிகள் காத்திருந்தார்கள்?

2) இப்போது நடந்திருக்கும் பேரழிவுக்கு யாராவது பொறுப்பேற்பார்களா?

3) இனியாவது நீர்த்தேக்கங்களை பாதுகாப்பான முறையில் நிர்வகிக்க அரசு முறையான வழிகாட்டுதல்களை உருவாக்குமா?

4) மழைவெள்ளக் காலத்தில் இதுபோல பெரியளவில் தேக்கங்களிலிருந்து நீரை வெளியேற்றும்போது மக்களுக்கு தகுந்த காலத்தில் எச்சரிக்க ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா?


- 09-12-15 அன்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் வெளிவந்திருக்கும் செய்திக் கட்டுரையின் தமிழாக்கம்!

ஷகிலா பேசுகிறேன்!

$
0
0
ஆண்டு அனுபவித்தவர் அறுபது வயதில் சுயசரிதை எழுதுகிறார் என்றால் புரிகிறது. இன்னும் நாற்பதை கூட எட்டாத ஷகிலா ஏன் எழுதியிருக்கிறார்? 

சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ள சென்னையில் அவர் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்டுக்கு சென்றோம். ஒரு பிரபலமான நடிகை வசிக்குமிடம் என்பதற்கு எந்தவித அடையாளமும் அற்ற எளிமையான வீடு. சாதாரண பெண்களை போலவே ‘சிம்பிளாக’, ‘ஹோம்லி’யாக இருக்கிறார் ஷகிலா. கழுத்தில் காதில் மூக்கில் பொட்டு தங்கம் இல்லை.

இனி அவரே பேசுவார்.
ஏன் எழுதினேன்?

ஒரு முறை பி.சி.ஸ்ரீராம் சார் சொன்னார். ‘உங்களை மாதிரி ஆளுங்களோட வாழ்க்கையில் இருந்துதான் மக்கள் கத்துக்க வேண்டிய பாடங்கள் இருக்கு. உங்களுக்கு நடந்த நல்லது கெட்டதுகளை எழுதணும்...’

அவர் சொன்னது மனதை அரித்துக் கொண்டே இருந்தது. நீண்டகாலமாகவே உங்களைப் போன்ற பத்திரிகை நண்பர்கள் எழுதச் சொல்லி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். எல்லாரிடமும் ‘எனக்கு விருப்பமில்லை. என்னைப் பற்றி எழுத நான் அன்னை தெரசாவும் இல்லை’ என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். என் வாழ்க்கையும் சரி. நான் நடித்த படங்களும் சரி. போலியானவை. அதற்காகவே எழுதத் தயங்கினேன். எழுதினால் உண்மையை மட்டுமே எழுதவேண்டும்.

இந்நிலையில் திடீரென்று ஒருநாள் ஏதோ ஒரு வேகம் வந்தது. மளமளவென்று எழுதிவிட்டேன்.

‘மை டியர் குட்டிச்சாத்தான்’

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோமே இதே வீட்டில்தான். அப்பா, ரெக்ரியேஷன் தொடர்பான வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா, ஹவுஸ் ஒயிஃப். அப்பாவுக்கும் சரி. அம்மாவுக்கும் சரி. இவர்கள் செய்துக் கொண்டது பரஸ்பரம் மறுமணம். அப்பாவின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளை என் சொந்த சகோதர சகோதரிகள் என்றுதான் என்னுடைய 12வது வயது வரை நினைத்துக் கொண்டிருந்தேன். என் அம்மாவுக்கு மூன்று பிள்ளைகள்.

அருகிலிருந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது என் ஸ்கூல் சீனியர்களாக இருந்த சோனியாவும் (இப்போது நடிகர் போஸ் வெங்கட்டின் மனைவி), டிங்குவும் பயங்கர ஃபேமஸ். காரணம் அவர்கள் இருவரும் அப்போது சக்கைப்போடு போட்ட ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தில் நடித்திருந்தார்கள். ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அவர்களுக்கு இருந்த பிரபலமே என்னை சினிமாவை நோக்கி ஈர்த்தது.

டீன் ஏஜில் என் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த சினிமாக்காரர்கள் ஒரு சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். சரத்குமார் நடித்த ‘நட்சத்திர நாயகன்’ படம் அது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் முத்தாய்ப்பான காட்சி. அதைத் தொடர்ந்தே நிறைய படங்களில் நடித்தேன். இரண்டாயிரம் ஆண்டின் காலக்கட்டத்தில்தான் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

படிப்புக்கு பதில் நடிப்பு

படிப்பில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. பாப் கட்டிங் வெட்டிக் கொண்டு டிவிஎஸ் சேம்பில் கோடம்பாக்கம் முழுக்க சுற்றுவேன். ஷூட்டிங்கில் கலந்துக் கொண்டால் ஸ்கூலுக்கு லீவு போடலாம் என்பதே எனக்கு ஆகப்பெரிய ஆறுதலாக இருந்தது. ‘படிப்புதான் வரலை. நடிப்பாவது வரட்டும்...’ என்று அப்பாவும் தடை போடவில்லை. அதுவுமின்றி அப்போது குடும்பமும் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. சினிமாவில் நான் நடித்ததால் காசு நிறைய கிடைத்தது. எனவே குடும்பத்தில் என்னை என்கரேஜ் செய்தார்கள்.

சிலுக்கு அறைந்தார்

‘ப்ளே கேர்ள்ஸ்’ படத்தில் சில்க் ஸ்மிதாவுக்கு தங்கச்சியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் ஷூட்டிங்கில் எனக்கு கொடுக்கப்பட்ட உடை மிகச் சிறியதாக இருந்தது. அதிர்ச்சியில் உறைந்துப் போனேன். ஷாட் ரெடி ஆனதுமே சில்க் மாடியில் இருந்து இறங்கி வந்தார். அவரைப் பார்த்ததுமே கூடுதல் அதிர்ச்சி. என்னைவிட மிகச்சிறிய ஆடை அணிந்திருந்தார். அவரிடம் சங்கடத்துடன், ‘அக்கா, உங்க உள்ளாடையெல்லாம் வெளியே தெரியுது...’ என்றேன். சில்க் என்னை கண்டுக்கொள்ளவே இல்லை. இயக்குநர் உடனே, ‘பெரிய ஸ்டார்கிட்டே இப்படியெல்லாம் பேசக்கூடாது...’ என்றார்.

சீன் படி நான் சில்க்குக்கு காஃபி கொடுக்க வேண்டும். அவர் என்னை அறைய வேண்டும். கேமிரா ரோல் ஆகத் தொடங்கியது. ‘அக்கா காஃபி...’ என்று நான் கோப்பையை நீட்ட, பதிலுக்கு சில்க் பளாரென்று நிஜமாகவே அறைந்தார். எனக்கு அவமானமாகி விட்டது. நான் அவரிடம் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு வன்மத்தில் அறைந்துவிட்டார் என்று கோபப்பட்டு படப்பிடிப்பை விட்டு வெளியேறினேன்.

தயாரிப்பாளரும், இயக்குநரும் பின்னர் என்னை சமாதானப்படுத்தி ‘டைமிங்’ பற்றியெல்லாம் பாடமெடுத்தார்கள். சில்க் வேண்டுமென்றே அடிக்கவில்லை என்று புரியவைத்தார்கள். அதன்பிறகு சில்க் என்னிடம் அன்பாக நடந்துக் கொண்டார். என்னை பிரத்யேகமாக அவர் வீட்டுக்கு அழைத்து லஞ்ச் கொடுத்தார். ஷூட்டிங்கில் எனக்காக நிறைய சாக்லேட் வாங்கி வைத்திருப்பார்.

லட்சங்களை சம்பாதித்தேன்

நான் நடித்த படங்கள் கமர்ஷியலும் அல்ல. ஆர்ட் ஃபிலிமும் அல்ல. ஏதோ ஒரு வகையில் மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக அமைந்தவை. பதினைந்து லட்சத்தில் படம் எடுப்பார்கள். முப்பது லட்சத்துக்கு பிசினஸ் ஆகும். பிசினஸ் ஆன தொகையைவிட பன்மடங்கு வசூல் ஆகும். அந்த படம் தொடர்பான அத்தனை பேருக்குமே நிச்சய லாபம். இன்றுவரை அம்மாதிரி படங்களில் நடித்தது தொடர்பாக எனக்கு எந்தவிதமான குற்றவுணர்ச்சியோ, வருத்தமோ சிறிதுமில்லை.

ஒருமுறை படப்பிடிப்பு முடிந்து கேரளாவில் இருந்து சென்னைக்கு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தேன். ஒரு புதுத் தயாரிப்பாளர் வந்து கால்ஷீட் கேட்டார். ஐந்து நாள் நடித்தால் போதும் என்றார். அவரை நிராகரிக்க எனக்கு ஒரு லட்சம் சம்பளம், மூன்று நாள்தான் நடிக்க முடியும் என்றேன். அவரோ உடனே ஒரு லட்ச ரூபாயை என் கையில் அட்வான்ஸாகவே கொடுத்து விட்டார்.

மூன்று நாள் ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது கூடுதலாக இரண்டு லட்சம் கொடுத்தார். ஒருநாளைக்கு ஒரு லட்சம் என்னுடைய சம்பளம் என்று அவர் நிர்ணயித்து வைத்திருக்கிறார். என்னுடைய வேல்யூ அந்தான் என்று எனக்கு அப்போதுதான் தெரிய வந்தது.

முதுகில் குத்திய துரோகம்

நான் சம்பாதித்த அத்தனை பணத்தையும் என்னுடைய அம்மாவும், அக்காவும் எடுத்துக் கொண்டார்கள். குடும்பத்துக்காகதான் சம்பாதித்தேன். உறவுகளையும், நட்புகளையும் பேணி வளர்க்க கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்தேன். ஆனால், அவர்கள் என்னை ‘பி’ கிரேடு நடிகையாகதான் பார்த்திருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை நான் வெறும் ‘ஏடிஎம் மெஷின்’. என் குடும்ப நிகழ்வுகளில் நான் கலந்துக் கொள்வதைகூட அவர்கள் அவமானமாக கருதினார்கள்.

எனக்கு ஆதரவாக இருந்த அப்பாவும் காலமான பிறகு மிகவும் தனிமையை உணர்ந்தேன். நண்பர்கள், உறவுகள்... என அத்தனை பேரும் தொடர்ச்சியாக சொல்லி வைத்தது போல முதுகில் குத்திக்கொண்டே இருந்தார்கள். துரோகங்கள் பழகிவிட்டது. எப்படியிருந்தாலும் நான் வாழ்ந்துதானே ஆகவேண்டும். என்னுடைய உலகத்தை நானே உருவாக்க தீர்மானித்தேன்.

இப்போது நான் வசித்து வருவது ஒரு காடு. இந்த காட்டின் ஒவ்வொரு மரத்தையும் நானே நட்டிருக்கிறேன். எல்லாமே என்னுடைய தேர்வுதான் என்பதால் காசு பணம் இருக்கிறதோ இல்லையோ மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என்னை ஒரு திருநங்கை அவரது மகளாக தத்தெடுத்திருக்கிறார். அவர் பெயர் கிருபாம்மாள். நான் ஒரு திருநங்கையை என்னுடைய மகளாக தத்தெடுத்திருக்கிறேன். அவரது பெயர் தங்கம். ரத்த உறவில்லாத இந்த உறவுகளின் பாசத்திலும், அன்பிலும் முன்பு எப்போதுமே உணர்ந்தறியாத பாதுகாப்பினையும், மகிழ்ச்சியையும் பெறுகிறேன்.

காமிக்ஸ் பிடிக்கும்

இளையராஜாவின் இசை என் மனதை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. இசையைத் தவிர்த்து என்னுடைய பொழுதுபோக்கு ப்ளே ஸ்டேஷனில் கேம்ஸ் விளையாடுவது. சினிமா பார்ப்பது அரிது. தமிழில் கமல் சார் படங்களை தியேட்டருக்கு போய் பார்ப்பேன். அது தவிர்த்து ‘நார்னியா’, ‘ஹாபிட்’ மாதிரி ஹாலிவுட் ஃபேண்டஸி படங்களை விரும்பி ரசிப்பேன். மாற்று சினிமாவாக மதிக்கப்படும் உலகப்படங்கள், கொரியப்படங்கள் எனக்கு விருப்பமானவை. பெரிய கலெக்‌ஷனே என்னிடம் இருக்கிறது.

காமிக்ஸ் பிடிக்கும். ஃப்ளைட்டில் பயணிப்பது அறுவை என்பதால் எப்போதுமே ரயிலில் செல்வதையே விரும்புவேன். அம்மாதிரி பயணங்களுக்காக கையில் எடுத்துச் செல்வது டிங்கிள், ஆர்ச்சீஸ் மாதிரி காமிக்ஸ் புத்தகங்களைதான். ஒவ்வொரு முறை புத்தகக் கடைக்கு போகும்போதும் குறைந்தது மூவாயிரம், நாலாயிரம் ரூபாய்க்கு காமிக்ஸ்களை மொத்தமாக அள்ளி விடுவேன். காமிக்ஸ் படித்துதான் என்னுடைய ஆங்கில அறிவே வளர்ந்தது.

பயணங்களின் காதலி

பயணங்கள்தான் என்னை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்கின்றன. மாதக் கணக்கில் காடுகளில் தங்கி வனவிலங்குகளை வேடிக்கை பார்ப்பது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. மசினகுடி போய் விசாரித்துப் பாருங்கள். ஷகிலா அங்கே ரொம்ப ஃபேமஸ். பழங்குடியினரின் வீடுகளில் தங்கி, நாட்கணக்கில் காட்டு வாழ்வை வாழ்வேன். இந்தியா முழுக்க இருக்கும் எல்லா காடுகளுக்கும் சென்று வாரக் கணக்கில் வாழ்ந்துவிட்டு வரவேண்டும் என்பது என் லட்சியம்.

ஆண்கள்

என்னைப் போன்ற பெண்கள், ஆண் இனத்தையே வெறுப்பார்கள் என்றொரு பொதுப்புத்தி இருக்கிறது. அது தவறு. ஆண்களை நான் பாசிட்டிவ்வாகதான் பார்க்கிறேன். துரோகம், நயவஞ்சகம் மாதிரி குணங்கள் ஆண் - பெண் இருவருக்கும் பொதுவானதுதான். என்னை சந்திக்கும் ஒவ்வொரு ஆணிடமும் என் அப்பாவை தேடுகிறேன். நான் ஒரு depended child. ஆண்களிடம் எதிர்ப்பார்ப்பது ஆதரவை மட்டுமே. வயதில் மூத்தவர்களாக இருந்தால் அண்ணன் என்றும், இளையவர்களாக இருந்தால் தம்பி என்றும் அழைக்கிறேன். பெண்கள் இல்லாமல் உலகமே இல்லை என்பார்கள். ஆண்கள் இல்லாமல் இருந்தால் மட்டும் உலகம் இருந்து விடுமா?

கடவுளுக்கு கடிதம்


கடவுள் நம்பிக்கை உண்டு. அந்த கடவுள் அல்லாவோ, இயேசுவோ, கிருஷ்ணரோ அல்ல. கடவுள். அவ்வளவுதான். அவருக்கு அடிக்கடி கடிதம் எழுதுவேன். அவருடைய முகவரி தெரியாது என்பதால் போஸ்ட் செய்வதில்லை. கடவுள் என்பதால், நான் கடிதத்தில் என்ன எழுதுகிறேன் என்று அவருக்கு தெரியாமலேயா போகும்? சமீபத்தில் கூட பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வாடும் மக்களை காக்க கோரி கடிதம் எழுதினேன். இம்மாதிரி ஆயிரக்கணக்கான கடிதங்கள் எழுதியிருக்கிறேன். கடவுளிடம் பேசுவதற்கு கடிதங்கள் உதவுகின்றன. எனக்கும் கடவுளுக்கும் மத்தியில் இடைத்தரகர்கள் யாரும் இருப்பதை நான் விரும்புவதில்லை.

டைரக்‌ஷன் ஆசை

நடிக்க வாய்ப்பு குறைந்தவுடனேயே டைரக்டர் ஆகிவிட வேண்டும் என்கிற ஆசை நிறைய பேருக்கு வரும். எனக்கு அப்படியெல்லாம் இல்லை. ஏற்கனவே ‘ரொமாண்டிக் டார்கெட்’ என்றொரு படம் இயக்கியிருக்கிறேன். டைரக்‌ஷன் ரொம்பவும் டென்ஷன் பிடித்த வேலை. எனவே இனி டைரக்ட் செய்யும் ஐடியா இல்லை.

நிரூபிப்பேன்

நானாக எப்போதுமே யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. என்னை தேடி வரும் வாய்ப்புகளை மட்டுமே ஆரம்பக் காலத்திலிருந்து ஒப்புக்கொண்டு வருகிறேன். இப்போதும் யாராவது வந்து கேட்டால் நடித்துக் கொடுக்கிறேன்.

எனக்கு காமெடி பிடிக்கும். என்றாலும் எல்லா வேடங்களிலும் நடிக்க ஆசை. ஷகிலா என்பவள் வெறும் கவர்ச்சி நடிகை அல்ல. எனக்குள் இருக்கும் கலையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்குமா என்று காத்திருக்கிறேன். கிடைத்தால், நான் யார் என்பதை மக்களுக்கு நிரூபிப்பேன்.

(நன்றி : தினகரன் வெள்ளி மலர்)



மீட்பர்

$
0
0
இன்று காலை காபியோடு தினத்தந்தியை பருகிக் கொண்டிருந்தபோது ‘சன் லைஃப்’ மியூசிக் சானலில் ‘பூங்காற்று’ நிகழ்ச்சி வரவேற்பரையை நிறைத்துக் கொண்டிருந்தது.

‘பாண்டி நாட்டுத் தங்கம்’ படத்திலிருந்து ‘சிறு கூட்டுலே’ பாட்டு. வாசித்துக் கொண்டிருந்த செய்திகள் மறந்து மனசு வேறெங்கோ பறக்க ஆரம்பித்தது. அடுத்து ‘அதிசயப் பிறவி’யில் இருந்து ‘உன்னைப் பார்த்த நேரம்’. சமையலறையிலிருந்து அம்மா குரல் கொடுத்தார். “இப்போவெல்லாம் யாரு இது மாதிரி பாட்டு போடுறாங்க.... இந்தப் படமெல்லாம் உங்க அப்பாவோட ரங்கா தியேட்டருலே பார்த்தேன்”. ‘அம்மன் கோயில் கிழக்காலே’விலிருந்து ‘பூவை எடுத்து ஒரு மாலை’. விஜய்காந்த் ரசிகையான அம்மா உருகிப் போனார். சமையலை மறந்துவிட்டு பாடல்களை கேட்க அமர்ந்துவிட்டார்.

இதெல்லாம் வெறும் பாடல்கள் அல்ல. நினைவுகள்!

டீனேஜில் இருந்தபோது ஒரு மழைக்கால நள்ளிரவு. மறுநாள் காலையில் நான் என்னவாக இருக்கப் போகிறேன் என்று தெரியாத நிச்சயமற்ற சூழல். எல்லா வகையிலும் தோற்றுப்போன எனக்கு எதிர்காலமே இல்லை என்பது மட்டும் தெரிந்திருந்தது. சூடாக தேநீர் அருந்திக் கொண்டே மண்ணாங்கட்டி மூளையின் துணைகொண்டு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். டேப்ரிக்கார்டரை ஆன் செய்தார் டீ மாஸ்டர். ‘தாலாட்டுதே வானம்... தள்ளாடுதே மேகம்’. ஜெயச்சந்திரனின் குரலில் இளையராஜாவின் மேஜிக். பாடல் தொடங்கிய நொடியிலிருந்து அடுத்த நான்கு நிமிடங்களுக்கு என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரியவில்லை. பாடல் முடிந்ததுமே, புதியதாக பிறந்தவனாய் உணர்ந்தேன். கடந்துப்போன பதினேழு வருடங்கள் அத்தனையையும் மறந்தேன். மழை நனைத்த வயலாய் மனசு பளிச்சென்று ஆனது. இன்று நான் நானாக இருப்பதற்கு அந்த நாலு நிமிடங்களே காரணம்.

புத்தனுக்கு போதிமரத்தின் அடியில் கிடைத்த ஞானம் இப்படியானதாகதான் இருந்திருக்க வேண்டும். பிற்பாடு பல நண்பர்களோடு பேசிப் பழகும்போது நிறைய பேர் இதே போன்ற அனுபவத்தை ஏதோ ஒரு பாடல் மூலம் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறியமுடிந்தது. அத்தனை பாடல்களுமே இளையராஜா இசையமைத்தவை என்பதுதான் ஆச்சரியமான ஒற்றுமை.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் என் வாழ்நாளின் படுமோசமான நாட்களை கடந்தேன். ஆகஸ்ட் 24 அன்று என்னுடைய பிறந்தநாள் என்பதையே ஃபேஸ்புக்கில் வந்து குவிந்த வாழ்த்துகள் மூலம்தான் உணர்ந்தேன். என் குடும்ப விளக்கு அணைந்துவிடுமோ, குழந்தைகளின் எதிர்காலம் என்னாகுமோ என்கிற பதட்டத்தில் மனநலம் பிறழ்ந்து சுற்றிக் கொண்டிருந்த நாட்கள் அவை. தேக்கி வைத்த கண்ணீர், எந்நிமிடமும் அணையாய் உடைய தயாராக இருக்க நடைப்பிணமாய் ஆனேன். அந்த மனநிலையில் வண்டி ஓட்டும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் எந்நேரமும் கூடவே இருந்தார் அண்ணன் சிவராமன்.

அவர் உடன் இல்லாத பொழுதுகளில் எந்நேரமும் மொபைலிலும், கணினியிலும் சேகரிக்கப்பட்டிருந்த இளையராஜாதான் ஹெட்செட் மூலமாக என்னை மீட்டார். என்னைப் பொறுத்தவரை இயேசுவை மாதிரி இளையராஜாவும் ஒரு மீட்பர். மிகைப்படுத்தி சொல்வதாக தோன்றலாம்.

ராகம், தாளம் என்று இசை பற்றிய எந்த அறிவும் இல்லாத பாமரனான எனக்கு தாயின் அன்பையும், தந்தையின் அக்கறையையும் இளையராஜாவின் இசை அளித்தது. குஞ்சுக்கு தாய்ப்பறவை தரும் கதகதப்பையும், பாதுகாப்பையும் வழங்கியது என்று சொன்னால் யார்தான் நம்புவார்கள்? ஆனால், இதுதான் உண்மை. எழுதியோ, பேசியோ இந்த உணர்வுகளை யாருக்கும் கடத்தவே முடியாது. ஒவ்வொருவருமே இம்மாதிரி சூழலை எதிர்கொள்ளும் அனுபவம் மட்டுமே நான் சொல்லவருவதின் பேருண்மையை எடுத்துக் காட்டும்.

பல முறை இணையத்தளங்களிலும், நண்பர்களுடனான விவாதங்களிலும் எது எதற்கோ இளையராஜாவை லூசுத்தனமாக கிண்டலடித்திருக்கிறேன். கேணைத்தனமாக திட்டியிருக்கிறேன். அதற்காகவெல்லாம் இப்போது வருந்த வேண்டியதில்லை. என் தகப்பன் மீது நான் என்ன உரிமை எடுத்துக் கொள்வேனோ, அப்போதெல்லாம் அதே போன்ற உரிமையைதான் அவர் மீதும் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று புரிகிறது. என்னுடைய இரத்தத்திலும், உடலின் ஒவ்வொரு செல்லிலும் இளையராஜா இருக்கிறார் என்கிற புரிதலுக்கு இப்போது வந்திருக்கிறேன். அறுவைச்சிகிச்சை செய்துகூட அவரை என்னிடமிருந்து அகற்ற முடியாது.

இளையராஜாவுக்கு நாம் வெறும் ரசிகர்கள் அல்ல. அவரது இசை, ரசிப்பு என்கிற அற்ப எல்லையை எல்லாம் என்றோ தாண்டிவிட்டது. உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்துவிட்ட மேதைமை அவரது இசை. ஒவ்வொரு தமிழனுமே மகிழ்ச்சியாக இருக்கும்போது அவனுடைய மகிழ்ச்சியின் அளவை பன்மடங்கு கூட்டுவதும், துயரத்திலிருக்கும்போது அதிலிருந்து அவனை மீட்டெடுக்கும் வல்லமையும் இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு. இதை மறுப்பவர்களுக்கு கேட்கும் சக்தி இல்லையென்று அர்த்தம்.

கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகன் நான். நமக்கு கற்பிக்கப்பட்ட எந்த கடவுளுமே இதுவரை எந்த அதிசயத்தையும் நிகழ்த்திக் காட்டியதில்லை. நம் கண் முன்னால் ஒரு புல்லை கூட பிடுங்கிப் போட்டதில்லை. ஆனால், கடவுளைவிட மேன்மையான சொல் எந்த மொழியிலும் இல்லாததால் இளையராஜாவை இப்போதைக்கு கடவுள் ஸ்தானத்தில்தான் வைக்க விரும்புகிறேன். அவரை நாம் இழக்கும் நாள்தான் நிஜமாகவே தமிழ் சமூகம் ஈடு இணை செய்ய முடியாத இழப்பினை சந்திக்கும் நாளாக இருக்கும்.

சமீபத்தில் வெளிவந்த ‘CREED’ படத்தில் சில்வஸ்டர் ஸ்டாலோன் ஓர் அபாரமான வசனத்தை பேசியிருப்பார். “காது கொடுத்து கேள். எப்போதும் நீ பேசிக்கொண்டே இருந்தால் எதையுமே கற்க முடியாது”. நம்முடைய இடியட் பாக்ஸ்கள் எப்போதும் பேசிக்கொண்டேதான் இருக்கின்றன. அவையும் கற்பதாக தெரியவில்லை. அவற்றை உபயோகிப்பவனும் எதையும் கற்கமுடியுமென்று தோன்றவில்லை.

நம்மிடையே வாழும் கடவுளை அவமதிக்கும் எவனுக்கும் பரலோகத்திலும் கூட பாவமன்னிப்பு இல்லை!
Viewing all 406 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>