Quantcast
Channel: யுவகிருஷ்ணா
Viewing all articles
Browse latest Browse all 406

நடைவெளிப் பயணம்

$
0
0
ஃபேஸ்புக்கில் அக்கவுண்டு ஓபன் செய்தவுடனேயே இன்று எல்லோருமே எழுத்தாளர் ஆகிவிடுகிறார்கள். இணையத்தில் எழுதப்பட்ட ஸ்டேட்டஸ்களை எல்லாம் வெட்டி, தட்டி, ஒட்டி வருடக்கடைசியில் புத்தகமாகவும் போட்டு விடுகிறார்கள். அந்த புத்தகத்துக்கு வெளியீட்டு விழா, விமர்சன அரங்கம் என்று இலக்கியம் தாம்தூமாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் அசோகமித்திரன் எழுத ஆரம்பித்து அறுபது ஆண்டுகள் கழித்துதான் ஒரு வெகுஜன இதழில் பத்தி எழுதும் வாய்ப்பு கிடைத்தது என்று சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் சிரமமாகதான் இருக்கும். “அவரோட ஃபேஸ்புக் ஐடி சொல்லுங்க பாஸ். ஃப்ரெண்டா சேர்த்துக்கணும்” என்றுகூட இந்த பதிவுக்கு கீழே யாராவது நிச்சயம் கமெண்டு போடுவார்கள். ஒரு படைப்பாளி அவனுடைய இணைய முகவரியால்தான் அடையாளம் காணப்படுகிறான் என்கிற நிலையில் அசோகமித்திரன் நிச்சயமாக ஓர் ஆச்சரியம்.

நாற்பது வாரங்கள் அவர் தொடர்ச்சியாக குங்குமம் வார இதழில் எழுதிய கட்டுரைகளே ‘நடைவெளிப் பயணம்’. அவர் வாழ்ந்த எண்பத்து மூன்று ஆண்டுகளை புரிந்துக் கொள்ளும் முயற்சிகளே இக்கட்டுரைகள் என்று முன்னுரையில் சொல்கிறார். நம் காலத்தை புரிந்துக் கொள்வதே எவ்வளவு கடினமானது என்று வாசகரை நினைக்க வைப்பதற்காக இந்த முயற்சி என்கிறார்.

அசோகமித்திரன் தரும் பெரிய ஆசுவாசமே அவர் தன்னை எப்போதும் கறாரான இலக்கியவாதியாக காட்டிக் கொள்வதில்லை என்பதுதான். ஒரே ஒரு தொகுப்பு போட்டுவிட்டு உலக இலக்கியவாதிகளாகி விடும் தற்கால இளம் எழுத்தாளர்கள் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பண்பாடு இது. குஷ்வந்த்சிங்கை தீவிர இலக்கியவாதிகள் எப்படி இளக்காரமாக பார்ப்பார்கள் என்பது தெரிந்ததுதான். அசோகமித்திரன் அவரை இவ்வாறு வர்ணிக்கிறார். “அவர் விற்பனையில் கவனம் செலுத்திய பத்திரிகையாசிரியர்”.

தி.க.சி. மறைந்தபோது, “நீங்கள் ஒன்றும் இரங்கல் எழுதவில்லையா?” என்று இவரிடம் கேட்கிறார்கள். அலுப்பாக ஆரம்பிக்கிறார் அசோகமித்திரன். “நானும்தான் இந்த ஐம்பது ஆண்டுகளில் எத்தனை இரங்கல்கள் எழுதிவிட்டேன்?”. ஆனாலும் ஓர் அட்டகாசமான இரங்கல் கட்டுரையை எழுதுகிறார். எழுதி முடித்ததுமே இரங்கல் கட்டுரை குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார். “இரங்கலோடு சாதனைகளையும்தான் பதிவு செய்யவேண்டும். அப்போது செய்யாவிட்டால் பின் எப்போது?”. யாராவது உயிரைவிட்டால் போதும். அவரை அடக்கம் செய்வதற்குள்ளாகவே அவருடைய பிம்பத்தை குதறியெடுத்து, நார்நாராக கிழித்தெறிந்து இருபது முப்பது பக்கத்துக்கு கட்டுரை எழுதும் அஞ்சலி ஸ்பெஷலிஸ்டுகள் இதையும் கவனத்தில் கொள்ளலாம். கே.பாலச்சந்தரின் மகன் கைலாசம், யு.ஆர்.அனந்தமூர்த்தி, ருத்ரையா ஆகியோருக்கும் இதே நூலில் இரங்கல் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

அசோகமித்திரனின் அனுபவ அடுக்குகளிடமிருந்து வெளிப்படுபவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல. தொலைபேசி, சைக்கிள், தொலைக்காட்சி, ஜனதா அடுப்பு, அடையாறு ஆலமரம், பயணச்சுமை, சீட்டித்துணி, எம்டன் கப்பல் போன்றவற்றுக்கும் தனித்தனி கட்டுரைகள். இருபத்தொன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழும் தலைமுறை ஏதோ திடீரென்று வானத்தில் இருந்து குதித்தவர்கள் மாதிரி வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். கடந்த நூற்றாண்டின் மத்தியில் தொடங்கி இறுதிவரை நிகழ்ந்த மாற்றங்கள் புனைவின் தீவிரத்தன்மை கொண்டவை. நம்புவதற்கு சிரமமான விஷயங்கள்தான். 1948ல் வாங்கிய ராலே சைக்கிளை 2008 வரை அறுபது ஆண்டுகள் அசோகமித்திரன் வைத்திருந்திருக்கிறார் என்றால் கொஞ்சம் ஆச்சரியமாகதான் இருக்கிறது. இன்றைய தேதியில் ஒரு பைக்கையோ, காரையோ கூட ஐந்து வருடங்கள் வைத்திருந்தாலே பெரிய விஷயம்.

சூழலின் அபத்தங்கள் குறித்து அசோகமித்திரன் அடிக்கடி சலிக்கிறார். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தாவுக்கு தமிழ் எழுத்தாளர்கள் குழு ஒன்று புறப்படுகிறது. இவர்கள் கல்கத்தாவில் இருந்தபோது பெரும் புயல் ஒன்று தென்னிந்தியாவை புரட்டிப் போடுகிறது. விஜயவாடாவுக்கு தெற்கே கடலே ஆற்றுக்குள் புகுந்திருக்கிறது. நள்ளிரவில் பல நூறு கிராமங்கள் நீரோடு நீராகியிருக்கின்றன. பல்லாயிரம் பேர் மறைந்திருக்கிறார்கள். பிரளயம் நடந்துக் கொண்டிருந்தபோது நம் இலக்கியவாதிகள் கல்கத்தாவில் ஏழெட்டு பார்வையாளர்களுக்காக ‘உலகத்தின் எதிர்காலம் கதையா, கவிதையா?’ என்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

நூலை வாசிக்கும் உழைப்பையே நாம் செலுத்தாது போன்ற உணர்வே ஏற்படுகிறது. மெல்லிய குரலில் அசோகமித்திரன் சொல்லும் கதையை திண்ணையில் அமர்ந்து கேட்பது போன்ற வாசக அனுபவம் கிடைக்கிறது.

வார இதழுக்கான தொடராக எழுதப்பட்டது என்பதால் வார்த்தைகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு உண்டு. இதனால் எழுத்து வளவளவென்று இழுத்துக்கொண்டு போகாது என்பது பலம். அதே நேரம் விரிவாகப் பேச வேண்டிய விஷயங்களையும் சுருக்கமாகதான் பேசியாக வேண்டும் என்பது பலவீனம். ஒரு பத்தி எழுத்தாளர் இந்த இரண்டையும் எப்படி எதிர்கொண்டு, தன்னை வாசகனுக்கு சுவாரஸ்யப்படுத்துகிறார் என்பதுதான் அத்தொடரை முக்கியமானதாக ஆக்குகிறது. குறிப்பாக இதுபோன்ற தொடர்கள் பிற்பாடு புத்தகமாக வெளியிடப்படும்போது, சுருக்க பலகீனம் வெளிப்பட்டுவிடக்கூடிய ஆபத்தினை ‘ஞானதிருஷ்டியால்’ உணர்ந்து எழுதவேண்டும்.

இந்த புத்தகத்தை வாசிக்கும்போது அசோகமித்திரன் எப்படி இதையெல்லாம் handle செய்திருக்கிறார் என்பதை வரிவரியாக உற்று வாசித்துக்கொண்டே வந்தேன். வெகுஜன வாசகனுக்காக எழுதுகிறோம் என்கிற பிரக்ஞை ஒவ்வொரு சொல்லை எழுதும்போதும் அவருக்கு இருந்திருக்கிறது. அனாவசியமாக ஒரே ஒரு சொல்கூட துருத்திக்கொண்டு தெரியக்கூடாது என்கிற கவனமும், அக்கறையும் இந்நூலை அவரது வெற்றிகரமான படைப்புகளில் ஒன்றாக ஆக்கியிருக்கிறது.

நடைவெளிப்பயணத்தை வாசிக்கும்போது அசோகமித்திரன் நம்முடைய கையைப் பிடித்துக்கொண்டு எழுபதாண்டுகள் பின்னே அழைத்துச் சென்று ஒவ்வொன்றாக சுற்றிக் காட்டுவதைப் போன்ற மாயயதார்த்தவாத உணர்வை தோற்றுவிக்கிறது. இப்போது அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய பழைய மாம்பலத்தில் வசித்த அனுபவம் எனக்கும் இருக்கிறது. வரலாற்றில் வாழக்கூடிய வாய்ப்பினை ஓர் எழுத்தாளன், தன் வாசகனுக்கு தருகிறான். இதைவிட மகத்தான சாதனையை வேறு யார் படைத்திட இயலும்?

நூல் : நடைவெளிப் பயணம்
எழுதியவர் : அசோகமித்திரன்
பக்கங்கள் : 168
விலை : ரூ.130
வெளியீடு : சூரியன் பதிப்பகம்,
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை – 600 004.
போன் : 42209191 extn : 21125. மொபைல் : 7299027361

Viewing all articles
Browse latest Browse all 406

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>